Saturday, May 31, 2025

"பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், "ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்" என்று சொல்லி உயிர்விட்டார்."(திருத்தூதர் பணிகள் 7:60)



"பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், "ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்" என்று சொல்லி உயிர்விட்டார்."
(திருத்தூதர் பணிகள் 7:60)

முதல் வேத சாட்சியான புனித முடியப்பர் தன்னைக் கொல்வதற்காக கற்களை எறிந்தவர்களுக்காக வேண்டிய செபம்.

இயேசு சிலுவையில் தொங்கும் போது தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக வேண்டிய செபத்தை முடியப்பரும் சொல்கிறார்.

இயேசுவை அவர் பின் பற்றியது போல நாமும் பின் பற்ற வேண்டும் என்பதற்கு அவர் ஒரு முன்மாதிரிகை.

நற் செய்தியை அறிவித்த இயேசுவை பரிசேயர்களும், மறை நூல் அறிஞர்களும் வெறுத்தார் கள்.

அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.

அவர் சிலுவையில் தொங்கும் போது அவர்களை மன்னித்தார்.

இயேசுவைப் பின்பற்றி நற் செய்தியை அறிவித்த முடியப்பரையும் பரிசேயர்கள் வெறுத்தார்கள்.

அவரைக் கல்லால் எறிந்து கொன்றார்கள்.

அவரும் சாகுமுன் தன்னைக் கல்லால் எறிந்தவர்களை மன்னிக்கும் படி இறைவனிடம் வேண்டினார்.

இயேசுவின் போதனைப்படி முடியப்பர் தன்னைப் பகைத்தவர்களை நேசித்தார், அவர்களுக்காக செபித்தார்.

அவரைக் கல்லால் எறிந்தவர்களுள் சவுலும் ஒருவர்.

சவுல் மனம் திரும்பியதற்குக் முடியப்பரின் செபமும் காரணமாக இருந்திருக்கலாம்.

அவரது செபத்தைத் கேட்டு அதற்குப் பதில் அளிக்கும் வகையில் இறைவன் சவுலைப் பவுலாக மாற்றியிருக்கலாம்.

செபத்திற்கு வல்லமையைக் கொடுப்பது இறைவன் தான்.

முடியப்பரைப் போலவே நாமும் இயேசுவின் சீடர்கள்.

நாமும் நற் செய்தியை அறிவிக்கிறோம்.

முடியப்பருக்கு நேர்ந்தது நமக்கும் நேரலாம்.

ஆகவே முடியப்பரின் மனப்பக்குவத்தை நாமும் கொண்டிருப்போம்.

இயேசுவைப் பகைப்பவர்களை நாம் நேசிப்போம்.

அவர்களுக்காக இயேசுவிடம் செபிப்போம்.

நமது செபம் கேட்கப்படும்.

இன்று இயேசுவை வெறுப்பவர்கள் நமது செபத்தினால் மனம் திரும்பி இயேசுவிடம் வருவார்கள்.

பவுலைப் போலவே செயல்படுவார்கள்.

அதற்கு நமது மன்னிப்பும், செபமும் காரணமாக இருக்கட்டுமே.

லூர்து செல்வம்.

Friday, May 30, 2025

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? (லூக்கா.1:43)



என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?   (லூக்கா.1:43)

அன்னை மரியாள் வாழ்ந்த நாசரேத் கலிலேயாவில் இருக்கிறது.

எலிசபெத்தம்மாள் வாழ்ந்த மலை நாடு யூதேயாவில் இருக்கிறது.

இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் ஏறக்குறைய 90 மைல்கள்.

மரியாளின் வயிற்றில் இறைமகன் மனுமகனாக உருவெடுத்த உடனே ஏற்கனவே ஆறுமாத கற்பிணியான எலிசபெத்திற்கு உதவிகரமாக இருப்பதற்காக மலை நாட்டுக்குப் புறப்படுகிறாள்.

இன்று இருப்பது போல போக்குவரத்து வசதிகளோ, வாகன வசதிகளோ இல்லாத காலம் அது. 

நடந்து செல்ல வேண்டும் அல்லது கழுதையில் செல்ல வேண்டும்.

வயிற்றில் இருப்பவர் உலகைப் படைத்த இறை மகன்.

மரியாள் அவருடைய அடிமை.

"இதோ, ஆண்டவருடைய அடிமை."

ஆண்டவருடைய ஏவுதலால் அடிமை மேற்கொண்ட முதல் பிறர் அன்புப் பயணம்.

நாசரேத் - பெத்லகேம் 
பெத்லகேம் - எகிப்து
எகிப்து - நாசரேத் 
பயணங்களில் யோசேப்பின் துணை இருக்கும்.

இப்போது யோசேப்பு ஊரில் இல்லை, இயேசு உற்பவித்ததே அவருக்குத் தெரியாது.

14 வயதுப் பெண் தனியாக, இல்லை, வயிற்றில் குழந்தையுடன் கட்டப்பட்டு 90 மைல்கள் பயணித்து எலிசபெத்தின் வீட்டை அடைந்து விட்டாள்.

மரியாள் எலிசபெத்தை வாழ்த்தினார்.

வாழ்த்திய போது இரண்டு நிகழ்வுகள் நடந்தன.

1. உற்பவித்து சில நாட்களே ஆன இயேசுவும், உற்பவித்து ஆறு மாதங்கள் ஆன திரு முழுக்கு அருளப்பரும் சந்தித்துக் கொண்டனர்.

அந்த சந்திப்பின்போது, 

தூய ஆவியின் வல்லமையால்,

 அருளப்பரின் சென்மப் பாவம் மன்னிக்கப்பட்டது.

அந்த மகிழ்ச்சியில் அவர் துள்ளினார்.

2. எலிசபெத் தூய ஆவியால் நிரப்பப்பட்டாள்.

 மரியாள் கடவுளை கருவில் தாங்கியிருப்பதைத்

 தூய ஆவியின் வல்லமையால் உணர்ந்தார்.

அப்போது அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! 

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?"

என்றார்.

ஏனோ தெரியவில்லை மரியாள் என்று நாம் சொன்னவுடனே நமது பிரிவினை சகோதரர்களுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது.

அதிலும் நாம் மரியாளை இறைவனின் தாய் என்று சொல்வதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"மரியாளின் வயிற்றில் கருவாக உருவானது மனுமகன் தானே.

மனிதனாகிய இயேசுவின் தாயை நீங்கள் எப்படிக் கடவுளின் தாய் என்று அழைக்கலாம்?" என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்குப் பதில் சொல்வதற்காகத்தான் அன்றே தூய ஆவி எலிசபெத்தைப் பேச வைத்தார்.

"என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?"

எலிசபெத் மரியாளை "ஆண்டவரின் தாய்" என்று அழைக்கிறாள்.

கடவுள் மரியாளின் வயிற்றில் மனிதனாக உற்பவித்தார்.

மரியாளின் வயிற்றில் மனிதனாக உற்பவித்தது யார்?

கடவுள்.

ஆகவேதான் மரியாளைக் கடவுளின் தாய் என்கிறோம்.

கபிரியேல் தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தபோது

மரியாள்,"இதோ, ஆண்டவருடைய அடிமை." என்றாள்.

அதே ஆண்டவர் தான் அவள் வயிற்றில் மனுமகனாக உருவெடுத்தார்.

ஆகவே அவள் ஆண்டவரின், கடவுளின், தாய்.

மரியன்னை பக்தியை முதலில் துவக்கி வைத்தவர்கள் கபிரியேல் தூதரும், எலிசபெத்தும் தான்.

இன்னொன்றையும் இப்போது நினைவில் கொள்ள வேண்டும்.

கபிரியேல் ஒரு தூதர்.

அவரை அனுப்பியவர் தந்தை இறைவன். இறைவன் சொல்லச் சொன்னதைத் தான் தூதர் சொன்னார்.

ஆகவே மரியன்னை பக்தி இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டது.

நாம் மங்கள வார்த்தை செபம் சொல்லும் போது,

"அருள் நிறைந்தவரே, ஆண்டவர் உம்முடனே." இவை கபிரியேல் தூதரின் வார்த்தைகள். தந்தை இறைவன் சொல்லச் சொன்ன வார்த்தைகள்.

நாம் "மரியே வாழ்க" என்பதை மட்டும் சேர்த்திருக்கிறோம்.

 "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே; 
உம் வயிற்றின் கனியும்  ஆசீர்வதிக்கப்பட்டதே."

இவை தூய ஆவி எடுத்துக் கொடுத்து எலிசபெத் சொன்ன வார்த்தைகள்.

கபிரியேல் தூதர், எலிசபெத் ஆகியோரின் வார்த்தைகளின் அடிப்படையில் தான் மரியை நாம் "இறைவனின் தாயே" என்று அழைக்கிறோம். 

மரியன்னை பக்திக்கு பரிசுத்த தம திரித்துவத்தின் முழு அனுமதியும் இருக்கிறது என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

இயேசு முழுமையாகக் கடவுள்,

முழுமையாக மனிதன்.

இயேசு முழுமையாகக் கடவுளாக இருப்பதால் 

இயேசுவின் தாய்,
கடவுளின் தாய்.

இதைப் புரிந்து கொள்ளக்கூடிய விதமாக புரிந்து கொள்ள வேண்டும்.

இறைமகனின் தேவ சுபாவம் நித்தியமானது.

அவர் தனது மனித சுபாவத்துக்கு உரிய உடலை மரியாளின் உடலிலிருந்து எடுத்துக் கொண்டார்.

இயேசுவின் மனித உடலை அளித்தவள் மரியாள்.

தேவ சுபாவத்தை யாரும் அளிக்கவில்லை. அது சுயமானது, நித்தியமானது.

மரியாளிடமிருந்து மனித உடலைப் பெற்றவர் கடவுள்.

மரியாளின் வயிற்றில் கடவுள் மனிதனாகப் பிறந்ததால் அவளைக் கடவுளின் தாய் என்கிறோம்.

இயேசு குழந்தையாய் மரியாளின் மடியில் இருந்த போதும், 

சிலுவையில் மரணம் அடைந்த பின்  மரியாளின் மடியில் இருந்த போதும்

மரியாள் மனதில் "இது என் உடல்" என்ற எண்ணம் ஓடியிருக்க வேண்டும்.

இன்னொன்றையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இறைமகன் மனிதனாகப் பிறந்த பிறகுதான் அவருக்கு இயேசு என்ற பெயர் சூட்டப்பட்டது.

இயேசு என்ற பெயர் சூட்டப்பட்டது மனிதனாகப் பிறந்த கடவுளுக்கு.

கடவுள்தான் 
தான் மனிதனாகப் பிறந்தபின் தனக்கு இயேசு என்னும் பெயர் சூட்டும் படி கபிரியேல் தூதர் மூலம் மரியாளுக்க் கட்டளை கொடுத்தார்.


"இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்."
(லூக்கா நற்செய்தி 1:31)

மனிதனாகப் பிறக்கும் வரை யாரும் இறைமகனை பெயர் சொல்லி அழைக்கவில்லை.

குழந்தை பிறந்த எட்டாம் நாள்  அவருக்கு இயேசு என்னும் பெயர் சூட்டப்பட்டது.

தந்தை என்ற முறையில் யோசேப்பு இயேசு என்று பெயர் சூட்டும் போது இயேசு என்று அழைத்திருப்பார்.

ஆனாலும் பாலூட்டும் போதும், குழந்தையைக் கொஞ்சும் போதும் மரியாள் தான் இயேசுவை அடிக்கடி அதிகமாக பெயர் சொல்லி அழைத்திருப்பார்.

அவர் அழைத்த இயேசு கடவுள்.

நாம் போக வேண்டியது கடவுளிடம் தான்.

தாய் வழியாகப் போவது எளிது.

இதை நமது பிரிவினை சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

லூர்து செல்வம்.

Thursday, May 29, 2025

கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். (அரு.16:24)



 கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். (அரு.16:24)

ஒரு நாள் மாணவர்களுக்கு English Grammar சார்ந்த பாடம் நடத்தி விட்டு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் என்று சொன்னேன்.

மாணவர்கள் அமைதியாக இருந்தனர்.

"எல்லாம் தெரிந்தவர்களுக்கும் சந்தேகம் வராது. ஒன்றுமே தெரியாத முட்டாளுக்கும் சந்தேகம் வராது." என்றேன்.

ஒரு மாணவன் எழுந்து,

"சார், ஒரு சந்தேகம்." .

''கேள்."

"இந்தியா பாகிஸ்தான் போரில் எந்த நாடு வெற்றி பெறும்."

"நான் என்ன பாடம் நடத்தினேன்."

"English Grammar."

"நான் நடத்திய பாடத்தில் சந்தேகம் இருந்தால் கேட்க வேண்டும்."

"சார், நீங்கள்தானே "ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்" என்று சொன்னீர்கள்.

நான் மனதில் தோன்றிய சந்தேகத்தைச் சொன்னேன்."

"கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள்"

என்ற இயேசுவின் வார்த்தைகளைப் பொருத்த மட்டிலும் நம்மில் அநேகர் அந்த மாணவனைப் போல்தான் நடந்து கொள்கிறோம்.

இயேசு எதற்காக உலகுக்கு வந்தாரோ அதைச் சார்ந்த உதவிகளை அவரிடம் கேட்டால் கேட்டது கட்டாயம் கிடைக்கும்.

 நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும், பாவங்களை மன்னிக்கவும் தான் இயேசு உலகுக்கு வந்தார்.

"இயேசுவே, என் பாவங்களுக்காக
மனம் வருந்துகிறேன். என் பாவங்களை மன்னியும்."

"இயேசுவே, நான் படும் கட்டங்கள் எல்லாவற்றையும் எனது பாவங்களுக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
ஏற்றுக் கொள்ளும்."

"இயேசுவே, நான் பாவத்தில் விழாதபடி என்னைக் காப்பாற்றும்.
பாவ சந்தர்ப்பங்களை நான் விலக்க எனக்கு உதவி செய்யும்."

"இயேசுவே, என் அயலானில் உம்மைக் காண உதவும். அவன் எனக்கு விரோதமாக ஏதாவது தவறு செய்தால் அவனை மன்னிக்கவும், அவனுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும் எனக்கு வரம் தாரும்."

இவை போன்ற செபங்களைச் செய்தால் அவை கட்டாயம் கேட்கப்படும்.

ஆனால் ஆன்மாவைப் பற்றிக் கவலைப் படாமல் '

"இயேசுவே, எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க உதவும்.

குழந்தையை வளர்க்கப் போதுமான பண வசதியைத் தாரும்.

விவசாயத்தில் நல்ல வருமானத்தைத் தாரும்.

நான் எழுதியுள்ள தேர்வில் வெற்றியைத் தாரும்.

எனக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க உதவும்."

போன்ற உலகைச் சார்ந்த  உதவிகளை மட்டும் கேட்டால் அவை நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவிகரமாக இருந்தால் மட்டும் தருவார். ஆன்மீக வாழ்வுக்கு இடையூறாக இருக்குமானால் கட்டாயம் தர மாட்டார்.

உலகைச் சார்ந்த  உதவிகளைப் பற்றி கொஞ்சம் தியானிப்போம்.

 உலகில் வாழ்ந்தாலும் மனிதன் ஒரு ஆன்மீகப் பயணி தான்.

அவனுக்கு உலகைச் சார்ந்த உடல் இருந்தாலும் அவன் இயக்கப்படுவது விண்ணைச் சார்ந்த ஆன்மாவினால்தான்.

உண்மையில் அவன் உலகில் வாழவில்லை, பயணிக்கிறான்.

சென்னையிலிருந்து தென்காசிக்கு ஒருவன் புகை வண்டியில் பயணிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

புகை வண்டியில் உள்ள பொருட்களை அவன் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் உரிமை கொண்டாட முடியாது. 

இரயிலில் அவன் பயணிக்கிறான், வாழவில்லை. 

தென்காசிக்கு வந்தவுடன் இரயிலை விட்டு இறங்கி விட வேண்டும்.

அதற்குப்பின் அவனுக்கும், இரயிலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. 

அதே போல் தான் மனிதன் உலகில் வாழப் பிறக்கவில்லை, விண்ணை நோக்கிக் பயணிக்கவே பிறக்கிறான்.

ஆக மனிதன் ஒரு ஆன்மீகப் பயணி.

அவனது உடல் உட்பட அனைத்து லௌகீகப் பொருட்களையும் பயணத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம், உரிமை கொண்டாட முடியாது.

மரணம் வந்தவுடன் பயணம் முடிந்து விடும். பயன்படுத்திய அத்தனையையும் உலகில் விட்டு விட்டு அவன் விண்ணக வீட்டிற்குள் நுழைய வேண்டும்.

பயணத்திற்கு ஏற்பாடு செய்தவர் கடவுள். பயணத்திற்கு போது பயணத்தில் உதவுவதற்காக ஏதாவது பொருள் தந்து உதவும்படி கடவுளிடம் கேட்கலாம்.

அது பயணத்துக்கு உதவக்கூடிய பொருளாக இருந்தால் கடவுள் கட்டாயம் தருவார்.

பயணத்துக்கு இடையூறு விளைவிக்கும் பொருளாக இருந்தால் கட்டாயம் தரமாட்டார்.

உதவக்கூடிய வேறு பொருளைத் தருவார்.

பயணத்தின் போது ஒருவருக்குச் சுகமில்லை என்று வைத்துக் கொள்வோம்.

அவருக்கு சுகமாக வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது கடவுள் தான்.

ஆகவே சுகம் வேண்டி சம்பந்தப்பட்டவர் வேண்டினால்

சுகத்தால் அவரது ஆன்மீக வாழ்வு நலம் பெறும் என கடவுள் கருதினால் சுகம் கொடுப்பார். 

மரணம் தான் அவருக்கு நல்லது என்று கருதினால் அவரை தம்மிடம் அழைத்துக் கொள்வார்.

ஆகவே இறைவனிடம் எதையாவது கேட்கும் போது, 

"இறைவா, நான் கேட்பது எனது ஆன்மீக வாழ்வுக்கு நல்லது என நீர் நினைத்தால் தாரும்.

ஆன்மீக  வாழ்வுக்கு பயன் படாது என்று நீர் நினைத்தால் எது நல்லதோ அதைத் தாரும்."

கேட்போம். 

முடிவை கடவுளிடம் விட்டு விடுவோம். 

லூர்து செல்வம்.

Wednesday, May 28, 2025

"எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார்.(அரு.20:23)


"எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார்.(அரு.20:23)

இயேசு உலகில் பிறந்தது நோயாளிகளைக் குணமாக்குவதற்காக அல்ல.

அவரது பொது வாழ்வின் போது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக் குணமாக்கினார்.

அவரது இரக்க சுபாவத்தினாலும், தனது புதுமைகளால் 
தான் இறைமகன் என்பதை நிருபிக்கவும் அவர் புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்கினார்.

ஆனால் அவர் மனிதனாகப் பிறந்ததன் நோக்கம் அது அல்ல.

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும், பாவங்களை மன்னிக்கவுமே அவர் உலகுக்கு வந்தார்.

உலகம் முடியும் மட்டும் நிரந்தரமாக நம்முடன் வாழ திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

இந்த இரண்டு நோக்கங்களுக்காகத்தான் குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

பாவ மன்னிப்பும், திவ்ய நற்கருணையும் இல்லை என்றால் கிறித்தவம் இல்லை.

ஆனால் நமது பிரிவினை சகோதரர்கள் இந்த இரண்டையும் பற்றி அக்கறைப் படுவதில்லை.

அவர்களுடைய வழிபாடுகளில் பாவ சங்கீர்த்தனமும், திருப்பலியும் இல்லை.

பைபிள் மட்டும் போதும் என்பவர்கள் பைபிளை ஒழுங்காக வாசிப்பதில்லை.

இயேசு உயிர்த்தெழுந்த பின் தனது சீடர்களுக்குக் காட்சி கொடுத்தபோது,

அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார்.

இயேசுவின் இந்த வார்த்தைகள் இரண்டு மறை உண்மைகளை நமக்குத் தெளிவு படுத்துகின்றன.

1. பரிசுத்த தம திரித்துவத்தில் மூன்று ஆட்களும் ஒருவருள் ஒருவர் இருக்கின்றனர்

மகன் தந்தையுள்ளும் தந்தை மகனுள்ளும் இருப்பது போல, 

மகன் தூய ஆவியுள்ளும், தூய ஆவி மகனுள்ளும் இருக்கின்றனர்.

தூய ஆவி இயேசுவுக்குள் இருந்ததால்தான், இயேசு சீடர்கள் மீது ஊதி,

"தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்." என்றார்.

ஏழு தேவத் திரவிய அனுமானங்களிலும் செயல் புரிபவர் தூய ஆவியே.

நாம் திரு முழுக்கு பெற்றபோது தூய ஆவி நம்மீது இறங்கி வந்ததால்தான் நமது சென்மம் பாவம் மன்னிக்கப்பட்டு நாம் கிறித்தவர்களாக மாறினோம்.

உறுதிப் பூசுதலின் தூய ஆவி இறங்கி வந்ததால்தான் நாம் விசுவாசத்தில் உறுதியானோம்.

பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது தூய ஆவி இறங்கி வருவதால் தான் நமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

ஆனால் தூய ஆவி தனியாக வருவதில்லை.

மூவரும் ஒருவருள் ஒருவர் இருப்பதால் பரிசுத்த தம திரித்துவ இறைவனே இறங்கி வருகிறார்.

குருவானவர் ஒவ்வொரு தேவத் திரவிய அனுமானத்தையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் தான் நிறைவேற்றுகிறார்.

2. பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு தன் குருக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

மன்னிப்பவர் இயேசுதான். குருக்கள் வழியாக மன்னிக்கிறார்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது யார்? 

அரசு. 

எப்படி கொடுக்கிறது? 

வங்கியின் மூலமாக. 

விவசாயிகளுக்கு கடன் கொடுப்பது யார்? 

அரசு. 

எப்படிக் கொடுக்கிறது? 

வங்கியின் மூலமாக. 

நமது பாவங்களை மன்னிப்பது யார்? 

கடவுள். 

யார் மூலமாக?

தன்னுடைய குருக்களின் மூலமாக.

நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு தன்னுடைய சீடர்களுக்கு கொடுத்தார்.

அதே அதிகாரம் அவர்களுடைய  வாரிசுகளாகிய குருக்களுக்கும் இருக்கிறது. 

எப்படி அப்பத்தை தன் உடலாகவும் ரசத்தை தன் இரத்தமாகவும் மாற்றும் வல்லமையை இயேசு தன்னுடைய குருக்களோடு பகிர்ந்து கொண்டாரோ 

அதே போல் தான் நமது பாவங்களை மன்னிக்கும் வல்லமையையும் தனது குருக்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார். 

நாம் பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது நாம் பாவங்களை அறிக்கையிடுவது இயேசுவிடம்தான். 

குருவானவர் மூலமாக.

பாவங்களுக்கான மனத்தாபத்தோடு அறிக்கையிட வேண்டும்.

குருக்களுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இல்லை என்று கூறுபவர்கள் 

இயேசு கொடுத்த அதிகாரத்தை மறுப்பவர்கள், அதாவது இயேசுவையே மறுப்பவர்கள்.

இயேசுவை மறுப்பவர்களை எப்படி கிறித்தவர்கள் என்று அழைக்க முடியும்?

கத்தோலிக்கர்களாகிய நாம் திருச்சபையின் பாரம்பரியத்தையும், பைபிளையும் ஏற்றுக் கொள்கிறோம்.

சீடர்கள் போதிக்க ஆரம்பித்த போது அவர்கள் கையில் புதிய ஏற்பாடு இல்லை. 

அவர்களுடைய போதனைக்கு ஆதாரம் என்ன?

இயேசுவின் வார்த்தைகள். அதுவரை எழுதப்படாத வார்த்தைகள். 

வாய்மொழி வழியாக நமக்கு வந்து சேர்ந்த இயேசுவின் வார்த்தைகள்தான் பாரம்பரியம்.

பாரம்பரியத்திலிருந்துதான் பைபிள் பிறந்தது.

"வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை."
(அரு. 20:30)

எழுதப்படாத வார்த்தைகளும் இயைசுவின் வார்த்தைகள் தான். 


 ஏழு தேவத் திரவிய அனுமானங்களையும் ஏற்படுத்தியவர் இயேசுதான்.


நாம் பாவ சங்கீர்த்தனம் செய்வதும், 

திருப்பலியிலும், திருவிருந்திலும் பங்கெடுப்பதும் 

இயேசுவின் போதனைப்படிதான்.

இவற்றை ஏற்க மறுப்பவர்கள் இயேசுவின் போதனைகளை மறுப்பவர்கள் என்று தான் அர்த்தம். 

நமது பங்கு குருவுக்கு நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இருக்கிறது. 

அவரை நாம் முழுமையாகப் பயன்படுத்தி பரிசுத்தர்களாக வாழ்வோம்.

நம் நிமித்தம் விண்ணகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும். 

லூர்து செல்வம்.

Tuesday, May 27, 2025

"பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர்மறந்துவிடுகிறார்." (அரு.16:21)



"பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர்மறந்துவிடுகிறார்."  
(அரு.16:21)

புதிதாகத் திருமணமான தம்பதியர் முதல் நாளிலேயே தங்களுடைய எதிர் காலம் பற்றிய கற்பனையில் மிதக்க ஆரம்பித்து விடுவார்கள்.

தங்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிய கற்பனைத் தேரில் வலம் வர ஆரம்பித்தது விடுவார்கள்.

குழந்தை உண்டானவுடன் தாங்கள் ஏதோ சாதிக்க முடியாததைச் சாதித்து விட்டதாக மகிழ்ச்சிக் கடலில் நீந்த ஆரம்பித்து விடுவார்கள்.

பேறு காலம் நெருங்க நெருங்க மகிழ்ச்சியும், பயமும் கலந்து தாயை ஆட்கொள்ள ஆரம்பிக்கும்.

பேறு கால வேதனையை நினைத்து பயப்பட ஆரம்பிக்கும் தாய், பிறக்கப் போகும் குழந்தையை நினைத்து நினைத்து மகிழ்வாள்.

குழந்தை பிறக்கும் போது தாய் படும் வேதனையை அப்படியே வெளிப் படுத்த வார்த்தைகள் இல்லை.

அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.

ஆனால் குழந்தை பிறந்தவுடன் தாய் அனுபவிக்கும் மட்டற்ற மகிழ்ச்சியையும் முழுமையாகப் புரிய வைக்க வார்த்தைகள் இல்லை.

விபரிக்க முடியாத வேதனை, விபரிக்க முடியாத மகிழ்ச்சி இரண்டும் பேறு காலத்திற்கு மட்டுமே உரியன.

இந்த லௌகீக அனுபவத்தை அப்படியே ஆன்மீக அனுபவத்தற்கு ஒப்புமைப் படுத்துகிறார் இயேசு.

"பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய்

 தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். 

ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார்.''

ஆன்மீகத்தில் இயேசுவை மணவாளனாகவும், நமது ஆன்மாவை மணவாட்டியாகவும் கற்பனை செய்வது வழக்கம்.

நமது ஆன்மீக அனுபவம் ஆரம்பிக்கு முன், 

இவ்வுலகில் நமது ஆன்மீக வாழ்வில் சுமக்க வேண்டிய சிலுவையைப் பற்றியும், வாழ்வின் இறுதியில் நாம் அனுபவிக்கப் போகும் பேரின்பத்தைப் பற்றியும்  ஞான உபதேச வகுப்பில் சொல்லியிருப்பார்கள்.

அப்போது நாம் பெற்றது ஞான அறிவு. 

அறிவு வாழ்க்கையாக மாறும் போது தான் சிலுவை என்றால் என்ன என்று புரியும்.

இறைமகன் தான் மனிதனாகப் பிறந்து பாடுகள் படப் போவதை நித்திய காலமாத் திட்டமிட்டிருந்தார்.

தனது பொது வாழ்வின் போதும் தான் படப்போகும் பாடுகளைப் பற்றியும், சிலுவை மரணத்தைப்
பற்றியும்,  உயிர்ப்பைப் பற்றியும் தன் சீடர்களிடம் அடிக்கடி சொன்னார்.

ஆனால் பாடுகள் ஆரம்பித்ததற்கு முந்திய நாள், வியாழன் இரவில் கெத்சமனித் தோட்டத்தில் பாடுகளை நினைத்த போது ஏற்பட்ட பயத்தின் காரணமாக இரத்த வியர்வை வியர்த்தது இயேசுவுக்கு ஏற்பட்ட பிரசவ வேதனை.

பச்சை மரத்துக்கே இந்தப் பாடென்றால் பட்ட மரத்துக்கு எந்தப் பாடு.

முக்காலமும் அறிந்த கடவுளுக்கே 
இந்தப் பாடென்றால் சாதாரண மனிதர்களாகிய நமக்கு எந்தப் பாடு.

குழந்தை பிறக்கும் முன் பிரசவ வேதனை அனுபவிக்க வேண்டும் என்று தாய்க்குத் தெரியும்.

வேதனை வந்த பிறகு தான் அது என்ன என்று புரியும்.

நமக்கும் சிலுவை வருமட்டும் நாமே மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவோம்.

வந்த பின் அறிவுரையை நமக்கே கூறமாட்டோம்.

''இயேசுவே, இந்தத் துன்பத்திலிருந்து விடுதலை கொடுத்தருளும்."

என்று இயேசுவிடமே வேண்டுவோம்.

அப்போது இயேசு சொல்வார்,

"கெத்சமனி தோட்டத்தில் நான் உனக்கு முன்மாதிரிகை
காட்டியபடியே செய்."

"இயேசுவே என் விருப்பப்படி அல்ல, உமது விருப்பப்படியே நடக்கட்டும்"  என்று நம்மையே அவரிடம் கையளித்து விட வேண்டும்.

துன்பத்தின் மத்தியிலும் வரவிருக்கும் பேரின்பத்தை எண்ணி மகிழ வேண்டும்.

ஆனாலும் நாம் என்ன செய்கிறோம்?

திவ்ய நற்கருணை முன்பாக அமர்ந்து உம் விருப்பப்படியே நடக்கட்டும் என்று வேண்டி விட்டு

வெளியே வந்தவுடன் மருத்துவ மனைக்குப் புறப்பட்டு விடுவோம்.

எங்கே போனாலும் கடவுள் விருப்பப்படியேதான் நடக்கும்.

நாமே ஏற்றுக் கொண்டால் விண்ணகம் பேரின்பம் அதிகமாகும்.

வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டால் நமக்கு ஆன்மீகப் பலன் எதுவும் கிடைக்காது.

நாம் சுமக்க வேண்டிய சிலுவை பல உருவங்களில் வரலாம்.


நோய் நொடிகள், 
குடும்ப வாழ்வில் ஏற்படக் கூடிய கட்டங்கள், 
மற்றவர்களால் ஏற்படக்கூடிய துன்பங்கள், 
மற்றவர்கள் நமக்குத் தர வேண்டிய மரியாதைக் தராதிருத்தல், 
சுருக்கமாக நம் மனதுக்குப் பிடித்தமில்லாத எது நடந்தாலும் அது நமக்குச் சிலுவைதான்.

கைகால் ஊனம் உள்ளவர்கள் அவர்களே அவர்களுக்குச் சிலுவையாக மாறி விடுகிறார்கள்.

சிலுவை எந்த உருவில் வந்தாலும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதிலிருந்து தப்பிக்க நாம் செய்யும் முயற்சியை அதை அனுபவிக்க நாம் செலவிட்டால் நாம் பாக்கிய சாலிகள்.

நோய் வந்த போது அதை குணமாக்க முயற்சி எடுக்காமல் சிலுவையாக ஏற்றுக் கொண்ட புனிதர்களில் சிலர்.

1.புனித லிட்வினா
2.புனித அல்போன்சா
3.புனித சிறு மலர் தெரசா.
4.புனித ஜேன் பிரான்சிஸ் டி சாண்டல்.
5. புனித பெனடிக்ட் ஜோசப் லேப்ரே.

பிறக்கயிருக்கும் குழந்தையை எண்ணி பிரசவ வேதனையை ஏற்றுக் கொள்ளும் தாயைப் போல

நாமும் சிலுவைகள் வரும் போது,
அவற்றின் முடிவில் நமக்காகக் காத்திருக்கும் நித்திய பேரின்ப வாழ்க்கையை எண்ணி சிலுவைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம்.

சிலுவைகளுக்கு முடிவு உண்டு.

பேரின்ப வாழ்வு நிலையானது. 

லூர்து செல்வம்

Monday, May 26, 2025

தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் "அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்" என்றேன். (அரு.16:15)



தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் "அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்" என்றேன். (அரு.16:15)

இயேசு சீடர்களிடம் பேசும் போதே 
பரிசுத்த தம திரித்துவத்தைப் பற்றிய மறை உண்மையை   வெளிப்படுத்துகிறார்.

சில நேரங்களில் தந்தைக்கும் அவருக்கும் உள்ள உறவு பற்றி பேசுவார்.

சில நேரங்களில் அவருக்கும் தூய ஆவிக்கும் உள்ள உறவு பற்றி பேசுவார்.

சில‌ நேரங்களில் மூவரையும் பற்றி பேசுவார்.

இன்றைய தியானித்துக்கு உரிய வசனத்தில் மூவரும் வருகிறார்கள்.

எப்படிப் பேசினாலும் மூவரும் ஒரே கடவுள் என்ற தொனி இருக்கும்.

இன்றைய வாசகத்தில் இயேசு கூறியதைத் தியானிப்போம்.

தியானிக்கும் போது தம திரித்துவம் பற்றிய திருச்சபையின் போதனையை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

திருச்சபையின் போதனையைத் தான் இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் தியானிக்கிறோம்.

வசனத்தைப் பிரித்துத் தியானித்தால் உண்மையைப் புரிய எளிதாக இருக்கும்.

1. தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. 

2. எனவேதான் "அவர் என்னிடமிருந்து பெற்று

 3. உங்களுக்கு அறிவிப்பார்" என்றேன்

1. தந்தை.

2. அவர்--தூய ஆவி.
     என்---மகன்.
3. உங்கள் ---- சீடர்கள்.


'உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்." (16:13)

மூன்று ஆண்டுகளாக இயேசு தனது சீடர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

அவர்களுக்கு நற் செய்தியை அறிவித்து அதை எப்படி வாழ வேண்டும் என்று அவரே வாழ்ந்து காண்பித்து பயிற்சி அளித்தார்.


இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? 
(மத்தேயு நற்செய்தி 13:55)


இயேசு நசரேத்தில்‌‌ வாழ்ந்த போது 
அன்னை மரியாளின் சகோதரியின் மக்களாகிய யாக்கோப்பு, , சீமோன், யூதா ஆகிய மூவரும் அங்கே தான் வாழ்ந்திருப்பார்கள்.

அப்போது இயேசு தன்னை இறைமகன் என்று வெளிப்படுத்தி யிருக்கா விட்டாலும், அவருடைய கீழ்ப்படிதலான வாழ்க்கை அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கும்.

தம்மோடு வாழ்ந்த 
அம்மூவரையும் தனது சீடர்களாகத் தேர்வு செய்து கொண்டார்.

இராயப்பரும், அந்திரேயாவும், பெரிய யாக்கோபும், அருளப்பரும் மீனவர்கள்.

இயேசு பொது வாழ்வுக்கு வந்த போது இவர்களைத் தனது சீடர்களாக தேர்வு செய்து கொண்டதோடு 

இராயப்பரின் மாமியார் இல்லத்தில் தான் இராயப்பரோடு தங்கினார்.

இராயப்பரும், அந்திரேயாவும் முதலில் பெத்சாய்தாவில் வாழ்ந்தவர்கள்.

இயேசு அவர்களைத் தேர்வு செய்யு முன்பே அவர்கள் அவரைத் தேடி வந்தார்கள்.
(அரு.1:37-44 வசனங்களை வாசிக்கவும்)

இயேசு கானாவூர்த் திருமணத்திற்குச் சென்றிருந்த போது அவருடைய தாயும், சீடர்களும் அவரோடு சென்றார்கள்.

சீடர்கள் மாதாவின் உதவி செய்யும் குணத்தையும், இயேசுவின் வல்லமையையும் கண்டார்கள்.

இயேசுவின் 12 சீடர்களும் அவர் எங்கே சென்றாலும் அவருடன் சென்றார்கள்.

அவருடனே தங்கினார்கள்.

அவர் சொன்னதைக் கேட்டார்கள்.

ஆக இயேசு தனது வாழ்க்கை‌ மூலம் அவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

மூன்று ஆண்டு பயிற்சி காலத்தில்  இயேசு தந்தையைப் பற்றி பேசியிருக்கிறார், தூய ஆவியைப் பற்றியும் பேசியிருக்கிறார்.

இன்று நாம் தியானிக்க இருப்பது மூன்றாவது ஆண்டின் இறுதி நாளுக்கு முந்திய நாளில் பேசியது.


உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர்

"என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்."


இயேசு சீடர்களுக்குச் சொல்ல வேண்டிய அனைத்தையும் அவரிடமிருந்து பெற்று சீடர்களுக்கு அறிவிப்பார்.

வேறு வார்த்தைகளில், இயேசு அறிவிக்க விரும்புவதும், தூய ஆவி அறிவிப்பதும் ஒரே விடயம் தான்.

"தந்தையுடையவை யாவும் என்னுடையவையே"

இயேசு சீடர்களுக்கு அறிவிக்க விரும்புவது தந்தையின் எண்ணங்களையே.

வேறு வார்த்தைகளில்,

தந்தையின் எண்ணங்களும், மகனின் எண்ணங்களும் ஒரே எண்ணங்கள்தான்.

இப்போது பிரித்து தியானித்ததை சேர்த்து தியானிப்போம்.

தந்தை, மகன், தூய ஆவி மூவருக்கும் ஒரே எண்ணம்.

தந்தை நினைத்ததும், மகன் அறிவித்ததும், தூய ஆவி பெந்தகோஸ்து திருநாளன்று உறுதிப் படுத்தப் போவதும் ஒரே எண்ணம்தான்.

அப்புறம் ஏன்

"தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. 

எனவேதான் "அவர் என்னிடமிருந்து பெற்று

 உங்களுக்கு அறிவிப்பார்" என்று மூவரும் வெவ்வேறானவர்கள் போல சொல்கிறார்?

'வெவ்வேறானவர்கள் போல' அல்ல, வெவ்வேறானவர்கள் தான்.

தந்தை, மகன், தூய ஆவி மூவரும் வெவ்வேறான ஆட்கள், 

Father, Son, Holy Ghost are three distinct persons.

என்ற மறை உண்மையை நாம் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காகத் தான் இயேசு அவ்வாறு சொல்கிறார்.

மனிதனாகப் பிறந்தது மகன் மட்டும் தான்.

ஆனால் ஒரே கடவுள்தான் மனிதனாகப் பிறந்தார்.

புனித வியாழன் அன்று சீடர்களோடு பேசியவர் மனிதனாகப் பிறந்த ஒரே கடவுள்.

மனுமகனாகப் பிறந்த இறைமகன்.

இயேசுவின் வார்த்தைகளை
வாசிப்போம்,
யோசிப்போம்,
விசுவசிப்போம்,
வாழ்வோம்.

லூர்து செல்வம்

Sunday, May 25, 2025

"உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப்பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது." (அரு.16:2)



"உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப்பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது." (அரு.16:2)

இயேசு தனது பாடுகளுக்கு முந்திய இரவு, தனது சீடர்களுக்குத்  தனது உடலையும், இரத்தத்தையும் உணவாகக் கொடுத்து விட்டு,

தன்னைப் பின் பற்றி வாழும் அவர்களுக்கு என்ன நடக்கும் என்று முன்னறிவிக்கிறார்.

"உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப்பார்கள்.

 உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது.".  என்கிறார்.

குருவுக்கு என்ன நேருமோ அதெல்லாம் சீடர்களுக்கும் நேரும்.

இயேசுவைப் போலவே அவர்கள் பாடுகள் பட வேண்டியிருக்கும்.

இயேசுவைக் கைது செய்து இழுத்துப் போவதைப் போலவே அவர்களையும் இழுத்துச் செல்வார்கள்.

அவர்களைப் பாடுபடுத்திக் கொல்வது இறைவனுக்கு ஆற்றும் பணி என்று நினைக்கும் காலம் வரும் என்கிறார்.

சட்டத்தை மீறுவது தவறு என்று நாம் நினைக்கிறோம்.

ஆனால் சட்டப்படி தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள்.

கொலை செய்வது பாவம். 

ஆனால் அரசின் திட்டப்படி
 மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப் படுத்த வயிற்றில் வளரும் குழந்தையைக் கொல்லலாம் என்று சட்டப்படி நினைக்கிறவர்கள் இன்று கூட இருக்கிறார்களே!

தினமும் திருப்பலி நடக்கும் நமது ஆலயங்களைக்கூட கோர்ட் உத்தரவு பெற்று சட்டப்படி இடிக்கிறோம் என்று கூறுபவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள்.

ஆண்டவர் வாழும் ஆலயத்தை சட்டப்படி இடிப்பவர்களை மனம் திருப்பும்படி ஆண்டவரிடமே வேண்டிக் கொள்வோம்

சென்னையில் 25 ஆண்டுகளாக கிறித்தவர்கள் வழிபட்டு வரும் ஒரு ஆலயத்தை இடிக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்திருப்பதாகச் செய்தி ஒன்றைக் கேட்டேன்.

இயேசுவைச் சிலுவையில் அறையப் பிலாத்து அனுமதி கொடுத்ததற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வோம்,

கடவுளையே சிலுவையில் அறைந்தார்கள்.

அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

நம்மை அறைந்தாலும் ஏற்றுக் கொள்வோம், இயேசுவின் மகிமைக்காக.

பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். 

ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார். 

நாம் உலகில் வாழும் போது எத்தனை துன்பங்கள் வந்தால் என்ன,

நாம் விண்ணகம் செல்லும் போது அத்தனையும் பேரின்பமாக மாறும்.

இப்போது நாம் துயருறலாம்.

ஆனால் மோட்சத்தில்  கடவுளைக்  காணும்போது நமது  உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும்.

 நமது மகிழ்ச்சியை யாரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது. 

நம்மைப் பகைப்பவரகளால் நாம் துன்புறுத்தப்படும்போது இயேசுவுக்கும் அப்படியே நடந்தது என்பதை நினைவில் கொள்வோம்.

நாம் அதை ஏற்றுக் கொள்ளும் போது இயேசுவையே ஏற்றுக் கொள்கிறோம்.

நமது மத்திய அரசு கிறித்தவர்களுக்கு எதிரான அரசு.

மணிப்பூரில் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும்.

நமக்கும் அதே நடந்தால் குருவுக்கு நடந்ததுதான் சீடர்களுக்கும் நடக்கிறது என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்வோம்.

இயேசு பிறந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான மாசில்லாக் குழந்தைகளை ஏரோது கொன்றான்.

அதனால் குழந்தைகளுக்கு எந்த நட்டமும் இல்லை.

அவர்கள் மோட்சத்தில் இயேசுவோடு நித்திய பேரின்ப வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நாமும் அப்படியே வாழ்வோம்.

லூர்து செல்வம்.
.

Saturday, May 24, 2025

"இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள் மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம்."(திருத்தூதர் பணிகள் 15:28)



"இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள் மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம்."
(திருத்தூதர் பணிகள் 15:28)

திருச்சபையின் தலைவரான இராயப்பர் அந்தியோக்கியாவில் வாழ்ந்து வந்த புற இனத்து கிறித்தவர்களுக்கு சின்னப்பர், பரனபா, யூதா, சீலா ஆகியோர் மூலம்    அனுப்பிய கடிதத்தின் சில வரிகள் மேலே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சின்னப்பர் புற இனத்தவரின் அப்போஸ்தலர் என்று அழைக்கப் படுகிறார்.

புற இனத்தவர் என்றால்?

இயேசு பிறந்தது யூத இனத்தில், ஆனால் யூதர்களுக்காக மட்டும் பிறக்கவில்லை.

உலகில் வாழும் அனைத்து மக்களும் மீட்புப் பெறுவதற்காகப் பிறந்து, பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

யூதர்கள் அல்லாத மற்ற இனத்தவர் புற இனத்தவர் என்று அழைக்கப்பட்டனர்.

கிறித்தவத்தை யூதர்களும், புற இனத்தவரும் பின்பற்றினர்.

யூதர்கள் மோசேயின் திருச்சட்டப்படி வாழ்ந்து கொண்டிருந்தவர்கள்.

கிறித்தவத்தை ஏற்றுக் கொண்ட பிறகும் திருச்சட்ட விதியாகிய விருத்த சேதனம்  செய்தார்கள்.
மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள்.

இயேசு யூதர் என்ற முறையில் விருத்த சேதனம் செய்தார்.

ஆனால் மீட்புப் பெற விருத்த சேதனம் செய்ய வேண்டும் என்று அவர் போதிக்கவில்லை.

மீட்புப் பெற இறைவனையும், பிறரையும் நேசிக்க வேண்டும் என்று தான் போதித்தார்.

ஆனால் சில யூதர்கள் புற இனத்தவரும் விருத்த சேதனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்படி வலியுறுத்துவது தவறு, இயேசுவின் போதனைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்த இராயப்பர் ஒரு கடிதம் எழுதி, அதை சின்னப்பர் மூலம் அந்தியோக்கியாவில் வாழ்ந்த புற இனத்து கிறித்தவர்களுக்கு அனுப்பி வைத்தார்.

"இன்றியமையாதவற்றை" கட்டாயம் பின்பற்ற வேண்டிய இயேசுவின் போதனைகளைக் குறிக்கிறது.

"வேறு எந்தச் சுமையையும்" என்ற வார்த்தைகள் திருச்சட்ட விதியாகிய விருத்த சேதனத்தைக் குறிக்கின்றன.

"தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம்." என்ற வார்த்தைகள் 

அப்போது எருசலேமில் நற் செய்தியை அறிவித்துக் கொண்டிருந்த அப்போஸ்தலர்களான இராயப்பரும், யாக்கோபும் தூய ஆவியின் தூண்டுதலால் எடுத்த முடிவைக் குறிக்கின்றன.

சின்னப்பர் ஒரு பரிசேயர். ஆனால் புற இனத்தவர் விருத்த சேதனம் செய்ய வேண்டும் என்ற கருத்தை ஆதரிக்காதவர்.

இதைப்பற்றி முடிவாகக் கூற அப்போது எருசலேமில் இருந்த திருச்சபையின் தலைவரான இராயப்பரை அணுகினார்.

அப்போது எருசலேமில் ஆயராக   இருந்தவர் யாக்கோபு.

அவர்களுடைய ஆலோசனைப்படி எடுக்கப் பட்ட விருத்த சேதனம் தேவையில்லை என்ற முடிவை புற இனத்தாருக்கு அறிவிக்கிறார்.

இன்றைய வாசகம் விருத்த சேதனத்தைப் பற்றியது என்றாலும் வேறு சில உண்மைகளும் இதில் மறைந்து கிடக்கின்றன.

1. இயேசுவால் நிறுவப் பட்ட கத்தோலிக்க திருச்சபையில் என்ன முடிவாக இருந்தாலும் அதை தீர்மானிக்க வேண்டியது பாப்பரசர் தான்.

அதனால்தான் அந்தியோக்கியாவில் பணிபுரிந்து கொண்டிருந்த சின்னப்பரும், பர்னபாவும் இதைப் பற்றிப் பேச எருசலேமில் இருந்த இராயப்பரிடம் வந்தார்கள். இராயப்பர்தான் முடிவெடுத்தார், ஆயர் யாக்கோபு அவருக்கு ஆலோசனை நல்கினார்.

திருச்சபையின் வரலாற்றில் 
எருசலேம் சங்கம் தான் முதல் சங்கம்.

இன்றும் அதைப் பின்பற்றி பாப்பரசர் ஆயர்களின் உதவியோடு சங்கம் கூட்டி தான் விசுவாசம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கிறார்.

2. பழைய ஏற்பாட்டின் திருச்சட்டத்தை மோசே வழியாக மக்களுக்குக் கொடுத்தவர் கடவுள் தான்.

ஆகவேதான் இயேசு,

"திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். 
(மத்தேயு நற்செய்தி 5:17)
என்கிறார்.

இயேசுவின் கருத்துப்படி சட்டத்தின் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும்,
வெறுமனே எழுத்தல்ல.

We must observe the Spirit of the law, not merely its letter.

பரிசேயர்கள் திருச்சட்டத்தின் எழுத்துப்படிவாழ்வதிலேயே குறியாக இருந்தார்கள்.

இயேசு ஓய்வு நாளில் புதுமை செய்து நோயாளிகளைக் குணமாக்கியதைக் கூட சட்ட விரோதம் என்றார்கள்.

ஓய்வு நாளில் இறைப்பணி மட்டும் செய்ய வேண்டும் என்பது சட்டத்தின் நோக்கம்.

பிறரன்புப் பணி இறைப் பணிதான். ஆகவேதான் ஓய்வு நாளிலும் இயேசு நோயாளிகளைக் குணமாக்கினார்.

நாம் ஞாயிறுத் திருப்பலிக்குப் போய்க் கொண்டிருக்கும் போது வழியில் ஒருவர்  மயங்கிக் கிடந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?

மயங்கிக் கிடப்பவரை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

அவரை அப்படியே போட்டுவிட்டு கோயிலுக்குப் போய் விடக்கூடாது.

3. வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை ஆலயப் பணிக்குக் கொடுக்க வேண்டும் என்பது திருச்சட்டம்.

அதை வேண்டாம் என்று இயேசு சொல்லவில்லை.

சட்டத்தின் நோக்கம் ஆலயப் பணிக்கு உதவுவதுதான்.

தாய்த் திருச்சபை,

"நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும்"

என்று போதிக்கிறது. பத்தில் ஒரு பகுதி என்று கூறவில்லை.

இயேசுவின் போதனைதான் திருச்சபையின் போதனை.

4. என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.

மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். 

நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். 
(விடுதலைப் பயணம் 20:3-5)

இது மோசே வழியாக கடவுள் கொடுத்த சட்டம.

இந்த வசனங்களைப் பிடித்துக் கொண்டு நமது பிரிவினை சகோதரர்கள் நாம் புனிதர்களுக்கு  சுருபங்கள் செய்வதைச் சிலை வழிபாடு என்கிறார்கள்.

ஆண்டவருடைய வார்த்தைகளின் நோக்கம் என்ன?

"நான் மட்டுமே உனது தெய்வம.
என்னை மட்டுமே நீங்கள் வழிபட வேண்டும்.

வழிபடுவதற்காக யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்கக் கூடாது."

இறைவனுக்குச் செய்ய வேண்டிய வழிபாட்டைச் செய்வதற்காக சிலைகளை உருவாக்கக் கூடாது.

சட்ட மீறல் சுருபங்களைச் செய்வதில் இல்லை, இறைவனுக்குச் செய்ய வேண்டிய வழிபாட்டைச் செய்வதற்காக சிலைகளை உருவாக்குவதில் இருக்கிறது.

வகுப்பில் பாடநேரத்தில் ஒரு மாணவன் தூங்கிக் கொண்டிருக்கிறான்.

அவனை எழுப்பி விட்டு ஆசிரியர் கேட்கிறார்,

"பெஞ்ச் போடப்பட்டிருப்பது உட்கார்ந்து பாடத்தைக் கவனிக்கவா? உட்கார்ந்து தூங்கவா?"

சட்ட மீறல் பெஞ்ச் போடப்பட்டிருப்பதில் இல்லை,
தூங்குவதில்தான் இருக்கிறது.

நாம் சுருபங்களைச் செய்வது இறைவனுக்குச் செய்ய வேண்டிய வழிபாட்டை அவற்றுக்கு செய்வதற்கு அல்ல.

புனிதர்களை வணங்குவதில் நமக்கு உதவியாய் இருப்பதற்கு.

நாம் வணங்குவது புனிதர்களை, 
சுருபங்களை அல்ல.

மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்.

தாயின் கையில் மகனுடைய புகைப்படம் இருக்கிறது.

மகனைப் பார்க்க ஆசை வரும்போது அவள் மகனின் புகைப்படத்தைப் பார்க்கிறாள்.

அவள் புகைப்படத்துக்கு முத்தம் கொடுத்தால், மகனுக்குதான் கொடுக்கிறாள்.

நாம் அன்னை மரியாளைப் பார்த்ததில்லை.

அவளுடைய சுருபத்தைப் பார்க்கும் போது அவளுடைய முகம் மனதில் பதிகிறது. அவளை நோக்கி செபிக்க இது உதவியாக இருக்கும்.

நாம் வணங்குவது சுருபத்தை அல்ல, அன்னை மரியாளை.

நாம் செபிப்பது சுருபத்திடம் அல்ல, அன்னை மரியாளிடம்.

நாம் யாரையாவது நினைத்து பார்க்கும் போது அவர்களுடைய முகம் தான் ஞாபகத்துக்கு வரும். 

அன்னை மரியாளை நாம் நினைத்து பார்க்க வேண்டும் என்றால் அவளது முகம் ஞாபகத்துக்கு வர வேண்டும். 

ஆனால் நாம் மரியாளின் முகத்தை பார்த்ததில்லை. 

நினைப்பதற்கு உதவியாக சுருபம்.

அன்னையின் முகத்தை சுருபத்தில் கொண்டு வர முடியாது, ஆயினும் கொஞ்சம் உதவியாக இருக்கும்.

இது நமது பிரிவினை சகோதரர்களுக்குப் புரியும், ஏனேனில் அவர்களது வீட்டில் அவர்களின் முன்னோரின் புகைப்படங்கள் இருக்கின்றன.

ஆனால் நம்மைக் குறை சொல்வதற்காக புரிவதைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

நாம் இறைவனுக்குக் கொடுக்கும் ஆராதனையைப் புனிதர்களுக்குக் கொடுக்கவில்லை, அவர்களை வணங்குகிறோம்.

We worship only God.
We venerate the saints.

நம்மைக் குறை கூற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் நமது சுருபங்களைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.

அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. 

நமது நோக்கம் சரியாக இருக்கும் வரை மற்றவர்களுடைய குறை கூறலைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. 

லூர்து செல்வம்.

Friday, May 23, 2025

"உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்."(அரு.15:18)



"உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்."
(அரு.15:18)

உலகம் = லௌகீகம்.
இயேசு = ஆன்மீகம்.

இரண்டும் எதிர் எதிரானவை.

லௌகீகம் ஆன்மீகத்தை வெறுப்பது இயல்பு .

ஆனால் ஆன்மீகத்தில் வெறுப்புக்கு இடமில்லை.

பகைவர்களை நேசியுங்கள்,
தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள் என்கிறது ஆன்மீகம்.

தன்னைப் பாடாய்ப் படுத்தி சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தவர் இயேசு.

கடவுள் அன்பு மயமானவர்,

அவருடைய அன்பு நித்தியமானது, மாறாதது.

அவர் படைத்த சம்மனசுக்களுள் கோடிக்கணக்கானோர் அவரை அன்பு செய்ய மறுத்ததால் பசாசுக்களாக மாறி விட்டார்கள்.

பசாசுக்கள் கடவுளை நேசிப்பதை நிறுத்தி விட்டார்கள்.

ஆனால் மாறாத கடவுள் இன்னும் அவர்களை நேசிக்கிறார்.

அவர் நல்லவர்களையும் நேசிக்கிறார், கெட்டவர்களையும் 
நேசிக்கிறார்.

அவரை நேசிப்பவர்களையும் நேசிக்கிறார், வெறுப்பவர்களையும் 
நேசிக்கிறார்.

நாமும் அவரைப் போலவே அனைவரையும் நேசிக்க வேண்டும்.

நாம் நம்மை நேசிப்பவர்களை மட்டும் நேசித்தால் இயேசுவின் சீடர்கள் என்று அழைக்கப்பட தகுதி அற்றவர்தளாகி விடுவோம்.

அன்பு ஆள் பார்த்து அன்பு செய்யாது, அனைவரையும் அன்பு செய்யும்.

இயேசு இன வேறுபாடுகள் பாராமல் அனைவரையும் தேடித்தான் உலகுக்கு வந்தார்.

ஆனால் அனைவரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

நோய்களிலிருந்து குணம் பெறவும், நற்செய்தியைக் கேட்கவும் அநேகர் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

அவரைப் பிடித்து கொலை செய்ய சந்தர்ப்பம் தேடியும் சிலர் பின் தொடர்ந்தார்கள்

இரண்டு வகையினருக்காகவும் இயேசு உலகுக்கு வந்தார்.

இரண்டு வகையினருக்காகவும் தான்‌ அவர் பாடுகள் பட்டு மரித்தார்.

அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்தவர்களைச் சிலுவையில் தொங்கும் போதே மன்னித்தார்.

நாமும் நமது துன்பங்களுக்குக் காரணமாக இருப்பவர்களை மன்னித்தால்தான் நாம் இயேசுவின் சீடர்கள்.

இயேசுவின் நற்செய்தியை வாயினால் போதிப்பவர்கள் அனைவரும் அவருடைய சீடர்கள் ஆகி விட முடியாது.

நற்செய்தியை வாழ்ந்து, வாழ்க்கையின் மூலம் போதிப்பவர்களே இயேசுவின் உண்மையான சீடர்கள்.

இயேசு தனது ஒவ்வொரு போதனையையும் வாழ்ந்தார்.

 ஏழைகள் பாக்கியவான்கள் என்று போதித்தார்.

அவரே ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தார்.

பகைவர்களை நேசியுங்கள், 
தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்,
உங்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர்களை மன்னியுங்கள் என்று போதித்தார்.

அவர் அவரைப் பகைத்த பரிசேயர்கள், மறை நூல் அறிஞர்கள் ஆகியோரை நேசித்தார். சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதே அவர்களை மன்னித்ததன் மூலம் தன் அன்பை நிரூபித்தார்.

பாவிகளைத் தேடி வந்தேன் என்றார்.

பாவிகள் வீட்டில் சாப்பிட்டார்.
பாவிகளை மன்னித்தார்.
சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதே ஒரு திருடனை மன்னித்து, அன்றே அவனுக்குப் பேரின்ப வீட்டில் இடம் கொடுத்தார்.

நாம் இயேசுவின் சீடர்கள். அவரைப் போலவே நற்செய்தியை வாழ்வோம்.

வாழ்க்கையின் மூலம் போதிப்போம்.

உலகம் நம்மை வெறுக்கிறது என்று கவலைப் பட வேண்டாம்.

அவரை வெறுத்த உலகம்தான் நம்மை வெறுக்கிறது.

அவர் வெறுத்தவர்ளையும் நேசித்தார்.

நாமும் அப்படியே செய்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, May 22, 2025

உங்களை நான் நண்பர்கள் என்றேன்; (அரு.15:15)


 உங்களை நான் நண்பர்கள் என்றேன்; 
(அரு.15:15)

ஆரம்பம் இல்லாத காலத்திலிருந்தே கடவுள் இருக்கிறார்.

கடவுள் ஒருவராகையால் அவருக்கு வெளியே அவரோடு உறவு கொண்டாட யாருமில்லை.

ஆனாலும் அவர் மூன்று ஆட்களாக இருக்கிறார்.

மூவரில் ஒருவர் கடவுள் நித்திய காலமாக பெற்ற மகன்.

அடுத்தது தூய ஆவி, தந்தைக்கும் மகனுக்கும் நித்திய காலமாக உள்ள அன்பு.

நித்திய காலத்திலிருந்தே, 

மூன்று ஆட்களும் ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டு,

 தனியாக வாழ்ந்து கொண்டிருந்த இறைவன் தன் அன்பைப் பகிர்ந்து கொள்ள மனிதனைப் படைத்தார்.

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவு படைத்தவருக்கும்,  படைக்கப்பட்ட வருக்கும் உள்ள உறவுதான்.

ஆனாலும் கடவுள் தன் அன்பின் மிகுதியால் மனிதனைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டார்.

அதனால்தான் மனிதன் பாவம் செய்த போது அதற்கான பரிகாரம் செய்யும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டார்.

அதற்காக உலகுக்கு அனுப்பப்பட்ட இறை மகனும்
தனது சீடர்களைத்‌ தன் தந்தையை, "விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே"" என்று அழைத்தே செபிக்கச் சொன்னார்.

இயேசுவின் பொது வாழ்வின் போது சீடர்கள் அவரைப் ''போதகரே'' என்று அழைத்தார்கள்.

அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

"நீங்கள் என்னைப் "போதகர்" என்றும் "ஆண்டவர்" என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான்."(13:13)

ஆயினும் இயேசு தனது சீடர்களை தன் தன் நண்பர்களாகக் கருதினார்.


"தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. " (15:13)


"நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்." 
(15:14)



"இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்."
(15:15)

மற்ற உறவுகளை விட நட்பு உயர்ந்தது. நட்புக்கு ஆதாரமாய் இருப்பது அன்பு மட்டுமே. நண்பர்கள் ஒருவர் ஒருவரிடமிருந்து அன்பை மட்டுமே எதிர் பார்ப்பார்கள்.

அதனால்தான் இயேசு தன் சீடர்களை "நண்பர்கள்" என்று அழைத்தார்.

''தந்தை, மகன்.
குரு, சீடர்.''
உறவுகளில் ஏற்ற தாழ்வு இருக்கும்.

ஆனால் நண்பர்களுக்குள் ஏற்ற தாழ்வு இருக்காது.

நண்பர்கள் என்று அழைத்ததன் மூலம் உயர்ந்தவராகிய குரு சீடர்கள் அளவுக்குத் தன்னைத் தாழ்த்துகிறார்.

சீடர்களின் பாதங்களைக் கழுவிய போது தன்னைப் பணியாளர் அளவுக்குத் தாழ்த்தினார்.

நாம் இதுவரை பார்த்த உறவுகள் 

1. படைத்தவர், படைக்கப் பட்டவர்.
2. தந்தை, மகன்.
3.குரு, சீடர்.
4.மேலாளர், பணியாளர்.
5. நண்பர்கள்.

அவரவர் மனப்பக்குவத்துக்கு ஏற்ப ஏதாவது ஒரு உறவைத் தேர்வு செய்வார்கள்.

ஆனாலும் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு உறவை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

அது என்ன உறவு?

கபிரியேல் தூதர் நாசரேத் ஊரில் 
யோசேப்புக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்டிந்த  மரியாளுக்குத் தோன்றி கடவுளின் விருப்பத்தைத் தெரிவித்தபோது,

"இதோ! ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படி எனக்கு ஆகக் கடவது."

என்று சொன்ன வினாடியில் இறைமகன் அவள் வயிற்றில் மனுமகனாக உருவெடுக்கிறார்.

மரியாள் ஏற்றுக் கொண்டது ஆண்டவருக்கு அடிமை உறவு.

இறைமகன் ஏற்றுக் கொண்டது?

அதைப் புனித சின்னப்பர் விளக்குகிறார்.

"கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. 


ஆனால் தம்மையே வெறுமையாக்கி "அடிமையின்" வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, 

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து
 தம்மையே தாழ்த்திக்கொண்டார். 
(பிலிப்பியர் 2:6-8)

மரியாள் ஏற்றுக் கொண்டது
"ஆண்டவருக்கு அடிமை உறவு."

ஆண்டவர் ஏற்றுக் கொண்டது 

"சர்வ வல்லப கடவுள் அடிமையின் வடிவை ஏற்று மனிதனாகப் பிறந்தது."

அடிமை நிலையை ஏற்பதில் தாயும் மகனும் போட்டி போடுவது போல் தோன்றுகிறது!

மரியாள் ஆண்டவருக்கு அடிமை ஆகிறாள்.

ஆண்டவர் அடிமையின் வடிவை ஏற்று, அடிமையின் வயிற்றில் மனிதனாகப் பிறக்கிறார்.

"ஆண்டவரே, நான் உமக்கு அடிமை."

"அம்மா, நானே ஒரு அடிமை."

ஆண்டவராகிய அடிமை உலகை மீட்கிறார்.

தாயாகிய அடிமை அவருக்குக் துணை நிற்கிறார்.

கருவறை முதல் கல்லறை இயேசுவுடன் இருந்தவள் மரியாள் மட்டுமே.

இயேசு பிறந்தவுடனும் தாயின் மடியில், கல்லறைக்குள் போகுமுன்னும் தாயின் மடியில்!

இப்போது நமக்குத் துணை அதே தாயின் மடிதான்.

அடிமையின் நிலைக்குத் தன்னைத் தாழ்த்திய ஆண்டவர் நமது அரசர்.

தன்னையே ஆண்டவரின் அடிமையாக்கியவர் இன்று விண்ணக மண்ணக அரசி!

இன்று தங்களது ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்தில் வீற்றிருப்பவர்கள் இந்த இருவர் மட்டுமே!

நாமும் ஒரு நாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்தில் வாழ வேண்டுமென்றால் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறவு எது?

அடிமை உறவுதான் என்று சொல்லாமலே விளங்கும்.

நாம் அனைவரும் ஆண்டவரின் அடிமைகள். 

எப்படி அன்னை மரியாள் ஆண்டவருக்காக மட்டுமே வாழ்ந்தாளோ,

அதேபோல, 

நாமும் ஆண்டவருக்காக மட்டுமே வாழ வேண்டும். 

இறைப் பணிக்கு நம்மை முற்றிலும் அர்ப்பணிக்க வேண்டும்.

இயேசு நமது ஆண்டவர்,
நாம் அவரது அடிமைகள்.

அன்னை மரியாள் எப்படி தன்னை இறைப்பணிக்கு அர்ப்பணித்து வாழ்ந்தாளோ,

இறைமகன் எப்படித் தன்னை அடிமை நிலைக்குத் தாழ்த்தி, தன்னையே நமது பாவங்களுக்காகப் பலியாக்கினாரோ

அப்படியே நாமும் இறைவனுக்கு அடிமைகளாக அர்ப்பணித்து வாழ வேண்டும்.

நமது விருப்பப்படி அல்ல, இறைவன் விருப்பப்படியே வாழ வேண்டும்.

அடிமை தலைவரின் கட்டளைக்கு ஏன் என்று கேட்காமல் கீழ்ப்படிவான்.

மரியாள் மைந்தனின் விருப்பத்துக்கு அப்படியே கீழ்ப்படிந்தாள்.

இயேசு தனது பெற்றோருக்கு 30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

பொது வாழ்வின் போது இயேசு என்ன செய்தார்? 

அவரால் படைக்கப்பட்ட மனிதனின் ஆன்மீக மீட்புக்காக சென்ற இடமெல்லாம் மக்களுக்கு ஆன்மீக சேவை புரிந்தார். 

விசுவாசத்தை ஊட்டினார். 

ஏற்றுக் கொண்டவர்களின் நோய்களை குணமாக்கினார். 

இறந்தோரை உயிர் பெறச் செய்தார்.

பசியோடு தனது போதனையை கேட்ட மக்களுக்கு அப்பங்களைப் பலுகச் செய்து உணவளித்தார்.

நற்செய்தியை அறிவித்து மக்களை ஆன்மீகத்தில் வளரச் செய்தார்.

இறுதியில் பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மனிதர்களின் பாவங்களுக்கு பரிகாரமாகத் தன்னையே பலியாக்கினார்.

அவருடைய தாய் மரியாளும் அவர் தோளில் சுமந்த சிலுவையை உள்ளத்தில் சுமந்தாள்.

தன் மகனை மட்டுமல்ல தன்னையே இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுத்து 
பலி வாழ்வு வாழ்ந்தாள்.

அவர்களுடைய ஆன்மீக அடிமைகளாகிய  நாமும் அவர்களுடைய பலி வாழ்வில் பங்கு பெறுவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, May 21, 2025

"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்." (லூக்கா.6:38)



"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்." (லூக்கா.6:38)


"உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். 

உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 

கேட்பவர்களுக்குக் கொடுங்கள். 

 பகைவர்களை நேசியுங்கள் .

உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். 

யாரையும் தீர்ப்பிடாதீர்கள்.
நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள்.

மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். 

கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; 

 நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்."

இவையெல்லாம் நமது சிந்தனை சொல் செயலால் நாம் வாழ வேண்டிய இயேசுவின் வார்த்தைகள்.

நாம் ஒவ்வொருவரும் தனிப்பிறவி அல்ல, சமூகப் பிறவி.

We are not individuals, but social beings.

நாம் வாழும் சமூகம் இறைவனால் படைக்கப்பட்ட ஆன்மீக அமைப்பு.

மனித சமூகம் இறையன்பினாலும்,

பிறரன்பினாலும் இணைக்கப்பட்டது.

ஆகவே தான் நாம் இறைவனோடும், பிறனோடும் அன்புறவோடு இருக்க வேண்டும்.

நாம் சமூகப் பிறவியாக இருப்பதால் சமூகத்தின் உதவி இன்றி நம்மால் வாழ முடியாது.

சமூகத்திலிருந்து நாம் பெறுகிறோம், சமூகத்துக்கு நாம் கொடுக்கிறோம் .

கொடுக்கல் வாங்கல் இல்லாமல் சமூகமும் இயங்க முடியாது, தனிப்பட்ட நபரும் இயங்க முடியாது.

தனிப்பட்ட நபர்களால் ஆனதுதான் சமூகம்.

தனிப்பட்ட நபர்களுக்குள் இருக்கும் உறவுதான் சமூக உறவு.

தனிப்பட்ட நபர்கள் சுமூகமான உறவுடன் இருந்தால் சமூக உறவு சுமூகமாக இருக்கும்.

தனிப்பட்ட நபர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும்.

தனிப்பட்ட நபர்கள் ஒருவரையொருவர் பகைமை பாராட்டக் கூடாது.

பகைமை ஏற்பட்டால் அதை அன்பால் வெல்ல வேண்டும்.

"உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். 

உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."

அன்பு மன்னிக்கும்.

அன்பு தீமைக்கு நன்மை செய்யும்.

அன்பு இல்லாதவர்களுக்குக் கொடுக்கும்.

நாம் நமது அன்பினால் மற்றவர்களுக்கு எவ்வளவு  தாராளமாக கொடுக்கிறோமோ அதே தாராளமாக நமக்கும் கிடைக்கும்.

"கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். " 
(லூக்கா 6:38)

அனைவரும் கடவுளுடைய பிள்ளைகளாகையால், அவர்களுக்குச் செய்வதைக் கடவுளுக்கே செய்கிறோம்.

நாம் நமது பகைவர்களை நேசிக்கும் போது அதனால் மகிழ்ச்சி அடைபவர் கடவுள் தான்.

நமது பகைவர்களுக்காக இறைவனிடம் செபித்தால் கடவுள் அவருடைய அருள் வரத்தால் அவர்களை மனம் திருப்புவார்.

பகைவர்கள் இவ்வுலகில் மட்டுமல்ல மறுவுலகிலும் நமது நண்பர்களாக வாழ்வார்கள்.

யார் கேட்டாலும் தாராளமாகக் கொடுக்க வேண்டும்.

ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் கடன் கேட்டால் அது திரும்ப வரும் என்று எதிர் பார்க்காமல் கொடுக்க வேண்டும்.

நமது தந்தை இரக்கமே உருவானவர்.

நாமும் தந்தையைப் போலவே இரக்கம் உள்ளவர்களாக வாழ வேண்டும்.

இரக்கம் உள்ளவர்களிடம் மன்னியுங்கள், கொடுங்கள் என்று யாரும் சொல்லவே தேவையில்லை.

இரக்கமே மன்னிக்கும், அள்ளிக் கொடுக்கும்.

இயேசுவின் வார்த்தைகள் வாசிக்க மட்டுமல்ல, வாழ்வோம்.

இயேசுவாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, May 20, 2025

"நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்." (அரு.15:7)



"நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்." (அரு.15:7)


"நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்."

சொல்வது நமது ஆண்டவர்.

கேட்பது எல்லாம் நடக்குமா?
எல்லாம்?

எல்லாம் நடக்கும்,
நாம் இயேசுவுக்குள்ளும்,
அவர் வார்த்தைகள் நமக்குள்ளும்
நிலைத்திருந்தால்.

புனித அகுஸ்தீன் சொல்வார்,

Love and do as you like.

அன்பு செய், விருப்பப்படி நட.

உண்மையாக அன்பு செய்பவன் நல்லதை மட்டுமே விரும்புவான்.

அன்பு இருக்கும் இடத்தில் பாவம் இருக்காது.

அன்பும் பாவமும் சேர்ந்து வாழ முடியாது.

ஆகவே அன்பு செய்கிறவனைப் பார்த்து துணிந்து சொல்லலாம், 
"உன் விருப்பப்படி நட."

அதேபோல் தான்,

இயேசுவுக்குள் இருப்பவனை பார்த்து துணிந்து சொல்லலாம், 

"நீ விருப்பப்பட்டதைக் கேள் கிடைக்கும்."

இயேசுவுக்குள் இருப்பவன் அவருக்கு விரோதமாக எதுவும் கேட்க மாட்டான்.

இயேசுவின் வார்த்தைகளை சுமந்து செல்பவனும் அந்த  வார்த்தைகளுக்கு எதிராக எதுவும் கேட்க மாட்டான்.

"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்." (லூக்.9:23)
என்ற வசனம் ஒருவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்தால்,

''நான் சிலுவையாய் சுமக்க துன்பங்களை தாரும் ஆண்டவரே." என்று கேட்பான். 

துன்பங்கள் வரும்போது மகிழ்ச்சியாக இருப்பான். 

"உன் பகைவரை தேசி. தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்."
என்ற இறைவாக்கு ஒருவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் ஒருவனைப் பார்த்து 

இயேசு "உனக்கு வேண்டியதை கேள்'' என்று சொன்னால், அவன்

"இயேசுவே, எனக்கு தீமை செய்தவர்களை அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றும். 

அவர்களுக்கு உதவ எனக்கு உதவும்.".  என்றுதான் வேண்டுவான்.

"ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்."
(கொலோசையர் 3:13)

என்ற‌ இறைவாக்கை எப்போதும் மனதில் வைத்திருப்பனைப் பார்த்து 

இறைவனிடம்  உனக்கு வேண்டியதைக் கேள் என்று சொன்னால்,

"ஆண்டவரே, எனக்குத் தீமை செய்தவர்கள் அனைவரையும் நான் மன்னிக்கிறேன்.

நீர் தயவுசெய்து அவர்களையும் மன்னியும், உமக்கு விரோதமாக பாவம் செய்த என்னையும் மன்னியும்."

என்று தான் கேட்பான்.

ஆக முதலில் நாம் இயேசுவுக்குள் இருப்போம்.

இயேசுவின் வார்த்தைகள் நமக்குள் இருக்கட்டும் .

நாம் கேட்பதை எல்லாம் ஆண்டவர் உறுதியாகத் தருவார்.

லூர்து செல்வம்.

Monday, May 19, 2025

"சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் சமாதானத்தை உங்களுக்கு அளிக்கிறேன்." (அரு.14:27)



"சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் சமாதானத்தை உங்களுக்கு அளிக்கிறேன்." (அரு.14:27)

பெத்லகேமில் இயேசு பிறந்த நாளில் வானவர் இசைத்த கீதம்,

"விண்ணுலகில் இறைவனுக்கு மகிமை உண்டாகுக,

மண்ணுலகில் நல்மனதோர்க்கு சமாதானம் உண்டாகுக"

இயேசு பிறக்கும் போது அவருடைய தூதர்கள் மூலமாக உலகுக்கு அறிவித்த சமாதானம்

 இறப்பதற்கு முந்திய நாள் தனது சீடர்களுக்கு உண்டாகட்டும். என்று வாழ்த்துகிறார்.‌‌

சமாதானம் என்றால் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே நிலவும் நல் உறவு நிலை.

மனிதன் செய்த பாவத்தினால் கடவுளோடு இருந்த நல்லுறவை இழந்தான் .

அதை மீட்கவே இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.

இருவர் சமாதானமாக வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் நல்ல உறவுடன் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று பொருள்.

நாம் இறைவனோடு சமாதானமாக வாழ வேண்டும்.

அதாவது இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்யாமல், அர்ப்பண வாழ்வு வாழ வேண்டும்.

பாவம் செய்பவர்கள் இறைவனோடு அனுபவித்த சமாதான உறவை இழந்து விடுகிறார்கள்.

செய்த பாவத்துக்கு மனத்தாபப் பட்டு இறைவனிடம் மன்னிப்புக் கேட்கும் போது பாவம் மன்னிக்கப் படுகிறது.

இயேசு உலகுக்கு வந்ததன் நோக்கம் நமது பாவங்களை மன்னிப்பதற்காகத்தான்.

அவருடைய பாடுகளும் மரணமும் அந்த நோக்கத்திற்காகத்தான்.

அவர் நமக்குக் கற்பித்த செபத்தில்,

"எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போக எங்கள் குற்றங்களை மன்னியும்."

என்ற மன்றாட்டைச் சேர்ந்திருப்பது மன்னிப்பின் அவசியத்தை விளக்குகிறது.

இந்த மன்றாட்டில் இறைவனோடு நமக்கு இருக்க வேண்டிய சமாதானத்தைப் போலவே நமது அயலானோடு இருக்க வேண்டிய சமாதானமும் வலியுறுத்தப்படுகிறது.

கடவுள் நம்மைப் படைத்து ஒரு சமூகத்தில் நல்லுறவோடு வாழ வைத்திருக்கிறார்.

இறைவனோடு நமக்கு இருக்க வேண்டிய சமாதானம் எவ்வளவு முக்கியமோ 

அவ்வளவு முக்கியம் சமூகத்தோடு நமக்கு இருக்க வேண்டிய சமாதானமும்.

மன்னிப்பு இறைவனோடு நமக்கு இருக்க வேண்டிய சமாதானத்துக்கு  எவ்வளவு முக்கியமோ 

அவ்வளவு முக்கியம் சமூகத்தோடு 
நமக்கு இருக்க வேண்டிய சமாதானத்துக்கும்.

இறைவனோடு நாம் சமாதான உறவோடு வாழ வேண்டும் என்றால் இறைவன் நமது பாவங்களை மன்னிக்க வேண்டும். 

சமூகத்தோடு நாம் சமாதான உறவோடு வாழ வேண்டும் என்றால்  மற்றவர்கள் நமக்கு விரோதமாகச் செய்யும் குற்றங்களை நாம் மன்னிக்க வேண்டும். 

சமூகத்தை அதாவது நமது அயலானை நாம் மன்னித்தால் தான் கடவுள் நம்மை மன்னிப்பார்.

மன்னிக்க தெரிந்தவன் தான் மனிதன். 

மனிதர்களிலேயே நிலவும் சண்டை, சச்சரவு, போர் ஆகியவற்றுக்கு காரணம் மன்னிக்க முடியாமை தான். 

குடும்பங்களில் நிலவும் ஒற்றுமை இன்மைக்குக் காரணமும் மன்னிக்கத் தெரியாமை தான்.

யார் மேல் தவறு என்று ஆராய்வதை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் மன்னித்து விட்டால் தவறு காணாமல் போய்விடும். 

அந்த இடத்தை சமாதானம் நிரப்பும்.

இயேசு சமாதானத்தின் தேவன். 

நாம் சமாதானத்தின் பிள்ளைகள். 

சமாதானம் இல்லாமல் வாழ்பவர்கள் யாருடைய பிள்ளைகள்? 

சாத்தானின் பிள்ளைகள்.

நாம் சமாதானத்தின் பிள்ளைகளாக,

அதாவது,

இயேசுவின் பிள்ளைகளாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, May 18, 2025

"என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்."(அரு.14:23)



"என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்."
(அரு.14:23)

இயேசு தனது உலக வாழ்க்கையின் இறுதி நாளுக்கு முந்திய நாள் வியாழக்கிழமை அன்று தனது சீடர்களுக்குக் கூறிய வார்த்தைகள் இவை.

கடவுள் அன்பு மயமானவர்.

அவருடைய சிந்தனை சொல் செயல் அனைத்தும் அன்பு மயமானவைதான்.

அவரது சீடர்களுக்கு அவர் கட்டளைகள் அன்பு மயமானவை.

கட்டளை என்று சொன்னவுடன் நமது நினைவுக்கு வருவது அரசன், ஊழியர்.

இயேசு அரசர் தான், நாம் ஊழியர் தான், ஆனால் லௌகீகப் பொருளில் அல்ல.

ஆன்மீகத்தில் அரசரும் ஊழியரும் அன்பு என்ற கயிற்றால் பிணைக்கப் பட்டவர்கள்.

அன்னை மரியாள் "இதோ! ஆண்டவருடைய அடிமை." என்று கூறிய வார்த்தைகளுக்கு "ஆண்டவரின் அன்புக்கு முற்றிலும் கட்டுப்பட்டவள்" என்பது தான் பொருள்.

அன்பினால் கட்டுப் பட்டவர்கள் தங்களின் சிந்தனை சொல் செயல் அனைத்திலும் அன்போடு இணைந்துவிடுவர்.

அன்பு மயமான கடவுளோடு இணைந்துவிடுவர்.

கடவுள் நினைப்பதை நினைப்பர்.
கடவுள் சொல்வதைச் சொல்வர்.
கடவுள் செய்யச் சொன்னதை மட்டும் செய்வர்.

இத்தகைய அன்பைத் தான் இயேசு தனது சீடர்களிடமிருந்து எதிர் பார்க்கிறார்.

"என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்."

"என்னை நேசிப்பவர்கள் அவர்கள் செய்ய வேண்டும் என்று நான் விரும்புவதை மட்டும் செய்வார்கள்.‌ 

என்னுடைய விருப்பம் அவர்களுடைய செயலாக மாறும்."

"என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார்."

நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்றார். (10:30)

"தந்தைக்கும் எனக்கும் ஒரே அன்பு, ஒரே சித்தம்.

ஆகவே என்னோடு அன்பில் ஒன்றித்திருப்பவரகளோடு அவரும் ஒன்றித்திருப்பார்.

நான் இருக்கும் இடத்தில் அவரும் இருப்பார்.

நான் குடியிருக்கும் அன்பு நிறைந்த இருதயத்தில் அவரும் குடியிருப்பார்.

தந்தையும் நானும் அங்கே குடியிருப்போம்."

இயேசு தனது சீடர்களை நேசிக்கிறார் என்ற மறை உண்மையை விளக்கும் போதே 

பரிசுத்த தம திரித்துவம் என்ற மறை உண்மையையும் விளக்குகிறார்.

சில வசனங்களுக்குப் பின்

"என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்." (14:26)

தந்தை, மகன், தூய ஆவி.

தந்தையால் அனுப்பப்பட்ட மகனின் போதனைகள் அனைத்தையும் சீடர்கள் புரிந்து கொள்ளும்படி செய்ய,

தந்தை தூய ஆவியை சீடர்களுக்கு அனுப்புவார்.

பெந்தகோஸ்து திருநாளன்று தூய ஆவி சீடர்கள் மீது இறங்கப் போவதை இயேசு முன்னறிவிக்கிறார்.

இதைத் தியானிக்கும் போது மனதில் சில கேள்விகள் எழும்.

தம திரித்துவம், மூன்று ஆட்கள், ஒரு கடவுள்.

மூவரில் மகன் மட்டும் மனிதனாகப் பிறந்தார்.

மகன் முழுமையாகக் கடவுள்.
(Fully God)

ஆகவே கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

சீடர்களைத் தேர்வு செய்தது கடவுள்.

அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி கொடுத்தது கடவுள்.

ஆனால் தூய ஆவியாகிய கடவுள் பெந்தகோஸ்தே திருநாள் அவர்கள் மீது இறங்கி வருமட்டும் இயேசுவின் போதனைகள் அவர்களுக்கு முழுமையாகப் புரியவில்லை.

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று சொன்னதே அவர்களுக்குப் புரியவில்லை.

புரிந்திருந்தால் இயேசுவின் பாடுகளின் போது அவரை விட்டு ஓடிப் போயிருக்க மாட்டார்கள்.

இராயப்பர் இயேசுவை மறுதலித்திருக்க மாட்டார்.

இயேசுவை அடக்கம் செய்தபின் அன்னை மரியாள் அமைதியாக வீட்டில் இருந்தது போல சீடர்களும் அவரை எதிர் பார்த்து ஏதாவது ஒரு வீட்டில் அமைதியாக செபித்துக் கொண்டு இருந்திருப்பார்கள்.

இராயப்பரும் அருளப்பரும் கல்லறைக்கு ஓடிப்போயிருக்க மாட்டார்கள்.

மனதில் எழும் கேள்வி,

தூய ஆவி செய்ததை ஏன் மகன் செய்யவில்லை?

இயேசுவின் பொது வாழ்வின் போது அவருடைய முழுக் கவனமும் மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதிலும்,

மக்களுடைய பாவங்களுக்கு பரிகாரமாகப் பாடுகள் பட்டு மரிப்பதிலும் இருந்தது.

தனது சீடர்களாக 

படிப்பறிவு இல்லாத பாமர மக்களைத்தான்  தேர்வு செய்தார்.

அவர்கள் ஆன்மீகத்தில் வளரப் போதுமான அருள் வரங்களைக் கொடுத்தாலும் அவர்களுடைய ஆன்மீக வளர்ச்சி சுய முயற்சியால் இயல்பானதாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

தந்தையும் மகனும் ஒரே கடவுளாய் இருப்பது போல 
மகனும் தூய ஆவியும் ஒரே கடவுள்தான்.

எப்படி மகனைப் பார்க்கும்போது தந்தையைப் பார்க்கிறோமோ அப்படியே மகனைப் பார்க்கும்போது தூய ஆவியைப் பார்க்கிறோம்.

ஏனெனில் மூவரும் ஒரே கடவுள்.

ஆயினும் தந்தை, மகன், தூய ஆவி மூவரும் வெவ்வேறு ஆட்கள்.
(Three distinct persons)
என்பதை 'நமக்குப்'  புரிய வைப்பதற்காகத்தான் 

தந்தையால் அனுப்பப்பட்ட மகன்

 மீட்புப் பணியையும், திருச்சபையை நிறுவும் பணியையும் தான் செய்து விட்டு,

சீடர்களை உறுதிப்படுத்தி, திருச்சபையை வழி நடத்தும் பணியைத் தூய ஆவிக்கு விட்டு விட்டார்.

ஆனாலும் மூன்று பணிகளையும் செய்வது ஒரே கடவுள் தான்.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் திருமுழுக்குக் கொடுக்கிறோம்.

திருமுழுக்குப் பெறுபவர் மீது இறங்கி வருபவர் தூய ஆவி.

ஆயினும் சென்மப் பாவத்தை மன்னிப்பது கடவுள் தான்,

பரிசுத்த தம திரித்துவக் கடவுள்.

திரு முழுக்கின் போது தனது அன்பை வெளிப்படுத்திய,

 நமக்குள் குடிபுகுந்த தந்தை, மகன், தூய ஆவி நம் அனைவரையும் ஒரே குடும்பமாக இணைத்து வைப்பாராக.

லூர்து செல்வம்.

Saturday, May 17, 2025

"நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" (அரு.13:35)



"நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" (அரு.13:35)

நான் பணி புரிந்த பள்ளி இருந்தது ஆவுடையானூரில்.

பேருந்தில் ஏறுவதற்காக பாவூர்சத்திரத்தில் நின்று கொண்டிருந்தேன்.

கைவசம் ஒரு பெரிய Bundle இருந்தது. பள்ளிக் கூட 
Store க்காக வாங்கிய பொருட்கள் அடங்கியது.

பாவூர்சத்திரம் வழியாக மாணவர்கள் சைக்கிளில் போவது வழக்கம்.

ஏதாவது ஒரு மாணவனின் சைக்கிளில் Bundleஐ ஏற்றிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

பல சைக்கிள்கள் சென்று கொண்டிருந்தன.

ஒரு சைக்கிளை நிறுத்தினேன்.

"ஐயா, வணக்கம்."

"வணக்கம். இந்த பார்சலைக் கொண்டு போய் ஸ்டோர் வாசலில் வைத்து விடுகிறாயா."

"ஆகட்டும் ஐயா."

எந்த நம்பிக்கையில் பார்சலை அவன் கையில் கொடுத்தேன்?

நான் அவன் முகத்தைப் பார்க்கவில்லை.

உடையைப் பார்த்தேன்.

அவன் பள்ளிக்கூட சீருடை அணிந்திருந்தான்.

He was in his school uniform.

இன்றைய தியானம் நம்முடைய சீருடை பற்றி.

ஒரே சீருடை அணிந்தவர்கள் அதே பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

இயேசுவின் சீடர்களின் சீருடை எது?

Which is the uniform of the disciples of Jesus?

How can we be uniform in our discipleship to Jesus?

இந்தக் கதையைக் கொஞ்சம் கவனியுங்கள்.

ஒரு நண்பருக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது.

ஒவ்வொரு நாளும் காலையில் யாராவது ஒருவருக்கு உணவு கொடுத்து விட்டு தான் அவர் சாப்பிடுவார்.

இது அவருடைய பிறரன்பின் அடையாளம்.

ஒரு நாள் காலையில் உணவு தயாரித்துவிட்டு சாப்பிட ஆள் பிடிப்பதற்காக வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்.

50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் வந்து கொண்டிருந்தார்.

''ஐயா கொஞ்சம் இங்கே வாங்க."

"என்ன விடயம்?"

"வீட்டிற்குள் வந்து காலை உணவு அருந்திவிட்டு போங்கள்."

அவர் மறுப்புச் சொல்லவில்லை.

அவர் சாப்பிட அமர்ந்ததும் நண்பர் அவரிடம், 

"என்னோடு சேர்ந்து ஒரு சிறிய செபம் சொல்லுங்கள். சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பிக்கலாம்."

"எதற்காக செபம்?"

"இன்றைய உணவை தந்த இறைவனுக்கு நன்றி கூறிவிட்டு சாப்பிடலாம்."

"எனக்கு இறை நம்பிக்கை கிடையாது. உணவு தருபவர் நீங்கள்.

உங்களுக்கு நன்றி கூறுகிறேன்."

''இறைவனுக்காகத்தான் உங்களுக்கு உணவு தருகிறேன். 

உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டால் நீங்கள் போகலாம். 

உணவு கொடுக்க வேறு ஆளை பார்த்துக் கொள்கிறேன்."

அந்த ஆளும் மறு வார்த்தை சொல்லாமல் எழுந்து போய்விட்டார். 

நண்பர் இறை நம்பிக்கை உள்ள ஒருவரைப்  பார்ப்பதற்காக பழையபடி வீட்டு வாசலுக்கு வந்தார்.

தெருவில் இயேசு வந்து கொண்டிருந்தார்.

இதை எதிர்பாராத நண்பர்,

"ஆண்டவரே வாருங்கள்.  காலை உணவு தயார்.

வாருங்கள் சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்."

"நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் உன் வீட்டுக்குச் சாப்பிட வந்தேன். நீ சாப்பாடு தராமல் போகச் சொல்லி விட்டாய்!"

"ஆண்டவரே, கொஞ்ச நேரத்துக்கு முன்னால் என் வீட்டுக்குச் சாப்பிட வந்தது ஒரு நாத்திகன், கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.

அதனால்தான் சாப்பாடு கொடுக்கவில்லை.

உங்களை நம்பாதவர்களுக்கு எப்படி, ஆண்டவரே, சாப்பாடு கொடுப்பேன்?"

"அவனுக்குக் கடவுள் இல்லை என்று எனக்கும் தெரியும்.

ஆனாலும் 50 ஆண்டுகளாக நான் அவனுக்குச் சாப்பாடு கொடுத்திருக்கிறேன்.

ஏனெனில் அவனைப் படைத்ததே நான்தான்.

அவனையும் என் சாயலில்தான் படைத்தேன், உன்னைப் படைத்தது போல.

யார் வந்தாலும் அவனில் என் சாயலைப் பார்.

யாருக்கு எதைச் செய்தாலும் அதை எனக்கே செய்கிறாய்."

"ஆண்டவரே, இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?"

"உடனே எங்கும் தேடி, அவனைக் கண்டு பிடித்து, அவனுக்குச் சாப்பாடு கொடு.

அப்புறம் வந்து என்னிடம் பேசு."

"ஆண்டவரே, ஒரே ஒரு கேள்வி.

அவனுக்குச் சாப்பாடு கொடுத்தால் உமக்குதான் தருகிறோம்.

அப்படியானால் உமக்குச் சாப்பாடு தந்தால் அவனுக்குக் கொடுத்தது மாதிரி தானே."

"இப்படிச் சொல்லி தான் அநேகர் தங்களையே ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். 

வருமானத்தில் ஒரு பகுதியை கோவில் உண்டியலில் போட்டால் போதும்,

ஏழைகளுக்கு எதுவும் கொடுக்க வேண்டாம் என்று தவறாக எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

சைக்கிளில் ஏதாவது ஒரு சக்கரத்தில் ப்ரேக் பிடித்தாலும் அடுத்ததும் உருளாது.

இரண்டு கட்டளைகளில் ஏதாவது ஒன்றைக் கடைபிடிக்கா விட்டாலும் இரண்டையும் கடைபிடிக்காதது போல் தான்.

அயலானுக்கு உதவாமல் அந்தப் பணத்தை கோயில் உண்டியலில் போட்டால் அது காணிக்கை அல்ல.

அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

அதனால் உனது கருத்தை நியாயப் படுத்துவதை விட்டு விட்டு, நான் சொன்னதைக் செய்."

கதையின் கருத்து புரிந்திருக்கும்.

ஒரு தாய் ஐந்து பிள்ளைகளைப் பெற்றால் ஐந்தும் அவளுடைய பிள்ளைகள்தான்.

ஐவரும் ஒரே மாதிரியான குணம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. 

அவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள்.

எப்படி இருந்தாலும் அவர்கள் ஒரே தாய் பிள்ளைகள் தான். 

தாய் எல்லாப் பிள்ளைகளையும் நேசிப்பாள்.

பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். 

கடவுள் தான்  படைத்த அனைவரையும், அவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருந்தாலும், அளவில்லாத விதமாய் நேசிக்கிறார். 

அவர் நேசிப்பது போலவே நாமும் அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

அனைவரையும் நேசித்தால்தான் நாம் இயேசுவின் சீடர்கள்.

பிறரன்பு செயல்கள்தான் இறைவனின் பிள்ளைகள் அனைவருக்குமான சீருடை.

இந்த சீருடையை அணிந்தவர்கள் தான் இயேசுவின் சீடர்கள். 

நாம் இயேசுவின் சீடர்களாக வாழ விரும்பினால் அவரையும், அவரால் படைக்கப்பட்ட அனைவரையும்  நேசிக்க வேண்டும்.

"நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்"

பிறரன்பு சீருடையை அணிபவர்கள் மட்டுமே விண்ணக அரசுக்குள் நுழைய முடியும்.

பிறரன்பு சீருடையோடு வாழ்வோம், இன்றும், என்றும்.

லூர்து செல்வம்.

Friday, May 16, 2025

அதுதான் எனக்குத் தெரியுமே!



அதுதான் எனக்குத் தெரியுமே!

"தாத்தா, நம்மைப் படைத்த கடவுளுக்கு நாம் உயிர் வாழ என்ன வேண்டும் என்று 
 தெரியும்தானே."

"'அதில் என்ன சந்தேகம்?"

"எனக்குச் சந்தேகமில்லை. உங்களுக்கு இருக்கிறது போல் தெரிகிறது."

"'எனக்கா? நான் எப்போது சொன்னேன், நாம் உயிர் வாழ என்ன வேண்டும் என்று கடவுளுக்குத் தெரியாது என்று?"

"நமக்குத்  தேவையானதை கடவுளிடம் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்?"

"'ஆமா, அதுக்கு என்ன இப்போது?"

"நமக்கு என்ன தேவை என்று கடவுளுக்குத் தெரியுமென்றால் நாம் ஏன் நமக்கு வேண்டியதை கடவுளிடம் சொல்ல வேண்டும்?"

"'நீ காலையில் சாப்பிடுவாய் என்று உனது அம்மாவுக்கு தெரியுமா, தெரியாதா?"

"தெரியும்."

"'பிறகு ஏன் காலையில் "அம்மா சாப்பாடு" என்று கேட்கிறாய்?"

"நான் Dining table ல் உட்கார்ந்தாலே போதும், அம்மா சாப்பாடு கொண்டு வந்து விடுவார்கள். 

நான் சாப்பாடு என்று சொல்வது சாப்பாட்டுக்காக அல்ல அம்மாவோடு பேச வேண்டும் என்பதற்காகத்தான். 

காலையில் புத்தகக் கட்டுடன் போகும் பையன் எங்கே போகிறான் என்று நமக்குத் தெரியும்.

ஆனாலும் அவனைப் பார்த்தவுடன், "பள்ளிக்கூடத்துக்கா?" என்று கேட்கிறோம். 

எதற்காக? 

அவனோடு ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக.

பேச எதுவும் இல்லாவிட்டாலும், 
பார்த்தவுடன் "தூரமா?" என்று நாம் கேட்பது வழக்கம். 

ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகத்தான்."

"'அதே போல் தான் கடவுளோடு பேச வேண்டும் என்பதற்காகவே நமக்கு  வேண்டியதைக்  கேட்கிறோம். 

கடவுள் இரக்கம் உள்ளவர் என்று நமக்குத் தெரியும். 

ஆனாலும் "ஆண்டவரே இரக்கமாயிரும்" என்று ஏன் செபிக்கிறோம்?

அதே காரணத்திற்காகத்தான். 
பேச வேண்டும் என்பதற்காகத்தான். 

நாம் ஏன் பேசுகிறோம், சொல்லு."

"நமது மனதில் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக.'

"'மற்றவர்களோடு என்றால்?'

"நமக்குத் தெரிந்தவர்களோடு, நமது உறவினர்களோடு.''

"'தெரியாதவர்கள், உறவு இல்லாதவர்களோடு பேசமாட்டோம். அப்படித்தானே?"

''அவர்களோடு உறவை ஏற்படுத்திக்  கொள்ள வேண்டும் என்றால் அவர்களோடும் பேசுவோம்.''

"'அதாவது பேசுவதற்கும் உறவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது, அப்படித்தானே."

"இருக்கிறது. உறவினர்களோடு பேசுவதை உரையாடல் என்கிறோம்."

"'கடவுளோடு பேசுவதற்கு, அதாவது உரையாடல் செய்வதற்குப் பெயர் செபம்."

''அதுதான் எனக்குத் தெரியுமே.''

"வேறு என்ன தெரியாது?"

"செபம் பற்றித் தெரிந்ததைச் சொல்லுங்கள்."

"'கடவுளோடு நாம் பேசினால் தான்,  நமக்கும் அவருக்கும் உள்ள உறவு வளரும். உறவில் நெருக்கம் ஏற்படும். 

கடவுளை நாம் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மனதிற்குள் மௌனமாக செபிக்கிறோம். மௌன செபத்துக்கு இன்னொரு பெயர் தியானம்."

''இதெல்லாம் எனக்குத் தெரியும் தாத்தா?"

"'பிறகு ஏன் இந்த கேள்வியை கேட்டாய்?"

"உங்களோடு பேச வேண்டும் என்பதற்காகத்தான்."

"'என்னைப் படையுங்கள் என்று நாம் கடவுளிடம் கேட்கவில்லை. 

அவராகவே நம்மைப் படைத்தார். 

மூச்சு விட காற்று வேண்டும் என்று நாம் கேட்கவில்லை. 

அவராகவே தந்தார். 

உலகைப் பார்க்க கண்கள் வேண்டும் என்று நாம் அவரிடம் கேட்கவில்லை.

அவராகவே தந்தார். 

இந்த உலகத்தையோ அதில் உள்ள எந்த பொருளையுமோ நாம் கேட்கவில்லை. 

ஆனால் கடவுள் அவற்றையெல்லாம் படைத்த பிறகு தான் நம்மைப் படைத்தார். 

அவர் படைத்த பொருட்களை எல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

கடவுளை நினைத்துக் கொண்டு அவற்றைப் பயன்படுத்துவதும் செபம் தான்.

அவற்றை நமக்கு தந்ததற்குக்  கடவுளுக்கு நன்றி கூற வேண்டாமா?"

"நமது நன்றியால் அவருக்கு என்ன பயன்?"

"'நம்மால் அவருக்கு எந்த பயனும் இல்லை. 

ஏனெனில் அவருக்குத் தேவைகள் இல்லை.

ஆனால் அவருடைய உதவி இல்லாமல் நாம் ஒரு வினாடி கூட உலகில் வாழ முடியாது."

"'நமது நன்றியால் யாருக்குப் பயன்?"

"'நமக்குதான். நமது ஒவ்வொரு நல்ல செயலாலும், அதாவது, ஒவ்வொரு செபத்தாலும் 
 நாம் அனுபவிக்க இருக்கும் நித்திய பேரின்பத்தின் அளவு கூடிக் கொண்டேயிருக்கும். 

நாம் மோட்சத்துக்குச் செல்லும் போது அதை அனுபவிப்போம்.

கடவுளுடைய அன்பு தன்னலம் அற்றது. அவருக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் பயனையும் அவர் நமக்காக deposit செய்து வைத்திருக்கிறார். நாம் விண்ணகம் செல்லும் போது அதை எடுத்துக் கொள்ளலாம்.

இதை ஏன் எனக்குத் தெரியுமே என்று சொல்லவில்லை?"

"எனக்குத் தெரியும் என்பது உங்களுக்குத் தெரியுமே!"

லூர்து செல்வம்.

Thursday, May 15, 2025

"தோமா அவரிடம், "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?" என்றார். (அரு.14:5)



"தோமா அவரிடம், "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?" என்றார். 
(அரு.14:5)

தோமாவின் இந்த வார்த்தைகள் எனது வகுப்பில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் பிள்ளைகளை ஞாபகப்படுத்துகிறது.

வருடம் முழுவதும் பாடம் நடத்தி, விடுமுறை நாட்களிலும் Special class வைத்து தேர்வுக்குத் தயாரித்த பின் இறுதித் தேர்வுக்கு முந்திய நாள், 

"சார், தேர்வுக்கு உறுதியாக வரக்கூடிய கேள்விகளை மட்டும் சொல்லுங்க" என்பார்கள்.

அதேபோல இயேசு சீடர்களை மூன்று ஆண்டுகள் இரவும் பகலும் கூடவே வைத்திருந்து பயிற்சி கொடுத்திருந்தும்

அவர் மரித்து விண்ணகத் தந்தையிடம் செல்வதற்கு முந்திய நாள் வியாழக்கிழமை இரவு

"நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். 

நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்" . 
(அரு.14:3,4)
என்று சொன்ன போது 

தோமையார் 

 "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?" 
என்றார்.

வேடிக்கையாக இல்லை!

ஆனால் ஆண்டவருக்குக் கோபம் வரவில்லை.

இயேசு ஏற்கனவே பல முறை சொன்னதை திரும்பவும் இப்போது அமைதியாக சொல்கிறார்,
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. 


"நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்" என்றார். 
(14:6,7)


நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" 
என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார். 
(அரு. 10:30)

ஆனால் அதை மறந்து  பிலிப்பு, அவரிடம், "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என்றார். 

இயேசு மறுமொழியாக

 "பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, "தந்தையை எங்களுக்குக் காட்டும்" என்று நீ எப்படிக் கேட்கலாம்? 

நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே."
(14:8,9,10)

இயேசு செய்த புதுமைகளிலே மிகப்பெரிய புதுமை 

அவரது வாழ்வின் இறுதிவரை மக்குகளாகவும், பயந்தாங்கொள்ளிகளாகவும் இருந்த சீடர்களைக் கொண்டுதான் 

தனது நற்செய்தியை உலகின் கடைசி எல்கை வரை பரப்பினார்!

அன்று முதல் இன்று வரை திருச்சபை வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால் 

அதை ஆள்கின்ற பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் ஆகியோரின் திறமையினால் அல்ல,

இயேசு அனுப்பிய தூய ஆவியின் வல்லமையால் தான்.

இயேசுவும் தூய ஆவியும் ஒரே கடவுள் தான்.

ஒவ்வொரு ஆலயத்திலும்  திவ்ய நற்கருணை பேழையில் ஆண்டவர் அமைதியாக இருப்பது போல் தெரிகிறது. 

ஆனால் குருக்களின் உழைப்புக்குப் பலன் கொடுப்பவர் அவர்தான்.

மறைந்த போப் பிரான்சிசின் திறமையைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறோம்.

அவரது திறமைக்கு உயிர் கொடுத்தவர் திரி ஏக கடவுள் தான்,

தந்தையும், , நற்கருணை ஆண்டவரும், தூய ஆவியும்தான்.

இன்றைய புதுத் தந்தை பதினான்காம் சிங்கராயரைத் தேர்ந்தெடுத்தவரும், இனி அவர் மூலம் திருச்சபையை வழிநடத்தப்  போகிறவரும் 
அதே தமதிரித்துவக் கடவுள்தான்.

நாமும் சொந்த திறமையினால் மீட்படைய முடியாது.

நமக்குள் இருந்து நம்மை வழி நடத்தும் திரி ஏக கடவுளின் அருளால் தான் மீட்புப் பெறுவோம்.

இயேசு புவிக்கு வந்தது விண்ணகத் தந்தையிடமிருந்து தான்.

போயிருப்பதும் அங்கேதான்.

நாம் போக வேண்டியதும் அங்கேதான்.

நற்கருணைப் பேழையில் தங்கியிருப்பதும் விண்ணகம் சென்று விட்ட அதே இயேசு தான்.

இப்போது கடைசி பெஞ்ச் மாணவர் தோமையாரைப் போல கேட்பார்,

"அதெப்படி சார் ஒரே இயேசு ஒரே நேரத்தில் விண்ணகத்திலும், பூமியிலும் இருக்க முடியும்?"


அவர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விண்ணகவாசிகள் இடத்துக்கும், நேரத்துக்கும் அப்பாற்பட்டவர்கள்.

இயேசு விண்ணக வாசி.

ஆனால் திவ்ய நற்கருணை வைக்க இடம் தேவைப்படுகிறது,
அது எப்படி?

திவ்ய நற்கருணையில் அப்ப, ரசக் குணங்களில் இயேசு இருக்கிறார்.

அப்பத்துக்கும், ரசத்துக்கும் நிறம், ருசி, இடத்தில் இருத்தல், அளவு போன்ற குணங்கள் உண்டு. அவை Accidents, வெளியே தெரியும் குணங்கள்.

திருப்பலியில் குருவானவர் அப்பத்தைக் கையில் எடுத்து,

"இது என் உடல்" என்று சொல்லும்போது 

அப்பத்தின் உட்பொருள் (Substance) இயேசுவின் உடலாக மாறி விடுகிறது.

அப்பத்தின் வெளிக் குணங்கள் அப்படியே இருக்கும், ஆனால் அதன் உட்பொருள் இயேசுவின் உடலாக மாறி விடுவதால் 

அது நமது கண்ணுக்கு அப்பம் போல் தெரியும், ஆனால் அது அப்பம் அல்ல, இயேசுவின் உடல்.

நாம் நாவில் வாங்குவது அப்பத்தை அல்ல, இயேசுவின் உடலை.

அதேபோல் குருவானவர் ரசத்தைக் கையில் எடுத்து,

"இது என் இரத்தம்" என்று சொல்லும் போது 

ரசம் இயேசுவின் இரத்தமாக மாறிவிடுகிறது.

நமது பார்வைக்கு ரசம் போல் தெரியும், ரசத்தின் ருசி இருக்கும், ஆனால் அது ரசம் அல்ல, இயேசுவின் இரத்தம்.

திவ்ய நற்கருணை வாங்கும் போது கடவுளுக்குச் செய்ய வேண்டிய ஆராதனை உணர்வோடு வாங்க வேண்டும்.

ஏதோ ஆரஞ்சு வில்லையை வாங்குவது போல கையில் வாங்கி வாயில் போடுவது நாம் கடவுளுக்குச் செய்யும் அவமரியாதை.

இயேசுவின் முன் முழங்காலில் இருந்து நாவில் வாங்குவோம்.

இயேசு நற்கருணைப் பேழையில் தங்கியிருப்பது நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்வதற்காகத்தான்.

"நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். (14:3)

நான் போகுமிடத்துக்கு வழி நானே.''
 
திருப்பலியிலும், 
திருவிருந்திலும் கலந்து கொள்வதன் மூலம் இயேசு வழியே விண்ணக வாழ்வுக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, May 14, 2025

"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்."(அரு.13:34)



"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்."(அரு.13:34)

"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்னும்  கட்டளையை   ஏன் இயேசு புதிய கட்டளை என்கிறார்?

"உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. 
(மத்.22:39)

என்ற கட்டளையை இயேசு ஏற்கனவே கொடுத்து விட்டார்.

"நான் உங்களுக்குப் புதிய கட்டளையைக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்."


இயேசு நம்மை நேசிப்பது போல நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்பது புதிய கட்டளை.

பழைய கட்டளையில் நாம் நம்மீது கொண்டுள்ள அன்பு நமது பிறரன்புக்கு அளவுகோல்.

புதிய கட்டளையில் இயேசு நம்மீது கொண்டுள்ள அன்பு நமது பிறரன்புக்கு அளவுகோல்.

நாம் நம்மீது கொண்டுள்ள அன்பை சுய அன்பு என்று வைத்துக் கொள்வோம்.

இயேசு நம்மீது கொண்டுள்ள அன்பை இறையன்பு என்று வைத்துக் கொள்வோம்.

நாம் நம் மீது கொண்டுள்ள   அன்பு அளவு உள்ளதுதான், ஏனென்றால் நாம் அளவுள்ளவர்கள் 

ஆனால் இறையன்பு அளவில்லாதது.

அளவில்லாத வல்லமை வாய்ந்த கடவுள் சாதாரண மனிதனை மீட்பதற்காக 

அவன் அளவுக்கு தன்னைத் தாழ்த்தி 

அவனைப் போன்ற மனிதனாகப் பிறந்து, 

அவனுக்காகப் பாடுகள் பட்டு மரிக்கும் அளவுக்கு அளவில்லாதது.

நம்மை நாம் நேசிக்கும் அளவுக்கு நம்மால் நமது பிறனை நேசிக்க முடியும்.

ஆனால் அளவில்லாத கடவுள் நம்மை நேசிக்கும் அளவுக்கு நம்மால் பிறனை நேசிக்க முடியுமா? 

முடியும். எப்படி?

"ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்"
(மத்.5:48)

நம்மால் செய்ய முடியாததைச் செய்யும்படி இயேசு கேட்க மாட்டார். 

நமது முழுமையான முயற்சியைப் பயன்படுத்தி ஆன்மீகத்தில் வளர வேண்டும்.

பாத்திரம் சிறியதாக இருக்கலாம்.
ஆனால் அது நிறைய நீர் ஊற்றி வைக்கலாமே!

ஒரே ஆள் கிணற்றிலும் நீந்தலாம், கடலிலும் நீந்தலாம்.

கிணற்றில் நீந்தத் தேவையான முயற்சியை விட கடலில் நீந்த அதிக முயற்சி தேவை.

கிணற்றில் நீந்துவதை விட கடலில் நீந்துவது அதிக பெருமைக்குரியது.

நாம் நமக்குள்ளே நீந்துவதை விட இறைவனில் நீந்துவோம்.

இறைவனுக்குள் மூழ்கி அவர் அளவற்ற அன்பை அனுபவித்து அந்த அனுபவத்தை நமது பிறனோடு பகிர்ந்து கொள்வோம்.

அப்படிப் பகிரும் போது இறைவன் நம்மை நேசிப்பது போல நமது பிறனை நேசிப்போம்.

அப்படி நேசிக்கும் போது புதிய கட்டளைப்படி நடக்கிறோம்.

புதிய கட்டளைப்படி நடந்ததால்தான் சீடர்களும் இயேசுவைப் போல சிலுவையைச் சுமந்து, அதாவது, துன்பப்பட்டு வேத சாட்சிகளாக மரித்தார்கள்.

நாமும் நமது பிறரன்பின்போது இயேசுவைப் போல சிலுவையை ஏற்று அதிலேயே மரிப்போம், இறைவனின் மகிமைக்காக.

இயேசுவின் அன்பினால் இயக்கப்பட்டு வாழ்பவன் இயேசு துன்பத்தை  ஏற்றுக்கொண்டது போலவே ஏற்றுக்கொள்வான். 

துன்பத்தை மனம் உவந்து ஏற்றுக் கொண்ட புனிதை பர்ணஞானம் அருட்சகோதரி அல்போன்சா.

துன்பத்தை நாம் பார்க்கும் பார்வைக்கு ஏற்ப அதன் தன்மை மாறும்.

மண்ணகக் கண் கொண்டு பார்த்தால் துன்பத்தின் வலி மட்டும் தான் தெரியும்.

ஆனால் விண்ணகக் கண் கொண்டு பார்த்தால் துன்பம் பேரின்பத்தின் ஊற்று என்பது புரியும்.

விண்ணகத்தில் பேரின்பத்தின் அளவைத் தீர்மானிப்பதே மண்ணகத்தின் நாம் படும் துன்பத்தின் அளவுதான்.

உலகில் வாழும் போது இறைவனுக்காக அதிகமான சிலுவைகளை ஏற்றுக் கொண்டவர்கள் மோட்சத்தில் மிக அதிகமான பேரின்பத்தை அனுபவிப்பார்கள்.

தண்ணீர் எடுக்கப் போகிறவன் பெரிய பாத்திரத்தை எடுத்துச் சென்றால் அதிகமான தண்ணீரை எடுத்து வருவான்.

சிறிய பாத்திரத்தௌ எடுத்துச் சென்றால் அது நிறைய எடுத்து வந்தாலும் பெரிய பாத்திரம் கொள்ளும் அளவு அது கொள்ளாது.

நமது ஆன்மாவாகிய பாத்திரத்தை சிலுவைகளைக் கொண்டு பெரியதாக்குவோம்.

லூர்து செல்வம்.

Tuesday, May 13, 2025

"என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்."(அரு.15:9)



"என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்."
(அரு.15:9)

ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவுரை கூறும்போது இன்னாரைப் போல் வாழுங்கள் என்பார்.

தான் தன் மனதில் யாரை உயர்வான இடத்தில் வைத்திருக்கிறாரோ அவரை மாணவர்களுக்கு முன்மாதிரியாக காண்பிப்பார்.

அன்பை மட்டுமே தன் போதனையின் மையமாகக் கொண்டிருந்த இயேசு,

""என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன்.

நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்."

நான் உங்கள் மேல் கொண்டுள்ள அன்பு என் தந்தையின் அன்பைப் போன்றது.

 என் தந்தையின்  விருப்பப்படி நான் நடப்பதன் மூலம் அவரது அன்பில் நிலைத்திருக்ககறேன்.

நான் உங்கள் மீது கொண்டுள்ள அன்பின் விளைவாக நீங்கள் என் விருப்பப்படி நடக்க வேண்டும்.

அப்படி நடந்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்."

வேறு வார்த்தைகளில்,

என் தந்தை என்னை அன்பு செய்கிறார். நான் என் தந்தையை அன்பு செய்கிறேன். எங்கள் இருவருக்கும் ஒரே அன்பு, ஒரே சித்தம். ஆகவே நான் அவரது
விருப்பப்படி நடக்கிறேன்.
(அவரது விருப்பமும் எனது விருப்பமும் ஒரே விருப்பம்தான்.)

நான் உங்களை அன்பு செய்வது போல நீங்கள் என்னை அன்பு செய்தால் எனது விருப்பப்படி நடப்பீர்கள்.

ஒருவர் யாரை அன்பு செய்கிறாரோ அவர் விருப்பப்படி நடப்பார்.

தந்தைக்கும் மகனுக்கும் ஒரே அன்பு, ஒரே சித்தம்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலவும் ஒரே அன்பின் காரணமாக அவர்களுடைய சித்தமும், அதாவது, விருப்பமும் ஒன்றாக இருக்கிறது.

தந்தை விரும்புவதையே மகனும் விரும்புகிறார்.

இயேசுவுக்கும் சீடர்களுக்கும் இடையே நிலவும் அன்பு அவர்களுடைய விருப்பத்தில் பிரதிபலிக்க வேண்டும்.

பன்னிருவரை மட்டுமல்ல நம்மையும் இயேசுவின் சீடர்களாக நினைத்துக் கொண்டு தொடர்ந்து தியானிப்போம்.

இயேசு செய்ய விரும்புவதை சீடர்களாகிய நாமும் செய்ய விரும்ப வேண்டும்.

இயேசு செய்வதை நாமும் செய்ய வேண்டும்.

இயேசுவைப் போல நாமும் பகைவர்களை நேசிக்க வேண்டும்.

இயேசுவைப் போல நாமும் குற்றம் செய்பவர்களை மன்னிக்க வேண்டும்.

இயேசுவைப் போல நாமும் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்

இயேசுவைப் போல நாமும் மற்றவர்களுக்காக நமது உயிரைத் தியாகம் செய்ய வேண்டும்.

இயேசுவைப் போல நாமும் மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

தந்தையைப் போல மகன்.

மகனைப் போல சீடர்கள், நாம்.

இயேசு பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

நாம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்கிறோமா?

இயேசு சென்ற இடமெல்லாம் நன்மையே‌ செய்தார்.

நாம் எங்கு சென்றாலும் எல்லோருக்கும் நன்மை செய்கிறோமா?

இயேசு கெத்சமனித் தோட்டத்தில் தனது சித்தமல்ல, தந்தையின் சித்தமே நிறைவேறட்டும் என்றார்.

நமது செபத்தில எப்படி வேண்டுகிறோம்?

"ஆண்டவரே தேர்வு எழுதியிருக்கிறேன்.

உமக்கு விருப்பம் இருந்தால் வெற்றியைத் தாரும் என்று வேண்டுகிறோமா? அல்லது, தேர்வில் வெற்றியைத் தாரும் என்று மட்டும் வேண்டுகிறோமா?

அனேக சமயங்களில் இறைவனின் விருப்பத்தை பற்றி நாம் கவலைப்படுவதில்லை. நமது விருப்பம் நிறைவேற வேண்டும் என்பது மட்டும் நமது விருப்பம்.

அதற்காகவே செபிக்கிறோம்.

அதற்காகவே 
திருத்தலங்களுக்குச் செல்கிறோம்.

நமது விருப்பம் நிறைவேறிவிட்டால் இறைவனுக்கு நன்றி கூறுகிறோம். 

ஆனால் நிறைவேறாவிட்டாலும் நன்றி கூற வேண்டும்.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூற வேண்டும்.

பிலாத்துவின் அரண்மனையில் இயேசுவைக் கட்டி வைத்து அடித்தார்கள். அடிகள் அத்தனையையும் வாங்கிக் கொண்டார்.

நம்மை யாராவது அடித்தால் இயேசுவைப் போல ஏற்றுக் கொள்கிறோமா?

சிலுவைப் பாதையில் இயேசுவுக்கு நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வையும் நினைத்துப் பார்ப்போம்.

இயேசுவின் இடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்.

நினைத்துப் பார்ப்போம்.

இயேசுவைப் பற்றி தியானிக்கும் போது நம்மைப் பற்றியும் தியானித்துப் பார்ப்போம்.

கிறித்தவனாக வாழ்கிறோமா, கிறித்தவன் என்ற பெயரில் மட்டும் வாழ்கிறோமா,   சிந்திப்போம்.

கிறித்தவன் கிறித்தவனாக வாழ வேண்டும், பெயரளவில் அல்ல.

லூர்து செல்வம்.