Friday, July 15, 2022

"உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்." (மத்.12:34)

"உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்." 
(மத்.12:34)

"தாத்தா, மிருகங்களும் பிறக்கின்றன, மனிதனும் பிறக்கின்றான்,

மிருகங்களும் உண்கின்றன,
மனிதனும் உண்கின்றான்.

மிருகங்களும் வளர்கின்றன,
மனிதனும் வளர்கின்றான்.

மிருகங்களும் சாகின்றன,
மனிதனும் சாகின்றான்.

ஆனால், மனிதன் நாகரீகத்தில் வளர்கின்றான், மிருகங்கள் எப்போதும் அப்படியே வாழ்கின்றனவே, ஏன்?

குகைகளில் வாழ்ந்த மனிதன் இப்போது பெரிய பெரிய வீடுகள் கட்டி வாழ்கின்றான்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குச்சிகளால் கூடிகட்டி வாழ்ந்த காகம், இன்னும் அப்படியே தானே வாழ்கின்றது."

", உண்மையிலேயே தெரியாமல் கேட்கின்றாயா? தெரியாததுபோல் நடிக்கிறாயா?"

"தாத்தா, ஒரு பைபிள் வசனம் பற்றி பேசவேண்டும். அதற்கு முன்னுரை இது.

சரி. பதில் சொல்லுங்கள்."

", மிருகங்களுக்கு உடல் மட்டும்தான் இருக்கிறது.

ஆனால் ஆன்மாவும், உடலும் சேர்ந்தவன் மனிதன்.

மனிதனுக்குப் புத்தி இருக்கிறது.

அதன் உதவியால் அவன் சிந்திக்கிறான், பேசுகிறான், செயல் புரிகிறான்.

சித்தனைகளை உள்ளத்தில் சேமித்து வைக்கிறான்.

சித்தனைகளை சொற்களின் உதவியால் பேசுகிறான்.

சித்தனைப்படி செயல் புரிகிறான்.

சிந்தனை, சொல், செயல் மூலம் கிடைக்கும் அனுபவங்களின் உதவியால் நாகரீகத்தில் வளர்கிறான்.

ஆனால் மிருகங்களுக்கு ஆன்மா இல்லை. அவைகளுக்கு புத்தியும், சிந்திக்கும் திறனும் இல்லை. ஆகவே அவை வாழ்ந்த படியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

சரி, இப்போ பைபிள் வசனத்துக்கு வா."

"உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்.''

", முழு வசனத்தையும் சொல்லு."


"விரியன் பாம்புகள் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவராயிருக்க எவ்வாறு நல்லவை பேசமுடியும்?

 ஏனெனில், உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்.''

",விரியன் பாம்புகள் குட்டிகளே, என்று யாரைப் பார்த்துச் சொல்கிறார்?"


"பரிசேயர்களைப் பார்த்துச் சொல்கிறார். 

அவர்கள் அவர் பேய் ஓட்டுவது, பேய்கள் தலைவனான பெயல்செபூலைக்கொண்டே என்றனர்.

இதைப்பற்றி ஆண்டவர் பேசும்போதுதான்  அவர்களைப் பார்த்து,

"விரியன் பாம்புகள் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவராயிருக்க எவ்வாறு நல்லவை பேசமுடியும்?

 ஏனெனில், உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்.''

என்றார்.

விரியன் பாம்புகள் குட்டிகள் விஷம் உள்ளவை. அவற்றிலிருந்து விஷம்தான் வெளியே வர முடியும்.

உள்ளே உள்ளதுதான் வெளியே வரும்.

பரிசேயர்களின் உள்ளத்தில் விஷம் இருந்தால் அதுதானே அவர்களது பேச்சிலும் வரும்."

", அவர்களைப் பொல்லாதவர்கள் ஆக்குவது எது?"

"அவர்கள் உள்ளத்தில் உள்ள எண்ணங்கள்."

",எண்ணங்கள் மோசமானவையாக இருந்தால் அவர்களது பேச்சும், செயலும் மோசமானவையாகத்தான் இருக்கும்.

ஒருவனை நல்லவனாகவோ கெட்டவனாகவோ ஆக்குவது அவனுடைய உள்ளம் தான்.

உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் இருந்தால் அவன் நல்லவனாக இருப்பான்.

 கெட்ட எண்ணங்கள் இருந்தால் அவன் கெட்டவனாக இருப்பான்.

மனதில் அசிங்கமான எண்ணங்களை நினைத்துக் கொண்டிருப்பவன் அசிங்கமான வார்த்தைகளைத் தான் பேசுவான்.

அசிங்கமான காரியங்களைத்தான் செய்வான்.

நல்ல வாழ்வு வாழ வேண்டுமென்றால் எண்ணங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

யூதாசின் உள்ளத்தில் பண ஆசை இருந்ததால்தான் அவன் பணத்திற்காக இயேசுவை காட்டிக் கொடுத்தான்.

நமது உள்ளத்தில் இறைவனைப் பற்றிய நினைத்துக் கொண்டிருந்தால் அவரைப் பற்றிய பேசுவோம்.

நற்செய்தி எண்ணங்களை சேமித்து வைத்திருந்தால் நமது பேச்சிலும், செயலிலும் நற்செய்தி வெளிவரும்.

காலையில் எழுந்தவுடன் நற்செய்தி நூலை வாசிக்கிறோம்.

நாம் வாசித்த நற்செய்திகள் பகல் முழுவதும் நமது உள்ளத்தில் இருந்தால் நாள் முழுவதும் அவற்றைப் பற்றியே பேசுவோம்,

அவற்றையே வாழ்வோம்.

நற்செய்தி வாசிப்பதின் நோக்கமே அதைப் பற்றி சிந்திக்கவும், பேசவும், வாழவும்தான்.

வாசிக்க வேண்டுமே என்பதற்காக வாசிக்க அல்ல.''

"தாத்தா, இப்போது நீங்கள் சொன்னீர்களே அதை ஒட்டிய ஒரு கேள்வி.

நற்செய்தி வாசிப்பதால் இறைவாக்கு பற்றிய எண்ணங்கள் நமது மனதில் பதிவது போல 

வேறு என்ன செய்வதால் நல்ல எண்ணங்கள் நமது மனதில் பதியும்."

',ஆன்மாவில் புத்தி இருப்பது போல நமது உடலில் ஐம்பொறிகள் இருக்கின்றன.

இவைதான் நாம் எந்த சூழ்நிலையில் வாழ்கின்றோமோ அதோடு நம்மை தொடர்பு படுத்துகின்றன.

நல்ல சூழ்நிலையில் வாழ்ந்தால் நல்ல செய்திகள் ஐம்பொறிகளின் வழியாக நமது உள்ளத்திற்கு செல்லும். 

அங்கே அவை எண்ணங்களாக மாறி சொல் வழியே வெளியேறி, செயல்களாகவும் மாறும்.

உதாரணத்திற்கு, நாம் தினமும் திருப்பலியில் பங்கேற்றால் அங்கே நாம் பெறும் செப, பைபிள் வாசக, பிரசங்க அனுபவங்கள் நமது ஐம்பொறிகளின் வழியாக நமது உள்ளத்திற்குள் ஏறி,

அங்கே எண்ணங்களாக தங்கி பகல் முழுவதும் நமது வாழ்வில் வழி நடத்தும். 

எழுந்தவுடன் T.V முன் அமர்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருந்தால் அங்கு நாம் காணும் காட்சிகள் தான் நமது ஐம்பொறிகளில் வழியாக உள்ளத்திற்குள் ஏறும்.

அவை தான் நம்மை நாள் முழுவதும் வழி நடத்தும்.

காலையிலேயே ஏதாவது வம்பு பேசுவோர் கூட்டத்தில் அமர்ந்து அவர்களது தேவையற்ற பேச்சுக்களை கேட்டுக்கொண்டிருந்தால் அவை தான் உள்ளத்தில் பதியும்.

நாம் வாழும் சூழ்நிலை நமது உள்ளத்தை நல்லதற்கோ, கெட்டதற்கோ பெரிதும் பாதிக்கும்.

நல்ல எண்ணங்களை பெற்று நல்லவர்களாக வாழ வேண்டும் என்றால் நல்ல சூழ்நிலையில் நாம் வாழ வேண்டும்."

"ஆனால், தாத்தா, சாதாரண பாமர மக்களும், பாவிகளும் இயேசுவின் பின் சென்று பயன் பெற்றார்கள்.

ஆனால் அவர்களோடு சென்ற பரிசேயர்கள் ஒரு பயனும் பெற வில்லையே!"

",சாதாரண பாமர மக்களும், பாவிகளும் சுகம் பெற வேண்டும், நற்செய்தியை கேட்டு மனம் திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு இயேசுவின் பின் சென்றார்கள்,

 பயன் பெற்றார்கள்.

ஆனால் பரிசேயர்கள் இயேசுவின் பேச்சில் குறை காண வேண்டும், அவரை கொல்வதற்கு வழி தேட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் பின் சென்றார்கள்.

ஆகவே பயன் பெறவில்லை

நாம் பரிசேயர்களிடமிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்ளலாமே.

அவர்கள் குறை காண வேண்டும் என்ற கெட்ட நோக்கோடு நல்ல இயேசுவை பின்பற்றினார்கள். 

நாம் குறைகளை நீக்கி மனம் திருப்ப வேண்டும் என்ற நல்ல நோக்கோடு கெட்டவர்களோடு பழகலாமே.

இயேசு பாவிகளை தேடி வந்தது அவர்களை மனம் திருப்ப.

 நாமும் மனம் திருப்பும் நோக்கத்தோடு பாவிகளை தேடி செல்லலாமே.

அவர்களுக்கு இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கலாமே.

அதற்கு நமது உள்ளம் பரிசுத்தமான எண்ணங்களாலும்,
இயேசுவின் அருளாலும் நிறைந்திருக்க வேண்டும்.

உள்ளத்தை நற்செய்தியால் நிரப்புவோம்.

உலகெங்கும் பரப்புவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment