"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்."(அரு.13:34)
"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்னும் கட்டளையை ஏன் இயேசு புதிய கட்டளை என்கிறார்?
"உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.
(மத்.22:39)
என்ற கட்டளையை இயேசு ஏற்கனவே கொடுத்து விட்டார்.
"நான் உங்களுக்குப் புதிய கட்டளையைக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்."
இயேசு நம்மை நேசிப்பது போல நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்பது புதிய கட்டளை.
பழைய கட்டளையில் நாம் நம்மீது கொண்டுள்ள அன்பு நமது பிறரன்புக்கு அளவுகோல்.
புதிய கட்டளையில் இயேசு நம்மீது கொண்டுள்ள அன்பு நமது பிறரன்புக்கு அளவுகோல்.
நாம் நம்மீது கொண்டுள்ள அன்பை சுய அன்பு என்று வைத்துக் கொள்வோம்.
இயேசு நம்மீது கொண்டுள்ள அன்பை இறையன்பு என்று வைத்துக் கொள்வோம்.
நாம் நம் மீது கொண்டுள்ள அன்பு அளவு உள்ளதுதான், ஏனென்றால் நாம் அளவுள்ளவர்கள்
ஆனால் இறையன்பு அளவில்லாதது.
அளவில்லாத வல்லமை வாய்ந்த கடவுள் சாதாரண மனிதனை மீட்பதற்காக
அவன் அளவுக்கு தன்னைத் தாழ்த்தி
அவனைப் போன்ற மனிதனாகப் பிறந்து,
அவனுக்காகப் பாடுகள் பட்டு மரிக்கும் அளவுக்கு அளவில்லாதது.
நம்மை நாம் நேசிக்கும் அளவுக்கு நம்மால் நமது பிறனை நேசிக்க முடியும்.
ஆனால் அளவில்லாத கடவுள் நம்மை நேசிக்கும் அளவுக்கு நம்மால் பிறனை நேசிக்க முடியுமா?
முடியும். எப்படி?
"ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்"
(மத்.5:48)
நம்மால் செய்ய முடியாததைச் செய்யும்படி இயேசு கேட்க மாட்டார்.
நமது முழுமையான முயற்சியைப் பயன்படுத்தி ஆன்மீகத்தில் வளர வேண்டும்.
பாத்திரம் சிறியதாக இருக்கலாம்.
ஆனால் அது நிறைய நீர் ஊற்றி வைக்கலாமே!
ஒரே ஆள் கிணற்றிலும் நீந்தலாம், கடலிலும் நீந்தலாம்.
கிணற்றில் நீந்தத் தேவையான முயற்சியை விட கடலில் நீந்த அதிக முயற்சி தேவை.
கிணற்றில் நீந்துவதை விட கடலில் நீந்துவது அதிக பெருமைக்குரியது.
நாம் நமக்குள்ளே நீந்துவதை விட இறைவனில் நீந்துவோம்.
இறைவனுக்குள் மூழ்கி அவர் அளவற்ற அன்பை அனுபவித்து அந்த அனுபவத்தை நமது பிறனோடு பகிர்ந்து கொள்வோம்.
அப்படிப் பகிரும் போது இறைவன் நம்மை நேசிப்பது போல நமது பிறனை நேசிப்போம்.
அப்படி நேசிக்கும் போது புதிய கட்டளைப்படி நடக்கிறோம்.
புதிய கட்டளைப்படி நடந்ததால்தான் சீடர்களும் இயேசுவைப் போல சிலுவையைச் சுமந்து, அதாவது, துன்பப்பட்டு வேத சாட்சிகளாக மரித்தார்கள்.
நாமும் நமது பிறரன்பின்போது இயேசுவைப் போல சிலுவையை ஏற்று அதிலேயே மரிப்போம், இறைவனின் மகிமைக்காக.
இயேசுவின் அன்பினால் இயக்கப்பட்டு வாழ்பவன் இயேசு துன்பத்தை ஏற்றுக்கொண்டது போலவே ஏற்றுக்கொள்வான்.
துன்பத்தை மனம் உவந்து ஏற்றுக் கொண்ட புனிதை பர்ணஞானம் அருட்சகோதரி அல்போன்சா.
துன்பத்தை நாம் பார்க்கும் பார்வைக்கு ஏற்ப அதன் தன்மை மாறும்.
மண்ணகக் கண் கொண்டு பார்த்தால் துன்பத்தின் வலி மட்டும் தான் தெரியும்.
ஆனால் விண்ணகக் கண் கொண்டு பார்த்தால் துன்பம் பேரின்பத்தின் ஊற்று என்பது புரியும்.
விண்ணகத்தில் பேரின்பத்தின் அளவைத் தீர்மானிப்பதே மண்ணகத்தின் நாம் படும் துன்பத்தின் அளவுதான்.
உலகில் வாழும் போது இறைவனுக்காக அதிகமான சிலுவைகளை ஏற்றுக் கொண்டவர்கள் மோட்சத்தில் மிக அதிகமான பேரின்பத்தை அனுபவிப்பார்கள்.
தண்ணீர் எடுக்கப் போகிறவன் பெரிய பாத்திரத்தை எடுத்துச் சென்றால் அதிகமான தண்ணீரை எடுத்து வருவான்.
சிறிய பாத்திரத்தௌ எடுத்துச் சென்றால் அது நிறைய எடுத்து வந்தாலும் பெரிய பாத்திரம் கொள்ளும் அளவு அது கொள்ளாது.
நமது ஆன்மாவாகிய பாத்திரத்தை சிலுவைகளைக் கொண்டு பெரியதாக்குவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment