Monday, April 5, 2021

துன்பங்கள் வரும்போது மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

துன்பங்கள் வரும்போது மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.


:"நேற்று ஒரு கதையை 'தொடரும்' என்று சொன்னீர்களே ஞாபகத்தில் இருக்கின்றதா?"

"தொடரும்' என்று சொன்னது
 ஞாபகத்தில் இருக்கின்றது."

"தொடருமா?

", கடைசி வரியைச் சொல்லு."

"தொடரும்."

"அதற்கு முந்திய வரி?"

"பையன் அங்கேயே வேலை பார்க்க ஆரம்பித்தான்."

", ஆரம்பித்தது மட்டுமல்ல நன்றாகவே அவனது வேலையை செய்தான்.

உற்சாகத்துடனும் முகமலர்ச்சியுடனும் அவன் உணவு பரிமாறுவதைப் பார்த்த அனைவரும் அவனை விரும்பினர்.

எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கினான்.

சம்பளம் மட்டும் வாங்கவில்லை.
அதைப்பற்றி அவன் கவலைப்படவுமில்லை.

வேலை இருக்கிறது, சாப்பாடு கிடைக்கிறது அதுவே போதும் என்றிருந்தான்.

சில மாதங்கள் கழித்து ஒரு பணக்கார குடும்பம் ஓட்டலுக்குச் சாப்பிட வந்தது.

சாப்பிட வந்தவர்களிடம் 

"என்ன வேண்டும்?" என்று கேட்டான்.

குடும்பத் தலைவரும் மற்றவர்களும் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனையே உற்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

குடும்பத் தலைவர் எழுந்திருந்து நேராக Cash counterக்குச் சென்று
உரிமையாளரிடம் அந்தப் பையனை காண்பித்து,

"அவன் யார்?" என்று கேட்டார்.

உரிமையாளர் நடந்த கதையைச் சொன்னார்.

"அவன் உங்களுக்கு எவ்வளவு தரவேண்டும்?"

"நூறு ரூபாய்."

"அதை நான் தந்தால் பையனை விட்டு விடுவீர்களா?"

"விட்டுவிடுவேன். பையன் விரும்பினால் இங்கேயே சம்பளத்தோடு நேரே பார்க்கவும் அனுமதிப்பேன்."

"அது தேவையில்லை. பையனை நானே அழைத்துக்கொண்டு போய் விடுவேன்."

"அவனுக்கு நீங்கள் யார்?"

"பெற்ற தந்தை. அனாவசியமாக செலவழித்து கொண்டிருந்த அவனை திருத்துவதற்காக

 கையில் பைசா கொடுக்காமல்

" எங்கேயாவது சென்று வேலை பார்த்து பிழைத்துக் கொள் என்று வெளியே அனுப்பி விட்டேன்.

 அவன் வேலை பார்க்காமலே சாப்பாட்டுக்காக வீடு திரும்புவான் என எதிர்பார்த்தேன்.

 ஆனால் அவன் இங்கே உங்களிடம் சர்வராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். சந்தோஷம்தான்.

திருந்திவிட்டான். நான் அழைத்துக்கொண்டு போய் விடுகிறேன்."

உரிமையாளர் பையனைக் கூப்பிட்டார். அவனும் வந்தான்.


"தம்பி, நீ ஹோட்டலுக்கு செலுத்தவேண்டிய நூறு ரூபாயையும் உனது தந்தை செலுத்தி விட்டார்.

இனி நீ போகலாம்."

"போல் டிரஸ் மாற்றிவிட்டு வா. சாப்பிட்டு விட்டே வீட்டுக்கு போகலாம்."

"அப்பா நான் திருந்தி விட்டேன்.
உங்களோடு வீட்டுக்கு வருகிறேன்.
ஆனாலும் எனது சர்வர் பணி தொடரும். இதுவரை திருந்துவதற்காக வேலை பார்த்தேன். இனி சம்பளத்திற்காக வேலை பார்ப்பேன்."

" நீ பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறாய். சில மாதங்களாக பள்ளிக்கூடத்திற்குப் போகவில்லை. சர்வராக வேலை பார்த்தால் பள்ளிக்கூடம் போக முடியாது."

"பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்திலும் படிப்பேன்.

இதுவரை திருத்துவதற்காக ‌இருந்த வேலை இனி சன்மானமாக மாறும்.

வாருங்கள். உட்காருங்கள். எல்லோரும் சாப்பிடுங்கள். நான் வேலை முடிந்து சாயங்காலம் வீட்டுக்கு வருகிறேன்.

வீட்டில் வைத்து பேசிக் கொள்ளலாம்."

"பையன் நல்ல உழைப்பாளியாக மாறுவான். அவனது போக்கில் விட்டு விடுங்களேன்."

பையன் சொன்னதைக் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்.

பையன் அங்கேயே வேலையைத் தொடர்ந்தான்."

"நேற்று ஆரம்பித்தான் என்றீர்கள். இங்கு தொடர்ந்தான் என்கிறீர்கள்.
நாளைக்கு?"

".இங்கே பார்.

கணக்கு புத்தியை கூர்மையாக்குகிறது.

அறிவியல் அறிவை வளர்கிறது.

மொழிப் பாடம் பிழை இன்றி எழுத, வாசிக்க, பேச கற்றுத் தருகிறது. 

வரலாறு மட்டும்தான் வாழ்வதற்கான பாடத்தைக் கற்றுத் தருகிறது.

ஒவ்வொரு கதையிலும் ஒரு பாடம் (Moral) இருக்கும்.

இன்றைய கதையிலிருந்து நீ கற்றுக் கொள்ளும் பாடம் என்ன?"

"அண்ணே, கதையில் பையன் சொன்னானே,

'இதுவரை திருத்துவதற்காக ‌இருந்த வேலை இனி சன்மானமாக மாறும்.'

என்று, இதுதான் நான் கற்றுக்கொண்ட பாடம்.

நாம் பாவம் செய்யும்போது நம்மை திருத்துவதற்காக கடவுள் துன்பங்களை அனுமதிக்கிறார்.

துன்பங்களை கண்டு நாம் மனம் மாறி பாவத்தை விட்டு விட்டு கடவுளிடம் வந்த பிற்பாடும் அவர் துன்பங்களை அனுமதிக்கிறார்.

இப்போது சன்மானமாக அனுமதிக்கிறார்.

பாவ நிலையில் நமக்கு வரும் துன்பங்கள் நம்மை திருத்து கின்றன.

திருந்திய பின் வரும் துன்பங்கள்
நமக்கு அருள் வரங்களை அள்ளித் தந்து விண்ணகத்தில் நமக்கு பேரின்பத்தை சேர்த்து வைக்கின்றன.

ஒரே பொருள்
நோயில் மருந்து.
நோய் நீங்கிய பின் டானிக்."

", நமது முதல் பெற்றோரின் பாவத்திற்குப் பின் நமது வாழ்வில் துன்பங்களை அனுமதித்தார்.

பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்காக நமது ஆண்டவர் சிலுவையில் பலியானபிறகும் கடவுள் நமது வாழ்வில் துன்பங்களை அனுமதிக்கிறார்.

முதலில் அனுமதித்த துன்பங்கள் பாவ நோயைக் குணமாக்குவதற்கான மருந்து.

இரண்டாவதுஅனுமதித்த துன்பங்கள் நமது ஆன்மீக வாழ்வில் நம்மை பலப்படுத்தும் டானிக்.''

"ஆன்மாவின் மீட்பை மையமாகக்கொண்டு வாழ்பவர்கள்தான் 

துன்பங்களை ஆன்மாவிற்கான மருந்தாகவும், டானிக்காகவும் கருதுவார்கள்.

ஆனால் உலக சிற்றின்பத்தை மையமாகக்கொண்டு வாழ்பவர்களுக்கு துன்பங்கள் தண்டனை போல் தோன்றும்.

டானிக்கை விருப்பமுடன் சாப்பிடுவோம். தண்டனையை வேறு வழியில்லாமல் அனுபவிப்போம்.

ஆன்மீகவாதிகள் தங்கள் வாழ்வில் நேரும் துன்பங்களை ஆன்மாவை பலப்படுத்த உதவும் டானிக் என கருதுவதால் 

அவர்கள் துன்பங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல

அவற்றை அனுபவிக்க வாய்ப்பு கொடுத்தமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்வார்கள்.


 ஆனால் உலகியல்வாதிகள் துன்பங்களை தண்டனை என கருதுவதால் வேறு வழியில்லாமல் அவற்றை முனுமுனுத்துக் கொண்டே அனுபவிப்பார்கள்.

 அவர்களுடைய விருப்பமின்மையே துன்பங்களின் வேதனையை பல மடங்கு ஆக்கும். துன்பங்களால் அவர்களுக்கு என்ன பிரயோஜனமும் இல்லை.

 புனிதமாய் வாழ்பவர்களை மேலும்
மேலும் புனிதமாக்க, அவர்களை அருள் வரங்களால் வளர்க்க,  இறைவன் அவர்களுக்கு பரிசாக துன்பங்களை அனுமதிக்கிறார்.
 

புனித பிரான்சிஸ் அசிசியாருக்கு அவரது பக்திக்கு பரிசாக ஆண்டவர் ஐந்து காய வரம் அளித்தார்.

உடலை பொருத்தமட்டில் ஐந்து காயங்கள் வேதனையைக் கொடுப்பவை.

ஆன்மாவை பொருத்தமட்டில் அவை இறைவனுடைய ஆசீர்வாதம்.

 ஆகவே துன்பங்கள் வரும்போது மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

அவற்றை அனுமதித்த இறைவனுக்கே அவற்றை நன்றிப் பலியாக ஒப்புக் கொடுத்து 

விண்ணக பேரின்ப அளவை அதிகரிப்போம்.

லூர்து செல்வம் .

No comments:

Post a Comment