Thursday, June 23, 2022

"இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள். ஏனெனில், அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது:" (மத். 7:13)

"இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள். ஏனெனில், அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது:" (மத். 7:13)

"தாத்தா, cell phone பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நமது வாழ்வை ஆக்கியிருக்கிறதா? அழித்திருக்கிறதா?"

",முதலில் என் கேள்விக்குப் பதில் சொல்லு. நாம் உண்ணும் உணவு நமக்கு நன்மை செய்திருக்கிறதா? தீமை செய்திருக்கிறதா?"

"அது நாம் உண்பதைப் பொறுத்திருக்கிறது.

சத்துள்ள உணவை அளவோடு உண்பவனுக்கு அது நன்மை செய்கிறது.

ருசி மட்டும் உள்ள உணவை அளவுக்கு மீறி உண்பவர்களை அது அழிக்கிறது."

",cell phone ம் அப்படித்தான்.

அதைப் பயன்படுத்துபவர்களுக்கு,

அதாவது பயனுள்ள விதத்தில் அதை உபயோகிப்பவர்களுக்கு அது நன்மை பயக்கிறது.

cell phone அவர்களைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு அழிவு நிச்சயம்."

"தாத்தா, நீங்கள் எதற்காகப் பயன்படுத்துகிறீர்கள்?"

", மற்றவர்களோடு செய்தி பரிமாறுவதற்கு மட்டும்.
(Only for communication)

நீ கேட்காமலே ஒன்று சொல்கிறேன்.

கடவுள் மனிதனை 
படைக்கு முன் அவன் வாழ்வதற்காக உலகத்தை படைத்தார் என்பது உனக்கு தெரியும்.

 மனிதனை எதற்காகப் படைத்தாரோ அதற்காக மட்டும் உலகத்தைப் 
பயன்படுத்துபவர்கள் விண்ணக அரசுக்குள் நுழைவார்கள்.

யாரையெல்லாம் உலகம் பயன்படுத்துகிறதோ அவர்களெல்லாம் அழிவை நோக்கி பயணிக்கிறார்கள்.


மனிதனை எதற்காகப் படைத்தாரோ அதற்காக மட்டும் வாழ ஒருவன் இறைவன் தந்த கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு, அவற்றுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

அப்படி நடப்பவன் உலகைத் தன் இஷ்டப்படி பயன்படுத்த முடியாது.

உடல் நல விதிகளுக்குக் கட்டுப் பட்டு வாழ்பவன் தன் இஷ்டப்படி இருக்கிறது என்பதற்காகச் சாப்பிட மாட்டான்.

திருமண வீட்டில் விதவிதமாக உணவு பரிமாறப் பட்டாலும், பரிமாறப் படுகின்றன என்பதற்காக அத்தனையையும் சாப்பிட மாட்டான்.

தன் உடல் நலனுக்கு ஏற்றதை மட்டுமே சாப்பிடுவான்.

இதற்கு நாவடக்கம் வேண்டும்.

உலகில் கோடிக்கணக்கான பொருட்கள் இருக்கின்றன.

இருக்கின்றன என்பதற்காக உபயோகிக்க அல்ல, இறைவன் நமக்குத் தந்த கட்டளைகளின்படி பயன்படுத்த.

சிங்கார வனத்தில் ஏராளமான பழமரங்கள் இருந்தன.

ஒரு மரத்தின் பழத்தை மட்டும் கடவுள் விலக்கி வைத்திருந்தார்.

கடவுளின் கட்டளையை மீறி நம் முதல் பெற்றோர் விலக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டனர்.

விளைவு நமக்குத் தெரியும்.

நமது முதல் பெற்றோரின் செயலிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இறைவன் தந்துள்ள கட்டளைகளுக்கு எதிரான செயல்களைச் செய்யக் கூடாது.

கட்டளைகளின்படி நடப்பதை இயேசு குறுகலான பாதை என்கிறார்.

கட்டளைகளைப் பற்றி கவலைபடாமல் விருப்பம் போல் வாழ்வதை அகலப் பாதை என்கிறார்.

குறுகலான பாதை விண்ணகத்தை நோக்கிச் செல்கிறது.

அகலமான பாதை    
நரகத்தை நோக்கிச் செல்கிறது.

நாம் எங்கே போக விரும்புகிறோமோ அங்கு செல்லும் பாதை வழியே நடக்க வேண்டும்."

"தாத்தா, குறுகலான பாதை வழியே நடப்பது அகலமான பாதை வழியாக நடப்பதை விட கடினமான இருக்கும் தானே?"

", விண்ணகப்பாதை ஆன்மீகப் பாதை.

அகலமான பாதை நரகத்தை நோக்கிச் செல்லும் சிற்றின்பப் பாதை.

குறுகலான பாதை விண்ணகம் நோக்கிச் செல்லும் சிலுவைப் பாதை.

சிலுவைப் பாதை என்றவுடன் ஆண்டவர் பட்ட பாடுகள் மட்டுமல்ல, அவற்றுக்குக் காரணமான அன்பும் நம் நினைவுக்கு வரவேண்டும்.

குறுகலான பாதை அன்பின் பாதை என்பது நினைவுக்கு வரவேண்டும்.

இறைவன் மேலுள்ள அன்பும், அயலான் மேலுள்ள அன்பும்தான் இயேசு நமக்குத் தந்த கட்டளைகள்.

குறுகலான பாதையில் நாம் சந்திக்கும் சிலுவைகள் எல்லாம் அன்பின் காரணமானவையாகையால்  

ஆன்மீக ரீதியாக மகிழ்ச்சியையே தரும்.

தாய்க்கு குழந்தையின் மீதுள்ள அன்பின் காரணமாக பேறுகால வேதனை உடல்ரீதியாக வலியைத் தந்தாலும், உள்ளத்தில் மகிழ்ச்சியையே தரும்.

நாம் நேசிப்பவர்களுக்காக எவ்வளவு துன்பப் பட்டாலும் அவை துன்பமாகவே தெரியாது.

அன்பு அவற்றை மறைத்து விடும்.

ஆகவே, அன்பினால் தூண்டப்பட்டு நாம் ஆன்மீக நடை போடும் குறுகலான பாதை ஆனந்தம் மிகுந்ததாகவே இருக்கும்.

கடினமாகத் தோன்றாது.

இயேசு தந்த இரண்டு கட்டளைகளும் மகிழ்ச்சிகரமானவையே.

அக்கட்டளைகளுக்கு கட்டுப்பட்ட வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

குறுகிய வாயில் வழியாக நாம் நித்திய பேரின்பத்துக்குள்தான் நுழைவோம்.''

''இயேசு காட்டிய வழியில் நடப்போம்.

இயேசுவோடே நித்திய வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment