"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்." (லூக்கா.6:38)
"உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.
உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
கேட்பவர்களுக்குக் கொடுங்கள்.
பகைவர்களை நேசியுங்கள் .
உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.
யாரையும் தீர்ப்பிடாதீர்கள்.
நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள்.
மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.
கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்;
நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்."
இவையெல்லாம் நமது சிந்தனை சொல் செயலால் நாம் வாழ வேண்டிய இயேசுவின் வார்த்தைகள்.
நாம் ஒவ்வொருவரும் தனிப்பிறவி அல்ல, சமூகப் பிறவி.
We are not individuals, but social beings.
நாம் வாழும் சமூகம் இறைவனால் படைக்கப்பட்ட ஆன்மீக அமைப்பு.
மனித சமூகம் இறையன்பினாலும்,
பிறரன்பினாலும் இணைக்கப்பட்டது.
ஆகவே தான் நாம் இறைவனோடும், பிறனோடும் அன்புறவோடு இருக்க வேண்டும்.
நாம் சமூகப் பிறவியாக இருப்பதால் சமூகத்தின் உதவி இன்றி நம்மால் வாழ முடியாது.
சமூகத்திலிருந்து நாம் பெறுகிறோம், சமூகத்துக்கு நாம் கொடுக்கிறோம் .
கொடுக்கல் வாங்கல் இல்லாமல் சமூகமும் இயங்க முடியாது, தனிப்பட்ட நபரும் இயங்க முடியாது.
தனிப்பட்ட நபர்களால் ஆனதுதான் சமூகம்.
தனிப்பட்ட நபர்களுக்குள் இருக்கும் உறவுதான் சமூக உறவு.
தனிப்பட்ட நபர்கள் சுமூகமான உறவுடன் இருந்தால் சமூக உறவு சுமூகமாக இருக்கும்.
தனிப்பட்ட நபர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும்.
தனிப்பட்ட நபர்கள் ஒருவரையொருவர் பகைமை பாராட்டக் கூடாது.
பகைமை ஏற்பட்டால் அதை அன்பால் வெல்ல வேண்டும்.
"உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.
உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."
அன்பு மன்னிக்கும்.
அன்பு தீமைக்கு நன்மை செய்யும்.
அன்பு இல்லாதவர்களுக்குக் கொடுக்கும்.
நாம் நமது அன்பினால் மற்றவர்களுக்கு எவ்வளவு தாராளமாக கொடுக்கிறோமோ அதே தாராளமாக நமக்கும் கிடைக்கும்.
"கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். "
(லூக்கா 6:38)
அனைவரும் கடவுளுடைய பிள்ளைகளாகையால், அவர்களுக்குச் செய்வதைக் கடவுளுக்கே செய்கிறோம்.
நாம் நமது பகைவர்களை நேசிக்கும் போது அதனால் மகிழ்ச்சி அடைபவர் கடவுள் தான்.
நமது பகைவர்களுக்காக இறைவனிடம் செபித்தால் கடவுள் அவருடைய அருள் வரத்தால் அவர்களை மனம் திருப்புவார்.
பகைவர்கள் இவ்வுலகில் மட்டுமல்ல மறுவுலகிலும் நமது நண்பர்களாக வாழ்வார்கள்.
யார் கேட்டாலும் தாராளமாகக் கொடுக்க வேண்டும்.
ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் கடன் கேட்டால் அது திரும்ப வரும் என்று எதிர் பார்க்காமல் கொடுக்க வேண்டும்.
நமது தந்தை இரக்கமே உருவானவர்.
நாமும் தந்தையைப் போலவே இரக்கம் உள்ளவர்களாக வாழ வேண்டும்.
இரக்கம் உள்ளவர்களிடம் மன்னியுங்கள், கொடுங்கள் என்று யாரும் சொல்லவே தேவையில்லை.
இரக்கமே மன்னிக்கும், அள்ளிக் கொடுக்கும்.
இயேசுவின் வார்த்தைகள் வாசிக்க மட்டுமல்ல, வாழ்வோம்.
இயேசுவாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment