Saturday, May 17, 2025

"நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" (அரு.13:35)



"நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" (அரு.13:35)

நான் பணி புரிந்த பள்ளி இருந்தது ஆவுடையானூரில்.

பேருந்தில் ஏறுவதற்காக பாவூர்சத்திரத்தில் நின்று கொண்டிருந்தேன்.

கைவசம் ஒரு பெரிய Bundle இருந்தது. பள்ளிக் கூட 
Store க்காக வாங்கிய பொருட்கள் அடங்கியது.

பாவூர்சத்திரம் வழியாக மாணவர்கள் சைக்கிளில் போவது வழக்கம்.

ஏதாவது ஒரு மாணவனின் சைக்கிளில் Bundleஐ ஏற்றிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

பல சைக்கிள்கள் சென்று கொண்டிருந்தன.

ஒரு சைக்கிளை நிறுத்தினேன்.

"ஐயா, வணக்கம்."

"வணக்கம். இந்த பார்சலைக் கொண்டு போய் ஸ்டோர் வாசலில் வைத்து விடுகிறாயா."

"ஆகட்டும் ஐயா."

எந்த நம்பிக்கையில் பார்சலை அவன் கையில் கொடுத்தேன்?

நான் அவன் முகத்தைப் பார்க்கவில்லை.

உடையைப் பார்த்தேன்.

அவன் பள்ளிக்கூட சீருடை அணிந்திருந்தான்.

He was in his school uniform.

இன்றைய தியானம் நம்முடைய சீருடை பற்றி.

ஒரே சீருடை அணிந்தவர்கள் அதே பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

இயேசுவின் சீடர்களின் சீருடை எது?

Which is the uniform of the disciples of Jesus?

How can we be uniform in our discipleship to Jesus?

இந்தக் கதையைக் கொஞ்சம் கவனியுங்கள்.

ஒரு நண்பருக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது.

ஒவ்வொரு நாளும் காலையில் யாராவது ஒருவருக்கு உணவு கொடுத்து விட்டு தான் அவர் சாப்பிடுவார்.

இது அவருடைய பிறரன்பின் அடையாளம்.

ஒரு நாள் காலையில் உணவு தயாரித்துவிட்டு சாப்பிட ஆள் பிடிப்பதற்காக வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்.

50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் வந்து கொண்டிருந்தார்.

''ஐயா கொஞ்சம் இங்கே வாங்க."

"என்ன விடயம்?"

"வீட்டிற்குள் வந்து காலை உணவு அருந்திவிட்டு போங்கள்."

அவர் மறுப்புச் சொல்லவில்லை.

அவர் சாப்பிட அமர்ந்ததும் நண்பர் அவரிடம், 

"என்னோடு சேர்ந்து ஒரு சிறிய செபம் சொல்லுங்கள். சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பிக்கலாம்."

"எதற்காக செபம்?"

"இன்றைய உணவை தந்த இறைவனுக்கு நன்றி கூறிவிட்டு சாப்பிடலாம்."

"எனக்கு இறை நம்பிக்கை கிடையாது. உணவு தருபவர் நீங்கள்.

உங்களுக்கு நன்றி கூறுகிறேன்."

''இறைவனுக்காகத்தான் உங்களுக்கு உணவு தருகிறேன். 

உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டால் நீங்கள் போகலாம். 

உணவு கொடுக்க வேறு ஆளை பார்த்துக் கொள்கிறேன்."

அந்த ஆளும் மறு வார்த்தை சொல்லாமல் எழுந்து போய்விட்டார். 

நண்பர் இறை நம்பிக்கை உள்ள ஒருவரைப்  பார்ப்பதற்காக பழையபடி வீட்டு வாசலுக்கு வந்தார்.

தெருவில் இயேசு வந்து கொண்டிருந்தார்.

இதை எதிர்பாராத நண்பர்,

"ஆண்டவரே வாருங்கள்.  காலை உணவு தயார்.

வாருங்கள் சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்."

"நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் உன் வீட்டுக்குச் சாப்பிட வந்தேன். நீ சாப்பாடு தராமல் போகச் சொல்லி விட்டாய்!"

"ஆண்டவரே, கொஞ்ச நேரத்துக்கு முன்னால் என் வீட்டுக்குச் சாப்பிட வந்தது ஒரு நாத்திகன், கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.

அதனால்தான் சாப்பாடு கொடுக்கவில்லை.

உங்களை நம்பாதவர்களுக்கு எப்படி, ஆண்டவரே, சாப்பாடு கொடுப்பேன்?"

"அவனுக்குக் கடவுள் இல்லை என்று எனக்கும் தெரியும்.

ஆனாலும் 50 ஆண்டுகளாக நான் அவனுக்குச் சாப்பாடு கொடுத்திருக்கிறேன்.

ஏனெனில் அவனைப் படைத்ததே நான்தான்.

அவனையும் என் சாயலில்தான் படைத்தேன், உன்னைப் படைத்தது போல.

யார் வந்தாலும் அவனில் என் சாயலைப் பார்.

யாருக்கு எதைச் செய்தாலும் அதை எனக்கே செய்கிறாய்."

"ஆண்டவரே, இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?"

"உடனே எங்கும் தேடி, அவனைக் கண்டு பிடித்து, அவனுக்குச் சாப்பாடு கொடு.

அப்புறம் வந்து என்னிடம் பேசு."

"ஆண்டவரே, ஒரே ஒரு கேள்வி.

அவனுக்குச் சாப்பாடு கொடுத்தால் உமக்குதான் தருகிறோம்.

அப்படியானால் உமக்குச் சாப்பாடு தந்தால் அவனுக்குக் கொடுத்தது மாதிரி தானே."

"இப்படிச் சொல்லி தான் அநேகர் தங்களையே ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். 

வருமானத்தில் ஒரு பகுதியை கோவில் உண்டியலில் போட்டால் போதும்,

ஏழைகளுக்கு எதுவும் கொடுக்க வேண்டாம் என்று தவறாக எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

சைக்கிளில் ஏதாவது ஒரு சக்கரத்தில் ப்ரேக் பிடித்தாலும் அடுத்ததும் உருளாது.

இரண்டு கட்டளைகளில் ஏதாவது ஒன்றைக் கடைபிடிக்கா விட்டாலும் இரண்டையும் கடைபிடிக்காதது போல் தான்.

அயலானுக்கு உதவாமல் அந்தப் பணத்தை கோயில் உண்டியலில் போட்டால் அது காணிக்கை அல்ல.

அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

அதனால் உனது கருத்தை நியாயப் படுத்துவதை விட்டு விட்டு, நான் சொன்னதைக் செய்."

கதையின் கருத்து புரிந்திருக்கும்.

ஒரு தாய் ஐந்து பிள்ளைகளைப் பெற்றால் ஐந்தும் அவளுடைய பிள்ளைகள்தான்.

ஐவரும் ஒரே மாதிரியான குணம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. 

அவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள்.

எப்படி இருந்தாலும் அவர்கள் ஒரே தாய் பிள்ளைகள் தான். 

தாய் எல்லாப் பிள்ளைகளையும் நேசிப்பாள்.

பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். 

கடவுள் தான்  படைத்த அனைவரையும், அவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருந்தாலும், அளவில்லாத விதமாய் நேசிக்கிறார். 

அவர் நேசிப்பது போலவே நாமும் அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

அனைவரையும் நேசித்தால்தான் நாம் இயேசுவின் சீடர்கள்.

பிறரன்பு செயல்கள்தான் இறைவனின் பிள்ளைகள் அனைவருக்குமான சீருடை.

இந்த சீருடையை அணிந்தவர்கள் தான் இயேசுவின் சீடர்கள். 

நாம் இயேசுவின் சீடர்களாக வாழ விரும்பினால் அவரையும், அவரால் படைக்கப்பட்ட அனைவரையும்  நேசிக்க வேண்டும்.

"நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்"

பிறரன்பு சீருடையை அணிபவர்கள் மட்டுமே விண்ணக அரசுக்குள் நுழைய முடியும்.

பிறரன்பு சீருடையோடு வாழ்வோம், இன்றும், என்றும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment