"உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப்பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது." (அரு.16:2)
இயேசு தனது பாடுகளுக்கு முந்திய இரவு, தனது சீடர்களுக்குத் தனது உடலையும், இரத்தத்தையும் உணவாகக் கொடுத்து விட்டு,
தன்னைப் பின் பற்றி வாழும் அவர்களுக்கு என்ன நடக்கும் என்று முன்னறிவிக்கிறார்.
"உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப்பார்கள்.
உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது.". என்கிறார்.
குருவுக்கு என்ன நேருமோ அதெல்லாம் சீடர்களுக்கும் நேரும்.
இயேசுவைப் போலவே அவர்கள் பாடுகள் பட வேண்டியிருக்கும்.
இயேசுவைக் கைது செய்து இழுத்துப் போவதைப் போலவே அவர்களையும் இழுத்துச் செல்வார்கள்.
அவர்களைப் பாடுபடுத்திக் கொல்வது இறைவனுக்கு ஆற்றும் பணி என்று நினைக்கும் காலம் வரும் என்கிறார்.
சட்டத்தை மீறுவது தவறு என்று நாம் நினைக்கிறோம்.
ஆனால் சட்டப்படி தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள்.
கொலை செய்வது பாவம்.
ஆனால் அரசின் திட்டப்படி
மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப் படுத்த வயிற்றில் வளரும் குழந்தையைக் கொல்லலாம் என்று சட்டப்படி நினைக்கிறவர்கள் இன்று கூட இருக்கிறார்களே!
தினமும் திருப்பலி நடக்கும் நமது ஆலயங்களைக்கூட கோர்ட் உத்தரவு பெற்று சட்டப்படி இடிக்கிறோம் என்று கூறுபவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள்.
ஆண்டவர் வாழும் ஆலயத்தை சட்டப்படி இடிப்பவர்களை மனம் திருப்பும்படி ஆண்டவரிடமே வேண்டிக் கொள்வோம்
சென்னையில் 25 ஆண்டுகளாக கிறித்தவர்கள் வழிபட்டு வரும் ஒரு ஆலயத்தை இடிக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்திருப்பதாகச் செய்தி ஒன்றைக் கேட்டேன்.
இயேசுவைச் சிலுவையில் அறையப் பிலாத்து அனுமதி கொடுத்ததற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வோம்,
கடவுளையே சிலுவையில் அறைந்தார்கள்.
அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
நம்மை அறைந்தாலும் ஏற்றுக் கொள்வோம், இயேசுவின் மகிமைக்காக.
பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார்.
ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார்.
நாம் உலகில் வாழும் போது எத்தனை துன்பங்கள் வந்தால் என்ன,
நாம் விண்ணகம் செல்லும் போது அத்தனையும் பேரின்பமாக மாறும்.
இப்போது நாம் துயருறலாம்.
ஆனால் மோட்சத்தில் கடவுளைக் காணும்போது நமது உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும்.
நமது மகிழ்ச்சியை யாரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது.
நம்மைப் பகைப்பவரகளால் நாம் துன்புறுத்தப்படும்போது இயேசுவுக்கும் அப்படியே நடந்தது என்பதை நினைவில் கொள்வோம்.
நாம் அதை ஏற்றுக் கொள்ளும் போது இயேசுவையே ஏற்றுக் கொள்கிறோம்.
நமது மத்திய அரசு கிறித்தவர்களுக்கு எதிரான அரசு.
மணிப்பூரில் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும்.
நமக்கும் அதே நடந்தால் குருவுக்கு நடந்ததுதான் சீடர்களுக்கும் நடக்கிறது என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்வோம்.
இயேசு பிறந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான மாசில்லாக் குழந்தைகளை ஏரோது கொன்றான்.
அதனால் குழந்தைகளுக்கு எந்த நட்டமும் இல்லை.
அவர்கள் மோட்சத்தில் இயேசுவோடு நித்திய பேரின்ப வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாமும் அப்படியே வாழ்வோம்.
லூர்து செல்வம்.
.
No comments:
Post a Comment