Wednesday, January 11, 2023

"இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."(மாற்.2:5)

"இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."
(மாற்.2:5)

"தாத்தா, திமிர்வாதக்காரன் பாவ மன்னிப்பு கேட்பதற்காக வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு வீட்டிற்குள் இறங்கவில்லை.

திமிர்வாதம் குணமாகவே இறங்கினான்.

இயேசு அவன் கேளாமலேயே ஏன் அவனது பாவங்களை மன்னித்தார்?"

"'ஒருவன் ஒரு மருத்துவரிடம் மருத்துவ உதவி கேட்டு சென்றால்,

அவர் குணமாக்க வேண்டியது நோயையா அல்லது நோயாளியையா?"

"உங்கள் கேள்வி புரியவில்லை.

நோயை குணமாக்கத்தான் மருத்துவரிடம் செல்வார்கள்.

இதில் என்ன சந்தேகம்?"

"'நோயைக் குணமாக்க நோய் தானே வரவேண்டும். ஏன் நோயாளி வருகிறான்?"

"தாத்தா, நோய் இருப்பவன் தான் நோயாளி.

நோயைக் குணமாக்கத்தான் அவன் மருத்துவரிடம் வருகிறான்.

அவன் வராவிட்டால் எப்படி அவனது நோயைக் குணமாக்க முடியும்?"

"'உண்மையிலேயே எனது கேள்வி உனக்குப் புரியவில்லை.

இப்போது உனக்கு நோய் ஒன்றுமில்லை. நீ மருத்துவரிடம் போவாயா?"

"ஏதாவது வேலை இருந்தால் போவேன்."

"'போவது யார்?"

''நான்."

"'நீ மருத்துவ உதவிக்காக போகவில்லை."

"ஆமா."

"'உனக்கு நோய் வந்தால்?"

"மருத்துவ உதவிக்காக போவேன்."

"'யாருக்கு மருத்துவ உதவி?

"எனக்கு?"

"'மருத்துவ உதவி தேவைப்படுவது யாருக்கு?"

"எனக்கு என்று சொல்லிவிட்டேன்."

"'அதாவது நோய்க்கு அல்ல, உனக்கு.

 உனக்கு மருத்துவ உதவி தேவை, ஆகவே போகிறாய்."

"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை."

"'மருத்துவரிடம் செல்லும்போது குணமாக வேண்டியது நோயாளி. அவனுக்கு தான் மருத்துவம் பார்க்க வேண்டும். நோய்க்கு அல்ல."

"நோயைக் குணமாக்காமல் அவன் எப்படி குணமாவான்?"


"'அவன் குணமாகும் போது நோய் போய்விடும்."

"தாத்தா, நோய் போன பிறகு தானே அவன் குணமடைவான்."

"'தவறு. அவனது உடல் சரியானால்தான் நோய் போகும்.".
'
"நீங்கள் சொல்வது புரியவில்லை."

"'ஒருவன் போதிய நேரம் தூங்காததால் தலைவலி வருவதாக வைத்துக்கொள்வோம்.

தலைவலி எப்போது போகும்?"

"அவன் போதிய நேரம் தூங்கினால் போகும்.

தலைவலிக்கு காரணம் தூங்காமை.

தூங்கிவிட்டால் தலைவலி போய்விடும்."

"'இப்போ உனக்குப் புரிந்திருக்கும்.

உடல் சரியானால், அதாவது உடலுக்கு போதிய தூக்கம் கிடைத்தால், நோய் போய்விடும்.

தலை வலிக்கு காரணம் தூங்காமை.

காரணம் போகும்போது தான் விளைவு போகும்."

"அதாவது அதிகம் சாப்பிடுவதால் வயிற்று வலி வருவது போல.

சாப்பாட்டைக் குறைத்தால் வயிற்று வலி வராது.

இப்போ புரிகிறது. குணமாக வேண்டியது நோயாளிதான்.

நோயாளி குணம் ஆகிவிட்டால், 

அதாவது சரியான உடல் நிலையை அடைந்தால், 

நோய் போய்விடும்."

"'இப்போ கேட்கப்போவது மிக முக்கியமான கேள்வி.

இயேசு மருத்துவப் பணி செய்ய உலகிற்கு வந்தாரா?"

"இல்லை. நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய உலகிற்கு வந்தார்."

"'நீ இயேசுவைப் பற்றி புரிந்து கொள்ளவில்லை.

இயேசு மருத்துவப் பணி செய்யவே உலகிற்கு வந்தார்."

"நீங்கள் ஞானோபதேசம் படிக்கவில்லையா?"

"'படித்ததனால் தான் சொல்கிறேன்.

பாவம் என்பது நமது ஆன்மாவை பிடித்திருக்கும் நோய்.

நமது ஆன்மாவை பாவ நோயிலிருந்து குணமாகவே இயேசு உலகிற்கு வந்தார்.

நன்கு கவனி, ஆன்மாவைக் குணமாக்க.

அவர் ஒரு ஆன்மீக மருத்துவர்."

"பாவம் போனால் தானே ஆன்மா குணமாகும்!"

"'பாவம் செய்தவன் பாவத்திற்காக மனஸ்தாபப் பட்டால்தான் பாவம் போகும்..

மனஸ்தாபப் படும்போது ஆன்மா குணமடையறது.

மனஸ்தாபப்பட வேண்டியது ஆன்மா. மனஸ்தாபம் வந்த வினாடி பாவம் போய்விடும்."

"அதாவது மனஸ்தாபம் வந்தால் பாவம் போய்விடும்.

பாவம் போனபின் மனஸ்தாபம் வராது."

"'பாவம் போன பின்பும் வந்த மனஸ்தாபம் ஆன்மாவின் இருக்கும். அது அடுத்து பாவம் வராதபடி பார்த்துக் கொள்ளும்.

மனஸ்தாபம் வர வேண்டும் என்றால் கடவுள் மேல் அன்பு இருக்க வேண்டும்.

அன்பு இருக்க வேண்டும் என்றால் விசுவாசம் இருக்க வேண்டும்.

விசுவாசம் இருக்கும் ஆன்மாவில் இறைவனின் மீது அன்பு இருக்கும்.

இறைவன் மீது அன்பு இருக்கும் இடத்தில் பாவம் இருக்காது.

பாவத்திலிருந்து விடுதலை பெற முதலில் இருக்க வேண்டியது விசுவாசம்.

விசுவாசம் தானாக வராது.

அது இறைவனால் தரப்படும் நன்கொடை,

Faith is God's gift.

இயேசு ஒவ்வொரு நோயாளியும் குணமாக்கும் போது அவனுக்கு முதலில் நன்கொடையாக கொடுப்பது விசுவாசத்தை.

விசுவாசம் அவனிடம் பாவங்களுக்கான மனஸ்தாபத்தை கொடுக்கும்.

மனஸ்தாபம் இயேசுவிடமிருந்து பாவ மன்னிப்பை பெற்றுக் கொடுக்கும்.

தொடர்ந்து இயேசு அவனுக்கு உடல் நோயிடமிருந்து விடுதலை கொடுப்பார்.

நன்கு கவனி. திரும்பவும் சொல்கிறேன்.

முதலில் விசுவாசம்,

 அடுத்து மனஸ்தாபம்,

 அடுத்து பாவமன்னிப்பு,

 அடுத்து உடல் நோயிலிருந்து விடுதலை.

ஒவ்வொரு நோயாளிக்கும் முதலில் ஆன்மீக விடுதலையை கொடுத்த பின்பு தான் உடலுக்கான விடுதலையை கொடுத்தார்."

"இப்போது புரிகிறது

 ஒவ்வொரு முறையும் இயேசு குணமளிக்கும் போது

 "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று," என்று சொல்வது வழக்கம்."

"' இதன் அடிப்படையில் தான்,

இயேசு முதலில்
 அவர்கள் விசுவாசத்தைக் கண்டு .

திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள்
 மன்னிக்கப்பட்டன" என்றார்.

அடுத்து,

"நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ" என்றார்."

"சரி, தாத்தா, அவர் தானே விசுவாசத்தை நன்கொடையாக கொடுத்தார்.

பிறகு ஏன்,

"அவர்கள் விசுவாசத்தைக் கண்டு." என்று எழுதப்பட்டிருக்கிறது?"

"'இயேசு யாரை மீட்க உலகிற்கு வந்தார்?"

"உலகில் உள்ள எல்லா பாவிகளையும் மீட்க உலகிற்கு வந்தார்."

"'அப்படியானால் உலகில் உள்ள எல்லா பாவிகளுக்கும் முதலில் விசுவாசத்தை கொடுத்திருக்க வேண்டும் அல்லவா!"

"ஆமா. அப்புறம் ஏன் கொடுக்கவில்லை?"

"' தவறான கேள்வி.
அவர் ஒவ்வொரு மனிதனுக்கும் விசுவாசத்தை கொடுக்கிறார்.

ஆனால் அதை ஏற்றுக் கொள்வதோ ஏற்றுக்கொள்ளாததோ அந்த மனிதனின் விருப்பம்.

 ஒவ்வொரு மனிதனுக்கும் பரிபூரண சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

அவர் கொடுத்த விசுவாசத்தை ஏற்றுக் கொள்ளாதது அவருடைய தப்பு அல்ல,

ஏற்று கொள்ளாதவர்களின் தப்பு.

ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்திவிட்டு, வீட்டிற்கு சென்று நடத்தப்பட்ட பாடத்தை படியுங்கள் என்கிறார்.

படிக்கிறவன் தேர்வில் வெற்றி பெறுகிறான்.

பழிக்காதவன் தோல்வி அடைகிறான்.

மாணவன் தேர்வில் தோல்வியடைவது ஆசிரியருடைய தவறு அல்ல. 

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம்

 நற்செய்தியினை அறிவியுங்கள்.

 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்."

என்று ஆண்டவர் அப்போஸ்தலர்களிடம் கூறினார்.

நற்செய்தி அறிவிக்கப்படும்போது விசுவாசம் கொடுக்கப்படுகிறது.

ஏற்றுக் கொள்பவன் விசுவசிக்கிறான்..

விசுவசிக்கிறவன் ஞானஸ்நானம் பெறுகிறான்.

ஞானஸ்நானம் பெற்று  நற்செய்தியின் படி (விசுவசித்ததற்கு ஏற்ப)

வாழ்பவன் மீட்பு அடைகிறான்."

"இயேசு 3 ஆண்டுகள் பொது வாழ்வின் போது அவர் செய்து வந்தது ஆன்மாக்களுக்கான மீட்பு பணி என்பது நன்கு புரிகிறது.

"அவர் நன்மை செய்துகொண்டே சென்றார்." (அப். 10:38) என்றால்

'அவர் எங்கு சென்றாலும் ஆன்மாக்களை மீட்டுக்கொண்டு  சென்றார் என்பதுதான் பொருள்' என்று நினைக்கிறேன்."

'''Correct. அவர் உலகிற்கு வந்தது ஆன்மாக்களை மீட்பதற்காக தானே.

நாமும் உடல் நலமில்லாதிருக்கும்போது 

உடல் நலத்திற்காக இறைவனிடம் வேண்டுமுன்

 நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து பாவமன்னிப்பு பெற்று ஆன்மீக குணம் அடைய வேண்டும்,

அதன் பிறகு தான் ஆண்டவர் நமக்கு உடல் நலத்தை கொடுப்பார்.

ஆன்மீக நலனுக்காகத் தான் நாம் உலகில் வாழ்கிறோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment