Saturday, July 2, 2022

''நான் அவருடைய போர்வையைத் தொட்டாலே குணம் பெறுவேன்" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள்"(மத்.9:21)

''நான் அவருடைய போர்வையைத் தொட்டாலே குணம் பெறுவேன்" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள்"
(மத்.9:21)

பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்திக்கு தான் சுகம் பெற வேண்டும் என்று ஆசை.

இயேசுவால் தன்னைக் குணமாக்க முடியும் என்று உறுதியாக விசுவசித்தாள்

இயேசு இறந்த ஒரு பெண்ணை உயிரோடு எழுப்புவதற்காக அவளுடைய தந்தையுடன் சென்று கொண்டிருந்தபோது, 

பெரும்பாட்டினால் வருந்திய பெண்,

" நான் அவருடைய போர்வையைத் தொட்டாலே குணம் பெறுவேன்" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டே

.அவர் போர்வையின் விளிம்பைத் தொட்டாள்.

இயேசு திரும்பி, அவளைப் பார்த்து,

 "மகளே, தைரியமாயிரு: உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார்.

 அந்நேரமுதல் அவள் குணமாயிருந்தாள்.

இயேசு சர்வ வல்லப கடவுள்.

நினைத்தவுடன் எதையும் சாதிக்க அவரால் முடியும்.

அவர் சர்வ ஞானம் உள்ளவர்.
எல்லோருடைய உள்ளத்தில் உள்ளதும் அவருக்குத் தெரியும்.

இதை அந்த பெண் விசுவசித்தாள்.

அவள் இயேசுவிடம்,

"என்னைக் குணமாக்குங்கள், ஆண்டவரே" என்று கேட்க வில்லை.

விசுவாசத்தை தனக்குள்ளே வைத்துக் கொண்டே அவரது போர்வையின் விளிம்பைத் தொட்டாள்.

குணம் அடைந்தாள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணிடம் இருந்த விசுவாசம்,

இயேசுவைப் பற்றிய இரண்டாயிரம் ஆண்டு மனித அனுபவத்தையும் அறிந்த நம்மிடம் இருக்கிறதா?

நமக்கு என்னவெல்லாம் வேண்டுமென்று கேட்டு இயேசுவை நோக்கி மணிகணக்காய் செபிக்கிறோம்.

நமக்கு என்னவெல்லாம் வேண்டுமென்று இயேசுவுக்குத் தெரியாதா?

அவர் நமது உள்ளத்தில் உள்ளதை எல்லா அறிந்தவர் ஆயிற்றே!

அந்தப் பெண் இயேசுவின் போர்வையின் விளிம்பைத்தான் தொட்டாள்.

ஆனால் நாம் நற்கருணை வாங்கும்போது இயேசுவையே நமது நாவால் தொடுகிறோமே.

நமக்கு உண்மையிலேயே விசுவாசம் இருந்தால் நாம் ஆசைப்படும் எதையும் இயேசுவிடம் கேட்க மாட்டோம்.

அவரை நாவால் வாங்கும்போது அவர் எவ்வளவு நல்லவர் என்று மட்டும் சுவைத்துப் பார்ப்போம்.

நமக்க வேண்டியதை அவர் பார்த்துக் கொள்வார்.

அந்தோனியார் கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் நவநாள் செபம் நடக்கும்.

செபத்தின்போது

"நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்."

என்ற பாட்டைப் பாடுவது வழக்கம்.

உண்மையான விசுவாசத்தோடு இப்பாட்டைப் பாடுகின்றோமா?

அல்லது வழக்கம் போல் பாடுகின்றோமா?

என்பதை சிறிது சிந்திப்போம்.

ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறோம்.

13 வாரங்கள் நவநாள் செபத்திலும் கலந்து கொண்டு விண்ணப்பித்திருக்கிற வேலை கிடைக்க வேண்டும் மன்றாடுகிறோம்.

ஆனால் வேலை கிடைக்கவில்லை.

இப்போது 13 வாரங்களாக நாம் பாடிய பாட்டை நினைத்துப் பார்க்கிறோம்.

"நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்."

இப்போது நமது மனதில் வெவ்வேறு வகையான எண்ணங்கள் ஓடும்.

அவற்றை எல்லாம் இரண்டே வகையில் பார்ப்போம்.

1. நம்பினேன், செபித்தேன், ஆனால் நல்லது நடக்கவில்லை.

2.நம்பினேன், செபித்தேன், நல்லது நடந்திருக்கிறது.

முதல் வகையில் நாம் வேலை கேட்டது நல்லது என்று நாம் ஏற்கனவே தீர்மானித்து விட்டோம்.

ஆனால் நாம் எதிர்பார்த்தபடி நல்லது நடக்கவில்லை.

ஆகவே நாம் பாடியது waste.


இரண்டாவது வகையில்,

அந்தோனியார் நல்லவர் என்று விசுவசிக்கின்றோம். அவர் அவரது பக்தர்களுக்கு நல்லதைத்தான் செய்வார்.

வேலை கேட்டு விண்ணப்பித்தோம்.

வேலை எப்படிப்பட்டது என்று நமக்குத் தெரியாது.

வேலை கிடைக்கவில்லை.

வேலை நல்லதாக இருந்திருந்தால் அந்தோனியார் பெற்றுத் தந்திருப்பார்.

வேலை நமக்கு ஏற்றது அல்ல. ஆகவே பக்தர்களுக்கு நல்லதை மட்டும் செய்யும் அந்தோனியார் அதைப் பெற்றுத் தரவில்லை.

நாம் நம்பினோம், செபித்தோம், நல்லதுதான் நடந்திருக்கிறது.


இரண்டு வகை எண்ணங்களில் எது உண்மையான விசுவாசிக்கு ஏற்றது என்று சிந்திப்போம்.

நாம் உண்மையான விசுவாசியா, பெயரளவுக்குதான் விசுவாசியா. என்பது நமக்குப் புரியும்.

உண்மையான விசுவாசியாக இருந்தால் நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று ஏற்றுக் கொள்வோம்.

பெயரளவுக்கு மட்டும் விசுவாசியாக இருந்தால் நாம்  நினைப்பது மட்டும்தான் நன்மைக்கு என்று  நம்புவோம்.
கடவுள் நினைப்பதைப் பற்றி கவலைப்பட மாட்டோம்.

உண்மையான விசுவாசியாக இருப்போம்.

விசுவாசத்தோடு செபிக்கும்போது எது நடந்தாலும் அது நமது நன்மைக்கே.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment