"என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்."
(அரு.15:9)
ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவுரை கூறும்போது இன்னாரைப் போல் வாழுங்கள் என்பார்.
தான் தன் மனதில் யாரை உயர்வான இடத்தில் வைத்திருக்கிறாரோ அவரை மாணவர்களுக்கு முன்மாதிரியாக காண்பிப்பார்.
அன்பை மட்டுமே தன் போதனையின் மையமாகக் கொண்டிருந்த இயேசு,
""என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன்.
நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்."
நான் உங்கள் மேல் கொண்டுள்ள அன்பு என் தந்தையின் அன்பைப் போன்றது.
என் தந்தையின் விருப்பப்படி நான் நடப்பதன் மூலம் அவரது அன்பில் நிலைத்திருக்ககறேன்.
நான் உங்கள் மீது கொண்டுள்ள அன்பின் விளைவாக நீங்கள் என் விருப்பப்படி நடக்க வேண்டும்.
அப்படி நடந்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்."
வேறு வார்த்தைகளில்,
என் தந்தை என்னை அன்பு செய்கிறார். நான் என் தந்தையை அன்பு செய்கிறேன். எங்கள் இருவருக்கும் ஒரே அன்பு, ஒரே சித்தம். ஆகவே நான் அவரது
விருப்பப்படி நடக்கிறேன்.
(அவரது விருப்பமும் எனது விருப்பமும் ஒரே விருப்பம்தான்.)
நான் உங்களை அன்பு செய்வது போல நீங்கள் என்னை அன்பு செய்தால் எனது விருப்பப்படி நடப்பீர்கள்.
ஒருவர் யாரை அன்பு செய்கிறாரோ அவர் விருப்பப்படி நடப்பார்.
தந்தைக்கும் மகனுக்கும் ஒரே அன்பு, ஒரே சித்தம்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலவும் ஒரே அன்பின் காரணமாக அவர்களுடைய சித்தமும், அதாவது, விருப்பமும் ஒன்றாக இருக்கிறது.
தந்தை விரும்புவதையே மகனும் விரும்புகிறார்.
இயேசுவுக்கும் சீடர்களுக்கும் இடையே நிலவும் அன்பு அவர்களுடைய விருப்பத்தில் பிரதிபலிக்க வேண்டும்.
பன்னிருவரை மட்டுமல்ல நம்மையும் இயேசுவின் சீடர்களாக நினைத்துக் கொண்டு தொடர்ந்து தியானிப்போம்.
இயேசு செய்ய விரும்புவதை சீடர்களாகிய நாமும் செய்ய விரும்ப வேண்டும்.
இயேசு செய்வதை நாமும் செய்ய வேண்டும்.
இயேசுவைப் போல நாமும் பகைவர்களை நேசிக்க வேண்டும்.
இயேசுவைப் போல நாமும் குற்றம் செய்பவர்களை மன்னிக்க வேண்டும்.
இயேசுவைப் போல நாமும் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்
இயேசுவைப் போல நாமும் மற்றவர்களுக்காக நமது உயிரைத் தியாகம் செய்ய வேண்டும்.
இயேசுவைப் போல நாமும் மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.
தந்தையைப் போல மகன்.
மகனைப் போல சீடர்கள், நாம்.
இயேசு பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.
நாம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்கிறோமா?
இயேசு சென்ற இடமெல்லாம் நன்மையே செய்தார்.
நாம் எங்கு சென்றாலும் எல்லோருக்கும் நன்மை செய்கிறோமா?
இயேசு கெத்சமனித் தோட்டத்தில் தனது சித்தமல்ல, தந்தையின் சித்தமே நிறைவேறட்டும் என்றார்.
நமது செபத்தில எப்படி வேண்டுகிறோம்?
"ஆண்டவரே தேர்வு எழுதியிருக்கிறேன்.
உமக்கு விருப்பம் இருந்தால் வெற்றியைத் தாரும் என்று வேண்டுகிறோமா? அல்லது, தேர்வில் வெற்றியைத் தாரும் என்று மட்டும் வேண்டுகிறோமா?
அனேக சமயங்களில் இறைவனின் விருப்பத்தை பற்றி நாம் கவலைப்படுவதில்லை. நமது விருப்பம் நிறைவேற வேண்டும் என்பது மட்டும் நமது விருப்பம்.
அதற்காகவே செபிக்கிறோம்.
அதற்காகவே
திருத்தலங்களுக்குச் செல்கிறோம்.
நமது விருப்பம் நிறைவேறிவிட்டால் இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்.
ஆனால் நிறைவேறாவிட்டாலும் நன்றி கூற வேண்டும்.
என்ன நேர்ந்தாலும் நன்றி கூற வேண்டும்.
பிலாத்துவின் அரண்மனையில் இயேசுவைக் கட்டி வைத்து அடித்தார்கள். அடிகள் அத்தனையையும் வாங்கிக் கொண்டார்.
நம்மை யாராவது அடித்தால் இயேசுவைப் போல ஏற்றுக் கொள்கிறோமா?
சிலுவைப் பாதையில் இயேசுவுக்கு நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வையும் நினைத்துப் பார்ப்போம்.
இயேசுவின் இடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்.
நினைத்துப் பார்ப்போம்.
இயேசுவைப் பற்றி தியானிக்கும் போது நம்மைப் பற்றியும் தியானித்துப் பார்ப்போம்.
கிறித்தவனாக வாழ்கிறோமா, கிறித்தவன் என்ற பெயரில் மட்டும் வாழ்கிறோமா, சிந்திப்போம்.
கிறித்தவன் கிறித்தவனாக வாழ வேண்டும், பெயரளவில் அல்ல.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment