Thursday, April 15, 2021

பிரிக்கவே முடியாத உறவுகள்.(தொடர்ச்சி)

பிரிக்கவே முடியாத உறவுகள்.
(தொடர்ச்சி)


நமது விசுவாசத்தை பற்றியே கவலைப் படாமல் உலக சம்பந்தமாக உதவிகளை மட்டும் நாம் கேட்டுக் கொண்டிருந்தால்

 நாம் இயேசுவைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

லூர்து நகரில் நிறைய புதுமைகள் நடக்கின்றன.

 உண்மை.

 ஆனால் அதற்கு ஒரே காரணம் மக்களுடைய விசுவாசம்.

அவர் செய்யும் புதுமை நமது ஆன்மாவிற்கு உதவிகரமாய் இருந்தால் மட்டுமே அதைச் செய்வார்.

முழுமையான ஆன்மீகவாதிகள் உலக சம்பந்தப்பட்ட உதவிகளை இயேசுவிடம் கேட்க மாட்டார்கள்.

அப்படியே கேட்க நேர்ந்தாலும் 
''ஆண்டவரே உமக்கு சித்தம் 
இருந்தால்,

 எனது ஆன்மாவிற்கு நலன் பயக்கும் என்றால் மட்டும் செய்யுங்கள்."

என்ற நிபந்தனையோடு மட்டும் தான் கேட்பார்கள்.



"பசித்தவர்களுக்கு உணவளிக்கவும்,

 ஆடை இல்லாதவர்களுக்கு ஆடையை கொடுக்கவும்,

வியாதியஸ்தர்களைச் சந்திக்கவும்  

ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே.
இவையெல்லாம் உடல் சம்பந்தப்பட்ட உதவிகள் தானே"

என்று சிலர் சொல்லலாம்.

ஆனால் இச் செயல்களின் நோக்கம் ஆன்மீகம் சார்ந்தது.

அதாவது இவற்றின் மூலம் நமது இறை அன்பையும் 
பிறர் அன்பையும் 
நாம் வெளிப்படுத்துகின்றோம்.

இறை அன்பினால் ஏவப்படாமல் 
செய்கின்ற எந்த உதவியும் இறைவன் முன்னால் பயனற்றது.

இறை அன்பிற்காக அல்லாமல் நமது பெருமைக்காக கோடி கோடி யாய் கொட்டி உதவிகள் செய்தாலும் 

அவை இறைவன் முன் மதிப்பு இல்லாதவை.

அரசியல்வாதிகள் ஓட்டுகள் பெறுவதற்காக கோடி கோடியாய் கொட்டி செய்கின்ற உதவிகளுக்கு இறைவன் ஒரு பயனும் அளிக்க மாட்டார். 

எல்லாம் Criminal waste!

"என் சீடன் என்பதற்காக 
இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(மத்.10:42)

கீழ்க் கோடு இட வேண்டிய வார்த்தைகள் (Words to be underlined) "என் சீடன் என்பதற்காக"


எல்லோரும் இறைவனின்
 பிள்ளைகள் என்ற அடிப்படையில் 

இயேசுவின் மகிமைக்காக கொடுக்கப்படும் ஒரு கிண்ணம் தண்ணீருக்குக் கூட விண்ணகத்தில் சன்மானம் உண்டு.


இயேசுவுக்காக அன்றி வெறும் மனிதாபிமானத்திற்காக மட்டும்  
செய்யப்படும் மிகப்பெரிய உதவிக்கு கூட விண்ணகத்தில் எதுவும் இல்லை.

இப்போதெல்லாம் மனிதம் பற்றி பேசுகிறார்கள்.

இறைவன் இன்றி உண்மையான  மனிதம் இல்லை.

இறைவன் இல்லாத மனிதாபிமானம் பயனற்றது.


நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் சுமக்கும் சிலுவைகளுக்கும் இது பொருந்தும்.

இயேசுவுக்காக நாம் படும் துன்பங்கள் நமக்கு விண்ணகத்தில் சன்மானத்தை ஈட்டி தருகின்றன.

நாம் இயேசுவின் சீடர்கள் என்பதற்கு அடையாளமே நாம் அவருக்காகப் படும் துன்பங்கள் தான்.

நான் இயேசுவுக்காக மட்டும் வாழ்கிறேன் ஆனால் அவர் எனக்கு துன்பங்களை மட்டும்தானே அனுப்புகிறார் என்று சலித்துக் கொள்வதும், 

நான் எனது பணியை ஒழுங்காகச் செய்கிறேன் ஆனால் நிர்வாகம் எனது சம்பளத்தை அதிகரித்துக்கொண்டே போகிறது என்று சலித்துக் கொள்வதும் ஒன்றுதான்.

இயேசுவின் சீடர்களுக்கு கட்டாயம் துன்பங்கள் வரும்.

துன்பங்களுக்கு பயந்தவர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல.

எனக்கு துன்பங்கள் வரக்கூடாது என்று ஆசிப்பதும், நான் கிறிஸ்தவனாக இருக்க விரும்பவில்லை என்று நினைப்பதும் ஒன்றுதான்

எந்த அளவிற்கு துன்பங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நாம் புனிதத்துவத்தில் வளர்ந்திருக்கிறோம்.

Vegetarian Hotelல் உட்கார்ந்துகொண்டு மட்டன் சாப்பாடு கேட்பவனும்,

கிறிஸ்தவனாக இருந்து கொண்டு துன்பமே வேண்டாம் என்பவனும் ஒரே ரகம் தான்.

இயேசுவையும் சிலுவையையும் பிரிக்க முடியாது. இதை நமக்கு உணர்த்துவதற்காகத்தான் நமது ஜெப மாலையில் பாடுபட்ட சுரூபம் தொங்கிக் கொண்டிருக்கிறது.

பாடுபட்ட சுரூபத்தைப் பிடித்துக்கொண்டு விசுவாசப் பிரமாணத்தைச் சொல்லிவிட்டுத்தான் செப மாலைக்குள் நுழைகிறோம்.

"இயேசு எனக்காக பாடுபட்டார், நான் அவருக்காக பாடுபடுகிறேன்"
என்பதை இது நமக்கு நினைவூட்ட வேண்டும்.

"துன்பங்கள் நீங்க வேண்டுமா? இயேசுவிடம் வாருங்கள்.

கடன் தொல்லைகள் நீங்க வேண்டுமா? இயேசுவிடம் வாருங்கள்.

நினைத்ததெல்லாம் நடக்க வேண்டுமா? இயேசுவிடம் வாருங்கள்.

வியாதிகள் குணமாகவேண்டுமா? இயேசுவிடம் வாருங்கள்."

என்றெல்லாம் கூறி அழைப்பவர்கள் தவறான வழிகாட்டிகள்.


பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமா? இயேசுவிடம் வாருங்கள்.

சிலுவைகளை சுமக்க தைரியம் வேண்டுமா? இயேசுவிடம் வாருங்கள்.

என்று அழைப்பவர்கள் மட்டுமே சரியான வழிகாட்டிகள்.

"நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே."
(மத்.5:10)

திருமணத்திற்காக கிறிஸ்தவ மதத்தை தழுவும் ஒருவன் ஞானஸ்நானம் பெரும்பொழுது சாமியார் அவனிடம் கேட்டார்,

" திருச்சபையிடம் என்ன கேட்கிறாய்?"

 அவன் சொன்னான்,

" பொண்ணு கேட்கிறேன்.''

சாமியார் சொல்லிக்கொடுத்தார்,

 "விசுவாசம்."

அதற்கு மாப்பிள்ளைக்காரன் சொன்னான்,

"ஆமா சாமி, அவள் பெயர் விசுவாசம் தான்."

பொண்ணுக்காகவும், வேலைக்காகவும் மட்டும் கிறிஸ்தவர் ஆகின்றவர்கள் பெயரளவிற்கு மட்டும் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள்.

விசுவாசத்திற்காக மட்டும் கிறிஸ்தவர் ஆகின்றவர்கள்

உண்மையாக கிறிஸ்தவத்தில் நிலைத்திருப்பார்கள்.

துன்ப காலத்திலும் நிலைத்திருப்பவர்கள் மட்டுமே உண்மையான கிறிஸ்தவர்கள்.

சிலுவையையும் இயேசுவையும் பிரிக்க முடியாது.

இயேசு வேண்டுமென்றால் சிலுவையையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

சிலுவை, இயேசு, நாம் பிரிக்கவே முடியாத உறவுகள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment