Tuesday, May 11, 2021

"நான் தந்தையிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார்: அவர் தந்தையிடமிருந்து வரும் உண்மையின் ஆவியானவர். அவர் வந்து என்னைப்பற்றிச் சாட்சியம் கூறுவார்." (அரு.15:26)(தொடர்ச்சி)

"நான் தந்தையிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார்: அவர் தந்தையிடமிருந்து வரும் உண்மையின் ஆவியானவர். அவர் வந்து என்னைப்பற்றிச் சாட்சியம் கூறுவார்." (அரு.15:26)

(தொடர்ச்சி)

பரிசுத்த ஆவி அவர்களை திடப் படுத்தினார் என்று கூறும்போது மூவொரு தேவன் அவர்களைத் திடப் படுத்தினார் என்பதே பொருள்.

இப்போது ஒரு கேள்வி எழும்:

திடப்படுத்தும் வேலையை இயேசு போதிக்கும் போதே செய்திருக்கலாமே,   

ஏன் பெந்தேகோஸ்தே திருநாள் வரைக்கும் காத்திருக்க வேண்டும்?

இயேசு சர்வ வல்லவர். 

அவர் நினைத்திருந்தால் அப்போஸ்தலர்களுக்கு அவர் சொன்னது அனைத்தும் உடனுக்குடன் நன்கு புரியும்படி செய்திருக்கலாம். 

அவர்களை விசுவாசத்தில் மிகவும் ஆழமாக உறுதிப் படுத்தியிருக்கலாம்.

ஆனால் வேண்டுமென்றேதான்,

நமது மொழியில் சொல்வதானால்,

சரியான 'மக்குகளை'

 அப்போஸ்தலர்களாகத் தெரிந்து எடுத்தார்.

"மனுமகன் மனிதர்களிடம் கையளிக்கப்படுவார். அவர்கள் அவரைக் கொல்லுவார்கள். கொல்லப்பட்டு மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவார்" என்று தம் சீடர்களிடம் சொன்னபோது.

அது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்கவும் அஞ்சினர்.
(மாற்கு.9:31,32)

இவ்வளவு தெளிவாக ஆண்டவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. விளக்கும்படி கேட்கவும் தோன்றவில்லை.


"அவர்களை நோக்கி, "இவ்வுவமை உங்களுக்கு விளங்கவில்லையா? பின் எப்படி எல்லா உவமைகளையும் புரிந்துகொள்வீர்கள்?"
(மாற்கு.4:13)

இயேசு சொன்ன உவமைகளைக் கூட புரிந்து கொள்ள முடியாதவர்களைத் தான் இயேசு தன் நற்செய்தியை உலகெங்கும் பரப்ப தெரிந்தெடுத்தார்.

இதற்குப் பின்னால் கூட ஒரு இறைத் திட்டம் இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

நமது உலக கணக்குப்படி இயேசு மூன்று ஆண்டுகள்தான் உலகில் நற்செய்தியைப் போதித்தார்.

மரித்து, உயிர்த்த நாற்பதாவது நாள் விண்ணகம் எய்தினார்.

விண்ணகம் என்பது எட்டாத தொலைவில் உள்ள ஒரு இடம் அல்ல. அது ஒரு வாழ்க்கை நிலை.

 இறைவன் நித்திய காலமாக வாழ்ந்து கொண்டிருப்பது விண்ணக நிலையில்தான்.

ஆன்மீக ரீதியில் இறைமகன் இயேசு படைத்தவர் என்ற முறையில் படைக்கப்பட்ட அனைவரோடும் பராமரிப்பாளராக இருக்கிறார்.


திருச்சபையைஉருவாக்கிய நாளிலிருந்து அதை பராமரித்துக் கொண்டிருப்பவர் அவரே.

திருச்சபை அவரது ஞான உடல்.

திருச்சபையின் அனைத்து உறுப்பினர்களையும், அவர்களை வழிநடத்திக் கொண்டிருப்பவர்களையும் பராமரித்து வருபவர் அவரே.

ஆகவே உண்மையில் இன்றும் இயேசு நம்மோடுதான் இருக்கிறார்.

பின்வரும் வேதவாக்கியங்கள் அதை நிரூபிக்கும்.


"அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் தூதுரைத்தனர்.

 ஆண்டவரும் அவர்களோடு செயல்புரிந்து, 

உடனிகழ்ந்த அருங்குறிகளால் தேவ வார்த்தையை உறுதிப்படுத்தினார்."
(மாற்கு.16:20)

"ஆண்டவரும் அவர்களோடு செயல்புரிந்து," 

என்ற வேத வாக்கிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்கிறோம்?

அவர் விண்ணகம் எய்திய பின்னும் அப்போஸ்தலர்கள் நற்செய்தியை போதிக்கும் போது இயேசு அவர்களோடு இருந்து செயல் புரிந்து கொண்டிருந்தார்.

அதனால்தான் அவர்கள் பயமின்றி தெளிவாக நற்செய்தியை அறிவித்தார்கள்.

உண்மையில் இன்றுவரை   உலகிற்கு நற்செய்தியை அறிவித்து கொண்டிருப்பவர் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே.

அப்போஸ்தலர்களும், அவர்களது வாரிசுகளும் கருவிகள் மட்டுமே.

இன்றும் அப்போஸ்தலர்களின் குருத்துவ வாரிசுகளான குருக்களோடு இருந்து செயல் புரிந்து கொண்டுதான் இருக்கிறார்.

இதை நான் சொல்லவில்லை. வேத வாக்கு சொல்கிறது.

"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். இதோ! 

நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
(மத்.28:20)

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

என்ற வேத வாக்கில் இருந்து இயேசு இன்றும் அச்செய்தியை போதிக்கும் நமது குருக்களோடு சேர்ந்து செயலாற்றி கொண்டிருக்கிறார் என்று நமக்குப் புரிகிறது.

இந்த செய்திக்கு அழுத்தம் கொடுப்பதற்காகத்தான் 

இயேசு அப்போஸ்தலர்களை பெந்தேகோஸ்தே திருநாள் வரை புரியாதவர்களாகவும் பயந்தவர்களாகவும் இருக்க விட்டுவிட்டு

பெந்தேகோஸ்தே திருநாளில் அவர்களுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்ததோடு 

உயிரையும் கொடுத்து நற்செய்தியை பரப்புவதற்கான தைரியத்தையும் கொடுத்தார்.

பரிசுத்த ஆவி எப்போதும் அவர்களுடன்தான் இருந்தார்.

ஆனால் பெந்தேகோஸ்தே திருநாள் அன்று அவர்களுக்கு
திடத்தை அளித்தார்.

அந்த திருநாள்தான் திருச்சபை வேகமாக செயல்பட ஆரம்பிக்க மூவொரு தேவனால் நித்திய காலமாக திட்டமிடப்பட்ட நாள்.

அதனால்தான் அந்த நாளை திருச்சபையின் பிறந்தநாள் என்கிறோம்.

எதெது எப்பப்போ நடக்க வேண்டுமென்று இறைவன் நித்திய காலமாக திட்டமிட்டிருக்கிறாரோ அதது அப்பப்போ நடக்கும்.

நற்செய்தியை போதித்தவர்கள் அப்போஸ்தலர்களாக இருக்கலாம்.

ஆனால் அவர்களோடு இருந்து செயலாற்றிக் கொண்டிருந்தவர் மூவொரு தேவன்தான்.

தனது வல்லமையை நமக்கு தெரியப்படுத்தவே இயேசு மக்குகளாக பார்த்து அப்போஸ்தலர்களாகத் தெரிவு செய்தார்.

தன் வல்லமையை அவர்களோடு பகிர்ந்து கொண்டு நற்செய்தி அறிவிக்க அவர்களை அனுப்பினார்.

அவருடைய வல்லமையால் தான் அப்போஸ்தலர்கள் உலகெங்கும் சென்று செய்தியை அறிவித்தார்கள்.

இன்றும் பாப்பரசரோடும், 
ஆயர்களோடும், குருக்களோடும் 100% செயல்புரிந்து கொண்டிருப்பவர் நம் ஆண்டவராகிய இயேசுவே.

இன்று திருச்சபையை வழிநடத்தி கொண்டிருக்கும் இவர்களை கடவுள்தான் வழி நடத்தி கொண்டிருக்கிறார்.

ஆகவே இவர்கள் காட்டும் பாதை சரியான பாதை என்று உறுதியாக நம்பி அப்பாதை வழியே செல்லலாம்.

பாப்பரசர் தவறி விடுவாரோ என்று பயப்பட தேவை இல்லை.

 ஏனென்றால் அவரை வழி நடத்திக் கொண்டிருப்பவர் பரிசுத்த ஆவியானவர் தான்.

 பரிசுத்த ஆவியானவரால் தவறு செய்ய முடியாது.

ஒரே, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபையால் தவறு செய்யவே முடியாது.

திருப்பலி ஒப்புக் கொடுக்கும்போது குருவானவர்,

"இது என் சரீரம்." என்றுதான் சொல்கிறார்.

"இது கிறிஸ்துவின் சரீரம்" என்று சொல்லவில்லை. 

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம் 

பீடத்தில் நாம் குருவானவரை பார்த்தாலும் உண்மையில் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருப்பவர் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே.

நாம் குருவானவரிடம் பாவசங்கீர்த்தனம் செய்யும்போது நமது பாவங்களை மன்னிப்பது நம் ஆண்டவராகிய இயேசுவே.

பாவசங்கீர்த்தனத் தொட்டியில் நாம் குருவானவரைப் பார்த்தாலும் விசுவாச அடிப்படையில் பாவசங்கீர்த்தனம் கேட்டுக் கொண்டிருப்பது இயேசு கிறிஸ்துவே.

ஆன்மீகப் பாதையில் முன்னேற விரும்புகிறவர்கள் தங்களை வழி நடத்துவதற்காக யாராவது ஒரு கத்தோலிக்க குருவானவரை தங்களது ஆன்மீக வழிகாட்டியாகத் (Spiritual Director) தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர்கள் காட்டும் வழி இயேசுவே காட்டும் வழி.

 ஏனெனில் அவர்கள் மூலமாக செயல்படுவது நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே.

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
(மத்.28:20)

அவர்கள் காட்டும் வழியில் கண்ணை மூடிக்கொண்டு நடக்கலாம். பத்திரமாக விண்ணகம் சென்றடைவோம்.

 லூர்து செல்வம்





.

No comments:

Post a Comment