Friday, June 30, 2023

"ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்."(மத்.8:8)

"ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்."
(மத்.8:8)

 திமிர்வாதத்தால் வீட்டில் கிடந்து மிகுந்த வேதனைப் பட்டுக் கொண்டிருந்த தன் ஊழியனுக்குக் குணம் கொடுக்கும்படி இயேசுவைக் கேட்க வந்த நூற்றுவர்தலைவனின் வார்த்தைகள் இவை.


"நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" 

என்று சொன்ன இயேசுவை நோக்கி,

"ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை சொன்னால் போதும்: என் ஊழியன் குணமடைவான்"

என்று கூறினான்.

இயேசுவும் அவனது விசுவாசத்தின் ஆழம் கருதி,

அவனது இல்லத்திற்குச் செல்லாமலேயே அவனது ஊழியனைக் குணமாக்கினார்.


நூற்றுவர்தலைவன் தான் சொன்ன வார்த்தைகளின் பொருளை உணர்ந்து சொன்னான்.

சர்வ வல்லவரும், பரிசுத்தருமாகிய இயேசு வர பாவியாகிய தனது இல்லம் தகுதி அற்றது என்பதை உணர்ந்து சொன்னான்.

 நாம் திவ்ய நற்கருணை மூலம் நமது ஆண்டவரை நமது இதயமாகிய இல்லத்திற்கு வரவேற்கும் போது 

இதே வார்த்தைகளை நாமும் கூறுகிறோம்.

ஆனால் வார்த்தைகளின் பொருளை உணர்ந்து கூறுகிறோமா,

 அல்லது 

வெறும் சடங்கின் அடிப்படையில் கூறுகிறோமா?

உணர்ந்து கூறினால் பாவ நிலையோடு திவ்ய நற்கருணை ஆண்டவரை நமது இல்லத்திற்குள் வரவேற்க மாட்டோம்.

திருப்பலிக்கு முன்பே நமது இதயத்தைப் பாவ சங்கீர்த்தரத்தின் மூலம் பரிசுத்தம் ஆக்கிவிட்டு,

அப்புறம் தான் திருப்பலியிலும் திருவிருந்திலும் கலந்து கொள்வோம்.

ஒவ்வொரு நாளுமோ, ஞாயிற்றுக்கிழமை தோறுமோ திருவிருந்தில் கலந்து கொள்ள வேண்டியதிருப்பதால்,

பாவ சந்தர்ப்பங்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம்.

பாவ சோதனை வரும்போது நமது இதயத்தை அசுத்தப்படுத்திவிட கூடாது என்பதற்காக,

பாவத்தை விலக்குவதிலும்,

நமது பரிசுத்தத் தனத்தைக் காப்பாற்ற வேண்டிய அருள் வரங்களைத் தரும்படி இறைவனை வேண்டுவதிலும் கவனமாக இருப்போம்.

மன வல்லப செபங்களைக் கூறுவதின் மூலமும்,

செபமாலைகளைப் பக்தியுடன் செபிப்பலின் மூலமும் 

நமது இருதயப் பரிசுத்தத் தனத்தைக் காப்பாற்றுவோம்.

திவ்ய நற்கருணை வாங்குவதற்கு மட்டுமல்ல,

எந்த வினாடியும் மரணத்தின் வழியாக 

இயேசுவோடு இணைந்து வாழ விண்ணகம் செல்வதற்கும் தயாராக இருப்போம்.

பெயருக்கு மட்டுமல்ல உண்மையிலேயே இயேசுவின் சீடர்களாக வாழ்வோம்.

நமது இருதயம் பரிசுத்த ஆவி வாழும் ஆலயம்.

அந்த ஆலயத்தின் பரிசுத்தத் தனத்தை பரிசுத்த ஆவிக்காகக் காப்பாற்றுவோம்.

இறைவாக்கை வாசிப்பதில் மட்டுமல்ல, அதை வாழ்வாக்குவதிலும் அக்கறை காட்டுவோம்.

"ஆண்டவரே நீர் என் இல்லத்திற்குள் எழுந்தருளி வர நான் தகுதியற்றவன்.

தயவுகூர்ந்து எனது பாவங்களை எல்லாம் மன்னித்து, உம்மை எனது இதய இல்லத்திற்குள் ஏற்றுக்கொள்ள தகுதி உள்ளவனாக மாற்றும்.

நான் எந்த வினாடி இறந்தாலும் என்னை உமது இல்லமாகிய விண்ணக வாழ்வுக்குள் ஏற்றுக்கொள்ளும்."

லூர்து செல்வம்.

Thursday, June 29, 2023

"ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" (மத்.8:2)

"ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" (மத்.8:2)

இது ஒரு தொழு நோயாளியின் செபம்.

உடல் ரீதியாக தொழு நோயாளிகள் தொடக்கூடாதவர்கள் தான்.

தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும்.

ஆனால் ஆன்மீக ரீதியாக அவர்களிடம் நல்ல குணங்கள் இருந்தால் ஆன்மாக்கள் தொட்டுக் கொள்ளலாம்.

அவர்களிடம் உள்ள நற்குணங்களை ஏற்றுக் கொள்ளலாம்.

ஒரு தொழு நோயாளி ஆண்டவரைப் பார்த்து,

" என்னை குணமாக்கும்" என்று கேட்கவில்லை.

"நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" 

என்றுதான் வேண்டுகிறான்.

"ஆண்டவரே எனக்கு எது நல்லது என்று உமக்குத் தெரியும்.

நான் விரும்புவது எனக்கு நன்மை பயக்குமா, தீமை பயக்குமா என்று எனக்குத் தெரியாது.

ஆனால் உமக்குத் தெரியும்.

நீர் சர்வ வல்லவர். உம்மால் எல்லாம் முடியும்.

நீர் விரும்பினால் நான் வேண்டுவதை உன்னால் தர முடியும்.

நான் விரும்புவதைத் தாரும் என்று உம்மிடம் கேட்கவில்லை.

நான் கேட்காமலேயே என்னை ஒன்றும் இல்லாமையிலிருந்து படைத்தீர்.

நான் கேட்காமலேயே என்னைப் பராமரித்து வருகிறீர்.

நான் எனது விருப்பத்தை தெரிவித்து விட்டேன்.

நீர் உமது விருப்பம் போல் செய்யும்."

என்றுதான் நாம் இறைவனிடம் வேண்ட வேண்டும்.

நாம் எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை  நேசிக்க வேண்டும் என்று நமது ஆண்டவர் கூறியுள்ளார்.

நமது அன்புக்கு இறைவன் தான் முதலிடம்.

நாம் அடுத்த இடம் தான்.

இறைவனுடைய விருப்பம், நமது விருப்பம் என்ற இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமானால்

இறைவனது விருப்பத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.

நமது விருப்பம் நமக்கு நேரடியாகத் தெரியும்.

இறைவனது விருப்பம் என்னவென்று நமக்கு நேரடியாகத்  தெரியாது.

"ஆண்டவரே உமது விருப்பம் எதுவாக இருந்தாலும் அது என்னில் நிறைவேறட்டும்."

என்று இறைவனிடம் ஒப்படைத்து விட்டால்,

அதன்பின் நமக்கு எது நடந்தாலும் இறைவன் விருப்பப்படி தான் நடக்கும்.

நாம் நம்மை முற்றிலும் அவர் கையில் ஒப்படைத்து விட்டால் 

அவர் நம்மை எப்படி வழி நடத்துகிறாரோ அப்படியே நாம் நடக்க வேண்டும்.

ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

வேலை வேண்டுமென்பது நமது விருப்பமாக இருக்கலாம்.

ஆனால் அது இறைவனது விருப்பமா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது.

ஆகவே "ஆண்டவரே நான் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறேன்.

அது உமது விருப்பத்திற்கு ஒத்ததாக இருந்தால் அதைப் பெற்றுத் தாரும்.

உம்மால் எல்லாம் முடியும்.

நான் விண்ணப்பித்திருக்கிற வேலை உமது விருப்பத்திற்கு ஏற்றதாக இருந்தால் அதைத் தாரும்.

எதிராக இருந்தால் அதைத் தர வேண்டாம்.

உமக்கு விருப்பமான வேலையை எனக்கு நீர் தந்தால் அதை எனக்கு விருப்பமானதாக ஏற்றுக் கொள்கிறேன்.

என்னில் எது நடந்தாலும் அது உமது விருப்பப்படியே நடக்கட்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான மன்றாட்டு."

இறைவன் கையில் ஒப்படைத்த பிற்பாடு நாம் விண்ணப்பித்திருக்கிற வேலை நமக்கு கிடைக்காவிட்டால்

இறைவனது சித்தம் நம்மில் நிறைவேறியதற்காக நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்" என்பது இறைவாக்கு.

இறைவாக்கு நமது வாழ்வாக மாற வேண்டும்.

என்ன நடந்தாலும் இறைவன் சித்தப்படி தான் நடக்கிறது என்று ஏற்றுக்கொள்பவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கும்.

துன்பங்கள் கூட மகிழ்ச்சியையே தரும்.

"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"

என்ற இயேசுவின் செபமே நமது 
செபமாகவும் இருக்கட்டும்.

லூர்து செல்வம்.

Wednesday, June 28, 2023

''உங்கள் எதிரிகள் எவருமே உங்களை எதிர்த்து நிற்கவோ மறுத்துப் பேசவோ கூடாதபடி உங்களுக்குப் பேச்சுவன்மையும் ஞானமும் அருளுவேன்."(லூக்.21:15)

"உங்கள் எதிரிகள் எவருமே உங்களை எதிர்த்து நிற்கவோ மறுத்துப் பேசவோ கூடாதபடி உங்களுக்குப் பேச்சுவன்மையும் ஞானமும் அருளுவேன்."
(லூக்.21:15)

நாம் நற்செய்தி அறிவிக்கும் போது அதை கேட்பவர்களில் நல்லவர்களும் இருக்கலாம், கெட்டவர்களும் இருக்கலாம்.

கெட்டவர்களை மனம் திருப்புவதே நற்செய்தி அறிவிப்பதன் நோக்கம்.

கெட்டவர்களில் அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் இருந்தால்,

அவர்கள் நம்மைக் கைது செய்து நம்மை விசாரிக்கலாம்.

அப்படி விசாரிக்கும் போது அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பதை பற்றி நாம் யோசிக்க வேண்டாம்.

என்ன கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பதை இயேசுவே நமது உள்ளுணர்வின் மூலம் நமக்கு அறிவிப்பார்.

எல்லோருக்கும் நற்செய்தி அறிவிப்பவர்கள் சொற்பொழிவுக் கலையில் பயிற்சி பெற வேண்டிய அவசியம் இல்லை.

நற்செய்தி நமது மனதில் ஆழமாக பதிந்து விட்டால் அதை வாய் மூலம் மற்றவர்களுக்கு அறிவிக்கும் போது கடவுள் அருளால் வார்த்தைகள் தாமாகவே வரும்.

நாம் நற்செய்தியை அரைகுறையாக அறிந்திருந்தால் நம்மால் அதைப் பற்றி மற்றவர்களுக்குத் தெளிவாக அறிவிக்க முடியாது.

நாம் நற்செய்தியை ஒழுங்காக அறிந்திருந்து 

அதை அறிவிக்கும் ஆசையும் உண்மையாக இருந்தால் 

அதை அறிவிக்கும் போது நமக்கு இறைவனுடைய உதவி கட்டாயம் கிடைக்கும்.

ஆகவே எப்படி அறிவிப்பது என்று திட்டம் போடுமுன்,

நற்செய்தியை நாம் முழுமையாக அறிந்திருந்து,

அதை நமது வாழ்வாக மாற்றியிருக்க வேண்டும்.

நற்செய்தி நமது வாழ்வாக மாறிவிட்டால்,

நமது வாழ்க்கை அனுபவங்கள் நற்செய்தி அனுபவங்களாகவே இருக்கும்.

நமது வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது எளிது.

அப்படி பகிர்ந்து கொள்ளும் போது நற்செய்தியும் பகிர்ந்து கொள்ளப்படும்.

ஒருமுறை ஒருவர் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு பேருந்தில் ஏறும்போது,

மற்றொரு நபரும் அவரோடு ஏறி அவர் அருகில் அமர்ந்தார்.

அவர் கையில் ஊழியர்களின் கடமைகள் பற்றிய புத்தகம் ஒன்று இருந்தது.

அதை பார்த்தவுடன் இவர் அவரிடம்,

"நீங்கள் என்ன பணி புரிகிறீர்கள்?" .

, "நற்செய்தி ஊழியம் செய்கிறேன்" 

, "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" 

"நான் ஒரு கத்தோலிக்க ஆசிரியர்" 

"நான் உங்களிடம் கேள்விகள் கேட்கலாமா?" 

"நீங்கள் கேட்கலாம்,
 நான் பதில் சொல்லலாம்.

நான் கேட்கும் போது நீங்கள் பதில் சொல்லலாம்.

ஆனால் நமக்குள் வாக்குவாதம் கூடாது.

No argument."

''நீங்கள் ஏன் மரியாளுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?" 

"மரியாள் யார்?"

"இயேசுவின் தாய்."

"நீங்கள் உங்கள் தாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா?"

"என்னைப் பெற்று, பாலூட்டி, சீராட்டி வளர்த்தவர்களும், இப்போது என்னைப் பராமரித்து வருகின்றவர்களும் என்னுடைய தாய் தானே.

அவர்களுக்கு எப்படி நான் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க முடியும்?"

"இயேசுவை பெற்று, பாலூட்டி சீராட்டி வளர்த்து, பராமரித்து வந்தது மரியாள் தானே.

இயேசு தனது தாய்க்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பாரா இல்லையா?"

'கட்டாயம் கொடுத்திருப்பார்."

''இயேசுவே தனது தாய்க்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் போது,

அவரை பின்பற்றுகிற நாங்கள் அவரது தாய்க்கு முக்கியத்துவம் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

இயேசு கடவுளும், மனிதனுமாக இருக்கிறார்.

கடவுளாகிய இயேசுவின் தந்தை நமது தந்தை.

மனித உரு எடுத்த இயேசுவின் தாய் நமது தாய்.

நமது தாய்க்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமா இல்லையா?"

நாம் மரியாளின் மைந்தர்களாக வாழ்ந்து வந்தால்,

மற்றவர்கள் நமது தாயைப் பற்றி என்ன கேள்வி கேட்டாலும் நம்மால் பதில் சொல்ல முடியும்.

இது ஒரு உதாரணமே.

நற்செய்தி முழுவதையும் நமது வாழ்வாக வாழ்ந்தால்,

நமது நற்செய்தி அனுபவங்களை மிக எளிதாக நம்மால் பகிர்ந்து கொள்ள முடியும்.

நமது விசுவாசத்தை வார்த்தைகள் மூலமும், வாழ்க்கையின் மூலமும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள

 நமக்கு இயேசு நமக்கு அருளும் பேச்சு வன்மையும், ஞானமுமே போதும்.

வேறு திறமை எதுவும் தேவையில்லை.

மற்றவர்களோடு எதைப் பகிர்ந்தாலும் அதோடு இயேசுவையும் சேர்த்து தான் பகிர்வோம்.

இது நமது இயல்பு ஆகிவிடும்.

எப்போதும் நம்மோடு இருக்கும் இயேசுவே நம்மை வழி நடத்துவார்.

இயேசு எப்போதும் நம்மோடு இருக்கும்படி நாம் நற்செய்தியை வாழ வேண்டும்.

லூர்து செல்வம்.

Tuesday, June 27, 2023

"இவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள்:"(மத்.7:15)

"இவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள்:"(மத்.7:15)

மனிதர்களை அவர்களின் இயல்பின் அடிப்படையில் மூன்று வகையினராகப் பிரிக்கலாம்.

1. நல்லவர்கள்.
2. கெட்டவர்கள்.
3. நல்லவர்கள் போல் நடிக்கும் கெட்டவர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை நேசித்து,

தங்களை நேசிப்பது போல பிறரையும் நேசித்து,

இறைவனுக்கும்,

அவர் பெயரால் மற்றவர்களுக்கும் பணியாற்றி வாழ்பவர்கள் நல்லவர்கள்.

இறைவனையும், பிறரையும் மறந்து, தங்களை மட்டும் மையமாக வைத்து வாழ்பவர்கள் கெட்டவர்கள்.

கெட்டவர்கள் இரு வகை.

மற்றவர்கள் பார்வையிலும் கெட்டவர்களாகவே வாழ்கிறவர்கள் முதல் வகை.

இறைவனையும், மற்றவர்களையும் நேசிப்பது போலவும், 

இறைப்பணியும், பிறர் பணியும் செய்வது போலவும் நடித்து உண்மையில் கெட்டவர்களாக வாழ்கிறவர்கள் இரண்டாம் வகை.

இரண்டாம் வகையினரைப் போல முதல் வகையினர் ஆபத்தானவர்கள் அல்ல.

புலியை புலியாகவே பார்த்தால் பார்ப்பவர்கள் முதலிலேயே தப்பித்து ஓடி விடுவார்கள்.

புலி ஆட்டுத் தோலை அணிந்து, ஆடு போல் காட்சி அளித்தால்

 அதை ஆடு என்று நினைத்து அதோடு பழகுபவர்கள்

 இறுதியில் ஆட்டுத் தோல் போர்த்திய புலியால் சாப்பிடப்பட்டு விடுவார்கள்.

அதேபோல, கெட்டவர்கள் நல்லவர்களாக நடிக்காமல் கெட்டவர்களாகவே வாழ்ந்தால்,

நல்லவர்கள் அவர்களைப் பார்த்தவுடன் ஒதுங்கி விடுவார்கள்.

நல்லவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை.

ஆனால் கெட்டவர்கள் நல்லவர்கள் போல நடித்து வாழ்ந்தால்

 உண்மை அறியாத நல்லவர்கள் அவர்களோடு பழகி அவர்களும் கெட்டவர்களாக மாறிவிடுவார்கள்.

நற்செய்தி அறிவிப்பவர்கள்  தாங்கள் போதிக்கும் நற்செய்தியின் படி வாழ்ந்தால்,

அவர்களது முன்மாதிரிகையைப் பின்பற்றி நற்செய்தியைக் கேட்பவர்களும் அதன்படி  வாழ்வார்கள்.

உண்மையில் நற்செய்தியின் படி வாழாமல்,

நல்லவர்கள் போல் நடித்து,

தங்கள் சுயநலனுக்காக நற்செய்தியை அறிவிப்பவர்களோடு பழகுகின்றவர்கள்

 காலப்போக்கில் அவர்களைப் போலவே மாறி விடுவார்கள்.

இந்த நடிகர்களைத்தான் ஆண்டவர்  ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருகிறவர்கள் என்கிறார்.

இவர்களைக் குறித்து நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவர்களது போதனையும் வாழ்க்கையும் ஒன்றாக இருக்கிறதா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஒன்றாக இருந்தால் அவர்கள் உண்மையிலேயே நல்லவர்கள்.

அவர்கள் போதனைப்படி நாம் வாழலாம்.

ஆனால் அவர்களது வாழ்க்கையும் போதனையும் வெவ்வேறாக இருந்தால் 

அவர்களோடு  பழகவோ, அவர்கள் கூறுவதைக் கேட்கவோ கூடாது.

இன்று உலக அனுபவத்தில் பைபிளை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு,

அதன்படி தாங்கள் வாழ்வதாகக் கூறிக் கொண்டு,

ஆனால் சம்பந்தமில்லாமல் வாழ்கிறவர்களைப் பின்பற்றக் கூடாது.

ஏழ்மையை பற்றி போதிப்பார்கள்,  ஆனால் பணம் ஈட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள்.

காணிக்கை என்று பெயர் வைத்து அவர்கள் வாங்கும் பணம் அவர்களது ஆடம்பரமான வாழ்க்கைக்கு உணவாகிக் கொண்டிருக்கும்.

கேட்பவர்களது மனதை கவ்விப் பிடித்து இழுக்கும் அளவிற்கு இவர்களது பேச்சு திறமை இருக்கும்.

 இயேசுவையே அவர்கள் வாழ்வது போல் அவர்களது போதனை இருக்கும்.

ஆனால் இயேசு எதற்காக உலகிற்கு வந்தாரோ அது எதுவும் இவர்கள் போதனையில் இருக்காது.

பாவ சங்கீர்த்தனத்தைப் பற்றி பேச மாட்டார்கள்.

திருப்பலியைப் பற்றி பேச மாட்டார்கள்.

திவ்ய நற்கருணையைப் பற்றி பேச மாட்டார்கள்.

பாவ மன்னிப்பு பெறாமல்,
திருப்பலியில் கலந்து கொள்ளாமல்,
இயேவை ஆன்மீக உணவாக உட்கொள்ளாமல்

வேறு எதைச் செய்து வாழ்ந்தாலும்

அப்படி வாழ்பவன் கிறிஸ்தவன் அல்ல.

ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு நம்மிடம் வரும் போலித் தீர்க்கதரிசிகள்மட்டில் எச்சரிக்கையாக
இருப்போம். 

லூர்து செல்வம்.

Monday, June 26, 2023

இடுக்கமான வாயில்வழியே நுழையுங்கள்." (மத்.7:14)


"இடுக்கமான வாயில்வழியே நுழையுங்கள்." (மத்.7:14)

தேர்வுக்குத் தயாரித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தேர்வுக்குரிய பாடத்தைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தக்கூடாது.

முழு நேரத்தையும் பாடத்தைக் கற்பதற்கே செலவழிக்க வேண்டும்.

பாடத்தை வாயிலாகவும் தேர்வை வீடாகவும் கற்பனை செய்து கொண்டால்,

தேர்வாகிய வீட்டுக்குள் செல்லும் வாயில் மிகக் குறுகலானது.

அங்கு பாடத்திற்கு மட்டும்தான் இடம் இருக்கும்.

வெறும் பொழுதுபோக்கை வீடாக எடுத்துக் கொண்டால்,

அதற்குரிய வாயில் மிக அகலமானது.

எதிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

மனதுக்கு எதன்மேல் ஆசை வருகிறதோ அதை இஷ்டம் போல் செய்து நமது பொழுதைப் போக்கலாம்.

தேர்வுக்குத் தயாரிப்பவர்கள் இஷ்டம் போல் பொழுது போக்கினால் தேர்வு எழுத முடியாது.

விண்ணகமாகிய வீட்டிற்குச் செல்லும் வாயில் மிகக் குறுகலானது. 

இறைவனையும், பிறனையும் அன்பு செய்து, இறைவனது கட்டளைகளின் படி வாழ்பவர்களே விண்ணகமாகிய வீட்டிற்குள் செல்ல முடியும்.

இஷ்டப்பட்ட உலகப் பொருள்களின் மீது அன்பு கொண்டு,

இறைவனது கட்டளைகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல்,

தங்கள் விருப்பம் போல் வாழ்பவர்களுக்கு வாழ்க்கை ஜாலியாக இருக்கும்.

அத்தகைய வாழ்க்கை நரகத்தின் வாயில்.

வாழும்போது ஜாலியாக வாழ்பவர்கள்,

மரணத்தின் போது வேதனை மிகுந்த வாழ்க்கைக்குள் நுழைவார்கள்.

வாழும்போது இறைவனது கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்கள், நித்திய பேரின்ப வாழ்க்கைக்குள் நுழைவார்கள்.

நாள் முழுவதும் இறைவனது பிரசன்னத்தில் நடக்க வேண்டும்.

அதுவும் கட்டளைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.

இஷ்டம் போல் நினைக்க கூடாது, இஷ்டம் போல் பார்க்கக் கூடாது, இஷ்டப்பட்டதை எல்லாம் கேட்கக்கூடாது.

நமது சொந்த விருப்பங்களைத் தியாகம் செய்துவிட்டு,

இறைவனது விருப்பத்தை மட்டும் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ வேண்டும்.

இத்தகைய வாழ்க்கை சிலுவைகள் நிறைந்தது.

சிலுவைகளை மகிழ்ச்சியோடு சுமக்க வேண்டும்.

கசப்பான மருந்தைக் குடிப்பவர்கள் மட்டும் உடல் நலம் பெறுவது போல,

சிலுவைகளை முழு மனதோடு சுமப்பவர்கள் மட்டும் விண்ணக வாழ்வைப் பெறுவார்கள்.

விளக்குமாற்றைப் பயன்படுத்தாத வீடு தூசிகள் நிறைந்திருக்கும்.

சுவாசிக்கத் தூய காற்று கிடைக்காது.

இஷ்டம்போல் கட்டளைகளை மீறி,

பாவ மன்னிப்புப் பெறாதவர்களின் ஆன்மா,

பாவம் அழுக்கால் நிறைந்திருக்கும்.

பாவத்திற்கு விண்ணகத்தில் இடமில்லை.

ஐம்பொறிகளை அடக்கி, தூய உள்ளத்தோடு வாழ்பவர்களுக்கு மட்டும் விண்ணகத்தில் இடம் கிடைக்கும்.

இதை மனதில் கொண்டு குறுகலான வாயில் வழியே விண்ணகத்திற்குள் நுழைவோம்.

பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, June 25, 2023

"நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள்."(மத்.7:1)

"நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள்."(மத்.7:1)

கடவுள் நம்மை அவருடைய சாயலில் படைத்தார்.

அவர் அசல், நாம் நகல்.

நகலைப் பார்த்தாலே அசல் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நாம் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது நமது சான்றிதழின் Xerox copy யைத்தானே அனுப்புகிறோம்.

நம்மில் நாம் கடவுளைப் பார்க்கிறோம்.

நமது அயலானும் நம்மைப் போல் தான் இருக்கிறான்.

ஆகவே நம்மில் கடவுளைப் பார்ப்பது போல் நமது அயலானிலும் கடவுளைப் பார்க்க வேண்டும்.

நாம் நம்மை நேசிப்பது போல் நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்று நமது ஆண்டவர் சொல்கிறார்.

நம்மைப் பற்றி தப்பாக நினைக்க நமக்கு மனசு வருமா?

எப்போதும் நம்மைப் பற்றி நாம் உயர்வாக நினைக்கவே ஆசைப்படுகின்றோம்.

அப்படியானால் நமது அயலானைப் பற்றித் தப்பாக நினைக்கலாமா?

மற்றவர்களைத் தீர்ப்பிட நமக்கு எந்த உரிமையும் இல்லை.

மற்றவர்களைத் தீர்ப்பிட்டால் நாமும் அதே தீர்ப்புக்கு உள்ளாவோம்.

மற்றவர்களைப் பார்க்கும்போது அவர்களிடம் உள்ள நற்குணங்களை மட்டுமே பார்க்க வேண்டும்.

அப்போதுதான் நாம் அவர்களை நம்மை நேசிப்பது போல நேசிக்க முடியும்.

மனிதருள் குற்றம் இல்லாதவர் யாருமில்லை.

மற்றவர்களிடம் உள்ள ஒரு குற்றம் நம் கண்ணில் பட்டால் அதே குற்றம் நம்மிடமும் இருக்கிறது என்று அர்த்தம்.

பனை மரத்தின் அடியில் அமர்ந்து ஒருவன் பால் சாப்பிட்டாலும்,

குடிகாரனுக்கு அவன் கள் சாப்பிடுவது போலவே தோன்றும்.

நாம் ஒரு இடத்துக்குச் சென்று ஒரு தப்பு செய்தால், அந்த இடத்துக்கு செல்வோரெல்லாம் அதே தப்பைச் செய்வதாக நமக்குத் தோன்றும்.

நமது கண்ணில் குற்றம் இருந்தால் அந்த கண்ணைக் கொண்டு யாரைப் பார்க்கிறோமோ அவர்களிடமும் அதே குற்றம் இருப்பது போல் தோன்றும்.

ஏனெனில் நமது கண் மற்றவர்களிடம் பிரதிபலிக்கும்.

நமது பிரதிபலிப்பை நாம் பார்த்து அதுதான் நமது அயலான் என்று தீர்மானித்து விடக்கூடாது.

இப்போது ஒரு கேள்வி எழலாம்.

மற்றவர்கள் தப்பு செய்யும் போது அதைத் திருத்தும் கடமை நமக்கு இல்லையா?

முதலில் நம்மை நாமே பரிசோதித்து,

 நமது குற்றங்களைக் கண்டறிந்து

 அவற்றைத் திருத்தியபின் மற்றவர்களை திருத்த முயல வேண்டும்.

நமது வாயில் சிகரெட்டை வைத்துக்கொண்டு 

மற்றவர்களிடம் "சிகரெட் பயன்படுத்துவது தவறு" என்று சொன்னால் அவர்கள் நம்மைப் பார்த்து சிரிப்பார்கள்.

"நீ முதலில் திருந்து," என்பார்கள்.

24 மணி நேரமும் இருமிக் கொண்டிருக்கும் ஒரு வைத்தியர் இருமலுக்கு மருந்து கூறுவதை யார் நம்புவார்கள்?

ஆகவே ஒன்றை மனதில் வைத்துக் கொள்வோம்.

உலகைத் திருத்த ஆசைப்படுமுன் முதலில் நாம் திருந்துவோம்.

அப்போதுதான் நமது ஆசை நியாயமானதாக இருக்கும்.

நாம் யாராலும் தீர்ப்பிடப்பட ஆசைப்படுவதில்லை.

நாமும் மற்றவர்களைத் தீர்ப்பிட வேண்டாம்.

மனிதர்களைத் தீர்ப்பிடும் உரிமை அவர்களைப் படைத்த கடவுளுக்கே உண்டு.

கடவுளின் உரிமையில் தலையிட நமக்கு உரிமை இல்லை.

முதலில் நாம் திருந்துவோம்.

மற்றவர்களை சகோதர உரிமையோடு தீர்ப்பிடாமல், திருத்துவோம்.

ஒரு நல்ல மாணவர் தான் நல்ல ஆசிரியர் ஆக முடியும்.

அவரால் தான் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும்.

யாரையும் தீர்ப்பிடுவதில்லை என்று தீர்மானம் எடுப்போம்.

நாம் திருந்துவோம்.

லூர்து செல்வம்.

Saturday, June 24, 2023

"ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலைக் கொல்லுவோருக்கு அஞ்சாதீர்கள்." (மத்.10:28)

"ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலைக் கொல்லுவோருக்கு அஞ்சாதீர்கள்." (மத்.10:28)

"முதலாளி, வரச் சொன்னீங்களா?"

"நாளை என் மகனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுகிறோம்.

வீட்டில் வேலை இருக்கிறது. காலை எட்டு மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடு."

''முதலாளி, நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை."

"தெரியும்."

"எட்டு மணிக்கு கோவிலில் பூசை ஆரம்பிக்கும். நான் ஏழரை மணிக்கு கோவிலுக்குச் செல்ல வேண்டும். 

ஒன்பதரை மணிக்கு மேல் தான் எங்கேயும் செல்ல முடியும்.

ஒன்பதரை மணிக்கு மேல் உங்கள் வீட்டுக்கு வருகிறேன்."

", ஏண்டா, காலையில் எட்டு மணிக்கு செய்ய வேண்டிய வேலையை 9:30 மணிக்கு மேல் செய்தால் நான் விழா கொண்டாடுவது எப்படி?''

"முதலாளி நான் பூசைக்கு கட்டாயம் போக வேண்டும்."

",அப்போ, நான் சொல்வதைச் செய்ய மாட்டாய்!"

"ஒன்பதரை மணிக்கு மேல் என்ன வேலையை வேண்டுமானாலும் செய்கிறேன்."

"எட்டு மணிக்கு வர முடியுமா, முடியாதா?"

'முதலாளி நான் பூசைக்கு கட்டாயம் போக வேண்டும்."

"அப்போ, நான் சொல்வதைக் கேட்க மாட்டாய்!"

"முதலாளி."

"இனிமேல் நான் உனது முதலாளி இல்லை. போகலாம்."

"சரி, ஐயா."

''என்னிடம் வேலை பார்க்காவிட்டால் உனக்குச் சம்பளம் யார் தருவார்?"

"அதை என்னைப் படைத்தவர் பார்த்துக் கொள்வார்."

"அப்போ, உன்னைப் படைத்தவரிடமே போ.

ஒரு நிமிடம் நில்.

வருடம் முழுவதும் உனக்குச் சம்பளம் தரும் வேலையை விட 

ஞாயிற்றுக்கிழமை பூசை முக்கியமா?"

''என்னைப் படைத்த கடவுளும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதும் தான் எனக்கு முக்கியம்.

வேலையால் கிடைக்கும் சம்பளம் எனது உடலுக்குச் சோறு போடும்.

எனது ஆன்மாவுக்கு வேண்டிய உணவை ஊட்டி காப்பாற்றக் கூடியவர் கடவுள் மட்டுமே.

உடல் ஒருநாள் மண்ணுக்குள் போய்விடும்.

அழியாத ஆன்மா தான் இறைவனோடு வாழ விண்ணுக்குப் போக வேண்டும்.

வருகிறேன்."

"வர வேண்டாம். போ"

*       *     *    *  *   *  *.   *   *

ஒரு அரசரும் துறவியும் பேசிக்கொள்கிறார்கள்.

அரசர்:  துறவி அவர்களே, நீங்கள் ஒரு பெரிய தியாகி.

துறவி : எதை வைத்து சொல்கிறீர்கள்?

அ: உங்களது ஆன்மாவின் வளர்ச்சிக்காக 

இந்த முழு உலகையும், 

அதில் உள்ள எல்லா இன்பங்களையும், 

உங்கள் உடலைச் சார்ந்த இன்பங்களையும் தியாகம் செய்திருக்கிறீர்களே!

நீங்கள் ஒரு பெரிய தியாகி.

து: அரசே, சிறிய இன்பத்துக்காக பெரிய இன்பத்தை தியாகம் செய்பவன் பெரிய தியாகியா?

அல்லது,


 பெரிய இன்பத்துக்காக  சிறிய இன்பத்தை தியாகம் செய்பவன் பெரிய தியாகியா?

அ: பெரிய இன்பத்தை தியாகம் செய்பவன்தான் பெரிய தியாகி.

து: ஒரு நாள் முடிவுக்கு வரும் இந்த உலக இன்பம் பெரிய இன்பமா,

முடிவில்லாத மோட்ச பேரின்பம் பெரிய இன்பமா?

அ: முடிவில்லாத மோட்ச பேரின்பம்தான் பெரிய இன்பம்.

து:உங்களுக்கு முக்கியம் மோட்சமா, உலக அரசாட்சியா?

அ:  நான் இந்நாட்டின் அரசன். எனக்கு எனது நாடே முக்கியம்.

து: நான் மோட்ச பேரின்பத்தைப் பெற வேண்டும் என்பதற்காக உலக சிற்றின்பத்தைத் தியாகம் செய்திருக்கிறேன்.

நீங்கள் உலகப் புகழாகிய சிற்றின்பத்தைப் பெறுவதற்காக  மோட்சப் பேரின்பத்தைத் தியாகம் செய்திருக்கிறீர்கள்.

அப்படிப் பார்க்கும்போது நீங்கள்தான் பெரிய தியாகி.

*     *      *      *     *     *   *    *   *  *

மனிதர்களில் அநேகருக்கு ஆன்மீக பேரின்பத்தை விட உடலைச் சார்ந்த சிற்றின்பத்தில் தான் ஆர்வம் அதிகம்.

காரணம் ஆன்மீக பேரின்பத்தை நாம் மரணம் அடைந்த பின்பு தான் அனுபவிக்க முடியும்.

'உடலைச் சார்ந்த சிற்றின்பத்தை இவ்வுலகில் வாழும் நாளெல்லாம் அனுபவிக்கலாம்.

கண்ணால் பார்க்க முடியாத ஆன்மா அனுபவிக்க விருக்கும் பேரின்பம் எப்படி இருக்கும் என்று மோட்சத்திற்கு சென்ற பின்பு தான் தெரியும்.

உடல் இன்பத்தை இங்கேயே இப்போதே அனுபவித்து விடலாம்.

மாம்பழத்தை விட பலாப்பழம் ருசியானது என்று தெரியும்.

ஆனாலும் அடுத்த ஆண்டு தான் கிடைக்கவிருக்கும் பலாப்பழத்தை விட

இப்பொழுது உடனே கிடைக்கும் மாம்பழத்தையே மக்கள் விரும்புவர்.

இயேசுவை மறுதலித்தால் அரசாங்கத்தில் உத்தியோக உயர்வு கிடைக்கும்,

மறுதலிக்க மறுத்தால் அடி உதையோடு கூடிய ஜெயில் தண்டனை கிடைக்கும்

என்று அரசு சொன்னால்  குடிமகன் என்ன சொல்வான்?

இயேசுவை மறுதலித்தால் அவரையும் அவர் வாழும் மோட்சத்தையும் இழந்து விடுவோம்.

இயேசுவை ஏற்றுக் கொள்வதால் கிடைக்கும் ஜெயில் தண்டனை எப்படியாவது ஒருநாள் முடிந்து விடும்.

ஆன்மாவைக் கொல்லுதல் என்றால்  அதை நித்திய நரகத்துக்கு அனுப்புதல் என்று பொருள்.

உடலை கொல்லுதல் என்றால் அதை மண்ணுக்குள் அனுப்புதல் என்று பொருள்.

உடல் என்றாவது ஒருநாள் மண்ணுக்குள் போய்த்தான் ஆக வேண்டும். உடலை இழப்பதால் நமக்கு பெரிய நட்டம் ஒன்றும் இல்லை.

ஆனால் ஆன்மாவை இழந்தால் இழப்பவருக்கு நித்தியத்துக்கும் ஆன்மா நட்டம்.

எவ்வளவு பெரிய மன்னனாக இருந்தாலும் அவனால் அதிகபட்சம் நமது உடலை தான் கொல்ல முடியும்.

நமது ஆன்மாவை அவனால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆன்மாவை ஒன்றும் செய்ய முடியாதவனுக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்?

பாவம் ஒன்றுக்குதான் நமது ஆன்மாவைக் கொல்லக்கூடிய சக்தி உண்டு.

பாவம் ஒன்றுக்குதான் நாம் பயப்பட வேண்டும்.

தெய்வ பயம் என்றால் தெய்வத்துக்கு எதிராகப் பாவம் செய்ய பயப்படுதல் என்று பொருள்.

இறைவனுக்கு எதிராக பாவம் செய்யப் பயப்படுவது,

இறைஞானத்தின்  ஆரம்பம்.

Fear of God is the beginning of wisdom.

இறைவனது சித்தத்திற்கு ஏற்ப நடப்பதற்கு இறைஞானம் உதவி செய்யும்.

உடலை கொல்ல முடிந்தவனுக்குப்  பயப்பட வேண்டாம்.

ஆன்மாவைக் கொல்ல வல்ல பாவத்துக்குப் பயப்படுவோம்.

கடவுள் பாவியை நரகத்தில் தள்ளுகிறாரா?

ஒரு மாணவன் பொதுத் தேர்வில் 25 மதிப்பெண்கள் பெறுமான கேள்விகளுக்கு மட்டும் விடை அளித்துள்ளான்.

அவனது விடைத்தாளை மதிப்பீடு செய்பவர் அவனுக்கு அதிகபட்சம் எத்தனை மதிப்பெண்கள் கொடுக்க முடியும்?

அதிகபட்சம் 25.

ஆனால் வெற்றி பெறத் தேவையான மதிப்பெண்கள் 35.

மதிப்பீடு செய்பவர் இரக்கப்பட்டு எல்லா பதில்களுக்கும் முழு மதிப்பெண்கள் கொடுத்தாலும் அந்த மாணவனால் வெற்றி பெற முடியாது.

 விடைத்தாளை மதிப்பீடு செய்பவர் அந்த மாணவனை fail ஆக்குகிறாரா?

அந்த மாணவன்  fail ஆகிறானா?

சிந்தித்துப் பார்ப்போம்.

நரகம் படைக்கப்பட்டது சாத்தானுக்காக.

பாவம் செய்பவன் சாத்தானின் நண்பன்.

பாவம் செய்பவன் தனது பரிபூரண சுதந்திரத்தைப் பயன்படுத்தி

அவனது நண்பனுக்கு உரிய நரகத்தை அவனே தேர்ந்தெடுக்கிறான்.

அப்போதும் அவன் மேல் கடவுளுக்கு உள்ள அன்பு குறைவதில்லை.

ஆனால் நரகத்தில் உள்ளவனால் மனம் திரும்ப முடியாது.

உலகில் வாழும் போதே மனம் திரும்புவோம்.

கடவுளுக்கு எதிராக பாவம் செய்யப் பயப்படுவோம்.

புண்ணிய வாழ்வு வாழ்வோம்.

மோட்ச பேரின்ப வாழ்வு நமக்கே.

லூர்து செல்வம்.

Friday, June 23, 2023

"இச்சோதனைகள் நிகழ்வது உங்கள் விசுவாசம் உண்மையானதென்று காட்டவே."(1 இராய.1:7)

"இச்சோதனைகள் நிகழ்வது உங்கள் விசுவாசம் உண்மையானதென்று காட்டவே."
(1 இராய.1:7)

"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்."

என்று விண்ணகத் தந்தையை நோக்கித் தினமும் வேண்டுகிறோம்.

மாணவர்கள் வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களைப் புரிந்து படித்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிய ஆசிரியர் அவர்களுக்குத் தேர்வு வைக்கிறார்.

நமக்குப் போதிக்கப்பட்ட நற்செய்தியை நமது வாழ்வில் ஒழுங்காக கடைபிடிக்கிறோமா என்பதைக் கண்டறிய நமக்கு இறைவன் சோதனைகளை அனுமதிக்கிறார்.

"உங்கள் பகைவர்களை நேசியுங்கள், உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்"

என்று இயேசுவின் நற்செய்தி போகிறது.

இதை நாம் நமது வாழ்வில் கடைபிடிக்கிறோமா என்பதை நாமே எப்படி அறிய?

நாம் நம்மை நேசிப்பவர்கள் மத்தியில் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தால்,

"உனது பகைவர்களை நேசி" என்ற போதனைக்கு எதிராக எதுவும் செய்திருக்க மாட்டோம்.

அதை வைத்து நற்செய்திப்படி வாழ்கிறோம் என்று தீர்மானித்து விட முடியாது.

ஆகவே தான் நமது வாழ்வில் சோதனைகளை இறைவன் அனுமதிக்கிறார்.

இன்றைய நமது வாழ்க்கைச் சூழ்நிலையை எடுத்துக் கொள்வோம்.

நம்மைச் சுற்றி வாழ்வோர் அனைவரும் கிறிஸ்துவின் போதனைப்படி வாழும் புனிதர்களா?

மணிப்பூர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.

அதற்குக் காரணமானவர்களை நாம் நேசிக்கிறோமா அல்லது வெறுக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுப் பார்ப்போம்.

அதற்கான பதில் நாம் கிறிஸ்துவின் போதனைப்படி வாழ்கிறோமா என்பதை நமக்கு எடுத்துக்காட்டும்.

"என் பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள். இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."(மத்.10:22)

இது இயேசுவின் வாக்கு.

கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் இன்றைய இந்தியாவின் நிலை இதுதான்.

நம்மை ஆள்பவர்களே நாம் கிறிஸ்தவர்கள் என்பதால் நம்மை வெறுக்கிறார்கள்.

இதன் விளைவு தான் வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் படும் பாடு.

இந்த சூழ்நிலையிலும் நாம் நம்மை வெறுப்பவர்களை நேசிக்க வேண்டும்.

நமக்கு எதிராக அவர்கள் செய்யும் தீமைக்குப் பதிலாக நாம் அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.

அவர்கள் மனம் திரும்பி மீட்பு அடையும் படி அவர்களுக்காக இறைவனிடம் வேண்ட வேண்டும்.

"தந்தையே, இவர்களை மன்னியும்"

என்று சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது இயேசு தந்தையை நோக்கி கேட்டதை நமது ஞாபகத்தில் வைத்துக் கொள்வதோடு

அவர்களை மன்னிக்கும்படி நாமும் தந்தையை நோக்கி வேண்ட வேண்டும்.

"பொன் நெருப்பில் புடமிடப்படுவது போல் நமது விசுவாசம் புடமிடப் பட்டுக் கொண்டிருக்கிறது.

விசுவாசத்திற்கு எதிரான அழுக்குகள் நீக்கப்பட்டு நமது விசுவாசம் பரிசுத்தமடையும்.

 இயேசுவின் இரண்டாவது வருகையின் போது அவ்விசுவாசம் நமக்குப் புகழும் மகிமையும் மாண்பும் தருவதாய் விளங்கும்."

 நமது விசுவாசம் உண்மையானதென்று நாம் நிரூபித்துக்காட்டவே

 இச்சோதனைகளை இறைவன் அனுமதித்திருக்கிறார்.

நிரூபித்துக்காட்டுவோம்.

"வேத சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து"

என்பது வரலாறு நமக்குக் கற்பித்திருக்கும் உண்மை.

நமக்கு ஒளிமயமான எதிர்காலம் ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது
என்பதையே நிகழ்கால நிகழ்ச்சிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

பள்ளிக்கூடத்தில் தேர்வுகள் நடத்தப்படுவது நமது திறமையை நிரூபிக்கவே.

இன்றைய சோதனைகள் நாம் உண்மையான கிறிஸ்தவர்கள் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும்.

மணிப்பூரில் சிந்தப் பட்டுக் கொண்டிருக்கும் இரத்தம் கிறிஸ்தவம் செழித்து வளர்வதற்கான தண்ணீர்.

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்" என்பது இறைவாக்கு.

அன்று இயேசு நமக்காக இரத்தம் சிந்தினார்.

நம்மை மீட்டதற்காக நன்றி கூறிக் கொண்டிருக்கிறோம்.

"இயேசுவே, விசுவாசிகள் சிந்திக் கொண்டிருப்பது உம்முடைய இரத்தம்.

இந்தியாவை மீட்பதற்காக சிந்தப்பட்டுக் கொண்டிருக்கும் இரத்தம்.

இந்தியர் அனைவரையும் மீட்டருளும்.

இயேசுவே, நன்றி."

லூர்து செல்வம்.

Thursday, June 22, 2023

ஆனால் விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள் .( மத். 6:20)

"ஆனால் விண்ணுலகில்   செல்வம் சேர்த்துவையுங்கள் .( மத். 6:20)

"கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது"
என்று இயேசு கூறுகிறார்.

இந்த வசனத்தில் இயேசு இந்த உலகைச் சார்ந்த பொருட்களை செல்வம் என்று குறிப்பிடுகிறார்.

நாம் இந்த உலகில் இறைவனுக்காக   வாழ்வதற்கு நமக்கு உதவி செய்வதற்காக 

உலகத்தில் உள்ள பொருட்களை, அதாவது, உலகச்செல்வத்தைக்

 கடவுள் படைத்திருக்கிறார்.

இறைப் பணியில் நமக்கு உதவி செய்வதற்காக, 

அதாவது  சேவை செய்வதற்காகப்

 படைக்கப்பட்ட செல்வத்துக்கு நாம் சேவை செய்ய ஆரம்பித்தால் 

நாம் அதற்கு கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுக்கிறோம்.

உலக செல்வத்தின் மீது நமக்கு பற்று ஏற்பட்டால்,

இறைவன் மீது நமக்கு பற்று ஏற்படாது.

நாம் இப்போது உலகில் தான் வாழ்கிறோம், 

உலக பொருள்களைத்தான் பயன்படுத்துகிறோம்,

உலகப் பொருள்கள் இல்லாவிட்டால் நமக்கு உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் கிடைக்காது.

உலகப் பொருள்களை அவற்றின் மீது பற்று இல்லாமல்,

இறைப் பணிக்காக பயன்படுத்த வேண்டும்.

நாம்  இறைப் பணி செய்யும்போது இறைவன் நமக்குத் தரும் செல்வம் ஆன்மீக செல்வம்.

இறைவன் நமக்குரிய ஆன்மீகச் செல்வத்தை விண்ணகத்தில் சேர்த்து வைக்கிறார்.

உலகச் செல்வத்தை இறைவனுக்காகப் பயன்படுத்தும் போது நமக்கு விண்ணகத்தில் ஆன்மீகச் செல்வம் சேருகிறது.

நமது மரண நேரத்தில் இவ்வுலக செல்வத்தை உலகிலேயே விட்டுவிட்டு,

இறைவன் நமக்காக சேர்த்து வைத்துள்ள ஆன்மீகச் செல்வத்தை நித்திய காலம் அனுபவிக்க விண்ணகத்திற்குச் செல்வோம். 

 இறைவனை மறந்து இவ்வுலகச் செல்வத்தை இவ்வுலக வாழ்க்கைக்காக மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு 

விண்ணகத்தில் ஆன்மீக செல்வம் எதுவும் சேர்ந்ததிருக்காது.

அப்படிப்பட்டவர்கள் மரணத்திற்குப் பின் அனுபவிக்க

 இவ்வுலகச் செல்வமும் இருக்காது, மறுவுலகச் செல்வமும் இருக்காது.

புத்தியுள்ளோர் இவ்வுலகச் செல்வத்தை, மறுவுலக செல்வத்தை ஈட்டுவதற்காகப் பயன்படுத்துவர்.

எப்படிப் பயன்படுத்துவது?

இறையன்பு, பிறரன்பு பணிகளுக்காக அவற்றைப் பயன்படுத்தும் போது நாம் அவற்றை இறைவனுக்காகப் பயன்படுத்துகிறோம்.

நமது அயலானின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இவ்வுலகச் செல்வத்தைப் பயன்படுத்தினால்,

உண்மையில் அதை இறைவனுக்காகப் பயன்படுத்துகிறோம்.

அதாவது நாம் பிறர் அன்புப் பணி செய்யும்போது உண்மையில் இறையன்புப் பணி செய்கிறோம்.

அதற்குரிய சன்மானம் நமக்கு விண்ணகத்தில் சேர்ந்து கொண்டேயிருக்கும்.

இவ்வுலகில் நாம் இறைவனுக்காக வாழும்போது 

விண்ணுலகில்   செல்வத்தைச் சேர்த்துவைக்கிறோம்.

இறைவன் தாராள குணம் உள்ளவர்.

இவ்வுலக வாழ்வு குறுகியது.

குறுகிய கால இறைப் பணிக்காக அவர் நமக்குத் தரும் சன்மானமோ நித்தியமானது.

மரணம் வரை இறைவனுக்காக வாழ்வோம்.

மரணத்துக்குப் பின்  நித்திய காலம் இறைவனோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, June 21, 2023

"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்."(மத்.6:11)

"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்."(மத்.6:11)

நாம் பிறந்த நாளிலிருந்து நமது இறுதி முடிவு வரை உள்ள காலக்கட்டம்

ஆண்டுகளாக இருக்கலாம், அல்லது மாதங்களாக இருக்கலாம், 
அல்லது நாட்களாக இருக்கலாம்.

எப்படி இருந்தாலும் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ்கின்றோம்.

ஒவ்வொரு நாளும் உயிர் வாழத் தேவையான உணவு, மற்றும் பொருள்களை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகிறோம்.

பல நாட்களுக்கு அல்லது பல மாதங்களுக்குத் தேவையான உணவை ஒரே நாளில் சாப்பிட முடியாது.

அதேபோல பல நாட்களுக்கு அல்லது பல மாதங்களுக்குப் பயன்படுத்தத் தேவையான பொருட்களை ஒரே நாளில் பயன்படுத்தி விட முடியாது.

தங்கள் பெற்றோர் மீது நம்பிக்கை உள்ள பிள்ளைகள்  அன்றன்றைக்குத் தேவையானவற்றை அன்றன்றைக்குத் தங்கள் பெற்றோர்களிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.

எந்த குழந்தையும் தனது தாயிடம்,

"அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான உணவை இன்றே என்னிடம் தந்துவிடு" என்றுக் கேட்பதில்லை.

தாயும் பல நாட்களுக்குத் தேவையான உணவை ஒரே நாளில் கொடுத்து விடுவதில்லை.

ஒவ்வொரு நேரமும் குழந்தை பசித்து அழுத பின்பு தான் பால் கொடுக்கிறாள்.

இயேசுவும்,

"விண்ணக தந்தையே, எங்களுக்கு அன்றன்று தேவையானதை அன்றன்று தாருங்கள்.''

என்றுதான் கேட்க வேண்டும் என்று கற்பித்திருக்கிறார்.

"பல ஆண்டுகளுக்கு தேவையானதை மொத்தமாகத் தாருங்கள்" என்று கேட்கச் சொல்லவில்லை.

ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

வீட்டில் ஒரு ஆண்டுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

மூன்று பேருக்கு ஒரு ஆண்டுக்குத் தேவையான உணவுப் பொருள் இருந்தால் 

அது ஒரு ஆளுக்கு 3 ஆண்டுகளுக்குப் போதும்.

மூவரில் ஒருவன் மூன்று பேருக்குத் தேவையானதை மொத்தமாக அவனே எடுத்துக் கொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.

அவன் மூன்று ஆண்டுகள் கவலை இல்லாமல் ஒரு வேலையும் பார்க்காமல் உணவை சாப்பிடலாம்.

ஆனால் மற்ற இருவரும் மூன்று ஆண்டுகளும் பட்டினி கிடக்க வேண்டும்.

இருவரைப் பட்டினி போட்டு ஒருவன் மட்டும் உண்டு வாழ்வது நீதிக்குப் புறம்பானது.

கடவுள் உலகைப் படைக்கும் போது அதில் வாழப்போகும் அத்தனை பேருக்கும் தேவையான பொருட்களோடு தான் படைத்தார்.

அவற்றை உலகில் வாழும் மக்கள் தினமும் பகிர்ந்துண்டு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்ற கட்டளையையும் கொடுத்தார்.

மக்கள் கடவுளை நேசிப்பது போல அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசித்தால் 

அவரால் படைக்கப்பட்ட அனைவரும் தினமும் பயன்படுத்தும் படி தங்களது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வார்கள்.

வாழ்நாளெல்லாம் உழைக்காமல் உண்ணலாம் என்ற சுயநல நோக்கோடு பலரைப் பட்டினி போட்டு சிலர் மட்டும் எல்லாவற்றையும் அபகரித்துக் கொள்ள மாட்டார்கள்.

உண்மையான இறையன்பும், அதிலிருந்து பிறந்த பிறரன்பும் 
இல்லாத நாடுகளில் இதுதான் நடக்கிறது.

தொழிலாளிகளைப் பட்டினி போட்டு முதலாளிகள் சொகுசாக வாழ்கின்றார்கள்.

எல்லாம் அனைவருக்கும் சமம் என்று தத்துவம் பேசும் சோசலிச நாடுகளில் முதலாளிகள் செய்வதை அரசே செய்து விடுகிறது.

இறையன்பும், பிறரன்பும் இல்லாதவர்கள் ஆளும் நாடுகளில் நிலவும் நிலை இது.

தங்கள் குடும்பம் பல ஆண்டுகள் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக

பெரும்பாலான சொத்துக்களை அபகரித்து வாழும் முதலாளிகள் 

அன்றன்றைய பயன்பாட்டுக்கு மட்டும் மட்டும் தேவையானதை வைத்துக் கொண்டு 

மீதியை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

 நம்மை நாம் நேசிப்பது போல நமது பிறரையும் நாம் நேசித்தால் இது இயல்பாக நடந்து விடும்.

நமது அடுத்த வீட்டு அயலான் உண்ண உணவின்றி இருக்கும்போது

நாம் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்க மாட்டோம்.

ஏழைகள் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் போது,

பணக்காரர்கள் ஆடம்பரமாக வாழ்வது 

அன்பு இல்லாமையின் விளைவுதான்.

ஆடம்பரமான உணவும், வாழ்க்கை முறையும் தான் இன்றைய அனேக தீமைகளுக்குக் காரணம்.

எதிர்கால பயன்பாட்டுக்கு சேமித்து வைக்க வேண்டும் என்று உலகியல்வாதிகள் கூறுவது 

அவர்களைப் படைத்த இறைவன் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது.

நமது விசுவாசப் பிரமாணம் நமது வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவனை நாம் உண்மையிலேயே விசுவசித்தால், 

இன்று நம்மை காப்பாற்றிய அவர் நாளையும் காப்பாற்றுவார் என்று நம்புவோம்.

அவரால் படைக்கப்பட்ட நமது அயலானோடு நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்வோம்.

நாம் வாழ்வது போல நமது அயலானும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதில் தான் நமது பிறர் அன்பு அடங்கி இருக்கிறது.

நம்மை படைத்தவர் விருப்பப்படி நம்மிடம் இருப்பதை அனைவரோடும் பகிர்ந்துண்டு வாழ்வோம்.

அன்றன்றைய உணவு வாழ் நாள் முழுவதும் அனைவருக்கும் கிடைக்கும்.


"எனது அன்றாட உணவை எனக்கு இன்று அளித்தருளும்''
என்று செபிக்க இயேசு கற்பிக்கவில்லை.


"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்."

என்று செபிக்கவே அவர் கற்பித்துள்ளார்.

அனைவருக்கும் அன்றன்றைய உணவு அன்றன்றைக்குக் கிடைக்க இறைவனோடு ஒத்துழைப்போம்.

லூர்து செல்வம்.

Tuesday, June 20, 2023

"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."(மத்.6:1)

"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."
(மத்.6:1)

நமது ஆன்மாவையும், அதன் சிந்தனைகளையும் கடவுளைத் தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது.

நாம் நமது உடலால் செய்யும் செயல்களை கண் உள்ள யாராலும் பார்க்க முடியும்.

நமது உடலை இயக்குவது ஆன்மாதான்.

இயக்குவதன் காரணமும் நோக்கமும் ஆன்மாவுக்கும், கடவுளுக்கும் மட்டுமே தெரியும்.

 உடல் இயங்குவது அதைப் பார்ப்பவர்களுக்கும் தெரியும்.

இயக்குவதன் காரணமும், நோக்கமும் சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால் தான் மற்றவர்களுக்கு தெரியும்.

இயங்குவதைச் செயல் என்கிறோம்.

இறைவனுடைய அன்பை காரணமாகவும் நோக்கமாகவும் இயங்குவதை நற்செயல் என்கிறோம்.

நமது எல்லா செயல்களும் நற்செயல்கள் அல்ல. 

இறைவனது அன்பை மையமாக வைத்து செய்யப்படும் செயல்களே நற்செயல்கள்.

இறை அன்பினால் உந்தப்பட்டு,
தேவைப்படுகின்றவர்களுக்கு நாம் செய்யும் உதவி நற்செயல்.

இறை அன்பினால் அல்லாமல்,
நமது திருப்திக்காக மட்டும் தேவைப்படுகின்றவர்களுக்கு நாம் செய்யும் உதவி சாதாரண செயல், நற்செயல் அல்ல.

நற்செயல்களுக்கு விண்ணக வாழ்வின் போது சன்மானம் கிடைக்கும்.

சாதாரண செயல்களுக்கு ஆன்மீக சம்பந்தமான எந்தவித சன்மானமும் கிடைக்காது.

நமக்கு திருப்தி வேண்டுமானால் கிடைக்கும்.

அந்த திருப்தியால் ஆன்மீக ரீதியாக எந்தப் பயனும் இல்லை.

நமது செயல்கள் நமக்கு நித்திய பேரின்ப சம்பாவனையை  ஈட்டித் தர வேண்டுமென்றால்,

 நாம் அவற்றை இறையன்புக்காகவும்,

அதிலிருந்து பிறந்த பிறர் அன்புக்காகவும் மட்டும் செய்ய வேண்டும்.

நமது திருப்திக்காகவும்,

சுய விளம்பரத்திற்காகவும்,

மற்றவர்கள் அவற்றைப் பார்த்து நம்மைப் புகழ வேண்டும் என்பதற்காகவும்

செய்யப்படும் செயல்கள் நற்செயல்கள் அல்ல.

நமது சிந்தனைகளிலிருந்து தான் செயல் பிறக்கிறது.

நமது சிந்தனைகள் இறை அன்பை மையமாகக் கொண்டவையாக இருந்தால்,

நமது செயல்களும் இறை அன்பை மையமாகக் கொண்டவையாக இருக்கும்.

நமது சிந்தனைகள் எப்படிப் பட்டவை என்று நமக்கும், கடவுளுக்கும் மட்டுமே தெரியும்.

ஆகவே அவற்றிலிருந்து பிறந்த செயல்கள் நற் செயல்களா, அல்லது சாதாரண செயல்களா என்பதும் நமக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்.

அனேக சமயங்களில் நாம் மற்றவர்களைப் பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு அவர்களது செயல்களின் தன்மையைக் கெடுத்து விடுகிறோம்.

ஒருவர் 25 ஆண்டுகளாக உண்மையிலேயே இறையன்பின் அடிப்படையில் சேவை செய்து நற்செயல்கள் புரிந்து வாழ்ந்திருப்பார்.

விண்ணகத்திலும் தனது நற்செயல்களுக்கு இறைவனின் சம்பாவனையை ஈட்டி வைத்திருப்பார்.

ஆனால் நாம் அவரது சேவைகளைப் பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு,

அவரது சேவைகளுக்கு வெள்ளி விழாக் கொண்டாடுவதன் மூலம்,

உண்மையிலேயே இறைவனுக்காக செய்த சேவைகளைப் பற்றி,

அவர் மனதில் தற்பெருமையை ஊட்டி விடுகிறோம்.

தற்பெருமையால் தான் லூசிபெர் சாத்தானாக மாறியதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தற்பெருமை தலையான பாவங்களில் முதன்மையானது.

தாழ்ச்சிக்கு நேர் எதிரானது.

மற்றவர்கள் மனதில் தற்பெருமையை ஊட்டுபவர்கள் சாத்தானின் வேலையைத்தான் செய்கின்றார்கள்.

மற்றவர்கள் பார்க்க வேண்டும், நம்மைப் புகழ வேண்டும் என்பதற்காக நாம் எந்த செயலையும் செய்யக்கூடாது.

விசுவாசத்தோடு நற்செயல்களும் சேர்ந்து தான் நமக்கு மீட்பைப் பெற்றுத் தருகின்றன.

இறைவனது மகிமைக்காக மட்டுமே வாழ்ந்து,

இறைவனோடு நித்திய காலம் வாழும் பாக்கியத்தைப் பெறுவோம்.

இறைவன் மட்டுமே நமது செல்வம்.

அவரோடு நித்திய காலம் வாழ்வது நமது பாக்கியம்.

லூர்து செல்வம்.

Monday, June 19, 2023

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத்.5:48)

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத்.5:48)

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"

என்று தமிழில் ஒரு கூற்று உண்டு.

நமது சிந்தனையில் நமது செயலின் நோக்கம் மிக உயர்ந்ததாகவே இருக்க வேண்டும்.

ஒரு முறை ஒரு மாணவன் SSLC தேர்வுக்கு தயாரித்துக் கொண்டிருந்தான்.

அவனோடு பேசினேன்.

"நன்றாக தயாரித்து விட்டாயா?"

"மிக நன்றாக தயாரித்து விட்டேன், சார்"

"தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும்?"

"35 மார்க் கட்டாயம் கிடைக்கும், சார்."

Just pass mark எடுப்பதை மிக பெரிய சாதனையாக நினைத்துக் கொண்டிருக்கிறான்.

நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்கும் விதத்தில் பாடங்களை தயாரிக்க வேண்டும்.

நாம் ஆன்மீக வாழ்வில் மாணவர்கள்.

இயேசு கேட்கிறார்,

"உலக வாழ்வில் இறுதியில் உனக்கு என்ன கிடைக்கும்."

"மோட்சத்திற்கு வந்துவிடலாம் என்று நம்புகிறேன், ஆண்டவரே.

பாவங்கள் எதுவும் செய்யாமல் என்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன்."

"மகனே பாவங்கள் செய்யாமலிருந்தால் மட்டும் போதாது.

புண்ணியங்கள் செய்து கொண்டேயிருக்க வேண்டும்."

"எந்த அளவுக்கு, ஆண்டவரே?"

"உனது வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீயும் நிறைவுள்ளவனாக இருக்கும் அளவுக்கு புண்ணியங்கள் செய்ய வேண்டும்.''

"ஆண்டவரே, வானகத்தந்தை கடவுள். 

சகல நற்பண்புகளிலும் அளவில்லாதவர்.

 நீங்கள் இறை மகன்.

 தந்தையைப் போலவே நிறைவுள்ளவராக இருக்கிறீர்கள்.

நானோ மனிதன்.

அளவுள்ளவன்.

நான் எப்படி தந்தையை போல நிறைவுள்ளவனாக இருக்க முடியும்?''

"தந்தை யாரை நேசிக்கிறார்?"

"அனைவரையும் நேசிக்கிறார்.

 நல்லவர்களையும் நேசிக்கிறார்,
கெட்டவர்களையும் நேசிக்கிறார்.

பாவமே செய்யாதவர்களையும் நேசிக்கிறார். பாவிகளையும் நேசிக்கிறார்."

"நீ யாரை நேசிக்கிறாய்?"

"எனது நண்பர்களை நேசிக்கிறேன்"

"உன்னை பகைப்பவர்களை நேசிக்கிறாயா?"

"முயற்சி செய்கிறேன்."

"முயற்சி செய்தால் மட்டும் போதாது. வானகத் தந்தை அவரை நேசிக்காதவர்களையும் நேசிப்பது போல நீயும் உன்னை நேசிக்காதவர்களையும் நேசிக்க வேண்டும்.

அதாவது வானகத் தந்தையைப் போல நீயும் நேசிக்க வேண்டும்.''

"அதாவது என்னை பகைப்பவர்களை நான் பகைக்காமலிருந்தால் மட்டும் போதாது,  நேசிக்க வேண்டும்.

நண்பர்களை நேசிப்பது போல பகைவர்களையும் நேசிக்க வேண்டும்.

சரியா, ஆண்டவரே?"

"சரி. நீ உனது பகைவனை நேசித்தால், 

அவன் உனக்கு தீமை செய்யும்போது

 நீ அவனுக்கு நன்மை செய்வாய்.

கடவுளே இல்லை என்று சொல்பவர்களைக் கூட வானகத் தந்தைதான் பராமரித்து வருகிறார்."

"இனி எனக்கு தீமை செய்பவர்களுக்கும், நான் நன்மை செய்வேன்.

தந்தையைப் போலவே செயல்படுவேன்."

"வானகத் தந்தையை போல நீ செயல்பட ஆரம்பித்தால் அதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் தந்தையே செய்வார்."

''ஆண்டவரே, வானகதந்தை அளவில்லாதவர்.

நான் அளவுள்ளவன்.

நான் தந்தையைப் போல செயல்படுவதாக எப்படிக் கூற முடியும்?

அவர் நிறையுள்ளவர். 
He is perfect.

 நான் எப்படி நிறைவுள்ளவனாக மாற முடியும்?
How can I be perfect?"

"உன்னுடைய நண்பனுடைய பணப்பையில் 10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது.

உன்னுடைய பணப்பையில் நூறு 
ரூபாய் மட்டுமே இருக்கிறது.

உன்னுடைய நண்பன் 10 ஆயிரம் ரூபாயையும் கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுத்து விட்டான்.

நீ  உன்னிடம் உள்ள 100 ரூபாயையும் காணிக்கையாகக் கொடுத்து விட்டாய்.

உனது நண்பன் கொடுத்ததற்கும் நீ கொடுத்ததற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைக் கூறு."

"இருவரும் கொடுத்த நன்கொடை அளவுகளில் வித்தியாசம் இருக்கிறது. இது வேற்றுமை.

ஆனால் அவன் தன்னிடம் உள்ளதை எல்லாம் கொடுத்தது போலவே நானும் என்னிடம் உள்ளதை எல்லாம் கொடுத்து விட்டேன். இது ஒற்றுமை."

"அதேபோல்தான் வானகத் தந்தை கொடுக்கும் அளவிற்கு 
உன்னால் கொடுக்க முடியாமலிருக்கலாம்.

ஆனாலும் தந்தை முழு மனதோடு கொடுப்பது போலவே,

நீயும் முழு மனதோடு கொடுக்கலாமே.

தாயைப்போல பிள்ளை இருப்பது போல,

குருவைப் போல சீடன் இருப்பது போல,

 நீயும் உதவி செய்வதில் முழு மனதுடன் செயல் படுவதில் வானகத் தந்தையைப் போல் இருக்கலாமே.

அதனால் தான் என்னை பின்பற்றுபவர்களுக்கு நான் கூறுகிறேன்,

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."

"இப்போது புரிகிறது ஆண்டவரே.

உங்கள் அன்னை தன்னை முழுவதும் உங்கள் பணிக்கு அர்ப்பணித்து விட்டது போல,

நானும் என்னை முழுவதும் உங்கள் பணிக்கு அர்ப்பணித்து விடுகிறேன்.

வானகத் தந்தை என்னைப் படைக்கும் போது என்னோடு பகிர்ந்து கொண்ட அவரது பண்புகளை,

அவற்றை அவர் எப்படிப் பயன்படுத்துகிறாரோ அப்படியே பயன்படுத்தி,

அவரைப் போலவே,

அவருக்காக மட்டும் வாழ்வேன்."

"வானகத் தந்தையைப் போல என்னவெல்லாம் செய்வாய்?"

"என்னை அன்பு செய்பவர்களை மட்டுமல்ல, என்னைப் பகைப்பவர்களையும் அன்பு செய்வேன்.

என்னைத் துன்புறுத்துவோருக்காக வேண்டிக் கொள்வேன்.

நல்லவர்களை மட்டுமல்ல கெட்டவர்களையும் அன்பு செய்வேன்.

படைக்கப்பட்ட அனைவரையும் அவர் அன்பு செய்வது போல 

இன வேறுபாடின்றி அனைவரையும் அன்பு செய்வேன்.

உள்ளத்தால் அனைவரையும் அன்பு செய்து,

உடலால் அனைவருக்கும் பணிபுரிவேன்.

இயேசுவே, உமது வார்த்தை, 
எனது வாழ்க்கை."

லூர்து செல்வம்.

Sunday, June 18, 2023

"ஆனால் யாராவது உன் வலக்கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு." (மத்.5:39)

"ஆனால் யாராவது உன் வலக்கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு." (மத்.5:39)

நன்மையே உருவான கடவுளால் படைக்கப்பட்டவர்கள் நாம்.

நன்மைக்கு எதிராக எதைச் செய்தாலும் அது நம்மைப் படைத்தவருக்கு எதிரானதாகத் தான் இருக்கும்.

யாராவது நமக்குத் துன்பம் செய்தால் அதை இயேசு பாடுகளின் போது ஏற்றுக்கொண்டது போல நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

"யாராவது உன் வலக்கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு."  

என்ற இயேசுவின் கூற்றில் ஒரு நயம் இருக்கிறது.

நம்மைத் தாக்குபவர்கள் இரு வகையினர்.

நேருக்கு நேர் எதிர்த்து நின்று தாக்குபவர்கள் ஒருவகை.

நமக்கு தெரியாமல் பின்னால் நின்று தாக்குபவர்கள் மற்றொரு வகை.

இரண்டாம் வகையினர் கோழைகள்.

எதிர்த்து நின்று நமது வலக் கன்னத்தில் அறைய முடியாது.

எதிர்த்து நிற்கப் பயந்து நமது முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு அறைந்தால்தான் நமது வலது கன்னத்தில் அறைய முடியும்.

அப்படி யாராவது அறைந்தால் நாம் திரும்பி நின்று நமது இடது கன்னத்தையும் காட்ட வேண்டும்.

அதுதான் உண்மையான வீரம்.

இயேசு சர்வ வல்லப கடவுள். 

"உண்டாகுக" என்ற ஒரே வார்த்தையால் நாம் வாழும் உலகையே படைத்தவர்.

அவரை அடித்தவர்களை அழிக்க வார்த்தையே தேவையில்லை, நினைத்தாலே போதும்.

ஆனால் நாம் மீட்புப் பெறுவதற்காக எதிரிகள் கொடுத்த அடிகளையும், உதைகளையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்.

பாவமே செய்ய முடியாத கடவுள் நமது பாவங்களுக்காக அடிகள் பட்ட போது,

பாவிகளாகிய நாம் நமது பாவங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காக அடிபட ஏன் தயங்க வேண்டும்?

மாறாக, நமது பாவங்களுக்கு நாம் பரிகாரம் செய்ய வாய்ப்புகளை அனுமதித்த இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

நமக்குத் துன்பங்கள் வரக் கடவுள் அனுமதிப்பது அவருக்கு நம் மீது உள்ள அன்பின் காரணமாகத்தான்.

நாம் நமது துணி மணிகளை ஓங்கி அடித்துத் துவைப்பது அவற்றில் உள்ள அழுக்கைப் போக்குவதற்காகத் தானே!

நம் மீது உள்ள பாவ அழுக்கைப் போக்குவதற்காகத் தான் நாம் துன்பப்பட கடவுள் அனுமதிக்கிறார்.

அதற்காக அவருக்கு நன்றி கூற வேண்டும்.

நமக்கு உண்ண உணவு தரும் தாய்க்கு நன்றி கூறும் நாம்,

நம்மை நமது நோயிலிருந்து விடுவிப்பதற்காக கையில் ஊசி போடும் மருத்துவருக்கும் நன்றி கூற வேண்டாமா?

யார் மூலமாக நமக்கு கடவுள் துன்பங்களை அனுமதிக்கிறாரோ 

அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

நமக்காக நாம் இறைவனிடம் வேண்டிக் கொள்வது போல

அவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ள வேண்டும்.

துன்பம் மருந்து மாதிரி, கசப்பாகத்தான் இருக்கும்.

ஆனால் அதன் விளைவு இனிப்பாக இருக்கும்.

நமக்கு வரும் துன்பங்களை சிலுவைகளாக மாற்றி இயேசுவைப் பின் செல்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, June 17, 2023

இறைவனுக்காக வாழ்வோம்.

 இறைவனுக்காக வாழ்வோம்.
------------------------------------------------------------

இறைவன் நம்மை தனது சாயலில் படைத்தார்.

தந்தை, மகன், தூய ஆவி மூவருக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே அன்பு.......


நமது
உள்ளத்தின் நினைப்புக்கும்,
வாயின் வார்த்தைக்கும்,
செய்யப்படும் செயலுக்கும்

ஒரே நோக்கம்.

இறைவனது மகிமை.

இறைவனது மகிமைக்காக நினைக்க வேண்டும்,

இறைவனது மகிமைக்காக 
பேச வேண்டும்.

இறைவனது மகிமைக்காக
செயல் புரிய வேண்டும்.

காலையில் ,

"நினைவிலும், சொல்லிலும்
செயலிலும்

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் இன்றைய நாளை ஆரம்பிக்கிறேன்" 

என்ற செபத்தோடு எழ வேண்டும்.

"அன்பு தந்தையே, இன்றைய நாளில் எனது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் உமது மகிமைக்காகவே.

உலகில் வாழ்ந்தாலும் உமது பிரசன்னத்தில் தான் வாழ்வேன்."

என்ற எண்ணங்களால் நாம் பகல் முழுவதும் இயக்கப்பட வேண்டும்.

நமது அந்தஸ்தின் கடமைகள் அத்தனையையும் நமது திருப்திக்காக அல்லாமல் இறைவனை திருப்திப்படுத்தும் நோக்கோடு செய்ய வேண்டும்.

நமது உள்ளத்தில் இயேசுவே நமக்காகச் சிந்திப்பார்.

நமது வாய் மூலம் அவர் பேசுவார்.

அவரே நம்மில் செயல் புரிவார்.

புனித சின்னப்பரோடு சேர்ந்து நாம் துணிந்து சொல்லலாம்:

வாழ்வது நான் அல்ல, இயேசுவே என்னில் வாழ்கிறார்.

நம்மில் இயேசு செயல் புரியும்போது விண்ணக தந்தையின் சித்தம் நம் மூலமாக நிறைவேறும்.

"உமது சித்தம் விண்ணகத்தில் செய்யப்படுவது போல மண்ணகத்திலும் செய்யப்படுவதாக" என்ற கர்த்தர் கற்பித்த செபம்

நம்மில் வாழும் இயேசுவால் நம்மில் செயல் வடிவம் பெறும்.

நாம் உலகில் வாழும் போதே விண்ணக வாழ்வின் ருசி நமது ஆன்மாவில் இருக்கும்.

திருமண விருந்தின் போது மட்டன் பிரியாணி போடப்படும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தால்,

மணமக்களை விட அழைக்கப்பட்டவர்கள் தான் திருமண நாளை ஆவலுடன எதிர் நோக்கிக் கொண்டிருப்பார்கள்.

விண்ணகத்தில் நாம் அனுபவிக்கப் போவது பேரின்ப வாழ்வு என்ற உண்மை நம் உலக வாழ்வின் போது நமக்கு உறுதியாகிவிட்டால்,

விண்ணக வாழ்வையே எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருப்போம்.

இயேசுவே நம்மில் வாழ்ந்தால் நாம் அனுபவித்துக் கொண்டிருப்பது விண்ணக வாழ்வின் ருசியைத் தானே!

விண்ணக வாழ்வின் ஆரம்பமாகிய மரணத்தை எண்ணி பயப்பட மாட்டோம்.

எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.

லூர்து செல்வம்.

Friday, June 16, 2023

"உற்றார் உறவினரிடையே அவரைத் தேடினார்கள்."(லூக்.2:44)

"உற்றார் உறவினரிடையே அவரைத் தேடினார்கள்."
(லூக்.2:44)

இயேசுவுக்கு 12 வயது.

ஒவ்வொரு ஆண்டும் பாஸ்காத் திருவிழாவிற்குச்   செல்வது போல

அன்னை மரியாளும் சூசையப்பரும் 12 வயது இயேசுவை அழைத்துக்கொண்டு ஜெருசலேம் ஆலயத்திற்குச் சென்றார்கள்.

திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார். 

இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.
 யாத்திரிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று நினைத்துக்கொண்டு அவர்கள் ஒருநாள் வழிநடந்த பின்னர்

 உற்றார் உறவினரிடையே அவரைத் தேடினார்கள்.

அவரைக் காணாததால் தேடிக்கொண்டு யெருசலேமுக்குத் திரும்பினார்கள்.

12 வயதில் காணாமல் போன இயேசுவைத் தேடிக்கொண்டு மாதாவும் சூசையப்பரும் யெருசலேம் வந்ததையும்,

அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களை வினவுவதுமாய் இருந்ததையும் பற்றி 

தினமும் செப மாலை சொல்லும் போது தியானிக்கிறோம்.

இயேசு இறை மகன், சர்வ வல்லப கடவுள் என்று மாதாவுக்கும் தெரியும், சூசையப்பதற்கும் தெரியும்.

கடவுள் காணாமல் போவதற்கு பிரபஞ்சத்தில் எங்கும் இடமில்லை.

ஏனெனில் அவர் எங்கும் இருக்கிறார்.


கடவுளாகிய இயேசு தொலைந்து போக மாட்டார், எப்படியாவது தங்களிடம் வந்து விடுவார்கள் என்று மாதாவும் சூசையப்பரும் அவரைத் தேடாமல் ஊருக்கு வந்திருக்கலாம்.

ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

இயேசுவின் மீது அவர்கள் வைத்திருந்த பாசம் அப்படிச் செய்ய விடவில்லை.

இயேசு சிறு குழந்தையாக இருந்த போது ஏரோதுவிடமிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக 

அவரை எடுத்துக் கொண்டு எகிப்துக்குப் போகும்படி கபிரியேல் தூதர் சொன்ன போதும் 

கடவுள் ஒரு மனிதனுக்குப் பயந்து தப்பித்துச் செல்ல வேண்டுமா என்று கேட்கவில்லை.

"இதோ ஆண்டவருடைய அடிமை"

என்று இறைப்பணிக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்தவள் அன்னை மரியாள்.

அடிமைக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பு எதிர்க் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிவது.

மாதாவும், சூசையப்பரும் 
கீழ்ப்படிந்தார்கள்.

மூன்று ஆண்டுகள் எகிப்தில் நாடோடிகள் போல் வாழ்ந்தார்கள்.

12 வயதில் காணாமல் போன இயேசுவைப் பாசத்தால் உந்தப் பட்டு தேடி அலைந்தார்கள்.

பாசமும், கீழ்ப்படிதலும் இறைப் பணியாளர்களின் முக்கிய பண்புகள்,

கடவுளாகிய இயேசு கூட பாசத்துடனும், கீழ்ப்படிதலுடனும் திருக் குடும்பத்தில் வாழ்ந்தார்.

இயேசுவைப் பற்றியும், மரியாளைப் பற்றியும், சூசையப்பரைப் பற்றியும் தினமும் செபமாலை சொல்லும்போது தியானிக்கும் நாம்,

நமது ஆன்மீக வாழ்வில் இந்தப் பண்புகள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?

பாசமும், கீழ்ப்படிதலும் இல்லாவிட்டால் ஆன்மீக வாழ்வு இல்லை.

நமது ஆன்மீக அனுபவத்திலும் இயேசுவைக் காணாமல் நாமும் தேடி அலைய வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்.

ஆன்மீகத்தில் இதை The Dark Night of the Soul: என்பார்கள்.

பொருத்தமான தமிழ் வார்த்தை தெரியவில்லை.

இயேசு நமக்குள் தான் இருப்பார்.

ஆனால் அவரைத் தியானிக்கும் போது சாதாரணமாகத் தோன்றக்கூடிய பக்தி உணர்வு, உற்சாகம் ஆகியவை காணாமல் போய்விடும்.

ஒரு விதமான உலர்ந்த உணர்வு (Dry feeling) ஏற்படும்.

ருசியாக இருக்கும் போது உணவை உண்ணும் நாம்,

உணவில் ருசி இல்லாவிட்டாலும் உடல் நலம் கருதி உண்பது போல,

பக்தி உணர்வு பொங்கி வடியும் போது செபம் சொல்வதில் உற்சாகம் காட்டும் நாம்,

உணர்ச்சிகள் உடன் இல்லாவிட்டாலும் இறைவன் அன்பைத் தியானிப்பதையும்,

இறைவன் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதையும் விட்டுவிடக்கூடாது.

அன்னை மரியாளும், சூசையப்பரும் இயேசுவைத் தேடியது போல,

நாமும் தேட வேண்டும்.

மூன்றாவது நாள் அவர்கள் இயேசுவைக் கண்டு மகிழ்ந்தது போல 

நாமும் இயேசுவை பக்தி உணர்வுப்பூர்வமாகக் காண்போம்.

உண்மையான பக்தி உணர்ச்சிகளில் இல்லை,

உள்ளத்தில் இறைவனைத் தியானிப்பதிலும், இறைவனுடைய  கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதிலும்  இருக்கிறது.

அன்னை மரியாளும்,
 சூசையப்பரும் மூன்றாவது நாள்

இயேசுவைக் கண்டு மகிழ்ந்தது போல நாமும்  ஒருநாள் அவரைக் கண்டு மகிழ்வோம்.

அந்த மகிழ்ச்சி நித்திய காலமும் நீடிக்கும்.

https://ucatholic.com/blog/the-dark-night-of-the-soul-when-even-saints-feel-separated-from-god/

லூர்து செல்வம்.

Thursday, June 15, 2023

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்."(மத்.11:28)

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்."
(மத்.11:28)

"தாத்தா, சுமை என்று இயேசு எதைக் குறிப்பிடுகிறார்."

'''நமது ஆன்மாவை பொருத்தமட்டில் சுமைகள் இருவகை.

சுமக்க கூடாதவை ஒரு வகை.

சுமக்க வேண்டியவை இன்னொரு வகை.

பாவம் சுமக்க கூடாத வகையைச் சேர்ந்தது. செய்யும்போது இன்பத்தைத் தரும் பாவம் செய்து முடித்த பின் சுமையாக மாறுகிறது.

பாவச் சுமையினால் சோர்ந்திருப்பவர்கள் அதிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால்,

பாவத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்காகவே மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் மரித்த இயேசுவை அணுக வேண்டும்.

பாவங்களை எல்லாம் அவரிடம் அறிக்கையிடுவதின் மூலம் நமது பாவச் சுமையை இயேசுவின் முன் இறக்கி வைத்து விட வேண்டும்.

இறக்கி வைத்த வினாடியே நாம் பாவ சுமையிலிருந்து விடுதலை பெறுவோம்."

"'தாத்தா, இயேசு இப்போது விண்ணகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பாவங்களை அறிககையிடுவதற்காக நம்மால் விண்ணகம் செல்ல முடியுமா?"

"'பாவம் இல்லாத நிலையில் நாம் மரணம் அடைந்த பின்பு தான் விண்ணகம் செல்ல முடியும்.

இப்போது நமது பாவச் சுமையை இறக்கி வைப்பதற்காகவே இயேசு தனது பிரதிநிதிகளாக குருக்களை உலகெங்கும் அனுப்பியிருக்கிறார்.

பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டபின்,

பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் அமர்ந்திருக்கும் குருவானவரிடம் சென்று, 

நமது பாவங்களை அறிக்கையிட்ட வினாடியே நாம் பாவச் சுமையிலிருந்து விடுதலை பெறுவோம்.

நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு குருக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.''

"சுமக்க வேண்டிய சுமை எது?"

"'சிலுவைகள்.

உலகில் வாழும் போது நமக்கு துன்பங்கள் ஏற்படுவது இயல்பு.

துன்பங்களைத் துன்பங்களாகவே நினைத்தால்
அவை கஷ்டப்பட்டு சுமக்க வேண்டிய சுமைகளாக மாறிவிடும்.

அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு சுமந்தாரே அந்த சிலுவைகளாக நினைத்து,

அவற்றைச் சுமக்க உதவும் படி இயேசுவை அணுக வேண்டும்.

சிலுவைகளிடமிருந்து விடுதலை பெற ஆசைப் படக்கூடாது.

மாறாக அவற்றை இயேசுவிடம் ஒப்புவிக்க வேண்டும்.

நமது சிலுவைகளை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசுவிடம் ஒப்புவித்து விட்டால் அவரும் நம்மோடு சேர்ந்து நமது சிலுவையைச் சுமப்பார்.

சிலுவையைச் சுமப்பது இன்பமான அனுபவமாக மாறிவிடும்.

உலக இன்பங்களைத் துறந்து, 
இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமப்பதற்கென்றே துறவற  சபைகளில் சேர்ந்திருப்பவர்களின் முகத்தைப் பாருங்கள்.

எப்போதும் புன்சிரிப்போடு இருக்கும்.

உள்ளத்தில் இருக்கும் மகிழ்ச்சி தான் முகத்தில் புன்சிரிப்பாக வெளிவரும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

சிலுவைகள் நமக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டுமென்றால் 

நாம் அவற்றை இயேசுவுக்காக இயேசுவோடு சேர்ந்து சுமக்க வேண்டும்."

'"பாவச்சுமையை இயேசுவின் முன் இறக்கி வைத்துவிட்டு,

அவர் சுமந்த சிலுவைச் சுமையை அவரோடு சுமந்தால்,

அவரைப் போலவே ஒரு நாள் மரித்து,

அவரைப்போலவே ஒரு நாள் உயிர்ப்போம்.

புனித வெள்ளியை ஏற்றுக்கொண்டால்,

ஈஸ்டர் ஞாயிறு இலவசமாகவே கிடைக்கும்."

லூர்து செல்வம்.

Wednesday, June 14, 2023

"உனது காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்."( மத்.5:24)

"உனது காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்."( மத்.5:24)

நாம் இறைவனோடு சமாதான நிலையில் இருக்கிறோம் என்பதற்கு வெளி அடையாளம் தான் நாம் செலுத்தும் காணிக்கை.

நமது வீட்டுக்கு நமக்கு நெருக்கமான உறவினர்கள் வந்தால் அவர்களை வெறுமனே "வாருங்கள்" என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ள மாட்டோம்,

குடிப்பதற்குப் பானமும், உண்பதற்கு உணவும் கொடுத்து உபசரிப்போம்.

நமது உபசரிப்பு நமது உள்ளார்ந்த அன்புறவின் வெளி அடையாளம்.

இறைவனோடு சமாதான நிலையில், 

  அதாவது அன்புறவில் இருக்கிறோம் என்றால்,

அவரால் படைக்கப்பட்ட நமது அயலானோடும் சமாதானமாக,

அதாவது அன்புறவில்
 இருக்கிறோம் என்று தான் பொருள்.

இறைவனோடு உண்மையிலேயே சமாதான உறவில் இருப்பவன் தன்னுடைய அயலானோடு சமாதான உறவில் இருப்பான்.

அயலானோடு சமாதான உறவில் இல்லாவிட்டால் இறைவனோடும் சமாதான உறவில் இல்லை என்று தான் அர்த்தம்.

சமாதானம் இல்லாமல் செலுத்தும் எந்தக் காணிக்கையும் பயனற்றது.

ஏனெனில் அது நமது உறவினால் கொடுக்கப்படுவது அல்ல.

நாம் நமது அயலானோடு சமாதானமாக இருந்தாலும்,

அவன் நம்மோடு சமாதானமாக இல்லாவிட்டால்,

அதன் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்து,

உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

புதுப்பித்துக் கொண்ட பின்புதான் இறைவனுக்குரிய காணிக்கையை செலுத்த வேண்டும்.

இறைவன் விரும்புவது நமது காணிக்கையை அல்ல,

அவரோடும் நமது பிறரோடும் நமக்கு இருக்கும் சமாதான உறவையே அவர் விரும்புகிறார்.

"இறைவனை நேசிக்க வேண்டும்,


நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்"

என்ற இரு கட்டளைகளின் பொருள்,

"இறைவனோடு சமாதான உறவில் இருக்க வேண்டும்,

நம்மோடு நாமே சமாதான உறவில் இருக்க வேண்டும்,

நமது அயலானோடும் 
சமாதான உறவில் இருக்க வேண்டும் என்பது தான்.

ஒரு வேலைக்கு நேர்காணலுக்குச் செல்லும்போது முதலில் நம்மிடம் எல்லா சான்றிதழ்களும் இருக்கின்றனவா என்று உறுதி செய்து கொள்கிறோம்.

அதேபோல் தான் இறைவனுக்கு காணிக்கை செலுத்தச் செல்லும்போது நாம் அதற்கு தகுதியானவர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதாவது நமது பிறனோடு நாம் சமாதான உறவில் இருக்கின்றோமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

தங்கள் பிறனோடு தகராறு செய்து கொண்டிருக்கிறவர்கள்,

இறைவனோடும் தகராறு செய்து கொண்டிருக்கிறார்கள்.

தகராற்றைச் சரி செய்து கொள்ளாமல் இறைவனுக்குக் காணிக்கை செலுத்த முடியாது.

துணிந்து செலுத்துபவர்களின் காணிக்கையை இறைவன் ஏற்க மாட்டார்.

காணிக்கை காணிக்கைப் பெட்டிக்குள் போகலாம்,

இறைவனிடம் போகாது.

நாம் சமாதானம் செய்ய முயன்றும் நமது பிறன் சமாதானத்திற்கு வர மறுத்துவிட்டால்,

அது நம்முடைய குற்றம் இல்லை.

அவன் இறைவனுடைய சமாதான வழிக்கு வரும்படி வேண்டிக் கொண்டு நமது காணிக்கையைச் செலுத்த வேண்டியதுதான்.

நாம் நமது அயலானுக்கு விரோதமாக ஏதாவது தப்புச் செய்திருந்தால், அதற்காக அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நமது அயலான் நமக்கு விரோதமாக ஏதாவது தப்புச் செய்திருந்தால், நாம் அவனை மன்னிக்க வேண்டும்.

அவனை நாம் மன்னித்தால் தான் நமது விண்ணகத் தந்தை நாம் செய்யும் பாவங்களை மன்னிப்பார்.

சமாதான உறவு சரிப்பட உரிய மருந்து மன்னிப்பு தான்.

மன்னிக்கும் குணம் இருக்கும் இடத்தில் உறுதியாக சமாதான உறவு இருக்கும். 

பாவ சங்கீர்த்தனத்தில் நமது பாவங்களைச் சங்கீர்த்தனம் செய்த பின்

 குருவானவர்இயேசுவின் இடத்தில் இருந்து கொண்டு நம்மை நோக்கி,

''தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் நான் உனது பாவங்களை மன்னிக்கிறேன், சமாதானமாகப் போ" என்கிறார்.

நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு தன்னுடைய குருக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

இயேசு நமது பாவங்களை மன்னிக்கும் போது நாம் அவருடைய சமாதான நல்லுறவுக்குள் நுழைகிறோம்.

நாம் எத்தனை கோடிப் பாவங்கள் செய்திருந்தாலும் இயேசுவின் சமாதான நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

அவரால் மாற முடியாதாகையால் 

நாம் பாவம் இல்லாத நிலையில் நம்மோடு எப்படி இருந்தாரோ

 அதே போல் தான் நாம் பாவ நிலையில் இருக்கும் போதும் இருப்பார்.

மாறுவது நாம்தான்.

நரகத்தில் உள்ளவர்கள் மேலும் இறைவனின் அன்பு மாறாது.
ஆனால் அவர்களால் மாற முடியாது.

உலகில் வாழும் போது நம்மால் மாற முடியும்.

ஆகவே பாவங்கள் செய்து விட்டாலும் மனம் திரும்பி மன்னிப்பு பெற்று சமாதான நிலைக்கு திரும்ப வேண்டும்.

பாவ மன்னிப்புப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பாவம் செய்யக்கூடாது.

யாராவது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக கீழே விழுந்து கை கால்களை முறித்துக் கொள்வார்களா?

நமது பெருமையை வெளிக்காட்டி கொள்வதற்காக,

அதாவது விளம்பரப் படுத்திக் கொள்வதற்காகச் செலுத்தப்படும் காணிக்கையால் நமக்கு எந்தவித ஆன்மீக பலனும் இல்லை.

புதிதாக கோவில் கட்டுவதற்காக நன்கொடை பிரிப்பதற்காக 
ஒருவரிடம் வருகிறார்கள்.

எவ்வளவு நன்கொடை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுப்பவர்களது பெயர் கல்வெட்டில் எழுதப்பட்டு கோவில் சுவரில் பதிக்கப்படும் என்று சொல்கிறார்கள்.

நன்கொடை கொடுப்பவர் தனது பெயர் கல்வெட்டில் எழுதப்பட வேண்டும் என்பதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் அது காணிக்கை அல்ல.

சுய விளம்பரம். 

இறையன்பினால் உந்தப்பட்டு ஒரே ஒரு ரூபாய் நன்கொடையாகக் கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்றது.

சுய விளம்பரத்திற்காக லட்சக் கணக்கில் கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்றது அல்ல.

சமாதான நிலையில் நம்மால் இயன்ற காணிக்கையைச் செலுத்துவோம்.

இறைவன் விரும்புவது நமது சமாதான நிலையைத்தான்.

லூர்து செல்வம்.

Tuesday, June 13, 2023

''இச்சின்னஞ் சிறு கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி, அப்படியே மனிதர்க்கும் போதிப்பவன், விண்ணரசில் மிகச் சிறியவன் எனப்படுவான். அவற்றைக் கடைப்பிடித்துப் போதிப்பவனோ, விண்ணரசில் பெரியவன் எனப்படுவான்.," (மத்.5:19)

''இச்சின்னஞ் சிறு கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி, அப்படியே மனிதர்க்கும் போதிப்பவன், விண்ணரசில் மிகச் சிறியவன் எனப்படுவான். அவற்றைக் கடைப்பிடித்துப் போதிப்பவனோ, விண்ணரசில் பெரியவன் எனப்படுவான்.," (மத்.5:19)

நற்செய்தி வெறுமனே செய்தி (news) அல்ல.

"தமிழ் நாட்டின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார்."  என்பது செய்தி.

செய்திகளால் நமது பொது அறிவு வளரும். (General knowledge)

நற்செய்தி இறைவன் நமக்கு அனுப்பும் Message.

News க்கும், Message க்கும் வித்தியாசம் இருக்கிறது.

" அப்பா உங்களுக்கு ஒரு பேரன் பிறந்திருக்கிறான்"

என்று மகன் அப்பாவுக்கு அனுப்பும் தகவல் ஒரு News அல்ல, 

அது ஒரு Message.

News அறிவுக்கு மட்டும் உணவு.

Message நமது வாழ்க்கைக்கு உணவு.

இயேசு நமக்கு அறிவித்த நற்செய்தி Message from God.

Newsலும் உண்மை இருக்கும். ஆனால் அது நமது ஆன்மீக வாழ்க்கைக்குத் தேவையானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் நமது வாழ்க்கையைப் பாதிக்கக் கூடிய சக்தி Message க்கு உண்டு.

Message க்குப் பொறுத்தமான தமிழ்ச்  சொல் எனக்குக் கிடைக்கவில்லை.

அகராதியைப் பார்த்தால் செய்தி என்றுதான் எழுதியிருக்கிறது.

தாய் திருச்சபை நமக்கு தந்திருக்கும் வார்த்தை 'நற்செய்தி'.(Gospel)

நற்செய்தி நாம் அறிந்து கொள்வதற்காக மட்டும் தரப்படவில்லை,

ஆனால் வாழ்வதற்காகத் தரப்பட்டிருக்கிறது.

வினாடி வினாக்களுக்குப் பதில் அளிப்பதற்காக மட்டும் நற்செய்தி நூலை நாம் வாசித்தால் 

அதை வெறும் செய்தியாக (News) மட்டும் பயன்படுத்துகிறோம்,

வாழ்வதற்காகப் பயன்படுத்தினால் மட்டுமே அது நற்செய்தி.
(Message from God.)

நற்செய்தியை வாசிக்க வேண்டியது,

தேர்வு எழுதுவதற்காக மட்டும் அல்ல,

போதிப்பதற்காக மட்டும் அல்ல,

பட்டிமன்றங்களில் பேசுவதற்காக மட்டுமல்ல.

இயேசு நற்செய்தி யோடு, கட்டளைகளையும் சேர்த்து நமக்குத் தந்திருக்கிறார்.

இறைவன் ஒருவரே என்பது நற்செய்தி.

அவரை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்க வேண்டும் என்பது கட்டளை.

நற்செய்தியையும், கட்டளையையும் பிரிக்க முடியாது.

இறைவன் ஒருவரே என்பதை அறிந்து, 
அவரை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்காவிட்டால்
நாம் அறிவதால் எந்த பயனும் இல்லை.

இறைவன் ஒருவரே என்பதை அறிந்து, 
நாம் அவரை நேசிக்காமல்,
நாம் அறிந்ததை மற்றவர்களுக்கு போதித்தால்,

நாம் அறிந்ததும் பயனற்றது, போதிப்பதும் பயனற்றது.

நாம் நற்செய்தியை வாழ்ந்து,
அதை மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டும்.

நற்செய்தியை வாழாமல் போதித்தால்

கேட்பவர்கள் நாம் சொல்வதை நம்ப மாட்டார்கள்.

அறிவது வேறு, நம்புவது வேறு.

நாம் அறிந்த நற்செய்தியை நம்பினால் மட்டுமே அதை வாழ்க்கையாக்குவோம்.

நற்செய்தியை வாசித்த பின் அதை வாழாவிட்டால் நாம் அதை நம்பவில்லை என்று அர்த்தம்.

இன்று மழை வரும் என்று செய்தி வருகிறது.

அதை நம்பினால் இன்று குடையுடன் வெளியே செல்வோம்.

குடை எடுக்காமல் சென்றால் செய்தியை நம்பவில்லை என்று தானே பொருள்.

போதிப்பவர்கள் தங்களது போதனையை வாழாவிட்டால்,

அவர்கள் நம்பாத ஒன்றை கேட்பவர்கள் எப்படி நம்புவார்கள்?

பழிக்குப் பழி வாங்குவதையே தொழிலாக கொண்டிருக்கும் ஒருவன்,

"உனது பகைவனை நேசி" என்று போதித்தால்,

வாய்க்கும், வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லாத ஒருவர் கூறுவதை மற்றவர்கள் எப்படி நம்புவார்கள்?

இயேசு போதித்த கட்டளைகளை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றால்

முதலில் நாம் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

"உனது அயலானை நேசி" என்று போதிப்பதற்கு முன்னால்,

நாம் நமது அயலானை நேசிக்க வேண்டும்.

"உனக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்" என்று போதிப்பதற்கு முன்னால்

நாம் நமக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.

"உனக்கு எதிராக குற்றம் செய்தவர்களை மன்னிக்க வேண்டும்" என்று போதிப்பதற்கு முன்னால்

நமக்கு எதிராக குற்றம் செய்தவர்களை நாம் மன்னிக்க வேண்டும்.

உணவு உண்பதற்கு முன் செபம் சொல்ல வேண்டும்,

உணவின் மீது சிலுவை அடையாளம் போட வேண்டும்,

உணவை உண்ட பின்னும் செபம் சொல்ல வேண்டும் 

என்று தாய்த் திருச்சபை கூறுகிறது.

இதை நமது பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் நாம் செய்ய வேண்டும்.

பெரிய காரியங்களில் மட்டுமல்ல,

சிறிய காரியங்களிலும் மற்றவர்களுக்கு நாம் முன் மாதிரிகையாக வாழ வேண்டும்.

நற்செய்தியை வாசிப்போம்,

வாசித்ததை வாழ்வோம்,

வாழ்ந்ததைப் போதிப்போம்,

மோட்சத்திற்குச் செல்வோம்.

லூர்து செல்வம்.

Monday, June 12, 2023

"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்."(மத்.5:9)

"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்."(மத்.5:9)  

 நம்மைப் படைத்த கடவுள் சமாதானத்தின் தேவன்.

அவர்

அன்பே உருவானவர் போல,
நீதியே உருவானவர் போல,
வல்லமையே உருவானவர்
 போல

சமாதானமே உருவானவர்.

சமாதானம் என்றால் நல்லுறவு.

நமது முதல் பெற்றோர் படைக்கப்பட்ட போது இறைவனுக்கும் அவர்களுக்கும் இடையில், நல்லுறவு நிலவியது, அதாவது சமாதானம் நிலவியது.

இறைவன் அவர்களோடு சமாதானமாக இருந்தார்.

அவர்களும் இறைவனோடு சமாதானமாக இருந்தார்கள்.

அவர்கள் இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்தபோது இறைவனோடு கொண்டிருந்த சமாதான உறவிலிருந்து விலகிக் கொண்டார்கள்.

ஆனால் இறைவன் மாறாதவர்.

அவரது பண்புகள் என்றுமே மாறாதவை.

ஆகவே அவரால் படைக்கப்பட்ட மனுக்குலம் சமாதான
 உறவிலிருந்து விலகி விட்டாலும்,

இறைவன் நம்மோடு கொண்டுள்ள உறவிலிருந்து விலகவில்லை.

அவருடைய சமாதான உறவு தான் அவரை மனுவுரு எடுத்து,

நமக்காகப் பாடுகள் பற்றி,

அவமானங்கள் நிறைந்த சிலுவை மரணத்தை ஏற்றுக் கொள்ளச் செய்தது.

பாவம் செய்தவர்கள் நாம்,

ஆனால் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்தவர் கடவுள்.

குற்றவாளிகளுக்கு உரிய சிலுவை மரணத்தை, 

குற்றமே செய்ய முடியாத அவர் 

குற்றவாளிகளாகிய நமக்காக ஏற்றுக் கொண்டார்.

சமாதானமே உருவான அவர்,
சமாதானத்தை, அதாவது, அவரையே நமக்குத் தருவதற்காகத்தான் இவ்வாறு செய்தார்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள நமது உறுப்புக்களால் நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக 

அவரது எல்லா உறுப்புகளும் அடி வாங்கின.

அவர் கல் தூணில் கட்டப்பட்டு அடிபட்ட போது கழுத்திற்கு கீழே உள்ள அத்தனை உறுப்புகளும் நமது பாவங்களுக்காக அடி வாங்கி பரிகாரம் செய்தன.

அவர் முள் முடி சூட்டப்பட்டு அடிபட்ட போது,

தலையிலுள்ள நமது மூளையின் துணை கொண்டு நாம் செய்த பாவங்களுக்கும்,

கண், காது, மூக்கு, வாய் ஆகியவற்றின் துணை கொண்டு நாம் செய்த பாவங்களுக்கும்

பரிகாரமாக அவரது தலை அடி வாங்கியது.

நாம் பயணம் செய்து செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அவர் கனமான சிலுவையைத் தூக்கிக் கொண்டு கல்வாரி மலைக்குப் பயணம் செய்தார். 


நாம் பயணம் செய்யும்போது உண்பதற்காக வகை வகையான உணவுப் பதார்த்தங்களோடு பயணம் செய்வோம்.

ஆனால் சமாதானத்தின் தேவன் இயேசுவுக்கு கனமான சிலுவையே உணவு.

சிலுவையில் ஆணிகளால் அறையப்படும் பொழுது ஏற்பட்ட வேதனையையும்,

கையில் அறையப்பட்ட ஆணிகளிடமிருந்து உடலின்
பாரம் கீழ் நோக்கி இழுக்கும் பொழுது கைகளிலும், உடலிலும் ஏற்பட்ட வேதனையையும்

இயேசு தாங்கிக்கொண்டது தனது சமாதானத்தை பாவிகளாகிய நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காகத்தான்.

நாம் அவரது சமாதான உறவினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் சிலுவை வேதனையை அனுபவித்தார்.

இயேசு பிறந்த அன்று 

"நல்மனதோற்கு சமாதானம் உண்டாகுக"

என்று வானவர் பாடிய கீதம் செயல் வடிவம் பெறுவதற்காகவே 

"தந்தையே, இவர்களை மன்னியும்."

என்று தந்தையை வேண்டினார்.

தனது சிலுவை மரணத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி தந்தையை வேண்டும்போது 

அவரைச் சிலுவையில் அறைந்த யூதர்கள் மட்டுமல்லாமல்,

நாமும் அவர் மனதில் இருந்திருக்க வேண்டும்.

அவரது சிலுவை மரணத்திற்கு காரணமானவர்கள் அவருக்கு எதிராகப் பாவம் செய்த நாம் தானே.

நல் மனது என்றால் பாவம் இல்லாமல் இறைவனோடு நல்உறவில் உள்ள மனது.

பாவம் செய்யும்போது நல்ல மனது கெட்ட மனதாக மாறி விடுகிறது.

பழையபடி அது நல் மனது ஆக வேண்டும் என்றால் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்.

பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் நமது பாவம் மன்னிக்கப்பட வேண்டும்.

நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானம் உண்டாக என்று வானவர்கள் பாடினார்கள்.

நம்மை நல்ல மனது உள்ளவர்களாக மாற்றுவதற்காகத் தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டு வேதனைகள் அனுபவித்துக் கொண்டிருந்தபோது 

நமது பாவங்களை மன்னிக்கும் படி தந்தையிடம் வேண்டுகிறார்.

எங்கே மன்னிப்பு இருக்கிறதோ அங்கே சமாதானம் இருக்கும்.

நாம் செய்த பாவங்களுக்காக வருத்தப்பட்டு நாமும் தந்தையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

யார் மன்னிப்பு கேட்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் இழந்த சமாதானம் திரும்பி வரும்.

கடவுள் எப்போதும் சமாதான நல் உறவோடுதான் இருக்கிறார்.

அந்த உறவில் நாம் இணைய நாம் செய்த பாவங்களுக்கு நாம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

"கேளுங்கள், கொடுக்கப்படும்" என்று இயேசு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

நாம் இயேசுவிடம் நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கும் போது அது கட்டாயம் கொடுக்கப்படும்.

மன்னிப்போடு சமாதானமும் சேர்த்துக் கொடுக்கப்படும்.

இயேசு கடவுள், நாம் அவரால் படைக்கப்பட்ட மனிதர்கள்.

தாயைப்போல் பிள்ளை என்பார்கள்.

தந்தையைப் போல் பிள்ளை என்றும் சொல்லலாம்.

இயேசு தனது விண்ணக தந்தையை

"எங்கள் தந்தையே" 

என்று நாமும் அழைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

விண்ணகத் தந்தை சமாதானத்தின் தேவன்.

நாமும் சமாதானம் உள்ளவர்களாக இருந்தால்தான் அவரது பிள்ளைகள் என்று அழைக்கப்பட தகுதி உள்ளவர்கள் ஆவோம்.

யாரெல்லாம் விண்ணகத்
 தந்தையோடும்,

தங்கள் அயலானோடும்

 சமாதான உறவில் இருக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள்.

அதனால் தான் இயேசு,

"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்." என்று கூறினார்.

நம்மை படைத்த இறைவனோடும்,

நம்மோடு படைக்கப்பட்ட  நமது அயலானோடும்.

சமாதானமாய் வாழ்வோம்.

இறைவனது பிள்ளைகள் என்ற நமது அந்தஸ்தைக் காப்பாற்றுவோம்.

இயேசு உயிர்த்தபின் தனது சீடர்களுக்கு காட்சி கொடுக்கும் போதெல்லாம்,

"உங்களுக்கு சமாதானம் உண்டாகுக."

என்று வாழ்த்தினார்.

நாமும் நமது அயலானை அவ்வாறே வாழ்த்துவோம்.

"அனைவருக்கும் சமாதானம் உண்டாகுக."

லூர்து செல்வம்.

Saturday, June 10, 2023

"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு". (அரு.6:51)

"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு". (அரு.6:51)

மண்ணில் வாழ மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட நமது உடலுக்கு வேண்டிய உணவு மண்ணிலிருந்து வருகிறது.

அப்படியானால் சொல்லாமலே விளங்கும் விண்ணில் வாழ இறைவனால் படைக்கப்பட்ட ஆன்மாவுக்கு வேண்டிய உணவு விண்ணிலிருந்து வரவேண்டும்.

உடலுக்கு மண் உணவு. உடலுக்கான உணவு மண்ணில் உள்ள தாதுப் பொருட்களால் ஆனது.

ஆன்மாவுக்கு உணவு இறைவன்.

 இயேசுவின் வருகைக்கு முன் இறைவன் தனது அருளை ஆன்மாக்களுக்கு உணவாகக் கொடுத்து வந்தார்.

இறைமகன் மனுவுரு எடுத்து, திவ்ய நற்கருணையை ஏற்படுத்திய பின்,

தன்னையே தனது அருள் வரங்களுடன் நமது ஆன்மாக்களுக்கு உணவாகத் தந்து வருகிறார்.

இதைத்தான் இயேசு,

"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு".

என்று சொன்னார்.

ஒவ்வொரு நாளும் திருப்பலியின் போது நமக்கு தரப்படும் திரு விருந்தில் குருவானவர் நமக்கு இயேசுவை ஆன்மீக உணவாக அளிக்கிறார்.

குருவானவர் இயேசுவின் பிரதிநிதி.

அன்று புனித வியாழக் கிழமை இயேசு அப்பத்தைத் தனது உடலாகவும், ரசத்தைத் தனது இரத்தமாகவும் மாற்றி தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுத்தார்.

இன்று குருவானவர் திருப்பலியின்போது இயேசு சொன்ன அதே வசீகர வார்த்தைகளைப் பயன்படுத்தி 

அப்பத்தை இயேசுவின் உடலாகவும், ரசத்தைத் அவரது இரத்தமாகவும் மாற்றி நமக்கு உணவாகத் தருகிறார்.

நாம் திவ்ய நற்கருணை வாங்கும்போது இந்த உணர்வுடன் வாங்குகிறோமா?

நாம் வாங்குவது உயிருள்ள உணவு.

விண்ணிலிருந்து வந்த உயிருள்ள 
 உணவு.

கையில் வாங்கி வாயில் போடப்பட வேண்டிய தின்பண்டம் அல்ல.

குருவானவர் திவ்ய நற்கருணை கொடுக்கும் போது மக்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால்

விண்ணிலிருந்து வந்த உயிருள்ள கடவுளை உணவாகப் பெறுவது போல் தெரியவில்லை.

பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் சுதந்திர தினக் கொடியேற்றத்தின் போது ஆசிரியர் கொடுக்கும் ஆரஞ்சு வில்லையை கையில் வாங்கி வாயில் போடுவது போல் தெரிகிறது.

உயிருள்ள கடவுளுக்கு ஆரஞ்சு வில்லைக்கு கொடுக்கும் மரியாதையைக் கொடுத்தால்

அது கடவுளை அவமானப் படுத்துவதற்குச் சமம்.

நம் மீது இரங்கி நமக்குத் தன்னையே உணவாகத் தரும் இறை மகனை

ஆராதனை கலந்த பக்தி உணர்வோடு நாவில் பெறுவதற்குப் பதிலாக

தின் பண்டத்தை வாங்குவது போல் கையில் வாங்கி வாயில் போட்டால்

நம்மைப் போல் நன்றி மறந்தவர்கள் யாருமில்லை.

ஒரு குழந்தை தன் வாயைத் திறந்து தாய் ஊட்டும் உணவைப் பெறுவது போல,

நாமும் நமது வாயைத் திறந்து குருவானவரிடமிருந்து இறையுணவைப் பெறுவோம்.

நம்மிடம் வருவது நம்மைப் படைத்த இறைமகன் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

Friday, June 9, 2023

"இவளோ தன் வறுமையிலும் தான் வைத்திருந்த யாவும், தன் பிழைப்புக்கானது முழுவதுமே போட்டுவிட்டாள்"(மாற்கு.12:44)

"இவளோ தன் வறுமையிலும் தான் வைத்திருந்த யாவும், தன் பிழைப்புக்கானது முழுவதுமே போட்டுவிட்டாள்"(மாற்கு.12:44)

உலக ரீதியில்

வியாபாரிக்குக் கொடுப்பது விலை.

அரசியல்வாதிக்குக் கொடுப்பது இலஞ்சம்.

நல நிருவனங்களுக்குக் கொடுப்பது நன்கொடை.

பள்ளிக்கூடத்தில் படிப்பதற்காகக் கொடுப்பது கட்டணம்.

இவற்றையெல்லாம் சட்டரீதியாக நமது பணத்திலிருந்து கொடுக்கிறோம்.

ஆன்மீகத்தில் இறைவனுக்குக் கொடுப்பது காணிக்கை.

இறைவனுக்குக் கொடுக்கப்படும் காணிக்கை நமது பணம் அல்ல,
இறைவனுடைய பணம்.

நமது ஆன்மாவும், நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும், நாம் இவ்வுலகில் பயன்படுத்திக் கொண்டிருக்கிற அனைத்துப் பொருட்களும் இறைவனால் படைக்கப்பட்டவை. ஆகவே முழுக்க முழுக்க அவருக்கே சொந்தம்.

கடவுளுக்கு காணிக்கையாக எதையும் நாம் கொடுக்க வேண்டும் என்றால் அவருக்கு சொந்தமான பொருளையே எடுத்து அவரிடம் கொடுக்க வேண்டும்.

உலக ரீதியாக யாருக்காவது எதையாவது கொடுக்க வேண்டும் என்றால் கொடுக்கப்பட வேண்டிய பொருளை மட்டும் கொடுப்போம்.

ஆனால் இறைவனுக்கு காணிக்கை கொடுக்கும் போது அவருக்கு சொந்தமான பொருளை அவருக்கே கொடுப்பதால் நாம் எதையும் கொடுத்ததாக நம்மால் சொல்ல முடியாது.

ஆகவே நமக்கு சொந்தமான ஏதாவது ஒன்றை காணிக்கையோடு சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

ஆனால் நமக்கு சொந்தமானது எதுவும் நம்மிடம் இல்லை. நாமே அவருக்குத்தான் சொந்தம்.

அப்படியானால் அவருக்கு பிடித்தமாக எப்படி காணிக்கை செலுத்துவது?

முதலில் அவர் நமக்குத் தந்திருக்கும் உள்ளத்தில் உலகச் சார்ந்த எதற்கும் இடம் கொடுக்காமல்,

நமது முழு உள்ளத்தையும் இயேசுவுக்குக் கொடுத்து,

அவரை அதில் குடியேற்றி,

இயேசு தங்கியிருக்கும் நமது உள்ளத்தை முழுவதும் அவரோடு சேர்த்து தந்தை இறைவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.

"தந்தையே உமக்கு காணிக்கையாகத் தர எனக்குச் சொந்தமான எந்த பொருளும் என்னிடம் இல்லை.

ஆகவே எனக்காக நீர் உலகிற்கு அனுப்பிய உமது மகனையே  அன்பின் மூலம்  எனக்குச் சொந்தமாக்கி அவரை உமக்கு காணிக்கையாக ஒப்புக்கொள்கிறேன்.

அவரோடு சேர்த்து நீர் எனது பயன்பாட்டிற்காகத் தந்திருக்கிற உலக பொருட்கள் முழுவதையும் உமக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன்.

என்னிடம் உள்ள பொருட்கள் யாவற்றையும் உமக்குக் காணிக்கையாக தந்துவிட்டால் நான் செலவுக்கு என்ன செய்வேன் என்று கேட்கிறா?

சர்வ உலகத்துக்கும் சொந்தமான நீர் என்னுடைய தந்தையாக இருக்கும்போது நான் எதற்குக் கவலைப்பட வேண்டும்?

தாயின் மடியில் இருக்கும் குழந்தை எதற்கும் கவலைப்படாது.

உமது கையில் இருக்கும் என்னை நீர் கவனித்துக் கொள்வீர் என்று எனக்குத் தெரியும்."

இயேசு நமக்கு கற்பித்த செபத்தில் அன்றாட தேவைகளுக்காக மட்டும் தந்தையிடம் கேட்க சொல்லியிருக்கிறார்.

நம்மிடம் எவ்வளவு பொருள் இருந்தாலும் முழுவதையும் தந்தையிடம் கொடுத்துவிட்டு அன்றன்றய தேவைகளைப் பூர்த்தி செய்யச் சொல்லுவது எவ்வாறு சாத்தியமாகும்?

நம்மிடம் உள்ள அனைத்து பொருள்களையும் காணிக்கை பெட்டியில் போடுவதைப் பற்றி நான் குறிப்பிடவில்லை.

இறைவனிடம் கொடுப்பதைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்.

பொருள் நம் கையில் இருந்தாலும் அது இறைவனுக்குச் சொந்தமானதாகவே இருக்கும்.

அது இறைவனுடைய பொருளாகையால் அதை நாம் தவறாகச் செலவு செய்ய மாட்டோம்.

அவரது விருப்பத்திற்கு ஏற்ப பிறர் அன்பு பணி செய்வதற்கும், கோவில் காரியங்களுக்கும் 

இவை போன்ற இறைவனுக்குப் பிரியமான காரியங்களுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்துவோம்.

உலக ரீதியில் சொல்வதானால் பிள்ளைகள் தாங்கள் வாங்கும் சம்பளத்தைத் தந்தையிடம் கொடுத்துவிட்டு அவரால் கவனித்துக் கொள்ளப் படுகிறார்கள் அல்லவா, அதேபோல,

ஆன்மீக ரீதியில் நம்மையும், நம்மிடம் உள்ளவற்றையும் இறைவன் கையில் ஒப்படைத்துவிட்டு அவரால் கவனித்துக் கொள்ளப்பட வேண்டும்.

ஒரு ஏழைப் பெண் தனது பிழைப்புக்காக வைத்திருந்த அனைத்தையும் கோவில் காணிக்கைப் பெட்டியில் போட்டதைப் பற்றி இயேசு கூறுகிறார்.

அவள் காணிக்கைப் பெட்டியில் போட்டதைப் போல, நாம் வைத்திருக்கும் அனைத்தையும் இறைவன் கையில் ஒப்படைத்து விட வேண்டும்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நம்மிடம் உள்ள அனைத்தையும் இறைவனது விருப்பப்படி மட்டும் பயன்படுத்த வேண்டும்.

ஆடம்பரமான வாழ்க்கை இறைவனது விருப்பத்திற்கு ஏற்றது அல்ல.

போசனப்பிரியம் இறைவனது விருப்பத்திற்கு ஏற்றது அல்ல.

லஞ்சம் கொடுப்பது இறைவனது விருப்பத்திற்கு ஏற்றது அல்ல.

இறைவன் வசம் ஒப்படைத்து விட்ட பணத்தை அவர் விரும்பாத காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது.

இறைவனது விருப்பத்திற்கு ஏற்ப மட்டும் நம்மிடம் உள்ள பொருளைப் பயன்படுத்தினால் நம்மால் இறைவனுக்கு எதிராக பாவம் செய்ய முடியாது.

காலையில் எழுந்து அன்றைய நேரத்தை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டால் 

அன்றைய நேரத்தை பாவம் செய்யப் பயன்படுத்த மாட்டோம்.

நம்மை முழுவதும் இறைவனுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டால் நாள் முழுவதும் இறைவனது பிள்ளைகளாகவே வாழ்வோம்.

இறைவன் நம்மில் வாழ்வார்,
 நமது தந்தையாக.

லூர்து செல்வம்.

Thursday, June 8, 2023

"தன்மீது அன்புகாட்டுவது போல் அயலான்மீது அன்புகாட்டுவதும், தகனப்பலிகள், மற்றப் பலிகள் எல்லாவற்றையும்விட மேலானது.'' (அரு.12:33)

"தன்மீது அன்புகாட்டுவது போல் அயலான்மீது அன்புகாட்டுவதும், தகனப்பலிகள், மற்றப் பலிகள் எல்லாவற்றையும்விட மேலானது.'' (அரு.12:33)

பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட 10 கட்டளைகளிலும் சரி,

புதிய ஏற்பாட்டில் இயேசு கொடுத்த இரண்டு கட்டளைகளிலும் சரி,

வலியுறுத்தப்படுவது இறையன்பும், பிறர் அன்பும்.

 இயேசு 

"நீ உன்னை நேசிப்பது போல் உனது அயலானையும் நேசி" 

என்று கூறும்போது நாம் நம்மை நேசிக்க வேண்டும்  என்ற கட்டளையை பிறரன்புக் கட்டளையோடு இணைத்து கூறுகிறார்.

ஆகவே

எல்லாவற்றுக்கும் மேலாகக் கடவுளை நேசிக்க வேண்டும்,

நம்மை நாமே நேசிக்க வேண்டும்,

நமது அயலானை நேசிக்க வேண்டும்.

கடவுளை முழு உள்ளத்தோடு நேசிக்க வேண்டும்.

நமது அயலானை நம்மை நாம் நேசிப்பது போல நேசிக்க வேண்டும்.

நம்மை நாம் எப்படி நேசிக்க வேண்டும்?

அன்பு அன்பு செய்யப்படுபவரின்  நலனில் அக்கறை காட்டும்.

தாய் ஏன் தனது குழந்தையின் நலனில் அக்கறை காட்டுகிறாள்?

ஏனென்றால் அவள் தன் குழந்தையை நேசிக்கிறாள்.

நமது நண்பனின் வாழ்வில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அந்த பிரச்சனையிலிருந்து அவனை விடுவிக்க நாம் ஏன் ஆசைப்படுகிறோம்?

ஏனென்றால் நாம் நமது நண்பனை நேசிக்கிறோம்.

உலகின் ஏதோ ஒரு பகுதியில் வாழ்ந்த ஏதோ ஒரு ஆளின் மரணச் செய்தி   செய்தித்தாளில் வந்தால் நாம் அவருக்காக உட்கார்ந்து அழுவதில்லை. ஏன்?

ஏனென்றால் நேசிக்க கூடிய அளவுக்கு அவர் யார் என்று தெரியாது.

யார் நலனில் நாம் அக்கறை காட்டுகிறோமோ அவரை நாம் நேசிக்கிறோம்.

அப்படியானால் நமது நலனில் நாம் அக்கறை காட்டும் அளவுக்கு நம்மை நாம் நேசிக்க வேண்டும்.

ஆன்மீக வாழ்வு தான் நமது வாழ்வு என்பது நமக்கு தெரியும்.

நமது ஆன்மீக வாழ்வில் அக்கறை காட்டும் அளவுக்கு நாம் நம்மை நேசிக்க வேண்டும்.

ஆன்மீக நலனைப் பற்றிக் கவலைப்படாமல் உடல் நலனைப் பற்றி மட்டும் கவலைப் படுபவர்கள் தங்களைத் தாங்களே நேசிக்கவில்லை.

விண்ணக வாழ்வைத் தேடாமல் மண்ணக வாழ்வில் மட்டும் ஈடுபாடு காட்டுபவர்கள் தங்களைத் தாங்களே நேசிக்கவில்லை.

உண்மையான ஆன்மீகவாதிகள் தான் தங்களைத் தாங்களே நேசிக்கிறார்கள்.

இயேசுவின் கட்டளைப்படி அவர்கள் மற்றவர்களுடைய ஆன்மீக நலனிலும் அக்கறை காட்டுவார்கள்.

புனித சவேரியார் ஏன் தனது சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார்?

அவருக்கு அவரது ஆன்மீக நலனில் அக்கறை இருந்தது, 

பிற நாடுகளில் வாழும் மக்களின் ஆன்மீக நலனிலும் அக்கறை இருந்தது.

இந்தியர்களின் ஆன்மீக நலனில் அவருக்கு அக்கறை இருந்ததால்தான் அவர் வேதம் போதிக்க இந்தியாவுக்கு வந்தார்.

எல்லா வேத போதகர்களின் நிலையும் இதுதான்.

தங்கள் உடல் நலனில் மட்டும் அக்கறை காட்டுபவர்கள் தங்களைத் தாங்களே நேசிக்கவில்லை.

அவர்களால் நேசிக்கப்படும் உடல் அவர்கள் ஆசைப்படுவது போல் எப்போதும் வாழாது.

அவர்களின் உடல் மண்ணுக்குள் போகும்போது ஆன்மா நரகத்துக்குப் போகும்.

தங்களது ஆன்மாவை நரகத்திற்கு அனுப்புபவர்கள் எப்படித் தங்களைத் தாங்களே நேசிக்க முடியும்?

தங்களது ஆன்மீக மீட்புக்காக வாழ்பவர்கள் மட்டுமே தங்களைத் தாங்களே நேசிக்கிறார்கள்.

அவர்கள் இயேசுவின் கட்டளைப்படி மற்றவர்களின் ஆன்மீக மீட்புக்காகப் பாடுபடுவார்கள்.

ஆக "உன்னை நீ நேசிப்பது போல உனது அயலானையும் நேசி"

என்ற இயேசுவின் வார்த்தைகளின் உண்மையான பொருள்,

"நீ விண்ணக வாழ்வுக்கு ஆசைப்படுவது போல உனது அயலானும் ஆசைப்படுவதற்காகப் பாடுபடு. 

மற்றவர்கள் ஆன்மீக மீட்பு பெற உழைப்பவர்கள் தான் மற்றவர்களை உண்மையிலேயே நேசிக்கிறார்கள்.

உடல் சம்பந்தப்பட்ட உதவிகளை நாம் செய்யும்போது கூட அவர்களின் ஆன்மீக மீட்பே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

பசித்தவருக்கு உணவு கொடுப்பவரும் மீட்கப்பட வேண்டும்,

 அந்த உணவை உண்பவரும் மீட்கப்பட வேண்டும்.

உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுப்பவரும் மீட்கப்பட வேண்டும்,

உடையை உடுப்பவரும் மீட்கப்பட வேண்டும்.

இயேசு உலகிற்கு வந்ததே ஆன்மாக்களை மீட்பதற்காகத்தான்.

அவரது கட்டளைகளும் அதையே அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

இறைவனை நாம் நேசிக்கும் போது 

அவருக்கு சேவை செய்து, அவரோடு விண்ணகத்தில் வாழ 
நாம்  பாக்கியம் பெறுகிறோம்.

நாம் பெறும் பாக்கியத்தை மற்றவர்களும் பெற உழைக்க வேண்டும்.

அதற்காக நாம் உழைத்தால் தான் நமக்கு உண்மையிலேயே பிறர் அன்பு இருக்கிறது.

தான் விண்ணகத்தில் வாழ்வது போல தன்னால் படைக்கப்பட்டவர்களும் வாழ வேண்டும் என்று இயேசு ஆசிக்கிறார்.

குருவைப் போல சீடனும் தன்னால் நேசிக்கப்படும் அனைவரும் விண்ணகத்தில் வாழ வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.

இப்போது ஒன்று புரிந்திருக்கும்.

உண்மையான அன்பு உடல் நலனை அல்ல,

ஆன்மீக நலனையே அடிப்படையாகக் கொண்டது.

அனாதைப் பிள்ளைகளுக்கான இல்லங்கள் நடத்துவோர் அவர்களை மனம் திருப்புவதற்காகத்தான் நடத்துகிறார்கள் என்று மற்றவர்கள் குற்றம் சாட்டினால்,

""மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" 

என்று போதித்த இயேசுவின் சீடர்கள் நாங்கள்.

குரு சொன்னபடி நடப்பதே சீடனின் கடமை."

என்று உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

''மற்ற மதத்தினருக்கு நற்செய்தியை அறிவிப்பது குற்றம்"

என்று யாராவது கூறினால்

''அதுதான் எங்கள் பணி" 

என்று நமது பணியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அன்னைத் தெரசா செய்தது இறைப்பணியா, சமூகப் பணியா?

முழுக்க முழுக்க இறைப்பணி.

உண்மையிலேயே இறைவனுக்கு பணி செய்பவர்கள், அவரால் படைக்கப்பட்ட சமூகத்திற்கும் பணி செய்வார்கள்.

அன்னைத் தெரசா செய்தது சமூகத்தை உள்ளடக்கிய இறைப்பணி.

தெருவில் இறந்து கொண்டிருக்கும் தொழு நோயாளிகளை இல்லத்திற்கு எடுத்து வந்து அவர்களுக்கு சேவை செய்தார்களே, ஏன்?

தான் முழு உள்ளத்தோடு நேசித்த இறைவனை அவர்களுக்கும் அளிப்பதற்காக அல்லாமல் வேறு எதற்காக இருக்கும்?

முழுமையான இறைப் பணிக்குள் சமூகம் இருக்கிறது.

இறைவனது மகிமைக்காக நாம் சமூகத்திற்குப் பணி செய்தால் அது உண்மையில் இறைப்பணியே.


இறைவனை மறந்து விட்டு சமூகத்திற்கு பணி என்ற பெயரில் என்ன செய்தாலும் அது பணியே அல்ல.

கடவுளை முழுமையாக நேசிப்பவர்களுக்குத்தான் உண்மையான பணியுணர்வு இருக்கும்.

கடவுளை உண்மையாகவே நேசிப்பவன் தான் தன்னையும் நேசிப்பான், தனது பிறனையும் நேசிப்பான்.

கடவுளுக்கு முழுமையாக சேவை செய்வோம்.

மற்ற எல்லா சேவைகளும் அதற்குள் அடங்கும்.

லூர்து செல்வம்.