Friday, April 30, 2021

"நீங்களோ அவரை அறிவீர்கள்: ஏனெனில், அவர் உங்களோடு தங்கி உங்களுள் இருக்கிறார்."(அரு. 14:17)

"நீங்களோ அவரை அறிவீர்கள்: ஏனெனில், அவர் உங்களோடு தங்கி உங்களுள் இருக்கிறார்."
(அரு. 14:17)

  இறுதி இரவு உணவின்போது இயேசு தனது மூவொரு கடவுள் தன்மையை அப்போஸ்தலர் களுக்கு புரிய வைப்பதற்காக முயற்சி செய்கிறார்.

ஆனால் அவர்களுக்கு அவர் சொல்வதை புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு போதிய புத்திசாலித்தனம் இல்லை.

அவர்கள் கேட்கும் கேள்விகளிலிருந்து இது புரிகிறது.

ஆனாலும் இயேசு மிகப் பொறுமையாக அவர்களுக்கு விளக்குகிறார்.

முதலில் தான் தனது தந்தையிடம் செல்லப் போவதாக சொல்லிவிட்டு

"நான் போகும் இடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்."

என்று சொல்கிறார்.

ஆனால் தோமையார் அவரிடம், "ஆண்டவரே, நீர் செல்லுமிடமே எங்களுக்குத் தெரியாதிருக்க, அங்கே போகும்வழி எப்படித் தெரியும் ?" என்றார்.

தந்தையின் இல்லம் என்று இயேசு சொன்னது தோமையாருக்கு புரியவில்லை.
 
மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றபின் தோமையார் கேட்ட இக்கேள்வி வினோதமாக இருக்கிறது.

வழி தெரியாது என்று கூறியவரிடம் இயேசு 

"நானே வழி" என்று கூறிவிட்டு 

தந்தையைப் பற்றி விளக்கம் கொடுக்கிறார்.

"நீங்கள் என்னை அறிந்திருந்தால், என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள்."

நாம் ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று ஒரு ஆசிரியரிடம்,

" தலைமை ஆசிரியரைப் பார்க்க வேண்டும்"

 என்று சொல்லுகிறோம்.

 அந்த ஆசிரியர்,

" என்னைப் பார்க்கிறவர்கள் தலைமை ஆசிரியரைத்தான் பார்க்கிறார்கள்"

 என்று சொன்னால்

 நாம் உடனே புரிந்து கொள்ள வேண்டும் அந்த ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் ஒருவர்தான் என்று.


ஆனால் இதைக்கூட புரிந்துகொள்ள முடியாத பிலிப்பு,


"ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும், அதுவே போதும்" என்கிறார்.

பிலிப்புவின் புத்திசாலித்தனத்தை பார்த்தால் நமக்கு சிரிப்புதான் வருகிறது.

ஆனாலும் ஆண்டவர் பொறுமையாக   

"பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும், நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா ?

 "என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான். பின், தந்தையை எங்களுக்குக் காட்டும் " என்று நீ கேட்பதெப்படி ?

என்று கேட்கிறார்.

"நான் தந்தையினுள் இருக்கிறேன், தந்தை என்னுள் இருக்கிறார்."

"என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் என் தந்தையே.

என்று கூறியதன் மூலம்

"தந்தையும் நானும் ஒரே கடவுள்" என்ற ரகசியத்தை வெளியிடுகிறார்.

"நானும் தந்தையைக் கேட்பேன்: தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார்: அவர் உங்களோடு என்றும் இருப்பார்."

என்று கூறி பரிசுத்த ஆவியை பற்றி சொன்ன இயேசு 

"நீங்களோ அவரை அறிவீர்கள்: ஏனெனில், அவர் உங்களோடு தங்கி உங்களுள் இருக்கிறார்."

என்கிறார்.

'நீங்களோ அவரை அறிவீர்கள்:"

அதாவது அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியையும் பார்த்திருக்கிறார்கள்.

எப்படி?

இயேசு அவர்களோடு தங்கி அவர்களோடுதான் இருக்கிறார்.

அவரைப் பார்ப்பதும் பரிசுத்த ஆவியை பார்ப்பதும் ஒன்றுதான்.


 இயேசுவைப் பார்க்கிறவர்கள் தந்தையையும் பார்க்கிறார்கள், பரிசுத்த ஆவியையும் பார்க்கிறார்கள்.

இப்போது தம திரித்துவ ரகசியம் முற்றிலும் வெளியாகிறது. அதாவது தந்தை, மகன், பரிசுத்த ஆவி முழுவதும் ஒரே கடவுள்தான்.

கடவுள் அளவற்ற ஞானம் உள்ளவர், ஆகவே மாற்றத்திற்கு அப்பாற்பட்டவர்.

அவருடைய திட்டங்கள் யாவும் நித்திய கால திட்டங்களாகவே இருக்கும்.

ஒரு திட்டம் போட்டு அது நடைபெறாமல், அதற்கு மாற்றாக புதிதாக வேறு திட்டம் போடுவது என்பது கடவுளைப் பொறுத்தமட்டில் இயலாத காரியம்.

கடவுளுடைய திட்டங்கள் மாற முடியாதவை.


மனித குலத்தை படைக்க வேண்டும் என்பது எப்படி நித்திய கால திட்டமோ 

அதுபோல்தான் கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் என்பதும் நித்திய கால திட்டமே.

நமது முதல் பெற்றோர் பாவம் செய்வார்கள் என்பது கடவுளுக்கு நித்திய காலமாகவே தெரியும்.

நமது முதல் பெற்றோரின் பாவத்தை கடவுள் தான் மனிதனாக பிறப்பதற்கு உரிய சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறார்.

ஆகவேதான் தாய்த் திருச்சபை ஆதாமின் பாவத்தை  

"ஓ ஆதாமின் பாவமே!
உன்னை அழிக்க கிறிஸ்துவின் மரணம் திண்ணமாய்த் தேவைப்பட்டது!

இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடைய பேறுபெற்றதால்
பாக்கியமான குற்றமே!" என்று அழைக்கிறது.

 அதாவது இறைவனை உலகத்திற்கு கொண்டு வந்த பாவம்.

மனித குலத்தின் மீது தனக்கு இருந்த அளவுகடந்த அன்பின் காரணமாக

கண்ணால் பார்க்க முடியாத அரூபி ஆகிய கடவுள் 

மனிதன் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காகவே 

மனிதனாக பிறக்கிறார்.

இறைமகன் மனுமகனாக பிறப்பதற்கு முன்னால் மனிதனால்

கடவுளை பார்க்க முடியாது.

கடவுளே மனிதனாக பிறந்து விட்டதால் இயேசுவைப் பார்க்கின்றவர்கள் கடவுளைப் பார்க்கிறார்கள்.

மனித உருவில் உள்ள இயேசுவை பார்க்கிறவர்கள் உருவமற்ற கடவுளைத்தான் பார்க்கின்றார்கள்.

இப்பொழுது ஒரு கேள்வி எழலாம்.

இயேசு 33 ஆண்டுகள்தானே உலகில் வாழ்ந்தார்,

 அதுவும் யூத மக்கள் வாழ்ந்த பகுதியில்தானே வாழ்ந்தார், 

அவர் மரணித்து உயிர்த்து விண்ணகம் எய்தியபின்  
இயேசுவை எப்படி பார்க்க முடியும்?

 அதாவது, இறைவனை எப்படி பார்க்க முடியும்?

 அதுவும் உலகம் எங்கும் உள்ள மக்களால்.

இந்தக் கேள்வி அவசியமே இல்லாதது.

 ஏனென்றால் 

இயேசுவை அதாவது கடவுளை

 உலகம் உள்ள அளவும், உலகத்திலுள்ள அனைவரும், தங்களுடைய கண்களால் பார்க்கலாம், பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

அதற்காகத்தானே தான் மரணமடைவதற்கு முந்திய இரவு இயேசு திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்!

அதற்காகத்தானே குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்!

இன்று நாம் திவ்விய நற்கருணையை பார்க்கும்போது இயேசுவை பார்க்கிறோம்,

இயேசுவை மட்டுமல்ல தந்தையையும், பரிசுத்த ஆவியையும் பார்க்கிறோம்.

ஒரே வாக்கியத்தில் 

நாம் திவ்விய நற்கருணையைப் பார்க்கும்போது பரிசுத்த மூவொரு தேவனை 

நமது கண்களால் பார்க்கிறோம்,

 கைகளால் தொடுகிறோம்,

 நாவினால் ருசித்துப் பார்க்கிறோம்.

பாக்கியம் பெற்றவர்கள் நாம்!

உண்மையில் நாம் உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதே

 தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்தான்!

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்தானே ஆரம்பிக்கிறோம், முடிக்கிறோம்!

நமது வாழ்வில் தந்தை தனியாக செயல்படுவது இல்லை.

மகன் தனியாக செயல்படுவது இல்லை.

 தூய ஆவி தனியாக செயல்படுவது இல்லை.

மூவொரு தேவனே செயல்படுகிறார்.

மனுவுரு எடுத்தது, பாடுகள் பட்டது, சிலுவையில் பலியானது இறைமகன் மட்டும்தான்.

 ஆனால், நம்மை பாவத்திலிருந்து மீட்டது மூவொரு தேவன்.

ஏனெனில் இறைமகனுக்குள் தந்தையும் இருக்கிறார்.
 தூய ஆவியும் இருக்கிறார்.

நாம் ஞானஸ்நானம் பெறும்போது நமது பாவங்களை மன்னிப்பவர் மூவொரு தேவன்.

நாம் உறுதிப்பூசுதல் பெறும் போது நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்துபவர் மூவொரு தேவன்.

திவ்ய நற்கருணை வாங்கும்போது இயேசுவை மட்டும் அல்ல,

 அவருக்குள் வாழும் தந்தையையும் தூய ஆவியையும் சேர்த்துதான் வாங்குகிறோம்.

ஏனெனில் மூன்று ஆட்களும் ஒரே கடவுள் தான்.

தந்தை மனிதனாக பிறக்க வில்லை.

தூய ஆவி மனிதனாக பிறக்க வில்லை.

இறைமகன் மட்டுமே மனிதனாகப் பிறந்தார்.

ஆனாலும் இறை மகனுக்குள் தந்தையும் வாழ்கிறார், தூய ஆவியும் வாழ்கிறார்.

"நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறதாக நீ விசுவசிக்கிறதில்லையா?"
(அரு.14:10)

நாம் கோடிக்கணக்கான பேர் வாழலாம்.

ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் செயல் புரிந்து கொண்டிருப்பது ஒரே மூவொரு தேவன்தான்.

லூர்து செல்வம்.

Thursday, April 29, 2021

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்:" (அரு.13:20)

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்:"
(அரு.13:20)

இயேசு தான் பாடுபடப் போவதற்கு முந்திய நாள் வியாழக்கிழமை இரவு தனது அப்போஸ்தலர்களோடு மனம் திறந்து பேசியபோது சொன்ன 
வசனம்தான்:

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்:"

இயேசுவின் வாழ்நாளின் போது சொன்ன எல்லா வார்த்தைகளும் மதிப்பிற்கு உரியவைகள்தான் என்றாலும் 

மரண சமயத்தை ஒட்டி சொன்ன வார்த்தைகள் உணர்வுபூர்வமாக கவனிக்கத்தக்கவை.

இரவு உணவின்போது,

அதாவது 

திவ்ய நற்கருணையையும் குருத்துவத்தையும் ஏற்படுத்திய இரவின் போது,

பேசிய வார்த்தைகள் அப்போஸ்தலர் களுக்கு மட்டுமல்ல அவர்கள் மூலமாக நமக்கும் சொல்லப்படுபவை.

தான் விண்ணகம் எய்துவதற்கு முன் அப்போஸ்தலர்களை நோக்கி,

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்."

என்று சொன்னதற்கும்,

இரவு உணவின்போது,

"நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்:"

என்று சொன்னதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

இரண்டு வசனங்களையும் அருகருகே போட்டால் அந்த தொடர்பு நன்கு புரியும். 

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்."

"நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்:"

இரண்டு வசனங்களையும் ஒரே வசனம்‌ ஆக்கினால்:

  "உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்க உங்களை அனுப்புகிறேன். உங்களை ஏற்றுக் கொள்பவன் என்னை ஏற்றுக் கொள்கிறான்."

இயேசு போதித்த நற்செய்தியைத்தான் அப்போஸ்தலர்களும் அதிகாரப்பூர்வமாக போதித்தார்கள்.

ஆகவே அப்போஸ்தலர்களின் போதனையை ஏற்றுக்கொள்கின்றவர்கள் இயேசுவின் போதனையைத்தான் ஏற்றுக் கொள்கிறார்கள்.

அப்போஸ்தலர்களும் தங்களுக்கு பிறகு நற்செய்தி போதனை தொடர குருக்களை ஏற்படுத்தினர்.

அப்போஸ்தலிக்க கத்தோலிக்க திருச்சபையில் குருக்கள் அனைவரும் அப்போஸ்தலர்களின் வாரிசுகளே.

இயேசு அப்போஸ்தலர்களுக்கு கொடுத்த உத்தரவும், உத்தரவாதமும் இன்றைய குருக்களுக்கும் பொருந்தும். 

ஆனால் அப்போஸ்தலிக்க திருச்சபையை விட்டு பிரிந்து சென்றவர்களுக்கு இயேசுவின் அதிகாரப்பூர்வமான உத்தரவு பொருந்தாது.

கையில் பைபிள் வைத்திருந்தால் மட்டும் போதாது.

அப்போஸ்தலர்களின் வழிவந்த இயேசுவின் போதக வாரிசுகளாக இருப்பவர்களுக்கு மட்டுமே இயேசுவின் அதிகாரப்பூர்வமான உத்தரவு பொருந்தும்.

நமது குருக்கள் இயேசுவின் நேரடி வாரிசுகள்.

"நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்:"

என்ற இயேசுவின் வாக்குறுதிப்படி பங்கு குருவானவரை ஏற்றுக்கொள்கிறவன் இயேசுவை ஏற்றுக்கொள்கிறான்.

இயேசு அப்போஸ்தலர்களுக்கு கொடுத்த வாக்குறுதி நமது குருக்களுக்கும் பொருந்தும்.

நற்செய்தியை அறிவிக்கவும் தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவும் இயேசுவின் அதிகாரப்பூர்வமான உத்தரவை பெற்றவர்கள் அவர்கள்.

பங்கு குருவானவரை ஏற்றுக்கொள்ள மறுப்பவன் இயேசுவையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்.

நமது பங்கு குருவானவரில் நாம் இயேசுவை காண வேண்டும்.

இயேசுவின் பணி முழுக்க முழுக்க ஆன்மீகப் பணி.

ஒரு முறை இயேசு போதித்துக் கொண்டிருந்த போது
"கூட்டத்தில் ஒருவன், "போதகரே, என் சகோதரன் என்னுடன் சொத்தைப் பங்கிட்டுக்கொள்ளுமாறு சொல்லும்" என்றான்.

14 அதற்கு அவர், "அன்பனே, நியாயம் தீர்க்கவோ பாகம்பிரிக்கவோ என்னை ஏற்படுத்தியவர் யார்?" என்றார்."
(லூக்.12: 13,14)

இயேசு கொடுத்த பதிலின் மூலம் உலக சம்பந்தப்பட்ட அலுவல்கள் புரிய இயேசு மனிதனாக பிறக்கவில்லை என்பது தெளிவாகிறது.

குழுவானவரும் உலக சம்பந்தப்பட்ட அலுவல்கள் புரிய 
தேவ சாஸ்திரம் படித்து குரு பட்டம் பெறவில்லை.

முழுக்க முழுக்க ஆன்மீகப் பணி புரியவே அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்.

ஆனால் நாம் அவரை ஒரு நிர்வாகியாகத்தான் பார்க்கிறோமே தவிர ஆன்மிக பணியாளராக பார்ப்பதில்லை.

நமக்கு ஆன்மிகப் பணி செய்ய வந்தவர்களிடம் 
பங்கு நிர்வாகம்,

பங்கு வரவு செலவு, 

ஆலயங்கள் கட்டுதல்,

அதற்காக நன்கொடைகள் பிரித்தல், 

அந்த கணக்குகளைக் கவனித்தல்,

 பள்ளிக்கூட நிர்வாகம்,

 ஆசிரியர்கள் நியமனம், மாற்றம்,

 கோவில் நில நிர்வாகம் 

போன்ற எண்ணற்ற நிர்வாக பொறுப்புகளை கொடுத்துவிட்டு

 நமது ஆன்மாக்களை நாமும் கவனிக்காமல் 

அவர்களையும் கவனிக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறோம்.

இவ்வளவு வேலை செய்ய வேண்டியவர்களுக்கு வீடு வீடாகச் சென்று பாவசங்கீர்த்தனம் கேட்க எப்படி நேரம் கிடைக்கும்?

இந்த வேலைகளை பார்க்கவா அவர்கள் ஏறத்தாள பத்து ஆண்டுகள் தேவ சாஸ்திரம் படித்துவிட்டு வந்திருக்கிறார்கள்?

இத்தகைய பணிகளை நமது பங்கு பேரவைகள் செய்ய வேண்டும்.

 ஆனால் அவை நிம்மதியாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கின்றன!

நமக்கு நற்செய்தி அறிவிக்கவும், பாவமன்னிப்பு, திருப்பலி, திவ்ய நற்கருணை போன்ற தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவுமே இயேசு அவர்களை நம்மிடம் அனுப்பி வைத்திருக்கிறார்.

வீட்டிற்கு வைத்தியம் பார்க்க வந்த மருத்துவர் பொறுப்பில் வீட்டு சமையல் வேலையை ஒப்புவித்தால் எப்படி இருக்கும்,

 அப்படி இருக்கிறது நாம் செய்வதும்.

இத்தகைய நிர்வாக வேலைகளை இயேசு செய்ததாகவோ,

 அப்போஸ்தலர்களை செய்யச் சொன்னதாகவோ எங்கும் குறிப்புகள் இல்லை.

அவர் செய்தது எல்லாம் ஆன்மீகப் பணிகளை மட்டுமே.

அவர் செய்ய சொன்னதும் ஆன்மீகப் பணிகளை மட்டும்தான்.

குருக்கள் வசம் ஆன்மீகப் பணிகளை மட்டும் கொடுப்போம்.

நமது ஆன்மீக வளர்ச்சிக்காக அவர்களை முற்றிலும் பயன்படுத்துவோம்.

அவர்கள் காட்டும் ஆன்மீக வழியில் நடப்போம்.

அவர்களை அடிக்கடி நாடிச் சென்று நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெறுவோம்.

நமது பாவங்களை மன்னிக்கக் கூடிய அதிகாரத்தை இயேசு அவர்களிடம் தான் கொடுத்திருக்கிறார்.

இயேசுவை நமது ஆன்மீக உணவாக பெறுவதற்கும் அவர்களை நாடுவோம்.

அப்பத்தையும் இரசத்தையும் இயேசுவின் திரு உடலாகவும் இரத்தமாகவும் மாற்றக்கூடிய வல்லமையை இயேசு அவர்களுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறார்.

நாம் தினமும் வாசிக்கும் பைபிள் வாசகங்களுக்கான விளக்கங்களை பெற அவர்களை நாடுவோம்.

அதற்காகத்தான் அவர்கள் 10 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

நமக்கு உண்மையான மன அமைதியை தர அவர்களால்தான் முடியும்.

இயேசு நம்மிடையே வந்தால் அவரிடம் எப்படி நடந்து கொள்வோமோ அப்படியே நமது குருக்களிடமும் நடந்துகொள்வோம்.

பரலோகத் தந்தை எந்த நோக்கத்தோடு தன் மகனை உலகிற்கு அனுப்பினாரோ

அந்த நோக்கத்தோடு தான் மகனும் தன் சீடர்களை நம்மிடம் அனுப்பினார்.

இயேசுவின் பாடுகளும், மரணமும் நமது பாவமன்னிப்பை நோக்கமாக கொண்டன.

நமது வாழ்வில் நமக்கு ஏற்படும் துன்பங்களை நமது பாவங்களுக்கு பரிகாரமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் பாவமன்னிப்பு பெற்றால்தான் விண்ணக வாழ்விற்கு ஏற்றவர்களாக மாறுவோம்.

பாவமன்னிப்பு பெற்ற நிலையில் நாம் செய்யும் ஆன்மீக செயல்கள்தான் இறைவனின் அருள் வரங்களை நமக்கு பெற்றுத்தரும்.

இந்த உண்மை நம் மக்களுக்கு ஏன் புரிய மறுக்கிறதோ தெரியவில்லை. 

அநேகர் நாட்கணக்காக ஜெப கூட்டங்களில் கலந்து கொண்டாலும் பாவசங்கீர்த்தனத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.

ஞானஸ்நானம் பெறுவதே ஜென்ம பாவத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக தான்.

கர்மப் பாவத்திலிருந்து விடுதலை பெற பாவசங்கீர்த்தனம் செய்தாக வேண்டும்.

இதை மனதில் ஆழப் பதித்துக் கொள்வோம்.

பாவசங்கீர்த்தனம் கேட்கும் அதிகாரத்தை ஆண்டவர் நமது குருக்களுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறார்.

பாவமன்னிப்புப் பெற குருக்களை அணுகுவோம்.

இயேசுவின் பாடுகளின் பலனை அபரிமிதமாகப் பெறுவோம்.

குருக்களைத் தந்ததற்காக இயேசுவுக்கு நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, April 28, 2021

"என்னைக் காண்கிறவனும் என்னை அனுப்பினவரையே காண்கிறான்."(அரு.12:45)

"என்னைக் காண்கிறவனும் என்னை அனுப்பினவரையே காண்கிறான்."
(அரு.12:45)


"இயேசு, உரக்கக் கூவிச் சொன்னது: "என்மேல் விசுவாசம் கொள்கிறவன் என்மேல் அன்று, என்னை அனுப்பினவர்மேல்தான் விசுவாசம் கொள்கிறான்.
45 என்னைக் காண்கிறவனும் என்னை அனுப்பினவரையே காண்கிறான்."


பொதுவாக மேடைப் பேச்சாளர்களுக்கு ஒரு சுபாவம் உண்டு.

அழுத்தமாக சொல்ல வேண்டியதை உரக்க சொல்வார்கள்.

சாதாரண குரலில் பேசிக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று குரலை உயர்த்தி பேசினால் ஏதோ மிக முக்கியமான கருத்தை சொல்லப் போகிறார்கள் என்று அர்த்தம்.

எழுதும்போது முக்கியமான கருத்து வரும்போது கீழ் கோடிட்டு காண்பிக்கலாம்.

பேசும்போது கீழ்க் கோடிட முடியாது.

ஆகவே சொல்லப்போகும் கருத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த குரலை உயர்த்தி பேசுவார்கள்.

அவ்வாறே தான் இயேசுவும் "உரக்கக் கூவிச்" சொல்கிறார்:

"என்மேல் விசுவாசம் கொள்கிறவன் என்மேல் அன்று, என்னை அனுப்பினவர்மேல்தான் விசுவாசம் கொள்கிறான்.
45 என்னைக் காண்கிறவனும் என்னை அனுப்பினவரையே காண்கிறான்."

உரக்கக் கூவிச் சொல்வதற்கு இவ் வார்த்தைகளில் என்ன விசேஷம் உள்ளது?

இயேசு பேசிக்கொண்டிருக்கிறார்.
மக்கள் இயேசுவைத்தான் பார்க்கிறார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களின் கண்களில் படுவது அவர்களுக்கு உண்மை.

 ஆனால் இயேசு சொல்கிறார்:

"என்னை காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்."

அனுப்பினவர் தந்தை.

"மகனைக் காண்கிறவன் தந்தையைக் காண்கிறான்" என்றால் என்ன பொருள்?

தந்தையும் மகனும் ஒருவர்தான்.
(ஒரே கடவுள் தான்)

"Father and Son are one God ."

பரிசுத்த தமதிரித்துவத்தின் ரகசியம் நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இயேசு பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த யூத மக்களுக்கு அது புதிய செய்தி.

புதிய செய்தி அவர்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காகத்தான் இயேசு குரலை உயர்த்தி பேசினார்.

 தந்தை, மகன், தூய ஆவி மூன்று ஆட்கள், ஒரே கடவுள்.

இன்றைய வசனத்தின்படி சொல்வதானால்:

மகனைக் காண்பவர்கள் தந்தையையும், தூய ஆவியையும் காண்கிறார்கள்.

மகனும், தந்தையும் ஒரே கடவுள் தான்.

மகனும், தூய ஆவியும் ஒரே கடவுள் தான்.

மகனும், தந்தையும், தூய ஆவியும் ஒரே கடவுள் தான். 

இயேசு மக்களுக்கு தெரியாத தன்னைப்பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.

மக்களைப் பொறுத்தமட்டில் இயேசு பெத்லகேமில் பிறந்து நாசரேத்து ஊரில் வளர்ந்த ஒரு மனிதன்.

தச்சன் மகன்.

ஆனால் உண்மையில் அவர் தச்சன் மகன் அல்ல. இறைமகன்.

தனது புதுமைகளாலும், செயல்களாலும் தான் இறைமகன் என்ற உண்மையை முதலில் வெளிப்படுத்திய இயேசு,

 தொடர்ந்து தனது (கடவுளின்) ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.

தமதிரித்துவ ரகசியத்தை இயேசு மக்களுக்கு ஏன் வெளிப்படுத்துகிறார்?

ஏற்கனவே கடவுளைப்பற்றி மக்களுக்கு உள்ள அறிவை அதிகப்படுத்தவா?

 Is it to add to to their knowledge about God?

நிச்சயமாக இல்லை. இயேசு மக்களுக்கு தேவ சாஸ்திர பாடம் எடுக்கவில்லை.

Jesus is not teaching us theology.

இயேசு தன்னை பற்றி வெளிப்படுத்தவில்லை. தன்னை வெளிப்படுத்துகிறார்.


தன்னை பற்றி வெளிப்படுத்துவதற்கும்,

தன்னை வெளிப்படுத்துவதற்கும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.

இயேசுவைப்பற்றி அறிவதற்கும் இயேசுவை அறிவதற்கும் உள்ள வித்தியாசம்.

இயேசுவை பற்றி அறிவது அவரைப்பற்றிய அறிவை வளர்ப்பது.

இயேசுவை அறிவது அவரை வாழ்வது.

அன்னை மரியாள் கபிரியேல் தூதரிடம் 

"நான் கணவனை அறியேனே"

 என்று சொன்னதை ஞாபகபடுத்தி கொண்டால் வித்தியாசம் புரியும்.

அவளுக்கு சூசையப்பரைப் பற்றி தெரியும், 

ஆனால் சூசையப்பரைத் தெரியாது.

இயேசு தன்னை நமக்கு வெளிப்படுத்துகிறார்.

எதற்கு? 

அவரை வாழ்வதற்கு.
To experience and enjoy Him.

நாம் இறைவனை அறிவது இறை அனுபவத்திற்காக.

இயேசு நாம் அவரை வாழ்வதற்காக வெளிப்படுத்தினார் என்ற உண்மையின் அடிப்படையில் நமது சிந்தனையை செலுத்தினால் ஒரு மிகப்பெரிய அனுபவ உண்மை வெளிப்படும். 


இயேசு தனது தந்தையை நோக்கி கூறுகிறார்:
"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்:

நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, நீர் எனக்கு அளித்த மகிமையை நான் அவர்களுக்கு அளித்தேன்."
(அரு.17:21, 22)

இப்பொழுது புரிந்திருக்கும் இயேசு தன்னை நம்மிடம் ஏன் வெளிப்படுத்துகிறார் என்று.

தந்தையும் மகனும் ஒன்றாய் இருப்பது போல 

நாமும் முதலில் நமக்குள் ஒன்றாய் இருக்க வேண்டும் 
(நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி)

அடுத்து இறைவனுக்குள் அவரோடு ஒன்றாய் இருக்க வேண்டும்.
(அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி)

பரிசுத்த தமதிரித்துவத்தை நாம் அறிவது நமது அனுபவத்திலும், அனுபவிப்பதிலும் நடைபெற வேண்டும்.

We must experience and enjoy Holy Trinity in our life. That is how we are to know Him.

எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே ஒன்றிப்பு (Union) இருக்கும்.

இயேசுவின் விருப்பப்படி பரிசுத்த தம திரித்துவத்தை நாம் அறிய வேண்டும் 

அதாவது
 வாழவேண்டும் 

அதாவது 
திரித்துவ அன்புடன் ஒன்றித்து வாழ வேண்டும்

 அதாவது 
தம திரித்துவ இறைவனை நாம் அனுபவிக்க வேண்டும்.

"ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார்." 

இது கடவுளைப் பற்றிய அறிவு.

இறை அன்பில் ஒன்றித்து வாழ்வது தம திரித்துவ அனுபவம்.

அறிவைவிட அனுபவம் தான் முக்கியம்.

அறிவு தேர்வு எழுதவும் முதல் தர மதிப்பெண் பெறவும் பயன்படும்.

அனுபவம் வாழும்.

மூவொரு இறைவனின் அன்பில் மனிதகுலம் ஒன்றித்து வாழ வேண்டும் என்பதற்காகவே இயேசு தன்னை பற்றிய தமதிரித்துவ ரகசியத்தை நமக்கு வெளிப்படுத்தினார்.

"உன்னைப்போல் உனது அயலானையும் நேசி.''

 என்ற இயேசுவின் அன்பு கட்டளைகளைக்குள் இந்த ஒன்றிப்பு வாழ்வு அடங்கி இருக்கிறது.

இது இவ்வுலகில் தம் திரித்துவத்தை வாழ்ந்து அனுபவிப்பது.

தம திரித்துவ இறைவன் நம்மை படைத்து தன்னை வெளிப்படுத்தியது இவ்வுலகில் வாழ்வதற்காக மட்டும் அல்ல.

மறு உலகில் தம திரித்துவ இறைவனோடு அன்பில் ஒன்றித்து வாழ வேண்டும் என்பதற்காகவே இறைவன் நம்மை படைத்தார்.


"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்:"

என்ற இயேசுவின் மன்றாட்டு அவருடைய படைப்பு தமதிரித்துவ அன்பிற்குள் மனுக்குலம் ஒன்றித்து வாழ வேண்டும் என்ற அவரது ஆசையை வெளிப்படுத்துகிறது.

இந்த ஒன்றிப்பு இவ்வுலகில் தொடங்கி மறு உலகில் தொடர வேண்டும்.

மறு உலகில் தொடரும் ஒன்றிப்பு வாழ்க்கையை நாம் நிலைவாழ்வு என்று அழைக்கிறோம்.

அதாவது இறைவனோடு ஒன்றித்து நித்திய காலமும் பேரின்பத்தில் வாழும் வாழ்வு.

நிலை வாழ்வின் போது நாம் இறை வாழ்வுடன் பங்கு பெறுகிறோம்.

We share in the divine life of God.


இறைவனோடு ஒன்றித்து அவரை நித்திய காலமும் அனுபவிக்கிறோம்.

We enjoy God for all eternity by living in union with Him.

பரிசுத்த தம திரித்துவத்தின் ரகசியம் நமது நிலை வாழ்வாக மாறிவிடும்.

இப்படி மாற வேண்டும் என்பதற்காகவே இயேசு தன்னைப்பற்றிய ரகசியத்தை வெளியிடுகிறார்.

ஆக இயேசு பரிசுத்த தமதிரித்துவ
ரகசியத்தை நமக்கு வெளிப்படுத்தியது இறைவனைப் பற்றிய நமது அறிவை வளர்த்துக் கொள்வதற்கு அல்ல.

இறை அன்பில் ஒன்றித்து இவ்வுலகிலும் மறுவுலகிலும் வாழ்வதற்காகத்தான்.

இறைவனை அறிவோம்.

இறைவனை வாழ்வோம்.

அன்பில் ஒன்றித்து வாழ்வோம்.


தந்தை, மகனுள்ளும், மகன் தந்தையுள்ளும் இருப்பதுபோல்,

 நாமும் இறைவனுள் ஒன்றாய் இருப்போம், நித்திய காலமும்.

லூர்து செல்வம்.

Tuesday, April 27, 2021

"என் செயல்களையாவது விசுவசியுங்கள்:"(அரு.10:38)

"என் செயல்களையாவது விசுவசியுங்கள்:"
(அரு.10:38)

பைபிள் முதல் அனைத்து நூல்களையும் கற்றறிந்து சிந்தனா சக்தியில் வல்லவர்களாய் விளங்கும் அறிஞர்களைப் பற்றி பெருமைப் படுவதை விட

படிப்பறிவு இல்லாத சாதாரண பாமர மக்களைப் பற்றி சந்தோஷப்படுவது எவ்வளவோ மேல்.

இயேசுவின் காலத்திலும் வேதத்தை முழுவதும் கற்றுத்தேர்ந்த மறைநூல் அறிஞர்களுளும்,

அவர்களால் வழிநடத்தப்பட்ட ஆனால் படிப்பறிவற்ற சாதாரண யூதர்களும் இருந்தார்கள்.

இருவகையினருக்குமே இயேசு நற்செய்தியை அறிவித்தார்.

படிப்பறிவற்ற சாதாரண மக்கள் இயேசு செய்த புதுமைகளையும் நற்செயல்களையும் பார்த்து அவர் மேல் உண்மையான விசுவாசம் கொண்டார்கள்.

ஆனால் மறைநூல் அறிஞர்கள் அவரை விசுவசியாதது மட்டுமல்ல 
அவரை கொல்லவும் வழி தேடிக் கொண்டிருந்தார்கள்.


அவர்கள் ஒரு நாள் இயேசுவிடம்,

"நீர் மெசியாவாக இருந்தால் தெளிவாகச் சொல்லிவிடும்."

இயேசுவை விசுவசிக்க வேண்டும் என்ற ஆவலில் இப்படிச் சொல்லவில்லை.

தாங்கள் அவரை விசுவசிக்க வில்லை என்பதை காட்டிக் கொள்ளவே இவ்வாறு சொன்னார்கள்.


இயேசு அவர்களைப் பார்த்து,

"நான் சொல்லிவிட்டேன், நீங்கள்தாம் விசுவசிக்கிறதில்லை. என் தந்தையின்பெயரால் நான் புரியும் செயல்களே எனக்குச் சாட்சியம்.'' என்றார்.

அதாவது,

" நான் செய்யும் செயல்களைப் பார்த்து என்னை நீங்கள் விசுவசித்திருக்க வேண்டும். பார்த்தும் விசுவசியாதது உங்கள் தவறு." என்ற பொருள்பட கூறினார்.

இயேசு உலகிற்கு வந்தது புதுமைகள் செய்வதற்காக அல்ல.
நோயாளிகளை குணமாக்குவதற்காகவும் அல்ல. 

அவர் வந்ததன் நோக்கம் நற்செய்தி அறிவிக்கவும்

 நமது பாவங்களுக்கு பரிகாரமாக பாடுகள் பட்டு, சிலுவை மரத்தில் பலியாக தன்னை ஒப்பு கொடுப்பதற்காகவும்தான்.

ஆனாலும் தான் இறைமகன் என்பதை மக்கள் விசுவசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் புதுமைகள் செய்தார் நோயாளிகளைக் குணமாக்கினார்.

படிப்பறிவற்ற சாதாரண மக்கள் அவரது செயல்களைப் பார்த்து அவர் மெசியா என்பதை ஏற்றுக் கொண்டார்கள்.

இயேசுவின் நற்செய்தியை கேட்க வேண்டும் என்பதற்காகவே அவர் பின்னாலேயே சென்றவர்கள் படிப்பு அறிவு இல்லாத சாதாரண பாமர மக்கள்தான்.

மறைநூல் அறிஞர்கள் மட்டும் அவரை மெசியா என்று ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.

அறிஞர்கள் இயேசுவின் பின்னால் சென்றது அவரது நற்செய்தியை கேட்பதற்காக அல்ல, 

அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடுதான். 


இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது மறைநூல் அறிவை அல்ல.

விசுவாசத்தையும் விசுவாச வாழ்க்கையையும் மட்டுமே.

பைபிள் அறிவு நமக்கு மீட்பைப் பெற்றுத் தராது.

பைபிளை வாழ்வதுதான் மீட்பைப் பெற்றுத் தரும்.

பைபிளை Cover to cover பாராமல் படித்து வசனம் தவறாமல் ஒப்பிக்க தெரிந்தால் தலையில் மட்டுமே கனம் ஏறும். இருதயத்திற்குள் ஒன்றும் ஏறாது.

எழுத வாசிக்க தெரியாதவனிடம் பைபிளை பற்றிய அறிவு தலையில் எதுவும் இருக்காது.

ஆனால் மொத்த பைபிளும் போதிக்கும் அன்பு இருதயத்தில் இருந்தால் போதும், அவன் மீட்புப் பெறுவான்.

அன்பு ஒன்றுதான் மீட்பை பெற்றுத்தரும்.

மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் செயல்களைப் பார்த்தும் அவரை விசுவசிக்க வில்லை.

நாம் அவர்களைப்போல இருந்துவிடக்கூடாது.

நம்மில் இயேசு செய்யும் செயல்களைப் பார்த்து அவரை விசுவசிக்க வேண்டும்.

விசுவாசத்தின் அடிப்படையில் நமது வாழ்க்கையை நாமே உற்றுநோக்கினால் இயேசு நம் வாழ்வில் செயல் புரிந்து கொண்டிருப்பது புரியும்..
..
விசுவாசக் கண்ணால் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இயேசுவின் செயல்கள் புரியும்.

முதலில் நமது வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் இயேசுவே நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகிறார், நம்மை பராமரிக்கிறார் என்று விசுவசிக்க வேண்டும்‌.

இந்த விசுவாசத்தோடு நமது வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு செயலையும் உற்றுநோக்கினால் அது இயேசுவின் பராமரிப்பினால் நடைபெற்று வரும் செயல் என்பது விளங்கும்.

விசுவாசம் இல்லாமல் பார்த்தால் எல்லா செயல்களும் தற்செயலாக நடப்பது போல் தோன்றும்.

 ஒரு சிறு செயல் கூட தற்செயலாக நடப்பது இல்லை.

நமது மீட்பை மையமாக வைத்து நமது வாழ்வின் ஒவ்வொரு செயலையும் இயேசு நித்திய காலமாக திட்டமிடுகிறார். ‌

மீட்பை மையமாக வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும்.

மீட்பைப் பற்றி 
கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இது புரியாது.

படிப்பதற்காக மட்டும் பள்ளிக்கூடத்திற்கு வந்திருப்பவர்களுக்கு மட்டுமே பள்ளிக்கூட சட்டதிட்டங்களும், பழக்கவழக்கங்களும் புரியும்.

படிப்பை பற்றியே கவலைப்படாதவர்களுக்கு ஆசிரியர் ஏன் வகுப்பிற்கு வருகிறார் என்பதே புரியாது.

மீட்பை மையமாக வைத்து வாழ்வது என்றால் என்ன?

நாம் எதற்காக உலகில் பிறந்திருக்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்?

நாம் பிறந்திருப்பதற்கும் வாழ்வதற்கும் ஒரே நோக்கம் தான்:
மீட்பு.

பிறப்பின் நோக்கம் உண்பது அல்ல, வளர்வது அல்ல, படிப்பது அல்ல, பட்டம் பெறுவது அல்ல, வேலை பார்ப்பது அல்ல, சம்பளம் பெறுவது அல்ல, வசதியாக வாழ்வது அல்ல.

இவ்வளவும் கிடைத்து மீட்பு கிடைக்காவிட்டால் நாம் பிறந்தும் பயனில்லை.

இவற்றில் எதுவும் கிடைக்காமல் மீட்பு மட்டும் கிடைத்தால் நாம் பிறவியின் பயனை அடைந்துவிட்டோம்.

மீட்பிற்காக வாழும் வாழ்க்கையைத்தான் விசுவாச வாழ்க்கை என்கிறோம்.

இயேசுவை நமது இரட்சகராக ஏற்றுக் கொள்வதில் மட்டும் அடங்கி இருக்கவில்லை விசுவாசம். அதற்காக வாழ்வதுதான் விசுவாசம்.

விசுவாச வாழ்வில் நமது செயல்கள் மீட்பை நோக்கியே இருக்க வேண்டும்.

மீட்பை நோக்கிய செயல்கள் அனைத்தையும் திட்டமிடுபவர் நமது மீட்பராகிய இயேசுவே.

ஆகவேதான் நமது செயல்களில் இருந்து இயேசு நம்மில் செயல்படுவதை புரிந்து கொள்ளலாம்.

மீட்பை நோக்கிய வாழ்வில் இயேசு செயலாற்றுவது விசுவாச கண் உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்.

விசுவாசம் இன்றி வெறும் மறை நூலறிவு மட்டும் இருப்பவர்களுக்கு புரியாது.

யூத அறிஞர்களுக்கு மறைநூல் அறிவு நிறைய இருந்தது.

ஆனால் விசுவாசம் கொஞ்சம்கூட இல்லை.

ஆகவேதான் இயேசுவை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

வாழ்க்கைக்கு பயன்படாத அறிவு waste!

விசுவாச வாழ்க்கைக்கு பயன்படாத மறைநூல் அறிவும் waste!

பைபிள் வாசிப்போம்,

 அறிவு பெற அல்ல,

 ஆண்டவருக்காக வாழ.

விசுவசிப்போம்.

 விசுவாசத்தை வாழ்வாக்குவோம்.

மீட்பு அடைவதற்காக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, April 26, 2021

"தந்தை என்னை அறிவதுபோலவும், நான் தந்தையை அறிவதுபோலவும், என் ஆடுகளை நான் அறிவேன்: அவையும் என்னை அறிகின்றன."(அரு.10:15)

"தந்தை என்னை அறிவதுபோலவும், நான் தந்தையை அறிவதுபோலவும், என் ஆடுகளை நான் அறிவேன்: அவையும் என்னை அறிகின்றன."
(அரு.10:15)

நாம் ஒன்றும் இல்லாமையிலிருந்தது படைக்கப்பட்டோம்.

நம்மை படைத்தவர் சர்வ வல்லவர்.

நமக்குச் சொந்தமாக இருப்பது நம்மிடம் எதுவுமே இல்லை.
 
ஒன்றுமே இல்லாத நம்மையும் சர்வத்துக்கும் சொந்தமான கடவுளையும் எந்த விதத்திலும் சிறிதுகூட ஒப்பிடவே முடியாது.

ஆனாலும் அளவிடமுடியாத அன்புக்கு சொந்தமான கடவுள் தன் அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டதும் அல்லாமல் 

அல்லது அன்பின் மிகுதியால் ஒன்றுமே இல்லாத நம்மை சர்வத்திற்கும் உரிய தம்மோடு சரி சமமாக வைத்து பேசுவதும் பழகுவதும் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அளவிட முடியாத மகிமைக்கு உரிய இயேசு

 ஒன்றுமே இல்லாத நம்மோடு பழகுவதற்காகவே நம்மைப்போல் மனித உரு எடுத்தது மட்டுமல்லாமல் 

நம்மை அவருக்கு சரிசமமாக நிலையில் வைத்துப் பேசுவது 

அளவிட முடியாத அளவிற்கு வியப்பாக இருக்கிறது.

ஆண்டிக்கு சமமாக அமர்ந்துகொண்டு அவனோடு உரையாடும் அரசரைப் போல 

எதுவுமே இல்லாத நமது இதயக் கதவை தட்டி உள்ளே நுழைந்து நம்மோடு சரிக்கு சமமாக அமர்ந்து

 நம்மோடு உரையாடுகிறார் நம் இரட்சகர்.

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.'' (மத்.5:48)

கடவுள் மட்டுமே நிறைவானவர். குறைவான என்ற அடைமொழிக்குக்கூட பொருத்தமில்லாதவர்கள் நாம்.

ஒன்றுமில்லாமை என்ற அடைமொழி மட்டுமே நமக்கு பொருந்தும்.

நம்மைப் பார்த்து அவரது தந்தையை உங்கள் தந்தை என்கிறார்.

வானகத்தந்தையைப் போலவே நிறைவு உள்ளவர்களாக இருங்கள் என்கிறார்.

 நிறைவு நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அளவு கடந்தது.

ஆனாலும் அவரது கூற்று அவர் தன் தந்தையை அன்பு செய்யும் அளவிற்கு நம்மையும் அன்பு செய்கிறார் என்பதை   தெளிவாக காட்டுகிறது.

தகுதியே இல்லாத நம்மை அளவிட முடியாத அளவிற்கு அன்பு செய்யும் அளவிற்கு சர்வ வல்லவர் இறங்கி வந்திருக்கிறார்.

அதிலிருந்து அவர் நம்மிடம் எவ்வளவு எதிர்பார்க்கிறார் என்பது தெரிகிறது.

இயேசு நம்மை அளவிடமுடியாத அளவிற்கு அன்பு செய்தாலும் நாம் அளவுக்கு உட்பட்டவர்கள் என்பதை மறுக்க முடியாது.

நம்மால் அதிகபட்ச அளவிற்கு (To the maximum level) எவ்வளவு அன்பு செய்ய முடியுமோ அவ்வளவு அவரை அன்பு செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

அருள்நிறைந்த அன்னை மரியாள் இயேசுவை அன்பு செய்த அளவிற்கு 

 அருளுக்காக ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும் நம்மால் அவரை அன்பு செய்ய முடியாது என்பது அவருக்கு தெரியும்.

ஆனாலும் நம்மால் அதிகபட்ச அளவு எவ்வளவு முடியும் என்பதும் அவருக்குத் தெரியும்.

முடிந்த அளவு முயல வேண்டும் என்பது இயேசுவின் எதிர்பார்ப்பு.


"தந்தை என்னை அறிவதுபோலவும், நான் தந்தையை அறிவதுபோலவும், என் ஆடுகளை நான் அறிவேன்:
அவையும் என்னை அறிகின்றன."

தந்தை மகனை அளவில்லாத விதமாய் அறிவார்.

மகன் தந்தையை அளவில்லாத விதமாய் அறிவார்.

வேறு வார்த்தைகளில் கடவுள் தன்னை அளவில்லாத விதமாய் அறிவார்.

கடவுள் இயல்பிலேயே (By nature) அளவில்லாத ஞானமும், அறிவும் உள்ளவராகையால் அவரால் படைக்கப்பட்ட நம்மை அவர் முழுவதுமாக அறிவார்.

இயேசு " என் ஆடுகளை நான் அறிவேன்:" என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளவில்லை.

"அவையும் என்னை அறிகின்றன." என்றும் கூறுகிறார்.

இயேசுவின் அறிவு அளவு அற்றது. நமது அறிவு குறுகிய அளவிற்கு உட்பட்டது. இது இயேசுவுக்கு நன்கு தெரியும்.

ஆனாலும் "எனது ஆடுகளும் என்னை அறிகின்றன" என்று கூறுவது எப்படி?

"கடவுளாகிய நான் என்னை அறிவது போல உங்களையும் அறிகிறேன்.

உங்களை நான் அறிவது போல என்னையும் நீங்கள் அறிய வேண்டும் என்பதுவே எனது ஆசை.

கடவுளாகிய நான் நீங்களாக (மனிதனாக) மாறினேன். 

அதற்காகவே விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கி வந்தேன்.

எதற்காக நான் இறங்கி வந்தேன்?

நீங்கள் என்னோடு விண்ணிற்கு ஏறி வர வேண்டும் என்பதற்காகத்தான்.

விண்ணிற்கு என்னோடு ஏறி வரவேண்டுமென்றால் நீங்கள் நானாக மாறவேண்டும்.

 நீங்கள் நானாக மாற வேண்டும் என்றால் உங்களில் நான் வாழ வேண்டும். என்னில் நீங்கள் வாழ வேண்டும்.

"வாழ்வது நான் அல்ல. இயேசுவே என்னில் வாழ்கின்றார்"

என்று நீங்கள் சொல்லும் அளவிற்கு நாம் ஒருவரோடு ஒருவர் ஒன்றிக்க வேண்டும்.

நமது ஒன்றிப்பு நித்திய காலமாக நீடிக்க வேண்டும்.

இதற்காகத்தான் நான் உங்களை படைத்தேன்."

இயேசுவுக்கு எவ்வளவு பெரிய ஆசை பாருங்கள்! 

அவரது அன்பின் அளவிற்கு ஆசை!

"இயேசுவே உமது ஆசை எங்களுக்கு புரிகிறது.

நீர் அளவற்றவர். ஆகவே உமது ஆசைகளுக்கும் அளவே இருக்காது.

ஆனால் நாங்கள் அளவு உள்ளவர்கள்.

 அளவற்ற உமது ஆசைகளை எப்படி நிறைவேற்றுவது என்று எங்களுக்கு புரியவில்லை.

உமது அளவற்ற ஆசைகளை நிறைவேற்றுவதற்காகத்தான் எங்களை படைத்திருக்கிறீர் என்பது மட்டும் புரிகிறது.

அளவுள்ள எங்களால் அளவற்ற உமது    ஆசைகளை எப்படி நிறைவேற்றுவது என்று தெரியவில்லை.

வேறு என்ன சொல்வது என்றும் எங்களுக்கு தெரியவில்லை.

நீர்தான் சொல்லித் தரவேண்டும்.

நீ ஒரு நல்ல ஆசிரியர்.

 எங்களை முதலில் நல்ல மாணவர்களாக மாற்றும்.

அப்புறம் சொல்லித்தாரும்."

"நான் உன்னைப் படைத்த சர்வ வல்லப கடவுள் என்று நீ விசுவசிப்பது உண்மையானால் 

படைத்தவராகிய என்னிடம் உன்னை முற்றிலுமாக ஒப்படைத்து விடு.

உன்னைப் பற்றி கவலை படுவதையும் விட்டுவிடு.

உனது முழு மன சுதந்திரத்தையும் என்னிடம் ஒப்படைத்து விட்டால் அப்புறம் நானே உன்னிடம் செயல்பட்டுக் கொண்டு இருப்பேன்.

நீயல்ல நானே உன்னிடம் வாழ்ந்து கொண்டிருப்பேன்.

நீ செய்ய வேண்டியதெல்லாம் நான் உன்னிடம் என்ன செய்தாலும் முழுமனதோடு ஏற்றுக்கொள்வது மட்டுமே.

ஆகாய விமானத்தில் பயணம் செய்து இருக்கிறாயா?

செய்திருந்தால் செய்த அனுபவத்தை நினைத்துப்பார்.

உள்ளே நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?

உன்னுடைய இருக்கையில் அமர்ந்து இருந்ததை மட்டும்தானே?

ஆனால் நீ பயணம் செய்த விமானம் ஆயிரக்கணக்கான மைல்கள் உன்னை ஏற்றிச் செல்ல வில்லையா?

அதுபோலவே நீ அளவு உள்ளவனாகக இருக்கலாம். சக்தி அற்றவனாக இருக்கலாம்.

சர்வ வல்லவராகிய எனக்குள் இருக்கும் போது எனது வல்லமையை முழுவதும் உனக்காகவே பயன்படுத்துவேன்.

புரிகிறதா?"

"புரிகிறது, ஆண்டவரே. சர்வ வல்லவராகிய நீர் எனக்காக சக்தியே இல்லாத ஒரு மனித குழந்தையாக பிறந்தீர.

கஷ்டமே பட முடியாத நீர் எனக்காக பாடுகள் பட்டீர்.

மரணமே இல்லாத நீர் எனக்காக  சிலுவையில் மரணத்தீர்.

இனி நான் முற்றிலும் உமது கையில்.

என்னில் எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படும்."

"எது இன்றி எது இல்லை, சொல்லு பார்ப்போம்."

''சிலுவை இன்றி மகிமை இல்லை."

"கரெக்ட். அதை மட்டும் மனதில் வைத்துக்கொள். சிலுவையின் மூலமே உனக்கு மீட்பு வந்தது. சிலுவையின் மூலம் தான் உனக்கு விண்ணக வாழ்வும் வரும்.
இதுதான் மீட்பின் ரகசியம்."

ஆடுகளைப் பற்றி ஆயனுக்கு நன்கு தெரியும். ஆயனைப் பற்றியும் ஆடுகளுக்கு நன்கு தெரியும்.

லூர்து செல்வம்.

Sunday, April 25, 2021

"ஆடுகளும் அவனுடைய குரலைத் தெரிந்துகொள்ளுகின்றன."(அரு.10:3)

"ஆடுகளும் அவனுடைய குரலைத் தெரிந்துகொள்ளுகின்றன."
(அரு.10:3)

தன்னை நல்ல ஆயனாகவும் தன்னை பின்பற்றுபவர்களை தனது ஆடுகளாகவும் உருவகப்படுத்தும் நமது ஆண்டவர் 

ஆயனுக்கும் ஆடுகளுக்கும் உள்ள உறவின் தன்மையை விளக்குவதன்மூலம் 

தனக்கும் தனது சீடர்களுக்கும் இடையில் உள்ள உறவின் தன்மையை விளக்குகிறார்.

ஆடுகளுக்கு தங்கள் ஆயனது குரல் நன்கு தெரியும். ஏனெனில் அவர் எப்பொழுதும் அவைகளோடு இருக்கிறார்.

இருப்பது மட்டுமல்ல அவைகளோடு உரையாடிக்கொண்டே கொண்டே இருக்கிறார்.

உரையாடல் இல்லாவிட்டால் உறவு வளராது. உரையாடும்போது வார்த்தைகள் மட்டுமல்ல, வார்த்தைகளின் பிறப்பிடமாகிய நெஞ்சங்களும் இணைகின்றன.

நெஞ்சங்களின் இணைப்பில் தான் உறவு வளர்கிறது.

நெஞ்சங்களின் இணைப்பின் அளவிற்கு ஏற்ப உறவின் நெருக்கமும் இருக்கும்.

வகுப்பில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் நிலையிலுள்ள உரையாடலே பாடம் நடத்துதல்.

வாயைத் திறக்காமலே ஆசிரியர் பாடம் நடத்த முடியுமா?

பேசாமலே ஆசிரியரிடம் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க முடியுமா? அல்லது ஆசிரியரது வினாக்களுக்கு பதில் சொல்லத்தான் முடியுமா?

ஆசிரியர் தன் முகத்தை காண்பிக்காவிட்டாலும் அவரது குரலிலிருந்து மாணவர்கள் ஆசிரியரை அடையாளம் கண்டு கொள்வார்கள்.

நமது உள்ளத்தில் உறையும் கடவுளோடு எப்போதும் உரையாடிக்கொண்டே இருக்க வேண்டும்.

இறைவனோடு நாம் செய்யும் உரையாடலுக்குத்தான் ஜெபம் என்று பெயர்.

உரையாடல் என்றாலே இருவர் ஒருவரோடு ஒருவர் கருத்து பறிமாறி கொண்டிருப்பது தான்.

கடவுளை பேச விடாமல் நாம் மட்டும் பேசிக்கொண்டிருப்பது செபம் அல்ல.

கடவுளோடு பேச வார்த்தைகள் தேவையில்லை. எண்ணங்கள் போதும்.

நாம் நமது எண்ணங்களை கடவுளிடம் தெரிவிக்கும்போது அவரும் அவரது எண்ணங்களை உள் உணர்வுகள் மூலம் (Inspirations) நமக்கு தெரிவிப்பார்.

கடவுள் தரும் உள் உணர்வுகளை தியானிக்க ஆரம்பித்தால் கடவுள் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பார்.

ஒரு நிலைப்பட்ட மனதோடு இறைவனோடு உரையாடும்போது கடவுள் நம்மோடு பேசுவது நமக்கு புரியும்.

 இதைத்தான் நமது ஆண்டவர்
"ஆடுகளும் அவனுடைய குரலைத் தெரிந்துகொள்ளுகின்றன." என்கிறார்.

ஆயனுடைய குரலை ஆடுகள் தெரிந்துகொள்ளுவது போலவே 

ஆண்டவரது குரலையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

 இதற்கு ஆண்டவரோடு உரையாடுவது தொடர் பழக்கமாக இருக்க வேண்டும்.

எப்படி வகுப்பு உரையாடலில் மாணவர்கள் தங்களது பேச்சைவிட ஆசிரியரது பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ

அதே போல் தான் ஆண்டவரோடு உரையாடும்போது நமது பேச்சைவிட ஆண்டவரது பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நம்மவர்களில் அநேகர் ஆண்டவரை பேசவிடாமல் தாங்களே மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்கள்  ஆண்டவர் பேசுவதை பற்றி கவலை பட மாட்டார்கள்.

அவர்களைப் பொறுத்த மட்டில் ஆண்டவர் அவர்கள்  சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.

ஆடுகள் ஆயனது குரலுக்கு செவிமடுப்பது மட்டுமல்ல அதன்படியே நடக்கின்றன.

 நாமும் ஆண்டவரது குரலைப் புரிந்துகொண்டு அதன்படி வாழ்நாளில் நடக்கவேண்டும்.



"அந்நியனையோ அவைபின்தொடராமல், அவனை விட்டு ஓடிப்போகும். ஏனெனில், அந்நியருடைய குரலை அவை அறிந்துகொள்வதில்லை."
(அரு.10:5)

ஆட்டு மந்தைக்கு சொந்தமான உண்மையான ஆடுகள் அவைகளின் ஆயனைத் தவிர

சம்பந்தமே இல்லாத அந்நியன் வந்து அழைத்தால் அவன் பின்னால் போகாது.

இயேசுவின் உண்மையான சீடர்களுக்கு இயேசுவின் குரலுக்கும் அந்நியர்களின் குரலுக்கும் வித்தியாசம் தெரியும்.

அவர்கள் அந்நியர்களின் பின்னால் போக மாட்டார்கள்.

இயேசுவின் சீடர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்கள் அந்நியரின் பின்னால் சென்றால் அவர்கள் மந்தையின் உண்மையான ஆடுகள் அல்ல.

கத்தோலிக்கர்கள் என்று தங்களையே சொல்லிக்கொள்பவர்கள்

 பிரிவினை சபையார் குரல் கேட்டு அவர்கள் பின்னால் சென்று அவர்கள் சொல்படி நடந்தால் அவர்கள் உண்மையான கத்தோலிக்கர்கள் அல்ல.

காலையில் நமது ஆலயத்தில் திருப்பலி கண்டுவிட்டு மாலையில் பிரிவினை சபையாரின் ஆவிக்குரிய கூட்டங்களுக்கு செல்பவர்கள் தங்களை கத்தோலிக்கர்கள் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்.

உண்மையான கிறிஸ்தவன் இயேசுவின் குரலுக்கு மட்டுமே செவி கொடுப்பான்.

 இயேசுவின் பெயரால் ஏமாற்றுபவர்களின் குரலுக்கு செவி கொடுக்கமாட்டான்.

நமது மந்தைக்கும் நமது ஆயனுக்கும் உண்மை உள்ளவர்களாக இருப்போம்.

லூர்து செல்வம்.

Saturday, April 24, 2021

"நல்ல ஆயன் நானே: நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தன்னுயிரையே கொடுப்பான்." (அரு.10:11)

"நல்ல ஆயன் நானே: நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தன்னுயிரையே கொடுப்பான்." (அரு.10:11)

நற்செய்தியை மக்களுக்கு புரிகிற வண்ணமாக சொல்வதற்காக 
தான் பயன்படுத்தும் ஒப்புமைகளையும், உருவகங்களையும் மக்களது அன்றாட வாழ்க்கையிலிருந்து எடுத்தாள்வது இயேசுவின் பழக்கம்.

தன்னை ஒரு ஆயனாகவும், தனது சீடர்களை ஆடுகளாகவும் உருவகப்படுத்துவதிலிருந்து 

இயேசுவின் காலத்தில் சாதாரண மக்களிடையே ஆடு மேய்க்கும் தொழில் ஒரு முக்கிய தொழிலாக விளங்கியது என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

இயேசு பிறந்த செய்தி விண்ணவர்களால் முதல் முதல் அறிவிக்கப்பட்டது ஆடு மேய்க்கும் இடையர்களுக்குத்தான்.

அவரை முதல் முதல் சந்திக்க வந்தவர்களும் அவர்கள்தான்.

அவர்களைத் தேர்ந்தெடுத்தற்கு அவர்கள் ஏழைகள் என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

தனது திருச்சபையைக் கூட ஒரு ஆட்டு மந்தையாகத்தான் ஆண்டவர் உருவகப்படுத்துகிறார்.

இராயப்பரை திருச்சபையின் தலைவராக நியமித்த போது அவரை,

" எனது ஆடுகளை மேய்" என்றுதான் சொல்கிறார்.

நாமும் நமது ஆன்மீக கண்காணிப்பாளர்களை (Bishops) ஆயர்கள் என்றுதானே அழைக்கிறோம்!

நாட்டை ஆளும் மன்னர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதற்காக நாடுகள் பலவற்றை வென்று 

அவர்களது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியின் நீள அகலத்தை அதிகரித்துக்கொண்டே போவார்கள்.

அவர்களுக்கு நாடு முழுவதும் மொத்தமாகத் தெரியும்.

ஆனால் நாட்டில் உள்ள மக்கள்
ஒவ்வொருவரையும் பற்றி தனித்தனியே எதுவும் தெரியாது.

ஒரு ஆளை பிடித்துக்கொண்டு அவர்கள் முன் நிறுத்தினால் இது தங்கள் நாட்டு பிரஜைதானா என்று கூட தெரியாது.

ஆனால் ஆட்டு மந்தையை கண்காணிக்கும் இடையனுக்கு மந்தையை மொத்தமாகவும் தெரியும்,

 தனித்தனியே ஒவ்வொரு ஆடாகவும் தெரியும்.

மனுக்குலத்தை படைத்த இறைவனுக்கு மனுக்குலத்தை மொத்தமாகவும் தெரியும்,

 தனித்தனியாக ஒவ்வொரு மனிதனாகவும் தெரியும்.

கடவுள் ஒவ்வொரு மனிதன் மீதும் தனித்தனியே அக்கரை காண்பிக்கிறார்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் அவனது ஒவ்வொரு அசைவையும் அவர் பராமரிக்கிறார்.

ஆட்டு மந்தையின் ஆயனுக்கு தனது ஒவ்வொரு ஆட்டையும் நுணுக்கமாக தெரிவது போலவே,

இயேசுவுக்கு தன்னால் படைக்கப்பட்ட ஒவ்வொருவரையும் பற்றித் தெரியும்.

ஆகவேதான் இயேசு தன்னை ஒரு ஆயனாக உருவகப்படுத்துகிறார்.

நம்மைப் பொறுத்த மட்டில் நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு மூச்சும் இயேசுவின் பராமரிப்பில் இருக்கிறது.

நம்மீது நமக்கு உள்ள அக்கரையை விட இயேசுவுக்கு நம்மீது அக்கரை அதிகம்.

பாவம் தவிர மற்ற எல்லா காரியங்களிலும் நம்மை முழுக்க முழுக்க வழிநடத்துபவர் அவரே.

நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அவரது திட்டப்படியும் அனுமதியுடனும்தான் நடக்கின்றது.

நமது வாழ்வில் நல்லவற்றையே அவர் திட்டமிடுகிறார், நல்லவற்றையே அனுமதிக்கிறார்.

ஆகவே நமக்கு என்ன நடந்தாலும் அது அவரது சித்தம் என்று முழுப்பொறுப்பையும் அவர் கையில் ஒப்படைத்து விட்டு நாம் கவலை இன்றி இருக்கலாம்.

ஆகவேதான் புனிதர்கள் தங்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் வாழ்நாள் முழுவதும் இயேசுவுக்காகவே வாழ்ந்தார்கள்.

அன்னை மரியாள் 

"இதோ ஆண்டவருடைய அடிமை" என்று தன்னையே இறைவனது அடிமையாக ஒப்புக் கொடுத்தபின்

 அவள் தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் தன் மகனுக்காகவே வாழ்ந்தாள்.

அவள் பட்ட வியாகுலங்கள் கூட தனக்காக அல்ல, இயேசுவுக்காகத் தான்.

இயேசு மரணமடைந்த பின் அவரது அப்போஸ்தலர்களின் நலனுக்காகவே வாழ்ந்தாள்.

நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தன்னுயிரையே கொடுப்பான்.

இயேசு நமது மீட்புக்காகத்தானே தனது இன்னுயிரை சிலுவை மரத்தில் பலியாக்கினார்!

மனிதகுல மீட்பு பணியில் நாமும் நமது இன்னுயிரை இறை மக்களுக்காக தியாகம் செய்ய தயாராக இருக்கவேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

அவரது சீடர்கள் என்ற முறையில் இது நமது கடமை.

கல்கத்தா தெரசா தொழு நோயாளிகளின் நோய் தன்னைத் தொற்றிக் கொள்ளுமோ என்று பயந்திருந்தால் 

அவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்திருக்கமாட்டாள்.

அர்ப்பண வாழ்வு தனக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று பயம் கொள்ளாது, கவலையும் படாது.

நாமோ நோய் தொற்றிக் கொள்ளாமல் சேவை செய்வது எப்படி என்பதைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

நமக்காக உயிரை கொடுத்த நல்ல ஆயனின் சீடர்களுக்கு இது அழகல்ல.

தொழுநோயாளிகளுக்கான சேவையில் தன்னை அர்ப்பணித்து,

 தானும் அதே நோயால் பிடிக்கப்பட்டு 

தொழுநோயாளியாகவே மரித்த
 புனித தமியான்  

(ST. DAMIEN OF MOLOKAI)

நோயாளிகளுக்கான அர்ப்பண வாழ்விற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நல்ல ஆயனின் மற்றொரு முக்கியமான பண்பு காணாமல் போன ஆடுகளை தானே சென்று தேடுவது.

மந்தையை விட்டு பிரிந்து சென்ற ஆடுகளாகிய பாவிகளைத் தேடியே நல்ல ஆயனாகிய இயேசு விண்ணகம் விட்டு மண்ணகம் வந்தார்.

அவர்களைத் தேடி மீட்பதில்தான் தன் உயிரையே பலிகொடுத்தார்.

நற்செய்தி அறிவிக்கும் பணியே பாவிகளைத் தேடி அலையும் பணி தான்.

இயேசு விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தது போல அவரது அப்போஸ்தலர்கள் மீட்பதற்காக பாவிகளைத் தேடி உலகெங்கும் சென்றார்கள்.

தங்கள் உயிர்களையும் தியாகம் செய்தார்கள்.

இதே பணிக்காக தான் வேத போதகர்கள் நாடு நாடாகச் சென்று பாவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

அப்போஸ்தலராகிய புனித தோமையார்,

புனித சவேரியார்,

புனித அருளானந்தர் 

வீரமாமுனிவர் 

இன்னும் அனேக வேத போதக குருக்கள்  

பாவிகளைத் தேடி இந்தியாவிற்கு வந்தனர்.

நமது பங்கு குருக்களின் பணியே அவரவர் பொறுப்பிலுள்ள பகுதியில் வாழும் பாவிகளைத் தேடிச் சென்று மீட்பது தான்.

இன்றைய காலகட்டத்தில் அவர்கள்தான் ஊர் ஊராகச் சென்று பாவசங்கீர்த்தனம் கேட்பதற்காக பாவிகளைத் தேடவேண்டும்.

பாவிகள் தங்களை தேடி வருவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கக் கூடாது.

ஒரு பாவி பாவசங்கீர்த்தனம் செய்யும்போது விண்ணகத்தில் ஏற்படும் மகிழ்ச்சி 

ஒரு புனிதர் புனிதர் பட்டம் பெறும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட அதிகமாக இருக்கும்!

பாவ சங்கீர்த்தன விசயத்தில் 
பாவ சங்கீர்த்தனம் செய்பவர்களும் ஆர்வம் காட்ட வேண்டும் கேட்பவர்களும் ஆர்வம் காட்ட வேண்டும்.

பாவிகளை விட நமது ஆண்டவரே பாவ மன்னிப்பில் அதிக ஆர்வம் காட்டினார் என்று நமக்குத் தெரியும்.

இறைமகனை மனுமகனாக பிறக்க தூண்டியது பாவங்களை மன்னிப்பதில் அவருக்கு இருந்த அளவுகடந்த ஆர்வம்தான்.

பாவங்களை மன்னிக்க ஆண்டவரிடமிருந்து அதிகாரம் பெற்றவர்களுக்கும் அதே ஆர்வம் இருக்க வேண்டும்.

லூர்து செல்வம்.

Friday, April 23, 2021

"என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்."(அரு.6:54)

"என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்."
(அரு.6:54)

" நானே வழியும், உண்மையும், உயிரும்."(அரு.14:6)

இயேசு நானே வழி,

 நானே உண்மை,

நானே உயிர் என்கிறார்.

இயேசு மட்டுமே நமது ஆன்மீக வழி. அவர் மட்டுமே நாம் நம்ப வேண்டிய உண்மை. அவர் மட்டுமே நமது உயிர். இயேசுவே நமக்கு எல்லாம்.

இயேசு நம்மிடம் இருந்தால் நம்மிடம் ஆன்மீக உயிர் இருக்கிறது என்று அர்த்தம்.

நிலைவாழ்வாகிய இயேசுவை உணவாக உட்கொள்ளுகிறவன் தனது நிலை வாழ்வை உட்கொள்ளுகிறான்.

  இயேசு நம்முள் வருகிறார் என்பதற்கும் நிலைவாழ்வு நம்முள் வருகிறது என்பதற்கும் பொருள் ஒன்றுதான்.

மனிதனை மீட்டு அவனுக்கு நிலைவாழ்வை அளிக்கும் பொருட்டு உலகிற்கு வந்த இயேசு 

அதற்கான வழிமுறைகளை அப்பப்போ சொல்லிக் கொண்டே வருகிறார்.

நிலை வாழ்வை அடைய விரும்புகிறவர்கள் இயேசுவை உணவாக உட்கொள்ள வேண்டும்.

இன்றைய வார்த்தைகளில் நிலை வாழ்வை அடைய விரும்புவோர் திவ்ய நற்கருணையை ஆன்மீக உணவாக உட்கொள்ள வேண்டும்.

நண்பர் ஒருவர் சொல்கிறார் 

"திவ்ய நற்கருணையை ஆன்மீக உணவாக உட்கொண்டால் நிலை வாழ்வை அடைந்து விடலாம் என்றால் 

கிறிஸ்தவர்கள் ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோரும் நிலைவாழ்வு அடைவர்,

வேளாங்கண்ணி போன்ற திருத்தலங்களுக்குச் சென்று பாருங்கள்,

 லட்சக்கணக்கான பேர் திவ்ய நற்கருணை உட்கொள்கிறார்கள். 

முழு பூசை காண்கிறார்களோ இல்லையோ நன்மை வாங்க நாக்கை நீட்டி விடுவார்கள்,

நமது ஊர்களிலும் அப்படித்தானே, திருப்பலி காண்பவர்களை விட நற்கருணையை உண்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

பூசை ஆரம்பிக்கும்போது எங்காவது நின்றுவிட்டு

 சரியாக நன்மை கொடுக்கும்போது வந்து வாங்கிக்கொண்டு நின்ற இடத்திற்கே போய்விடுவார்கள்.

திருப்பலி ஆரம்பிக்கும்போது கால்வாசி கோவிலில் ஆட்கள் இருப்பார்கள்.

நன்மை கொடுக்கும்போது கோவில் நிரம்பி வழியும்.
 
நன்மை கொடுத்து முடிந்தவுடன் பழையபடி கால்வாசி கோவிலில் மட்டும் ஆட்கள் இருப்பார்கள்.

இதுதான் இன்றைய நிலை."

அவர் கேட்கின்றார்: 

"நற்கருணை வாங்குவது விண்ணகம் செல்வதற்கு Guarantee Card ஆ?" என்று.

ஆமா. ஆனால் தகுதியான முறையில் வாங்குவது.

நிலை வாழ்வை அளிப்பவர் ஆண்டவர் மட்டுமே.

ஆனாலும் தகுதியற்ற முறையில் அவரை உட்கொள்வது நிலைவாழ்வை அளிக்காது.

நமது உலகியல் வாழ்க்கையில் இருந்து ஒரு சில ஒப்புமைகளைக் கூறி விளக்குவோம்:

தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் பல் துலக்குகிறோம். 

எதற்காக?

அடுத்து உண்ணவிருக்கும் உணவுக்கு வாயை தயாரிப்பதற்காக.

நமது பெண்கள் அதிகாலையில் சமையல் கட்டில் இருந்து கொண்டு பாத்திரங்களை சாம்பலால் தேய்த்து சுத்தம் செய்கிறார்களே, எதற்காக?

அடுத்து உணவு பரிமாறுவதற்காக பாத்திரங்களை தயாரிப்பதற்காக.

தினமும் காலையில் குளிக்கின்றோமே, எதற்காக?

சுத்தமான உடையணிந்து அலுவலகம் செல்வதற்காக. 

 அலுவலகத்தில் Sweeper எதற்காக? அலுவலகத்தை துப்புரவாக வைத்துக்கொள்வதற்காக.

பல் தேய்க்காமல் உண்ண மாட்டோம்.

 பாத்திரத்தை சுத்தம் செய்யாமல் உணவு வைக்க மாட்டோம்.

 குளிக்காமல் அலுவலகம் செல்ல மாட்டோம். 

துப்புரவா செய்யப்படாத அலுவலகத்திற்குள் நுழைய மாட்டோம்.

ஆனால் நமது ஆன்மாவை சுத்தம் செய்யாமல்

  பாவ அழுக்கில் வந்து அமர நம்மை படைத்த கடவுளை நமக்குள் அழைப்போம்!

என்ன அநியாயம்!

நாம் சாப்பிடும் உணவை விட கடவுள் தாழ்ந்தவரா?

ஆண்டவரை நமது இதய வீட்டிற்குள் வரவழைப்பதற்கு முன் அதை முதலில் சுத்தம் செய்ய வேண்டும் என்பது சொல்லாமலே தெரிந்திருக்க வேண்டும்!

ஆண்டவரை வரவேற்க நமது ஆன்மாவை தயாரிக்கும்போதே ஆம் விண்ணக வாழ்விற்கும் சேர்த்து தானே நமது ஆன்மாவை தயாரிக்கிறோம்.

ஆக ஆண்டவரை வரவேற்க நமது ஆன்மா தயார் என்றால், விண்ணக வாழ்விற்கும் அது தயார்.

நற்கருணை வாங்க தகுதியான தயாரிப்புதான் நமது வாழ்விற்கு Guarantee Card!

 
  • ஆதலால், எவனாவது இந்த அப்பத்தைத் தகுதியின்றி உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் ஆண்டவருடைய உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறான்.

  • 28 ஆகவே, ஒவ்வொருவனும் தன்னுளத்தை ஆய்ந்தறிந்து, அதன் பின்னரே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகட்டும்.

  • 29 ஏனெனில், அது அவர் உடலென்று உணராமல் உண்டு பருகுபவன் தனக்குத் தீர்ப்பையே உண்டு பருகுகிறான். ( 1 கொரிந்.11:27 - 29)

பாவ நிலையில் நற்கருணையை  அருந்துவது விண்ணக இழப்பிற்கான Guarantee Card!


தகுதி இல்லாத முறையில் நற்கருணையை அணுகுபவர்களுக்கு இந்த பயம் வேண்டும்.

ஆன்மீக வாழ்வில் இறை அன்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தெய்வ பயமும்.

நம் மக்களிடையே பயம் என்பது கொஞ்சம் கூட இல்லை.

தெய்வ பயம் தான் ஞானத்தின் ஆரம்பம்.

பரிசுத்தமான இதயத்தோடு இறை உணவை உண்போம், நிலை வாழ்வை ஈட்டுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, April 22, 2021

இறைவனே நமது வாழ்வில் மையம்.

இறைவனே நமது வாழ்வில் மையம்.


கணிதப் பெட்டியில் compass என்ற கருவி உண்டு, வட்டம் வரையப் பயன்படுவது.


வட்டம் வரைய ஆரம்பிக்குமுன் முதலில் வட்டத்திற்கான மையப் புள்ளியை தெரிவு செய்ய வேண்டும்.

காம்பசின் ஒரு முனையை மையப்புள்ளியில் அசையாமல் பிடித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த முனையிலுள்ள 
பென்சிலை மட்டும் அசைத்து வட்டம் வரைய வேண்டும்.

மையப்புள்ளியில் உள்ள முனை கொஞ்சம் நகர்ந்தால் கூட வட்டம் மாறிவிடும்.

மையப்புள்ளி இருக்கும் இடம்தான் வட்டம் வரைய படவேண்டிய இடத்தைத் தீர்மானிக்கும்.

இது கணிதத்தில்.

கணிதத்தின் மைய தத்துவம் நமது வாழ்க்கைக்கும் பொருந்தும்.

ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு மையக் கொள்கை உண்டு.


ஒவ்வொருவர் வாழ்க்கையின் தன்மையை தீர்மானிப்பது அதன் மையக் கொள்கை தான்.

மையக் கொள்கைக்கு ஏற்றபடிதான் வாழ்க்கை இருக்கும்.

மையம் மாறும்போது வாழ்க்கையும் மாறிவிடும்.

மனித வாழ்க்கையின் காரணகர்த்தா இறைவன்.

மனித வாழ்க்கையின் மையம் கடவுள் மட்டுமே.

மனித வாழ்க்கையில் பாவமும், பிரச்சனைகளும் தோன்றுவதற்கு காரணம்

 மனிதன் தனது வாழ்வின் மையத்தை கடவுளிடமிருந்து தனக்கு மாற்றிக்கொண்டது தான்.

சாத்தான் ஏவாளை ஏமாற்ற முயன்றபோது அவள் இறைவனின் விருப்பத்திற்கு மாறாக செயல்படாமல் இருந்திருந்தால் பாவம் மனித வாழ்விற்குள் நுழைந்திருக்க முடியாது.

இறைவனின் விருப்பத்திலிருந்து
தனது விருப்பத்திற்கு மாறிய நொடியே பாவம் புகுந்தது.

இப்பொழுது நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற்று இறைவாழ்வு வாழ வேண்டுமானால்

நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் இறை விருப்பமே தீர்மானிக்க வேண்டும்.

நமது விருப்பப்படி அல்ல, இறைவனது விருப்பப்படியே நாம் வாழ வேண்டும்.

நமது வாழ்வில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும் என்றால் அவற்றுக்கு இறை விருப்பத்தை அறிந்து அதன்படியே தீர்வு காண வேண்டும்.


அதாவது எந்த பிரச்சனையையும் இறைவனது கண்ணோக்கிலிருந்து மட்டுமே பார்க்க வேண்டும்.

நம்மை மையமாக வைத்து பிரச்சனைகளை அணுகுவதால்தான் அவற்றுக்கு நம்மால் நிரந்தரமான தீர்வு காண முடியவில்லை.

உதாரணத்திற்கு மனிதகுலத்தை வாட்டி எடுத்துக்கொண்டிருக்கும் கொரோனா பிரச்சினையை எடுத்துக்கொள்வோம்.


கொரோனாவினால் நம்மில் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள்,

எத்தனை பேர் மரணத்திற்கு உட்படுகிறார்கள்,

எத்தனை பேருடைய பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது,

எத்தனை பேருடைய படிப்பு பாதிக்கப்படுகிறது,

அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

என்று நம்மை மையமாக வைத்தே அதற்கு தீர்வு காண முயற்சி செய்கிறோம்.

யாராவது எல்லாவற்றிற்கும் ஆதி காரணராகிய கடவுளுடைய சித்தம் எதுவாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

இறைவன் நம்மை படைத்ததன் நோக்கம் முழுக்க முழுக்க ஆன்மீகம் சார்ந்தது.

மக்கள் ஆன்மீக வாழ்வில் முறைதவறி நடக்கும்போது அவர்களை திருத்துவதற்காக உடல் சம்பந்தப்பட்ட துன்பங்களை இறைவன் அனுமதிக்கிறார் என்பது பழைய ஏற்பாட்டு அனுபவம்.

இந்த அடிப்படையில் இறைவன் கண்ணோக்கிலிருந்து பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புவோர் முதலில் தங்களது ஆன்மாவை பரிசோதனை செய்ய வேண்டும்.

ஒருவர் இருவர் அல்ல மனுக்குலமே இந்த பரிசோதனையை செய்ய வேண்டும்.

அப்படிச் செய்திருந்தால் நோயிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கு எடுக்கும் முயற்சிகளை விட அதிகமான முயற்சிகள் பாவத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக எடுத்திருப்போம்.

 அன்று நினிவே மக்கள் செய்த தவ முயற்சிகளை மனிதகுலம் செய்திருக்கும்.

வீட்டுப்பாடம் படிக்காமல் வருபவர்களுக்கு அடி கிடைக்கும் என்று ஆசிரியர் சொன்னால் மாணவர்கள் வீட்டுப்பாடம் படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர

 படிக்காமலேயே அடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அல்ல.

"பரலோகத்தில் உமது சித்தம் நிறைவேறுவது போல பூலோகத்திலும் உமது சித்தம் நோய் உட்பட அனைத்து விஷயங்களிலும் நிறைவேறுக."

என்பது நமது ஜெபமாக இருக்க வேண்டும்.

கடவுள் சர்வவல்லவர் என்று நாம் விசுவசித்தால்,

நம் மீது அளவுகடந்த அன்பு உள்ளவர் என்று நாம் விசுவசித்தால்,

நமது ஆன்மீக நலன் கருதி நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரிக்கிறார் என்பதை நாம் விசுவசித்தால்

இந்த ஜெபத்தினால் நமக்கு நன்மை மட்டுமே விளையும்.

இறைவனை மையமாகக்கொண்டு நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்லும்.

நம்மை மட்டுமே மையமாகக்கொண்டு நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை இறைவனிடமிருந்து பிரித்துவிடும்.

"அவர்வழியாகவே அனைத்தும் உண்டாயின: உண்டானதெதுவும் அவராலேயன்றி உண்டாகவில்லை." (அரு.1:3)

படைக்கப்பட்டவை அனைத்தும் வார்த்தையானவர் வழியாகவே படைக்கப்பட்டன.

அவர் வழியாக மட்டுமன்றி அவருக்காகவே படைக்கப்பட்டன.

ஆகவே அனைத்திற்கும் மையம் அவரே.

படைக்கப்பட்டவை தங்களுக்காக வாழவில்லை.

படைத்தவருக்காகவே வாழ்கின்றன.

நாம் அவருக்காக மட்டுமே வாழ்வதால் நமது வாழ்வின் ஒரே நோக்கம் அவரே.

தனக்காகவே படைத்து, தனக்காகவே வாழ வைத்துக் கொண்டிருப்பதால்  

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் இயக்கிக் கொண்டிருப்பவர் அவரே.

இதில் நமக்கு அசைக்கமுடியாத விசுவாசம் இருந்தால் நமக்கு என்ன நேர்ந்தாலும் அதைப்பற்றி கவலைப் படவே மாட்டோம்.

ஒரு முறை S.S.L.C. தேர்வுக்கு தயாரித்துக் கொண்டிருந்த ஒரு மாணவியின் தந்தை என்னிடம் வந்தார்.

"சார் என் மகளுக்கு Night Study வேண்டாம். அவளுக்கு வீட்டில் வேலை இருக்கிறது."

 என்றார். நான் அவரிடம் வாதாடவில்லை.

"ஆசிரியர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவளை Night Studyக்கு அனுப்புங்கள்.

உங்கள் மகள் மீது நம்பிக்கை இருந்தால் அனுப்ப வேண்டாம்."

என்று மட்டும் சொன்னேன்.

"Night Studyக்கு வருவாள்." என்று மட்டும் கூறிவிட்டு போய்விட்டார்.

நமக்கு இறைவன் மீது முழுமையான விசுவாசம் இருந்தால் என்ன நடந்தாலும் கவலைப்படாமல் வாழ்வோம்.

இறைவன் மீது விசுவாசம் இல்லாவிட்டால் நம்மைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டுதான் இருப்போம்.

லூர்து செல்வம்.

Wednesday, April 21, 2021

"ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம் ? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."(அரு.6:68)

"ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம் ? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."
(அரு.6:68)


"விண்ணிலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவு நானே" என்று கூறிய இயேசு 

"நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே."

என்று கூறியபோது மக்களால் அவர் கூறியதை நம்ப முடியவில்லை.


"நாம் உண்பதற்கு இவன் தன் தசையை எவ்வாறு அளிக்கக்கூடும் ?" என்று யூதர் தமக்குள் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள்.


அவருடைய சீடருள் பலர் இதைக் கேட்டு, "இந்தப் பேச்சு மிதமிஞ்சிப்போகிறது, யார் இதைக் கேட்பார் ?" என்றனர்.


அன்றே அவருடைய சீடருள் பலர் அவரை விட்டுப் பிரிந்தனர். அதுமுதல் அவர்கள் அவரோடு சேரவில்லை.


இயேசு பன்னிருவரை நோக்கி, "நீங்களும் போய்விட
 நினைக்கிறீர்களா?" என்றார்.

அதற்கு பதில் கூறும் விதமாகத் தான் இராயப்பர்


 "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம் ? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

நீரே கடவுளின் பரிசுத்தர்: இதை நாங்கள் விசுவசிக்கிறோம்: இதை நாங்கள் அறிவோம்" என்று மறுமொழி கூறினார்.

கிறிஸ்தவர் என்று தங்களை தாங்களே அழைத்துக் கொள்ள விரும்புபவர்கள் கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவின் வார்த்தைகளில் தங்களுக்கு பிடித்தமானதை ஏற்றுக் கொள்வோம்

 பிடித்தம்‌ இல்லாதவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எண்ணுபவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை 

தங்களைத்தான் ஏற்றுக்கொள்கிறார்கள்.

நமது பிரிவினை சகோதரர்களில் அநேகர் திவ்விய நற்கருணையில் இயேசுவின் உண்மையான பிரசன்னத்தை ஏற்றுக்கொள்வது இல்லை.

பைபிளை மட்டும் ஏற்றுக் கொள்பவர்கள் அதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் 

அவர்கள் பைபிளையும் ஏற்றுக்கொள்ளவில்லை, கிறிஸ்துவையும் ஏற்றுக்கொள்ளவில்லை
என்றுதான் பொருள்.

"நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே."

 என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஒரு பொருள் தான் இருக்க முடியும்.

உண்மையிலேயே அவர் தன்னுடைய தசையைத்தான் குறிப்பிடுகிறார்.

உருவகமாகப் பேசவில்லை.

அவரது வார்த்தைகளின் உண்மையான பொருளை புரிந்து கொண்டதால்தான் 

அவருடைய சீடர்களில் அநேகர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து பிரிந்து சென்றார்கள்.

இயேசுவும் தான் உருவகமாக பேசியதாக கூறவில்லை.

இராயப்பரும் பன்னிருவரின் விசுவாசத்தை உறுதிப்படுத்தினார்.

இதுவே இராயப்பர் மேல் கட்டப்பட்ட திருச்சபையின் விசுவாசம்.

ஆகவே நாம் திவ்ய நற்கருணை உட்கொள்ளும் பொழுது நாம் உண்மையிலேயே இயேசுவின் தசையைத்தான் உட்கொள்கிறோம்.

இராயப்பரைப்போல் நாமும் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வு தரும் வார்த்தைகளாக ஏற்றுக் கொள்கிறோம்.

உண்மையிலேயே ஏற்றுக் கொள்கிறோமா அது பெயரளவிற்கு ஏற்றுக் கொள்கிறோமா என்பதுதான் பிரச்சனை.

திருச்சபையின் போதனைகளை விசுவசிக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் பலமுறை சொல்லுகிறோம்.

ஆனால் அநேக சமயங்களில் நமது விசுவாசத்திற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லாமல் போகும்போது 

"விசுவசிக்கிறோம்" என்று சொல்வது அர்த்தமற்றதாகி விடுகிறது.

நித்திய ஜீவியத்தை விசுவசிக்கிறோம் என்று சொல்கிறோம்.

ஆனால் நமது உறவினர்கள் யாராவது நித்திய ஜீவியத்திற்குள் பிரவேசித்தால் அவர்களுக்காக அழுகிறோமே, ஏன்?

திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட உடன் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் உணவாக உட்கொள்ளுகிறோமே, அதன் பொருள் என்ன?

இறைவனுக்கு பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்ட பொருளை ஒப்புக்கொடுத்தவர்கள் உண்டு விட வேண்டும் என்பது மனித குல மரபு.

அந்த மரபுப்படிதான் நாம் நம் ஆண்டவரை அவரது தந்தைக்கு நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பலியாக ஒப்புக் கொடுத்துவிட்டு அவரையே நமது உணவாக உட்கொள்கிறோம். 

பலிப் பொருள் உண்ணப்பட்ட பின்புதான் பலி முழுமை அடைகிறது.

பெரிய வெள்ளிக்கிழமை அன்று இறைமகன் சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்தார்.

 தன்னை தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுக்கும் நிகழ்ச்சியை ஆண்டவர் பெரிய வியாழன் அன்றே நிறைவேற்றி விட்டார்.

பலிப் பொருளாகிய தன்னைஉணவாக கொடுப்பதற்காகத்தான் இயேசு திவ்விய நற்கருணையை ஏற்படுத்தினார்.

நாமும் திருப்பலி கண்டு திருவிருந்தில் கலந்து கொள்ளும்போதுதான் நமது பலி முழுமை அடைகிறது.


"இவ்வுணவைத் தின்பவனோ என்றுமே வாழ்வான்."

என்று இயேசு கூறியுள்ளார்.

நிலைவாழ்வு பெறுவதற்கு இயேசுவின் பாடுகளும், மரணமும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்  நாம் இயேசு தன்னையே உணவாகத் தரும் திருவிருந்தில் கலந்து கொள்வதும்.

கலந்து கொள்வது மட்டுமல்ல தகுதியுடன் கலந்துகொள்வது.

''முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."

என்ற வார்த்தைகளை நாம் ஏற்றுக் கொள்வது உண்மையானால்,

நாம் ஒவ்வொரு நாளும் வாசிக்கும் பைபிள் வாசகங்களில் எத்தனை வசனங்களை  

அன்றன்று நமது வாழ்க்கையாக்கி இருக்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்து பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.

லூர்து செல்வம்.

Monday, April 19, 2021

"நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது: என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது."(அரு.6:35)

: "நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது: என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது."
(அரு.6:35)



"இன்ப வனத்தின் நடுவிலிருக்கிற மரத்தின் கனியைத் தின்ன வேண்டாம் தொடவும் வேண்டாம் என்று கடவுள் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்: தின்றால் சாவோம் என்றாள்."

ஏவாள் சாத்தானிடம் "விலக்கப்பட்ட கனியைத் தின்றால் நாங்கள் சாவோம்" என்றாள்.

ஆனால் சாத்தான்,

"நீங்கள் உண்மையில் சாகவே மாட்டீர்கள்:" என்றது.

ஏவாள் சொன்னது பொய்யா அல்லது சாத்தான் சொன்னது பொய்யா?

ஏவாள் கடவுள் கூறியதைச் சொன்னாள்.

சாத்தான் தானே கூறியது.

மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது சாத்தான் கூறியது உண்மை போடவும் ஏவாள் கூறியது பொய் போலவும் தோன்றும்.

ஏனெனில் பழத்தைத் தின்றவுடன் ஏவாள் சாகவில்லை.

அதாவது மனிதன் சாவு என்ற வார்த்தைக்கு என்ன பொருள் வைத்திருக்கிறானோ அந்தப் பொருளில் சாகவில்லை.

உடலை விட்டு ஆன்மா பிரிவதையே நாம் சாவு என்கிறோம்.

ஆனால் கடவுள் குறிப்பிட்டிருந்தது அந்த சாவை அல்ல.

அவர் குறிப்பிட்டிருந்தது ஆன்மீகச் சாவை.

ஏவாள் விலக்கப்பட்ட பழத்தைத் தின்று பாவம் செய்த நொடியிலேயே அவளது ஆன்மா இறந்து விட்டது.

ஆன்மாவிற்கு உயிர் கொடுத்தது அதிலிருந்த இறைவனின் தேவ இஷ்ட பிரசாதம்.

ஏவாள் பாவம் செய்தவுடன் அவளது ஆன்மாவிலிருந்த தேவ இஷ்ட பிரசாதத்தை, 

அதாவது இறைவனோடு இருந்த உறவை,

 இழந்து விட்டாள்.

இறை உறவு இல்லாத ஆன்மா இறந்த ஆன்மா.


இழந்த இறை உறவை மீட்டுக் கொடுக்கவும், இறந்த ஆன்மாவை உயிர் பெறச் செய்யவுமே 

இறைமகன் மனிதனாகப் பிறந்து பாடுபட்டு சிலுவையில் தன்னையே பலியாக்கி 

மனித பாவங்களுக்கு பரிகாரம் செய்தார்.

உயிர் பெற்ற ஆன்மா ஆன்மீகத்தில் பலமடைந்து வளர்வதற்காக 

 தன்னையே ஆன்மாவிற்கு உணவாக அளிக்கிறார்.

"நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது: என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது."

நமது உடல் ஒரு சடப்பொருள். ஆகவே அது பலம்பெற்று வளர சடப் பொருளையே உணவாகக் கொடுக்கிறோம்.

உணவாக உண்ணப் பட்ட சடப் பொருள் ஜீரணமாகி அதன் சத்துக்கள் உடலோடு கலந்து அதற்கு சக்தியையும் வளர்ச்சியையும் அளிக்கின்றன.


இறைமகன் இயேசு தனது உடலையும் இரத்தத்தையுமே நமது ஆன்மாவிற்கு உணவாக அளிக்கிறார்.

நமது ஆன்மா உயிர்பெற்று வளர்வதற்காக விண்ணிலிருந்து இறங்கிவந்த உயிர்தரும் உணவு அவரே.

அவரே நமது ஆன்மாவின் அருள் பசியையும், தாகத்தையும் தணிக்கிறார்.

தனது அருள் வரங்களால் நமது ஆன்மாவை நிரப்புகிறார்.

உரிய தயாரிப்போடு அவரை நாம் உட்கொள்ளும் போது,

அவர் நமது ஆன்மாவோடு ஒன்றிக்கும்போது 

அன்பு, இரக்கம், பரிவு, மன்னிக்கும் தன்மை, உதவி செய்யும் தன்மை, தியாகம் முதலான அவரது பண்புகள் எல்லாம் நமது ஆன்மாவிற்கு இறங்கிவிடும்.

அவரது இந்தப் பண்புகள் நமக்கும் உரியவையாய் மாறிவிடும்.

பண்புகளில் நாமும் கிறிஸ்துவாய் மாறிவிடுவோம்.

ஆனால் நாம் அடிக்கடி,

 சில சமயங்களில் தினமும்,

 அவரை உணவாய் உட்கொண்டாலும் நமது பண்புகளில் ஒரு மாற்றமும் இல்லையே! 

ஆரம்பத்தில் இருந்தது 
போலவேதானே இப்பொழுதும் இருக்கிறோம்!

ஏன்?

ஏனெனில் நாம்  உரிய தயாரிப்புகளோடு அவரை உட்கொள்வது இல்லை.

ஏதோ தின்பண்டம் சாப்பிடுவது போல கையில் வாங்கி வாயில் போட்டு விழுங்கிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறோம். 

சுத்தமான இருதயத்தோடும், பக்தியோடும் நற்கருணை நாதரை உட்கொண்டால் தான் 

.நற்கருணை அருந்துவதால் ஏற்படும் பலன் கிடைக்கும்.

ஒரே ஒரு முறை முழு தயாரிப்போடு நாம் நற்கருணையை அருந்தினால் கூட புனிதராக மாறமுடியும்.

ஏனெனில் இயேசு அளவில்லாத விதமாய் புனிதமானவர்.

புனிதத்தோடு இணையும்போது நம்மால் புனிதம் அடையாமல் இருக்க முடியாது.

நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து தூய்மையான உள்ளத்தோடு இயேசுவை உணவாக உட்கொள்ள வேண்டும்.

இப்பொழுதெல்லாம் நவீனம் என்ற பெயரில் பழைய நல்ல பழக்கவழக்கங்களை எல்லாம் மறந்து விட்டோம்.

முன்பெல்லாம் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பாவசங்கீர்த்தனம் செய்வது வழக்கம்.

குருவானவரும் திவ்ய பலி பூசை ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னாலேயே பாவசங்கீர்த்தனத் தொட்டிக்கு வந்துவிடுவார். 

தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரை உட்கொள்பவர்கள்
அவரோடு நித்திய காலமும் பேரின்ப வாழ்வில் இணைந்து இருப்பார்கள் 

தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரை உட்கொள்வோம்.

என்றென்றும் அவரோடு வாழ்வோம்.

லூர்து செல்வம். 
-

Saturday, April 17, 2021

"கேளுங்கள், கொடுக்கப்படும்."

"கேளுங்கள், கொடுக்கப்படும்."


"சார், வணக்கம்."

"வணக்கம், நேற்று தானே பள்ளிக்கூடத்தில் அட்மிஷன் ஆன?"

"ஆமா, சார். ஒரு சந்தேகம். உங்களிடத்தில் விளக்கம் கேட்டுவிட்டு போகலாம் என்று வந்தேன்."

"இன்னும் பாடமே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் என்ன சந்தேகம்?"

"என்ன சந்தேகம் வந்தாலும் வாத்தியார்ட்ட போய்க் கேளு.
 விளக்குவார் என்று அப்பா சொன்னாங்க.
 அதனால் தான் உங்களிடம் வந்தேன்."

"அப்போ சந்தேகம் பாடத்தில் இல்லை."

" நான் இன்னும் பாடப்புத்தகமே வாங்கவில்லை. இது ஒரு பாடமா, இல்லையா என்றுகூட எனக்கு தெரியாது.''

"சரி, சொல்லு."

"என் friends எல்லாம் நல்லா சீட்டு விளையாடுவாங்க. எனக்கும் சீட்டு விளையாட ஆசையாய் இருக்கு. அவங்க சொல்லித்தந்தாங்க. ஆனால் எனக்கு ஒண்ணுமே புரியல. நீங்க புரியும்படியா சொல்லித் தருவீர்களா?"

"சீட்டு விளையாடவா?"

"ஆமா, சார்."

"எதற்காக சீட்டு விளையாட்டு?"

"பொழுது போவதற்காக."

"நீ சீட்டு விளையாடா விட்டாலும் பொழுது போய்விடுமே!"

"எனக்கு பொழுது போக வேண்டுமென்றால் ....."

"உனக்கு பொழுது போக வேறொரு விளையாட்டு சொல்லித் தரட்டுமா?"
 
"என்ன விளையாட்டு?"

"Words building."

"சொல்லித்தாருங்கள்."

"நான் ஆங்கிலத்தில் ஒரு எழுத்து எழுதுவேன். நீ அந்த எழுத்தில் துவங்கும் ஒரு ஆங்கில வார்த்தையை நினைத்துக் கொள்ள வேண்டும். 

அந்த வார்த்தையின் இரண்டாவது எழுத்தை எனது எழுத்திற்கு அடுத்தபடி எழுத வேண்டும். 

நான் எழுதப்பட்ட இரண்டு எழுத்துக்களையும் கொண்டு ஆரம்பிக்கும் ஒரு வார்த்தையின் மூன்றாவது எழுத்தை எழுத வேண்டும். 

இப்படி மாறி மாறி எழுதிக் கொண்டே போகவேண்டும்.

 யாருக்கு புதிய வார்த்தை கிடைக்கவில்லையோ அவங்க அவுட்!"

"எனக்கு ஆங்கிலமே வராது. தெரிந்த ஓரிரண்டு வார்த்தைகளுக்கும் ஸ்பெல்லிங் தெரியாது. நான் கேட்ட விளையாட்டையே சொல்லி தாங்க ப்ளீஸ்."

"அப்போ ஒண்ணு செய். இப்போது நாம் இரண்டு பேரும் பேசினதை உங்களுடைய அப்பாவிடம் சொல்லு. அவர் சொன்னபடி செய்வோம்."

(மறுநாள்)

"சார், என்னுடைய அப்பாவிடம் சொன்னேன். செவிட்டில ஓங்கி இரண்டு அறை விட்டார்!"
.
"ஒன்றும் சொல்லவில்லையா?" 

"வாத்தியார்கிட்ட பாட சம்பந்தமா கேட்டா மட்டும் சொல்லித் தருவார். சீட்டு விளையாட்டு சொல்லித் தரவா பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள்?"

"நீ என்ன சொன்னாய்?"

"இனிமேல் நீங்கள் சொன்னபடி கேட்கிறேன், அப்பா."

"இனிமேல் என்னிடம் எது சம்பந்தமாய் கேள்வி கேட்பாய்?"

"பாட சம்பந்தமாக சந்தேகம் வந்தால் மட்டும் கேட்பேன்."

இந்த பையனைப் போல் தான் நாம் அநேக சமயங்களில் நடந்து கொள்கிறோம்.

கடவுளிடம் எதைக் கேட்க வேண்டும் என்று தெரியாமல் கேட்டுவிட்டு கேட்டது கிடைக்கவில்லையே என்று முணு முணுக்கிறோம்.

இப்பொழுதெல்லாம் Positive, Negative என்ற இரண்டு வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

கொரோனாவுக்கு முன்னால் Positive என்ற வார்த்தையை விரும்பிக் கொண்டிருந்த நாம் இப்போது அந்த வார்த்தையை கேட்கவே பயப்படுகிறோம்.

ஒரு வங்கிக்குச் சென்று ஒரு லட்சம் ரூபாய் கடன் கிடைக்குமா என்று கேட்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

நாம் எதிர்பார்ப்பது 
Positive Responseஐயா,
Negative Responseஐயா?

நிச்சயமாக கிடைக்கும் என்ற Positive Responseஐத்தான்.

துவைத்த துணியை காயப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண் இப்போது மழை வருமா என்று கேட்டால் அவள் எதிர்பார்ப்பது Positive Responseஐயா,
Negative Responseஐயா?

நிச்சயமாக வராது என்ற Negative Responseஐத்தான்.

அப்போ ஒன்று புரிகிறது. நமது கேள்வியின் தன்மைதான் அதற்கான பதிலை தீர்மானிக்கிறது.

காலையில் பள்ளிக்கூடம் வந்தவுடன் ஒரு பையன் ஆசிரியரிடம் சென்று, 

"சார், இப்போது நான் வீட்டுக்கு போகலாமா?"

என்று கேட்டால்,

"No, இடத்தில் போய் உட்கார்." என்றுதான் சொல்வார்!

அதே பையன் காலையில் ஆசிரியரிடம் சென்று,

,"சார் நேற்று எங்களை படித்துக் கொண்டு வரச் சொன்ன Essayஐ நன்கு படித்துக்கொண்டு 
வந்திருக்கிறேன். எழுதிக் காண்பிக்கட்டுமா?"

என்று கேட்டால்,

ஆசிரியர், "Very good. நல்ல பையன், எழுதிக் காண்பி"

 என்றுதானே சொல்லுவார்.

ஆக நாம் கேட்பதை வைத்து தான் நமக்கு எத்தகைய பதில் கிடைக்கும் என்பதை தீர்மானிக்கலாம்.

யாரிடம் எதைக் கேட்க வேண்டும் என்பதையே தெரிந்துகொண்டு அதை கேட்டால், கேட்டது கிடைக்கும்.

யாரிடம் எதைக் கேட்டால் கிடைக்காதோ அதை கேட்டால் நிச்சயமாக கிடைக்காது.


இயேசு,

" கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று சொல்லியிருக்கிறார்.

இயேசுவிடம் எதைக் கேட்டால் நிச்சயமாக கொடுப்பார்?

அதைத் தெரிந்து கேட்க வேண்டும்.


தமிழில் ஒரு பழமொழி உண்டு.

"படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தனை வணங்க."

அதாவது உலகில் மனிதனைத் தவிர, மிருகங்கள் உட்பட, மற்ற எல்லாப் பொருள்களையும்
மனிதன் பயன்படுத்துவதற்காக படைத்த கடவுள் 

மனிதனை மட்டும் தனக்காக படைத்தார்.

மனிதனோடு மட்டுமே தனது அன்பு என்ற பண்பை பகிர்ந்து கொண்டார்.

தன்னை அன்பு செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே கடவுள் மனிதனை படைத்தார்.

கடவுளை அன்பு செய்வதற்காக மட்டுமே மற்ற பொருள்களை மனிதன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சடப் பொருள்களால் யாரையும் அன்பு செய்ய முடியாது.

நம்மோடு தனது அன்பை பகிர்ந்துகொண்ட கடவுளையும்,

அவரது பிள்ளைகளையும் மட்டுமே நாம் அன்பு செய்ய வேண்டும்.

பதிலுக்கு அன்பு செய்யத் தெரியாத சடப் பொருள்களை அன்பு செய்வது பைத்தியக்காரத்தனம்.

கடவுள் மீதும், அவரது பிள்ளைகள் மீதும் நாம் கொண்டுள்ள அன்பை காண்பிப்பதற்காக நாம் சடப்பொருட்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வேறு வார்த்தைகளில்

 கடவுளுக்காகவும் அவரது பிள்ளைகளுக்காகவும் சடப் பொருள்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர

சடப்பொருள்களுக்காக கடவுளையும் அவர்களது பிள்ளைகளையும் பயன்படுத்த நினைக்கக் கூடாது.

ஒரே வாக்கியத்தில் 

கடவுளுக்காக உலகப் பொருட்களே அல்லாமல்,

 உலகப் பொருள்களுக்காக கடவுள் அல்ல.

நமது உடல் சடப்பொருள் வகையைச் சார்ந்தது.

நமது ஆன்மாவிற்கு மட்டுமே அன்பு செய்யும் பண்பு உண்டு.

ஆகவே கடவுளும் நாமும் அன்பால் மட்டுமே இணைய முடியும்.

கடவுளோடு நித்திய காலமும் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காகவே நமது ஆன்மா படைக்கப்பட்டுள்ளது.

கடவுளோடு நமது ஆன்மா இணைந்து வாழ நமது உடல் உதவிகரமாக இருக்க வேண்டும்.

கடவுளுக்கு அன்பு செய்யவும் சேவை செய்யவும் மட்டுமே நமது உடலையும் மற்ற உலகப் பொருள்களையும் நாம் பயன்படுத்த வேண்டும்.

நமது உடலுக்கும் உலக பொருட்களுக்கும் சேவை செய்ய கடவுளை பயன்படுத்த நினைக்கக் கூடாது.

உலகில் நாம் வாழ வேண்டிய ஒரே வாழ்வு ஆன்மீக வாழ்வு மட்டுமே.

உடலும் உலகப் பொருள்களும் ஆன்மீக வாழ்விற்கு உதவியாக இருப்பதற்கு மட்டுமே.

இப்போது ஒன்று புரிந்திருக்கும்.

நமக்கும் இறைவனுக்கும் இடையில் உள்ள உறவு ஆன்மீக உறவு மட்டுமே.

இந்த ஆன்மீக உறவை வளர்த்துக் கொள்வதற்காக மட்டுமே நமது ஆன்மா இறைவனின் உதவியைத் தேட வேண்டும்.

இயேசு நமது ஆன்மாவை மீட்கவே உலகிற்கு வந்தார்.

எப்படி பாடம் நடத்த வந்திருக்கும் ஆசிரியரிடம் பாட சம்பந்தப்பட்ட விளக்கங்களை கேட்க வேண்டுமே தவிர,

பாட சம்பந்தம் இல்லாத விஷயங்களை கேட்கக் கூடாதோ,

அதேபோல் இறைவனிடம் நமது ஆன்மீக சம்பந்தப்பட்ட உதவிகளை மட்டுமே கேட்க வேண்டுமே தவிர

ஆன்மீக உதவிகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு 

ஆன்மிகத்திற்கு சம்பந்தமில்லாத உதவிகளை கேட்கக் கூடாது.

உலகியல் வாழ்வு சார்ந்த உதவிகளை இறைவனிடம் கேட்கலாமா?

கேட்கலாம்.

அவை நமது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவிகரமாக இருந்தால் மட்டுமே.

"கேளுங்கள், கொடுக்கப்படும்"

என்று ஆண்டவர் சொல்லியிருப்பதால் அவரது response எப்போதும் positive response ஆகவே இருக்கும்.


நாம் எதைக் கேட்டாலும் நமது ஆன்மீக வாழ்விற்கு உதவிகரமாய் இருப்பதைக் கட்டாயம் தருவார்.

நாம் கேட்பது ஆன்மீக வாழ்விற்கு உதவிகரமாய் இல்லாவிட்டால் 

எது உதவிகரமாய் இருக்குமோ அதைத் தருவார்.

 ஒரே வரியில் 

நாம் கேட்கும் போது இல்லை என்று சொல்லமாட்டார், தர வேண்டியதை தருவார்.

நமது செபம் ஒரு போதும் வீணாய் போகாது.

சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக நெடுநாள் செபித்துக் கொண்டு இருப்போம்.

அந்தக் கருத்து நிறைவேறாதது போல் நமக்குத் தோன்றும்.

ஆனால் நமது ஆன்மீக வாழ்விற்கு உதவிகரமான மற்றொன்று நிறைவேறிக் கொண்டே இருக்கும்.

 நமக்கு எது தேவையென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கடவுளுக்கு தெரியும்.

நமக்கு நல்லது என்று கடவுள் தருவதை நன்றியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

லூர்து செல்வம்.




.

Thursday, April 15, 2021

பிரிக்கவே முடியாத உறவுகள்.(தொடர்ச்சி)

பிரிக்கவே முடியாத உறவுகள்.
(தொடர்ச்சி)


நமது விசுவாசத்தை பற்றியே கவலைப் படாமல் உலக சம்பந்தமாக உதவிகளை மட்டும் நாம் கேட்டுக் கொண்டிருந்தால்

 நாம் இயேசுவைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

லூர்து நகரில் நிறைய புதுமைகள் நடக்கின்றன.

 உண்மை.

 ஆனால் அதற்கு ஒரே காரணம் மக்களுடைய விசுவாசம்.

அவர் செய்யும் புதுமை நமது ஆன்மாவிற்கு உதவிகரமாய் இருந்தால் மட்டுமே அதைச் செய்வார்.

முழுமையான ஆன்மீகவாதிகள் உலக சம்பந்தப்பட்ட உதவிகளை இயேசுவிடம் கேட்க மாட்டார்கள்.

அப்படியே கேட்க நேர்ந்தாலும் 
''ஆண்டவரே உமக்கு சித்தம் 
இருந்தால்,

 எனது ஆன்மாவிற்கு நலன் பயக்கும் என்றால் மட்டும் செய்யுங்கள்."

என்ற நிபந்தனையோடு மட்டும் தான் கேட்பார்கள்.



"பசித்தவர்களுக்கு உணவளிக்கவும்,

 ஆடை இல்லாதவர்களுக்கு ஆடையை கொடுக்கவும்,

வியாதியஸ்தர்களைச் சந்திக்கவும்  

ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே.
இவையெல்லாம் உடல் சம்பந்தப்பட்ட உதவிகள் தானே"

என்று சிலர் சொல்லலாம்.

ஆனால் இச் செயல்களின் நோக்கம் ஆன்மீகம் சார்ந்தது.

அதாவது இவற்றின் மூலம் நமது இறை அன்பையும் 
பிறர் அன்பையும் 
நாம் வெளிப்படுத்துகின்றோம்.

இறை அன்பினால் ஏவப்படாமல் 
செய்கின்ற எந்த உதவியும் இறைவன் முன்னால் பயனற்றது.

இறை அன்பிற்காக அல்லாமல் நமது பெருமைக்காக கோடி கோடி யாய் கொட்டி உதவிகள் செய்தாலும் 

அவை இறைவன் முன் மதிப்பு இல்லாதவை.

அரசியல்வாதிகள் ஓட்டுகள் பெறுவதற்காக கோடி கோடியாய் கொட்டி செய்கின்ற உதவிகளுக்கு இறைவன் ஒரு பயனும் அளிக்க மாட்டார். 

எல்லாம் Criminal waste!

"என் சீடன் என்பதற்காக 
இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(மத்.10:42)

கீழ்க் கோடு இட வேண்டிய வார்த்தைகள் (Words to be underlined) "என் சீடன் என்பதற்காக"


எல்லோரும் இறைவனின்
 பிள்ளைகள் என்ற அடிப்படையில் 

இயேசுவின் மகிமைக்காக கொடுக்கப்படும் ஒரு கிண்ணம் தண்ணீருக்குக் கூட விண்ணகத்தில் சன்மானம் உண்டு.


இயேசுவுக்காக அன்றி வெறும் மனிதாபிமானத்திற்காக மட்டும்  
செய்யப்படும் மிகப்பெரிய உதவிக்கு கூட விண்ணகத்தில் எதுவும் இல்லை.

இப்போதெல்லாம் மனிதம் பற்றி பேசுகிறார்கள்.

இறைவன் இன்றி உண்மையான  மனிதம் இல்லை.

இறைவன் இல்லாத மனிதாபிமானம் பயனற்றது.


நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் சுமக்கும் சிலுவைகளுக்கும் இது பொருந்தும்.

இயேசுவுக்காக நாம் படும் துன்பங்கள் நமக்கு விண்ணகத்தில் சன்மானத்தை ஈட்டி தருகின்றன.

நாம் இயேசுவின் சீடர்கள் என்பதற்கு அடையாளமே நாம் அவருக்காகப் படும் துன்பங்கள் தான்.

நான் இயேசுவுக்காக மட்டும் வாழ்கிறேன் ஆனால் அவர் எனக்கு துன்பங்களை மட்டும்தானே அனுப்புகிறார் என்று சலித்துக் கொள்வதும், 

நான் எனது பணியை ஒழுங்காகச் செய்கிறேன் ஆனால் நிர்வாகம் எனது சம்பளத்தை அதிகரித்துக்கொண்டே போகிறது என்று சலித்துக் கொள்வதும் ஒன்றுதான்.

இயேசுவின் சீடர்களுக்கு கட்டாயம் துன்பங்கள் வரும்.

துன்பங்களுக்கு பயந்தவர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல.

எனக்கு துன்பங்கள் வரக்கூடாது என்று ஆசிப்பதும், நான் கிறிஸ்தவனாக இருக்க விரும்பவில்லை என்று நினைப்பதும் ஒன்றுதான்

எந்த அளவிற்கு துன்பங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நாம் புனிதத்துவத்தில் வளர்ந்திருக்கிறோம்.

Vegetarian Hotelல் உட்கார்ந்துகொண்டு மட்டன் சாப்பாடு கேட்பவனும்,

கிறிஸ்தவனாக இருந்து கொண்டு துன்பமே வேண்டாம் என்பவனும் ஒரே ரகம் தான்.

இயேசுவையும் சிலுவையையும் பிரிக்க முடியாது. இதை நமக்கு உணர்த்துவதற்காகத்தான் நமது ஜெப மாலையில் பாடுபட்ட சுரூபம் தொங்கிக் கொண்டிருக்கிறது.

பாடுபட்ட சுரூபத்தைப் பிடித்துக்கொண்டு விசுவாசப் பிரமாணத்தைச் சொல்லிவிட்டுத்தான் செப மாலைக்குள் நுழைகிறோம்.

"இயேசு எனக்காக பாடுபட்டார், நான் அவருக்காக பாடுபடுகிறேன்"
என்பதை இது நமக்கு நினைவூட்ட வேண்டும்.

"துன்பங்கள் நீங்க வேண்டுமா? இயேசுவிடம் வாருங்கள்.

கடன் தொல்லைகள் நீங்க வேண்டுமா? இயேசுவிடம் வாருங்கள்.

நினைத்ததெல்லாம் நடக்க வேண்டுமா? இயேசுவிடம் வாருங்கள்.

வியாதிகள் குணமாகவேண்டுமா? இயேசுவிடம் வாருங்கள்."

என்றெல்லாம் கூறி அழைப்பவர்கள் தவறான வழிகாட்டிகள்.


பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமா? இயேசுவிடம் வாருங்கள்.

சிலுவைகளை சுமக்க தைரியம் வேண்டுமா? இயேசுவிடம் வாருங்கள்.

என்று அழைப்பவர்கள் மட்டுமே சரியான வழிகாட்டிகள்.

"நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே."
(மத்.5:10)

திருமணத்திற்காக கிறிஸ்தவ மதத்தை தழுவும் ஒருவன் ஞானஸ்நானம் பெரும்பொழுது சாமியார் அவனிடம் கேட்டார்,

" திருச்சபையிடம் என்ன கேட்கிறாய்?"

 அவன் சொன்னான்,

" பொண்ணு கேட்கிறேன்.''

சாமியார் சொல்லிக்கொடுத்தார்,

 "விசுவாசம்."

அதற்கு மாப்பிள்ளைக்காரன் சொன்னான்,

"ஆமா சாமி, அவள் பெயர் விசுவாசம் தான்."

பொண்ணுக்காகவும், வேலைக்காகவும் மட்டும் கிறிஸ்தவர் ஆகின்றவர்கள் பெயரளவிற்கு மட்டும் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள்.

விசுவாசத்திற்காக மட்டும் கிறிஸ்தவர் ஆகின்றவர்கள்

உண்மையாக கிறிஸ்தவத்தில் நிலைத்திருப்பார்கள்.

துன்ப காலத்திலும் நிலைத்திருப்பவர்கள் மட்டுமே உண்மையான கிறிஸ்தவர்கள்.

சிலுவையையும் இயேசுவையும் பிரிக்க முடியாது.

இயேசு வேண்டுமென்றால் சிலுவையையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

சிலுவை, இயேசு, நாம் பிரிக்கவே முடியாத உறவுகள்.

லூர்து செல்வம்.

Wednesday, April 14, 2021

பிரிக்கவே முடியாத உறவுகள்.

பிரிக்கவே முடியாத உறவுகள்.


 "தம்பி, சாப்பாடு."

"டிக்கெட் வாங்கிவிட்டீர்களா?"

"இந்தா, பிடி."

தண்ணீர் வைக்கப்படுகிறது. இலை போடப்படுகிறது. இலையில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது.

பையன் நான்கு வகை கூட்டு வைக்கிறான். சோறு வைக்கிறான். சாம்பார் ஊற்றுகிறான்.

"தம்பி, மட்டன் சிக்கன் எதுவும் இல்லையா?"

"என்ன சொன்னீங்க?"

"காய் கறியாக வைத்துக் கொண்டு போகிறாய். மட்டன், சிக்கன் எதுவும் இல்லையா என்று கேட்டேன்."

"சார், இது சைவ ஓட்டல் சார்?"

"அப்படின்னா?"

"Vegetarian Hotel. இங்கே காய்கறிகள் மட்டும் கூட்டாக பரிமாறப்படும். நீங்கள் உள்ளே வரும் போது Board,ஐப் பார்த்துவிட்டு வரவில்லையா?"

"பார்த்துவிட்டு தான் வந்தேன்.
ஆனந்த் பவன், சைவ ஹோட்டல் என்று வாசித்துவிட்டு தான் உள்ளே வந்தேன்."

"அதன் பிறகுமா மட்டன் சிக்கன் கேட்கிறீர்கள்?"

"வாசித்தால் மட்டும் போதுமா? அர்த்தம் தெரிய வேண்டாமா?"

"யாரிடமாவது கேட்டுவிட்டு வந்து இருக்கலாம் அல்லவா?"

"எனக்கு சந்தேகம் வரவில்லை. நான் இப்போது என்ன செய்ய?"

"சாப்பிடுங்கள்."

"மட்டன், சிக்கன், முட்டை இல்லாமல் சாப்பிடுவதே இல்லை."

"இப்போ சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்."

"அது என்னால் முடியாது. கொடுத்த காசை திரும்பி தருவார்களா?"

"இலை போடுவதற்கு முன்னால் அதைக் கேட்டிருக்க வேண்டும். இந்த சாப்பாட்டுக்கு யார் பணம் கொடுப்பார்கள்?

ஒன்று செய்கிறேன். இந்த சாப்பாட்டை பார்சல் போட்டு தந்து விடுகிறேன்.

எடுத்துக்கொண்டு போய் யாரிடமாவது கொடுத்து விடுங்கள்."

''சரி அதையாவது செய். பணம்தான் வேஸ்ட் ஆகிவிட்டது.

எந்த ஹோட்டலுக்குப் போகலாம்?"

"நிறைய ஹோட்டல்கள் திருக்கின்றன. நன்கு விசாரித்து விட்டு போங்கள்."

பார்செலை வாங்கிக்கொண்டு முணுமுணுத்துக் கொண்டே வெளியே சென்றார்.

இப்போ எதற்காக இந்த சாப்பாட்டுக் கதை?

ஜவுளி கடையில் போய் செருப்பு கேட்பவர்கள்,

மருந்துக் கடையில் போய் கடலை மிட்டாய் கேட்பவர்கள்,

பஸ் ஸ்டாண்டிற்கு போய் ட்ரெயின் எப்போது புறப்படும் என்று கேட்பவர்கள்,

இயேசுவிடமே போய் எனக்கு சிலுவையை மட்டும் தந்து விடாதீர்கள் என்று சொல்பவர்கள்  

இப்படி நிறைய பேர் உலகில் இருக்கிறார்கள் என்பதை ஞாபகப்படுத்துவதற்காகத்தான் இந்த கதை.

மருந்துக் கடையில் போய் கடலை மிட்டாய் கேட்பது தப்பு.

ஆனால் இயேசுவிடம் போய் சிலுவையைத் தந்து விடாதீர்கள் என்று சொல்வதில் என்ன தப்பு இருக்கிறது?

அவர் உலகில் வாழும் போது எத்தனை பேருடைய நோய்களை நீக்கி அவர்களுடைய துன்பத்தைப் போக்கி இருக்கிறார்!

சுகம் பெறுவதற்கு என்றே இயேசுவைத் தேடி வந்தவர்கள் எத்தனை பேர்!

அவரே தேடிச்சென்றே குணம் அளித்திருக்கிறாரே!

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் வாருங்கள் என்று அவரே கூறியிருக்கிறாரே!

எதைச் செய்ய ஆரம்பித்தாலும் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை புரிந்து கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.

இயேசுவை பின்பற்ற விரும்புவோர் முதலில் அவரை புரிந்து கொள்ள வேண்டும்.

அவரை புரிந்து கொண்டால்தான் அவரது வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியும்.

அவரைப் புரிந்து கொள்ளாமல் அவரது வார்த்தைகளை நமது இஷ்டம் போல் புரிந்து கொள்ளக்கூடாது.

அவரது செயல்களையும் இஷ்டம்போல் புரிந்து கொள்ளக்கூடாது.

ஒரு சிறிய ஒப்புமை.

பெருந்தலைவர் காமராஜர் ஏழைப் பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காக பள்ளிக்கூடத்தில் மதிய உணவு திட்டத்தை ஆரம்பித்தார்.

வசதியுள்ளவர்கள் மட்டுமல்ல வசதி அற்றவர்களும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்பது காமராஜரின் ஆசை.

அவரைப் புரிந்து கொண்டால் மட்டும் மதிய உணவு திட்டத்தையும் புரிந்துகொள்ளமுடியும்.

மதிய உணவு சாப்பிடுவதற்கு என்றே அந்த நேரம் தவறாமல் பள்ளிக்கூடம் சென்று விட்டு, சாப்பிட்டு முடித்தவுடன் வீட்டுக்கு வந்து விளையாடுபவர்கள் காமராஜரைப் புரிந்து கொள்ளவில்லை.

முதலில் இயேசு எதற்காக உலகிற்கு வந்தார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வியாதிகளை குணமாக்குவதற்கு என்று அவர் உலகிற்கு வரவில்லை.

மக்களுடைய கஷ்டங்களை போக்குவதற்கு என்று அவர் உலகிற்கு வரவில்லை.

பசித்தவருக்கு எல்லாம் உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் உலகிற்கு வரவில்லை.

மக்களுக்கு அரசியல் விடுதலையை பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக அவர் உலகிற்கு வரவில்லை.

பொருளாதார சுதந்திரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் உலகிற்கு வரவில்லை.

சமூக ஏற்றத்தாழ்வுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக அவர் உலகிற்கு வரவில்லை.

முப்பது ஆண்டுகள் தச்சு வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக அவர் உலகிற்கு வரவில்லை.

இறந்த லாசருக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் உலகிற்கு வரவில்லை.

நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்து 

நம்மை பாவத்திலிருந்து மீட்டு நித்திய பேரின்ப வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற 

ஒரே காரணத்திற்காக மட்டுமே அவர் உலகிற்கு வந்தார்.

இந்த நோக்கம் நிறைவேற அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்தார்.

குற்றாலம் செல்வதற்கு பேருந்தில் ஏறுவதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறோம்.

"என்ன சார்? தூரமா?" என்று யாராவது கேட்டால் 

"பேருந்தில் ஏற ஆசையாக இருந்தது,
 அதற்காக வந்தேன்."

என்று சொல்வோமா?

அல்லது

"குற்றாலத்திற்கு போவதற்காக வந்தேன்" என்று சொல்வோமா?


பேருந்தில் ஏறுவதற்காகத்தான் பேருந்து நிலையத்தில் நிற்கிறோம்.

ஆனால் நமது நோக்கம் பேருந்தில் ஏறுவது அல்ல. குற்றாலத்திற்கு செல்வது.


மனுக்குலத்தை மீட்பதற்காக உலகத்திற்கு வந்த இயேசுவை நாம் முதலில் இறைமகன் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்கு நமக்கு முதலில் விசுவாசம் வேண்டும்.

விசுவாசத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகத்தான் இயேசு புதுமைகள் செய்தார். வியாதிகளை குணமாக்கினார். இறந்தவரை உயிர்பித்தார்.

ஒவ்வொரு முறை நோய் குணமாகும் போதும், உனது விசுவாசம் உன்னைக் குணமாகிற்று என்றுதான் சொன்னார்.

இயேசுவை புரிந்து கொள்ளாதவர்கள் தான் அவரை பொதுவுடமைவாதி, சீர்திருத்தவாதி, புரட்சியாளர், சமதர்மவாதி என்றெல்லாம் அழைப்பார்கள்.

அவர் நமது மீட்பர்.

மீட்பர் மட்டும்தான் அவருக்குப் பொருத்தமான பட்டம்.

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.''

என்று சொன்னவரிடம் போய்

" எனக்கு சிலுவை வேண்டாம்"

 என்று சொன்னால் அதற்கு ஒரே ஒரு பொருள்தான் உண்டு.

"ஆண்டவரே உம்மை நான் பின்பற்ற விரும்பவில்லை.
ஆளை விடும்."

"சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் வாருங்கள்."

 என்று ஆண்டவர் கூறியது உண்மைதான்.

இங்கு சுமை என்பது நமது பாவச்சுமையை குறிக்கிறது.

நம்மிடம் பாவம் இருந்தால் அதை சார்ந்த கவலை, மகிழ்ச்சி இன்மை, சமாதானம் இன்மை போன்ற சுமைகள் நம்மை அழுத்திக் கொண்டிருக்கும்.

 நாம் இயேசுவை தேடிச் சென்று நமது பாவச்சுமையை அவர்முன் இறக்கி வைத்து விட்டால்

எல்லா சுமைகளும் நம்மை விட்டு விழுந்துவிடும். 

இயேசு நம்மை பாவத்திலிருந்து மீட்கவே வந்தார் என்ற உண்மையை புரிந்து கொண்டால் மட்டுமே அவரது வார்த்தையையும் புரிந்து கொள்ள முடியும்.

"என்னிடம் வருபவர்களிடம் இருந்து கடன் சுமையை இறக்கி வைப்பேன்,

 எல்லா நோய்களிலிருந்தும் குணம் அளிப்பேன்,

 அவர்களுக்கு எந்தவித துன்பமும் வராமல் பாதுகாப்பேன்,

அவர்களுக்கு குழந்தைவரம் அளிப்பேன்,

 தேர்வுகளில் வெற்றி பெற வைப்பேன்,

நல்ல வேலை வாங்கித் தருவேன்,

அவர்களது வருமானத்தை அதிகரிப்பேன்"

என்றெல்லாம் இயேசு ஒரு போதும் வாக்குறுதி அளிக்கவில்லை.

ஆனாலும் இவற்றால் நமது விசுவாசம் அதிகரிக்குமானால்,

அதற்காக இந்த உதவிகளையெல்லாம் இயேசு செய்வார்.

(தொடரும்)

லூர்து செல்வம்