"வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது." (அரு.6:35)
நாம் உலகில் அழிந்து போகும் உணவுக்காக உழைக்கிறோம்.
கட்டப்பட்டு படித்து, பட்டம் பெற்று, அதன் உதவியால் வேலை வாங்கி இரவும் பகலும் உழைக்கிறோம்?
எதற்காக?
எண்சாண் உடம்பிலுள்ள ஒரு சாண் வயிற்றில் போட வேண்டிய உணவுக்காக.
அந்த உணவும் அழிந்து போகும், எண்சாண் உடம்பும் அழிந்து போகும்.
ஆண்டவர் சொல்கிறார்,
"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே"
இயேசுவே வாழ்வு தரும் உணவு.
நிலை வாழ்வு தரும் உணவு.
நித்திய பேரின்ப வாழ்வு தரும் உணவு.
இவ்வுணவைப் பெற கட்டப்பட்டு படித்து பட்டம் பெற வேண்டிய அவசியம் இல்லை.
வேலை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.
பாவம் செய்யாமல் இருந்தாலே போதும்.
பாவம் செய்யாமல் இருக்க பணம் தேவையில்லை.
அன்பு இருந்தாலே போதும்.
இயேசு "வாழ்வு தரும் உணவு நானே." என்று சொல்வதற்கு முந்திய நாள் ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார்.
அப்பங்களைக் கொண்டு
ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது கலிலேயா கடலின் கிழக்குக் கரையில்.
''வாழ்வு தரும் உணவு நானே." என்று கூறியது கலிலேயா கடலின் மேற்குக் கரையில்.
கப்பர்நாகூம் கடற்கரையில் நற்கருணையைப் பற்றி பேசுவதற்கு முன்
பெத்சைதா கடற்கரையில் அப்பத்தைப் பலுகச் செய்து உணவாக அளித்தார்
இயேசு கிழக்குக் கரையில் அப்பத்தைப் பலுக்கச் செய்து விட்டு மேற்குக் கரையில் திவ்ய நற்கருணையைப் பற்றி பேசுகிறார்.
அப்பத்துக்கும் திவ்ய நற்கருணைக்கும் என்ன தொடர்பு?
கோதுமை அப்பத்தை கடைசி இரவு உணவின் போது தன் உடலாக மாற்றப் போவதற்கு முன் அடையாளம் அப்பத்தைப் பலுகச் செய்த புதுமை.
கடைசி இரவு உணவின் போது அப்பத்தின் வெளிப்புறக் குணங்களை(accidents) அப்படியே வைத்துக் கொண்டு
அதன் உட்பொருளைத் (Substance)
தன் உடலாக மாற்றுவார்.
(transubstantiation)
அவ்வாறேதான் திராட்சை இரசத்தைத் தன் இரத்தமாக மாற்றுவார்.
கலிலேயா கடலின் கிழக்குக் கரையில் பெத்சைதா நகர் இருக்கிறது. இந்நகர் இராயப்பருக்கும், அவருடைய சகோதரர் அந்திரேயாவுக்கும் பூர்வீக ஊர்.
மேற்குக் கரையிலுள்ள கப்பர்நாகூம் இராயப்பரின் மாமியார் ஊர்.
இராயப்பர் பெத்சைதாவிலிருந்து குடி பெயர்ந்து கப்பர்நாகூமில் தன் மாமியார் வீட்டில் குடியேறி விட்டார்.
அவ்வீட்டில் தங்குவதற்கு இயேசுவுக்கும் இடம் கொடுத்தார்.
இயேசு அங்கிருந்து சென்றுதான் கலிலேயா, யூதேயா எங்கும் நற்செய்தியை அறிவித்தார்.
இப்போ எதற்கு இந்த விபரம் எல்லாம்?
இயேசு தன் பெற்றோருடன் வாழ்ந்த ஊர் நாசரேத்து.
அதுவும் கலிலேயாவில்தான் இருக்கிறது.
ஆனால் இயேசு நற்செய்தி அறிவிக்க ஆரம்பித்தவுடன் நசரேத்தை விட்டு விட்டு கப்பர்நாகூமுக்கு வந்து விட்டார்.
அங்கு அவர் தங்கியிருந்தது சொந்த வீட்டில் அல்ல, இராயப்பர் வீட்டில்.
இப்போது புரிந்திருக்கும் ஏன் தேவ அழைத்தலை ஏற்றுக் கொண்டவர்கள் பிறந்த வீட்டைத் துறந்து இறைப்பணிக்கு வந்து விடுகிறார்கள் என்று.
"போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்" (மத்.8:19) என்ற
மறைநூல் அறிஞரிடம்
இயேசு, "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார். (மத்.8:20)
இதுதான் நமது குருக்களுடைய நிலையும்.
நற்கருணையை மையமாகக் கொண்ட வாழ்வு லௌகீக வாழ்வுக்கு அப்பாற் பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இயேசு "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.
என்று கூறிய போது அவரைப் பின்பற்றயவர்களுள் பலர் அவரை விட்டுப் போய் விட்டார்கள்.
இயேசு பன்னிரு சீடரிடம், "நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?" என்று கேட்டார். (6:67)
இராயப்பர் மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."(6:68) என்றார்.
நிலைவாழ்வு அளிக்கும் இயேசுவின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே திவ்ய நற்கருணை வாங்கத் தகுதி உள்ளவர்கள்.
"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே"
இயேசுவின் வார்த்தைகளினபடி நமது ஆன்மீக உணவையே மையமாகக் கொண்டு வாழ்வோம்.
திருப்பலியிலும்,
திருவிருந்திலும்
கலந்து கொண்டு ஆன்மீக வாழ்வில் முன்னேறிச்
செல்ல வேண்டியது நமது கடமை.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment