Tuesday, May 6, 2025

மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்" என்று கூறினார். (அரு.6:40)

மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்" என்று கூறினார். (அரு.6:40)

கிறித்தவ விசுவாசத்தின் மையம் இந்த வசனம்தான்.

அதை மூன்றாகப் பிரித்துத் தியானிப்போம்.

1. மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும்.

2. நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்.

3. இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்.

கடவுள் நம்மைப் படைத்ததன் நோக்கம் நாம் நிலை வாழ்வு பெறுவது.

நாம் உலகில் படைக்கப்பட்டிருப்பது இங்கு நிரந்தரமாக வாழ்வதற்கு அல்ல.

கடவுளோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம்.

இவ்வுலகில் அதற்காக நம்மைத் தயாரிக்க வேண்டும்.

நாம் நிலை வாழ்வு பெற வேண்டுமானால் இறைமகனை விசுவசிக்க வேண்டும்.

அதாவது இயேசுவை நமது மீட்பராக ஏற்று, அவருக்கு பணி செய்ய நம்மையே அர்ப்பணிக்க வேண்டும்.

விசுவாசத்தின் நோக்கமே அர்ப்பண வாழ்வுதான்.

அர்ப்பண வாழ்வுக்கு நமக்கு 
முன்மாதிரியாக வாழ்ந்தவள் ஆண்டவரின் அடிமையாக வாழ்ந்த அன்னை மரியாள்.

உலக இறுதி நாளில் நாம் உயிர் பெறுவோம். அதன்பின் நமது ஆன்ம சரீரத்தோடு கடவுளோடு நித்திய பேரின்ப வாழ்வில் பங்கு பெறுவோம்.


 கடவுள் நம்மைப் படைத்தவர் மட்டுமல்ல, நம்மை தனது அன்புப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

அவர் நமது தந்தையாக இருப்பதால் தான் நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு தம்மோடு நம்மை நித்திய பேரின்ப வாழ்வில் இணைத்துக் கொள்வதற்காக

தான் பெற்ற ஒரே மகனை நமக்காகப் பாடுகள் பட்டு மரிப்பதற்காக உலகுக்கு அனுப்பினார்.

நாம் அவரால் படைக்கப்பட்டவர்கள், அவரிடம் பிறந்தவர்கள் அல்ல.

நாம் சுவிகாரப் பிள்ளைகள்.

ஆனால் இயேசு அவரிடம் நித்திய காலமாக பிறந்த ஒரே மகன்.

தனது படைப்புகளைக் காப்பாற்ற பெற்ற மகனைப் பலி கொடுக்க வேண்டுமானால் அதற்கு என்ன காரணமாக இருக்கும்?

அன்பு, அளவு கடந்த அன்பு.

அன்பு மயமானவர் கடவுள்.

அன்பே கடவுள்.

அன்பினால் நேசிக்காமல் இருக்க முடியாது.

எப்படி ரோஜாவினால் மணக்காமல் இருக்க முடியாதோ,

எப்படி தண்ணீரினால் நனைக்காமல் இருக்க முடியாதோ,

எப்படி நெருப்பினால் சுடாமல் இருக்க முடியாதோ

அதேபோல கடவுளால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

நம்மைப் படைக்க வைத்ததும் அவரது அன்புதான்.

நாம் பாவம் செய்தபோது மீட்பரை அனுப்ப வாக்குக் கொடுக்க வைத்ததும் அன்புதான்.

வாக்கின்படி மீட்பரை அனுப்பியதும் அன்புதான்.

இயேசு நம்மை மீட்க பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கக் காரணமாக இருந்ததும் அன்புதான்.

கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதும் அன்பைத் தான்.

நம்மை அளவில்லாத விதமாய் அன்பு செய்யும் கடவுள் நாம் எல்லாவற்றுக்கும் மேலாக அவரை அன்பு செய்ய வேண்டும் கேட்கிறார்.

அனைவரும் மகனைக் கண்டு அவரை விசுவசிக்க வேண்டும்.

விசுவாசம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்கும்.

அன்பு இருக்கும் இடத்தில் அர்ப்பணம் இருக்கும்.

அன்னை மரியாள் தன் மகனை அன்பு செய்து, தனது வாழ்வையே அவரது பணிக்கு அர்ப்பணித்தது போல நாமும் நமது வாழ்வை இயேசுவின் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

அப்படி அர்ப்பணித்து வாழ்ந்தால் நாம் நிலை வாழ்வு பெறுவது உறுதி.

இதைத் தான் திருமறைச் சுவடி,

"தம்மை அறிந்து, அன்பு செய்து, தமக்குப் பணி புரிந்து தம்முடைய மகிழ்வில் பங்கு கொள்ள கடவுள் மனிதரைப் படைத்தார்."
என்கிறது.

தம்மை அறிந்து, --->விசுவாசம்

அன்பு செய்து, தமக்குப் பணி புரிந்து ---> அர்ப்பண வாழ்வு.

தம்முடைய மகிழ்வில் பங்கு கொள்ள ---> நிலை வாழ்வு.

நமது பாவங்களுக்கு முழுப் பரிகாரம் செய்யாமல்  இறந்தால் நமது ஆன்மா உத்தரிக்கிற நிலையை அடையும்.

உத்தரித்து முடிந்தவுடன் ஆன்மா பேரின்ப நிலையை அடையும்.

 
உடல் மண்ணில்.

உலக இறுதியில் நாம்  ஆன்மீக (Spiritual) மகிமையான (Glorified) உடலோடு  உயிர் பெற்று எழுவோம்.

இதை  "நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்." என்று இயேசு சொல்கிறார்.

சுருக்கமாக 

நாம் இறைமகன் இயேசுவை விசுவசித்து, நம்மையே அர்ப்பணித்து வாழ்ந்தால் நிலை வாழ்வு உறுதி.

உலக இறுதியில் உயிர் பெற்று எழுந்து ஆன்ம சரீரத்தோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம் 

இது இயேசு நமக்கு அளித்திருக்கும் வாக்குறுதி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment