செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
13.தானிய அறுவடை வளத்துக்கு இறைவனுக்கு நன்றி கூறவும்,
சீனாய் மலையில் கடவுள் இஸ்ரேல் மக்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் ஞாபகமாகவும்
இஸ்ரேல் மக்கள் பெந்தகோஸ்து விழாவைக் கொண்டாடினார்கள்.
அதே நாளில் தான் தூய ஆவியானவர் அப்போஸ்தலர்கள் மேல் இறங்கி அவர்களை நற்செய்தியை அறிவிக்க அனுப்பி வைத்தார்.
அந்நாள் வரை சீடர்கள் அன்னை மரியாளுடன் அமர்ந்து செபித்துக் கொண்டிருந்தார்கள்.
சீடர்கள் எதிரிகளுக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் செபித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் தூய ஆவியானவர் இறங்கியவுடன் பயம் நீங்கி தைரியத்துடன் போதிக்க ஆரம்பித்தார்கள்.
முதல் நாளே ஏறக்குறைய மூவாயிரம் பேர் மனம் திரும்பினார்கள்.
இயேசு மூன்று ஆண்டுகள் நற்செய்தியை போதித்தாலும் இராயப்பர் தலைமையில் சீடர்கள்
நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்த இந்த நாள்தான் கத்தோலிக்கத் திருச்சபையின் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது.
அன்னை மரியாள் சீடர்களின் தாயாக இருந்து அவர்களை வழி நடத்தினாள்.
இந்நாள் வரை கத்தோலிக்கத் திருச்சபையை இயக்கிக் கொண்டிருப்பவரும், உலகம் முடியும் வரை அதை இயக்க விருப்பவரும் தூய ஆவியானவர் தான்.
மனிதர்கள் மாறிக் கொண்டிருப்பார்கள், ஆனால் ஆவியானவர் மாற மாட்டார்.
தூய ஆவியானவர் திருச்சபையுடன் இருப்பதால் அதன் எதிரிகள் தலைகீழ நின்றாலும் அவர்களால் அதை அழிக்க முடியாது.
அன்று சீடர்கள் மேல் இறங்கி அவர்களை இயக்கிய அதே தூய ஆவியானவர்தான் இன்று நம்மோடு இருந்து நம்மை வழி நடத்துகிறார்.
நற்செய்தியை அறிவிக்கும் விடயத்தில் நாம் யாருக்கும் பயப்பட வேண்டாம்.
நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நாம் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.
வங்கிக் கணக்கில் பல இலட்சங்கள் இருப்பதால் மட்டும் ஒருவர் பங்களா கட்டிவிட முடியாது.
அதை எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
நம் எல்லோருள்ளும் தூய ஆவி இருக்கிறார்.
அவருடைய தூண்டுதல்களின்படி நாம் நடந்தால்தான் நாம் ஆன்மீகத்தில் வளர முடியும்.
தூய ஆவி கடவுள். கடவுள் எங்கும் இருக்கிறார். எல்லோரிடமும் இருக்கிறார். சும்மா இருப்பதில்லை. செயல் புரிந்து கொண்டுதான் இருக்கிறார். நாம் ஒத்துழைக்கும் போது நாம் பயன் பெறுவோம்.
நாம் பிறக்கும் போது கடவுளோடுதான் பிறக்கிறோம்.
கடவுள் நம்மோடு இல்லாவிட்டால் நாம் இல்லை.
அவருக்கு நாம் கொடுத்த முதல் ஒத்துழைப்பு அவர் கேட்டுக் கொண்டபடி திரு முழுக்கு பெற்றது.
திரு முழுக்கு பெற்றவுடன் நமது சென்மப் பாவம் மன்னிக்கப் பட்டது.
சென்மப் பாவம் மன்னிக்கப் பட்டவுடன் அவருடைய அருள் வெள்ளம் நமக்குள் பாய ஆரம்பித்தது.
அந்த அருள் உதவியுடன் நாம் பாவத்தை நீக்கி புண்ணிய வாழ்வில் வளர வேண்டும்.
தொடர்ந்து ஆன்மீக வாழ்வில் வளர இயேசு ஏற்படுத்தியுள்ள திரு அருட் சாதனங்களைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து செப வாழ்வு வாழ்வதன் மூலம் தூய ஆவிக்கு நமது ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும்.
திருமுழுக்குப் பெற்ற அனைத்து கத்தோலிக்கர்களிடமும் அதே தூய ஆவிதான் இருந்து வழி நடத்துகிறார்.
ஆனால் ஓரிருவர் மட்டும் புனிதர்களாக மாறுகிறார்கள்.
சிலர் புண்ணிய வாழ்வு வாழ்கிறார்கள்.
சிலர் பாவம் செய்யாமல் மட்டும் வாழ்கிறார்கள்.
சிலர் ஆன்மீகத்தையே மறந்து வாழ்கிறார்கள்.
ஏன் இந்த வேறுபாடு.
அவரவர் கொடுக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப அவரவர் மாறுகிறார்கள்.
"இனி விண்ணுலகத் தந்தையே என் தந்தை" என்று கூறி பணக்கார அப்பாவின் சவுளிக் கடையை விட்டு ஏழையாக வெளியேறிய பிரான்சிஸ்
ஐந்து காய வரம் பெற்ற பிரான்சிஸ் அசிசியாக மாறியது ஆவியானவர் காட்டிய வழியில் நடந்ததால்தான்
ஆவியானவர் காட்டிய வழியில் நடப்போம்.
நமது ஆவி பிரியும்போது ஆவியானவர் நம்மை ஏற்றுக் கொள்வார், நிலை வாழ்வுக்குள்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment