அதற்கு அவர், "ஆண்டவரே நீர் யார்?" எனக்கேட்டார். ஆண்டவர், "நீ துன்புறுத்தும் இயேசு நானே.
(திருத்தூதர் பணிகள் 9:5)
சவுல் யூத சட்டத்தை ஆழ்ந்து படித்த ஒரு பரிசேயர்.
இயேசு போதித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் இயேசுவை பார்த்ததாகத் தெரியவில்லை.
ஆனால் சீடர்கள் போதிக்க ஆரம்பித்தபின் கிறித்தவம் பரவுவதை அவர் தடுத்தார்.
கிறித்தவர்களைக் கைது செய்து யூத சட்டத்தின் முன் அவர்களை நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தார்.
ஆனால் இயேசு அவரது லட்சியத்தை ஒரு வினாடியில் தலைகீழாக மாற்றி விட்டார்.
சவுல் கிறித்தவர்களைக் கைது செய்ய தமஸ்கு நகருக்குச் சென்று கொண்டிருந்த போது
திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது.
அவர் தரையில் விழ, "சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார்.
அதற்கு அவர், "ஆண்டவரே நீர் யார்?" எனக்கேட்டார். ஆண்டவர், "நீ துன்புறுத்தும் இயேசு நானே.
நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்" என்றார்.
அதன் பின் சவுல் மனம் திரும்பி பவுலாக மாறினார், நற்செய்தியைப் போதிக்க ஆரம்பித்தார்.
இப்போது நாம் தியானத்துக்கு எடுத்துக் கொண்டது இயேசு கூறிய ஒரு வாக்கியத்தை மட்டுமே.
"நீ துன்புறுத்தும் இயேசு நானே."
சவுல் துன்புறுத்திக் கொண்டிருப்பது கிறித்தவர்களை.
ஆனால் இயேசு,
"நீ என்னையே
துன்புறுத்துகிறாய்" என்கிறார்.
"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள். (மத். 25:40)
என்ற இயேசுவின் வார்த்தைகளின்படி பார்த்தால் நாம் யாருக்கு என்ன செய்தாலும் இயேசுவுக்கே செய்கிறோம்.
"யாருக்கு" என்ற வார்த்தை இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களையும் குறிக்கும்.
இயேசுவின் தந்தையை "எங்கள் தந்தையே" என்று அழைக்கிறோம்.
அப்படியானால் மனிதர்கள் அனைவரும், நல்லவர் கெட்டவர் என்ற வேறுபாடின்றி, நமது சகோதரர்கள்.
இயேசு அனைவருக்காகவும் தான் பிறந்தார்,
அனைவருக்காகவும் தான் பாடுகள் பட்டார்,
அனைவருக்காகவும் தான் சிலுவையில் மரித்தார்.
அவர் அனைவரையும் நேசிப்பது போல நாமும் அனைவரையும் நேசிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.
இயேசுவின் சொற்படி நாம் மற்றவர்களை அன்பு செய்யும்போது இயேசுவை அன்பு செய்கிறோம்.
யாரையாவது வெறுத்தால் இயேசுவை வெறுக்கிறோம்.
இரண்டு சக்கர வாகனம் (சைக்கிள்) நகரும் போது இரண்டு சக்கரங்களும் நகரும்.
ஒரு சக்கரம் நகர்வதை நிறுத்தி விட்டால் அடுத்ததும் நின்று விடும்.
இறையரசில் நுழைய இயேசு கொடுத்திருக்கும் இரண்டு கட்டளைகளையும் அனுசரிக்க வேண்டும்.
"உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து."
"உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.
விண்ணக வாழ்வை அடைய வேண்டுமென்றால் இரண்டு கட்டளைகளையும் அனுசரிக்க வேண்டும்.
ஒன்றை அனுசரிக்காமல் அடுத்ததை அனுசரிக்க முடியாது.
உலகில் வாழும் அனைத்து மக்களும் நமக்கு அடுத்திருப்பவர்கள் தான்.
பன்னிருவரில் ஒருவர் யூதாஸ்.
இயேசு மற்றவர்களை நேசித்தது போல அவரையும் நேசித்தார்.
முத்தமிட்டு காட்டிக் கொடுத்த அவரை இயேசு "நண்பனே" என்று அழைத்தார்.
நாம் இயேசுவைப் பின்பற்றுபவர்கள்.
கிறித்தவத்தை இந்தியாவை விட்டு வெளியேற்றியே தீர்வோம் என்று கூறிக்கொண்டு மத்தியில் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளை நாம் என்ன சொல்லி அழைக்க வேண்டும்?
இயேசுவின் பார்வையிலிருந்து பார்த்தால் "நண்பர்களே" என்று அழைக்க வேண்டும்.
நம்மால் அழைக்க முடிகிறதா?
அழைத்தால் தான் நாம் கிறிஸ்தவர்கள்.
கிறிஸ்தவர்களை மட்டுமல்ல நாத்திகர்களைக் கூட நாம் வெறுத்தால் இயேசுவைத்தான் வெறுக்கிறோம்.
அவர்களையும் படைத்தவர் அவர்தான், அவர்களுக்காகவும் தான் அவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.
அவர்களும் மனம் திரும்பி இயேசுவை மீட்பர் என்று ஏற்றுக் கொள்கிற கத்தோலிக்க திருச்சபைக்குள் வர வேண்டும் என்பது தான் அவருடைய ஆசை.
நம்முடைய எண்ணமெல்லாம் இயேசுவின் ஆசையை நிறைவேற்றுவதில் மட்டும் குறியாக இருக்க வேண்டும்.
இயேசுவின் சிலுவை மரணத்துக்குக் காரணமாக இருந்த பரிசேயர்களையும், மறை நூல் அறிஞர்களையும், யூத மத குருக்களையும், அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசையும் அவர் உண்மையிலேயே நேசித்தார்.
அவர்களைப் படைத்தவரே அவர் தானே.
அவர்களைப் படைத்ததற்கு அவருடைய அன்பு தானே காரணம்.
அன்பு மயமானவரால்
தான் படைத்தவர்களை நேசிக்காமலிருக்க முடியுமா?
முடியாது.
ஆகவே தான் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதே அவர்களை மன்னித்தார்.
நாம் அவருடைய சீடர்கள்.
நாமும் நம்மை வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இயேசுவின் அன்புடன் மன்னித்து ஏற்றுக் கொள்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment