Saturday, May 3, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.(தொடர்ச்சி)14.அம்மாவும் பரலோக வாழ்வும்.

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)

14.அம்மாவும் பரலோக வாழ்வும்.

சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது இயேசு சொன்னதற்கு இணங்க அருளப்பர் அன்னை மரியாளைத் தன்‌ இல்லத்தில் ஏற்றுக் கொண்டார்.

பெந்தகோஸ்து விழாவுக்குப் பின் இயேசுவின் சீடர்கள் வெவ்வேறு இடங்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார்கள்.

அருளப்பர் சிறிய ஆசியாவில் (இன்றைய துருக்கி) உள்ள எபேசு நகரில் நற்செய்தி அறிவித்தார்.

மரியாள் அந்நகரில் அருளப்பரின் இல்லத்தில் அவருடைய பாதுகாப்பில் வாழ்ந்தார்.

கி.பி 45ல் அன்னை மரணப் படுக்கையில் இருந்தார்.

இச் செய்தியை தூய ஆவியானவர் அன்று உயிரோடு இருந்த அனைத்து சீடர்களுக்கும் அறிவித்து விட்டார்.

தோமையார் தவிர மற்ற அனைவரும் வந்து விட்டார்கள்.‌

அனைவரும் அன்னையின் மரணத்தின் போது உடனிருந்தார்கள்.

உடலை அடக்கம் செய்த பின்பும் சில நாட்கள் அங்கே தங்கியிருந்தார்கள்.

மூன்று நாட்கள் கழித்து தோமையார் வந்தார்.

"அன்னையை நான் பார்க்க வேண்டும்" என்றார்.

அவரைத் திருப்திப்படுத்த கல்லறையைத் திறந்தனர்.

அங்கு அன்னையின் உடல் இல்லை.

சென்மப் பாவம் இல்லாமல் உற்பவித்து, மாசுமறு இல்லாமல் வாழ்ந்த அன்னை மரியாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டாள் என்று உறுதி செய்தார்கள்.

அப்போது முதல் திருச்சபையில் அன்னை மரியாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டாள் என்ற நம்பிக்கையும், அதைச் சார்ந்த பக்தி முயற்சிகளும் இடம் 
பெற்றன.

1950 ல் பன்னிரண்டாம் பத்திநாதர் அன்னை மரியாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டதை விசுவாச சத்தியமாக அறிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் நாம் இந்த திருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

நமது அன்னை தனது மகனைப் போலவே ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்தில் வாழ்கிறாள்.

ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்தில் நித்திய பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்பது இயேசுவின் சீடர்களாக வாழும் நம் அனைவருக்கும் உரியது தான்.

ஆனாலும் அதற்காக நாம் உலக முடியும் வரைக் காத்திருக்க‌ வேண்டும்.

அது வரை நமது ஆன்மா மட்டும் தான் இறைவனோடு இணைந்து வாழும்.

உலக முடிவில் நாமும் உயிர் பெற்று எழுவோம்.

நமது உடல் இயேசுவின் உடலைப்  போல வும், நமது அன்னையின் உடலைப் போலவும் ஆன்மீக, மகிமை பெற்ற உடலாக மாறும்.

Our bodies will become spiritual and glorified ones, like the bodies of our Lord and our Mother.

நாமும் நமது ஆண்டவரைப் போலவும், அன்னையைப் போலவும் ஆன்ம சரீரத்தோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment