கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். (அரு.16:24)
ஒரு நாள் மாணவர்களுக்கு English Grammar சார்ந்த பாடம் நடத்தி விட்டு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் என்று சொன்னேன்.
மாணவர்கள் அமைதியாக இருந்தனர்.
"எல்லாம் தெரிந்தவர்களுக்கும் சந்தேகம் வராது. ஒன்றுமே தெரியாத முட்டாளுக்கும் சந்தேகம் வராது." என்றேன்.
ஒரு மாணவன் எழுந்து,
"சார், ஒரு சந்தேகம்." .
''கேள்."
"இந்தியா பாகிஸ்தான் போரில் எந்த நாடு வெற்றி பெறும்."
"நான் என்ன பாடம் நடத்தினேன்."
"English Grammar."
"நான் நடத்திய பாடத்தில் சந்தேகம் இருந்தால் கேட்க வேண்டும்."
"சார், நீங்கள்தானே "ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்" என்று சொன்னீர்கள்.
நான் மனதில் தோன்றிய சந்தேகத்தைச் சொன்னேன்."
"கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள்"
என்ற இயேசுவின் வார்த்தைகளைப் பொருத்த மட்டிலும் நம்மில் அநேகர் அந்த மாணவனைப் போல்தான் நடந்து கொள்கிறோம்.
இயேசு எதற்காக உலகுக்கு வந்தாரோ அதைச் சார்ந்த உதவிகளை அவரிடம் கேட்டால் கேட்டது கட்டாயம் கிடைக்கும்.
நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும், பாவங்களை மன்னிக்கவும் தான் இயேசு உலகுக்கு வந்தார்.
"இயேசுவே, என் பாவங்களுக்காக
மனம் வருந்துகிறேன். என் பாவங்களை மன்னியும்."
"இயேசுவே, நான் படும் கட்டங்கள் எல்லாவற்றையும் எனது பாவங்களுக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
ஏற்றுக் கொள்ளும்."
"இயேசுவே, நான் பாவத்தில் விழாதபடி என்னைக் காப்பாற்றும்.
பாவ சந்தர்ப்பங்களை நான் விலக்க எனக்கு உதவி செய்யும்."
"இயேசுவே, என் அயலானில் உம்மைக் காண உதவும். அவன் எனக்கு விரோதமாக ஏதாவது தவறு செய்தால் அவனை மன்னிக்கவும், அவனுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும் எனக்கு வரம் தாரும்."
இவை போன்ற செபங்களைச் செய்தால் அவை கட்டாயம் கேட்கப்படும்.
ஆனால் ஆன்மாவைப் பற்றிக் கவலைப் படாமல் '
"இயேசுவே, எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க உதவும்.
குழந்தையை வளர்க்கப் போதுமான பண வசதியைத் தாரும்.
விவசாயத்தில் நல்ல வருமானத்தைத் தாரும்.
நான் எழுதியுள்ள தேர்வில் வெற்றியைத் தாரும்.
எனக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க உதவும்."
போன்ற உலகைச் சார்ந்த உதவிகளை மட்டும் கேட்டால் அவை நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவிகரமாக இருந்தால் மட்டும் தருவார். ஆன்மீக வாழ்வுக்கு இடையூறாக இருக்குமானால் கட்டாயம் தர மாட்டார்.
உலகைச் சார்ந்த உதவிகளைப் பற்றி கொஞ்சம் தியானிப்போம்.
உலகில் வாழ்ந்தாலும் மனிதன் ஒரு ஆன்மீகப் பயணி தான்.
அவனுக்கு உலகைச் சார்ந்த உடல் இருந்தாலும் அவன் இயக்கப்படுவது விண்ணைச் சார்ந்த ஆன்மாவினால்தான்.
உண்மையில் அவன் உலகில் வாழவில்லை, பயணிக்கிறான்.
சென்னையிலிருந்து தென்காசிக்கு ஒருவன் புகை வண்டியில் பயணிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
புகை வண்டியில் உள்ள பொருட்களை அவன் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் உரிமை கொண்டாட முடியாது.
இரயிலில் அவன் பயணிக்கிறான், வாழவில்லை.
தென்காசிக்கு வந்தவுடன் இரயிலை விட்டு இறங்கி விட வேண்டும்.
அதற்குப்பின் அவனுக்கும், இரயிலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
அதே போல் தான் மனிதன் உலகில் வாழப் பிறக்கவில்லை, விண்ணை நோக்கிக் பயணிக்கவே பிறக்கிறான்.
ஆக மனிதன் ஒரு ஆன்மீகப் பயணி.
அவனது உடல் உட்பட அனைத்து லௌகீகப் பொருட்களையும் பயணத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம், உரிமை கொண்டாட முடியாது.
மரணம் வந்தவுடன் பயணம் முடிந்து விடும். பயன்படுத்திய அத்தனையையும் உலகில் விட்டு விட்டு அவன் விண்ணக வீட்டிற்குள் நுழைய வேண்டும்.
பயணத்திற்கு ஏற்பாடு செய்தவர் கடவுள். பயணத்திற்கு போது பயணத்தில் உதவுவதற்காக ஏதாவது பொருள் தந்து உதவும்படி கடவுளிடம் கேட்கலாம்.
அது பயணத்துக்கு உதவக்கூடிய பொருளாக இருந்தால் கடவுள் கட்டாயம் தருவார்.
பயணத்துக்கு இடையூறு விளைவிக்கும் பொருளாக இருந்தால் கட்டாயம் தரமாட்டார்.
உதவக்கூடிய வேறு பொருளைத் தருவார்.
பயணத்தின் போது ஒருவருக்குச் சுகமில்லை என்று வைத்துக் கொள்வோம்.
அவருக்கு சுகமாக வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது கடவுள் தான்.
ஆகவே சுகம் வேண்டி சம்பந்தப்பட்டவர் வேண்டினால்
சுகத்தால் அவரது ஆன்மீக வாழ்வு நலம் பெறும் என கடவுள் கருதினால் சுகம் கொடுப்பார்.
மரணம் தான் அவருக்கு நல்லது என்று கருதினால் அவரை தம்மிடம் அழைத்துக் கொள்வார்.
ஆகவே இறைவனிடம் எதையாவது கேட்கும் போது,
"இறைவா, நான் கேட்பது எனது ஆன்மீக வாழ்வுக்கு நல்லது என நீர் நினைத்தால் தாரும்.
ஆன்மீக வாழ்வுக்கு பயன் படாது என்று நீர் நினைத்தால் எது நல்லதோ அதைத் தாரும்."
கேட்போம்.
முடிவை கடவுளிடம் விட்டு விடுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment