என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? (லூக்கா.1:43)
அன்னை மரியாள் வாழ்ந்த நாசரேத் கலிலேயாவில் இருக்கிறது.
எலிசபெத்தம்மாள் வாழ்ந்த மலை நாடு யூதேயாவில் இருக்கிறது.
இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் ஏறக்குறைய 90 மைல்கள்.
மரியாளின் வயிற்றில் இறைமகன் மனுமகனாக உருவெடுத்த உடனே ஏற்கனவே ஆறுமாத கற்பிணியான எலிசபெத்திற்கு உதவிகரமாக இருப்பதற்காக மலை நாட்டுக்குப் புறப்படுகிறாள்.
இன்று இருப்பது போல போக்குவரத்து வசதிகளோ, வாகன வசதிகளோ இல்லாத காலம் அது.
நடந்து செல்ல வேண்டும் அல்லது கழுதையில் செல்ல வேண்டும்.
வயிற்றில் இருப்பவர் உலகைப் படைத்த இறை மகன்.
மரியாள் அவருடைய அடிமை.
"இதோ, ஆண்டவருடைய அடிமை."
ஆண்டவருடைய ஏவுதலால் அடிமை மேற்கொண்ட முதல் பிறர் அன்புப் பயணம்.
நாசரேத் - பெத்லகேம்
பெத்லகேம் - எகிப்து
எகிப்து - நாசரேத்
பயணங்களில் யோசேப்பின் துணை இருக்கும்.
இப்போது யோசேப்பு ஊரில் இல்லை, இயேசு உற்பவித்ததே அவருக்குத் தெரியாது.
14 வயதுப் பெண் தனியாக, இல்லை, வயிற்றில் குழந்தையுடன் கட்டப்பட்டு 90 மைல்கள் பயணித்து எலிசபெத்தின் வீட்டை அடைந்து விட்டாள்.
மரியாள் எலிசபெத்தை வாழ்த்தினார்.
வாழ்த்திய போது இரண்டு நிகழ்வுகள் நடந்தன.
1. உற்பவித்து சில நாட்களே ஆன இயேசுவும், உற்பவித்து ஆறு மாதங்கள் ஆன திரு முழுக்கு அருளப்பரும் சந்தித்துக் கொண்டனர்.
அந்த சந்திப்பின்போது,
தூய ஆவியின் வல்லமையால்,
அருளப்பரின் சென்மப் பாவம் மன்னிக்கப்பட்டது.
அந்த மகிழ்ச்சியில் அவர் துள்ளினார்.
2. எலிசபெத் தூய ஆவியால் நிரப்பப்பட்டாள்.
மரியாள் கடவுளை கருவில் தாங்கியிருப்பதைத்
தூய ஆவியின் வல்லமையால் உணர்ந்தார்.
அப்போது அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?"
என்றார்.
ஏனோ தெரியவில்லை மரியாள் என்று நாம் சொன்னவுடனே நமது பிரிவினை சகோதரர்களுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது.
அதிலும் நாம் மரியாளை இறைவனின் தாய் என்று சொல்வதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
"மரியாளின் வயிற்றில் கருவாக உருவானது மனுமகன் தானே.
மனிதனாகிய இயேசுவின் தாயை நீங்கள் எப்படிக் கடவுளின் தாய் என்று அழைக்கலாம்?" என்று கேட்கிறார்கள்.
அவர்களுக்குப் பதில் சொல்வதற்காகத்தான் அன்றே தூய ஆவி எலிசபெத்தைப் பேச வைத்தார்.
"என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?"
எலிசபெத் மரியாளை "ஆண்டவரின் தாய்" என்று அழைக்கிறாள்.
கடவுள் மரியாளின் வயிற்றில் மனிதனாக உற்பவித்தார்.
மரியாளின் வயிற்றில் மனிதனாக உற்பவித்தது யார்?
கடவுள்.
ஆகவேதான் மரியாளைக் கடவுளின் தாய் என்கிறோம்.
கபிரியேல் தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தபோது
மரியாள்,"இதோ, ஆண்டவருடைய அடிமை." என்றாள்.
அதே ஆண்டவர் தான் அவள் வயிற்றில் மனுமகனாக உருவெடுத்தார்.
ஆகவே அவள் ஆண்டவரின், கடவுளின், தாய்.
மரியன்னை பக்தியை முதலில் துவக்கி வைத்தவர்கள் கபிரியேல் தூதரும், எலிசபெத்தும் தான்.
இன்னொன்றையும் இப்போது நினைவில் கொள்ள வேண்டும்.
கபிரியேல் ஒரு தூதர்.
அவரை அனுப்பியவர் தந்தை இறைவன். இறைவன் சொல்லச் சொன்னதைத் தான் தூதர் சொன்னார்.
ஆகவே மரியன்னை பக்தி இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டது.
நாம் மங்கள வார்த்தை செபம் சொல்லும் போது,
"அருள் நிறைந்தவரே, ஆண்டவர் உம்முடனே." இவை கபிரியேல் தூதரின் வார்த்தைகள். தந்தை இறைவன் சொல்லச் சொன்ன வார்த்தைகள்.
நாம் "மரியே வாழ்க" என்பதை மட்டும் சேர்த்திருக்கிறோம்.
"பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே;
உம் வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே."
இவை தூய ஆவி எடுத்துக் கொடுத்து எலிசபெத் சொன்ன வார்த்தைகள்.
கபிரியேல் தூதர், எலிசபெத் ஆகியோரின் வார்த்தைகளின் அடிப்படையில் தான் மரியை நாம் "இறைவனின் தாயே" என்று அழைக்கிறோம்.
மரியன்னை பக்திக்கு பரிசுத்த தம திரித்துவத்தின் முழு அனுமதியும் இருக்கிறது என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
இயேசு முழுமையாகக் கடவுள்,
முழுமையாக மனிதன்.
இயேசு முழுமையாகக் கடவுளாக இருப்பதால்
இயேசுவின் தாய்,
கடவுளின் தாய்.
இதைப் புரிந்து கொள்ளக்கூடிய விதமாக புரிந்து கொள்ள வேண்டும்.
இறைமகனின் தேவ சுபாவம் நித்தியமானது.
அவர் தனது மனித சுபாவத்துக்கு உரிய உடலை மரியாளின் உடலிலிருந்து எடுத்துக் கொண்டார்.
இயேசுவின் மனித உடலை அளித்தவள் மரியாள்.
தேவ சுபாவத்தை யாரும் அளிக்கவில்லை. அது சுயமானது, நித்தியமானது.
மரியாளிடமிருந்து மனித உடலைப் பெற்றவர் கடவுள்.
மரியாளின் வயிற்றில் கடவுள் மனிதனாகப் பிறந்ததால் அவளைக் கடவுளின் தாய் என்கிறோம்.
இயேசு குழந்தையாய் மரியாளின் மடியில் இருந்த போதும்,
சிலுவையில் மரணம் அடைந்த பின் மரியாளின் மடியில் இருந்த போதும்
மரியாள் மனதில் "இது என் உடல்" என்ற எண்ணம் ஓடியிருக்க வேண்டும்.
இன்னொன்றையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இறைமகன் மனிதனாகப் பிறந்த பிறகுதான் அவருக்கு இயேசு என்ற பெயர் சூட்டப்பட்டது.
இயேசு என்ற பெயர் சூட்டப்பட்டது மனிதனாகப் பிறந்த கடவுளுக்கு.
கடவுள்தான்
தான் மனிதனாகப் பிறந்தபின் தனக்கு இயேசு என்னும் பெயர் சூட்டும் படி கபிரியேல் தூதர் மூலம் மரியாளுக்க் கட்டளை கொடுத்தார்.
"இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்."
(லூக்கா நற்செய்தி 1:31)
மனிதனாகப் பிறக்கும் வரை யாரும் இறைமகனை பெயர் சொல்லி அழைக்கவில்லை.
குழந்தை பிறந்த எட்டாம் நாள் அவருக்கு இயேசு என்னும் பெயர் சூட்டப்பட்டது.
தந்தை என்ற முறையில் யோசேப்பு இயேசு என்று பெயர் சூட்டும் போது இயேசு என்று அழைத்திருப்பார்.
ஆனாலும் பாலூட்டும் போதும், குழந்தையைக் கொஞ்சும் போதும் மரியாள் தான் இயேசுவை அடிக்கடி அதிகமாக பெயர் சொல்லி அழைத்திருப்பார்.
அவர் அழைத்த இயேசு கடவுள்.
நாம் போக வேண்டியது கடவுளிடம் தான்.
தாய் வழியாகப் போவது எளிது.
இதை நமது பிரிவினை சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment