Monday, June 20, 2022

"ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."(மத். 6:33)

"ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத். 6:33)

", பேரப்புள்ள,   வழக்கமாக வந்தவுடனே நீதான் தாத்தான்னு அழைத்து பேச்ச ஆரம்பிப்ப. இப்ப வந்து மௌனமா உட்கார்ந்திருக்க. நான்தான்  பேரப்புள்ளைட்ட முதல்ல பேசவேண்டியிருக்கு."

"தாத்தா, பக்கத்து வீட்டுப் பையனை நினைத்தேன். பேச்சு எங்கேயோ ஓடிப்போய் விட்டது."

", என்ன விசயம்?"

"நான்காம் வகுப்புதான் படித்துக் கொண்டிருக்கிறான். School van ல பள்ளிக்கூடத்துக்குப் போய் வந்து கொண்டிருந்தான். ஒரு நாள் அப்பாவிடம், "பள்ளிக்கூடத்துக்குப் போய் வர ஒரு சைக்கிள் வாங்கித் தாங்கப்பா" என்றான். பள்ளிக்கூடத்துக்குப் போகிற பையன் கேட்டதால்  வாங்கிக் கொடுத்து விட்டார். இப்போது  சைக்கிளில் ஊரைச் சுற்றுவது மட்டுமே அவனது வேலை. வீட்டுப் பாடம் படிக்க நேரமில்லை."

", உன்னை நினைத்துப் பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது."

"நான் கவலைப் படுவது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா?"

", மற்றவரகள் பிரச்சினையில் இருப்பதை நினைத்து நீ கவலைப் படுகிறாயே, அந்த பிறர் அன்பை நினைத்து மகிழ்கிறேன்.

அந்தப் பையன் மட்டுமல்ல, நம்மிலும் அநேகம் பேர் அப்படித்தான் இருக்கிறார்கள்.

நான் சொல்வது புரிகிறதா?"

"புரிகிறது. தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று  அழைத்துக் கொள்பவர்களில் கூட பலர் ஆன்மீகக் காரியங்களை விட இவ்வுலகைச் சார்ந்த காரியங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்."

", அவர்களைப் பார்த்துதான் ஆண்டவர்,

'கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:'

என்று சொல்கிறார்.

பள்ளிக்கூடம் போகும் மாணவன் படிப்பில் காட்டும் ஆர்வத்தை விட விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவதுபோல,

நம்மில் பலர் ஞானகாரியங்களை விட இவ்வுலக காரியங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள்.

கோவிலுக்குப் போவது கூட இவ்வுலக காரியங்களில் வெற்றி பெற வேண்டுவதற்காகத்தானே.

பாவசங்கீர்த்தனம் செய்ய பங்குக் கோவிலுக்கு நடக்க முடியாதவர்கள் குழந்தை வரம் கேட்டு வேளாங்கண்ணிக்கு நடப்பார்கள்."

"நம்மை படைத்து உலகில் வாழ வைத்த கடவுளுக்கு இவ்வுலகில் வாழ உலக காரியங்களும் தேவை என்று தெரியும்.

நம்மைப் படைத்தவரை மட்டும் நாம் தேடினால் நாம் வாழ்வதற்கு வேண்டிய இவ்வுலக சம்பந்தப்பட்ட தேவைகள் அனைத்தையும் அவரே பூர்த்தி செய்வார்.

இவ்வுலகம் நாம் அவருக்காக வாழ்வதற்காகத்தானே.

ஆகவேதான் ஆண்டவர்,

'கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: 

இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.' என்றார்.

திருமண வீட்டுக்குத் திருமணத் தம்பதிகளை ஆசிர்வதிக்கச் சென்றால் அவர்கள் நமக்குச் சாப்பாடு தருவதில்லை?

நாமே செய்வதைக் கடவுள் செய்ய மாட்டாரா?

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தனது நற்செய்தியை கேட்க வந்தவர்களுக்கு அவரே உணவளித்தார்.

பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டுவதற்காக மட்டும் பைபிள் வாசிக்கக் கூடாது.

வாழ்வதற்காக பைபிள் வாசிக்க வேண்டும்.

நாம் நற்செய்தியை அறிந்து அதன்படி வாழ ஆரம்பித்தால்

நமது  உடல் சம்பந்தமான தேவைகளைக் கடவுளே பார்த்துக்கொள்வார்."

", நற்செய்தி,  செப வழிபாட்டுக்  கூட்டங்களுக்குப் போயிருக்கிறாயா?"

"போயிருக்கிறேன்.''

",என்னவெல்லாம் செய்வார்கள்." 

"நற்செய்தி அறிவிப்பார்கள்.

பாவசங்கீர்த்தனம் கேட்பார்கள்.

சுகமளிக்கும் செபம் செய்வார்கள்.

திருப்பலி நிறைவேற்றி, திருவிருந்து அளிப்பார்கள்."

", திருமண விழாக்களுக்குப் போயிருக்கிறாயா?"

"போயிருக்கிறேன்."

", அங்கு என்னவெல்லாம் செய்வார்கள்?"

" முதலில் கோவிலில் திருமணம் நடக்கும்.

அடுத்து திருமண மண்டபத்தில் வரவேற்பு நடக்கும்.

திருமண விருந்தும் நடக்கும்."

", மக்கள் அதிகம் இரசிப்பது எதை?"

"உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் சாப்பாட்டைத் தான். 

சாப்பாடு நன்றாக இருந்தால் திருமண விழா சிறப்பானதாக இருந்ததாகக் கூறுவார்கள்."

", நற்செய்தி செபக் கூட்டங்களில் மக்கள் அதிகம் விரும்புவது எதை?"

"சுகமளிக்கும் செப வழிபாட்டை. அநேக மக்கள் அதற்காகவே செபக் கூட்டங்களுக்கு வருகிறார்கள்."

", ஆண்டவர் சொற்படி எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?"

"நற்செய்தி, பாவசங்கீர்த்தனம், திருப்பலி, திருவிருந்து ஆகிய ஆகிய ஆன்மீக வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு."

", உடல் நலத்திற்காக வேண்டிக் கொள்வதில் தவறில்லை.

ஆனால் ஆன்மீக சுகமளிக்கும் பாவசங்கீர்த்தனத்தை விட அதற்கு  அதிக முக்கியத்துவம் கொடுப்பது தான் தவறு.

ஆகவே, கடவுளின் அரசையடுத்த ஆன்மீகச் சுகத்தையும்,  

அதற்கு  ஏற்புடைய பாவமன்னிப்பையும் முதலில் தேடுவோம்.

தேவையான மற்றவையும் நமக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment