Sunday, January 15, 2023

கடவுள் சித்தம். (.தொடர்ச்சி. 3)

கடவுள் சித்தம். (.தொடர்ச்சி. 3)

"தாத்தா, இயேசு   மனுக் குலத்தைப் பாவத்திலிருந்து மீட்க சாத்தான் தனக்குத் தெரியாமலே உதவியிருக்கிறது என்று சொன்னீர்கள்.

அதைக் கொஞ்சம் விளக்குங்களேன்."

''நமது முதல் பெற்றோரைப் பாவம் செய்ய வைத்து மனுக்குலத்தையே பாவக் குழிக்குள் வீழ்த்தியது சாத்தான்.

"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்: அவள் உன் தலையை நசுக்குவாள். "

என்ற கடவுளின் வார்த்தைகளிலிருந்து தான் விழ வைத்த மக்களை மீட்பதற்கு மீட்பர் பிறப்பார் என்பது அதற்கு உறுதியாகிவிட்டது.

மீட்பர் பிறந்தால் அவரை உடனே கொன்று விட வேண்டும் என்று சாத்தான் அன்றே திட்டமிட்டது. .

இயேசு பிறந்த அன்று வான தூதர்

"இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா."

என்று இடையர்களிடம் கூறிய வார்த்தைகளிலிருந்து பெத்தலகேமில் மீட்பர் பிறந்திருக்கும் செய்தியை அறிந்தது.

அவரைக் கொல்ல ஏரோது மன்னனைப் பயன்படுத்த விரும்பிய சாத்தான்,

அவனது மனதில் புகுந்து மீட்பராகப் பிறந்த குழந்தையைக் கொல்லும்படி தூண்டியது. 

ஏரோதுவின் முயற்சி வெற்றி பெறவில்லை.

அந்த முயற்சியில்  அநேக மாசில்லாக் குழந்தைகள் இயேசுவுக்காக வேத சாட்சிகளாக மரித்தார்கள்.

அவர்கள் சிந்திய இரத்தம் கிறிஸ்தவம் வளர முதன்முதல் ஊற்றப்பட்ட தண்ணீர்.

இயேசு முப்பது ஆண்டுகள் திருக் குடும்பத்தில் வளர்ந்தார்.

அவர் பொது வாழ்வில் ஈடுபடுமுன் யோர்தான் நதியில் ஸ்நாபக அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெறும்போது

 அருளப்பர் கூறிய வார்த்தைகளிலிருந்து இயேசு தான் மீட்பர் என்பதைத் தெரிந்து கொண்டது.

அதை உறுதி செய்து கொள்ள இயேசுவை மூன்று முறை சோதித்தது.

"நீர் கடவுளின் மகனானால்" என்ற வார்த்தைகள் மூலம் சோதனைகளை ஆரம்பித்த சாத்தான்,
 
"உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே. " 

என்ற வார்த்தைகளிலிருந்து அவர் தான் மீட்பராக பிறந்த இறைமகன் என்பதை உறுதி செய்து கொண்டது.

அவர் தனது மரணத்தின் மூலம் தான் உலகை மீட்க போகிறார் என்ற உண்மையை சாத்தான் அறியாததால்,

அவரை கொல்லும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது.

அதற்காகத்தான் யூத மத குருக்களையும், யூதாசையும் அது பயன்படுத்தியது.

இயேசுவை கொல்லும் முயற்சியில் அது வெற்றி பெற்றது.

ஆனால் இயேசு தனது மரணத்தின் மூலமாகவே பாவத்தை வென்று உலகை மீட்டார் என்ற செய்தியை அறிந்தவுடன்

தான் நடக்க கூடாது என்று தீர்மானித்தது நடக்க தானே உதவியிருப்பதை கண்டு 

 தனது மூளையின்மையை நினைத்து, வெட்கித் தலை குனிந்தது.

இயேசு தனது மரணத்தின் மூலம் உலகத்தை மீட்க போகிறார் என்பது சாத்தானுக்கு தெரிந்திருந்தால்

 இயேசுவை கொலை செய்யும்படி அவரது எதிரிகளைத் தூண்டியிருக்காது.

 ஆனாலும் மீட்புக்கு எதிரான அதன் முயற்சியை அது கைவிடவில்லை.

கிறிஸ்துவை வெல்ல முடியாத சாத்தான்,

 இப்போது கிறிஸ்தவர்களை சுற்றி சுற்றி வருகிறது.

நாம் இயேசுவின் கால்களை பற்றிக் கொண்டால் சாத்தானால் நம்மை ஒன்றும் செய்ய இயலாது.

"தாத்தா, எதை வைத்து சாத்தானின் செயல்களை இவ்வளவு உறுதியாகக் கூறுகிறீர்கள்?" 

"'உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்: அவள் உன் தலையை நசுக்குவாள்.

இந்த வார்த்தைகள் யார் யாரைப் பார்த்து கூறியது?"

"கடவுள் சாத்தானைப்
 பார்த்து கூறிய வார்த்தைகள் இவை."

"'யாருக்கும் யாருக்கும் பகை?"

"1 சாத்தானுக்கும் மரியாளுக்கும்.

2 சாத்தானின் வித்தாகிய பாவத்துக்கும், மரியாளின் வித்தாகிய இயேசுவுக்கும்.".

"'உலகத்தில் எது நீடிக்க வேண்டும் என்பது சாத்தானின் ஆசை?"

"பாவம்."
.
"'பாவத்தை அழிக்க பிறக்கப் போகிறவர் யார்?"

"மீட்பர்."

"'பாவத்தை நீடிக்க செய்ய வேண்டுமென்றால் சாத்தான் என்ன செய்ய வேண்டும்?"

"மீட்பரைப் பிறக்க விடக்கூடாது."

"'அது அவன் கையில் இல்லை."

"அப்படியானால் பிறப்பவரைக் கொல்ல வேண்டும்."

"'சாத்தானின் திட்டம் என்னவென்று தெளிவாகிவிட்டது.

இயேசு பிறந்தபின் நடந்த நிகழ்ச்சிகள் சாத்தானின்  செயல்களை உறுதிப்படுத்துகின்றன."

"மூளை இல்லாத சாத்தானின் பேச்சைக் கேட்டு ஏமாந்து போகிற மூளையுள்ள மனிதர்கள் இன்னும் இருக்கிறார்களே.

நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களைக் கூறுகிறேன். 

பாவம் மட்டும் தான் தீமை என்கிறீர்கள்.

அப்போ மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் மற்ற நிகழ்வுகள்?"

"'நமது ஆன்மாவிற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமே தீமை.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய் நொடிகள், நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம், புயல் போன்றவை இயற்கை நிகழ்வுகள்.

இவை உடலுக்கு மட்டுமே துன்பத்தை கொடுக்கும்.

இவற்றால் ஆன்மாவை ஒன்றுமே செய்ய முடியாது."

"சுனாமியின்போது ஆயிரக்கணக்கானோர் வீடு வாசல்களையும், உயிரையும்
 இழந்து விட்டார்களே." 

"'சுனாமிக்குக் காரணமான இயற்கை இறைவன் கொடுத்த விதிகளின்படியே இயங்குகிறது.

ஆகவே அது ஒரு இயற்கை நிகழ்வு.

அதனால் ஏற்படும் மரணங்கள் இறைவனது திட்டத்திற்கு உட்பட்டன.

கடவுளால் உலகிற்கு அனுப்பப்பட்டவர்களை அவர் திரும்பி அழைக்க அவருக்கு முழு உரிமை உண்டு. 

பிறந்த மனிதன் என்றாவது ஒருநாள் இறக்கத்தான் வேண்டும்.

மரணம் அடையாமல் விண்ணகம் அடைய முடியாது.

விண்ணகம் செல்வதற்காக வாசலை தீமை என்று சொல்லலாமா?

துன்பங்களுக்கு இயேசு வைத்திருக்கும் பெயர் சிலுவைகள்.

நமக்கு வரும் சிலுவைகளை சுமந்து சென்றால்தான் நாம் இயேசுவின் சீடர்களாக வாழ முடியும் என்று அவரே சொல்லியிருக்கிறார்.

நாம் விடுதலை பெற வேண்டியது பாவத்திலிருந்து மட்டும்தான்.

துன்பங்கள் நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய உதவுகின்றன.

இவ்வுலகில் எந்த அளவுக்கு துன்பங்களை சிலுவைகளாக ஏற்று இயேசுவுக்காக அனுபவிக்கிறோமோ

அந்த அளவுக்கு மோட்சத்தில் நமது பேரின்பம் அதிகமாக இருக்கும்.

நமக்காக துன்பங்களை அனுபவிப்பதற்காகவே விண்ணகத் தந்தை தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.

ஆகவே நாம் அனுபவிக்கும் துன்பங்கள் தீமைகள் அல்ல.

கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நன்மைகள்."

"ஆக நாம் சிலுவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது Active will of God.

ஆனால், தாத்தா, ஒருவன் அதிகமாக சாப்பிட்டதால் வயிற்று வலி வருகிறது, அது ?"

"'போசனப் பிரியம் ஒரு தலையான பாவம்.

சமாதானமின்மை , சண்டை, போர் போன்ற பாவங்களால் ஏற்படும் துன்பங்களுக்கு நாம்தான் பொறுப்பு.

பாவங்களாகிய தீமைகளிலிருந்து  நம்மை  இரட்சிக்கும்படிதான் நாம் தந்தையிடம் வேண்ட வேண்டும் என்று இயேசு நமக்கு கற்பித்தார்.

நாம் செய்யும் பாவங்கள் Permissive Will list ல் வரும்.

பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு

 விளைவுகளைப் பாவங்களுக்கு பரிகாரமாக ஏற்று அனுபவித்து கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியது தான்."


"ஆக உலகில் நடப்பவை அனைத்தும் இறைவனது சித்தப்படி தான் நடக்கின்றன.

நாம் அவரது சித்தப்படி அவரையும், 
நமது அயலானையும் நேசித்து வாழ்ந்தால்

அவரோடு நிலைவாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment