Thursday, May 22, 2025

உங்களை நான் நண்பர்கள் என்றேன்; (அரு.15:15)


 உங்களை நான் நண்பர்கள் என்றேன்; 
(அரு.15:15)

ஆரம்பம் இல்லாத காலத்திலிருந்தே கடவுள் இருக்கிறார்.

கடவுள் ஒருவராகையால் அவருக்கு வெளியே அவரோடு உறவு கொண்டாட யாருமில்லை.

ஆனாலும் அவர் மூன்று ஆட்களாக இருக்கிறார்.

மூவரில் ஒருவர் கடவுள் நித்திய காலமாக பெற்ற மகன்.

அடுத்தது தூய ஆவி, தந்தைக்கும் மகனுக்கும் நித்திய காலமாக உள்ள அன்பு.

நித்திய காலத்திலிருந்தே, 

மூன்று ஆட்களும் ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டு,

 தனியாக வாழ்ந்து கொண்டிருந்த இறைவன் தன் அன்பைப் பகிர்ந்து கொள்ள மனிதனைப் படைத்தார்.

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவு படைத்தவருக்கும்,  படைக்கப்பட்ட வருக்கும் உள்ள உறவுதான்.

ஆனாலும் கடவுள் தன் அன்பின் மிகுதியால் மனிதனைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டார்.

அதனால்தான் மனிதன் பாவம் செய்த போது அதற்கான பரிகாரம் செய்யும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டார்.

அதற்காக உலகுக்கு அனுப்பப்பட்ட இறை மகனும்
தனது சீடர்களைத்‌ தன் தந்தையை, "விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே"" என்று அழைத்தே செபிக்கச் சொன்னார்.

இயேசுவின் பொது வாழ்வின் போது சீடர்கள் அவரைப் ''போதகரே'' என்று அழைத்தார்கள்.

அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

"நீங்கள் என்னைப் "போதகர்" என்றும் "ஆண்டவர்" என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான்."(13:13)

ஆயினும் இயேசு தனது சீடர்களை தன் தன் நண்பர்களாகக் கருதினார்.


"தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. " (15:13)


"நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்." 
(15:14)



"இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்."
(15:15)

மற்ற உறவுகளை விட நட்பு உயர்ந்தது. நட்புக்கு ஆதாரமாய் இருப்பது அன்பு மட்டுமே. நண்பர்கள் ஒருவர் ஒருவரிடமிருந்து அன்பை மட்டுமே எதிர் பார்ப்பார்கள்.

அதனால்தான் இயேசு தன் சீடர்களை "நண்பர்கள்" என்று அழைத்தார்.

''தந்தை, மகன்.
குரு, சீடர்.''
உறவுகளில் ஏற்ற தாழ்வு இருக்கும்.

ஆனால் நண்பர்களுக்குள் ஏற்ற தாழ்வு இருக்காது.

நண்பர்கள் என்று அழைத்ததன் மூலம் உயர்ந்தவராகிய குரு சீடர்கள் அளவுக்குத் தன்னைத் தாழ்த்துகிறார்.

சீடர்களின் பாதங்களைக் கழுவிய போது தன்னைப் பணியாளர் அளவுக்குத் தாழ்த்தினார்.

நாம் இதுவரை பார்த்த உறவுகள் 

1. படைத்தவர், படைக்கப் பட்டவர்.
2. தந்தை, மகன்.
3.குரு, சீடர்.
4.மேலாளர், பணியாளர்.
5. நண்பர்கள்.

அவரவர் மனப்பக்குவத்துக்கு ஏற்ப ஏதாவது ஒரு உறவைத் தேர்வு செய்வார்கள்.

ஆனாலும் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு உறவை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

அது என்ன உறவு?

கபிரியேல் தூதர் நாசரேத் ஊரில் 
யோசேப்புக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்டிந்த  மரியாளுக்குத் தோன்றி கடவுளின் விருப்பத்தைத் தெரிவித்தபோது,

"இதோ! ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படி எனக்கு ஆகக் கடவது."

என்று சொன்ன வினாடியில் இறைமகன் அவள் வயிற்றில் மனுமகனாக உருவெடுக்கிறார்.

மரியாள் ஏற்றுக் கொண்டது ஆண்டவருக்கு அடிமை உறவு.

இறைமகன் ஏற்றுக் கொண்டது?

அதைப் புனித சின்னப்பர் விளக்குகிறார்.

"கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. 


ஆனால் தம்மையே வெறுமையாக்கி "அடிமையின்" வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, 

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து
 தம்மையே தாழ்த்திக்கொண்டார். 
(பிலிப்பியர் 2:6-8)

மரியாள் ஏற்றுக் கொண்டது
"ஆண்டவருக்கு அடிமை உறவு."

ஆண்டவர் ஏற்றுக் கொண்டது 

"சர்வ வல்லப கடவுள் அடிமையின் வடிவை ஏற்று மனிதனாகப் பிறந்தது."

அடிமை நிலையை ஏற்பதில் தாயும் மகனும் போட்டி போடுவது போல் தோன்றுகிறது!

மரியாள் ஆண்டவருக்கு அடிமை ஆகிறாள்.

ஆண்டவர் அடிமையின் வடிவை ஏற்று, அடிமையின் வயிற்றில் மனிதனாகப் பிறக்கிறார்.

"ஆண்டவரே, நான் உமக்கு அடிமை."

"அம்மா, நானே ஒரு அடிமை."

ஆண்டவராகிய அடிமை உலகை மீட்கிறார்.

தாயாகிய அடிமை அவருக்குக் துணை நிற்கிறார்.

கருவறை முதல் கல்லறை இயேசுவுடன் இருந்தவள் மரியாள் மட்டுமே.

இயேசு பிறந்தவுடனும் தாயின் மடியில், கல்லறைக்குள் போகுமுன்னும் தாயின் மடியில்!

இப்போது நமக்குத் துணை அதே தாயின் மடிதான்.

அடிமையின் நிலைக்குத் தன்னைத் தாழ்த்திய ஆண்டவர் நமது அரசர்.

தன்னையே ஆண்டவரின் அடிமையாக்கியவர் இன்று விண்ணக மண்ணக அரசி!

இன்று தங்களது ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்தில் வீற்றிருப்பவர்கள் இந்த இருவர் மட்டுமே!

நாமும் ஒரு நாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்தில் வாழ வேண்டுமென்றால் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறவு எது?

அடிமை உறவுதான் என்று சொல்லாமலே விளங்கும்.

நாம் அனைவரும் ஆண்டவரின் அடிமைகள். 

எப்படி அன்னை மரியாள் ஆண்டவருக்காக மட்டுமே வாழ்ந்தாளோ,

அதேபோல, 

நாமும் ஆண்டவருக்காக மட்டுமே வாழ வேண்டும். 

இறைப் பணிக்கு நம்மை முற்றிலும் அர்ப்பணிக்க வேண்டும்.

இயேசு நமது ஆண்டவர்,
நாம் அவரது அடிமைகள்.

அன்னை மரியாள் எப்படி தன்னை இறைப்பணிக்கு அர்ப்பணித்து வாழ்ந்தாளோ,

இறைமகன் எப்படித் தன்னை அடிமை நிலைக்குத் தாழ்த்தி, தன்னையே நமது பாவங்களுக்காகப் பலியாக்கினாரோ

அப்படியே நாமும் இறைவனுக்கு அடிமைகளாக அர்ப்பணித்து வாழ வேண்டும்.

நமது விருப்பப்படி அல்ல, இறைவன் விருப்பப்படியே வாழ வேண்டும்.

அடிமை தலைவரின் கட்டளைக்கு ஏன் என்று கேட்காமல் கீழ்ப்படிவான்.

மரியாள் மைந்தனின் விருப்பத்துக்கு அப்படியே கீழ்ப்படிந்தாள்.

இயேசு தனது பெற்றோருக்கு 30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

பொது வாழ்வின் போது இயேசு என்ன செய்தார்? 

அவரால் படைக்கப்பட்ட மனிதனின் ஆன்மீக மீட்புக்காக சென்ற இடமெல்லாம் மக்களுக்கு ஆன்மீக சேவை புரிந்தார். 

விசுவாசத்தை ஊட்டினார். 

ஏற்றுக் கொண்டவர்களின் நோய்களை குணமாக்கினார். 

இறந்தோரை உயிர் பெறச் செய்தார்.

பசியோடு தனது போதனையை கேட்ட மக்களுக்கு அப்பங்களைப் பலுகச் செய்து உணவளித்தார்.

நற்செய்தியை அறிவித்து மக்களை ஆன்மீகத்தில் வளரச் செய்தார்.

இறுதியில் பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மனிதர்களின் பாவங்களுக்கு பரிகாரமாகத் தன்னையே பலியாக்கினார்.

அவருடைய தாய் மரியாளும் அவர் தோளில் சுமந்த சிலுவையை உள்ளத்தில் சுமந்தாள்.

தன் மகனை மட்டுமல்ல தன்னையே இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுத்து 
பலி வாழ்வு வாழ்ந்தாள்.

அவர்களுடைய ஆன்மீக அடிமைகளாகிய  நாமும் அவர்களுடைய பலி வாழ்வில் பங்கு பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment