"சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் சமாதானத்தை உங்களுக்கு அளிக்கிறேன்." (அரு.14:27)
பெத்லகேமில் இயேசு பிறந்த நாளில் வானவர் இசைத்த கீதம்,
"விண்ணுலகில் இறைவனுக்கு மகிமை உண்டாகுக,
மண்ணுலகில் நல்மனதோர்க்கு சமாதானம் உண்டாகுக"
இயேசு பிறக்கும் போது அவருடைய தூதர்கள் மூலமாக உலகுக்கு அறிவித்த சமாதானம்
இறப்பதற்கு முந்திய நாள் தனது சீடர்களுக்கு உண்டாகட்டும். என்று வாழ்த்துகிறார்.
சமாதானம் என்றால் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே நிலவும் நல் உறவு நிலை.
மனிதன் செய்த பாவத்தினால் கடவுளோடு இருந்த நல்லுறவை இழந்தான் .
அதை மீட்கவே இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.
இருவர் சமாதானமாக வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் நல்ல உறவுடன் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று பொருள்.
நாம் இறைவனோடு சமாதானமாக வாழ வேண்டும்.
அதாவது இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்யாமல், அர்ப்பண வாழ்வு வாழ வேண்டும்.
பாவம் செய்பவர்கள் இறைவனோடு அனுபவித்த சமாதான உறவை இழந்து விடுகிறார்கள்.
செய்த பாவத்துக்கு மனத்தாபப் பட்டு இறைவனிடம் மன்னிப்புக் கேட்கும் போது பாவம் மன்னிக்கப் படுகிறது.
இயேசு உலகுக்கு வந்ததன் நோக்கம் நமது பாவங்களை மன்னிப்பதற்காகத்தான்.
அவருடைய பாடுகளும் மரணமும் அந்த நோக்கத்திற்காகத்தான்.
அவர் நமக்குக் கற்பித்த செபத்தில்,
"எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போக எங்கள் குற்றங்களை மன்னியும்."
என்ற மன்றாட்டைச் சேர்ந்திருப்பது மன்னிப்பின் அவசியத்தை விளக்குகிறது.
இந்த மன்றாட்டில் இறைவனோடு நமக்கு இருக்க வேண்டிய சமாதானத்தைப் போலவே நமது அயலானோடு இருக்க வேண்டிய சமாதானமும் வலியுறுத்தப்படுகிறது.
கடவுள் நம்மைப் படைத்து ஒரு சமூகத்தில் நல்லுறவோடு வாழ வைத்திருக்கிறார்.
இறைவனோடு நமக்கு இருக்க வேண்டிய சமாதானம் எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் சமூகத்தோடு நமக்கு இருக்க வேண்டிய சமாதானமும்.
மன்னிப்பு இறைவனோடு நமக்கு இருக்க வேண்டிய சமாதானத்துக்கு எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் சமூகத்தோடு
நமக்கு இருக்க வேண்டிய சமாதானத்துக்கும்.
இறைவனோடு நாம் சமாதான உறவோடு வாழ வேண்டும் என்றால் இறைவன் நமது பாவங்களை மன்னிக்க வேண்டும்.
சமூகத்தோடு நாம் சமாதான உறவோடு வாழ வேண்டும் என்றால் மற்றவர்கள் நமக்கு விரோதமாகச் செய்யும் குற்றங்களை நாம் மன்னிக்க வேண்டும்.
சமூகத்தை அதாவது நமது அயலானை நாம் மன்னித்தால் தான் கடவுள் நம்மை மன்னிப்பார்.
மன்னிக்க தெரிந்தவன் தான் மனிதன்.
மனிதர்களிலேயே நிலவும் சண்டை, சச்சரவு, போர் ஆகியவற்றுக்கு காரணம் மன்னிக்க முடியாமை தான்.
குடும்பங்களில் நிலவும் ஒற்றுமை இன்மைக்குக் காரணமும் மன்னிக்கத் தெரியாமை தான்.
யார் மேல் தவறு என்று ஆராய்வதை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் மன்னித்து விட்டால் தவறு காணாமல் போய்விடும்.
அந்த இடத்தை சமாதானம் நிரப்பும்.
இயேசு சமாதானத்தின் தேவன்.
நாம் சமாதானத்தின் பிள்ளைகள்.
சமாதானம் இல்லாமல் வாழ்பவர்கள் யாருடைய பிள்ளைகள்?
சாத்தானின் பிள்ளைகள்.
நாம் சமாதானத்தின் பிள்ளைகளாக,
அதாவது,
இயேசுவின் பிள்ளைகளாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment