Thursday, June 30, 2022

"எழுந்து உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ"(மத்.9:6)

"எழுந்து உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ"
(மத்.9:6)

ஒருவன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கிறான் என்றால் அவன் ஆகாய விமானத்தில் பயணம் செய்திருக்கிறான் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம்.

இயேசு உலகிற்கு வந்தது மனித ஆன்மாவை பாவ நோயிலிருந்து மீட்க.

அவரது பணி முழுக்க முழுக்க ஆன்மீகப் பணி.

அவர் சென்ற இடமெல்லாம் மனிதர்களுடைய உடல் சம்பந்தப் பட்ட நோய்களைக் குணமாக்கினார்.

பார்வை தெரியாதவர்களுக்கு பார்வை அளித்தார்.

தொழு நோயாளிகளைக் குணமாக்கினார்.

நடக்க முடியாதவர்களை நடக்க வைத்தார்.

உடல் சார்ந்த இப் பணிகளில் எங்கே ஆன்மீகம் இருக்கிறது என்று கேட்கத் தோன்றும்.

பசித்தோர்க்கு உணவு அளிப்பது கூட ஒரு ஆன்மீகச் செயல், ஏனெனில் அதில் நூற்றுக்கு நூறு அடங்கியிருப்பது பிறர் அன்பு.

கடவுளின் படைப்புக்கும் பராமரிப்புக்கும் காரணம் அவரது அன்பு தானே!

இயேசு வியாதியஸ்தரைக் குணமாக்கிய ஒவ்வொரு புதுமைக்குப் பின்னும்

"உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்று இயேசுவே சொல்கிறார்.

ஒவ்வொரு புதுமையிலும் முதலில் விசுவாசம், அடுத்து பாவமன்னிப்பு, அடுத்துதான் புதுமை.

இயேசு புதுமை செய்யும்போது இவையெல்லாம் இருக்கின்றன 
என்றுதான் பொருள். 

திமிர்வாதக்காரனைக் குணமாக்கிய புதுமையில் இவை வெளிப்படையாகவே தெரிகின்றன.

"இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, ( விசுவாசம்)

 திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, தைரியமாயிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" . (பாவமன்னிப்பு)


திமிர்வாதக்காரனை நோக்கி - "எழுந்து உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார்.

7 அவன் எழுந்து தன் வீடு சென்றான்." (புதுமை)

வெளிப்படையாகச் சொல்லப் படாத புதுமைகளிலும் இவை இடம் பெற்றிருந்தன.

ஏனைனில் இயேசுவின் முக்கிய பணி பாவ மன்னிப்பு.

பாவ மன்னிப்புக்குத் தேவை விசுவாசம்.

அப்போஸ்தலர்கள் உலகெங்கும் அனுப்பப்பட்டதே விசுவசிப்பவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதே.

ஞானஸ்நானத்தின் நோக்கம் பாவ மன்னிப்புதானே!

நற் செய்தியை அறிவித்தது கூட விசுவாசத்தை அளிப்பதற்காகத்தான்.

நாம் இன்று புதுமைகளுக்காகப்
 புனிதர்களைத் தேடிப் போகிறோம்.

விசுவாசத்தோடு போகிறோமா?

பாவ மன்னிப்புப் பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?

கோடி புதுமை வரத்தர் புனித அந்தோனியாரைத் தேடி 13 செவ்வாய்க்கிழமைகள் பூசைக்குப் போகிறோம்.

மிகவும் நல்லது.

அந்நாட்களில் நமது விசுவாச வாழ்வு எப்படி இருககிறது,

பாவசங்கீர்த்தனம் செய்து பாவமன்னிப்பு பெற்றிருக்கிறோமா 

என்பது பற்றி சிந்தித்திருக்கிறோமா?


அல்லது,

புதுமையை மட்டும் எதிர்பார்க்கிறோமா?

முதல் இரண்டையும் செய்தால்
மூன்றாவது நடக்கும்.

புனிதர்கள் பக்தியே நம்மைப் பாவம் அற்ற நிலையில் விசுவாச வாழ்வு வாழ வைப்பதற்காகத்தான்.

அவர்களை நமது முன்மாதிரிகையாகக் கொண்டு அவர்களைப் போல இறைவனுக்குப் பிரியமானவர்களாக வாழ வேண்டும்.

ஆனால் நாம் அவர்களை இறைவன் நமது சொற்படி நாம் கேட்டதைத் தர Recommend செய்பவர்களாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

வேறு வார்த்தைகளில்,

நாம் இறைவன் சித்தப்படி நடப்பதற்குப் பதிலாக

அவரை நம் சித்தப்படி நடக்க வைக்க உதவி செய்யும்படி புனிதர்களை கேட்கிறோம்.

இறைவன் சித்தப்படி வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த புனித அந்தோனியாரைப் பார்த்து,

"அந்தோனியாரே, எனது சித்தம் விண்ணுலகில் நிறைவேற எனக்கு உதவியாக வாரும்."

என்று கேட்டால் அவர் மகிழ்ச்சி அடைவாரா?

"முதலில் விண்ணகத் தந்தையின் சித்தம் உன்னில் நிறைவேறட்டும்" 

என்றுதான் அவர் சொல்வார்.

அவர் சொல்வதைக் காது கொடுத்து கேட்க வேண்டும்.

அன்னை மரியாளைப் பார்த்து,

"அம்மா, எனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும், அதை எனக்குத் தர உமது மகனிடம் சொல்லும்."

என்று கேட்க வேளாங்கண்ணிக்கு நடக்கிறோம்.

அம்மா சொல்றாங்க,

"மகனே, நான் ஆண்டவருடைய அடிமை. என்னைப் போல நீயும் ஆண்டவருடைய அடிமையாக மாறி அவரது கட்டளைகளின்படி நட. உனக்கு என்ன தேவை என்று அவருக்குத் தெரியும். தேவையானதைக் கட்டாயம் தருவார்."

நாமும் புனிதர்களைப் போல விசுவசிப்போம், பாவமாசின்றி வாழ்வோம். புதுமைகளை இயேசுவின் கையில் விட்டு விடுவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, June 29, 2022

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன?" (மத்.16:26)

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன?" (மத்.16:26)

கடவுள் கோடிக்கணக்கான மனிதர்களைப் படைத்திருந்தாலும்
ஒவ்வொருவருக்கும் அவர் முழுமையாகச் சொந்தம்.

கடவுளைப் பங்கு போட முடியாது.

அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் அவருக்கு முழுமையாகச் சொந்தம்.

கடவுள் நமக்கும், நாம் அவருக்கும் முழுமையாகச் சொந்தமாக இருப்பதால்தான்,

அவருக்குச் சொந்தமான அனைத்து மக்களும் நமக்குச் சொந்தம்.

இந்த அடிப்படையில்தான் இறைவன் மேல் உள்ள அன்பும்,
பிறர் மேல் உள்ள அன்பும் பின்னிப் பிணைந்து ஒரே அன்பாக விளங்குகின்றன.

இறைவன் மேல் அன்பு இல்லாத இடத்தில், பிறர் அன்பு இருக்க முடியாது.

பிறர் அன்பு இல்லாத இடத்தில் இறைவன் மீது அன்பு இருக்க முடியாது.

இறைவனை உண்மையாகவே அன்பு செய்பவன், தனது பிறனையும் அன்பு செய்வான்.

இறைவனையும், பிறனையும் அன்பு செய்பவன், தன்னையும் உண்மையாகவே அன்பு செய்வான்.

ஏனென்றால் அவனும் கடவுளுடைய படைப்புதானே.

நம்மீது நாம் கொண்டுள்ள அன்பும், பிறர் மீது நாம் கொண்டுள்ள அன்பும், இறைவன்மீது நாம் கொண்டுள்ள அன்பிற்குள் அடங்கியிருக்கின்றன.

ஆகவேதான் இயேசு "உன்னை நேசிப்பது போல உன் பிறனையும் அன்பு செய்" என்றார்.

கடவுளை நேசிப்பவன் தன்னைக் கட்டாயம் நேசிப்பான்.

நம்மை நாம் நேசிப்பது என்றால் நமது ஆன்மாவை நேசிப்பது.

நமது ஆன்மா இறைவனால் படைக்கப்பட்டது.

இறைவனை நேசிப்பவன்தான் தன்னையும் உண்மையிலேயே அன்பு செய்வான்.

ஏன் "உண்மையிலேயே?"

இறைவனை நேசியாதவன் தன்னை, தனது ஆன்மாவை உண்மையிலேயே அன்பு செய்ய முடியாது.

அப்படியானால் நாத்திகர்கள் தங்களைத் தாங்களே நேசிக்கவில்லையா?

நேசிக்கவிலை.

யாராவது தங்களால் நேசிக்கப் படுபவர்களுக்கு கேடு வர விடுவார்களா?

யாராவது தன் மனைவி, மக்கள் சுகமில்லாதிருக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பானா?

மகிழ்ச்சியாக இருந்தால் என்ன அர்த்தம்?

அவன் அவர்களை நேசிக்கவில்லை என்று அர்த்தம்.

அப்படியானால் தனது ஆன்மா பாவ நோயினால் பீடிக்கப்பட்டிருக்கும்போது ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால்
என்ன அர்த்தம்?

தனது ஆன்மாவை, அதாவது தன்னை, நேசிக்கவில்லை என்று அர்த்தம்.

கடவுளை நேசியாததே பாவம்.
அந்த பாவம் ஆன்மாவில் இருக்கும்போது  மகிழ்ச்சியாக இருப்பவன் தனது ஆன்மாவை, அதாவது, தன்னை நேசிக்கவில்லை.

அவனுக்குதான் அது பாவம் என்று தெரியாதே என்று சொல்லலாம்.

ஆனால் தான் சுகமில்லாதிருக்கும் போது அதை அறியாதவன் பரிதாபத்துக்கு உரியவன்.

அவன் தன்னை சுகமாக்க முயற்சி எடுக்க மாட்டான்.

தனது அழிவுக்குத் தானே காரணமாக இருப்பவன் பரிதாபத்துக்கு உரியவன்தானே!

இயேசு கொடுத்த இரண்டு அன்புக் கட்டளைகளில் மூவர் வருவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை (1) நேசி.

உன்னை (2) நீ நேசிப்பதுபோல உனது அயலானையும் (3) நேசி.

ஆக அன்பிற்குள் அடங்கியிருப்பவர்கள் : கடவுள், நமது அயலான், நமது ஆன்மா.


கடவுளை நேசிப்பவன்தான் அயலானையும், தனது ஆன்மாவையும் நேசிப்பான்.

தனது ஆன்மாவை நேசிப்பவன் அதைப் பாவத்தில் விழவிட மாட்டான்.

தனது ஆன்மாவைப் பாவத்தில் விழவிடுபவன் தனது நித்திய அழிவிற்குத் தானே காரணமாகிறான்.

ஆண்டவர் கேட்கிறார்:

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன?"

ஒருவன் இந்த உலகத்திற்கே அதிபதி ஆகிவிட்டாலும்,

அவனது ஆன்மா பாவ நிலையில் இருந்தால்,

அதாவது நித்திய நரகில் விழக் கூடிய நிலையில் இருந்தால்,

அவன் உலக அதிபதியாய் இருப்பதனால் என்ன பயன்?

கடவுளையும், பிறனையும், தன்னுடைய ஆன்மாவையும் உண்மையிலேயே நேசிப்பவன் தான் நித்திய பேரின்ப வாழ்வுக்கு உரியவன்.

அகில உலக அதிபதியாய் இருப்பதனால் மட்டும் ஒருவன் நித்திய பேரின்ப வாழ்வுக்கு உரியவன் அல்ல.

ஒருவன் அகில உலகுக்கும் சொந்தக்காரனாக இருந்தாலும்,

உலகில் எந்த பொருளுக்கும் சொந்தக்காரனாக இல்லாவிட்டாலும்,

அவனது ஆன்மா கடவுளுக்கு ஏற்றபடி இருந்தால்தான் அவனுக்கு விண்ணக வாழ்வு கிடைக்கும்.

ஆகவே நமக்கு இந்த உலகம் முக்கியம் அல்ல.

நமது ஆன்மா இறைவனுக்கு ஏற்றபடி வாழ்வதுதான் முக்கியம்.

ஆகவே நமது ஆன்மா பாவத்தில் விழாதபடி பார்த்துக் கொள்வோம்.

இறைவனுக்காக வாழ்வோம்,
இறைவனோடு வாழ்வோம், இவ்வுலகிலும், விண்ணுலகிலும்.

லூர்து செல்வம்.

"தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்."(மத்.16:25

"தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்."
(மத்.16:25


இயேசு நமது மீட்புக்காக சிலுவையை சுமந்து சென்று, அதிலே அறையப்பட்டு மரித்தார்.

அவருடைய சீடர்களாகிய நாமும் நமது சிலுவையைச் சுமந்து கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறார்.

நமக்கு ஏற்படும் துன்பங்களை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசுவுக்கு ஒப்புக் கொடுக்கும்போது அவை  சிலுவைகளாக மாறுகின்றன.

இயேசு சிலுவையில் தனது உயிரை விட்டார். 

நாமும் நாம் சுமக்கும் சிலுவையினால் உயிரை  விட நேருமோ என அஞ்சத் தேவையில்லை.

நம்மை விட்டு நமது உயிர் போகும் போது அது நேரடியாக செல்வது விண்ணகத்திற்கு தான்.

நமது உடலை விட்டு நமது ஆன்மா பிரிவதைத் தான், 

உயிர் பிரிதல் அல்லது மரணம் என்கிறோம்.

நாம் என்ற வார்த்தை குறிப்பது நமது ஆன்மாவைத்தான்.

இவ்வுலகில் உடல் ஆன்மா சேர்மானம் நிரந்தரமானது அல்ல.

என்றாவது ஒருநாள் நமது ஆன்மா உடலைப் பிரிந்துதான் ஆக வேண்டும்.

அதைத் தவிர்க்க முடியாது.

அது இரண்டு விதமாகப் பிரியலாம்.

ஆண்டவருக்காக வாழ்ந்து பிரியலாம்.

நமக்காக மட்டும் வாழ்ந்தும் பிரியலாம்.

மனித வாழ்வில் துன்பங்களைத் தவிர்க்க முடியாது.

அவற்றை ஆண்டவருக்காக ஏற்றுக் கொண்டால் அவை சிலுவைகளாக மாறி, நமக்கு பேரின்ப வாழ்வைப் பெற்றுத் தருகின்றன.


இயேசுவின் பொருட்டுத் தன் உலகில் உயிரை இழப்பவன் அதைக் விண்ணுலகில் கண்டடைவான்.

இதைத்தான் ஆண்டவர்,

"என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்." என்கிறார்.

இறையருள் நிலையிலுள்ள ஆன்மா முடிவற்ற காலம் இறைவனோடு வாழக்கூடியது.

மரணத்தால் அதைக் கொல்ல முடியாது. மரணம் அதை மண்ணுலகிலிருந்து, விண்ணுலகிற்கு வழியனுப்பும்.

அங்கு இறைவனோடு என்றென்றும் வாழும்.


ஆண்டவரைப் பற்றி கவலைப் படாமல் துன்பப்பட்டால் அவற்றில் ஆன்மீக நலன் எதுவும் இல்லை.

சாவான பாவநிலையில் இறையருள் இல்லாதிருக்கும் ஆன்மாவை இறந்த (dead) ஆன்மா என்போம். 

ஒருவன் ஆண்டவருக்காக அல்லாமல் தனக்காக மட்டும் விருப்பம்போல் வாழ்ந்தால், 

அவனது ஆன்மா இறந்த நிலைமையிலேயே வாழ்ந்து, உடலை விட்டு பிரிந்த பின்பும் இறந்த நிலையிலே,

அதாவது, நரக நிலையில் என்றென்றும் இருக்கும்.

இதைத்தான் ஆண்டவர்,

''தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான்.'' என்கிறார்.

அதாவது, ஆண்டவருக்காக அதைத் தியாகம் செய்ய விரும்பாதவன் அதை என்னென்றும் இழந்துவிடுவான்.

ஆண்டவருக்காக மரிப்போம், என்றென்றும் அவரோடே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, June 28, 2022

"போ பின்னாலே, சாத்தானே." (மத்.16; 23)

"போ பின்னாலே, சாத்தானே."
 (மத்.16; 23)

யாரைப் பார்த்து ஆண்டவர்,

"போ பின்னாலே, சாத்தானே."
என்றார்?

சில நிமிடங்களுக்கு முன்பு எந்த இராயப்பரைப் பார்த்து ஆண்டவர்,

" யோனாவின் மகன் சீமோனே, நீ பேறுபெற்றவன்."

"உன் பெயர் "பாறை." இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."

"வானகத்தின் திறவுகோல்களை உனக்குக் கொடுப்பேன்."

என்றெல்லாம் சொன்னாரோ, அதே இராயப்பரைப் பார்த்துதான்,

"போ பின்னாலே, சாத்தானே." என்றார்.

இராயப்பர் முதன்முதலில் இயேசுவைப் பார்க்க வந்தபோதே,

"நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார்."

( கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள்.)

இயேசு உயிர்த்த பின்

"என் ஆட்டுக்குட்டிகளை மேய்"
"என் ஆடுகளைக் கண்காணி"
"என் ஆடுகளை மேய்."

என்றெல்லாம் கூறி,

நல்ல ஆயனாகிய இயேசு தனது ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை இராயப்பரிடம் ஒப்புவித்தார்,

அதாவது,

தான் நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இராயப்பரை நியமித்தார்.

அந்த இராயப்பரை எந்த சூழ்நிலையில் ஆண்டவர் 
"சாத்தானே" என்று அழைத்தார்?

"இயேசு தாம் யெருசலேமுக்குச் சென்று 

மூப்பர், மறைநூல் அறிஞர், தலைமைக்குருக்கள் இவர்கள் கையால் பாடுகள் பல படவும்,

 கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும் எனத் தம் சீடருக்கு விளக்கத் தொடங்கினார்.

22 இராயப்பர் அவரைத் தனியாக அழைத்து, 

"ஆண்டவரே, ஐயோ! இது வேண்டாம். இஃது உமக்கு நேராது" என்று அவரைக் கடிந்துகொண்டார்.


23 அவர் திரும்பி இராயப்பரிடம், "போ பின்னாலே, சாத்தானே,

 நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய். ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே."   என்றார்.
(மத்.16:21-23)

நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக பாடுகள் பட்டு மரணிப்பதற்காகவே இயேசு மனிதராகப் பிறந்தார்.

அதுவே கடவுளுடைய (பரிசுத்த தம திரித்துவத்தின்) சித்தம்.

இயேசுவின் மீது கொண்ட அன்பின் காரணமாக இராயப்பர் இயேசுவின் மரணத்திற்கு எதிராக ஆலோசனை கொடுத்தார்.

(ஆண்டவரே, ஐயோ! இது வேண்டாம்.)

சாத்தான் தான் கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக ஆலோசனை கொடுக்கக் கூடியவன்.

சாத்தானின் ஆலோசனையைக் கேட்டு தான் மனிதன் பாவம் செய்தான்.

ஆகவே, கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக ஆலோசனை கொடுத்த இராயப்பரை 'சாத்தானே' என்று இயேசு அழைத்தார்.

இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

கத்தோலிக்கத் திருச்சபையில் 
இராயப்பருக்கு மேலான பதவி வகித்த மனிதர் யாருமில்லை.

யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும்,
இறைவனுடைய சித்தத்திற்கு எதிராக செயல்படுபவர்கள்,

சாத்தானின் சித்தப்படி செயல்படுகிறார்கள்.

ஆண்டவர் யாருடைய பதவியை வைத்தும் அவர்களை மதிப்பிடுவதில்லை.

இறைவனுடைய சித்தப்படி எந்த அளவிற்கு செயல்படுகிறார்களோ அதை வைத்தே அவர்களை  மதிப்பிடுகிறார்.

உலகியலில் உயர் பதவி வகிப்பவர்களின் தவறுகளை யாரும் கண்டு கொள்வதில்லை.

இறைவன் நமது பதவியைப் பார்ப்பதில்லை.

நமது செயல்களின் நோக்கத்தை மட்டுமே பார்க்கிறார்.

ஆகவே, இறைவன் சித்தப்படியே சிந்திப்போம், பேசுவோம், செயல்படுவோம்.

"விண்ணகத் தந்தையே,

 உம்முடைய சித்தம் விண்ணகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக."

என்று தினமும் செபிக்கிறோம்.

இயேசு பாடுகள் பட்டு, மரணித்து நம்மை மீட்க வேண்டும் என்பதுதான் என்பதுதான் விண்ணகத் தந்தையின் சித்தம்.

நாம் மீட்பு அடைய வேண்டுமென்றால்

இயேசுவைப் போலவே சிலுவையைச் சுமக்க வேண்டும் என்பதுவே அவருடைய சித்தம்.

இறைவன் சித்தப்படியே நடப்போம்.

லூர்து செல்வம்.

Monday, June 27, 2022

"நரிகளுக்கு வளைகள் உண்டு: வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" (மத்.8:20)

"நரிகளுக்கு வளைகள் உண்டு: வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" 
(மத்.8:20)

இந்த பிரபஞ்சத்தையே படைத்தவர் கடவுள்.

இருப்பவை அனைத்தும் அவருக்கே சொந்தம்.

இருப்பவை அனைத்தும் அவராலேயே இருக்கின்றன.

அவர்தான் சொல்கிறார்,

"நரிகளுக்கு வளைகள் உண்டு: வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" 

நரிகளையும், வானத்துப் பறவைகளையும் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களையும்,

பெரிய விலங்குகளிலிருந்து கண்ணுக்குத் தெரியாத Virus வரை அனைத்தையும் படைத்து

அவற்றை வாழவைத்துக் கொண்டிருப்பவர் அவர்.

அவர் தனக்குத்  தலைசாய்க்கவும் இடமில்லை என்று சொல்கிறார்.

ஏன்?

இறைமகன் நமது பாவங்களுக்கு பரிகாரமாக பாடுகள் பட்டு மரிப்பதற்காக மனுவுரு எடுத்தபோது,

தேவ சுபாவத்தில் சர்வ வல்லவரான அவர்

மனித சுபாவத்தில் சக்தி இல்லாமையைத் தேர்ந்து கொண்டார்.

தேவ சுபாவத்தில் துவக்கமும், முடிவும் இல்லாத அவர்,

மனித சுபாவத்தில் பிறப்பையும், மரணத்தையும் தேர்ந்து கொண்டார்.

தேவ சுபாவத்தில் துன்பமே பட முடியாத அவர்,

மனித சுபாவத்தில் துன்பத்தையே வாழ்வாகத் தேர்ந்து கொண்டார்.

தேவ சுபாவத்தில் சர்வத்துக்கும் உரிமையாளரான அவர்,

மனித சுபாவத்தில் ஏழ்மையையே
வாழ்வாகத் தேர்ந்து கொண்டார்.

ஏழ்மையையே வாழ்வாகத் தேர்ந்து கொண்டதனால்தான்

ஒரு ஏழைக் கன்னியின் வயிற்றில் மனுவுரு எடுத்தார்.

ஒரு ஏழை தச்சுத் தொழிலாளியைத் தனது வளர்ப்புத் தந்தையாகத் தேர்ந்து கொண்டார்.

ஒரு  மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.

முப்பது வயது வரை தச்சுத் தொழிலையே செய்து வாழ்ந்தார்.

தனது பொது வாழ்வின்போது தலை சாய்க்கக்கூட இடமில்லாது வாழ்ந்தார்.

நாம் இயேசுவின் சீடர்கள்.
குருவைப் போல் வாழ்பவன்தான் சீடன்.

நாம் நமது குருவைப் போல வாழ்கின்றோமா?

கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.

அவருக்குத தலை சாய்க்கக்கூட இடமில்லை.

நமக்கு?

அவர் நடந்தே பயணித்தார்.

நாம்?

அவர் கிடைத்த இடத்தில், கிடைத்ததைச் சாப்பிட்டார்.

நாம்? 

அவர் ஏழையாகவே வாழ்ந்தார்.

நாம்?

காலம் மாறிவிட்டது என்று காலத்தின் மேல் பழியைப் போட்டுவிட்டு தப்பிக்க ஆசைப்படாமல் சிந்திப்போம்.

அவர் பாவமே செய்ய முடியாதவர்.

பாவிகளாகிய நமக்காக ஏழையாக வாழ்ந்தார்.

நாம் பாவிகள்

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஏழ்மையில்  வாழ வேண்டாமா?

குருவைப்போல் வாழாதவர்கள் அவருடைய சீடர்கள் அல்ல.

ஆகவே அவரைப்போல் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, June 25, 2022

"நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" (மத். 8:13)

"நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" (மத். 8:13)

",பேரப்புள்ள, இயேசு வியந்து தம்மைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கி, 

"இஸ்ராயேலில் யாரிடமும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."

என்று யாருடைய விசுவாசத்தைப் பாராட்டினார்? ஏன்?"

"நூற்றுவர தலைவனின் விசுவாசத்தைப் பாராட்டினார்.

ஏனெனில், இயேசுவின் வல்லமையில் மற்றவர்களை விட அதிக விசுவாசம் வைத்திருந்தான்.

மிகுந்த தாழ்ச்சி உள்ளவனாகவும் இருந்தான். ஆகவே இயேசு அவனைப் பாராட்டினார்."

",இயேசுவின் வல்லமையில் மற்றவர்களை விட அதிக விசுவாசம் வைத்திருந்தான் என்று உனக்கு எப்படித் தெரியும்?"


"அவன் ஆண்டவரை நோக்கி,

ஆண்டவரே, என் ஊழியன் திமிர்வாதத்தால் வீட்டில் கிடந்து மிகுந்த வேதனைப்படுகிறான்" என்று மட்டும்தான் சொன்னான்.

வந்து குணமாக்குங்கள் என்று கேட்கவில்லை

ஆண்டவர்தான் அவனை நோக்கி, "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்

ஆனால் அவன்

"ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன். 

ஆனால், ஒரு வார்த்தை சொன்னால் போதும்: என் ஊழியன் குணமடைவான்." என்றான்.

"உண்டாகுக" என்றே ஒரே வார்த்தையில் உலகைப் படைத்தவர் இயேசு.

அந்த வல்லமையில் அவனுக்கு விசுவாசம் இருந்தது.

மற்றவர்கள் தங்களுக்கு வேண்டிய உதவியை மட்டும் கேட்டனர்.

நூற்றுவர் தலைவனோ அவரது வல்லமையை அறிக்கையிட்டு,

அதன் அடிப்படையில் உதவி கேட்டான்.

"ஆண்டவரே நீர் சர்வ வல்லமை உள்ளவர்.

நீர் விரும்பியதை நிறைவேற்ற உமது வார்த்தை மட்டுமே போதும்.

சர்வ வல்லமை உள்ள நீர் என் வீட்டிற்கு வர ஒன்றுமே இல்லாத நான் தகுதி அற்றவன்.

ஆகவே ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், எனது ஊழியன் குணமடைவான்"

என்று சொன்னான்.

மற்றவர்களுக்கும் இயேசுவின் வல்லமை மீது விசுவாசம் இருந்தது.

அதனால்தான் உதவி கேட்டனர்.

நூற்றுவர் தலைவன் அந்த விசுவாசத்தை வெளிப்படையாக, தாழ்ச்சியுடன் அறிக்கையிட்டான்.

அவன் பயன்படுத்திய வார்த்தைகளை நாமும் திவ்ய நற்கருணை வாங்கு முன் பயன் படுத்துகிறோம். 

"ஆண்டவரே, தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதி அற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், என் ஆன்மா குணமடையும்."

ஆண்டவர் மிகவும் பரிசுத்தர். நாம் பாவிகள். எவ்வளவு முயன்றாலும் அவரளவு பரிசுத்தம் அடைய நம்மால் முடியாது.

முற்றிலும் பரிசுத்தமான அவர் நமக்குள் வர நாம் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர்கள்.

தகுதியற்ற நமக்குள் இயேசு ஆசையோடு வருகிறார் என்றால் அதற்கு அவரது அளவு கடந்த அன்பே காரணம்."

"தாத்தா, 'நான் தகுதி அற்றவன்,' என்று கூறிக்கொண்டே நற்கருணை வாங்குகிறோமே,  
அது ஏன்?"

",நான் தகுதி அற்றவன்,' என்று கூறும்போது நமது உண்மையான நிலையை ஆண்டவரிடம் எடுத்துச் சொல்கிறோம்.

ஆனால் நம்மைப் படைத்த ஆண்டவரைத் தவிர நமக்கு வேறு புகலிடம் இல்லை.

கடவுளுக்கு நிகரான ஒருவரை அவராலே படைக்க முடியாது.

பரிசுத்தத்தனத்தில் அவருக்கு நிகராக நாம் ஆக முடியாவிட்டாலும்

நம்மைப் பாவ மாசு இல்லாதவர்களாக மாற்ற அவரால் முடியும்.

பாவ மாசு உள்ள யாரும் விண்ணகத்துக்குள் நுழைய முடியாது.

அதற்காகத்தான் உத்தரிக்கிற தலம்.

நாம் இறந்த பின் உத்தரிக்கிற தலத்தில் நமது பாவ மாசைக் கழுவிய பின்னரே விண்ணகத்துக்குள் நுழைய முடியும்.

பாவ மாசின்றி படைக்கப்பட்ட ஒரே நபர் அன்னை மரியாள் மட்டும்தான்.

'நீர் என் இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதி அற்றவன் என்று நாம் சொல்லும் போதே அதற்குள் இன்னொரு செபமும் இருக்கிறது.

'எனது ஆன்மாவைக் குணமாக்கி உம்மிடம் வரத் தகுதி உள்ளதாக மாற்றும்' என்ற செபம் அதில் இருக்கிறது."

"நமது ஆன்மாவை குணமாக்குவதற்காகத்தான் ஆண்டவர் பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார்.

'ஆண்டவரே என் ஆன்மாவைக் குணமாக்க சிலுவைகளைத் தாரும்' என்ற செபமும் அதில் இருக்கிறது என்று நிகைக்கிறேன்."


",நீ கூறுவது உண்மை. நமக்கு வரும் துன்பங்களை பாவப் பரிகாரமாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கலாம்.

நமது அன்னை மரியாள் எந்த பாவமும் செய்யாவிட்டாலும் அவளுக்கும் ஏராளமாக துன்பங்கள் வந்தன.

அவள் அவற்றை நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக் கொடுத்தாள்.

தாய் என்ற முறையில் பிள்ளைகளாகிய நமக்காக அவள் துன்பங்களை அனுபவித்தாள்.

நமக்காகத்தான் தனது திருமகனை இறைத் தந்தைக்கு ஒப்புக்கொடுத்தாள். 

நோயாளி மருத்துவரிடம் சென்று தனது நோயைப் பற்றி பேசினால் அவன் சுகமாக விரும்புகிறான் என்று அர்த்தம்.

ஆன்மீக நோயாளிகளாகிய நாம் ஆன்மீக மருத்துவரிடம் சென்று நம்மைப் பற்றி கூறும்போது நாம் சுகமாக விரும்புகிறோம் என்றுதான் அர்த்தம்.

எத்தனை முறை திவ்ய நற்கருணை உட்கொண்டிருப்போமோ

அத்தனை முறை நாம் சுகமாக விரும்புகிறோம் என்பதை ஆண்டவரிடம் கூறியிருப்போம்.

மருத்துவரை பார்த்தால் மட்டும் போதாது. அவர் கொடுக்கும் மருந்தை சாப்பிட வேண்டும்.

 ஆண்டவரிடம் நம் ஆசையைக் கூறிவிட்டு நாம் குணமாக முயற்சி எடுத்திருக்கிறோமா?

நமது துன்பங்களைச் சிலுவைகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமா?

அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுத்திருக்கிறோமா?

அல்லது சொல்வதைக் கிளிப்பிள்ளை மாதிரி சொல்கிறோமா?

கிளிப்பிள்ளைக்குத் தான் சொல்வது என்னவென்று தெரியாது."

"உண்மைதான், தாத்தா. இனியாவது புரிந்து சொல்வோம்.

புரிந்து சொன்னால் திவ்ய நற்கருணை வாங்குவதற்கு முன்னால் நாம் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்வோம்."

லூர்து செல்வம்.

Friday, June 24, 2022

"நல்ல மரமெல்லாம் நல்ல பழம் கொடுக்கும்: தீய மரமோ தீய பழம் கொடுக்கும்:" (மத். 7:17)

"நல்ல மரமெல்லாம் நல்ல பழம் கொடுக்கும்: தீய மரமோ தீய பழம் கொடுக்கும்:" (மத். 7:17)

", பேரப்புள்ள, உனது சிந்தனைக்கு ஒரு கேள்வி.

ஆன்மீகம் பற்றி மட்டுமே பேசும் ஆண்டவர், மரங்களைப் பற்றியும், பழங்களைப் பற்றி பேசக் காரணம் என்ன?

அவை ஆன்மீகப் பொருட்களா?"

"தாத்தா, நமக்கு தெரியாத விஷயங்களை புரிய வைப்பதற்காக தெரிந்த விஷயங்களை ஒப்புமையாக கூறுவது ஆண்டவரது வழக்கம்.

"போலித் தீர்க்கதரிசிகள்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள் என்று கூறிய ஆண்டவர்

போதிக்க வருபவர்கள் நல்லவர்களா, போலிகளா என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை விளங்க வைக்க இந்த. ஒப்புமையைக் கூறுகிறார்.

ஒரு மரம் நல்லதா, மோசமானதா என்பதை அது தரும் பழங்களிலிருந்து கண்டு பிடிக்க முடியும்.


அதே போதிப்பவர்களின் போதனையிலிருந்தும், சாதனையிலிருக்கும் அவர்கள் அசலா, போலியா என்பதைக் கண்டு கொள்ளலாம்.

ஆண்டவர் போலிப் போதகர்களை
ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு நம்மிடம் வரும் ஓநாய்களுக்கு ஒப்பிடுகிறார்.

இயேசுவின் தோலைப் போர்த்திக்
கொண்டு வருபவர்கள் எல்லாம் உண்மையான இயேசுவைத் தருபவர்கள் அல்ல. 

இயேசுவை இயேசுவாக ஏற்றுக் கொண்டு வாழ்பவர்கள் தான் உண்மையான இயேசுவை நமக்கு தர முடியும்.   

அவர்கள் (போலி போதகர்கள்) வைத்திருப்பது பைபிளே அல்ல. பைபிள் என்ற பெயரில் வைத்திருக்கும் ஒரு புத்தகம்.

கத்தோலிக்க திருச்சபையிடம் இருப்பது தான் உண்மையான பைபிள்"

",இயேசுவின் தோலைப் போர்த்திக்
கொண்டு வருபவர்கள் என்று சொன்னாயே. அதை விளக்க முடியுமா?"

"அதை நீங்கள் நீங்கள்தான் விளக்க வேண்டும்."

", மனுவுரு எடுத்த இறைமகன் இயேசு

மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, மன்னிப்பதற்காக தன்னையே சிலுவையில் பலியாக்கினார்.

பலிப் பொருளாகிய தன்னை மனிதர்களுக்கு உணவாகத் தருவதற்காக திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

அப்பத்தையும், இரசத்தையும் தனது உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி உலகம் முடியும் மட்டும் வாழும் மக்களுக்கு உணவாக அளிப்பதற்காக குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

இதைத்தான் நமது குருக்கள் தினமும் திருப்பலியின்போது செய்து வருகிறார்கள்.

 திவ்விய நற்கருணை மூலமாக இயேசு நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இயேசு குருக்களுக்கு மக்களின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுத்தார்.

(பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

23 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:)

பகிர ஆசித்த தன்னுடைய  அதிகாரங்களைப் பதிர்ந்து கொண்ட மறு இயேசுகளாகிய அப்போஸ்தலர்களைத்தான் இயேசு தனது நற்செயதியைப் போதிக்க உலகெங்கும் அனுப்பினார்

"விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

19 நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,

20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

அவர்களுடைய வாரிசுகள் தான் நமது குருக்கள், மறு இயேசுகள்.

கத்தோலிக்க திருச்சபையின் குருக்கள் மட்டும்தான் ஆண்டவரின் அதிகாரப் பூர்வமான நற்செய்தி அறிவிப்பாளர்கள்.

கத்தோலிக்க திருச்சபைக்கு வெளியே உள்ள, பைபிள் என்ற பெயரில் ஒரு புத்தகத்துடன் உள்ள போதகர்கள்

உண்மையான கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.

அவர்களிடம் திவ்ய நற்கருணையோ, குருத்துவமோ, பாவங்களை மன்னிக்கும் அதிகாரமோ இல்லை.

அவர்களிடம் உண்மையான கிறிஸ்து இல்லை.

ஆகவே கிறிஸ்துவின் தோல் மட்டும் போர்த்தியவர்கள்.

ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய்கள்.

போலித் தீர்க்கதரிசிகள்.

அவர்களுடைய போதனையில் திவ்ய நற்கருணையில் வாழும் இயேசு இல்லாததிலிருந்தே இதை நாம் அறிந்து கொள்ளலாம்."

"தாத்தா, அவர்களும் இயேசுவின் பெயரால் தானே வேண்டுகிறார்கள்.''


", அவர்கள் வேண்டும் இயேசு திவ்ய நற்கருணையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசு அல்ல.

தனது குருக்கள் மூலம் மக்களின் பாவங்களை மன்னித்துக் கொண்டிருக்கும் இயேசு அல்ல."

"அவர்கள் பயன்படுத்துவது பைபிள் என்னும் பெயரில் ஒரு புத்தகம் என்று ஏன் சொன்னீர்கள்?"

", இறைவன் தந்திருப்பது ஒரு பைபிள்தான். கத்தோலிக்க திருச்சபைதான் பைபிளை உலகுக்குக் கொடுத்தது.

ஆனால் பிரிவினை சகோதரர்களிடம் இருப்பது அந்த பைபிள் அல்ல.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பிரிவினை சகோதரர்கள் நடத்தும் நற்செய்திக் கூட்டங்களுக்குச் சென்று, தங்களது உண்மையான விசுவாசத்தை இழந்து விடக் கூடாது.

நமது குருக்களுக்கு மட்டும்தான்

 பாவமன்னிப்பு அளிக்கவும்,

 திருப்பலி நிறைவேற்றவும்,

 திவ்ய நற்கருணையை நமக்கு ஆன்மீக உணவாக அளிக்கவும்  

அதிகாரம் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது."

போலித் தீர்க்கத்தரிசிகள் பற்றிக் கூறும்போது ஆண்டவர் சொல்கிறார்:

"இவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள்: 

உள்ளுக்கோ பறித்துச் செல்லும் ஓநாய்கள்."

எதற்காக ஆட்டுத் தோலை போர்த்திக் கொண்டு வருகிறார்கள்?

நம்மிடமுள்ள ஆடுகளை களவு செய்துகொண்டு போவதற்காக.

நமது ஜெப கூட்டங்களுக்கு வரும் விசுவாசிகள்

போலித் தீர்க்கத்தரிசிகளின் கவர்ச்சிகரமான அழைப்புகளால் ஈர்க்கப்பட்டு அவர்களுடைய நற்செய்தி கூட்டங்களுக்கும் சென்று 

நமது கத்தோலிக்க விசுவாசத்திற்கு பங்கம் விளைவித்து கொண்டிருக்கிறார்களே!

ஏன் போகின்றீர்கள்?  என்று கேட்டால் அங்கேயும் இயேசுதானே இருக்கிறார் என்று பதில் சொல்லி விடுகிறார்கள்.

 பாவசங்கீர்த்தனம் இல்லாத,

திருப்பலி இல்லாத

திவ்ய நற்கருணை ஆண்டவர் இல்லாத
இடத்தில் நமக்கு என்ன வேலை?

அவர்களுடைய கவர்ச்சியான வார்த்தைகளில் மயங்கி அங்கு சென்று தங்கள்  கத்தோலிக்க விசுவாசத்தை இழந்து விடாதபடி  நம்மவர்களைக் காப்பது நமது கடமை."

லூர்து செல்வம்.

Thursday, June 23, 2022

"இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள். ஏனெனில், அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது:" (மத். 7:13)

"இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள். ஏனெனில், அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது:" (மத். 7:13)

"தாத்தா, cell phone பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நமது வாழ்வை ஆக்கியிருக்கிறதா? அழித்திருக்கிறதா?"

",முதலில் என் கேள்விக்குப் பதில் சொல்லு. நாம் உண்ணும் உணவு நமக்கு நன்மை செய்திருக்கிறதா? தீமை செய்திருக்கிறதா?"

"அது நாம் உண்பதைப் பொறுத்திருக்கிறது.

சத்துள்ள உணவை அளவோடு உண்பவனுக்கு அது நன்மை செய்கிறது.

ருசி மட்டும் உள்ள உணவை அளவுக்கு மீறி உண்பவர்களை அது அழிக்கிறது."

",cell phone ம் அப்படித்தான்.

அதைப் பயன்படுத்துபவர்களுக்கு,

அதாவது பயனுள்ள விதத்தில் அதை உபயோகிப்பவர்களுக்கு அது நன்மை பயக்கிறது.

cell phone அவர்களைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு அழிவு நிச்சயம்."

"தாத்தா, நீங்கள் எதற்காகப் பயன்படுத்துகிறீர்கள்?"

", மற்றவர்களோடு செய்தி பரிமாறுவதற்கு மட்டும்.
(Only for communication)

நீ கேட்காமலே ஒன்று சொல்கிறேன்.

கடவுள் மனிதனை 
படைக்கு முன் அவன் வாழ்வதற்காக உலகத்தை படைத்தார் என்பது உனக்கு தெரியும்.

 மனிதனை எதற்காகப் படைத்தாரோ அதற்காக மட்டும் உலகத்தைப் 
பயன்படுத்துபவர்கள் விண்ணக அரசுக்குள் நுழைவார்கள்.

யாரையெல்லாம் உலகம் பயன்படுத்துகிறதோ அவர்களெல்லாம் அழிவை நோக்கி பயணிக்கிறார்கள்.


மனிதனை எதற்காகப் படைத்தாரோ அதற்காக மட்டும் வாழ ஒருவன் இறைவன் தந்த கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு, அவற்றுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

அப்படி நடப்பவன் உலகைத் தன் இஷ்டப்படி பயன்படுத்த முடியாது.

உடல் நல விதிகளுக்குக் கட்டுப் பட்டு வாழ்பவன் தன் இஷ்டப்படி இருக்கிறது என்பதற்காகச் சாப்பிட மாட்டான்.

திருமண வீட்டில் விதவிதமாக உணவு பரிமாறப் பட்டாலும், பரிமாறப் படுகின்றன என்பதற்காக அத்தனையையும் சாப்பிட மாட்டான்.

தன் உடல் நலனுக்கு ஏற்றதை மட்டுமே சாப்பிடுவான்.

இதற்கு நாவடக்கம் வேண்டும்.

உலகில் கோடிக்கணக்கான பொருட்கள் இருக்கின்றன.

இருக்கின்றன என்பதற்காக உபயோகிக்க அல்ல, இறைவன் நமக்குத் தந்த கட்டளைகளின்படி பயன்படுத்த.

சிங்கார வனத்தில் ஏராளமான பழமரங்கள் இருந்தன.

ஒரு மரத்தின் பழத்தை மட்டும் கடவுள் விலக்கி வைத்திருந்தார்.

கடவுளின் கட்டளையை மீறி நம் முதல் பெற்றோர் விலக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டனர்.

விளைவு நமக்குத் தெரியும்.

நமது முதல் பெற்றோரின் செயலிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இறைவன் தந்துள்ள கட்டளைகளுக்கு எதிரான செயல்களைச் செய்யக் கூடாது.

கட்டளைகளின்படி நடப்பதை இயேசு குறுகலான பாதை என்கிறார்.

கட்டளைகளைப் பற்றி கவலைபடாமல் விருப்பம் போல் வாழ்வதை அகலப் பாதை என்கிறார்.

குறுகலான பாதை விண்ணகத்தை நோக்கிச் செல்கிறது.

அகலமான பாதை    
நரகத்தை நோக்கிச் செல்கிறது.

நாம் எங்கே போக விரும்புகிறோமோ அங்கு செல்லும் பாதை வழியே நடக்க வேண்டும்."

"தாத்தா, குறுகலான பாதை வழியே நடப்பது அகலமான பாதை வழியாக நடப்பதை விட கடினமான இருக்கும் தானே?"

", விண்ணகப்பாதை ஆன்மீகப் பாதை.

அகலமான பாதை நரகத்தை நோக்கிச் செல்லும் சிற்றின்பப் பாதை.

குறுகலான பாதை விண்ணகம் நோக்கிச் செல்லும் சிலுவைப் பாதை.

சிலுவைப் பாதை என்றவுடன் ஆண்டவர் பட்ட பாடுகள் மட்டுமல்ல, அவற்றுக்குக் காரணமான அன்பும் நம் நினைவுக்கு வரவேண்டும்.

குறுகலான பாதை அன்பின் பாதை என்பது நினைவுக்கு வரவேண்டும்.

இறைவன் மேலுள்ள அன்பும், அயலான் மேலுள்ள அன்பும்தான் இயேசு நமக்குத் தந்த கட்டளைகள்.

குறுகலான பாதையில் நாம் சந்திக்கும் சிலுவைகள் எல்லாம் அன்பின் காரணமானவையாகையால்  

ஆன்மீக ரீதியாக மகிழ்ச்சியையே தரும்.

தாய்க்கு குழந்தையின் மீதுள்ள அன்பின் காரணமாக பேறுகால வேதனை உடல்ரீதியாக வலியைத் தந்தாலும், உள்ளத்தில் மகிழ்ச்சியையே தரும்.

நாம் நேசிப்பவர்களுக்காக எவ்வளவு துன்பப் பட்டாலும் அவை துன்பமாகவே தெரியாது.

அன்பு அவற்றை மறைத்து விடும்.

ஆகவே, அன்பினால் தூண்டப்பட்டு நாம் ஆன்மீக நடை போடும் குறுகலான பாதை ஆனந்தம் மிகுந்ததாகவே இருக்கும்.

கடினமாகத் தோன்றாது.

இயேசு தந்த இரண்டு கட்டளைகளும் மகிழ்ச்சிகரமானவையே.

அக்கட்டளைகளுக்கு கட்டுப்பட்ட வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

குறுகிய வாயில் வழியாக நாம் நித்திய பேரின்பத்துக்குள்தான் நுழைவோம்.''

''இயேசு காட்டிய வழியில் நடப்போம்.

இயேசுவோடே நித்திய வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, June 22, 2022

"உங்களுக்குப் பிறர் என்னென்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்."(மத். 7:12)

"உங்களுக்குப் பிறர் என்னென்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்."
(மத். 7:12)

"தாத்தா, 'நேற்று ஏன் வரவில்லை, என்ன நடந்தது' என்று கேளுங்கள்."

",நேற்று ஏன் வரவில்லை, என்ன நடந்தது''

"நேற்று வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்தபோது, சாலையின் ஓரத்தில் ஒருவன் படுத்துக் கிடந்தான். வருவோர் போவோர் அவனைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். யாரும் அவனை எழுப்பவில்லை.

நான் அருகில் சென்று பார்த்தபின்புதான் அவன் படுத்திருக்கவில்லை, குடி போதையில் விழுந்து கிடந்தான் என்று தெரிந்தது.

பார்ப்பதற்கு ஒரு வசதியில்லாத குடிகாரன் போல் தெரிந்தது.

நாம் அவன் நிலையில் இருந்தால் மற்றவர்கள் நமக்கு உதவ வேண்டும் என்று எண்ணியிருப்போம்.

 நான் அவனுக்கு உதவி செய்யத் தீர்மானித்தேன்.

அப்போது அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தி, படுத்திருப்பவனை மருத்துவ மனைக்குக் கொண்டு போக வேண்டும் என்றேன்.

அவனும் நல்ல மனதுடன் அவனைத் தூக்கி ஆட்டோவில் கிடத்தினான்.

நான் அருகில் அமர்ந்து கொண்டேன்.

பக்கத்திலிருந்த அரசு மருத்துவ மனைக்கு ஆட்டோ சென்றது.

மருத்துவ மனையில் சேர்த்து விட்டேன்.

அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது என்னிடம் ஒரு பைசா கூட இல்லை என்று.

ஆட்டோகாரனிடம் என் நிலையை எடுத்துச் சொன்னேன்.

அவன் நல்லவன். என் நிலையைப் புரிந்து கொண்டான்.

ஏதாவது வேண்டுமா என்று கேட்டான்.

"வேண்டாம், உதவி செய்தமைக்கு நன்றி." என்று மட்டும் சொன்னேன்.

"கையில் பைசா இல்லாமல் என்ன செய்யப் போகிறாய்?" என்றான்.

"தேவைப்பட்டால் வீட்டிற்குச் சென்று அப்பாவிடம் வாங்கிக் கொள்வேன்." என்றேன்.

"தேவைப் பட்டால் கூப்பிடு" என்று தன் phone நம்பரைத் தந்து. விட்டுப் போய்விட்டான்.

கொஞ்ச நேரத்தில் குடிகாரன் எழுந்து விட்டான்.

நர்சுமார் என்னைப் பார்த்தார்கள். நான் என் நிலையைச் சொன்னேன்.

"நல்ல பையன். நீ கூட்டிவந்த ஆள் எழுந்து விட்டார், கூட்டிக் கொண்டு போ" என்றார்கள்.

 குடிகாரன் என்னைப் பார்த்து,

"ரொம்ப நன்றி தம்பி. இனி என் வாழ்நாளில் குடிக்க மாட்டேன். இது சத்தியம்." என்றான்.

நானும் நர்சுமாருக்கு நன்றி கூறிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

இதனால் தான் உங்களைப் பார்க்க வரவில்லை."

", நல்ல காரியம் செய்தாய். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்.''

"ஆனால் ஒன்றை கவனித்தீர்களா தாத்தா?

நான் உதவி செய்வதற்கு உதவி செய்த ஆட்டோக்காரன் நல்லவன்.

உதவி செய்யும்போது பணத்துக்கு
முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

 வழக்கமாக நன்கொடை எதிர்பார்க்கும் நர்சுகள் என் நிலையைப் பார்த்து எதுவும் கேட்க வில்லை.

குடிகாரன் கூட எங்கள் அன்பைப் பார்த்து திருந்தி விட்டான்.

நாம் நன்மை செய்ய ஆரம்பித்தால் நல்லவர்கள் எல்லோரும் உதவிக்கு வருவார்கள்."


",நமக்கு மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றோமோ அதை நாம் மற்றவர்களுக்கு செய்தால்

அது தனக்கே செய்யப்படுவதாக கடவுள் எடுத்துக்கொள்வார்.

அதற்கு அவர் தரும் சன்மானம் அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு.

இன்றைய உலகின் பிரச்சனையே மற்றவர்கள் நமக்கு என்ன செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ அதை மற்றவர்களுக்கு செய்வதுதான்.

ஏமாற்றுபவர்கள் அனைவரும் ஏமாற்றப்பட விரும்பாதவர்கள் தான்.

அரசியல்வாதிகள் ஓட்டுப் போடும் மக்கள் தங்களை ஏமாற்றி விடக் கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் அதிகாரம் கிடைத்தவுடன் ஓட்டுப் போட்ட மக்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள்.

மக்கள் தரும் பணம் நல்ல நோட்டா என்று பார்த்து வாங்கும் வியாபரிகள் கலப்படப் பொருள்களை விற்கலாமா?

பெற்றோர் தங்களை நன்கு வளர்த்து, தங்களை வசதியுடன் வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற பிள்ளைகள்,

வசதியான வாழ்க்கை கிடைத்தவுடன் 

அதற்குக் காரணமான பெற்றோரை மறந்து விடுகிறார்கள்.

பிள்ளைகள் தங்களை எப்படி பெற்றோர் காப்பாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ 

அப்படியே பெற்றோரையும் காப்பாற்ற வேண்டாமா? 

பைபிள் வசனங்களை வாசித்தால் மட்டும் போதுமா? அதன்படி நடக்க வேண்டாமா?

நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆசைப் படுகிறோமோ அதையே நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்."

"மற்றவர்கள் நமக்கு விரோதமாக ஏதாவது செய்து விட்டால் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

நாம் ஏதாவது தவறு செய்து விட்டால் மன்னிப்பு கேட்கிறோமா?

நாம் ஒருவரை ஒருவர் மன்னித்தால்தான் கடவுள் நம்மை மன்னிப்பார்."

",எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை
நாங்கள் மன்னிப்பதுபோல
எங்கள் குற்றங்களை மன்னியும்."

என்றுதான் நாம் தினமும் விண்ணகத் தந்தையிடம் வேண்டுகிறோம்.

நமது அயலான் நம்மை மன்னிக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். நாமும் நமது அயலானை மன்னிக்க வேண்டும்.

மன்னித்தால்தான் கடவுள் நம்மை மன்னிப்பார்."

''மக்கள் அனைவரும் நமது விண்ணகத் தந்தையால் படைக்கப் பட்டவர்கள்.

அந்த அடிப்படையில்தான் நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம்.

நம்மை நாம் நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிக்கிறோம்.

நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது போல மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

நாம் நன்றாக வாழ மற்றவர்கள் நமக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்படுவது போல மற்றவர்கள் நன்றாக வாழ நாமும் உதவுகிறோம்.

மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதையே நாம் மற்றவர்களுக்கு செய்கிறோம்.

இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நம் எல்லோரையும் படைத்தவர் ஒரே இறைவன்.

அவருடைய அன்பு என்னும் கயிறுதான் நாம் அனைவரையும் ஒன்றாக கட்டிப் போட்டிருக்கிறது.

இறையன்பும், அதில் பிறந்த பிறரன்புமே நமது வாழ்க்கை."

", வாழ்க்கை = அன்பு செய்தல்."

லூர்து செல்வம்.

Monday, June 20, 2022

"ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."(மத். 6:33)

"ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத். 6:33)

", பேரப்புள்ள,   வழக்கமாக வந்தவுடனே நீதான் தாத்தான்னு அழைத்து பேச்ச ஆரம்பிப்ப. இப்ப வந்து மௌனமா உட்கார்ந்திருக்க. நான்தான்  பேரப்புள்ளைட்ட முதல்ல பேசவேண்டியிருக்கு."

"தாத்தா, பக்கத்து வீட்டுப் பையனை நினைத்தேன். பேச்சு எங்கேயோ ஓடிப்போய் விட்டது."

", என்ன விசயம்?"

"நான்காம் வகுப்புதான் படித்துக் கொண்டிருக்கிறான். School van ல பள்ளிக்கூடத்துக்குப் போய் வந்து கொண்டிருந்தான். ஒரு நாள் அப்பாவிடம், "பள்ளிக்கூடத்துக்குப் போய் வர ஒரு சைக்கிள் வாங்கித் தாங்கப்பா" என்றான். பள்ளிக்கூடத்துக்குப் போகிற பையன் கேட்டதால்  வாங்கிக் கொடுத்து விட்டார். இப்போது  சைக்கிளில் ஊரைச் சுற்றுவது மட்டுமே அவனது வேலை. வீட்டுப் பாடம் படிக்க நேரமில்லை."

", உன்னை நினைத்துப் பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது."

"நான் கவலைப் படுவது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா?"

", மற்றவரகள் பிரச்சினையில் இருப்பதை நினைத்து நீ கவலைப் படுகிறாயே, அந்த பிறர் அன்பை நினைத்து மகிழ்கிறேன்.

அந்தப் பையன் மட்டுமல்ல, நம்மிலும் அநேகம் பேர் அப்படித்தான் இருக்கிறார்கள்.

நான் சொல்வது புரிகிறதா?"

"புரிகிறது. தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று  அழைத்துக் கொள்பவர்களில் கூட பலர் ஆன்மீகக் காரியங்களை விட இவ்வுலகைச் சார்ந்த காரியங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்."

", அவர்களைப் பார்த்துதான் ஆண்டவர்,

'கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:'

என்று சொல்கிறார்.

பள்ளிக்கூடம் போகும் மாணவன் படிப்பில் காட்டும் ஆர்வத்தை விட விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவதுபோல,

நம்மில் பலர் ஞானகாரியங்களை விட இவ்வுலக காரியங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள்.

கோவிலுக்குப் போவது கூட இவ்வுலக காரியங்களில் வெற்றி பெற வேண்டுவதற்காகத்தானே.

பாவசங்கீர்த்தனம் செய்ய பங்குக் கோவிலுக்கு நடக்க முடியாதவர்கள் குழந்தை வரம் கேட்டு வேளாங்கண்ணிக்கு நடப்பார்கள்."

"நம்மை படைத்து உலகில் வாழ வைத்த கடவுளுக்கு இவ்வுலகில் வாழ உலக காரியங்களும் தேவை என்று தெரியும்.

நம்மைப் படைத்தவரை மட்டும் நாம் தேடினால் நாம் வாழ்வதற்கு வேண்டிய இவ்வுலக சம்பந்தப்பட்ட தேவைகள் அனைத்தையும் அவரே பூர்த்தி செய்வார்.

இவ்வுலகம் நாம் அவருக்காக வாழ்வதற்காகத்தானே.

ஆகவேதான் ஆண்டவர்,

'கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: 

இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.' என்றார்.

திருமண வீட்டுக்குத் திருமணத் தம்பதிகளை ஆசிர்வதிக்கச் சென்றால் அவர்கள் நமக்குச் சாப்பாடு தருவதில்லை?

நாமே செய்வதைக் கடவுள் செய்ய மாட்டாரா?

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தனது நற்செய்தியை கேட்க வந்தவர்களுக்கு அவரே உணவளித்தார்.

பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டுவதற்காக மட்டும் பைபிள் வாசிக்கக் கூடாது.

வாழ்வதற்காக பைபிள் வாசிக்க வேண்டும்.

நாம் நற்செய்தியை அறிந்து அதன்படி வாழ ஆரம்பித்தால்

நமது  உடல் சம்பந்தமான தேவைகளைக் கடவுளே பார்த்துக்கொள்வார்."

", நற்செய்தி,  செப வழிபாட்டுக்  கூட்டங்களுக்குப் போயிருக்கிறாயா?"

"போயிருக்கிறேன்.''

",என்னவெல்லாம் செய்வார்கள்." 

"நற்செய்தி அறிவிப்பார்கள்.

பாவசங்கீர்த்தனம் கேட்பார்கள்.

சுகமளிக்கும் செபம் செய்வார்கள்.

திருப்பலி நிறைவேற்றி, திருவிருந்து அளிப்பார்கள்."

", திருமண விழாக்களுக்குப் போயிருக்கிறாயா?"

"போயிருக்கிறேன்."

", அங்கு என்னவெல்லாம் செய்வார்கள்?"

" முதலில் கோவிலில் திருமணம் நடக்கும்.

அடுத்து திருமண மண்டபத்தில் வரவேற்பு நடக்கும்.

திருமண விருந்தும் நடக்கும்."

", மக்கள் அதிகம் இரசிப்பது எதை?"

"உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் சாப்பாட்டைத் தான். 

சாப்பாடு நன்றாக இருந்தால் திருமண விழா சிறப்பானதாக இருந்ததாகக் கூறுவார்கள்."

", நற்செய்தி செபக் கூட்டங்களில் மக்கள் அதிகம் விரும்புவது எதை?"

"சுகமளிக்கும் செப வழிபாட்டை. அநேக மக்கள் அதற்காகவே செபக் கூட்டங்களுக்கு வருகிறார்கள்."

", ஆண்டவர் சொற்படி எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?"

"நற்செய்தி, பாவசங்கீர்த்தனம், திருப்பலி, திருவிருந்து ஆகிய ஆகிய ஆன்மீக வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு."

", உடல் நலத்திற்காக வேண்டிக் கொள்வதில் தவறில்லை.

ஆனால் ஆன்மீக சுகமளிக்கும் பாவசங்கீர்த்தனத்தை விட அதற்கு  அதிக முக்கியத்துவம் கொடுப்பது தான் தவறு.

ஆகவே, கடவுளின் அரசையடுத்த ஆன்மீகச் சுகத்தையும்,  

அதற்கு  ஏற்புடைய பாவமன்னிப்பையும் முதலில் தேடுவோம்.

தேவையான மற்றவையும் நமக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."

லூர்து செல்வம்.

Saturday, June 18, 2022

"உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்." (மத். 6:21)

"உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்." (மத். 6:21)

",ஏண்டா, பேரப்புள்ள, வந்த நேரத்திலிருந்து எதுவும் பேசாமல் எதையோ நினைத்துக் கொண்டிருக்கிறாய்?"

"என்னுடைய மனது இப்போது என்னிடம் இல்லை."

", எங்கே இருக்கிறது?"

"நேற்று நான் போட்டிருந்த சட்டைக்குள் இருக்கிறது. 

இன்று காலையில் சட்டை மாற்றும் போது நேற்று போட்டிருந்த சட்டைப் பைக்குள் வைத்திருந்த 50 ரூபாய் நோட்டை எடுக்க மறந்து விட்டேன்."

", அதற்கென்ன, சட்டை உனது வீட்டில்தானே இருக்கும்."

"வீட்டில்தான் இருக்கும், தாத்தா.
அம்மா அதை எடுத்து Washing machine க்குள் போட்டுவிடக் கூடாது.

வீட்டிற்குப் போய்விட்டு வந்து விடட்டுமா, தாத்தா?"

",சரி போய்விட்டு வா. அல்லது சட்டைப் பையை விட்டு வெளியே வர மாட்டாய்."

"தாத்தா, நல்ல வேளை நான் உடனே வீட்டுக்குப் போனேன்.

நான் போகும்போது அம்மா சட்டையை Washing machine க்குள் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

நான் சட்டையைப் பிடுங்கி ரூபாய் நோட்டை எடுத்துவிட்டேன்.

இந்தா பாருங்க அந்த ரூபாய்."

", பத்திரமாய் வச்சுக்கோ.

ஆனால் இன்றைக்கு வேறு எதையும் பற்றி பேச மாட்ட."

"இன்று காலையில் நான் வாசித்த பைபிள் வசனம் பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் இருந்தேன்.

அதை என்னுடைய ரூபாய் நோட்டு கெடுத்துவிட்டது."

",என்ன வசனம்?"

"உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்." 

", கெடுக்கவில்லை, பேரப்புள்ள, உதவி செய்திருக்கிறது.
   
நீ இங்கு இருந்தாய். உனது உள்ளம் சட்டைப் பைக்குள்தானே இருந்தது!"

"அது உண்மைதான், தாத்தா."

",இதைத்தான் நம் ஆண்டவர் ஆன்மீக ரீதியில் கூறினார்.

உனது ரூபாய் நோட்டு உனது உலகியல் ரீதியான செல்வம்."

"தாத்தா, நீங்கள் சொல்வது தவறு.

 ரூபாய் நோட்டு உலகியல் ரீதியான செல்வம்தான்.

ஆனால் எனது செல்வம் அல்ல."

", இது உன்னுடைய ரூபாய்தானே."

"என்னுடைய ரூபாய்தான். ஆனால் எனது செல்வம் அல்ல.

என்னுடைய செல்வம் நமது ஆண்டவரும், அவருடைய அருளும்தான்."


",Very good. நீ இப்படிச் சொல்கிறாயா என்பதைக் கண்டுபிடிக்கதான் நான் அப்படிச் சொன்னேன்.

 ஆன்மீகச் செல்வம்தான் நமது செல்வமாக இருக்க வேண்டும்.

நம்மிடம் உலகியல் பொருட்கள் இருக்கலாம். அவை நமது செல்வம் அல்ல

அவற்றைச் செல்வமாக ஏற்றுக் கொண்டால் நம்மிடம் ஆன்மீகச் செல்வம் இருக்க முடியாது."

"நமது செல்வம் எங்கு உள்ளதோ எங்கே உள்ளதோ அங்கேதான் மனதும் இருக்கும்.

நமது செல்வம் ஆண்டவரிடம் இருந்தால் நமது மனமும் அவரிடம் தான் இருக்கும்.

நமது மனது நிறைய ஆண்டவர் தான் இருப்பார்."

",நம்மிடம் உலகியல் பொருட்கள் இருந்தால்?"

"அவை, ஆண்டவருக்காக, அவரது சித்தத்தை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப் பட வேண்டிய பொருட்கள்.

தேவை உள்ளவர்களுக்கு உதவ வேண்டுமென்பது ஆண்டவரது சித்தம்.

அதை நிறைவேற்ற உலகியல் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.

பிறர் சிநேகப் பணிகளுக்காக உலகியல் பொருட்களைப் பயன்படுத்துவது இறைவனது அருளாகிய ஆன்மீகச் செல்வத்தை நாம் ஈட்டப் பயன்படும்.

நமது செல்வம் ஆண்டவராக இருக்கும்போது அவர் முழுவதும் நமக்கே, நாம் முழுவதும் அவருக்கே.

நமது வாழ்க்கை முழுவதும் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கே.

இறையன்பு பணிகளிலும், பிறரன்புப் பணிகளிலும் 

நமது இறைச் செல்வத்துடனே தீவிரமாக ஈடுபடுவோம் "

", Washing machine ல இருந்து காப்பாற்றிய 50 ரூபாய் நோட்ட என்ன செய்யப் போற?"

"அதை ஏதாவது ஒரு ஏழையைப் பசிப்பிணியிலிருந்து காப்பாற்றப் பயன்படுத்துவேன்."

", அதுவும் இறைப்பணிதான்.

நமது செல்வம் இறைவனே. நமது உள்ளம் முழுவதும் அவரிடமே இருக்க வேண்டும்.

இவ்வுலகப் பொருட்களை நமது செல்வமாகத் தேர்ந்தெடுத்தால் நம்மால் இறைவனை நினைக்க முடியாது.

இறைவன் வாழும் விண்ணுலகிற்குள் நுழையவும் முடியாது.

ஆகவே இறைவன் ஒருவரையே நமது செல்வமாகத் தேர்ந்தெடுப்போம்.

நமது உள்ளம் இறைவனுக்காக மட்டுமே.

லூர்து செல்வம்.

Friday, June 17, 2022

"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்." (மத்.6:11).

"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்." (மத்.6:11).

 "தாத்தா, ஒவ்வொரு மாதமும் நாம் ஈட்டும் சம்பளத்தைச் சிக்கனமாகச் செலவழித்து,

 வருங்காலத்தில் பிள்ளைகள் படிப்பிற்காகவும்,

முதிய வயதில் நமக்கு    உதவியாக இருப்பதற்காகவும் பணத்தை வங்கியில் போட்டு சேமிக்கின்றோமே,

 இது சரியா, தப்பா?" 

", ஏன் இந்தக் கேள்வி?"

"நமது ஆண்டவர் விண்ணகத் தந்தையை நோக்கி செபிக்கக் கற்றுத்தரும்போது 

"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்."

என்று செபிக்கக் கற்றுத்தந்தார்.

அதாவது அன்றன்றைய தேவைகளை அன்றன்று பூர்த்தி செய்யும்படி தந்தையைக் கேட்கச் சொன்னார். 

அன்றன்றைய தேவைகளை அன்றன்றே கடவுள் பூர்த்தி செய்தால், நாளைக்கான சேமிப்பு எதற்கு?"

", பேரப்புள்ள, ஆண்டவருடைய போதனைகள் பற்றி எந்தக் கேள்வி கேட்பதாகயிருந்தாலும் ஒரு அடிப்படை உண்மையை மனதில் வைத்துக் கொண்டு கேட்க வேண்டும்.

கடவுள் நம்மைப் படைக்கும் போது ஆன்மாவுடனும், உடலுடனும் படைத்தார். ஆன்மா கடவுளைப் போலவே ஆவி.

 உடல் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சடப்பொருள்.

உலகமும் சரி, அதிலிருந்து எடுக்கப்பட்ட உடலும் சரி ஆன்மாவின் ஆன்மீக வாழ்க்கைக்கு உதவியாய் இருக்கும்படி படைக்கப் பட்டன.

ஆன்மா அவற்றுக்காகப் படைக்கப் படவில்லை.

இயேசு மனிதனாக பிறந்தது ஆன்மாவை பாவத்திலிருந்து மீட்க.

நமது உடலைக் காப்பாற்ற அவர் பிறக்கவில்லை.

அவருடைய போதனைகள் அனைத்தும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவை.

அவற்றை உலக ரீதியாக எடுத்துக் கொண்டு நம்மை நாமே குழப்பிக் கொண்டிருக்க கூடாது.

உதாரணத்துக்கு,

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று அவர் சொன்னது நமது ஆன்மீக வாழ்க்கை சம்பந்தப்பட்ட உதவிகளைக் கேட்பதற்கு.

பண உதவி கேட்பதற்கு அல்ல.

அவர்  நம்மை படைத்தவர் என்ற முறையில் இவ்வுலகில் நாம்  வாழ்வது சம்பந்தப்பட்ட உதவிகளையும் கேட்கிறோம்.

அவை நமது ஆன்மீக வாழ்க்கைக்கு உதவியாக இருந்தால் மட்டுமே அவற்றை கடவுள் நமக்குத் தருவார்.

ஒரு வேலைக்கு விண்ணப்பித்து விட்டு அந்த வேலை நமக்கு கிடைக்க உதவி செய்யும்படி தந்தையை கேட்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

 அந்த உதவியைத் தந்தையிடம் கேட்பதில் தவறில்லை.

 ஆனால் அந்த வேலை நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவிகரமாக இருந்தால் மட்டுமே கடவுள் நமக்கு அதைத் தருவார்.

 ஆன்மீக வாழ்விற்கு இடைஞ்சலாக இருக்கும் பட்சத்தில் அதைத் தரமாட்டார்.

இது நாம் கேட்கும் எல்லா உதவிகளுக்கும் பொருந்தும்.

இயேசு நமக்குக் கற்பித்த செபம் முழுக்கமுழுக்க ஆன்மீகம் சம்பந்தப்பட்டது. 

அதை,

இறைப் புகழ்,

அன்றாட ஆன்மீக வாழ்வுக்கு தேவையான உதவிகளை கேட்டல்,

பாவ மன்னிப்பு மன்றாட்டு 

என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்."

"தாத்தா, கொஞ்சம் பொறுங்கள்.

முதலில் கடவுளைப் புகழ்கிறோம் - புரிகிறது.

மூன்றாவது பாவ மன்னிப்பு கேட்கிறோம் - புரிகிறது.

இரண்டாவது,

எங்கள் அன்றாட உணவை இன்று தாரும் - அது தான் புரியவில்லை."

",உனக்குப் புரியவில்லை என்பது எனக்கு புரிகிறது. அது உனது கேள்வியிலிருந்தே தெரிகிறது.

உணவு என்றால் தினமும் மூன்று முறை சாப்பிடும் உணவு மட்டுமல்ல.

நமது அன்றாட ஆன்மீக வாழ்க்கைக்குத் தேவையானவை."

"அப்போ, அது உடல் சம்பந்தப்பட்ட தேவைகளைக் குறிக்காதா?"

",நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் உடலும் ஆன்மாவுக்காகத்தான் என்று.

உடல் வாழ்ந்தால்தான் ஆன்மீக வாழ்வு வாழ முடியும்.

உடல் இறக்கும்போது உலகில் ஆன்மீக வாழ்வும் முடிந்து விடும்.

ஆன்மா மறுவுலக வாழ்வுக்குச் சென்று விடும்.

ஆகவே, நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவக்கூடிய உடல் சார்ந்த உதவிகளையும் கேட்கிறோம்."

" தாத்தா, என் கேள்வியை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.

ஏன் 'அன்றாட உணவு?"

", நாளைய உணவு இன்றே கிடைத்தாலும் அதை என்ன செய்வாய்?"

"நாளைக்குதான் சாப்பிடுவேன்."

",அப்போ அது நாளைக்கு கிடைத்தால் போதுமே."

"தாத்தா, வயலில் நெல் விளைகிறது. அது கடவுள் கொடுப்பது தான். வருடம் முழுவதற்கும் போதுமான நெல்லை வீட்டில் சேமித்து வைக்கிறோமா, இல்லையா?"

", வைக்கிறோம்."

"அது தவறா?"

", தவறு என்று நான் சொல்ல வில்லையே."

"நாம் அன்றாட உணவைத்தானே கேட்கிறோம். அன்றாடம் உணவு கிடைத்தால் நாம் ஏன் சேமித்து வைக்க வேண்டும்?"

", நான் முழுக்க முழுக்க ஆன்மீக ரீதியாகவே பேசிக் கொண்டிருக்கிறேன்.

நீ முழுக்க முழுக்க உலக ரீதியாகவே பேசிக் கொண்டிருக்கிறாய்.

உலகம் படைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன.

இன்றைக்கு தேவையான உணவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பூமிக்குள் இருந்தது என்பது உனக்குத் தெரியுமா?" 

"தெரியும். ஒரு அணுவைக் கூட புதிதாகப் படைக்கவில்லை.

முதலில் படைக்கப்பட்ட உலகம் தான் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது."

",பூமியின் வாழ்நாள் முழுவதும் அது தரவேண்டிய உணவு பூமிக்குள்ளே ஆரம்பம் முதல் சேமித்து வைக்கப் பட்டிருந்தாலும்

 அந்த உணவு அன்றன்று தான் தாவரங்கள் மூலமாக வெளியே வருகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்ட மாமரத்தின் வாரிசுதான் இன்றைய மாம்பழம்."

"அன்றன்றைக்குத் தேவையான உணவு அன்றன்று வரும்படி கடவுளே சேமித்து வைத்திருக்கிறார் என்று சொல்லுகிறீர்கள்."

", ஆமா. நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு அன்றன்றைக்கு என்ன வேண்டும் என்பதை துவக்கம் இல்லாத காலத்திலிருந்தே (From all eternity) கடவுள் தன் மனதில் திட்டமிட்டு வைத்திருக்கிறார்.

தமது திட்டத்தின்படி அன்றன்று வேண்டியதை அன்றன்று தருகிறார்.

இதற்குக் கடவுள் நம்மையே பயன்படுத்திக் கொள்கிறார்."

"நம்மையா? எப்படி?"

"அவருக்காகத்தான் நாம் சேமித்து வைக்கிறோம்."

"தாத்தா, நீங்கள் உங்களையே மறந்து பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

கர்த்தர் கற்பித்த செபம் முழுக்க முழுக்க ஆன்மீக சம்பந்தப் பட்டது என்றீர்கள்.

இப்போது உலகியல் ரீதியான சேமிப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்."

", பேரப்புள்ள, நான் கடவுளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்.

கடவுள் சம்பந்தப்பட்டது எல்லாம் ஆன்மீகம்தான்.

உலகம் - வெளகீகம்.
கடவுள் உலகைப் படைத்தார் - ஆன்மீகம்.

 கடவுள் அவரது படைப்புகளை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருகிறார்.

நாம் அவருடைய படைப்பு.

ஒவ்வொரு வினாடியும் நம்மைப் பராமரித்து வருகிறார்.

நாம் வாழ தேவையானவற்றைத் தருவது அவருடைய பராமரிப்பில் அடங்கும்.

குழந்தை தாயிடம் பால் கேட்டு அழுவது போல,

நாம் நமது பராமரிப்பிற்குத் தேவையானவற்றைக் கேட்டு கடவுளிடம் செபிக்கிறோம்.

தனக்குத் தாய் பால் தருவாள் என்று குழந்தைக்குத் தெரியும்.

ஆயினும் பசித்தவுடன் பால் கேட்டு அழும்.

நாமும் அப்படித்தான்.

நம்மைக் கடவுள் தினமும் பராமரித்து வருகிறார் என்று நமக்குத் தெரியும்.

ஆயினும் தினமும் பராமரிக்கும்படி கடவுளிடம் வேண்டுகிறோம்.

இந்த வேண்டுதலைத்தான்,

"எங்கள் அன்றாட உணவை இன்று தாரும்"
என்று வேண்டுகிறோம்.

"தந்தையே, நாங்கள் ஒவ்வொரு நாளும் ஆன்மீகத்தில் வளர என்னென்ன தேவையே அதைத் தினமும் தாரும்."
என்பதுதான் நமது வேண்டுதல்.

நாம் ஆன்மீகத்தில் வளர உலகப் பொருட்களும் தேவைப் படும்.

உடல் நலம் இல்லாமல் ஞாயிற்றுக் கிழமை பூசைக்குப் போக முடியுமா?

கையில் பணமில்லாமல் ஏழைகளுக்கு உதவ முடியுமா?

உடல் நலமும், பணமும் லௌகீகப் பொருட்களாய் இருக்கலாம்.

ஆனால் ஆன்மீக வாழ்வுக்கு உதவும்போது அவை ஆன்மீகப் பொருட்களாய் மாறி விடுகின்றன,

சாப்பாடு வாங்க உதவும் பணம் கோவில் உண்டியலில் போடும்போது காணிக்கையாய் மாறி விடுவது போல."

"அப்போ தினமும் தந்தையிடம் கேட்பது ஆன்மீக வாழ்விற்கு உதவத் தேவையானவற்றைத்தான்."

", ஆமா."

"நான் கேட்ட கேள்விக்குப் பதில்?"

", கேள்வியைத் திரும்ப கேளு."


"ஒவ்வொரு மாதமும் நாம் ஈட்டும் சம்பளத்தைச் சிக்கனமாகச் செலவழித்து,

 வருங்காலத்தில் பிள்ளைகள் படிப்பிற்காகவும்,

முதிய வயதில் நமக்கு    உதவியாக இருப்பதற்காகவும் பணத்தை வங்கியில் போட்டு சேமிக்கின்றோமே,

 இது சரியா, தப்பா?" 

", இயேசு பணத்தைச் சிக்கனமாகச் செலவழிப்பது பற்றியோ, 

வங்கியில் சேமிப்பது பற்றியோ 
ஒன்றும் கூறவில்லை.

அது உன் விருப்பம்.

பணத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவுவது பற்றி பேசியிருக்கிறார்.

உனது வரவிற்கு ஏற்ப 
 நீ கொடுக்கும் உதவியும் இருக்க வேண்டும்.

கொடுப்பது என்பது முக்கியம், எவ்வளவு என்பது உன் தாராள குணத்தைப் பொறுத்தது.

"கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். 

அமுக்கிக் குலுக்கிச் சரிந்துவிழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்.

 ஏனெனில், எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்."
(லூக்.6:38)

"தாத்தா, பத்து நாட்கள் நீடிக்கக்கூடிய ஒரு ஆன்மீக சேவையை இன்று ஆரம்பித்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

பத்து நாட்களும் செவ்வனே நடைபெற்று பத்தாவது நாள் வெற்றிகரமாக முடிவு பெறுவதற்கான அருள் வரத்தை ஆண்டவர் இன்றே தருவாரா,

அல்லது பத்து நாட்களில் அன்றன்றைக்குத் தேவையான அருள் வரத்தை அன்றன்று தான் தருவாரா?"

"பேரப்புள்ள, ஒவ்வொரு நேரம் கேள்வி கேட்கும்போதும் கடவுளைப் பற்றி பேசுகிறாய் என்பதை மறந்து விடுகிறாய்.

நாம் காலத்தில் வாழ்கிறோம்.
இன்று இருக்கும் நாம் நாளை இருப்போமா என்று கூற முடியாது.
ஆகவே நாம் வாழும் ஒவ்வொரு நாளும் அன்றன்றைக்கு உரிய உதவியைக் கேட்கிறோம்.

ஆனால் கடவுள் நித்தியர். எப்போதும் நம்மோடு இருப்பவர்.
எப்போதும் நம்மைப் பராமரித்துக் கொண்டு தான் இருப்பார்.

நமது சேவையின் ஒவ்வொரு நாளும் நம்மோடுதான் இருப்பார்.
ஒவ்வொரு நாளும் பராமரித்துக் கொண்டுதான் இருப்பார்.

பத்து நாட்கள் tour போவதாக இருந்தால் பத்து நாட்களுக்கும் செலவுக்கு வேண்டிய மொத்த பணத்தையும் வங்கியிலிருந்து எடுத்து விடுவோம்.

ஏனென்றால் வங்கி நம் கூட வராது.

ஆனால் நாம் போகும் இடமெல்லாம்  கடவுள் நம்மோடுதான் இருப்பார்.

எல்லா நாட்களிலும், எல்லா நேரமும் நாம் கடவுளோடு செப இணைப்பில்தான் இருப்போம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் அவர் நம்மைப் பராமரித்துக் கொண்டுதான் இருப்பார்."

"இப்போது புரிகிறது, தாத்தா.

கடவுள் எப்போதும் நம்மோடு தான் இருப்பார்.

நாம் எப்போதும் கடவுளுடைய சந்நிதானத்தில்தான் வாழ வேண்டும்."

லூர்து செல்வம்.

Thursday, June 16, 2022

"மனிதர் பார்க்க வேண்டுமென்று நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."(மத். 6:1)

"மனிதர் பார்க்க வேண்டுமென்று  நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."
(மத். 6:1)

"தாத்தா, நாம் நற்செயல்கள் செய்யும்போது அவற்றை மற்றவர்கள் பார்க்கும்படியாகச் செய்ய வேண்டுமா, அல்லது பார்க்காதபடி  செய்ய வேண்டுமா?"

",நற்செயல் என்றால் என்ன?"

"நமது விசுவாசம் செயல் வடிவம் பெறும் போது அதை நற்செயல் என்கிறோம்."

", கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு."

" இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொண்டு,

கடவுளை நம் தந்தையாக ஏற்றுக் கொண்டு,

அவருக்காக நமது வாழ்வை முழுவதும் மனதார அர்ப்பணிப்பதே விசுவாசம்.

நமக்குள் இருக்கும் இந்த அர்ப்பணம் சொல்லாக வெளிவரும்போது அதை நற்செய்தி அறிவித்தல் என்கிறோம்.

செயலாக வெளிவரும்போது அதை நற்செயல் என்கிறோம்.

மொத்தத்தையும் சேர்த்து விசுவாச வாழ்வு என்கிறோம்."

", மனதுக்குள் விசுவசிக்கிறோம்.

விசுவசிப்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கிறோம்.

நற்செயல்கள் செய்கிறோம். 

சில நற்செயல்களைக் கூறு பார்ப்போம்."

" பசியாய் இருப்பவர்கட்கு உணவு கொடுப்பது.

தாகமாய் இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது.

ஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடை கொடுப்பது.

நோய்வாய்ப் பட்டவர்களைப் பார்ப்பது, 

சிறையில் இருப்பவர்களைப் பார்த்து ஆறுதல் கூறுவது,

படிக்கத் தெரியாதவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது

சுருக்கமாக,

தேவைப் படுபவர்களுக்கு உதவுவது."

", மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களுக்குத் தெரியாமல் செய்ய முடியுமா?"

"நான் குறிப்பிட்ட உதவிகளைத் தெரியாமல் செய்ய முடியாது.

ஆனாலும் தெரியாமல் செய்யக் கூடிய உதவிகளும் இருக்கின்றன.

உதாரணத்துக்கு, அனாதை இல்லங்களுக்கு நன்கொடை கொடுக்கும்போது, 

அனாதைகளுக்கு அது தெரிய வேண்டிய அவசியமில்லை."

",சில உதவிகளை செய்யும்போது பிறருக்கு தெரியும்.

சில உதவிகளை செய்யும்போது தெரியாது.

அது முக்கியமல்ல.

நாம் விசுவாசத்தின் அடிப்படையில் உதவி செய்ய வேண்டும். 

அதாவது நாம் விசுவசிக்கும் கடவுளுக்காக, அவரது மகிமைக்காக செய்ய வேண்டும்.

நமது மகிமைக்காக அல்ல.

"மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக." (மத். 5:16)

என்று  நமது ஆண்டவர் சொல்லியிருக்கிறார்."

"மனிதர் பார்க்க வேண்டுமென்று  நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்." என்றும் 

ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே."

",நாம் தெருவழியே போகிறோம்.

பிறர் நம்மை பார்க்க வேண்டும் என்று எண்ணி போகிறோமா?

 யாரும் பார்க்க கூடாது என்று எண்ணி போகிறோமா?" 

''எதையும் எண்ணவில்லை. போக வேண்டியிருக்கிறது, போகிறோம்."

", ஆனால், தலையில் பொருட்களைச் சுமந்து விற்கும் வியாபாரி ?"

"மற்றவர்கள் தன்னை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு போவான்.

மற்றவர்கள்  பார்த்தால்தான் வியாபாரம் நடக்கும்.''

",அதே போல் தான் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது  கடவுளுக்காகச் செய்வதால் அவர் பார்த்தாலே போதும்.

மற்றவர்கள் பார்த்தால் நாம் செய்யும் பிறர் சிநேக உதவியைப் பார்த்து இறைவனை மகிமைப் படுத்த வேண்டும்.

நாம் செய்யும் நற்செயல் பிறருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்,

நமது பெருமைக்காக செய்யப்படக் கூடாது.

நமது நோக்கம் தான் நமது செயலின் தன்மையை தீர்மானிக்கும்.

இறைவனது மகிமைக்காகச் செய்யப்படும் எல்லா செயல்களும் நற்செயல்கள் தான்.

நமது பெருமைக்காக செய்யப்படும் எந்த செயலும் நற்செயல் அல்ல.

இறைவனது மகிமைக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு நற்செயலுக்கும் அவர் தரும் சன்மானம் நித்திய பேரின்பம்.''

"படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவுவைப் படைத்தான் தனை வணங்க"  

என்று தமிழில் ஒரு சொற்றொடர் உண்டு.

அதன் பொருள் இப்போதுதான் புரிகிறது."

", என்ன புரிகிறது?"

"கடவுள் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் மனிதனுக்காகப் படைத்தார். மனிதனைத் தனக்காக, தன்னை வணங்கி வாழப் படைத்தார்.

மனிதன் படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.

அவற்றைக் கடவுளை ஆராதிப்பதற்காகவும், அவரது மகிமைக்காகவும் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

மனிதன் நித்திய காலம் வாழ வேண்டியதும் கடவுளோடு தான்."

", நாம் குறுகிய காலம் வாழ கடவுள் தந்த உலகை அவருக்காகப் பயன்படுத்தினால் 

அவரோடு நாம் நித்திய காலம் வாழலாம்."

"நாம் அவருக்காக வாழ்ந்தால் அவருக்கு என்ன இலாபம்?"

", கடவுள் பரிபூரணமானவர். அளவில்லாத நன்மைத்தனம் உள்ளவருக்கு நாம் கொடுக்கும் எதுவும் தேவையில்லை.

நம் மீது அவருக்கு இருக்கிற அளவற்ற அன்பின் காரணமாக அவர் நம்மை படைத்தார்.

நாம் அவரோடு நித்திய காலம் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் படைத்தார்.

நாம் அவருக்காக வாழும்போது நன்மை பெறுவது நாம்தான்.

அவரது மகிமைக்காக நாம் நம் அயலானுக்கு உதவும்போது

நமது அயலானைப் படைத்த அவருக்கும் நமக்கும் நெருக்கம் அதிகம் ஆகும்.

நெருக்கம் அதிகமாக அதிகமாக நமது விண்ணகப் பேரின்பம் அதிகமாகும்.

உண்மையில் நமது விண்ணக வாழ்வுக்காகத்தான் நாம் அவருக்காக வாழ்கிறோம்.

கடவுள் நம்மைப் படைத்ததே நாம் அவரோடு நித்திய காலம் வாழ்வதற்கே.

அவரது மகிமைக்காக வாழும்போது நாம் நமது நித்திய பேரின்ப வாழ்வை உறுதி செய்து கொள்கிறோம்."

"எல்லாம் அவரது அதிமிக மகிமைக்கே."

லூர்து செல்வம்.

Tuesday, June 14, 2022

ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்."(சங் 33:8) (தொடர்ச்சி)

"ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்."
(சங் 33:8) 
(தொடர்ச்சி)

"தாத்தா, மக்களின் அறியாமையைப் போக்குவது  நமது கடமை என்கிறீர்கள்.

மரணம்தான் விண்ணகத்திற்குள் நுழையும் வாசல் என்ற உண்மையை மக்களுக்கு எப்படி புரிய வைப்பது?"

",இயேசு கூறியதுபோல அவரது நற்செய்தியை மக்களுக்கு அறிய வைப்பதின் மூலம்,

கடவுள் எவ்வளவு நல்லவர் என்பதை மக்களுக்கு புரிய வைக்கலாம்.

 கடவுள் நல்லவர் என்பதை மக்கள் நன்கு புரிந்து கொண்டால்,

அவரது செயல்கள் யாவும் நல்லவையே என்பதையும் புரிந்து கொள்வார்கள்.

கடவுள் நமக்காகப் பட்ட துன்பங்களை மக்கள் புரிந்து கொண்டால்,

தங்களுக்கு வரும் துன்பங்களின் பெருமையை மக்கள் புரிந்து கொள்வார்கள். 

கடவுள் நமக்காக ஏற்றுக் கொண்ட மரணத்தை மக்கள் புரிந்து கொண்டால்,

மரணத்தைப் பற்றிய உண்மையையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்."

"தாத்தா, புரிய வைக்கலாம், புரிந்து கொண்டால் என்று சொல்கிறீர்கள்.

புரிய வைப்பது எப்படி?

நற்செய்தி அறிவிப்பவர்கள் ஆண்டவரைப் பற்றியும்,

அவர் நமக்காகப் பட்ட துன்பங்களைப் பற்றியும்,

நமக்காக அனுபவித்த மரணத்தைப் பற்றியும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் யாரும் அதைப் புரிந்து கொள்ளவில்லையே.

இன்னும் துன்பம் வந்தால் அதை நீக்க ஆண்டவரிடம் வேண்டுகிறார்கள்,

மரணம் என்று சொன்னவுடனே பயப்படுகிறார்களே."

", அதற்குக் காரணம் என்னவாய் இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?"

"முதலில் இதைச்  சொல்லும் நாம் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

கொரோனா காலத்தில் நாம் யாரும் கொரோனா நோயாளிகளைப் பார்க்கப் போகவில்லை.

நோய்க்கும், சாவுக்கும் பயந்துதானே.

இறைவனது திட்டத்திற்கு எதிராக எதுவும் நடக்காது என்ற உறுதியான நம்பிக்கை இருந்தால்

"நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்"

என்ற ஆண்டவர் வார்த்தைப்படி நடந்திருப்போம், இல்லையா?"

", உண்மைதான். நாமே பயப்படும் போது மற்றவர்களை எப்படி பயப்படாதீர்கள் என்று சொல்ல முடியும்?

புனித கல்கத்தா தெரெசாளுக்கு தொழுநோய் தொற்று நோய் என்று தெரியும்.

ஆனாலும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார்கள். புண்களை அவர்களே கழுவி மருந்து போட்டார்கள்.

சுவாமி தமியான் (Father Damien) தொழுநோயாளிகளோடு தங்கி அவர்களுக்காக உழைத்தார்.  

அவரையும் அந்நோய் தொற்றிக்கொண்டது.

ஆனால் அவர் அதைப் பற்றி கவலைப் படவில்லை.

முதலில் நாம் ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று நாம் சுவைத்துப் பார்க்க வேண்டும்.

ஆண்டவரைச் சுவைத்துப் பார்க்கும்போது அவருடைய பாடுகளையும், மரணத்தையும் சேர்த்துதான் சுவைக்க வேண்டும்.

நம்மைப் பார்த்து மற்றவர்களும் சுவைப்பார்கள்.

கோடி அற்புதரான புனித அந்தோனியார் 35 வயதிலேயே இறந்து போனார்.

தனக்கென்று ஒரு புதுமை செய்யும்படி ஆண்டவரிடம் அவர் கேட்கவில்லை."

"ஆண்டவர் நல்லவர் என்பதைப் புரிந்து கொண்டால் அவரால் நடக்கும் எதுவும் நமது நன்மைக்கே என்பதையும் புரிந்து கொள்வோம்.

உலகம் துன்பங்கள் நிறைந்ததுதான்.

துன்பங்கள் ஆண்டவருக்காக ஏற்றுக் கொள்ளப் படும்போது நமது ஆன்மா பரிசுத்தம் அடையும்.

விண்ணக பேரின்ப வாழ்வுக்கு இவ்வுலக பெருந் துன்ப வாழ்வுதான் காரணமாக இருக்கும்.

துன்பங்களை சிலுவையாக ஏற்றுக் கொண்டால் அவற்றில் மரணிக்க பயப்பட மாட்டாம்.

மரணம் விண்ணகத்தின் வாசல் என்பதைத் தெரிந்து கொண்டால் அது வரும் போது ஆவலுடன் வரவேற்போம்.

ஆண்டவரைச் சுவைத்துப் பார்த்தவர்களுக்கு

அவர் வாழ்ந்த இந்த உலகமும் சுவையாகவே இருக்கும்.

நித்திய பேரின்ப சுவைக்கு அதுவே காரணமாய்க் கூட இருக்கும்."

",முதலில் நாம் ஆண்டவரைச் சுவைப்போம். பிறகு மற்றவர்களுக்கு சுவைக்கக் கொடுப்போம்."

"சரிதான், தாத்தா. அம்மா தான் செய்த சமையலைத்  தான் ருசி பார்த்த பின்புதான் மற்றவர்களுக்குப் பரிமாறுவார்கள்.

தாயைப் போல் தான் பிள்ளை இருக்க வேண்டும்."

லூர்து செல்வம்.

Monday, June 13, 2022

ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்.(சங் 33:8)

ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
(சங் 33:8) 

 
"தாத்தா,  நமது மக்களில் சிலர் தங்களுக்குப் பிடியாதது எது நடந்தாலும் கடவுளின் மேல் பழியைப் போடுகிறார்களே,

அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

",என்ன நினைக்க.

கடவுளே இல்லை என்று சொல்லும் பலர் வாழும் இவ்வுலகில் 

கடவுள் இருக்கிறார் என்று நம்புவதோடு 

அவர்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றும் நம்புவதற்கும் ஆட்கள் இருக்கிறார்களே என்று சந்தோஷப்பட வேண்டியதுதான்."

"தாத்தா, கடவுளின் மேல் பழியைப் போடுகிறார்களே என்று நான் சொன்னதற்கு 

சந்தோஷப்பட வேண்டியதுதான் என்று சொல்லுகிறீர்கள்!

நான் சொன்னதை முழுவதும் கவனிக்கவில்லையா?"

",உன்னுடைய உறவினர்களில் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியும்,

 ஒருவர் சுகம் இல்லாதிருக்கிறார் எந்த செய்தியும் 

ஒரே நேரத்தில் வந்தால்  எதை நினைத்து வருந்துவாய், எதை நினைத்து சந்தோசப் படுவாய்?"

"இறந்தவரை நினைத்து வருந்துவேன், 

சுகமில்லாமல் இருப்பவரை நினைத்து சந்தோசப்படுவேன்."

",இறந்தவரை நினைத்து வருந்துவதில் பொருள் இருக்கிறது.

ஆனால் சுகமில்லாமல் இருப்பவரை நினைத்து ஏன் சந்தோசப்படுவாய்?"

"அவரைக் குணமாக்க வாய்ப்பு இருக்கிறதே!"

", அப்படித்தான் நானும்.

கடவுளே இல்லை என்பவரிடம் கடவுளைப் பற்றியும், அவருடைய நற்செய்தியைப் பற்றியும் பேசினால் அவருக்கு ஒன்றும் புரியாது.

ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதையும்,

 அவரே எல்லாவற்றிற்கும் காரணம் என்பதையும் நம்புபவரிடம் கடவுளின் அன்பைப் பற்றி பேசலாம், அவருக்குப் புரியவும் வைக்கலாம்."

"அவர் தான் தீங்கு என்று எண்ணும்  நிகழ்வுக்கு  காரணம் கடவுளே என்கிறார்.

அவரிடம் கடவுளின் அன்பைப் பற்றி பேசினால் அவருக்குப் புரியுமா?"

", அவர் தான் தீங்கு என்று எண்ணும்  நிகழ்வுக்குக்    காரணம் கடவுளே என்பது உண்மைதானே.

தீங்கு என்று எண்ணுவதுதான் தப்பு. அதைப் புரிய வைத்து விடலாம்."

"அவர் தான் தீங்கு என்று எண்ணும்  நிகழ்வுக்குக்    காரணம் கடவுளே என்பது உண்மையா?"

", ஆமா. கடவுள்தான் எல்லாவற்றுக்கும் ஆதி  காரணர்."

"எல்லாவற்றுக்குமா? பாவத்துக்குமா?"

", ஆமா. பாவம் செய்த மனிதனை அவர்தானே படைத்தார்.

விலக்கப்பட்ட பழ மரத்தையும், மனிதனையும் படைத்திருக்கா விட்டால் பாவமே செய்யப் பட்டிருக்காதே!"

"அவர்தான் ஆதிகாரணர் என்றால் அவர் ஏன் பாவத்தை விரும்பவில்லை?"

", உன்னுடைய அம்மா ருசியான 20 வடைகளைச் சுட்டு,

"மகனே இவை நமது வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு, நீ எடுத்து சாப்பிட்டு விடாதே"

என்று கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்கள்.

வீட்டில் இருந்த நீ எல்லா வடைகளையும் சாப்பிட்டு விட்டாய்.

சாப்பிட்டது தப்பு.

இந்த தப்புக்குக் காரணம் யார்?"

"என்னுடைய அம்மா முதற் காரணம், (Primary cause)

நான் இரண்டாவது காரணம்."
(Secondary cause)

", Suppose, தப்பு செய்பவருக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமென்றால் யாருக்குக் கொடுக்க வேண்டும்?"

"எனக்குதான். நான்தானே தப்புக்குப் பொறுப்பு."

", Correct. பாவமும் அப்படித்தான்.

கடவுள் உலகைப் படைத்தார்.
ஆகவே உலகில் நடப்பவை அனைத்திற்கும் அவர்தான் ஆதிகாரணர்.

நாம் படைக்கப்பட காரணம் கடவுள்.
   
ஆனால் கடவுளுக்குக் காரணர்
கிடையாது. அவர் தானாக இருப்பவர்.

காரணர் இல்லாத காரணர்.

அதனால்தான் அவரை முதல் காரணர்
 என்கிறோம்.
 
நமது ஒவ்வொரு செயலுக்கும்அவர்தான் ஆதி காரணர். 

.ஆனால்  நமது முழுமையான சுதந்திரத்தையும், படைக்கப்பட்ட பொருட்களையும் பயன்படுத்தி நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாம்தான் பொறுப்பு.

மனிதனைத் தவிர உலகிலுள்ள எந்தப் பொருளாலும் செய்ய முடியாது.

ஏனெனில் அவற்றுக்கு பகுத்தறிவோ, சுதந்திரமோ கிடையாது.

இறைவன் வகுத்த இயற்கை விதிகளின்படி அவை இயங்குகின்றன.

புயல், மழை, வெள்ளம், நில நடுக்கம், சுனாமி போன்ற இயற்கை நிகழ்வுகள் இயற்கை விதிகளுக்குக் கட்டுப் பட்டவை.

மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட  மனித உடலும் இயற்கை விதிகளுக்குக் கட்டுப் பட்டது.

மனித ஆன்மா இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப் பட்டது.

இயற்கை பொருட்களால் இயற்கை விதிகளை மீற முடியாது.

ஆனால் மனித ஆன்மாவுக்கு கடவுள் முழு சுதந்திரம் கொடுத்திருப்பதால் 

அது கடவுளின் கட்டளைகளை அனுசரிக்கவோ, மீறவோ முடியும்.

அனுசரித்து வாழ்வது புண்ணிய வாழ்வு.

 மீறி   வாழ்வது பாவ வாழ்வு.

உலகில் புண்ணிய வாழ்வு வாழும் ஆன்மாவுக்கு இறைவன் நித்திய பேரின்பத்தை  பரிசாக அளிக்கிறார்.

பாவ வாழ்வு வாழும் ஆன்மாவுக்கு அப்பரிசு கிடைக்காது.

பாவம் மட்டும்தான் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.

இயற்கை நிகழ்வுகள் எதுவும் மனிதனுக்கு தீங்கு விளைவிக்காது."

"தாத்தா, பிரச்சனையே இங்கேதான்.

புயல், மழை, வெள்ளம், நில நடுக்கம், சுனாமி போன்ற இயற்கை  நிகழ்வுகள் மனிதனுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்று மனிதன் கருதுகிறான்.

சுனாமி வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் இறந்ததை மனிதர்கள் கண்ணாலேயே பார்த்திருக்கிறார்கள்.

அதே போல் தான் மற்ற இயற்கை நிகழ்வுகளாலும் தீங்கு விளைகின்றது என்று மனிதன் கருதுகிறான்.

புயல் வந்த போது மனிதனால் பயிர் செய்யப்பட்ட வாழை,  தென்னை போன்ற  விவசாயப் பொருட்கள் அழிந்ததையும் மனிதன் பார்த்திருக்கிறான்."

",உனக்கு சுகமில்லை  என்று வைத்துக்கொள்வோம்.

டாக்டரிடம் செல்கிறாய்.

டாக்டர் உன்னைப் பரிசோதித்து பார்த்துவிட்டு உன் கையில் ஒரு ஊசி போடுகிறார்.

ஊசி போடும் போது வலிக்கும்.

அந்த வலி நன்மையா? தீங்கா?"

"நிச்சயமாக நன்மைதான். நான் சுகம் அடைவதற்கு அது இன்றியமையாதது."

", குழந்தைக்கு ஊசி போட்டால் அது என்ன செய்யும்?"

"அழும்."

", ஏன்?"

."சுகம் அடைவதற்கு அது இன்றியமையாதது  என்று குழந்தைக்கு தெரியாது. அதைப் பொறுத்த மட்டில் வலி ஒரு தீங்கு."

",அதே போல் தான் அறியாமை காரணமாகவே மனிதன் நன்மை தரும் நிகழ்வுகளை தீங்கு என்று எண்ணுகிறான்.

மரணம் நன்மையா, தீங்கா?"

"மனிதன்  அது ஒரு தீங்கு என்றுதான் எண்ணுகிறான்.

அதிலிருந்து தப்பிக்கவே கோடிக் கணக்காக செலவழிக்க தயாராக இருக்கிறான்.''

",எது ஊரில் இரண்டு நல்ல நண்பர்கள் இருந்தார்கள்.

ஒருவரையொருவர் மிக அதிகமாக நேசித்தார்கள்.

ஒரு நாள் அவர்களில் ஒருவன் மரணமடைந்து விட்டான்.

அவனுடைய உறவினர்கள் அனைவரும் அவனது உடலை பார்த்து அழுது கொண்டிருந்தார்கள்.

ஆனால் இறந்தவனுடைய நண்பன் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தான்.

திருமண வீட்டில் சுற்றி வருவது போல் துட்டி வீட்டில் மகிழ்ச்சியோடு சுற்றிக் கொண்டிருந்தான்.

இறந்தவனுடைய உறவினர் ஒருவர் அவனைப் பார்த்து,

"உனது நண்பன் மரணம் ஆகிவிட்டான். நீயோ வருத்தப்படாமல் மகிழ்ச்சியோடு இருக்கிறாய். உனக்கு  அவன் மீது உண்மையான அன்பு இல்லையா?"

"உண்மையான அன்பு இருப்பதால்தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

என் நண்பன் இப்போது இறைவனடி சேர்ந்திருப்பதால் அவன் நித்திய பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

பேரின்பமாக இருக்கும் எனது நண்பனுக்காக நான் மகிழ்ச்சியாக இருப்பது தவறா?

நீங்க அழுவதுதான் புரியாத புதிராக இருக்கிறது."

அவனுடைய பதிலை பார்த்து நீ என்ன சொல்கிறாய்?

மரணம் நன்மையா? தீமையா?"

"ஆன்மீகப் பார்வையில் பார்க்கும்போது அது ஒரு நன்மைதான்.

ஏனென்றால் அதுதான் விண்ணகத்திற்குள்  நுழையும் வாசல்."

",அப்படியானால் விண்ணகத்தின் வாசலை திறந்துவிடும் எந்த நிகழ்வும் நன்மையா? தீமையா?"

"நன்மைதான்.''

",அப்படியானால் மனிதன் ஏன் நன்மை செய்யும் இயற்கை நிகழ்வுகளை தீங்கு என்று எண்ணுகிறான்?"

"அறியாமை காரணமாகத்தான்." 

", அறியாமையைப் போக்குவதுதான் நமது கடமை."

(தொடரும்)

லூர்து செல்வம்.

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."(மத். 5:48)

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத். 5:48)

"தாத்தா, நம் ஆண்டவருக்கு எவ்வளவு பெரிய ஆசை பாருங்க!"

"பொடியா, உன் Size க்கு உன் ஆசை இருக்கும்.

ஆனால் ஆண்டவர் அளவில்லாத கடவுள். அளவில்லாதவருடைய ஆசை அளவில்லாததாய்த்தான் இருக்கும்.

இதில் ஆச்சரியபட என்ன இருக்கு?

அப்படி என்ன ஆசைப்பட்டு விட்டார்?"

"அவருடைய தந்தையைப் போல நாம் இருக்க வேண்டுமாம்."

", முழு வசனத்தையும் சொல்லு."


"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."

", நிறைவுன்னா என்ன?"

"முழுமை. (perfect)''

",அண்டா பார்த்திருக்கிறாயா?"

"பார்த்திருக்கிறேன். ரொம்ப பெரியதாக இருக்கும்."

", தம்ளர் பார்த்திருக்கிறாயா?"

"பார்த்திருக்கிறேன். ரொம்ப சிறியதாக இருக்கும்."

", அண்டா நிறைய எவ்வளவு தண்ணீர் ஊற்றலாம்?"

"நூற்றுக் கணக்கான குடங்கள் தண்ணீர் ஊற்றலாம்."

", தம்ளர் நிறைய?"

"தம்ளர் நிறையவும் ஊற்றலாம். குறைவாகப் பிடிக்கும்."

", இப்போ அண்டா நிறையவும் தண்ணீர் ஊற்றி விட்டோம்.

தம்ளர் நிறையவும் தண்ணீர் ஊற்றி விட்டோம்.

அண்டாவைப் போலவே தம்ளரிலும் தண்ணீர் நிறைய இருக்குன்னு சொல்லலாமா?"

"சொல்லலாமே."

", இப்போது ஆண்டவரது வாக்கை வாசி."

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, 

நீங்களும் நிறைவுள்ளவர்களாய்  இருங்கள்.

கொஞ்சம் பொறுங்கள்.

அன்னை மரியாள் அருள் நிறைந்தவராக இருப்பது போலவா?"

", ஆமா."

"தாத்தா, இயேசுவின் தாயையும், நம்மையும் ஒப்பிடக் கூடாது.

அவள் கடவுளின் விசேச அருளால் சென்மப் பாவமே இல்லாது உற்பவித்தாள்.

அவளோடு நம்மை எப்படி ஒப்பிட முடியும்?"

", இயேசு நம்மை அவருடைய தந்தையோடு ஒப்பிடுகிறார்.

நான் தாயோடு ஒப்பிடக் கூடாது என்கிறாய்!

மாதா பக்தியின் நோக்கமே மாதாவைப் போல வாழ முயற்சி செய்ய வேண்டும் என்பதுதான்."

"முயற்சிதான், தாத்தா, செய்ய முடியும். நம்மால் அதிகபட்ச அளவு முடிந்த மட்டும் வாழலாம். முழுவதுமாக மாதாவைப் போல் வாழ வேண்டும் என்றால் கடவுளுடைய விஷேச அருள் வேண்டும்."

", நானே உலகின் ஒளி என்று கூறிய ஆண்டவர்

உலகின் ஒளி நீங்கள் என்று ஏன் சொன்னார்?"

"நாமும் அவரைப் போல வாழ வேண்டும் என்பதற்காக."

", யாரைப் போல்?"

"இயேசுவைப் போல."

",இயேசு யார்?"

"இறைமகன். கடவுள்."

", தந்தை யார்?"

"கடவுள். இருவரும் ஒரே கடவுள்தான்."

",நாம் இயேசுவைப் போல வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்.

"நானும் தந்தையும் ஒன்றே." என்று அவரே சொல்லியிருக்கிறார்.

அப்படியானால் இயேசுவைப் போல் வாழ்வதும், தந்தையைப் 
போல் வாழ்வதும் ஒன்றுதானே!"

"வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே. 

இப்போது ஊனுடலோடு நான் வாழ்வது கடவுளின் மகன்மேல் உள்ள விசுவாசத்தின் வாழ்வாகும்"
(கலா. 2:20)

இதைச் சொன்னவர் யார்?"

"புனித சின்னப்பர்."

", என்ன பொருளில் சொன்னார்?"

"சின்னப்பரது உருவத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் இயேசுவே."

", இயேசு நிறைவானவர்தானே?"

"ஆமா."

", இப்போது சின்னப்பரைப் பார்க்கும்போது யாரைப் பார்க்கிறோம்? வாழ்பவன் நான் அல்ல என்று அவர் சொல்லி விட்டார்."

"இயேசுவைப் பார்க்கிறோம்."

",அதாவது நிறைவானவரான இயேசுவை."

"ஆமா."

", அப்போது சின்னப்பருக்குள் நிறைவு வாழ்கிறது."

"ஆமா."

", அதே நிறைவு, அதாவது நிறைவானவரான இயேசு, உனக்குள் வாழ முடியாதா?"

"முடியும், நான் சின்னப்பரைப் போல் வாழ்ந்தால்."

", உன்னால் வாழ முடியாதா?"

"நடக்கிறத சொல்லுங்க தாத்தா.

அந்தோனியார் பக்தர்களெல்லாம் அந்தோனியார் ஆக முடியுமா?"'

",ஆக வேண்டும் என்று இயேசு ஆசைப் படுகிறார்.

ஒவ்வொரு நாளும் விண்ணகத் தந்தையைப் பார்த்து,

"உமது சித்தம் விண்ணகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலும் செய்யப் படுவதாக"

என்று சொல்கிறாயா?"

"அடிக்கடி சொல்கிறேன்."

", பூமியில் என்ன செய்யப் பட வேண்டும்?"

"தந்தையின் சித்தம்."

",தந்தையின் சித்தத்தை பூமியில் யார் செய்ய வேண்டும்?"

"நாம்தான்."

",தந்தையின் சித்தத்தை  நாம் செய்யும்போது நமக்குள் யார் வாழ்வார்?"

"தந்தைதான் வாழ்வார்."

", சின்னப்பருள் இயேசு வாழ்ந்தது போல, நமக்குள் தந்தை வாழ்வார். சரியா?''

"ஆமா."

",சின்னப்பரைப் போல் நாமும் கடவுளின் மகன்மேல் உள்ள விசுவாசத்தில் வாழும்போது,

அதாவது விண்ணகத் தந்தையின் விருப்பப்படி வாழும் போது,

நிறைவானவரான  தந்தை நம்முள் வாழ்வார்."

"ஆமா."

"அதாவது நமக்குள் நிறைவு வாழும்."

"ஆமா."

", அப்படியான நிறைவானவரான தந்தையை நமக்குள் கொண்டுவர நாம் என்ன செய்ய வேண்டும்?"


"தந்தையின் சித்தப்படி வாழவேண்டும்."

", அதைத்தான் இயேசு சொல்கிறார்."

"அதாவது,

நமது வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்றால்

நிறைவுள்ள வானகத்தந்தை நம்முள் வாழ வேண்டும்.

அதாவது 

"வாழ்வது நானல்ல,

 என்னுள் விண்ணகத் தந்தை  வாழ்கின்றார்"

 என்று சொல்லும் அளவிற்கு 

 புனித சின்னப்பரைப்  போல வாழ வேண்டும்.

அதற்கு,

 இயேசு தந்தையின் சித்தத்தை நிறைவேற்றியது போல

நாமும் நமது வாழ்வில்  தந்தையின் சித்தத்தை முழு மனதோடு  நிறைவேற்ற வேண்டும்.

பாவம் தந்தையின் சித்தத்துக்கு  எதிரானது.

தந்தையின் சித்தப்படி வாழ்ந்தால் பாவங்கள் செய்ய மாட்டோம்.

புனிதர்களைப் போல வாழ்வோம். 

ஆனாலும், தாத்தா, புனிதர்களைப் போல, முழுக்க முழுக்க தந்தையின் சித்தப்படி வாழ்வது அவ்வளவு எளிது அல்ல."

",எளிது என்று நான் சொன்னேனா?   தந்தையின் அருளால் ஆகாதது எதுவுமில்லை.

செபிப்போம்.

இறைவன் அருளோடு வாழ்வோம்."

லூர்து செல்வம்.

Saturday, June 11, 2022

"உன் வலக்கண் உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு."(மத். 5:29)

"உன் வலக்கண் உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு."
(மத். 5:29)

"ஏங்க, இன்றைக்குச் சீக்கிரம். வீட்டுக்கு வந்துட்டீங்க.

செய்ய வேண்டிய வேலையைச் சீக்கிரம் முடிச்சிட்டீங்களா?"

", இல்லை. வேலையையே முடித்து விட்டேன்."

"என்னங்க சொல்றீங்க?"

", வேலையை resign பண்ணிவிட்டேன்."

"வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் என்ன ஆச்சி."

", ஒன்றும் ஆகி விடக்கூடாது என்பதற்காகத்தான் வேலையை விட்டு விட்டேன்.

இலஞ்சம் வாங்காமல் அந்த வேலையைச் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டேன்.

இலஞ்சம் வாங்கி நரகத்துக்குப் போவதை விட பட்டினி கிடந்து மோட்சத்துக்குப் போகலாம்."

"நீங்க எடுத்த முடிவு சரிதாங்க. ஆண்டவரே அதைத்தான் சொல்லியிருக்கார்,

"உன் வலக்கண் உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு."

இரண்டு கண்களோடு நரகத்துக்குப் போவதைவிட 

ஒற்றைக்கண்ணனாய் மோட்சத்துக்குப் போவது தான் நல்லது."


", என்னடா பேரப்புள்ள, டயரியும் கையுமாய்."

"இதோ, நான் எழுதியிருப்பதைப் பாருங்க."

", எதாவது நாடகம் எழுதப் போறியா?''

"இல்ல, தாத்தா, இன்றைய பைபிள் வசனத்தை வாசித்து விட்டு மனதில் பட்டதை எழுதினேன்."

", பைபிள் வசனத்தின் கருத்து என்ன?"

"பாவம் செய்ய காரணமாக இருப்பவை எதாக இருந்தாலும்,

சந்தரப்பமாக இருந்தாலும், பொருட்களாக இருந்தாலும், ஆட்களாக இருந்தாலும்

அவற்றை விட்டு நாம் விலகி விட வேண்டும்."


", சந்தர்ப்பத்துக்கு ஒரு உதாரணம் கொடு."

"உங்க phoneல you Tube இருக்கா?"

", இருக்கே. எல்லா Smart phone லயும் இருக்குமே."

"சிலர் பொழுது போகாவிட்டால் அதற்குள்ளே போவார்கள்.

உலகத்தில் இருப்பது போலவே அதற்குள் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும்.

பார்க்கக் கூடியதும் இருக்கும், பார்க்கக் கூடாததும் இருக்கும்.

அதற்குள் பார்வையாளர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் சில காட்சிகள் மனதுக்கு கேடு விளைவிக்கக் கூடியவையாய் இருக்கும்.

கலை உணர்வோடு பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அவற்றைப் பார்ப்பவர்களின் மனதை அவை கெடுத்து விடும்.

அவை நமது மனதைத் கெடுப்பதற்காக சாத்தான் விரித்து வைத்திருக்கும் வலைகள்.

அவற்றின் பக்கம் போகாமல் நம்மை நாமே கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும்.

பொழுதுபோக்கிற்காகப் போகின்றவர்களுக்கு you Tube பாவ
சந்தர்ப்பம்.

திருப்பலி, பிரசங்கங்கள் ஆகியவற்றைப் பார்க்கப் போனால் கண்களை அவற்றை விட்டு வேறு பக்கம் திருப்பக் கூடாது"

", அடிக்கடி சினிமா பார்ப்பது கூட மனதைக் கெடுக்கும்."

"இன்று அரசியல் இருக்கும் நிலையைப் பார்த்தால்,

நேர்மையாக வாழ ஆசைப் படுகிறவர்கள் அதன் பக்கமே போகக்கூடாது.

அரசியல் வாதிகளிடம் கொள்ளும் நட்பு கூட பாவ சந்தர்ப்பமாக மாறும்.

அவர்கள் இலஞ்சம் வாங்குவதற்கு நண்பர்களைப் பயன் படுத்துவார்கள்."

", பாவத்தைப் பற்றிக் கவலைப் படாதவர்களை நமது நட்பு வட்டத்திற்குள் சேர்க்கக்கூடாது.

நண்பர்களில் யாராவது நம்மைப் பாவம் செய்யத் தூண்டுவாரானால்

 அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவரது நட்பை உடனே விட்டு விட வேண்டும்.

நண்பர்கள் என்பதற்காக குடிகாரர்களோடு சுற்றக் கூடாது.

'நான் குடிக்க மாட்டேன்' என்று சொல்லிப் பயனில்லை.

பாவ சந்தர்ப்பத்துக்குள் நுழையவே கூடாது."

"தாத்தா, பாவிகளால் நிறைந்த உலகம் இது.

நம்மைச் சுற்றி வாழ்வோர் அனைவரும் இறைப் பற்று உள்ளவர்கள் எனக் கூற முடியாது.

அவர்களுக்கும் இயேசுவையும், அவரது நற்செய்தியையும் அறிவிக்க வேண்டும்.

அவர்களோடு பழகாமல் எப்படி அவர்களை மனம் திருப்ப முடியும்?"

", வியாதியஸ்தனுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டரைப் போல சுய பாதுகாப்புடன் பழகி அவர்களை மனம் திருப்ப வேண்டும்.

செப உதவி மிக அவசியம்.

இயேசு பாவிகளைத் தேடித்தான் உலகிற்கு வந்தார்.

நாமும் இயேசுவின் துணையோடு பாவிகளை மனம் திருப்பவதற்காக அவர்களைத் தேடிச் செல்லலாம்.

விவேகத்துடனும், சுயகட்டுப் பாட்டுடனும் செயல் புரிய வேண்டும்.

ஆண்டவருடைய உதவியால் ஆகாதது எதுவுமில்லை."

"ஆண்டவர் "உன் வலக்கண் உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு." என்று தான் சொல்லியிருக்கிறார்.

கண் நன்மை செய்ய உதவியாய் இருந்தால் அதைப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு சந்தர்ப்பம்  பாவம் செய்யத் தூண்டினால் அது பாவ சந்தர்ப்பம்.
விலக்கி விட வேண்டும்.

அது பாவிகளை மனம் திருப்ப உதவியாய் இருந்தால்  அதை நற்செய்திப் பணிக்காகப்  பயன்படுத்த வேண்டும்.

உலகோடு நாம் போகாமல் அதை நமது ஆண்டவருடைய வழிக்குக் கொண்டுவருவோம்."

லூர்து செல்வம்.

Friday, June 10, 2022

"முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்." (மத். 5:24)

"முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்." (மத். 5:24)

"தாத்தா, முதலில் மன்னித்துக் கொள்ளுங்கள்."

", ஏண்டா, என்ன தப்பு செய்த?"

"தப்பு ஒண்ணும் செய்யல தாத்தா.
ஏற்கனவே நீ சொன்ன விசயத்தைப் பற்றித் திரும்பவும் கேட்க பயமா இருக்கு."

",என்ன விசயம் பற்றி?"

"சமாதானம் பற்றி."

",சமாதானம் பற்றி முழுதும் பேசணும்னா நம்ம வாழ்நாள் காணாது.

ஏனெனில் சமாதானம் புதுப் புது பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறது.

நீ கேட்க வந்ததைக் கேள்."

"தாத்தா, இருவருக்குள் இருந்த சமாதான உறவு முறிந்து விட்டால்

அரைச் சரி செய்ய முறித்தவர் முதல் முயற்சி எடுக்க வேண்டுமா?

அல்லது முறிவுக்குக் காரணமில்லாதவர் முதல் முயற்சி எடுக்க வேண்டுமா?"

", உனது இந்த சந்தேகத்துக்குக் காரணம் என்ன?"

"நீ பீடத்தின்மேல் காணிக்கை செலுத்த வரும்பொழுது, 

உன் சகோதரனுக்கு உன்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால்,

24 அங்கேயே, பீடத்தின்முன், உனது காணிக்கையை வைத்துவிட்டு, 

முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்.

 பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து."
(மத். 5:23, 24) என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.


"உன் சகோதரனுக்கு உன்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால்,"

இங்கே மனத்தாங்கல் இருப்பது 'சகோதரனுக்கு."

ஆண்டவர் "முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்." என்கிறார்.

மனத்தாங்கல் இருப்பவன் முதலில் அதைச் சரி செய்ய வேண்டுமா?

மனத்தாங்கல் இல்லாதவன் முதலில் அதைச் சரி செய்ய வேண்டுமா?''

",கடவுள் மனிதனை பாவம் இன்றி சமாதான உறவோடுதான் படைத்தார், அந்த உறவை முதலில் முறித்துக் கொண்டவர் யார்?"

"மனிதன்."

", மனிதன் முறித்த உறவைச் சரி செய்ய முதலில் முயற்சி எடுத்தவர் யார்?"

"கடவுள். கடவுள்தான் மனிதனாக பிறந்து மனிதன் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்தார்."

", கடவுள் முதலில் முயற்சி எடுத்திருக்கா விட்டால்?"

"முறிந்த உறவு முறிந்த உறவாகவே இருக்கும்."

",உனது சகோதரன் காரணமே இல்லாமல் உனது மனதை நோகச் செய்து விட்டான் என்று வைத்துக்கொள்வோம்.

அதனால் உறவு முறிந்தது.

உனக்குச் சமாதானம் செய்து கொள்ள ஆசை.

 ஆனால் உனது சகோதரன் முதல் முயற்சி எடுக்க மாட்டான் என்று உனக்குத் தெரியும்.

சமாதானம் செய்து கொள்ள நீ என்ன செய்வாய்?"

"எனது ஆசையை நிறைவேற்ற நான்தான் முயற்சி எடுப்பேன்."

",அதைத்தான் ஆண்டவர் செய்ய சொல்லி இருக்கிறார். 

தன்னைப் போலவே தனது சீடர்களும் செயல்பட வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.

நமது அயலானோடு நமக்கு சமாதான உறவு இருக்க வேண்டும்.

நமது அயலான் தப்பு செய்திருந்தாலும், அவனை நாம் மன்னித்து ஏற்றுக் கொள்வதில் தவறில்லையே.

கடவுள் தன்னுடைய அளவில்லாத அன்பின் காரணமாக 

அவரே மனிதனாகப் பிறந்து

 பாடுபட்டு 

தன்னையே சிலுவையில் பலியாக்கி 

நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்து 

நம்மை தனது பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டார்.

நமது ஆண்டவரையே நாம் பின்பற்றுவோமே."

"நாம் செய்யும் சமாதானத்தை நமது சகோதரன் ஏற்றுக் கொள்ளா விட்டால்?"

", அது நமது தப்பு இல்லையே.

நாம் சமாதானம் செய்துகொள்ள வேண்டும்.

நமது சகோதரன் மீது நமக்கு எந்த கோபமும் இருக்கக் கூடாது.

அதை நாம் அவனுக்குத் தெரிவிக்க வேண்டும்.

நமக்கு அவன்மீது எந்தக் கோபமும் இல்லை என்பது தெரிந்தால்  அவன் மனம் மாற வாய்ப்பு இருக்கிறது."

"நாம் இயேசுவின் சீடர்கள் என்பதற்காகவே நம்மை வெறுப்பவர்கள் அநேகர் நம் நாட்டில் இருக்கிறார்கள்.

அவர்களையும் நாம் நேசிக்க வேண்டும்.

அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகள் செய்வதன் மூலம் நமது அன்பை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

நமது அன்பைப் பார்த்து அவர்கள் மனம் திரும்ப வேண்டும்."

", மனிதன் இறைவனோடு இருந்த சமாதான உறவை முறித்து விட்டாலும்,

 மனிதனோடு இறைவனுக்கு இருந்த அன்பு உறவில் எந்த மாற்றமும் இல்லை.

அவர் மாறாதவர்.

நித்திய காலமாகவே மனிதன் மீது அவருக்கு இருந்த அன்பு அப்படியே இருந்தது.

பரிசுத்தவான், பாவி என்ற வேறுபாடு இல்லாமல் கடவுள் அனைவரையும் நேசிக்கிறார். 
 
லுசிபெரை நேசித்தது போலவே சாத்தானையும் அவர் நேசிக்கிறார்.

நமது நேசமும் அப்படியே இருக்க வேண்டும்.

எதிரிகளுக்குக் கூட நாம் எதிரியாக இருக்கக் கூடாது.

நாம் அனைவருக்கும் நண்பர்களாகவே வாழ வேண்டும்.

நாம் அனைவரையும் நேசித்தால்தான் கடவுள் நமது காணிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்.

யார் மேலாவது உள்ள கோபத்தோடு நாம் காணிக்கை செலுத்தினால் அது காணிக்கை அல்ல.

வெறும் பொருளே."

விண்ணகத் தந்தையே, எங்களுக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னித்து ஏற்றுக் கொள்வதுபோல

உமக்கு விரோதமாக நாங்கள் செய்த பாவங்களை மன்னித்து எங்களை ஏற்றுக் கொள்ளும்.

லூர்து செல்வம்.