Sunday, January 8, 2023

"உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்." (மாற்கு.1:18)

"உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்." (மாற்கு.1:18)

சீமோனும், அவருடைய சகோதரர் பெலவேந்திரரும் மீன் பிடிப்பதை தங்களது வாழ்க்கை தொழிலாகக் கொண்டிருந்தார்கள்.

ஆன்மீகத்தில் பெலவேந்திரர் ஸ்நாபக அருளப்பரின் சீடர்.

இயேசுவின் அறிமுகம் கிடைத்த பின் அவர்தான் மெசியா என்று அறிந்தபின் அவரைப் பின்பற்றத் தீர்மானித்தார்.

தனது சகோதரரான சீமோனை இயேசுவுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.

இயேசு அவரைப் பார்த்தவுடன், "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார். 

கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள்.

அவர் கூறியதிலிருந்து சீமோனைத் திருச்சபையின் தலைவராக்குவது அவரது நித்திய காலத் திட்டம் என்பது தெரிகிறது.

அதன் பிறகு ஒரு நாள் சீமோனும், பெலவேந்திரரும் மீன் பிடித்து கொண்டிருந்த போது இயேசு அவர்களை பார்த்தார்.

பார்த்தவர் அவர்களை நோக்கி,

 "என் பின்னே வாருங்கள். நீங்கள் மனிதரைப் பிடிப்பவராய் இருக்கச் செய்வேன்" என்றார்.

உடனே அவர்கள் தங்கள் உலக வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்.

அதுவரை அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சாப்பாடு போட்டது அவர்களது வலைகள் தான்.

வகைகளை விட்டு விட்டால் தாங்கள் எப்படி உலகில் வாழ்வது,

தங்கள் குடும்பத்தினரை எப்படி காப்பாற்றுவது 

 என்பதைப் பற்றி சிந்திக்கவே இல்லை.

அழைப்பவர் மெசியா.

உலக வாழ்க்கையை வாழ்வதைவிட மெசியாவின் சீடர்களாக வாழ்வது மேல் என்று தீர்மானித்து அவரைப் பின்பற்றினார்கள்.

பெலவேந்திரரும், சீமோனும் முதல் முதல் இயேசுவிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

ஆனால் அவர்களையும் மற்ற அப்போஸ்தலர்களையும் தேர்வு செய்தது நமது ஆண்டவராகிய இயேசு தான்.

படித்து பட்டம் பெற்றவர்களாகப் பார்த்து இயேசு தேர்வு செய்யவில்லை.

வயிற்று பிழைப்புக்காக தொழில் செய்து கொண்டிருந்தவர்களைத் தான் இயேசு தேர்வு செய்தார்.

இப்பொழுது ஒருவரை குருவானவர் ஆக்குவதற்காக

 அவருக்கு தேவ சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம் போன்ற பாடங்களில் பாண்டியத்துவம் கொடுத்து,

 குறைந்தது 14 ஆண்டுகள் பயிற்சி கொடுத்து தேர்வு செய்கிறார்கள்.

ஆனால் நமது ஆண்டவர் தனது அப்போஸ்தலர்களுக்கு அப்படிப்பட்ட பயிற்சியெல்லாம் கொடுத்ததாக தெரியவில்லை.

சாதாரணமானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை மூன்று ஆண்டுகள் தான் சென்ற இடமெல்லாம் தன்னோடு அழைத்துச் சென்றார்.

அவரது போதனைகளைக் கேட்டார்கள், அவற்றுக்கான விளக்கத்தையும் இயேசுவிடமிருந்து பெற்றார்கள்.

கடவுளாகிய அவர் தான் நினைத்திருந்தால் ஒரே வினாடியில் தனது வல்லமையால் அவர்களை கற்றறிந்த அறிஞர்களாக மாற்றியிருக்கலாம். 

ஆனால் அவரது போதனைகளை கேட்டு அவர்களை அவர்களின் இயல்புப்படி வளரவிட்டார்.

இறுதி உணவின் போது அவரது 
அறிவுரைகளை நீண்ட நேரம் கேட்ட பின்பும்,

கெத்சமனித் தோட்டத்தில் இரத்த வேர்வை வியர்த்து தந்தையுடன் அவர் பேசிக் கொண்டிருந்தபோது,

தூங்கும் அளவிற்கும்,

அவரது எதிரிகள் அவரை கைது செய்த போது அவரை விட்டு ஓடும் அளவிற்கும் மட்டும்தான் அவர்களது இயல்பு படி வளர்ந்திருந்தார்கள்.

தான் பாடுகள் பட்டு மரிக்கப் போவதையும்,

மரித்த மூன்றாவது நாள் உயிர்க்கப் போவதையும் 

அவர்களுக்கு அவர் பலமுறை கூறியிருந்தும்,

அவர் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்ததை அவர்கள் ஆரம்பத்தில் விசுவசிக்கவே இல்லை.

ஆண்டவர் விண்ணகம் எய்திய பின் பரிசுத்த ஆவி அவர்கள் மீது இறங்கி வந்த பின்பு தான் அவர்கள் விசுவாசத்தில் உறுதியும் தைரியமும் பெற்றார்கள்.

பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான் அவர்கள் நற்செய்தியை போதிக்க ஆரம்பித்தார்கள்.

அதன் பிறகு தான் இயேசுவுக்காக உயிரைத் தியாகம் செய்து,

வேத சாட்சிகளாக மரிப்பதற்குரிய தைரியத்தைப் பெற்றார்கள்.

உலகமெங்கும் திருச்சபை பரவுவதற்கும், வளர்வதற்கும் பரிசுத்த ஆவி தான் காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரண மனிதர்களின் திறமையினால் அல்ல, கடவுளின் வல்லமையினாலே திருச்சபை வளர்ந்து கொண்டிருக்கிறது. 

வேதாகமத்தை தினமும் வாசித்து தியானிப்பது நமது அறிவை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல.

தேர்வுகள் எழுதி பட்டங்கள் பெறுவதற்காகவும் அல்ல.

வினாடி வினாக்களுக்குப் பதில் அளிப்பதற்காகவும் அல்ல.

இறை வாக்கின்படி நாம் வாழ்வதற்காக வேதாகமத்தை தினமும் வாசிக்கிறோம்.

அப்போஸ்தலர்களைப் பற்றிய வாசிப்பு நமது வாழ்க்கைக்கு எப்படி பயன் தருகிறது?

'அப்போஸ்தலர்கள் ஆரம்ப நிலையில் எப்படி இருந்தார்களோ அதைவிட மிக சாதாரண நிலையில் தான் மனிதர்கள் என்ற முறையில் நாம் இருக்கிறோம்.

ஆன்மீக வாழ்வில் சுயமாக நம்மால் எதுவும் செய்ய முடியாது.

ஆனால் கடவுளின் உதவியால் எவ்வளவு பெரிய செயலை வேண்டுமானாலும் செய்யலாம்.

புனிதர்கள் நம்மை போல சாதாரண மனிதர்கள் தான்.

ஆனால் அவர்களால் புதுமைகள் செய்ய முடிகிறது என்றால் அது அவர்களுடன் இருந்து வழி நடத்தும் பரிசுத்த ஆவியானவரால் தான்.


எப்படி அப்போஸ்தவர்கள் பரிசுத்த ஆவியின் வருகைக்கு பின்னால் விசுவாசத்தில் உறுதி பெற்று நற்செய்தியை போதிக்க ஆரம்பித்தார்களோ,

அப்படியே ஞானஸ்நானத்தின் போது நாம் பெற்ற பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான் நமது ஆன்மீக வாழ்வை ஆரம்பித்தோம்.

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பரிசுத்த ஆவியின் வல்லமையால்தான் நாம் ஆன்மீக வாழ்வை வாழ வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் நம்முள் இருந்து நம்மை வழிநடத்தும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலின் படியே நாம் இயங்க வேண்டும். 

ஒவ்வொரு வினாடியும் நாம் அவரோடு நம்முடைய செபத்தில் இணைந்திருக்க வேண்டும்.

பரிசுத்த ஆவியின் ஆலயமாகிய நமது ஆன்மா எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும்.

உத்தம மனஸ்தாபம் என்ற அருள் நீரினால் நமது ஆன்மாவை அடிக்கடி கழுவுவதோடு,

திவ்ய நற்கருணை என்னும் உணவினால் நமது ஆன்மா ஊட்டம் பெற வேண்டும்.

அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையோடு இயேசுவுக்காக உலகையே வென்றது போல,

நமது தூய்மையான, நற்கருணை உணவினால் வலிமை பெற்ற நமது ஆன்மா

 அதே பரிசுத்த ஆவியின் வல்லமையுடன் விண்ணக சாம்ராஜ்யத்திற்கே உரிமை பெறும்.

அதற்கு அப்போஸ்தலர்கள் தங்கள் உலக வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த வலைகளை விட்டு விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தது போல,

நாம் நமது உலக பற்றுகளை முற்றிலுமாக துறந்துவிட்டு இயேசுவை பின்பற்ற வேண்டும்.

உலக ஆசை உள்ளவர்களால் விண்ணக வாழ்வுக்கு ஆசைப்பட முடியாது.

உலக வலைகளிலிருந்து விடுதலை பெறுவோம்,

பரிசுத்த ஆவியின் துணையோடு விண்ணுலக வாழ்வுக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment