"பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர்மறந்துவிடுகிறார்."
(அரு.16:21)
புதிதாகத் திருமணமான தம்பதியர் முதல் நாளிலேயே தங்களுடைய எதிர் காலம் பற்றிய கற்பனையில் மிதக்க ஆரம்பித்து விடுவார்கள்.
தங்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிய கற்பனைத் தேரில் வலம் வர ஆரம்பித்தது விடுவார்கள்.
குழந்தை உண்டானவுடன் தாங்கள் ஏதோ சாதிக்க முடியாததைச் சாதித்து விட்டதாக மகிழ்ச்சிக் கடலில் நீந்த ஆரம்பித்து விடுவார்கள்.
பேறு காலம் நெருங்க நெருங்க மகிழ்ச்சியும், பயமும் கலந்து தாயை ஆட்கொள்ள ஆரம்பிக்கும்.
பேறு கால வேதனையை நினைத்து பயப்பட ஆரம்பிக்கும் தாய், பிறக்கப் போகும் குழந்தையை நினைத்து நினைத்து மகிழ்வாள்.
குழந்தை பிறக்கும் போது தாய் படும் வேதனையை அப்படியே வெளிப் படுத்த வார்த்தைகள் இல்லை.
அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.
ஆனால் குழந்தை பிறந்தவுடன் தாய் அனுபவிக்கும் மட்டற்ற மகிழ்ச்சியையும் முழுமையாகப் புரிய வைக்க வார்த்தைகள் இல்லை.
விபரிக்க முடியாத வேதனை, விபரிக்க முடியாத மகிழ்ச்சி இரண்டும் பேறு காலத்திற்கு மட்டுமே உரியன.
இந்த லௌகீக அனுபவத்தை அப்படியே ஆன்மீக அனுபவத்தற்கு ஒப்புமைப் படுத்துகிறார் இயேசு.
"பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய்
தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார்.
ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார்.''
ஆன்மீகத்தில் இயேசுவை மணவாளனாகவும், நமது ஆன்மாவை மணவாட்டியாகவும் கற்பனை செய்வது வழக்கம்.
நமது ஆன்மீக அனுபவம் ஆரம்பிக்கு முன்,
இவ்வுலகில் நமது ஆன்மீக வாழ்வில் சுமக்க வேண்டிய சிலுவையைப் பற்றியும், வாழ்வின் இறுதியில் நாம் அனுபவிக்கப் போகும் பேரின்பத்தைப் பற்றியும் ஞான உபதேச வகுப்பில் சொல்லியிருப்பார்கள்.
அப்போது நாம் பெற்றது ஞான அறிவு.
அறிவு வாழ்க்கையாக மாறும் போது தான் சிலுவை என்றால் என்ன என்று புரியும்.
இறைமகன் தான் மனிதனாகப் பிறந்து பாடுகள் படப் போவதை நித்திய காலமாத் திட்டமிட்டிருந்தார்.
தனது பொது வாழ்வின் போதும் தான் படப்போகும் பாடுகளைப் பற்றியும், சிலுவை மரணத்தைப்
பற்றியும், உயிர்ப்பைப் பற்றியும் தன் சீடர்களிடம் அடிக்கடி சொன்னார்.
ஆனால் பாடுகள் ஆரம்பித்ததற்கு முந்திய நாள், வியாழன் இரவில் கெத்சமனித் தோட்டத்தில் பாடுகளை நினைத்த போது ஏற்பட்ட பயத்தின் காரணமாக இரத்த வியர்வை வியர்த்தது இயேசுவுக்கு ஏற்பட்ட பிரசவ வேதனை.
பச்சை மரத்துக்கே இந்தப் பாடென்றால் பட்ட மரத்துக்கு எந்தப் பாடு.
முக்காலமும் அறிந்த கடவுளுக்கே
இந்தப் பாடென்றால் சாதாரண மனிதர்களாகிய நமக்கு எந்தப் பாடு.
குழந்தை பிறக்கும் முன் பிரசவ வேதனை அனுபவிக்க வேண்டும் என்று தாய்க்குத் தெரியும்.
வேதனை வந்த பிறகு தான் அது என்ன என்று புரியும்.
நமக்கும் சிலுவை வருமட்டும் நாமே மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவோம்.
வந்த பின் அறிவுரையை நமக்கே கூறமாட்டோம்.
''இயேசுவே, இந்தத் துன்பத்திலிருந்து விடுதலை கொடுத்தருளும்."
என்று இயேசுவிடமே வேண்டுவோம்.
அப்போது இயேசு சொல்வார்,
"கெத்சமனி தோட்டத்தில் நான் உனக்கு முன்மாதிரிகை
காட்டியபடியே செய்."
"இயேசுவே என் விருப்பப்படி அல்ல, உமது விருப்பப்படியே நடக்கட்டும்" என்று நம்மையே அவரிடம் கையளித்து விட வேண்டும்.
துன்பத்தின் மத்தியிலும் வரவிருக்கும் பேரின்பத்தை எண்ணி மகிழ வேண்டும்.
ஆனாலும் நாம் என்ன செய்கிறோம்?
திவ்ய நற்கருணை முன்பாக அமர்ந்து உம் விருப்பப்படியே நடக்கட்டும் என்று வேண்டி விட்டு
வெளியே வந்தவுடன் மருத்துவ மனைக்குப் புறப்பட்டு விடுவோம்.
எங்கே போனாலும் கடவுள் விருப்பப்படியேதான் நடக்கும்.
நாமே ஏற்றுக் கொண்டால் விண்ணகம் பேரின்பம் அதிகமாகும்.
வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டால் நமக்கு ஆன்மீகப் பலன் எதுவும் கிடைக்காது.
நாம் சுமக்க வேண்டிய சிலுவை பல உருவங்களில் வரலாம்.
நோய் நொடிகள்,
குடும்ப வாழ்வில் ஏற்படக் கூடிய கட்டங்கள்,
மற்றவர்களால் ஏற்படக்கூடிய துன்பங்கள்,
மற்றவர்கள் நமக்குத் தர வேண்டிய மரியாதைக் தராதிருத்தல்,
சுருக்கமாக நம் மனதுக்குப் பிடித்தமில்லாத எது நடந்தாலும் அது நமக்குச் சிலுவைதான்.
கைகால் ஊனம் உள்ளவர்கள் அவர்களே அவர்களுக்குச் சிலுவையாக மாறி விடுகிறார்கள்.
சிலுவை எந்த உருவில் வந்தாலும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதிலிருந்து தப்பிக்க நாம் செய்யும் முயற்சியை அதை அனுபவிக்க நாம் செலவிட்டால் நாம் பாக்கிய சாலிகள்.
நோய் வந்த போது அதை குணமாக்க முயற்சி எடுக்காமல் சிலுவையாக ஏற்றுக் கொண்ட புனிதர்களில் சிலர்.
1.புனித லிட்வினா
2.புனித அல்போன்சா
3.புனித சிறு மலர் தெரசா.
4.புனித ஜேன் பிரான்சிஸ் டி சாண்டல்.
5. புனித பெனடிக்ட் ஜோசப் லேப்ரே.
பிறக்கயிருக்கும் குழந்தையை எண்ணி பிரசவ வேதனையை ஏற்றுக் கொள்ளும் தாயைப் போல
நாமும் சிலுவைகள் வரும் போது,
அவற்றின் முடிவில் நமக்காகக் காத்திருக்கும் நித்திய பேரின்ப வாழ்க்கையை எண்ணி சிலுவைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம்.
சிலுவைகளுக்கு முடிவு உண்டு.
பேரின்ப வாழ்வு நிலையானது.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment