Tuesday, December 8, 2020

"அவள் உன் தலையை நசுக்குவாள்".(ஆதி. 3:15).

http://lrdselvam.blogspot.com/2020/12/she-will-crush-your-head-315.html



"அவள் உன் தலையை நசுக்குவாள்:"
"She will crush your head."
(ஆதி. 3:15).

 அன்னை மரியாள் ஜென்மப் பாவ மாசின்றி உற்பவித்தார் என்பதற்கு வேதாகம ஆதாரங்கள்:

பழைய ஏற்பாடு:
   
ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்கள் 

உலகம் படைக்கப்பட்டது பற்றியும் 

மனித இனம் படைக்கப்பட்டது பற்றியும் 

மனித இனம் பாவத்திற்குள் விழுந்தது பற்றியும் 

 பாவத்தில் விழுந்த மனிதனை மீட்க மீட்பரை அனுப்ப இறைவன் வாக்குக் கொடுத்ததைப் பற்றியுமான 

இறைச் செய்திகளை நமக்குத் தருகின்றன.

இவை வரலாற்றுச் செய்திகள் அல்ல.

 இறைச் செய்திகள்.

நமது ஆன்ம ஈடேற்றத்திற்குத் தேவையான செய்திகள்.

மனிதனை பாவம் செய்ய தூண்டிய சாத்தானை நோக்கி இறைவன் சொன்ன வார்த்தைகளில் இருந்து பின்வரும் இறைச்செய்திகளைப் பெறுகிறோம்:

1.பாவத்திலிருந்து மனிதனை மீட்க மீட்பர் பிறப்பார்.

2, மீட்பரின் அன்னை உற்பவிக்கும் வினாடியிலிருந்து வாழ்நாள் முழுவதும் பாவ மாசின்றி இருப்பாள்.

"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்: அவள் உன் தலையை நசுக்குவாள்: நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்."

என்னும் இறை வசனத்திலிருந்து இச்செய்திகள் பெறப்படுகின்றன.

இங்கே பெண் என்று குறிப்பிடப் படுவது மீட்பரின் அன்னை.

எப்படி?

"உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே
பகையை உண்டாக்குவோம்"

எந்த வசனத்தில் சாத்தானின் வித்து பாவம்.

'அவள்' வித்து மீட்பர்.

முந்தைய வசனத்தில் உள்ள பெண்தான் 'அவள்'.

அதாவது மீட்பரைப் பெற்றெடுக்கப்போகும் தாய், அன்னை மரியாள் .


"உனக்கும் பெண்ணுக்கும், ( between you and the woman,)
பகையை உண்டாக்குவோம்:"
"அவள் உன் தலையை நசுக்குவாள்"

இது வசனம்.
,

"நான் படைத்த முதல் பெண்ணை நீ ஏமாற்றி பாவத்தில் விழ வைத்துவிட்டாய்.

ஆனால் மீட்பரின் தாயிடம் உன் முயற்சி பலிக்காது.

நீ அவளை தீண்ட முடியாதபடி உன் தலையை நசுக்கி விடுவாள்."

மரியாள் அவள் வாழ்வில் ஒரு நொடி கூட பாவத்தின் அடிமையாக வில்லை.

அவள் ஜென்மப் பாவ மாசின்றி உற்பவித்தாள் என்பது சொல்லாமலே புரியும்.



இது பெறப்படும் செய்தி


அடுத்து,

"உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே
(between your offspring and her offspring.)
பகையை உண்டாக்குவோம்"

என்ற வசனத்தில்

உன் வித்து = பாவம்.
அவள் வித்து = இயேசு

இயேசுவின் எதிரி பாவம்.

ஏனெனில் பாவம்தான் இறைவனின் படைப்பாகிய மனிதனை அவருடைய அன்பிலிருந்து பிரித்தது.

இயேசுவின் பிறப்பின் நோக்கமே 

அவருடைய எதிரியாகிய பாவத்தை வென்று .

அவருடைய படைப்பாகிய மனிதனை மீட்பது.
பாவத்தை அழித்து மனிதனை மீட்பது.

ஆக துவக்கத்திலேயே உலக மீட்பரைப் பற்றியும்,

மீட்பரின் அன்னை பாவமாசின்மைப் பற்றியும்
இறைவன் முன் அறிவித்து விட்டார். 

புதிய ஏற்பாடு:


கபிரியேல் தூதர் இயேசுவின் பிறப்பு சம்பந்தமாக மரியாளிடம் தூதுரைத்தபோது,

" அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே "
(லூக். 1:28)

என்று வாழ்த்தினார்.

ஒரு பாத்திரம் ஒரு பொருளால் நிறைந்து இருக்கும்போது அப்பாத்திரத்துக்குள் வேறொரு பொருள் இருக்க முடியாது.

தூதர் மரியாளை அருள் நிறைந்தவளே என்று அழைத்தார்.

மரியாள் அருளால் நிறைந்தவள்.

அருள் நிறைந்தவள் என்றால் அருளைத் தவிர வேறு எதுவும் இல்லாதவள் என்று பொருள்.

அதாவது

அருளோடு ஒத்துவராத பாவமாசு ஒரு இம்மிகூட மரியாளிடம் இல்லை.

பாவமாசு இல்லாமல் உற்பவித்து,

 பாவமாசு இல்லாமல் வாழ்ந்து,

பாவமாசு இல்லாமல் மரித்தாள் நம் அன்னை.

பாவமாசு இல்லாமல் வாழ்ந்து, மரித்ததால்தான் நம் அன்னை ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் பாக்கியம் பெற்றாள்.

நம் மக்களுக்கு ஒரு சுபாவம் உண்டு.

தங்களது குலப் பெருமையையும்,

 இனப் பெருமையையும்,

 மொழி பெருமையையும் பேசிப் பேசி,

 அந்தப் பேச்சிலேயே ஆனந்த காண்பது.

"உங்கள் இனப் பெருமைக்குப் பெருமை சேர்க்க நீங்கள் என்ன செய்தீர்கள்?'' என்று யாராவது கேட்டால் பதில் வராது.


நாம் நமது அன்னையைப் பற்றி பெருமையாக பேசுகிறோம், நல்ல காரியம் தான்.

 ஆனால் அது போதாது.

 "தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சேலை" என்ற பழமொழிக்கு ஏற்ப 

நாம் நமது தாயை பிரதிபலிக்கும் விதமாக ஏதாவது செய்தாக வேண்டும்.

ஜென்ம பாவத்துடன் பிறந்த நாம் ஞானஸ்நானத்தின் மூலம் அதிலிருந்து விடுதலை அடைந்தோம்.

திரும்பவும் பாவத்தின் அடிமைத் தனத்திற்குள் விழுந்துவிடாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு வேண்டிய அருள் வரங்களை தனது திருக்குமாரனிடமிருந்து
 பெற்றுத்தர வேண்டும் என்று அன்னையிடம் மன்றாட வேண்டும்.
 
பாவம் அற்ற புண்ணிய வாழ்வு வாழ்ந்தால்தான் நமது அமல அன்னையின் பிள்ளைகள் என்று அழைக்கப்பட தகுதி உள்ளவர்கள் ஆவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment