Friday, May 16, 2025

அதுதான் எனக்குத் தெரியுமே!



அதுதான் எனக்குத் தெரியுமே!

"தாத்தா, நம்மைப் படைத்த கடவுளுக்கு நாம் உயிர் வாழ என்ன வேண்டும் என்று 
 தெரியும்தானே."

"'அதில் என்ன சந்தேகம்?"

"எனக்குச் சந்தேகமில்லை. உங்களுக்கு இருக்கிறது போல் தெரிகிறது."

"'எனக்கா? நான் எப்போது சொன்னேன், நாம் உயிர் வாழ என்ன வேண்டும் என்று கடவுளுக்குத் தெரியாது என்று?"

"நமக்குத்  தேவையானதை கடவுளிடம் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்?"

"'ஆமா, அதுக்கு என்ன இப்போது?"

"நமக்கு என்ன தேவை என்று கடவுளுக்குத் தெரியுமென்றால் நாம் ஏன் நமக்கு வேண்டியதை கடவுளிடம் சொல்ல வேண்டும்?"

"'நீ காலையில் சாப்பிடுவாய் என்று உனது அம்மாவுக்கு தெரியுமா, தெரியாதா?"

"தெரியும்."

"'பிறகு ஏன் காலையில் "அம்மா சாப்பாடு" என்று கேட்கிறாய்?"

"நான் Dining table ல் உட்கார்ந்தாலே போதும், அம்மா சாப்பாடு கொண்டு வந்து விடுவார்கள். 

நான் சாப்பாடு என்று சொல்வது சாப்பாட்டுக்காக அல்ல அம்மாவோடு பேச வேண்டும் என்பதற்காகத்தான். 

காலையில் புத்தகக் கட்டுடன் போகும் பையன் எங்கே போகிறான் என்று நமக்குத் தெரியும்.

ஆனாலும் அவனைப் பார்த்தவுடன், "பள்ளிக்கூடத்துக்கா?" என்று கேட்கிறோம். 

எதற்காக? 

அவனோடு ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக.

பேச எதுவும் இல்லாவிட்டாலும், 
பார்த்தவுடன் "தூரமா?" என்று நாம் கேட்பது வழக்கம். 

ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகத்தான்."

"'அதே போல் தான் கடவுளோடு பேச வேண்டும் என்பதற்காகவே நமக்கு  வேண்டியதைக்  கேட்கிறோம். 

கடவுள் இரக்கம் உள்ளவர் என்று நமக்குத் தெரியும். 

ஆனாலும் "ஆண்டவரே இரக்கமாயிரும்" என்று ஏன் செபிக்கிறோம்?

அதே காரணத்திற்காகத்தான். 
பேச வேண்டும் என்பதற்காகத்தான். 

நாம் ஏன் பேசுகிறோம், சொல்லு."

"நமது மனதில் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக.'

"'மற்றவர்களோடு என்றால்?'

"நமக்குத் தெரிந்தவர்களோடு, நமது உறவினர்களோடு.''

"'தெரியாதவர்கள், உறவு இல்லாதவர்களோடு பேசமாட்டோம். அப்படித்தானே?"

''அவர்களோடு உறவை ஏற்படுத்திக்  கொள்ள வேண்டும் என்றால் அவர்களோடும் பேசுவோம்.''

"'அதாவது பேசுவதற்கும் உறவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது, அப்படித்தானே."

"இருக்கிறது. உறவினர்களோடு பேசுவதை உரையாடல் என்கிறோம்."

"'கடவுளோடு பேசுவதற்கு, அதாவது உரையாடல் செய்வதற்குப் பெயர் செபம்."

''அதுதான் எனக்குத் தெரியுமே.''

"வேறு என்ன தெரியாது?"

"செபம் பற்றித் தெரிந்ததைச் சொல்லுங்கள்."

"'கடவுளோடு நாம் பேசினால் தான்,  நமக்கும் அவருக்கும் உள்ள உறவு வளரும். உறவில் நெருக்கம் ஏற்படும். 

கடவுளை நாம் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மனதிற்குள் மௌனமாக செபிக்கிறோம். மௌன செபத்துக்கு இன்னொரு பெயர் தியானம்."

''இதெல்லாம் எனக்குத் தெரியும் தாத்தா?"

"'பிறகு ஏன் இந்த கேள்வியை கேட்டாய்?"

"உங்களோடு பேச வேண்டும் என்பதற்காகத்தான்."

"'என்னைப் படையுங்கள் என்று நாம் கடவுளிடம் கேட்கவில்லை. 

அவராகவே நம்மைப் படைத்தார். 

மூச்சு விட காற்று வேண்டும் என்று நாம் கேட்கவில்லை. 

அவராகவே தந்தார். 

உலகைப் பார்க்க கண்கள் வேண்டும் என்று நாம் அவரிடம் கேட்கவில்லை.

அவராகவே தந்தார். 

இந்த உலகத்தையோ அதில் உள்ள எந்த பொருளையுமோ நாம் கேட்கவில்லை. 

ஆனால் கடவுள் அவற்றையெல்லாம் படைத்த பிறகு தான் நம்மைப் படைத்தார். 

அவர் படைத்த பொருட்களை எல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

கடவுளை நினைத்துக் கொண்டு அவற்றைப் பயன்படுத்துவதும் செபம் தான்.

அவற்றை நமக்கு தந்ததற்குக்  கடவுளுக்கு நன்றி கூற வேண்டாமா?"

"நமது நன்றியால் அவருக்கு என்ன பயன்?"

"'நம்மால் அவருக்கு எந்த பயனும் இல்லை. 

ஏனெனில் அவருக்குத் தேவைகள் இல்லை.

ஆனால் அவருடைய உதவி இல்லாமல் நாம் ஒரு வினாடி கூட உலகில் வாழ முடியாது."

"'நமது நன்றியால் யாருக்குப் பயன்?"

"'நமக்குதான். நமது ஒவ்வொரு நல்ல செயலாலும், அதாவது, ஒவ்வொரு செபத்தாலும் 
 நாம் அனுபவிக்க இருக்கும் நித்திய பேரின்பத்தின் அளவு கூடிக் கொண்டேயிருக்கும். 

நாம் மோட்சத்துக்குச் செல்லும் போது அதை அனுபவிப்போம்.

கடவுளுடைய அன்பு தன்னலம் அற்றது. அவருக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் பயனையும் அவர் நமக்காக deposit செய்து வைத்திருக்கிறார். நாம் விண்ணகம் செல்லும் போது அதை எடுத்துக் கொள்ளலாம்.

இதை ஏன் எனக்குத் தெரியுமே என்று சொல்லவில்லை?"

"எனக்குத் தெரியும் என்பது உங்களுக்குத் தெரியுமே!"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment