Saturday, January 14, 2023

கடவுள் சித்தம். (தொடர்ச்சி)

கடவுள் சித்தம். (தொடர்ச்சி)

"இயேசு இறைமகன் என்பதை ஏற்றுக் கொண்ட நூற்றுவர் தலைவர் யார்?"

"'பிலாத்து இயேசுவுக்கு கொடுத்த தண்டனையை நிறைவேற்றியவர்.  (Executive)

மரணத் தீர்ப்பு கொடுக்கப்பட்ட நேரத்திலிருந்து கல்லறையிலிருந்து இயேசு உயிர்த்தெழும் வரை தனது வீரர்களோடு கூடவே இருந்தவர்.

இயேசு இறந்த செய்தியைப் பிலாத்துவுக்கு அறிவிப்பதற்காக 

அவர் இறந்ததை உறுதி செய்ய அவரது விலாவை ஒரு ஈட்டியால் குத்தியவர் இவர்தான்.

இவரது கண் பார்வை குறைவாக இருந்ததாகவும், 

இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தியபோது வெளிவந்த ரத்தம் இவரது கண்ணில் விழுந்ததால் கண் முற்றிலும் குணம் அடைந்ததாகவும் அவரது வரலாறு கூறுகிறது.

இயேசு இறந்தவுடன் நடந்த நிகழ்ச்சிகளை பார்த்து 

"உண்மையில் இவர் கடவுளின் மகனாயிருந்தார்."

என்று கூறி இயேசு இறைமகன் என்பதை ஏற்றுக் கொண்டார்.

அவனுடன் இருந்த வீரர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

இயேசுவின் கல்லறையை காவல் காத்தவரும் அவர் தான்.

இயேசு உயிர்த்ததையும் பார்த்தார்.

இயேசு உயிர்த்ததை கேள்விப்பட்ட தலைமை குருக்கள்,

கல்லறையை காவல் காத்துக் கொண்டிருந்த வீரர்களிடம்,

"நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இரவில் அவருடைய சீடர் வந்து அவரைத் திருடிச் சென்றனர்" என மக்களுக்குச் சொல்லுங்கள்."

என்று சொன்னார்கள்,

ஆனால் நூற்றுவர் தலைவர் இயேசு உயிர்த்தெழுந்ததை மக்களிடம் எடுத்துச் சொன்னார்.

அப்போஸ்தலர்களின் ஆலோசனைப்படி துறவியானார்.

இவர் கிறிஸ்தவராக மாறியதால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இயேசுவின் பாடுகளின் போதும்,

 மரணத்தின் போதும்,

உயிர்த்த போதும்,

 கூடவே இருந்து கவனித்துக் கொண்ட நூற்றுவர் தலைவர் வேத சாட்சியாக மரித்தார்.

இவர்தான் நாம் வேத சாட்சியாக கொண்டாடும் புனித 
.லோன்ஜினுஸ்.(Saint Longinus)"

Feast on:
16 October: Roman Catholic Church and Eastern Orthodox Churches

"அப்போ இயேசுவின் ஜெபம் உடனடியாகவே பலனளிக்க ஆரம்பித்துவிட்டது என்று சொல்லுங்கள்."

"'இவ்வளவு நேரமும் அதைத் தானே சொன்னேன்."

"இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ் மனம் திரும்பியிருப்பான் என்று நம்புகிறீர்களா?"

"'யூதாஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு தான் இயேசுவை காட்டிக் கொடுத்தான்.

அவனது அனுபவத்தில் பல முறை இயேசு பரிசேயர்களிடம் அகப்படாமல் தப்பித்திருக்கிறார்.

அதுபோல் அவர் தப்பித்து விடுவார், நமக்கும் பணம் கிடைக்கும் என்று எண்ணிக் காட்டிக் கொடுத்திருக்கலாம்.

அவர் சாக வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை.

அதனால் தான் அவருக்கு மரணத் தீர்ப்பு இடப்பட்டவுடன்,

யூதாஸ், அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு, மனம் வருந்தி, 

முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமைக்குருக்களிடமும் மூப்பரிடமும் கொண்டுவந்து,

"மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்றான்.

வெள்ளிக்காசுகளை ஆலயத்தில் எறிந்துவிட்டு, 

உணர்ச்சி உணர்ச்சி வேகத்தில் போய் நான்றுகொண்டான்.

இயேசு தந்தையிடம் செய்த செபத்தின் மேலுள்ள விசுவாசத்தின் காரணமாக சொல்கிறேன்,

 அதன் விளைவாக,

அவன் இறுதி மூச்சு விடும் போது தனது பாவத்திற்கு மனஸ்தாபப்பட்டு மனம் திரும்பியிருப்பான்.

மனம் திரும்ப ஒரு வினாடி கூட தேவையில்லை.

அரை வினாடியில் கூட மனம் விரும்ப வாய்ப்பு உண்டு,

நாம் விசுவாசத்தோடு கேட்பதை கொடுக்கும் ஆண்டவர்,

அவரது சொந்த விருப்பத்தை நிறைவேற்றாமல் இருப்பாரா?

யூதாசுக்கு மட்டுமல்ல, அவரது மரணத்துக்குக் காரணமான அனைவருக்கும் மனம் திரும்ப போதுமான அருள் வரங்களை அள்ளிக் கொடுத்திருப்பார்."


"'அப்போ அவரது மரணத்துக்குக் காரணமான அனைவரையும் நாம் ஒருநாள் மோட்சத்தில் பார்ப்போம் என்கிறீர்கள்!"

"'ஒரு நாள் அல்ல, நித்திய காலமும் பார்ப்போம்."

"ஆனால், தாத்தா, இயேசு யூதாசைப் பற்றி,

"மனுமகனைக் காட்டிக்கொடுப்பவனுக்கோ ஐயோ கேடு! அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்" (மத்.26:24)

என்று கூறியிருக்கிறாரே.

அதனால்தான் நீங்கள் சொல்வது புரியவில்லை." 

''புரிய வைக்கிறேன்.

சொற்களுக்கு பொருள் அவற்றை சொன்னவரிடமிருந்து தான் பெற வேண்டும்.

உன்னுடைய அம்மா எப்போதாவது உன்னை மிகக் கடுமையான வார்த்தைகளைக் கொண்டு திட்டியிருக்கிறார்களா?"

''உன்ன பெத்ததுக்கு ஒரு விளக்கமாற்றைப் பெத்திருக்கலாம்."

"'உண்மையிலேயே உனது அம்மாவுக்கு அந்த ஆசையா?" 

"நான் அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்காமல் இருந்ததைக் குத்தி காட்டும் வார்த்தைகள் தான்.

அதற்கு மேல் அந்த வார்த்தைகளுக்கு வேறு அர்த்தம் எதுவும் இல்லை."

"'இயேசுவின் வார்த்தைகளுக்கு வருவோம். '

''அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்"

அகராதிப்படி அவற்றுக்கு அர்த்தம் பார்த்தால்,

யூதாஸ் பிறந்ததற்க்கு இயேசு வருத்தப்படுவது போல் தோன்றும்.

யூதாசைப் படைத்தவரே அவர் தான்.

"அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்"

என்பதற்கும்,

"நான் அவனை படைக்காமல் இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்"

என்பதற்கும் பொருள் ஒன்றுதான்.

தான் செய்த காரியத்துக்கு வருத்தப்பட கடவுளால் முடியாது.

கடவுளால் தவறு செய்ய முடியாது.

காட்டிக் கொடுத்தல் என்ற பாவத்தின் கனாகனத்தை உணர்த்தவே இயேசு அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

இயேசு அளவு கடந்த கருணையும் இரக்கமும் உள்ளவர்.

நாம் எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும் அதை மன்னிக்க எப்போதும் தயாராக இருப்பவர்.

யூதாசின் பாவம் அவரது மன்னிப்புக்கு அப்பாற்பட்டது அல்ல.

யூதாஸ் பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு கேட்க வேண்டும், அவ்வளவுதான்.

அதற்கான விசேஷ அருளை அவரால் யூதாசுக்கு கொடுக்க முடியும்.

கொடுத்திருப்பார் என்பதற்கு அவர் தந்தையை நோக்கி செய்த செபமே ஆதாரம்.

யூதாஸ் விஷயத்தில் கடவுளின் இரக்கத்தின் மேன்மையை அறிய பின்வரும் link வழியே சென்று, வருவதை வாசிக்கவும்.

https://www.thedivinemercy.org/articles/christs-betrayal-and-divine-mercy

பாவத்திற்கான மன்னிப்பை பற்றி அறிய இறைவனின் கண்ணோக்கிலிருந்து பார்க்க வேண்டும்."

"தீமையிலிருந்து நன்மையை வரவழைக்கத் தெரிந்தவர் கடவுள்.

இயேசுவை கொன்றது யூதர்கள் செய்த தீமை.

அதிலிருந்து தான் உலக மீட்பு என்ற நன்மையை கடவுள் 
வரவழைத்திருக்கிறார்.

வேறு வார்த்தைகளில்,

 உலகத்தை பாவக் குழியில் தள்ளிய சாத்தான்  அதை பாவத்திலிருந்து மீட்கவும் தனக்குத் தெரியாமலே  உதவியிருக்கிறது."

(தொடரும்) 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment