Wednesday, June 29, 2022

"தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்."(மத்.16:25

"தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்."
(மத்.16:25


இயேசு நமது மீட்புக்காக சிலுவையை சுமந்து சென்று, அதிலே அறையப்பட்டு மரித்தார்.

அவருடைய சீடர்களாகிய நாமும் நமது சிலுவையைச் சுமந்து கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறார்.

நமக்கு ஏற்படும் துன்பங்களை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசுவுக்கு ஒப்புக் கொடுக்கும்போது அவை  சிலுவைகளாக மாறுகின்றன.

இயேசு சிலுவையில் தனது உயிரை விட்டார். 

நாமும் நாம் சுமக்கும் சிலுவையினால் உயிரை  விட நேருமோ என அஞ்சத் தேவையில்லை.

நம்மை விட்டு நமது உயிர் போகும் போது அது நேரடியாக செல்வது விண்ணகத்திற்கு தான்.

நமது உடலை விட்டு நமது ஆன்மா பிரிவதைத் தான், 

உயிர் பிரிதல் அல்லது மரணம் என்கிறோம்.

நாம் என்ற வார்த்தை குறிப்பது நமது ஆன்மாவைத்தான்.

இவ்வுலகில் உடல் ஆன்மா சேர்மானம் நிரந்தரமானது அல்ல.

என்றாவது ஒருநாள் நமது ஆன்மா உடலைப் பிரிந்துதான் ஆக வேண்டும்.

அதைத் தவிர்க்க முடியாது.

அது இரண்டு விதமாகப் பிரியலாம்.

ஆண்டவருக்காக வாழ்ந்து பிரியலாம்.

நமக்காக மட்டும் வாழ்ந்தும் பிரியலாம்.

மனித வாழ்வில் துன்பங்களைத் தவிர்க்க முடியாது.

அவற்றை ஆண்டவருக்காக ஏற்றுக் கொண்டால் அவை சிலுவைகளாக மாறி, நமக்கு பேரின்ப வாழ்வைப் பெற்றுத் தருகின்றன.


இயேசுவின் பொருட்டுத் தன் உலகில் உயிரை இழப்பவன் அதைக் விண்ணுலகில் கண்டடைவான்.

இதைத்தான் ஆண்டவர்,

"என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்." என்கிறார்.

இறையருள் நிலையிலுள்ள ஆன்மா முடிவற்ற காலம் இறைவனோடு வாழக்கூடியது.

மரணத்தால் அதைக் கொல்ல முடியாது. மரணம் அதை மண்ணுலகிலிருந்து, விண்ணுலகிற்கு வழியனுப்பும்.

அங்கு இறைவனோடு என்றென்றும் வாழும்.


ஆண்டவரைப் பற்றி கவலைப் படாமல் துன்பப்பட்டால் அவற்றில் ஆன்மீக நலன் எதுவும் இல்லை.

சாவான பாவநிலையில் இறையருள் இல்லாதிருக்கும் ஆன்மாவை இறந்த (dead) ஆன்மா என்போம். 

ஒருவன் ஆண்டவருக்காக அல்லாமல் தனக்காக மட்டும் விருப்பம்போல் வாழ்ந்தால், 

அவனது ஆன்மா இறந்த நிலைமையிலேயே வாழ்ந்து, உடலை விட்டு பிரிந்த பின்பும் இறந்த நிலையிலே,

அதாவது, நரக நிலையில் என்றென்றும் இருக்கும்.

இதைத்தான் ஆண்டவர்,

''தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான்.'' என்கிறார்.

அதாவது, ஆண்டவருக்காக அதைத் தியாகம் செய்ய விரும்பாதவன் அதை என்னென்றும் இழந்துவிடுவான்.

ஆண்டவருக்காக மரிப்போம், என்றென்றும் அவரோடே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment