Friday, December 25, 2020

மன்னிக்கப் பிறந்தார் இயேசு.

    மன்னிக்கப் பிறந்தார் இயேசு.


அன்னைத் தெரெசா ஒருமுறை ஒரு வயோதிகப் பெண் ரோட்டரம் உள்ள குப்பைத் தொட்டிக்கு அருகே படுத்திருப்பதைப் பார்த்தார்கள்.

காரை நிறுத்தி அதிலிருந்து இறங்கிச் சென்று, அவள் அருகே அமர்ந்து,

"என்னம்மா ஆச்சி உனக்கு?"

"என் மகன் என்னைக் கைவிட்டு விட்டான். நாசமா போற பய. படுக்க இடம் இல்லாமல் இங்கே படுத்திருக்கிறேன்."

அன்னை அவள் மேல் கை வைத்துப் பார்த்தார்கள். பயங்கரக் காய்ச்சல்.

அவளை வாரி எடுத்துக் கொண்டு காருக்குச் சென்றார்கள்.

ஒரு பையிலிருந்து ஒரு காய்ச்சல் மாத்திரையை வாய்க்குள் வைத்தார்கள்.

சிறிதளவு வெந்நீர் கொடுத்தார்கள்.

அந்தப் பெண் மாத்திரையை விழுங்கி விட்டு, மகனைத் திட்ட ஆரம்பித்தாள்.

"மகனைத் திட்டாதீங்க அம்மா. பாவம், அவனுக்கு என்ன பிரச்சனையோ?"

"அவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லேம்மா. நாசமாப் போகப் போகிறான்."

"திட்டாதீங்க அம்மா. அவனை மன்னித்து விடுங்கள், அம்மா."

"மன்னிப்பா? அவனுக்கா? நாசமாப் போகட்டும்."


"அப்படிச் சொல்லாதீங்க."

அவளை convent க்குக் கொண்டு சென்று படுக்கையில் படுக்க வைத்த பின்னும் திட்டிக் கொண்டிருந்தான்.

 அன்னையும் அவனை விடவில்லை.

பிறரை மன்னித்தால்தான் நமக்கு மன சமாதானம் கிடைக்கும் என்பதை விளக்கினார்.


 இறுதியாக அந்தப் பெண் தன் மகனை மன்னிப்பதாக கூறினார்.

தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வீக இயல்பு.

கடவுள் நம்மை அவரது சாயலாக படைத்திருக்கிறார்.

மன்னிக்கும் இயல்பிலும் நமக்கு பங்கு தந்திருக்கிறார்.

  மனிதன் தவறு செய்யும் இயல்பு உடையவன்.

 தவறு செய்யும் ஒவ்வொருவரும் தனது தவறு மன்னிக்கப்பட வேண்டும் என்று விரும்புவது என்பது இயல்பு.


நமது தவறு மன்னிக்கப்பட வேண்டுமென்றால்  

 மற்றவர்களுடைய தவறுகளை மன்னிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

நமக்கு முன்பின் தெரியாத 
ஒருவர் தவறு செய்தால் அவரை மன்னிப்பது எளிது,

நமக்கு மிகவும் வேண்டியவர்கள் நமக்கு எதிராக தவறு செய்யும்போது மன்னிப்பது சிறிது கடினமாகத் தோன்றும்.

பத்து மாதம் சுமந்து,

 பெற்று எடுத்து, 

பாராட்டி சீராட்டி, 

அளவு கடந்த அன்பு வைத்து, தியாகங்கள் பல செய்து வளர்த்த மகன்

 தன்னை வெறுப்பதை தாங்கிக் கொள்வது கொஞ்சம் கடினம்தான்.

நம்மைப் பற்றி ஒரு வினாடி சிந்தித்து பார்த்தால் இது கடினமாக தெரியாது.

ஒன்றும் இல்லாமையிலிருந்து நம்மைப் படைத்து,

வாழ்வதற்கு சர்வ வசதிகளும் அடங்கிய ஒரு உலகத்தையும் தந்து,

 எதிர்காலத்தில் நித்தியத்திற்கும் வாழ்வதற்காக பேரின்ப மயமான விண்ணுலகம் ஒன்றையும் தயாராக வைத்துக் கொண்டு,

இவ்வுலகில் நம்மை ஒவ்வொரு வினாடியும் உடனிருந்து பராமரித்து கொண்டுவரும் அன்பு மயமான இறைவனுக்கு நன்றி கெட்ட தனமாக பாவங்கள் செய்கிறோமே 

நம் மீது கடவுளுக்கு எவ்வளவு வெறுப்பு வர வேண்டும்?

ஆனால் வரவில்லையே!

அவருடைய அன்பில் இம்மி அளவு கூட குறையவில்லையே!

மாறாக நம்மை மன்னிப்பதற்காக விடியவிடிய காத்துக் 
கொண்டிருக்கிறாரே!


பாவிகளை நோக்கித்தானே இறைவனின் அருள் வரங்கள் மடை திறந்து வரும் வெள்ளம் போல் வருகின்றன!

கோடிக்கணக்கான பாவங்களையும் நொடிப்பொழுதில் மன்னிக்க தயாராக இருக்கிறார் நம் இறைவன்.

மன்னிப்பின் தேவன் சொல்கிறார்,

 "மன்னியுங்கள், மன்னிக்கப் படுவீர்கள்."

நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் முன் மற்றவர்கள் நமக்கு விரோதமாக செய்த பாவங்களை நாம் மன்னிக்க வேண்டும்.

மன்னிப்பவர்களுக்கு மட்டுமே மன்னிப்பு கேட்க தகுதி இருக்கிறது.

 "மனிதருடைய குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களாகில்,

 உங்கள் வானகத் தந்தை உங்களையும் மன்னிப்பார்.

15 மனிதரை நீங்கள் மன்னியாவிடில், 

உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்கமாட்டார்.
( மத். 6:14, 15 ) 


இயேசுவின் இவ்வார்த்தைகள்
பேச்சுவார்த்தைக்குட்பட்டது அல்ல.

அதாவது.

இயேசுவைப் பார்த்து,

"ஆண்டவரே, உமது நிபந்தனையை கொஞ்சம் மாற்றிக் கொள்வோமா?" என்று அவரைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது.


இயேசுவின் சொற்படி நடப்பதுதான் நமது கடமை.

We should stand by Jesus' words.

சிலர் சொல்லலாம்,

"சாதாரணமாக insult செய்தவனை மன்னிக்கலாம், எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவனை எப்படி மன்னிக்க முடியும்?"

இவர்கள் இயேசுவின் உதாரணத் திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

யூதாஸை விடவா பெரிய நம்பிக்கைத் துரோகம் செய்துவிட முடியும்?

தன்னைக் காட்டிக்கொடுத்த அவனையே இயேசு "நண்பனே" என்று தான் அழைத்தார்.

சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது அவனுக்கும் சேர்த்துதானே பிதாவிடம் மன்னிக்கும்படி மன்றாடினார்!

அவருடைய சீடனாக இருக்க வேண்டுமென்றால் அவருடைய முன்மாதிரிகையைப் பின்பற்ற வேண்டாமா!

சில சமயங்களில் நமது மனதை நோகச் செய்தவர்கள், நமக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் நம்மிடம் மன்னிப்பு கேட்காமல் கூட இருக்கலாம்.

அப்படிப்பட்டவர்களையும் நாம் இயேசுவுக்காக மன்னிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

நாம் மன்னிக்கும் வரை அவர்களது துரோகம் நமது மனதை அழுத்திக் கொண்டே இருக்கும்.

முழுமனதோடு கடவுளுக்காக அவர்களை மன்னித்து விட்டால் நம் மனதில் எந்த அழுத்தமும்
இருக்காது.

மனதில் அமைதியும் சமாதானமும் குடியேறும்.

 அதன் பின் நம்மை நோகச் செய்தவர்களோடு இயல்பாக பழகுவோம்.

அவர்களுக்கு தேவைப்படும்போது உதவியும் செய்வோம்.

 நாம் அவரது குற்றத்தை மறந்து இயல்பாக பழகுவதே அவர்கள் மனதை திருத்தி விடும்.

 அவர்களாகவே வந்து நம்மிடம் மன்னிப்பு கேட்பார்கள்.

இயேசுவை கைது செய்ய வந்தவர்களில் ஒருவன் காதை இராயப்பர் வாளால் வெட்டியபோது,

 இயேசு இராயப்பரைக் கடிந்து கொண்டதுமன்றி,

வெட்டப்பட்ட காதை, வெட்டப்பட்டவன் கேட்காமலேயே ஆண்டவர் ஒட்டவைத்தார்.

இயேசுவின் இந்த இரக்கச் செயல் வெட்டப்பட்டவனை எப்போதாவது சிந்திக்க வைத்திருக்கும்.

அவனை திருத்தியிருக்கும்

இத்தகைய மன்னிக்கும் மனப்பாங்கு நம்மிடம் இருந்தால் நம்மை பொறுத்தவரை நமக்கு உலகில் பகைவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். 

மற்றவர்களுடைய பகைமை உணர்ச்சி நமது மன அமைதியை எள்ளளவும் பாதிக்காது.


மன்னிக்கும் மனப்பக்குவம் உள்ளவர்களை பாவம் நெருங்காது.

ஏனெனில் பாவத்தின் அடிப்படை காரணமே இறையன்பும், பிறரன்பும் இல்லாமைதான். 

இயேசுவின் போதனைப்படி பகைவரையும் மனமுவந்து நேசிப்பவன் எப்படி தன்னை நேசிக்கும் இறைவனுக்கு விரோதமாக பாவம் செய்வான்?

பகைவரையே நேசிப்பவன் நேசிப்பவரை எப்படிப் பகைப்பான்?

 இறைவனுக்கு, சாத்தான் உட்பட, யார் மீதும் பகைமை உணர்ச்சி இருக்க முடியாது.

ஒளியும், இருட்டும் சேர்ந்து இருக்க முடியாது.

நட்பும், பகைமையும் சேர்ந்து இருக்க முடியாது.

நட்புக்கு உயிர் அன்பு.
பகைமைக்கு உயிர் வெறுப்பு.

அன்பு மயமான கடவுளிடம் வெறுப்பு இருக்க முடியாது.

 ஆகவேதான் தன்னை எதிர்த்து பாவம் செய்யும் பாவியையும் அவர் அளவுகடந்து நேசிக்கிறார்.


 அவரால் நேசிக்காமல் இருக்க முடியாது.

அன்பு அவர் இயல்பு.
மன்னிப்பதும் அவர் இயல்பு.

அவரது சாயலைத் தாங்கும் நாமும் 

 அன்பு செய்வோம்.
மன்னிப்போம்.
மன்னிப்புப் பெறுவோம்.
மகிழ்ந்திருப்போம் நித்தியமும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment