"நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்." (அரு.10:30)
"தாத்தா, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். மிகவும் கடினமான கேள்வி. போதிய முன்னுரைக்குப் பின் கேட்டால்தான் கேள்வியே விளங்கும். ஆகவே முன்னுரையில் போது குறுக்கே பேசக் கூடாது."
"' முன்னுரைக்கு முன்னுரையா?"
"தாத்தா, முதலில் கவனிங்க.
பரிசுத்த தம திரித்துவத்தில் மூன்று ஆட்கள், ஒரே கடவுள்.
மூவருக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை.
நம்ம இரண்டு பேருக்குள் ஒரே மாதிரியான சித்தம் இருக்கலாம், ஒரே சித்தம் இருக்க முடியாது.
ஆனால் தந்தை, மகன், தூய ஆவி மூவருக்கும் ஒரே சித்தம்.
தந்தையின் விருப்பமும் மகனின் விருப்பமும் அதே விருப்பம் தான்.
இப்போ கேள்வி.
கெத்சமனி தோட்டத்தில் மகன் செபிக்கும் போது,
"தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்.
ஆனாலும்
"என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்"
என்று செபித்தார்.
துன்பக் கிண்ணம் அகல வேண்டும் என்பது மகனின் விருப்பமானால் அதுதானே தந்தையின் விருப்பமாக இருக்க வேண்டும்!
"என் விருப்பப்படி அல்ல;
உம் விருப்பப்படியே" என்று சொல்லும் போது இருவருக்கும் வெவ்வேறு விருப்பம் மாதிரி தெரியல?
இப்போ பதில் சொல்லுங்க."
"உனது முன்னுரை முழுமையாக இல்லை. இப்போ நான் கேட்கிற கேள்விக்குச் சரியான பதில் சொல்லி விட்டால் அது முழுமையாகும்."
"சரி, கேளுங்கள்."
"'இறுதி இரவு உணவின்போது இயேசு சீடர்களைப் பார்த்து,
"நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்" என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்.
ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்."(அரு.14:28). என்று சொல்கிறார்.
தம திரித்துவத்தின் மூன்று ஆட்களும் சமமானவர்கள்.
Three persons of the Holy Trinity are co-equal.
ஆனால்,
"தந்தை என்னைவிடப் பெரியவர்."
என்று இயேசு சொல்கிறார்.
உறுதியாக இயேசு பொய் சொல்ல மாட்டார்.
உன் விளக்கம் என்ன?"
"தாத்தா, தம திரித்துவக் கடவுள் நித்தியமானவர். துவக்கமும், முடிவும் இல்லாதவர்.
மூன்று ஆட்களில் மகன் கபிரியேல் தூதருடைய இறைச் செய்தியை அன்னை மரியாள் ஏற்றுக் கொண்டவுடன் அவள் வயிற்றில் மனிதனாக உரு எடுத்தார்.
கடவுள் மனிதனாக உரு எடுத்தார்.
இயேசு முழுமையாகக் கடவுள்,
(Fully God)
முழுமையாக மனிதன்.
(Fully Man)
முழுமையாக மனிதன் என்றால் பாவம் தவிர மனிதனுக்குரிய அத்தனை பண்புகளையும், பலகீனங்களையும் (பசி, தாகம், சோர்வு, வலி, துக்கம், கவலை, பயம்) உடையவர்.
பிறப்பும், இறப்பும் உள்ளவர்.
மனித சுபாவத்தில் அவருக்கு துவக்கமும் இருந்தது, முடிவும் இருந்தது.
பயம் என்ற மனித பலகீனத்தை அவரே ஏற்றுக் கொண்டார்.
துன்பப் படக் கூடியவர்.
இப்பண்புகள் தேவ சுபாவத்தில் இருக்க முடியாது.
உங்களுக்குத் தெரியும் மனிதன் கடவுளை விட தாழ்ந்தவன் என்று.
இறைமகன் ஆள் ஒருவர்,
அவருக்கு சுபாவம் இரண்டு,
தேவ சுபாவம், மனித சுபாவம்.
"கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.
ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,
சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
(பிலிப்பியர் 2:6-8)
நமக்காக, நமது மீட்புக்காக
கடவுள் வடிவில் விளங்கிய இயேசு அடிமையின் வடிவை ஏற்று தம்மையே மனித நிலைக்கு தாழ்த்திக்கொண்டார்.
இறை வார்த்தையைக் கூர்ந்து கவனியுங்கள்,
தம்மையே மனித நிலைக்கு தாழ்த்திக்கொண்டார்.
Underline தாழ்த்தி.
மனித உடலும், மனித ஆன்மாவும் உள்ள, தன்னையே தாழ்த்திக் கொண்ட, மனுமகனாகிய இயேசுவை விட,
தேவ சுபாவம் மட்டுமே உள்ள தந்தை பெரியவரா, சிறியவரா?
கவனியுங்கள், தந்தையின் நிலை அப்படியே இருக்கிறது.
தேவ சுபாவத்தில் மகனின் நிலையும் அப்படியேதான் இருக்கிறது.
ஆனால் மகன் மனிதனாகப் பிறந்து, மனித சுபாவத்தில் தன்னையே தாழ்த்திக் கொள்கிறார்.
முழுமையாக மனிதனான இயேசு
"முழுமையாக கடவுளான .தந்தை என்னைவிடப் பெரியவர்.".
என்று சொன்னதில் தவறு இல்லையே!
தேவ சுபாவத்தில் தந்தையும் மகனும் சமம்.
மனித சுபாவத்தில்?
தேவ சுபாவம் உள்ள தந்தை மனிதனாகிய மகனை விடப் பெரியவர்.
இறைமகனாகிய இயேசுவுக்குள் இரண்டு சுபாவங்களும் முழுமையாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன.
தாத்தா, இயேசு கடவுள் and மனிதன்.
"தந்தை என்னைவிடப் பெரியவர்."
என்று சொன்னவர் மனிதனாகிய இயேசு.''
"'இப்போ, கெத்சமனி தோட்டத்துக்கு வா."
"வந்து விட்டேன் "
"'இப்போது உன் கேள்விக்கு நீயே பதில் சொல்லி விடலாம்.''
"புரியுது, தாத்தா.
கடவுள் மரியாளின் வயிற்றில் மனிதனாகப் பிறந்தார்.
மரியாளின் வயிற்றில் மனிதனாகப் பிறந்தது கடவுள், ஆகவே மரியாளைக் கடவுளின் தாய் என்கிறோம்.
கடவுள் சாப்பிட்டார், மனித சுபாவத்தில். (தேவ சுபாவத்தில் சாப்பிட முடியாது.)
கடவுள் வளர்ந்தார், மனித சுபாவத்தில்.(தேவ சுபாவத்தில் வளர முடியாது.)
கடவுள் பாடுகள் பட்டார், மனித சுபாவத்தில். (தேவ சுபாவத்தில் பாடுகள் பட முடியாது.)
பெரிய வியாழனன்று இரவு உணவிற்குப் பின் கடவுள் கெத்சமனி தோட்டத்திற்கு வந்தார், மனித சுபாவத்தில்.
இறைமகனாகிய கடவுள் தந்தையை நோக்கி செபித்தார்,
மனித சுபாவத்தில்.
தேவ சுபாவத்தில் இயேசுவின் சித்தமும் தந்தையின் சித்தமும் ஒரே சித்தம்.
கடவுளாகிய இயேசுவும் மனிதனாகிய இயேசுவும் ஒரே ஆளாக இருந்ததால் மனிதனாகிய இயேசுவின் சித்தம்
கடவுளாகிய இயேசுவின் சித்தத்துக்கு உட்பட்டு தான் இருந்தது.
ஆனால் கடவுளின் சித்தத்துக்கு எதிராக நாம் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக
இயேசு பயப்படவும் இரத்த வியர்வை வியர்க்கவும் வேண்டும் என்பது
திரி ஏக கடவுளின் நித்திய காலத் திட்டம்.
அதன்படி தான் பயம் என்ற மனித பலகீனத்தை இயேசு ஏற்றுக் கொண்டார்.
மனிதனாகிய இயேசு அன்று படப்போகும் பாடுகளின் வேதனையை நினைத்து பயப்பட ஆரம்பித்தார்.
பயத்தினால் இரத்த வியர்வை வியர்க்க ஆரம்பித்தது.
முழுமையாக மனிதனான (fully man) இயேசுவின் சித்தம் துன்பக் கிண்ணத்திலிருந்து விடுதலை பெற ஆசித்தது.
ஆனாலும் மனிதனாகிய இயேசு கடவுளாகிய தந்தையை நோக்கி,
""என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்"
என்று கூறினார்.
தேவ சுபாவத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஒரே விருப்பம் தான்.
இரத்தவியர்வை சிந்தி பாடுபட்டவர் இறை மகனாகிய கடவுள்தான், மனித சுபாவத்தில்.
இறைமகன் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் படத் தீர்மானித்தார், நித்திய காலத்திலிருந்தே.
ஆனால் தேவ சுபாவத்தில் பாடுகள் பட முடியாது.
அதனால் மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டு, அதன் மூலம் பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.
பிலாத்துவால் விசாரிக்கப் பட்டதும்,
மரணத் தீர்ப்பு இடப்பட்டதும், சிலுவையைச் சுமந்து சென்றதும், சிலுவையில் அறையப்பட்டதும், மரித்ததும்
இறை மகனாகிய கடவுள்தான், எல்லாம் மனித சுபாவத்தில்.
நமது முதல் பெற்றோர் பாவம் செய்தபோதே பாவப் பரிகாரம் செய்ய மகன் அன்னை மரியாளின் வயிற்றில் மனிதனாகப் பிறக்கப் போவதை தந்தை இறைவன் முன் அறிவித்து விட்டார்.
அது அவருடைய நித்திய காலத் திட்டம்.
கடவுள் துவக்கம் இல்லாதவராகையால் அவரது திட்டங்களும் துவக்கம் இல்லாதவை.
மனித குலத்தைப் படைக்க நித்திய காலமாகத் திட்டமிட்ட போதே பாவப் பரிகாரமாக பட வேண்டிய பாடுகளையும் திட்டமிட்டு விட்டார்.
நம்மீது எவ்வளவு அன்பு இருந்தால் நாம் பாவம் செய்வோம் என்பது தெரிந்திருந்தும் நம்மைப் படைத்திருப்பார்.
நித்திய காலமாகத் தந்தையும் மகனும் ஒன்றாய் இருக்கிறார்கள்.
நாமும் அவர்களோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ இவ்வுலகில் நம்மைத் தயாரிப்போம்."
"'உனது கேள்விக்கு உரிய பதிலைச் சொல்லி விட்டாயா?"
"இவ்வளவு நேரமும் எதைச் சொன்னேன்?"
"'உனது கேள்வியைத் திரும்பவும் சொல்லு."
"தந்தைக்கும் மகனுக்கும் ஒரே விருப்பமாக இருந்தால்,
ஏன்
"என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று சொன்னார்?
"இப்போ கேள்விக்கு உரிய பதிலை மட்டும் சொல்லு.
Answer to the point."
"தந்தை ஆள் ஒருவர், சுபாவமும் ஒன்று, தேவ சுபாவம்.
மகன் ஆள் ஒருவர்,
சுபாவம் இரண்டு.
1. தேவ சுபாவம்.
2. மனித சுபாவம்.
தேவ ஆளாகிய மகன் கெத்சமனி தோட்டத்துக்குப் போனது மனித சுபாவத்தில்.
தந்தையிடம் செபித்தது மனித சுபாவத்தில்.
பாடுகள் படத் தீர்மானித்தது தேவ சுபாவ விருப்பம். (Jesus is fully God)
பாடுகளிலிருந்து விடுதலை பெற விரும்பியது மனித சுபாவ விருப்பம்.(Jesus is fully Man)
போதுமா?"
"'போதும். மனிதர்களாகிய நாம் தேவ விருப்பப்படி நடப்போம்.
நிலை வாழ்வு பெறுவோம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment