Saturday, May 22, 2021

பைபிள் மட்டும் போதுமா?

பைபிள் மட்டும் போதுமா?


நம்மிடையே பைபிள் கிறிஸ்தவர்கள் என்று ஒரு சாதியினர் இருக்கின்றார்கள்.

சாதியினர் நல்ல வார்த்தை இல்லையே.

நிச்சயமாக நல்ல வார்த்தை இல்லை.

ஆகவேதான் அவர்களுக்கு அந்த வார்த்தையைப் பயன் படுத்தியிருக்கிறேன்.

நாம் முழுமையான கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும்,

பைபிள் கிறிஸ்தவர்களாக மட்டுமல்ல.

பைபிளில் கிறிஸ்துவின் போதனைகள் உள்ளன, ஆனால் எல்லா போதனைகளும் இல்லை.

எழுதப்பட்ட போதனைகள் மட்டுமே உள்ளன.

 எழுதப்படாத, ஆனால் போதிக்கப்பட்ட போதனைகள் எல்லாம் பைபிளில் இல்லை.

"இந்நூலில் எழுதப்பெறாத வேறு பல அருங்குறிகளையும் இயேசு தம் சீடர்கள் கண்முன் செய்தார்."


"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."

33 ஆண்டுகள் உலகில் வாழ்ந்த இயேசு 30 ஆண்டுகள் வெளியுலகிற்கு தெரியாமல் வாழ்ந்தார்.

இறுதி மூன்று ஆண்டுகளையும் முழுவதுமாக போதிப்பதிலேயே செலவிட்டார்.

மூன்று ஆண்டுகளும் அவருடைய 12 அப்போஸ்தலர்களும் அவருடனேயே இருந்தனர்.

அவர்களிடம் இயேசு வம்பு 
பேசியிருக்க மாட்டார்.

 தனது போதனைகளுக்கு விளக்கம் கொடுத்திருப்பார்.

 ஆகவே இயேசு போதித்தது எல்லாம் அவருடைய சீடர்களுக்கு  முழுமையாகத் தெரியும்.

 முழுமையாகத் தெரிந்த சீடர்கள்தான் பரிசுத்த ஆவி தங்கள் மேல்  இறங்கி வந்தவுடன், தைரியத்துடன் கிறிஸ்துவின் போதனைகளைப்  போதிக்க ஆரம்பித்தார்கள். 

 இயேசுவின்  அப்போஸ்தலர்களால் போதனை ஆரம்பிக்கப்பட்டதால் திருச்சபையை அப்போஸ்தலிக்க திருச்சபை என்கிறோம்.

இயேசு ஒரே திருச்சபையை தான் ஏற்படுத்தினார். ஆகவேதான் திருச்சபையை ஏக அப்போஸ்தலிக்க திருச்சபை என்கிறோம்.

இயேசு பரிசுத்தர். பரிசுத்தரால் அசுத்தமானதை உண்டாக்க முடியாது.

 பாவிகளாகிய நம்மை பரிசுத்தமானவர்களாக மாற்றுவதற்காகத்தான் திருச்சபை ஏற்படுத்தப்பட்டது. 

உடலிலுள்ள அழுக்கை கழுவுவதற்கு சுத்தமான நீரை தானே பயன்படுத்துகிறோம்!
நாம் அனைவரும் பாவிகள். ஆனால் திருச்சபை பரிசுத்தமானது.

படைக்கப்பட்ட அத்தனை மக்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்டது தான்  திருச்சபை.

ஆகவே இது கத்தோலிக்க திருச்சபை.

இயேசுவால் ஏற்படுத்தப்பட்டது ஏக,  பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபை.


அப்போஸ்தலிக்க திருச்சபை  போதிக்கும் போதனைகள் எல்லாம் அப்போஸ்தலர்கள் வழியாக நமக்கு வந்தவையே.

சில பைபிள் வடிவில் வந்தன.
சில பாரம்பரிய வடிவில் வந்தன.

பைபிள் வடிவில் வந்தவற்றையும், பாரம்பரிய வடிவில் வந்தவற்றையும் விசுவாசிப்பதுதான் முழுமையான விசுவாசம்.

இரண்டில் ஏதாவது ஒன்றை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இயேசுவின் முழுமையான போதனையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதான் பொருள்.

பைபிள் மட்டும் போதும் என்பவர்களுக்கு இயேசுவின் முழுமையாக போதனை தெரியாது.

பைபிளை  மட்டும் ஏற்றுக் கொள்பவர்கள் அதன் வசனங்களுக்கு தங்களது இஷ்டம் போல் பொருள் கொடுக்கிறார்கள்.

அந்த வசனங்களை இயேசுவின் வாயிலிருந்து கேட்ட அப்போஸ்தலர்கள் அதற்கு என்ன பொருள் கொடுத்தார்களோ அதுதான் உண்மையான பொருள்.

இராயப்பரைப் பார்த்து,

"நீ பாறை. இந்த பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."

உலகில் இராயப்பர்தான் திருச்சபையின் தலைவர் என்று பொருள் படுவதாகத்தான் அப்போஸ்தலர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இயேசு விண்ணகம் எய்திய நாள் முதல் இராயப்பர் தலைமையில்தான் திருச்சபை இயங்கியது.

இன்றும் இயங்குகிறது.  இராயப்பரின் வாரிசுகளைத்தான் பாப்பரசர்  என்கிறோம்.

இராயப்பரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளாதவர்கள் அந்த வசனத்திற்கு இஷ்டம்போல் பொருள் கொடுக்கிறார்கள்.

பாவசங்கீர்த்தனம், திவ்ய நற்கருணை ஆகிய தேவ திரவிய அனுமானங்கள் திருச்சபையின் ஆரம்ப காலத்திலிருந்தே அப்போஸ்தலர்களால் நிறைவேற்றப்பட்டு வந்தன.

ஆனால் பிரிந்து சென்றவர்கள் அப்போஸ்தலர்கள் ஏற்றுக்கொண்டதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

அதற்கு பைபிள் பொறுப்பு அல்ல.

திருச்சபையின் விசுவாசத்தை அடுத்த நடைமுறைகள் எல்லாம் 

பைபிளின் அடிப்படையிலும், பாரம்பரியத்தின் அடிப்படையிலும் 

அப்போஸ்தலர்கள் காலம் தொட்டே நடைமுறையில் உள்ளன.

பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அப்போஸ்தலர்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்போஸ்தலர்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் 
உண்மையான திருச்சபையை ஏற்றுக்கொள்ளவில்லை.

உண்மையான திருச்சபையை  ஏற்றுக்கொள்ளாதவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை.

இயேசு என்னும் பெயரை மட்டும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இயேசுவின் போதனைகளை 'எல்லாம்' ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பவனே இயேசுவை ஏற்றுக் கொள்கிறான்.

இயேசுவின் போதனைகளில் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டு,

மற்றொரு பகுதியை ஏற்றுக் கொள்ளாதவனை 

எப்படி இயேசுவின் போதனைகளை ஏற்றுக்கொள்கிறான் என்று சொல்ல முடியும்? 

அப்படிப்பட்டவர்கள் இயேசுவின் பெயரைச் சொல்லிக்கொண்டு அவர்கள் இஷ்டப்படியே நடக்கிறார்கள்.

அவர்கள் எப்படி கிறிஸ்தவர்கள்  என்ற  பெயருக்கு ஏற்றவர்கள் ஆக முடியும்?

இயேசுவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அப்போஸ்தலர்களின் வாய்வழிப் போதனைகள் அடங்கிய பாரம்பரியத்தை நம்பாதவர்கள்  

எழுத்து வழி போதனையை மட்டும் எந்த அடிப்படையில் நம்புகிறார்கள்?

பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான் அப்போஸ்தலர்கள் .
வாய்வழியும், எழுத்துவழியும் போதித்தார்கள்.

பரிசுத்த ஆவியை நம்புகிறவர்கள் 
பைபிளையும் நம்பவேண்டும், பரம்பரையையும் நம்ப வேண்டும்.

ஏனெனில் இரண்டிலுமே பரிசுத்த ஆவி தான் செயல்படுகிறார்.

ஒன்றை  மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றதை ஏற்றுக்கொள்ளாதவர்கள்,

பரிசுத்த ஆவியைப் பார்த்து,
 
"பரிசுத்த ஆவியானவரே, நீர் சொல்வதைச் சொல்லும்.  நாங்கள் எங்களுக்கு இஷ்டப்பட்டதை மட்டும் எடுத்துக் கொள்வோம்."

என்று சொல்கிறார்கள்.

திருச்சபை ஆரம்பித்த நாளிலிருந்து இந்நாள் வரை

பரிசுத்த ஆவியானவர்தான் அதை வழிநடத்துகிறார்,

 இன்னும் உலகம் முடியும் வரை  அவர்தான் வழிநடத்துவார். 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment