"உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்."
(அரு.15:18)
உலகம் = லௌகீகம்.
இயேசு = ஆன்மீகம்.
இரண்டும் எதிர் எதிரானவை.
லௌகீகம் ஆன்மீகத்தை வெறுப்பது இயல்பு .
ஆனால் ஆன்மீகத்தில் வெறுப்புக்கு இடமில்லை.
பகைவர்களை நேசியுங்கள்,
தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள் என்கிறது ஆன்மீகம்.
தன்னைப் பாடாய்ப் படுத்தி சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தவர் இயேசு.
கடவுள் அன்பு மயமானவர்,
அவருடைய அன்பு நித்தியமானது, மாறாதது.
அவர் படைத்த சம்மனசுக்களுள் கோடிக்கணக்கானோர் அவரை அன்பு செய்ய மறுத்ததால் பசாசுக்களாக மாறி விட்டார்கள்.
பசாசுக்கள் கடவுளை நேசிப்பதை நிறுத்தி விட்டார்கள்.
ஆனால் மாறாத கடவுள் இன்னும் அவர்களை நேசிக்கிறார்.
அவர் நல்லவர்களையும் நேசிக்கிறார், கெட்டவர்களையும்
நேசிக்கிறார்.
அவரை நேசிப்பவர்களையும் நேசிக்கிறார், வெறுப்பவர்களையும்
நேசிக்கிறார்.
நாமும் அவரைப் போலவே அனைவரையும் நேசிக்க வேண்டும்.
நாம் நம்மை நேசிப்பவர்களை மட்டும் நேசித்தால் இயேசுவின் சீடர்கள் என்று அழைக்கப்பட தகுதி அற்றவர்தளாகி விடுவோம்.
அன்பு ஆள் பார்த்து அன்பு செய்யாது, அனைவரையும் அன்பு செய்யும்.
இயேசு இன வேறுபாடுகள் பாராமல் அனைவரையும் தேடித்தான் உலகுக்கு வந்தார்.
ஆனால் அனைவரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
நோய்களிலிருந்து குணம் பெறவும், நற்செய்தியைக் கேட்கவும் அநேகர் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.
அவரைப் பிடித்து கொலை செய்ய சந்தர்ப்பம் தேடியும் சிலர் பின் தொடர்ந்தார்கள்
இரண்டு வகையினருக்காகவும் இயேசு உலகுக்கு வந்தார்.
இரண்டு வகையினருக்காகவும் தான் அவர் பாடுகள் பட்டு மரித்தார்.
அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்தவர்களைச் சிலுவையில் தொங்கும் போதே மன்னித்தார்.
நாமும் நமது துன்பங்களுக்குக் காரணமாக இருப்பவர்களை மன்னித்தால்தான் நாம் இயேசுவின் சீடர்கள்.
இயேசுவின் நற்செய்தியை வாயினால் போதிப்பவர்கள் அனைவரும் அவருடைய சீடர்கள் ஆகி விட முடியாது.
நற்செய்தியை வாழ்ந்து, வாழ்க்கையின் மூலம் போதிப்பவர்களே இயேசுவின் உண்மையான சீடர்கள்.
இயேசு தனது ஒவ்வொரு போதனையையும் வாழ்ந்தார்.
ஏழைகள் பாக்கியவான்கள் என்று போதித்தார்.
அவரே ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தார்.
பகைவர்களை நேசியுங்கள்,
தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்,
உங்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர்களை மன்னியுங்கள் என்று போதித்தார்.
அவர் அவரைப் பகைத்த பரிசேயர்கள், மறை நூல் அறிஞர்கள் ஆகியோரை நேசித்தார். சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதே அவர்களை மன்னித்ததன் மூலம் தன் அன்பை நிரூபித்தார்.
பாவிகளைத் தேடி வந்தேன் என்றார்.
பாவிகள் வீட்டில் சாப்பிட்டார்.
பாவிகளை மன்னித்தார்.
சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதே ஒரு திருடனை மன்னித்து, அன்றே அவனுக்குப் பேரின்ப வீட்டில் இடம் கொடுத்தார்.
நாம் இயேசுவின் சீடர்கள். அவரைப் போலவே நற்செய்தியை வாழ்வோம்.
வாழ்க்கையின் மூலம் போதிப்போம்.
உலகம் நம்மை வெறுக்கிறது என்று கவலைப் பட வேண்டாம்.
அவரை வெறுத்த உலகம்தான் நம்மை வெறுக்கிறது.
அவர் வெறுத்தவர்ளையும் நேசித்தார்.
நாமும் அப்படியே செய்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment