"இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்"
(லூக்கா.11:28)
இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர்,
"உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" என்று குரலெழுப்பிக் கூறினார்.
(11:27)
அவளுக்குப் பதில் சொல்லும் வகையில்,
"இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்" என்றார்.
அன்னை மரியாளுக்கான வணக்கத்தை விரும்பாத சில பிரிவினை சபையினர் இந்த வசனத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு,
"அவருடைய தாயை விட பேறு பெற்றோர் இருக்கிறார்கள் என்று இயேசுவே சொல்லி விட்டார்,
ஆகவே மரியாளுக்கு அதிக வணக்கம் கொடுப்பது தவறு.
மற்றவர்ளை விட மரியாளை அதிகம் வணங்குபவர்கள் இயேசுவுக்குக் கீழ்ப்படியாதவர்கள்" என்று கூறுகிறார்கள்.
இவர்கள் இயேசுவையும் புரிந்து கொள்ளவில்லை, இவர்களுக்கு மொழி அறிவும் இல்லை.
"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(மத்தேயு.11:11)
மரியாளைப் பற்றி அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டால் திருமுழுக்கு அருளப்பர் இயேசுவை விடப் பெரியவர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் இயேசுவும் மனிதராய்ப் பிறந்தவர்தான்.
மொழி அறிவு உள்ளவர்களுக்கு ஒன்று புரியும்.
மனிதர் ஏதாவது ஒரு விடயத்தை அழுத்திக் கூற வேண்டுமானால் அதை மிகைப்படுத்திக் கூறுவது வழக்கம்.
"எழுந்தறிவித்தவன் இறைவன்."
ஆசிரியரின் பெருமையை இப்படிக் கூறுவார்கள்.
சொன்னவருக்குத் தெரியும் ஆசிரியர் கடவுள் இல்லை என்று.
ஆனால் எழுத வாசிக்கக் கற்றுக் கொடுப்பதன் பெருமையை விளக்க ஆசிரியரை இவ்வாறு கூறுவார்கள்.
இயேசுவும் இந்த யுக்தியைக் கையாண்டிருக்கிறார்.
இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போரது பேற்றை அழுத்திக் கூற
அவர்கள் தன்னைப் பெற்ற தாயை விட பேறு பெற்றோர் என இயேசு மிகைப்படுத்திக் கூறுகிறார்.
படைக்கப் பட்டவர்களிடமிருந்து மரியாளை இயேசு தேர்வு செய்யவில்லை.
தனது தாயை அவர்தான் அருள் நிறைந்தவராகப் படைத்தார்.
தாயை விட பேறு பெற்றவராக யாரையும் அவர் படைக்கவில்லை.
இறைவார்த்தையை கபிரியேல் தூதர் மூலமாகக் கேட்டு அதைக் கடைப்பிடித்தவள் அன்னை மரியாள்.
மற்ற மக்களும் இறை வார்த்தையை அறிந்து அதன்படி வாழ வேண்டும் என்பது இயேசுவின் ஆசை.
இந்த ஆசையைத்தான் இந்த வசனத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
பிரிவினை சபையினர் தாங்கள் ஒரு விடயத்தை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு ஆதாரம் தேடி அலைபவர்கள்.
சில வசனங்களுக்கு தங்கள் இட்டப்படி பொருள் கொடுப்பார்கள்.
மரியாள் முக்காலமும் கன்னி.
இயேசு ஒருவர் மட்டுமே அவளுடைய மகன்.
அது கத்தோலிக்க திருச்சபையின் போதனையாக இருப்பதாலையே அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
இயேசு பொது வாழ்வின் போது கப்பர்நாகுமில் இராயப்பர் தங்கியிருந்த வீட்டில் தங்கியிருந்தார்.
இராயப்பர் தங்கியிருந்தது அவருடைய மாமியார் வீடு.
ஒரு முறை தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.
அவர்கள், "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்?
இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?
(மத்தேயு .13:54,55)
மரியாள் முக்காலமும் கன்னி என்பதை ஏற்றுக் கொள்ள விரும்பாத நமது பிரிவினை சகோதரர்கள் இந்த வசனத்தைப் பிடித்துக் கொண்டு,
"இயேசு மட்டும் தான் கன்னியின் மகன். அவர் பிறந்த பிறகு யோசேப்புக்கும், மரியாளுக்கும் பிறந்த பிள்ளைகள் என்று யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோரைக் கூறுகிறார்கள்.
அவர்கள் பைபிளை ஒழுங்காக வாசிக்கவில்லை.
சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.
(அரு.19:25)
ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் அவரது உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர்.
(மாற்கு16:1)
இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?
(மத்தேயு .13:55)
இம்மூன்றும் இறை வசனங்கள்.
இவற்றிலிருந்து நாம் அறிவது என்ன?
தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாள்.
அவள்தான் யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோரின் தாய்.
ஓய்வு நாள் முடிந்ததும் அன்னை மரியாள் கல்லறைக்கு வரவில்லை.
வந்தவர்கள்
1. மகதலா மரியாள்.
2.யாக்கோபின் தாய் மரியாள்.
(இயேசுவின் தாய் அல்ல, அவளுடைய சகோதரி. யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோருடைய தாய்.)
3.சலோமி மரியாள், நற்செய்தி அருளப்பரின் தாய்.
யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இயேசுவுக்கு சித்தி மக்கள்.(Cousin brothers)
சித்தி, பெரியம்மா, சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகளையும் அண்ணன், தம்பி என்று தானே அழைப்போம்.
இதுகூட தெரியாமல் "சகோதரர்" என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டு அவர்களை அன்னை மரியாளின் பிள்ளைகள் என்கிறார்கள்.
குருடனுக்கு வைத்தியம் பார்த்து பார்வை கொண்டு வந்து விடலாம்.
கண்ணைப் பொத்திக் கொண்டு நிற்பவனுக்கு வைத்தியம் பார்க்க முடியாது. அவனாகத்தான் கண்ணைத் திறக்க வேண்டும்.
பைபிள் மட்டும் போதும் என்பவர்கள் பைபிளை ஒழுங்காக வாசிக்காதவர்கள்.
"வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை."
(அரு. 20:30)
அருளப்பர் கூட இயேசு பிறந்த வரலாற்றை அவருடைய நூலில் எழுதவில்லை.
அவர் எழுதிய நற்செய்தி நூலில் இயேசுவின் பிறப்பு பற்றி கூறப் படாததால் இயேசு பிறக்கவில்லை என்று சொல்லி விடுவோமா?
எல்லா நற்செய்தி நூல்களிலும் எல்லாம் எழுதப் பட்டிருக்காது.
ஆனால் இயேசு போதித்த அத்தனையையும் சீடர்கள் மக்களுக்குப் போதித்தார்கள்.
எழுதப் பட்ட போதனைகளின் அடிப்படையிலும், எழுதப்படாமல் போதிக்கப் பட்டவை அடிப்படையிலும் ஆதிக் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தார்கள்.
எழுதப்படாமல் போதிக்கப் பட்டவையைத்தான் நாம் பாரம்பரியம் என்கிறோம்.
பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இயேசுவின் போதனைகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
பைபிள் மட்டும் போதும் என்பவர்கள் நாற்காலியின் இரண்டு கால்களே போதும் என்று சொல்பவர்களைப் போன்றவர்கள்.
அன்னை மரியாள் சென்மப் பாவ மாசு இல்லாமல் உற்பவித்தாள் என்று நாம் சொன்னால் அவர்கள் கேட்கும் கேள்வி,
"அது பைபிளில் எங்கே இருக்கிறது?"
அது கத்தோலிக்கத் திருச்சபையின் போதனை.
இயேசுவால் சீடர்களுக்குச் சொல்லப்பட்டு சீடர்களால் ஆதிக் கிறிஸ்தவர்களுக்குச் சொல்லப் பட்ட மறை உண்மை.
ஆதிக் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது.
கி.பி. 382 இல் போப் டமாசஸ் I-ன் ஆட்சி காலத்தில் தான், இன்று கத்தோலிக்க பைபிளில் உள்ள 73 புத்தகங்கள் கொண்ட பைபிள் முதல் முறையாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
அது வரை வாழ்ந்த மக்களின் விசுவாச வாழ்வுக்கு ஆதாரம் பாரம்பரியம் தான்.
பாரம்பரியத்திலிருந்து தான் பைபிள் பிறந்தது.
இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டு,
"இது தாய் இல்லாமல் பிறந்த குழந்தை"
என்று சொன்னால் எப்படி?
கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைதான் இயேசுவின் முழுமையான போதனை.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment