Thursday, April 8, 2021

"இராயப்பர் அவர்களை நோக்கி, "மீன் பிடிக்கப் போகிறேன்" என்றார். மற்றவர்களும், "உன்னோடு நாங்களும் வருகின்றோம்" என்றார்கள்.""அரு.21:3)

"இராயப்பர் அவர்களை நோக்கி, "மீன் பிடிக்கப் போகிறேன்" என்றார். மற்றவர்களும், "உன்னோடு நாங்களும் வருகின்றோம்" என்றார்கள்."
"அரு.21:3)


அப்போஸ்தலர்களை, குறிப்பாக இராயப்பரை, நினைத்தால் சிரிப்புதான் வருகிறது!

இயேசுவுடன் மூன்று ஆண்டுகள் நெருக்கமாக பழகியிருந்தும்

அவரை முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத சீடர்கள்!

அவரே அவர்களுடைய விசுவாசம் இன்மையை அடிக்கடி சுட்டிக் காண்பித்திருக்கிறார்.

 தான் பாடுபட்டு, மரித்து, உயிர்க்க வேண்டும் என்று பலமுறை 
கூறியிருந்தும்,

 பாடுபட ஆரம்பித்தவுடன் பயந்து ஓடியவர்கள்,

அவர் உயிர்ப்பார் என்பதைக்கூட விசுவாசியாதவர்கள்,

இருந்தாலும் இயேசு அவர்களுடைய விசுவாசமின்மையைக் கூட பொருட்படுத்தாமல் அவர்களுக்கு காட்சி கொடுத்தார்.

இரண்டு முறைகள் காட்சி கொடுத்தபின்பு அப்போஸ்தலர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?

மூன்றாவது காட்சியையும் எதிர்பார்த்து இருந்த இடத்திலேயே இருந்திருக்க வேண்டாமா?

இராயப்பர் தலைமையில் ஒரு கூட்டம் மீன் பிடிக்க கிளம்பி விட்டது!

தேர்வு இருக்கும்போது அதற்கு தயாரிக்காமல் விளையாட கிளம்பும் மாணவர்களைப் போல! 

சீமோன் இராயப்பர்,
 திதிமு என்ற தோமையார், 
கலிலேயா நாட்டுக் கானாவூர் நத்தனயேல், 
செபெதேயுவின் மக்கள்,
 இயேசுவின் சீடர்களுள் வேறு இருவர் ஆகியவர் இதில் அடங்குவர்.
 
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை இதே இராயப்பரும், அவரது சகோதரரும் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போதுதான் இயேசு
 
"என் பின்னே வாருங்கள்: உங்களை, மனிதரைப் பிடிப்போராக்குவேன்" என்றார்.

உடனே அவர்களும் வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.

 இப்போதும்   மீன் பிடிக்க வந்திருக்கிறார்!

இராயப்பர் அவர்களை நோக்கி, "மீன் பிடிக்கப் போகிறேன்" என்றார்

. மற்றவர்களும், "உன்னோடு நாங்களும் வருகின்றோம்" என்றார்கள். 

போய்ப் படகிலேறினார்கள்.

 அன்று இரவு அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.

"உங்கள் வேலையை விட்டு விட்டு எங்களை பிடிக்க ஏன் வந்தீர்கள்?"

 என்று மீன்களே கேட்டுவிட்டு விலகிப் போயிருக்கும்!

ஆனாலும் இயேசு அவர்களை 
விடவில்லை.

விடியற்காலையில் இயேசு கரையில் நின்றார். 

ஆனால் அவரை இயேசு என்று சீடர் அறிந்துகொள்ளவில்லை.

இயேசு "படகின் வலப்பக்கமாய் வலை வீசுங்கள்: மீன்படும்" என்றார். 

அப்படியே வலை வீசினார்கள்: மீன்கள் ஏராளமாய் அகப்பட்டன.

 அவர்கள் வலையை இழுக்க முடியவில்லை.

இதற்குப் பிறகுதான் அது இயேசு என்று அருளப்பர் அடையாளம் கண்டுகொண்டார்.

அவர் இராயப்பரிடம் "அவர் ஆண்டவர்தாம்! " என இராயப்பருக்குச் சொல்ல 


அதற்குப் பிறகுதான் அவர் கடலில் குதித்து கரையை நோக்கி வந்தார்.

மற்றச் சீடர்களும் வலையை மீன்களுடன் இழுத்துக்கொண்டு படகிலே வந்தார்கள்.

உயிர்த்த இயேசு திரும்பவும் எப்போது வருவார் எதிர்பார்த்து வீட்டில் உட்கார்ந்து

மகிழ்ச்சியைக் கொண்டாடி கொண்டு இருப்பதற்கு பதிலாக

 அப்போஸ்தலர்கள் மீன்பிடிக்க வந்தாலும்,

இயேசு அதையும் பொருட்படுத்தாமல் அங்கேயே வந்து அவர்களுக்கு காட்சி கொடுத்தார்

அப்போஸ்தலர்களிடம் எது இருந்ததோ, இல்லையோ, இயேசுவின்மேல் அன்பு நிறையவே இருந்தது.

இயேசு ஏன் இப்படி அப்பாவித்தனமானவர்களை தனது அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்தார்?

உவக முறைப்படி புதிய தொழில் ஆரம்பிக்கும் தொழிலதிபர் தம்மிடம் வேலை பார்ப்பதற்கு படித்து பட்டம் பெற்ற அனுபவசாலிகளைப் பார்த்து தேர்ந்தெடுப்பார்.

ஆனால் இயேசுவோ தனது போதனையை உலகின் கடைசி எல்கை வரை சென்று பரப்புவதற்கு படிக்காத பாமர மீன் பிடிக்கும் தொழிலாளிகளை,

சொன்னதை புரிந்து கொள்ள முடியாதவர்களை,

 தேர்ந்தெடுத்தார். ஏன்?

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள்.

இயேசுவோ சர்வ வல்லவர். அவரது நற்செய்தி உலகெங்கும் பரவியது அப்போஸ்தலர்களின் திறமையினால் அல்ல.

சர்வ வல்லமை பொருந்திய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் தான் திருச்சபை உலகெங்கும் பரவியது.

பரிசுத்த ஆவியின் வல்லமையை நாம் அறிந்து கொள்வதற்காகத்தான்

 அவர் வரும்வரை அப்போஸ்தலர்கள் அப்பாவிகளாகவே இருக்க இயேசு அனுமதித்தார்.

பரிசுத்த ஆவி அவர்கள் மீது இறங்கும் வரை அவர்கள் எதுவும் புரியாத அப்பாவி சீடர்களாகத்தான் இருந்தார்கள்.

பரிசுத்த ஆவி வந்த பிறகுதான் அதுவரை இயேசு அவர்களுக்கு சொன்னதில் புரியாதது எல்லாம் நன்கு புரிந்தது.

இயேசுவை எதிரிகள் பிடித்தபோது பயந்து ஓடியவர்கள் பரிசுத்த ஆவி வந்ததும் பயம் நீங்கி தைரியத்தோடு நற்செய்தியை போதிக்க ஆரம்பித்தார்கள்.

ஒரு பெண்ணின் சொல்லுக்கு பயந்து இயேசுவை மூன்று முறை மறுதலித்த இராயப்பர் துணிச்சலோடு திருச்சபையை தலைமை தாங்கி வழி நடத்த ஆரம்பித்தார்.

பரிசுத்த ஆவியின் வல்லமையை நமக்கு உணர்த்துவதற்காகத்தான் சாதாரண படியாத பாமரர்களை நற்செய்தியை போதிப்பதற்காக இயேசு தேர்ந்தெடுத்தார்.

உண்மையில் நற்செய்தியைப் போதித்தது பரிசுத்த ஆவியானவர் தான்.

 அதனால்தான் அதற்குள் தவறு எதுவும் புகுந்து விடவில்லை.

ஈராயிரம் ஆண்டுகளாக திருச்சபை தளராமல் வெற்றிநடை போடுகிறது என்றால் அதில் பணிபுரியும் மனிதர்களால் அல்ல, அதை வழி நடத்தும் பரிசுத்த ஆவியினால்தான்.

ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை கிறிஸ்துவின் எதிரிகள் கொன்று குவித்து இருக்கலாம்.

விளைவு என்ன?

இயேசுவுக்காக மரித்தவர்கள் நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைந்தார்கள்.

வேத சாட்சிகளின் ரத்தத்தில் திருச்சபை வேகமாக வளர்ந்தது.

இன்று நம்மை வழி நடத்தும் ஆயர்களும், குருக்களும் நம்முடைய குடும்பங்களிலிருந்து சென்ற சாதாரணமானவர்கள்தான்.

அவர்களது திறமையையோ, திறமை இன்மையையோ நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

 ஏனெனில் 
 உண்மையில் திருச்சபையை வழிநடத்துபவர் பரிசுத்த ஆவியானவர்தான்.

இன்றும் கூட நமது நாட்டில் கூட அரசியல் மாற்றங்களால் கிறிஸ்தவத்திற்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று நாம் பயந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் பயப்படத் தேவையில்லை.

ஏனெனில் நம்முடன் இருப்பது பரிசுத்த ஆவியானவர்.

பரிசுத்த ஆவி இருக்கும் இடத்தில் தந்தையும் இருப்பார், மகனும் இருப்பார்.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்தானே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நமது எதிரிகளால் கோவில்களை இடிக்க முடியும். 

வழிபாடு செய்பவர்களை கொல்ல முடியும்.

அதற்குமேல் அவர்களால் என்ன செய்ய முடியும்?

கிறிஸ்தவத்தை யாராலும் அழிக்க முடியாது. 

கொல்லப்படுபவர்கள் நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைவார்கள்.

விண்ணக சாம்ராஜ்யத்தை யாரால் அழிக்க முடியும்?

வேத சாட்சிகளின் இரத்தத்தில் திருச்சபை வேகமாக வளரும்.

 சாலை ஓரத்தில் வாதமடக்கி மரம் ஒன்று நின்றது.

அந்த வழியாக வந்த மன்னனுக்கு அந்த மரம் பிடிக்கவில்லை.

அமைச்சரை நோக்கி,

' அமைச்சரே, இந்த மரத்தை ஆயிரக்கணக்கான துண்டுகளாக வெட்டி தூர எறியுங்கள். நான் திரும்பி வரும்போது இங்கே மரம் நிற்கக் கூடாது"

 என்று உத்தரவு போட்டான்.

அமைச்சரும் மன்னனின் உத்தரவை நிறைவேற்றினார்.

அடுத்த ஆண்டு அதே மன்னன் அதே வழியே வரவேண்டியிருந்தது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வாதமடக்கி மரங்களாக பெரிய காடு ஒன்று வளர்ந்திருந்தது.

"அமைச்சரே, இதே இடத்தில் நின்ற ஒரு மரத்தை வெட்டிப் போட சொன்னது ஞாபகம் இருக்கிறதா?

நான் சொன்னதை செய்தீர்களா?

இந்த வட்டாரம் பூராவும் அதே மரங்கள் செழிப்பாக வளர்ந்துள்ளனவே. அது எப்படி?"

"மன்னா நீங்க சொன்னபடி அந்த ஒரு மரத்தை ஆயிரக்கணக்கான துண்டுகளாக வெட்டி வீசச் செய்தேன்.

ஆனால் வீசிய ஒவ்வொரு துண்டும் ஒரு பெரிய மரமாக வளர்ந்து விட்டது.

நீங்கள் வெட்ட சொன்ன மரத்தின் பிள்ளைகள்தான் இவை.

இம்மரத்தை அழிக்க முடியாது.

கோடிக்கணக்கான துண்டுகளாய் வெட்டி வீசினால் கோடிக்கணக்கான மரங்கள் வளரும்.

நமக்கு எதற்கு அந்த வெட்டி வேலை." என்றான்.

இதேபோல்தான் கிறிஸ்தவத்தையும் அழிக்க முடியாது.

ஏனெனில் கிறிஸ்தவம் கிறிஸ்துவின் ரத்தத்தில் தோன்றி வளர்ந்தது.

கிறிஸ்தவர்களையும் அவர்களால் அளிக்க முடியாது.

அவர்கள் அவருடைய இரத்தத்தாலே உயிர் வாழ்பவர்கள்!

நம்மைப் பொறுத்த மட்டில் இவ்வுலகில் நமக்கு வரும் முடிவு விண்ணக வாழ்வின் ஆரம்பம்.

நமது மண்ணக வாழ்விற்கு அவர்களால் முடிவுகட்ட முடியும்.

ஆனால் மண்ணக வாழ்வு முடிந்த அதே வினாடியில் நமது விண்ணக வாழ்வு ஆரம்பித்துவிடும்.

அது நிலையான வாழ்வு.

சர்வ வல்லப தேவனோடு வாழும் வாழ்வு.

சென்னையில் பஸ் ஏறி தென்காசி வந்து சேர 12 மணி நேரம் ஆகும்.

ஆனால் ஆறு மணி நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டால் வருத்தமா படுவோம்?

உலகில் நூறு ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு விண்ணகம் செல்பவர்களை விட 

ஐம்பதாவது ஆண்டிலேயே செல்பவர்கள் பாக்கியசாலிகள்தானே!

ஏரோது மன்னனால் கொல்லப்பட்ட மாசில்லா குழந்தைகள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்!

உண்மையில் ஏரோது அவர்கள் உலக துன்பங்களை அனுபவிக்காமல் விண்ணகம் செல்ல அவர்களுக்கு உதவியிருக்கிறான். 

அந்த வகையில் நமது எதிரிகள் எல்லாம் நமது நண்பர்களே.

பரிசுத்த ஆவி நம்மோடு இருக்கும்போது நாம் யாருக்கும் அஞ்ச வேண்டியது இல்லை.

ஒரு குழந்தை இறைவனிடம் வேண்டியதாம்:

''இறைவா, நாங்கள் உமது கரங்களில் இருக்கிறோம்.

 எங்களைப்பற்றி உமக்கு கவலை வேண்டாம்.

 உமது கரங்களைப் பத்திரமாய் பார்த்துக் கொண்டாலே போதும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment