Monday, May 3, 2021

"இவர் தச்சன்மகன் அல்லரோ?"(மத்.13:55)

"இவர் தச்சன்மகன் அல்லரோ?"
(மத்.13:55)

அசாதாரண (Extraordinary) நோக்கங்களை நிறைவேற்ற மிகச் சாதாரண (ordinary) ஆட்களைப் பயன்படுத்துவது இறைவனுக்கு கைவந்த கலை.

அதற்குப்பின்னால் கடவுளுடைய சர்வ வல்லமை செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

தனது திருச்சபையை உலகெங்கும் பரப்ப படிப்பு அறிவு இல்லாத மீனவ தொழிலாளர்களை தேர்ந்தெடுத்தது அதற்கு  ஒரு எடுத்துக்காட்டு.

சர்வ வல்லப தேவன் தான் உலகில் மனிதனாக பிறக்க திட்டமிட்ட போது தனது வளர்ப்பு தந்தையாக தேர்ந்தெடுத்த புனித சூசையப்பர் மற்றொரு எடுத்துக்காட்டு.

அவரது வாழ்க்கையைப் பற்றி பைபிளில் அதிகமான குறிப்புகள்  இல்லை.

ஆனாலும் கிறிஸ்து பிறப்பதற்கு முந்திய பாரம்பரியத்தில் அவரைப் பற்றி ஒரு சில விவரங்கள் தெரிய கிடைக்கின்றன.

அன்னை மரியாளை திருமணம் செய்வதற்கு முன்னரே சூசையப்பருக்குத்  திருமணமாகி மனைவி இறந்துபோன குறிப்புகள் பாரம்பரியத்தில் உள்ளன.

அவர் சாதாரண தச்சு வேலை செய்து வந்த தொழிலாளி.

அன்னை மரியாள் அசாதாரண பெண்மணி.

ஜோக்கிமுக்கும், அன்னம்மாளுக்கும் முதிர்ந்த வயது வரை குழந்தைகள் இல்லை.

இறைவனை விசேஷமான விதமாக வேண்டியதன் பேரில் முதிர் வயதில்  அன்னம்மாள் கருத்தரித்து பெற்ற குழந்தைதான் அன்னை மரியாள்.

தாங்கள் நேர்ந்திருந்தபடி மரியாளை மூன்று வயதிலேயே கோவிலுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுத்து விட்டார்கள்.

3 வயது முதல் 12 வயது வரை மரியாள் கோவிலில்தான்  வளர்ந்தாள்.

சிறு வயதிலேயே தனது கன்னிமையைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுத்து விட்டாள்.

12 வயதுக்கு மேல் கோவிலில் வளர முடியாது. திருமணம் முடித்து அவளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

ஆனால் அவள் கன்னிமையைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுத்து விட்ட காரணத்தினால்  

அவள் கன்னிமைக்கு  பாதுகாவலாய் இருக்கக்கூடிய ஒரு கணவனுக்குதான் அவளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று பெரிய குரு தீர்மானித்தார்.

அவளது கணவரைத் தேர்ந்தெடுக்கும்  பொறுப்பை கடவுளிடமே ஒப்படைத்தார்.

திருமணமாகி மனைவியை இழந்த விதவர்களுக்கு (Widowers) அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்புப்படி கோவிலுக்கு வந்த விதவர்களில்  ஒருவர் சூசையப்பர்.

ஒவ்வொருவர்  கையிலும் ஒரு கோல் கொடுக்கப்பட்டது.

சூசையப்பரின் கையிலிருந்த கோல் தளிர் விட்டு பூ தோன்றியது.

 உடனே பெரிய குரு அவரையே தேர்ந்தெடுத்தார்.

திருமண ஒப்பந்தம் செய்வதற்கு முன்னாலேயே மரியாள் சூசையப்பரிடம் தான் தனது கன்னிமையை  கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து விட்ட விவரத்தைக் கூறி,

தனது கன்னிமைக்கு பாதுகாவலாய் இருந்தால் மட்டுமே 
அவர் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சூசையப்பர் வாக்குறுதி கொடுத்த பின்புதான் திருமண ஒப்பந்தத்திற்கு மரியாள் சம்மதித்தாள்.

திருமண ஒப்பந்தமும் முடிந்தது.

சூசையப்பர் ஒரு தச்சுத் தொழிலாளி.

திருமண ஒப்பந்தம் முடிந்தபின் மரியாளை அவளது தாய் வீட்டில் ஒப்படைத்துவிட்டு அவர்   தச்சுத் தொழில் சம்பந்தமாய் வெளியூருக்குச் சென்றார்.

அவர் வெளியூருக்கு சென்றிருந்த போதுதான் கபிரியேல் தூதர் அவளது இல்லம் சென்று, " அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்று வாழ்த்தி, 

"இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்." என்றார்.

இது தூய ஆவியின் வல்லமையால் நடைபெறும் என்றும், அவளது கன்னிமைக்கு  எந்த பங்கமும் வராது என்பதையும் அறிந்து 

இறைவனின் சித்தத்தை தாழ்மையுடன் ஏற்றுக் கொண்டாள். 

இது சூசையப்பருக்குத்  தெரியாது.

அவர் வெளியூரில் தன் வேலை முடிந்து ஊருக்கு திரும்பியபோது மரியாள் கருத்தரித்திருப்பதை அறிந்து,

என்ன நடந்திருந்தது என்பது தெரியாதாகையால்   மனதிற்குள் சங்கடப்பட்டார்.

ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 

"சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்.

 ஏனெனில், அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். 

அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.

 அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.

சூசையப்பரும் வானதூதர் சொன்னதை விசுவாசத்துடன் ஏற்றுக்கொண்டார்.

சாதாரண மனிதராகிய சூசையப்பரின் விசுவாசம் அசாதாரணமானது.

மரியாளுக்கு நேரில் தோன்றிய வானதூதர் சூசையப்பருக்குக் கனவில் தான் தோன்றினார்.

ஆயினும் அவர் சொன்னதை இறை செய்தியாக ஏற்றுக்கொள்ள   அசாதாரண விசுவாசம் வேண்டும். 

அது அவரிடம் இருந்தது.

மரியாள் இறைவனது சித்தத்தை தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது போலவே சூசையப்பரும்  ஏற்றுக்கொண்டார்.

இறைவனால் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது மிகவும் அசாதாரணமான பணி.

மனிதனாக பிறக்கவிருக்கும் சர்வ வல்லப கடவுளை வளர்க்கும் பணி.

அப்பணியை ஏற்றுக் கொண்டபின் இறைவனின் வழி நடத்துதல்களுக்கும், உத்தரவுகளுக்கு மறு கேள்வி கேட்காமல் கீழ்ப்படிந்தார்.

கடவுள் நினைத்திருந்தால் தான் பிறப்பதற்கு எல்லா வசதிகளும் நிறைந்த ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கலாம்.

ஆனால் ஏழையாக பிறந்து,

 ஏழையாகவே வளர்ந்து,

 ஏழையாகவே வாழ்ந்து,

 ஏழையாகவே மரிக்க வேண்டும் என்பது இறைவனின் நித்திய கால திட்டமாகையால் 

தன்னை வளர்க்கும் பணியை ஏற்றுக்கொண்ட சூசையப்பரையும் ஏழையாகவே வாழ விட்டுவிட்டார்.

சூசையப்பரும் ஏழ்மையையும், உழைப்பையும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார்.

திருக்குடும்பத்தை பாதுகாக்கும் பணியை இறைவனிடமிருந்து ஏற்றுக்கொண்ட சூசையப்பர் அதற்காகவே வாழ்ந்து அதற்காகவே மரித்தார்.

ஆண்டவரின் தூதரின் அறிவுரைப்படி 

குழந்தை இயேசுவை ஏரோது மன்னனிடமிருந்து காப்பாற்றுவதற்காக 

அன்னை மரியாளையும்,  இயேசு பாலனையும் அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக  எகிப்திற்குச்

 சென்று மூன்று ஆண்டுகள் அங்கு
 நாடோடியாகவே வாழ்ந்தார்.

கூலி வேலை செய்தே குடும்பத்தைக் காப்பாற்றினார்.

மூன்று ஆண்டுகள் கழித்து இறைவனின் தூதரின் அறிவுரைப்படி இஸ்ராயேல் நாட்டுக்குத் திரும்பினார்.

அங்கிருந்து இறைத்தூதரின் அறிவுரைப்படி குடும்பத்துடன் கலிலேயா நாட்டுக்குச் சென்று,

 நாசரேத் ஊரில் குடியேறினார்.

அங்கு தச்சு வேலை செய்து திருக் குடும்பத்தை காப்பாற்றினார்.

இறை மகனாகிய இயேசுவும்  தன்னை வளர்த்த தந்தைக்கு தச்சுத் தொழிலில் உதவிகரமாக இருந்தார். 

மேலெழுந்தவாரியாக பார்ப்பவர்களுக்கு அவர் ஒன்றும் அசாதாரணமாக சாதித்தது போல் தெரியாது.

தச்சு தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றியவர்கள் அவரைப் போலவே நிறைய பேர் நாட்டில் வாழ்ந்திருப்பார்கள், இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவரது சாதனை இயேசு பிறப்பதற்கு இடம் தேடி அலைந்ததிலோ, 

குடும்பத்தை அழைத்துக்கொண்டு எகிப்துக்கு சென்றதிலோ, 

நாசரேத் ஊரில் குடியேறி தச்சு தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றியதிலோ 

அடங்கியிருக்கவில்லை.

பல கோடிகளுக்கு அதிபதியான ஒருவர் தனது குழந்தையை நமது கையில் ஒப்படைத்து இதை வளர்த்து ஆளாக்குவது நமது பொறுப்பு என்று சொல்லி இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

நமது கையில் குழந்தையை வளர்க்க நமது உழைப்பைத் தவிர வேறொன்றுமில்லை என்று வைத்துக்கொள்வோம்.

கோடிகளுக்குச் சொந்தமான தந்தை அவரது குழந்தையை வளர்ப்பதற்காக நமக்கு ஒரு பைசா கூட தரவில்லை என்று வைத்துக்கொள்வோம்.

பிரதிபலனாக ஒரு பைசா கூட கிடைக்காமல் கோடிஸ்வர குழந்தையை நமது உழைப்பால் மட்டுமே வளர்த்தால் நமது உணர்வுகள் எப்படி இருக்கும்?

கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் சாதாரண மனிதராகிய சூசையப்பரின் அசாதாரண சாதனை புரியும்.

சூசையப்பரின் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது சர்வ வல்லப கடவுளின் மகன்.

சர்வ லோகத்தையும் 
படைத்தவருடைய ஒரே மகன்.

இயேசுவும் சர்வ வல்லப கடவுள் தானே.

இயேசுவை சூசையப்பரிடம் ஒப்படைத்த தந்தையும், இயேசுவும் ஒரே கடவுள் தான்.

அதாவது சர்வ உலகத்தையும் படைத்த கடவுள்தான் தன்னை வளர்க்க சூசையப்பரிடம் தன்னை ஒப்படைத்திருக்கிறார்.

இது சூசையப்பருக்கு  நன்கு தெரியும்.

ஆனால் அவர் திருக்குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இறைவனிடம் இருந்து எந்த ஒரு உலகைச் சார்ந்த உதவியையும் எதிர்பார்க்கவே இல்லை.

அவரிடம் இருந்ததெல்லாம் முழுமையான விசுவாசமும், முழுமையான கீழ்ப்படிதலும்தான்.

விசுவாசத்தினால் சூசையப்பர் இறைவனுக்கு தன்னையே அர்ப்பணித்து விட்டார்.

முழுமையான கீழ்ப்படிதலின்  காரணமாக 

"மரியாளை ஏற்றுக்கொள்" என்று சொன்னவுடன் மறு கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார்.

மரியாளின் வயிற்றில் இருந்தது கடவுள் என்பது அவருக்கு தெரியும்.

ஆனால் அவர் பிறப்பதற்கு ஒரு இடத்தை தரும்படி அவரிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவுமில்லை,

 கேட்கவேண்டும் என்று நினைக்கவும் இல்லை.

"எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம்."
என்று இறைத்தூதர் சொன்னவுடன் மறு கேள்வி கேட்காமல் எகிப்திற்கு அழைத்துச் சென்றார்.

"திரும்பி வா" என்று அழைத்தவுடன்
மறு கேள்வி கேட்காமல்  திரும்ப  அழைத்து வந்தார். 

"கலிலேயா நாட்டுக்குச் செல்லும்"
என்று சொன்னவுடன் மறு கேள்வி கேட்காமல் கலிலேயாவுக்குச் சென்றார்.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி சொந்த உழைப்பாலேயே கடவுளையும் காப்பாற்றினார், அவரது அன்னையையும் காப்பாற்றினார்.

இயேசு அவரது முப்பதாவது வயதில் பொது வாழ்விற்கு நுழைந்தார்.

அதற்கு முன்னரே புனித சூசையப்பர் மரணம் அடைந்தார்.

  தனது பொதுவாழ்வின் போது எத்தனையோ பேர்களின் நோய்களை குணமாக்கி,

இறந்தவர்களை கூட உயிரோடு எழுப்பிய இயேசு,

தன்னை வளர்த்த தந்தைக்கு மரணம் வர அனுமதித்தார்.

அவர் நினைத்திருந்தால் சூசையப்பரின் நோயைக் குணமாகி அவருக்கு நீண்ட ஆயுளை கொடுத்திருக்கலாம்.

இயேசு அதை செய்யவில்லை.

இயேசுவின் மடியிலே சூசையப்பர் தன் உயிரை விட்டார்.

இதிலிருந்து இயேசு 

பிரதிபலன் எதிர்பார்க்காத  அர்ப்பண வாழ்விற்கும், 

இறைவனது சித்தப்படி மட்டுமே வாழும் முழுமையான விசுவாச வாழ்வுக்கும்,

இறைவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்வதற்கும்

எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது.

சர்வ வல்லப கடவுளாகிய இயேசுவும் அவரால் படைக்கப்பட்ட மனிதர்களாகிய சூசையப்பருக்கும், அன்னை மரியாளுக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

உலகை படைத்தவரே உலகப்பற்று  இன்றி ஏழையாக வாழ்ந்தார்.

தனது வளர்ப்பு தந்தையின் தொழிலாகிய தச்சு வேலையைத் தானும் செய்து தன்னை வளர்த்தவர்களுக்கு உதவியாக இருந்தார்.

அவருக்காக அர்ப்பணித்து வாழ்பவர்களும் அவரைப்போலவே கீழ்ப்படிதலோடும், ஏழ்மையிலும் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

அவரது எதிர்பார்ப்பின் படியே சூசையப்பரும் அன்னை மரியாளும் வாழ்ந்தார்கள்.

 தமது பொது வாழ்வின் போது ஐந்து அப்பங்களை கொண்டு 5000 பேருக்கு உணவளித்தவர் அவர்.

அந்த உதவியை தன்னை 
வளர்த்தவர்களுக்கு அவர் செய்யவில்லை.

அருள் உதவியைத் தவிர வேறு எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் கடவுளுக்காகவே  தனது வாழ்வை அர்ப்பணித்த சூசையப்பரது மனப்பக்குவத்தை எண்ணிப்பார்த்தால் அவரது அசாதாரண வாழ்க்கை புரியும்.

நம் எல்லோருக்கும் திருக் குடும்பத்தின்மீது பக்தி இருக்கிறது, மறுக்கவில்லை.

நமது பக்தியை எதற்கு பயன்படுத்துகிறோம்?

இயேசுவை போலவும், அன்னை மரியாளை போலவும், சூசையப்பரைப் போலவும்

அர்ப்பண வாழ்வு வாழ பயன்படுத்துகிறோமா?

உலகியல் உதவிகளை கேட்க மட்டும் பயன்படுத்துகிறோமா?

தன்னை வளர்த்த மரியாளைப் போலவும் சூசையப்பரைப் போலவும் 

நாம் வாழ வேண்டும் என்று இயேசு நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

அவரது எதிர்பார்ப்பின் படி வாழ்ந்தால்தான் நாம் இயேசுவின் சீடர்கள் என்பதில் அர்த்தம் இருக்கிறது.

அர்ப்பணம், கீழ்ப்படிதல், ஏழ்மை இவைதான் நாசரேத்தூர் 
தச்சனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment