Saturday, May 24, 2025

"இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள் மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம்."(திருத்தூதர் பணிகள் 15:28)



"இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள் மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம்."
(திருத்தூதர் பணிகள் 15:28)

திருச்சபையின் தலைவரான இராயப்பர் அந்தியோக்கியாவில் வாழ்ந்து வந்த புற இனத்து கிறித்தவர்களுக்கு சின்னப்பர், பரனபா, யூதா, சீலா ஆகியோர் மூலம்    அனுப்பிய கடிதத்தின் சில வரிகள் மேலே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சின்னப்பர் புற இனத்தவரின் அப்போஸ்தலர் என்று அழைக்கப் படுகிறார்.

புற இனத்தவர் என்றால்?

இயேசு பிறந்தது யூத இனத்தில், ஆனால் யூதர்களுக்காக மட்டும் பிறக்கவில்லை.

உலகில் வாழும் அனைத்து மக்களும் மீட்புப் பெறுவதற்காகப் பிறந்து, பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

யூதர்கள் அல்லாத மற்ற இனத்தவர் புற இனத்தவர் என்று அழைக்கப்பட்டனர்.

கிறித்தவத்தை யூதர்களும், புற இனத்தவரும் பின்பற்றினர்.

யூதர்கள் மோசேயின் திருச்சட்டப்படி வாழ்ந்து கொண்டிருந்தவர்கள்.

கிறித்தவத்தை ஏற்றுக் கொண்ட பிறகும் திருச்சட்ட விதியாகிய விருத்த சேதனம்  செய்தார்கள்.
மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள்.

இயேசு யூதர் என்ற முறையில் விருத்த சேதனம் செய்தார்.

ஆனால் மீட்புப் பெற விருத்த சேதனம் செய்ய வேண்டும் என்று அவர் போதிக்கவில்லை.

மீட்புப் பெற இறைவனையும், பிறரையும் நேசிக்க வேண்டும் என்று தான் போதித்தார்.

ஆனால் சில யூதர்கள் புற இனத்தவரும் விருத்த சேதனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்படி வலியுறுத்துவது தவறு, இயேசுவின் போதனைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்த இராயப்பர் ஒரு கடிதம் எழுதி, அதை சின்னப்பர் மூலம் அந்தியோக்கியாவில் வாழ்ந்த புற இனத்து கிறித்தவர்களுக்கு அனுப்பி வைத்தார்.

"இன்றியமையாதவற்றை" கட்டாயம் பின்பற்ற வேண்டிய இயேசுவின் போதனைகளைக் குறிக்கிறது.

"வேறு எந்தச் சுமையையும்" என்ற வார்த்தைகள் திருச்சட்ட விதியாகிய விருத்த சேதனத்தைக் குறிக்கின்றன.

"தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம்." என்ற வார்த்தைகள் 

அப்போது எருசலேமில் நற் செய்தியை அறிவித்துக் கொண்டிருந்த அப்போஸ்தலர்களான இராயப்பரும், யாக்கோபும் தூய ஆவியின் தூண்டுதலால் எடுத்த முடிவைக் குறிக்கின்றன.

சின்னப்பர் ஒரு பரிசேயர். ஆனால் புற இனத்தவர் விருத்த சேதனம் செய்ய வேண்டும் என்ற கருத்தை ஆதரிக்காதவர்.

இதைப்பற்றி முடிவாகக் கூற அப்போது எருசலேமில் இருந்த திருச்சபையின் தலைவரான இராயப்பரை அணுகினார்.

அப்போது எருசலேமில் ஆயராக   இருந்தவர் யாக்கோபு.

அவர்களுடைய ஆலோசனைப்படி எடுக்கப் பட்ட விருத்த சேதனம் தேவையில்லை என்ற முடிவை புற இனத்தாருக்கு அறிவிக்கிறார்.

இன்றைய வாசகம் விருத்த சேதனத்தைப் பற்றியது என்றாலும் வேறு சில உண்மைகளும் இதில் மறைந்து கிடக்கின்றன.

1. இயேசுவால் நிறுவப் பட்ட கத்தோலிக்க திருச்சபையில் என்ன முடிவாக இருந்தாலும் அதை தீர்மானிக்க வேண்டியது பாப்பரசர் தான்.

அதனால்தான் அந்தியோக்கியாவில் பணிபுரிந்து கொண்டிருந்த சின்னப்பரும், பர்னபாவும் இதைப் பற்றிப் பேச எருசலேமில் இருந்த இராயப்பரிடம் வந்தார்கள். இராயப்பர்தான் முடிவெடுத்தார், ஆயர் யாக்கோபு அவருக்கு ஆலோசனை நல்கினார்.

திருச்சபையின் வரலாற்றில் 
எருசலேம் சங்கம் தான் முதல் சங்கம்.

இன்றும் அதைப் பின்பற்றி பாப்பரசர் ஆயர்களின் உதவியோடு சங்கம் கூட்டி தான் விசுவாசம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கிறார்.

2. பழைய ஏற்பாட்டின் திருச்சட்டத்தை மோசே வழியாக மக்களுக்குக் கொடுத்தவர் கடவுள் தான்.

ஆகவேதான் இயேசு,

"திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். 
(மத்தேயு நற்செய்தி 5:17)
என்கிறார்.

இயேசுவின் கருத்துப்படி சட்டத்தின் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும்,
வெறுமனே எழுத்தல்ல.

We must observe the Spirit of the law, not merely its letter.

பரிசேயர்கள் திருச்சட்டத்தின் எழுத்துப்படிவாழ்வதிலேயே குறியாக இருந்தார்கள்.

இயேசு ஓய்வு நாளில் புதுமை செய்து நோயாளிகளைக் குணமாக்கியதைக் கூட சட்ட விரோதம் என்றார்கள்.

ஓய்வு நாளில் இறைப்பணி மட்டும் செய்ய வேண்டும் என்பது சட்டத்தின் நோக்கம்.

பிறரன்புப் பணி இறைப் பணிதான். ஆகவேதான் ஓய்வு நாளிலும் இயேசு நோயாளிகளைக் குணமாக்கினார்.

நாம் ஞாயிறுத் திருப்பலிக்குப் போய்க் கொண்டிருக்கும் போது வழியில் ஒருவர்  மயங்கிக் கிடந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?

மயங்கிக் கிடப்பவரை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

அவரை அப்படியே போட்டுவிட்டு கோயிலுக்குப் போய் விடக்கூடாது.

3. வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை ஆலயப் பணிக்குக் கொடுக்க வேண்டும் என்பது திருச்சட்டம்.

அதை வேண்டாம் என்று இயேசு சொல்லவில்லை.

சட்டத்தின் நோக்கம் ஆலயப் பணிக்கு உதவுவதுதான்.

தாய்த் திருச்சபை,

"நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும்"

என்று போதிக்கிறது. பத்தில் ஒரு பகுதி என்று கூறவில்லை.

இயேசுவின் போதனைதான் திருச்சபையின் போதனை.

4. என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.

மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். 

நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். 
(விடுதலைப் பயணம் 20:3-5)

இது மோசே வழியாக கடவுள் கொடுத்த சட்டம.

இந்த வசனங்களைப் பிடித்துக் கொண்டு நமது பிரிவினை சகோதரர்கள் நாம் புனிதர்களுக்கு  சுருபங்கள் செய்வதைச் சிலை வழிபாடு என்கிறார்கள்.

ஆண்டவருடைய வார்த்தைகளின் நோக்கம் என்ன?

"நான் மட்டுமே உனது தெய்வம.
என்னை மட்டுமே நீங்கள் வழிபட வேண்டும்.

வழிபடுவதற்காக யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்கக் கூடாது."

இறைவனுக்குச் செய்ய வேண்டிய வழிபாட்டைச் செய்வதற்காக சிலைகளை உருவாக்கக் கூடாது.

சட்ட மீறல் சுருபங்களைச் செய்வதில் இல்லை, இறைவனுக்குச் செய்ய வேண்டிய வழிபாட்டைச் செய்வதற்காக சிலைகளை உருவாக்குவதில் இருக்கிறது.

வகுப்பில் பாடநேரத்தில் ஒரு மாணவன் தூங்கிக் கொண்டிருக்கிறான்.

அவனை எழுப்பி விட்டு ஆசிரியர் கேட்கிறார்,

"பெஞ்ச் போடப்பட்டிருப்பது உட்கார்ந்து பாடத்தைக் கவனிக்கவா? உட்கார்ந்து தூங்கவா?"

சட்ட மீறல் பெஞ்ச் போடப்பட்டிருப்பதில் இல்லை,
தூங்குவதில்தான் இருக்கிறது.

நாம் சுருபங்களைச் செய்வது இறைவனுக்குச் செய்ய வேண்டிய வழிபாட்டை அவற்றுக்கு செய்வதற்கு அல்ல.

புனிதர்களை வணங்குவதில் நமக்கு உதவியாய் இருப்பதற்கு.

நாம் வணங்குவது புனிதர்களை, 
சுருபங்களை அல்ல.

மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்.

தாயின் கையில் மகனுடைய புகைப்படம் இருக்கிறது.

மகனைப் பார்க்க ஆசை வரும்போது அவள் மகனின் புகைப்படத்தைப் பார்க்கிறாள்.

அவள் புகைப்படத்துக்கு முத்தம் கொடுத்தால், மகனுக்குதான் கொடுக்கிறாள்.

நாம் அன்னை மரியாளைப் பார்த்ததில்லை.

அவளுடைய சுருபத்தைப் பார்க்கும் போது அவளுடைய முகம் மனதில் பதிகிறது. அவளை நோக்கி செபிக்க இது உதவியாக இருக்கும்.

நாம் வணங்குவது சுருபத்தை அல்ல, அன்னை மரியாளை.

நாம் செபிப்பது சுருபத்திடம் அல்ல, அன்னை மரியாளிடம்.

நாம் யாரையாவது நினைத்து பார்க்கும் போது அவர்களுடைய முகம் தான் ஞாபகத்துக்கு வரும். 

அன்னை மரியாளை நாம் நினைத்து பார்க்க வேண்டும் என்றால் அவளது முகம் ஞாபகத்துக்கு வர வேண்டும். 

ஆனால் நாம் மரியாளின் முகத்தை பார்த்ததில்லை. 

நினைப்பதற்கு உதவியாக சுருபம்.

அன்னையின் முகத்தை சுருபத்தில் கொண்டு வர முடியாது, ஆயினும் கொஞ்சம் உதவியாக இருக்கும்.

இது நமது பிரிவினை சகோதரர்களுக்குப் புரியும், ஏனேனில் அவர்களது வீட்டில் அவர்களின் முன்னோரின் புகைப்படங்கள் இருக்கின்றன.

ஆனால் நம்மைக் குறை சொல்வதற்காக புரிவதைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

நாம் இறைவனுக்குக் கொடுக்கும் ஆராதனையைப் புனிதர்களுக்குக் கொடுக்கவில்லை, அவர்களை வணங்குகிறோம்.

We worship only God.
We venerate the saints.

நம்மைக் குறை கூற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் நமது சுருபங்களைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.

அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. 

நமது நோக்கம் சரியாக இருக்கும் வரை மற்றவர்களுடைய குறை கூறலைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment