Monday, May 26, 2025

தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் "அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்" என்றேன். (அரு.16:15)



தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் "அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்" என்றேன். (அரு.16:15)

இயேசு சீடர்களிடம் பேசும் போதே 
பரிசுத்த தம திரித்துவத்தைப் பற்றிய மறை உண்மையை   வெளிப்படுத்துகிறார்.

சில நேரங்களில் தந்தைக்கும் அவருக்கும் உள்ள உறவு பற்றி பேசுவார்.

சில நேரங்களில் அவருக்கும் தூய ஆவிக்கும் உள்ள உறவு பற்றி பேசுவார்.

சில‌ நேரங்களில் மூவரையும் பற்றி பேசுவார்.

இன்றைய தியானித்துக்கு உரிய வசனத்தில் மூவரும் வருகிறார்கள்.

எப்படிப் பேசினாலும் மூவரும் ஒரே கடவுள் என்ற தொனி இருக்கும்.

இன்றைய வாசகத்தில் இயேசு கூறியதைத் தியானிப்போம்.

தியானிக்கும் போது தம திரித்துவம் பற்றிய திருச்சபையின் போதனையை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

திருச்சபையின் போதனையைத் தான் இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் தியானிக்கிறோம்.

வசனத்தைப் பிரித்துத் தியானித்தால் உண்மையைப் புரிய எளிதாக இருக்கும்.

1. தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. 

2. எனவேதான் "அவர் என்னிடமிருந்து பெற்று

 3. உங்களுக்கு அறிவிப்பார்" என்றேன்

1. தந்தை.

2. அவர்--தூய ஆவி.
     என்---மகன்.
3. உங்கள் ---- சீடர்கள்.


'உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்." (16:13)

மூன்று ஆண்டுகளாக இயேசு தனது சீடர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

அவர்களுக்கு நற் செய்தியை அறிவித்து அதை எப்படி வாழ வேண்டும் என்று அவரே வாழ்ந்து காண்பித்து பயிற்சி அளித்தார்.


இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? 
(மத்தேயு நற்செய்தி 13:55)


இயேசு நசரேத்தில்‌‌ வாழ்ந்த போது 
அன்னை மரியாளின் சகோதரியின் மக்களாகிய யாக்கோப்பு, , சீமோன், யூதா ஆகிய மூவரும் அங்கே தான் வாழ்ந்திருப்பார்கள்.

அப்போது இயேசு தன்னை இறைமகன் என்று வெளிப்படுத்தி யிருக்கா விட்டாலும், அவருடைய கீழ்ப்படிதலான வாழ்க்கை அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கும்.

தம்மோடு வாழ்ந்த 
அம்மூவரையும் தனது சீடர்களாகத் தேர்வு செய்து கொண்டார்.

இராயப்பரும், அந்திரேயாவும், பெரிய யாக்கோபும், அருளப்பரும் மீனவர்கள்.

இயேசு பொது வாழ்வுக்கு வந்த போது இவர்களைத் தனது சீடர்களாக தேர்வு செய்து கொண்டதோடு 

இராயப்பரின் மாமியார் இல்லத்தில் தான் இராயப்பரோடு தங்கினார்.

இராயப்பரும், அந்திரேயாவும் முதலில் பெத்சாய்தாவில் வாழ்ந்தவர்கள்.

இயேசு அவர்களைத் தேர்வு செய்யு முன்பே அவர்கள் அவரைத் தேடி வந்தார்கள்.
(அரு.1:37-44 வசனங்களை வாசிக்கவும்)

இயேசு கானாவூர்த் திருமணத்திற்குச் சென்றிருந்த போது அவருடைய தாயும், சீடர்களும் அவரோடு சென்றார்கள்.

சீடர்கள் மாதாவின் உதவி செய்யும் குணத்தையும், இயேசுவின் வல்லமையையும் கண்டார்கள்.

இயேசுவின் 12 சீடர்களும் அவர் எங்கே சென்றாலும் அவருடன் சென்றார்கள்.

அவருடனே தங்கினார்கள்.

அவர் சொன்னதைக் கேட்டார்கள்.

ஆக இயேசு தனது வாழ்க்கை‌ மூலம் அவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

மூன்று ஆண்டு பயிற்சி காலத்தில்  இயேசு தந்தையைப் பற்றி பேசியிருக்கிறார், தூய ஆவியைப் பற்றியும் பேசியிருக்கிறார்.

இன்று நாம் தியானிக்க இருப்பது மூன்றாவது ஆண்டின் இறுதி நாளுக்கு முந்திய நாளில் பேசியது.


உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர்

"என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்."


இயேசு சீடர்களுக்குச் சொல்ல வேண்டிய அனைத்தையும் அவரிடமிருந்து பெற்று சீடர்களுக்கு அறிவிப்பார்.

வேறு வார்த்தைகளில், இயேசு அறிவிக்க விரும்புவதும், தூய ஆவி அறிவிப்பதும் ஒரே விடயம் தான்.

"தந்தையுடையவை யாவும் என்னுடையவையே"

இயேசு சீடர்களுக்கு அறிவிக்க விரும்புவது தந்தையின் எண்ணங்களையே.

வேறு வார்த்தைகளில்,

தந்தையின் எண்ணங்களும், மகனின் எண்ணங்களும் ஒரே எண்ணங்கள்தான்.

இப்போது பிரித்து தியானித்ததை சேர்த்து தியானிப்போம்.

தந்தை, மகன், தூய ஆவி மூவருக்கும் ஒரே எண்ணம்.

தந்தை நினைத்ததும், மகன் அறிவித்ததும், தூய ஆவி பெந்தகோஸ்து திருநாளன்று உறுதிப் படுத்தப் போவதும் ஒரே எண்ணம்தான்.

அப்புறம் ஏன்

"தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. 

எனவேதான் "அவர் என்னிடமிருந்து பெற்று

 உங்களுக்கு அறிவிப்பார்" என்று மூவரும் வெவ்வேறானவர்கள் போல சொல்கிறார்?

'வெவ்வேறானவர்கள் போல' அல்ல, வெவ்வேறானவர்கள் தான்.

தந்தை, மகன், தூய ஆவி மூவரும் வெவ்வேறான ஆட்கள், 

Father, Son, Holy Ghost are three distinct persons.

என்ற மறை உண்மையை நாம் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காகத் தான் இயேசு அவ்வாறு சொல்கிறார்.

மனிதனாகப் பிறந்தது மகன் மட்டும் தான்.

ஆனால் ஒரே கடவுள்தான் மனிதனாகப் பிறந்தார்.

புனித வியாழன் அன்று சீடர்களோடு பேசியவர் மனிதனாகப் பிறந்த ஒரே கடவுள்.

மனுமகனாகப் பிறந்த இறைமகன்.

இயேசுவின் வார்த்தைகளை
வாசிப்போம்,
யோசிப்போம்,
விசுவசிப்போம்,
வாழ்வோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment