"ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."
(அரு.6:68)
இயேசு அவருடைய உடலும், இரத்தமும் அவரைப் பின் பற்றுபவர்களின் உயிருள்ள உணவு என்று கூறியதை ஏற்க இயலாதவர்கள் அவரை விட்டுப் பிரிந்து போய் விட்டார்கள்.
இயேசு "நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?" என்று தனது பன்னிரு சீடரிடம் கேட்ட போது.
இராயப்பர் "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன." என்று கூறினார்.
இராயப்பர் கூறிய வார்த்தைகளை அவருடைய நிலையிலிருந்து தியானிப்போம்.
அதாவது நம்மை இராயப்பராக நினைத்துக் கொண்டு தியானிப்போம்.
''இயேசுவே, உம்மோடு நிலை வாழ்வு வாழவே எங்களைப் படைத்திருக்கிறீர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
ஆகவே நிலை வாழ்வை அளிக்க வல்லவரும் நீர்தான் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.
நிலை வாழ்வின் ஊற்று நீரே.
தாகமாய் வருபவன் நீர் ஊற்றைக் கண்டால் அதில் நீர் அருந்தாமல் வேறு எங்கு போவான்?
நிலை வாழ்வின் ஊற்று நீராக நீர் இருக்கும் போது நிலை வாழ்வுக்காக வாழும் நாங்கள் உம்மை விட்டு வேறு எங்கே போவோம்?
உம்முடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் எங்களை நிலை வாழ்வை நோக்கி வழி நடத்துகிறது.
ஆகவே, ஆண்டவரே, உமது வார்த்தைகளை எங்களுக்கான வழி காட்டியாக மட்டுமல்ல,
எங்களை வாழ வைக்கும் உயிராகவும் ஏற்றுக் கொள்கிறோம்.
பேசும், ஆண்டவரே, என்னுள் நீர் பேசும்.
உம் அடியான் நான் கேட்கிறேன்.
பேசுவது மட்டுமல்ல, நீர் காட்டியபடி வழி நடக்க வேண்டிய ஆன்மீக சக்தியைத் தாரும்.
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே."
இது உமது வார்த்தை.
திவ்ய நற்கருணையாக நீர் என்னுள் வரும் போது நான் வாழ வேண்டிய வாழ்வும், அதற்கான வழியும் என்னுள் வந்து விட்டது என்று தானே அர்த்தம்!
வாரும் ஆண்டவரே,
வாரும் எனது வாழ்வாக, அதற்கான வழியாக,
எல்லாம் இயேசுவே,
எனக்கு எல்லாம் இயேசுவே,
வாழ்வு, வழி, ஒளி எல்லாம் இயேசுவே.
"நாங்கள் யாரிடம் போவோம்?"
எங்களை முழுவதுமே உமது பணிக்கு அர்ப்பணித்து விட்டோம்.
உம்மிடம் வராமல் வேறு எங்கு போவோம்?
எங்களுக்கு ஆரம்பமும் நீரே, நோக்கமும் நீரே.
எங்கள் சிந்தனையும் நீரே,
எங்கள் சொல்லும் நீரே,
எங்கள் செயலும் நீரே.
ஒவ்வொரு வினாடியும் உம்மையே தியானித்துக் கொண்டிருப்பதும்,
உம்மைப் பற்றி மட்டுமே பேசுவதும்,
உமது வார்த்தையின்படி செயல் புரிவது மட்டுமே எங்களின் வாழ்வு.
இவ்வுலகில் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் உம்மை வாழ்பவர்கள் மட்டுமே நிலை வாழ்வு பெறுவர்.
இயேசுவே, இவ்வுலகில் உமக்காக வாழ்ந்து,
மறுவுலகில் உம்மோடு நிலை வாழ்வு வாழ எங்களுக்கு அருள் தாரும்.
அருள் நிறைந்த மரியே, நீர் உம்மை முழுவதும் உமது மகனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்தது போல
நாங்களும் அர்ப்பண வாழ்வு வாழ உமது திரு மகனின் அருள் வரத்தைப் பெற்றுத் தாரும்.
ஆமென்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment