Wednesday, June 7, 2023

."உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் உன் முழு ஆன்மாவோடும் உன் முழு மனத்தோடும் உன் முழு வலிமையோடும் அன்பு செய்வாயாக" (மாற்கு.12:30).

"உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் உன் முழு ஆன்மாவோடும் உன் முழு மனத்தோடும் உன் முழு வலிமையோடும் அன்பு செய்வாயாக" (மாற்கு.12:30)

இயேசு கடவுளை அன்பு செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை.

"உன் முழு உள்ளத்தோடும்

 உன் முழு ஆன்மாவோடும்

 உன் முழு மனத்தோடும்

 உன் முழு வலிமையோடும்

அன்பு செய்ய வேண்டும்"  என்கிறார்.

முழு உள்ளத்தோடு அன்பு செய்ய வேண்டும் என்றால் நமது உள்ளத்தில் கடவுள் மட்டுமே இருக்க வேண்டும்.

முழு ஆன்மாவோடு அன்பு செய்ய வேண்டும் என்றால் நமது ஆன்மா அவருக்காக மட்டுமே வாழ வேண்டும்.


முழு மனத்தோடு அன்பு செய்ய வேண்டும் என்றால் ஒரு நாளில் 24 மணி நேரமும் அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.


முழு வலிமையோடு அன்பு செய்ய வேண்டும் என்றால்  நமது சக்தி முழுவதையும் கடவுளுக்காக மட்டுமே செலவிட வேண்டும்.

நமது உள்ளத்தில் கடவுளைத் தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை.

நமது ஆன்மா தான் குடியிருக்கும் உடலை பற்றிக் கூட கவலைப்படாமல் கடவுளுக்காக மட்டுமே வாழ வேண்டும்.

நம்மை பற்றி கூட நமது மனது நினைக்கக் கூடாது. கடவுளைப் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும்.

நமது வலிமையை கடவுளைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது.

ஒரு அப்பா தனது மகனைப் பார்த்து,

''மகனே எனது அறையில் ஏராளமான தின்பண்டங்கள் வைத்திருக்கிறேன்.

ஒரு டப்பா ஒன்றும் வைத்து இருக்கிறேன்.

அந்த டப்பா மட்டுமே உனக்கு.

நீ எனது அறைக்குச் சென்று அந்த டப்பாவை மட்டும் எடுத்துக் கொண்டு வா"

பையன் அப்பாவின் அறைக்குச் சென்று பார்த்தான்.

அவனுக்கு பிடித்தமான இனிப்பு வகைப் பண்டங்கள் நிறைய இருந்தன.

டப்பாவும் இருந்தது.

அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. 

தனது ஆசையும் நிறைவேற வேண்டும், அப்பாவின் ஆசையும் நிறைவேற வேண்டும்.

தனக்கு விருப்பமான பண்டங்களால் டப்பாவை நிறப்பினான்.

டப்பாவை மூடினான்.

டப்பாவை எடுத்துக்கொண்டு அப்பாவிடம் வந்தான்.

"அப்பா நீங்க சொன்னபடி எனக்கு மட்டுமே உரிய டப்பாவை மட்டும் கையில் வைத்திருக்கிறேன்."

"வேறு ஒன்றும் உன் கையில் இல்லையா?

"கையில் டப்பா மட்டுமே உள்ளது. ஆனால் டப்பா நிறைய தின்பண்டங்கள் உள்ளன."

"தின்பண்டங்கள் உனக்கு என்று நான் சொல்லவில்லையே!"

"நானும் சொல்லவில்லை. டப்பா மட்டும்தான் எனக்கு. தின்பண்டங்கள் டப்பாவுக்கு."

"அதாவது தின் பண்டங்கள் டப்பாவுக்கு,
டப்பா முழுமையாக உனக்கு.

இப்போது ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். இயேசு "உன் முழு உள்ளத்தோடு கடவுளை அன்பு செய் என்கிறார்.

முழு உள்ளத்தோடு கடவுளை அன்பு செய்ய முடியுமா?"

"நம்மால் முடியாததைச் செய்ய இயேசு சொல்ல மாட்டார்.

டப்பா மட்டுமே உனக்கு என்றீர்கள்.

நான் டப்பா நிறைய திருப்பண்டங்களைப் போட்டு விட்டு டப்பாவை மட்டும் கையில் வைத்திருக்கிறேன்.

கடவுள் விஷயத்தில் போடவேண்டிய வேலை மிச்சம்.

கடவுள் உலகைப் படைத்தார். ஆகவே உலகமும் அதில் உள்ள அத்தனையும் அவருக்குச் சொந்தம்.

அவர் எங்கும் இருப்பதால் எல்லாம் அவருக்குள்ளே இருக்கின்றன.

நான் எனது முழு உள்ளத்தையும் கடவுளுக்கு கொடுத்து விடுவேன்.

கடவுள் என் உள்ளம் முழுவதும் குடியேறுவார்.

இப்போது எனது உள்ளத்தில் குடியிருப்பவர் கடவுள் மட்டுமே.

அவர் முழுவதும் எனக்கு சொந்தம்.

அவர் முழுவதும் எனக்கு சொந்தமாகும் போது அவளுக்குள் உள்ள அத்தனையும் எனக்கு சொந்தமாகின்றன.

நான் கடவுளை மட்டுமே நேசிக்கிறேன்.  

கடவுளுக்குள் அனைத்தும் அடங்குவதால் நான் கடவுளை நேசிக்கும் போது அவருக்குள் அடங்கிய அனைத்தையும் நேசிக்கிறேன். 

அவருக்குள் அடங்கிய அனைத்தையும் சேர்த்து நேசித்தால் தான் நான் கடவுளை முழு மனதோடு நேசிப்பதாக அர்த்தம்.

நீங்கள் என்னை நேசிக்கும் போது எனக்குள் இருக்கிற அத்தனை உறுப்புகளையும் நேசிக்கிறீர்கள் அல்லவா? 

அதேபோல நான் கடவுளை நேசிக்கும் போது அவரது படைப்புகள் அத்தனையும் நேசிக்கிறேன்.

நானும் கூட அவருக்குள்ளே தான் இருக்கிறேன், ஏனெனில் நானும் அவரது படைப்பு தானே.

ஆகவே நான் கடவுளை நேசிக்கும் போது அவருக்குள் இருக்கும் என்னையும் நேசிக்கிறேன்.

நான் கடவுளை நேசிக்கும் போது அவரால் படைக்கப்பட்ட இயற்கையை நேசிக்கிறேன், 

இயற்கையில் உள்ள பொருட்களை நேசிக்கிறேன்,

அவரால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களையும் நேசிக்கிறேன்.

எல்லார் மேலும் உள்ள நேசம் இறை நேசத்திற்குள் அடங்கும்.

அதனால் தான் இயேசு 'எனக்குள் அடங்கி இருக்கிற உன்னை நேசி, உன்னை நேசிப்பது போல உனது அயலானையும் நேசி' என்கிறார்."

"கடவுளை நேசிக்காமல் அயலானை நேசிக்க முடியாதா?"

"நமது குடும்பத்தில் உள்ள அனைவரும் உங்கள் மூலமாகவே எனக்குச் சொந்தம்.

உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் இறைவன் மூலமாகவே எனக்குச் சொந்தம்.

இறைவன் மூலமாக செய்யப்படும் அன்புதான் உண்மையான அன்பு.

இறைவனை மறுத்துவிட்டு நாம் மனிதர் மீது செய்வதாக நினைக்கும் அன்பு உண்மையான அன்பு அல்ல.

நாம் நமது முழு உள்ளத்தோடு கடவுளை நேசிக்கும் போது நாம் யாரையெல்லாம் நேசிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அவர்களையெல்லாம் நேசிக்கிறோம்."

"படைக்கப்பட்ட பொருள்கள் நமக்குப் பயன்படுகின்றன என்பதற்காக அவற்றை நேசிக்க கூடாது. கடவுளுடைய படைப்புகள் என்பதற்காக மட்டுமே அவற்றை நேசிக்க வேண்டும்."

''நமது முழு ஆன்மாவோடு கடவுளை நேசித்தால்,

அதாவது,

நமது ஆன்மா கடவுளை மட்டும் நேசித்தால் 

அது வாழக்கூடிய உடலின் நன்மைக்காக ஒன்றும் செய்யக்கூடாதா?

உடலின் நன்மைக்காக ஒன்றும் செய்யாவிட்டால் உடலால் இயங்க முடியாதே!"

"உடல் படைக்கப்பட்டதும் இறைவனுக்கு சேவை செய்வதற்காகத்தான்.

ஆன்மா இறைப் பணிக்காக தன்னை முற்றிலும் அர்ப்பணித்து விட்டால் இறைப் பணிக்குத் தேவையான எல்லாவற்றையுமே கவனித்துக் கொள்ளும்.

அந்த வகையில் ஆன்மா தான் வாழும் உடலை இறை பணிக்காக பயன்படுத்தும்."

"மனிதன் தனது முழு வலிமையையும் இறைவனை நேசிப்பதற்காக பயன்படுத்தி விட்டால் 

இது உலகில் வாழ்வதற்கு தேவையான வலிமைக்கு எங்கே போவான்?"

"நமது வாழ்க்கை முழுவதையும் இறைப் பணிக்கு அர்ப்பணித்து விட்டால் உலகில் வாழ்வதே இறைப் பணிக்காகவே இருக்கும்.

உலகில் வாழ்வதும் இறைவனுக்காக வாழ்வதும் ஒரே வாழ்க்கை என்றால் நமது வலிமை முழுவதையும் அதற்கே செலவழிப்பதுதான் முறை.

ஒரு விவசாயி தனது முழு வலிமையையும் பயன்படுத்தி இறைவனது மகிமைக்காக தன்னுடைய பயிர்த் தொழிலைச் செய்தால் அவனது பயிர்த்தொழிலே இறைப்பணி ஆகி விடுகிறது."

"ஒருவன் தனது முழு மனத்தையும் இறைவனை நேசிப்பதற்காக பயன்படுத்துகிறான்.

24 மணி நேரமும் ஒரு வினாடி தவறாமல் இறைவனையே நினைத்துக் கொண்டிருக்க முடியுமா?''

"தான் பழகும்  ஒவ்வொரு மனிதனிலும்,

தான் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும்,

தான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு இயற்கை நிகழ்விலும் ஒருவன் இறைவனைக் கண்டால் 

அவன் இறைவனைத் தானே ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

சுனாமி வந்தது.

உலகப் பார்வையில் பார்த்தவர்கள் அது ஏராளமான அழிவை ஏற்படுத்திவிட்டது என்று கூறினார்கள்.

அதில் மரணம் அடைந்தவர்களை அழிவுப் பட்டியலில் சேர்த்தார்கள்.

ஆனால் சுனாமியை விசுவாசக் கண்ணுடன் பார்த்தவர்கள், 

இறைவனது திட்டத்திற்கு உட்பட்ட ஒரு இயற்கை நிகழ்வாகப் பார்த்தார்கள். 

அதில் மரணம் அடைந்தவர்கள் அழியவில்லை, 

இவ்வுலக வாழ்வை வாழ்ந்து விட்டு மறு உலக வாழ்வுக்குள் நுழைந்தார்கள்.

இறைவனால் உலகில் படைக்கப்பட்டவர்கள் எப்படி, எப்போது அவரிடம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பவர் அவரே.

தங்களது அந்தஸ்தின் கடமைகளை செய்பவர்கள் அவற்றை எப்படி இறைவனுக்கு பிடித்தபடி செய்வது  என்று நினைப்பது அவர்களைப் பொறுத்தமட்டில் இயற்கையே.

தும்மல் வரும்போது கூட,

"இயேசுவே இரட்சியும்"

என்று கூறிக்கொண்டே தும்முவதை பார்த்திருக்கிறோம்.

இறைவனுக்காக வாழ்பவர்களுக்கு அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது  இன்பம் தரும்."

இறைவனுக்காக வாழாமல் தங்களுக்காக மட்டும் வாழ்பவர்களுக்கு இவ்வுலகம் துன்பங்கள் மட்டுமே நிறைந்தது.

தங்களுக்காக வாழாமல் இறைவனுக்காக மட்டும் வாழ்பவர்கள் நித்திய பேரின்பத்தை முன் ருசித்துக்கொண்டே வாழ்வார்கள்.

Living only for the glory of God is a pretaste of eternal bliss."

இறையன்புப் பணிக்கு நம்மை முழுமையாக அர்ப்பணிப்போம்.

லூர்து செல்வம் -

No comments:

Post a Comment