Sunday, July 17, 2022

"ஆனால், தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள்."( லூக்.10:42)

"ஆனால், தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள்."
( லூக்.10:42)

மரியாள் ஆண்டவருடைய காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.


மார்த்தாள் ஆண்டவருக்குப் பலவகையாய்ப் பணிவிடை புரிவதில் பரபரப்பாயிருந்தாள்.

மார்த்தாள் ஆண்டவருக்கு உணவு தயாரிப்பதில் சுறுசுறுப்பாக இருந்தாள்.

மரியாள் தனக்கு வேண்டிய ஆன்மீக உணவாகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்பதில் ஆர்வமாக இருந்தாள்.

ஆக இருவருமே இறைப் பணியில்தான் ஈடுபட்டிருந்தார்கள்.

"ஆண்டவரே, நான் உமக்குப் பணிபுரிய என் சகோதரியை எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும்"

என்று மார்த்தாள் கேட்டபோது அவள் செய்து கொண்டிருந்தது தவறு என்று ஆண்டவர் சொல்லவில்லை.

"நீ பல காரியங்களைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள்."

என்று சொன்னார்.

ஆண்டவரது வார்த்தைகளைத் தியானிக்கும்போது என் மனதில் தோன்றும் எண்ணங்கள்:

 இறைப் பணி ஆற்றுபவர்கள் செய்யும் பல காரியங்கள் நல்ல முறையில்,

இறைவனுக்கு ஏற்றவையாக

 அமைய வேண்டுமே என்ற கவலையும், கலக்கமும் இருப்பது இயற்கைதான்.

இறைப்பணி சிறப்பாக அமைய வேண்டுமென்றால் முதலில் இறை வார்த்தையைக் கேட்க வேண்டும்.

இறைவார்த்தை அவர்களது செயல்களை வழிநடத்தும்.

மனிதனை மனிதனாக்குவது அவனுடைய உடலும், ஆன்மாவும்.

அவன் செய்வது எந்த பணியாக இருந்தாலும்,

 இறைபணியாக இருந்தாலும் உலகைச் சார்ந்த பணியாக இருந்தாலும்,

 ஆன்மாவும் உடலும் சேர்ந்து இயங்கும்.

ஆன்மா சிந்திக்கும்,

 உடல் சிந்தனையை செயல்படுத்தும்.

உலகைச் சார்ந்த பணி செய்வோரின் ஆன்மாவில் உலகைச் சார்ந்த தத்துவங்கள் இருக்கும்.

இறைப்பணி ஆற்றுவோரின் ஆன்மாவில் இறைவாக்கு இருக்கும்.

இறைப்பணி செய்வோர் முதலில் இறைவாக்கை கேட்க வேண்டும் அல்லது வாசிக்க வேண்டும்.

ஆன்மாவின் சிந்தனையில் இருக்கும் இறைவாக்கு 

உடல் மூலம் செயலாக மாற வேண்டும்.

இறைவாக்கை முதலில் கேட்காமல் இறைபணியில் இறங்குவோர் அதில் வெற்றி பெற முடியாது.

 "நீ பிச்சையிடும்பொழுதோ, உன் வலக்கை செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும். 

அப்பொழுது,
4 நீ இடும் பிச்சை மறைவாயிருக்கும்: மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்."

 என்ற இறைவாக்கை மனதில் நிறுத்தி அதன்படி செயல்படுவோர் செய்வது இறைப்பணியாக இருக்கும்.

இந்த இறைவாக்கை தெரியாமல் செயல்படுவோர் செய்வது சுய விளம்பர பணியாக இருக்கும்.

இறைப் பணிக்கு மட்டும்தான் விண்ணகத்தில் சன்மானம்.

விளம்பர பணிக்கு கிடைக்கும் சன்மானம் அவர்கள் பெரும் விளம்பரம் மட்டுமே.

காலையில் எழுந்தவுடன் இறைவார்த்தையை வாசித்து விட்டு அதன்படி பகல் முழுவதும் இயங்குவோர் ஆற்றுவது மட்டுமே இறைப் பணி.

மார்த்தாளின் தங்கை மரியாள் இறை வார்த்தையை கேட்டு தவ வாழ்வு வாழ்ந்ததால்தான்,

இயேசுவின் அன்னை மரியாளுடன் இயேசு மரித்த சிலுவையின் அருகில் நிற்கவும்,

உயிர்த்த இயேசுவை முதல் முதலில் பார்க்கவும் பாக்கியம் பெற்றாள்.

நாமும் இறை வார்த்தையை கேட்டு, 

அதன்படி வாழ்ந்து,

விண்ணகத்தில் இயேசுவுடன் பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment