Saturday, May 29, 2021

"கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார்." (ஆதி. 1:27)

"கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார்." (ஆதி. 1:27)
 
கடவுள் நம்மை அவர் சாயலாகப் படைத்திருக்கிறார்.

Camera வைப் பயன்படுத்தி நம்மை நாமே புகைப்படம் எடுத்துக் கொண்டால்

படத்தில் தெரிவது நமது சாயல்.

அது நாம் அல்ல. தோற்றத்தில் நம்மைப் போன்றது.

நம்மைப்  பார்க்காதவர்கள் கூட நமது புகைப்படத்தை பார்த்தால் நம்மை பார்க்கும் போது அடையாளம் கண்டு கொள்வார்கள்.

ஆகவேதான் ID card களில் நமது புகைப்படத்தை பதிவு செய்கிறோம்.

நாம்  உலகில் வாழும்போது இறைவனை கண்ணால் பார்க்க முடியாது.

ஆனால் நம்மை நாமே அறிந்து கொண்டால் கடவுளையும் அறிந்து கொள்ளலாம்.   ஏனெனில் நாம் கடவுளின் சாயலாக படைக்கப்பட்டிருக்கிறோம்.

அவரை அறிந்து கொள்வதற்காகத்தான் அவரது சாயலை நமக்கு தந்திருக்கிறார்.

நமது ஆன்மா கடவுளைப் போலவே ஆவி. நமது ஆன்மாவை நாமே உற்று நோக்குவோம்.

 அதில் உள்ள நல்ல பண்புகளை எல்லாம் பட்டியல் போடுவோம். அன்பு, நீதி, இரக்கம், கருணை, மன்னிக்கும் குணம், உதவி செய்யும் குணம் போன்ற நல்ல பண்புகள் யாவும் கடவுள் நம்மோடு பகிர்ந்துகொண்ட அவரது பண்புகள்.

ஒவ்வொரு நல்ல பண்பும் நம்மிடம்  குறைந்த அளவிலேயே இருக்கிறது. அது அளவில்லாத விதமாய் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் கடவுள் இருக்கிறார்.

நமது அன்பு அளவுள்ளது. கடவுள் அளவற்ற அன்பு உள்ளவர்.எல்லோரையும் எப்போதும் நேசிக்கிறார். நம்மை விரும்பாதவர்களுக்கு நம்மால் அன்பு காட்ட இயலவில்லை. கடவுள் எல்லோரையும், அவரை வெறுப்பவர்களை கூட, அளவற்ற விதமாய் அன்பு செய்கிறார்.

நம்மிடமுள்ள நல்ல பண்புகளுக்கு எதிரான பண்புகள் நமது பாவத்தின் விளைவு. கடவுள் பாவமே செய்ய முடியாதவர். ஆகவே அப் பண்புகள் அவரிடம் சிறிது கூட கிடையாது. 

நமது செயலாற்றும் திறன் அளவு உள்ளது. ஆனால்  இறைவன் அளவற்ற வல்லமை உள்ளவர். ஒன்றும் இல்லாமையிலிருந்து கூட அவரால் பொருள்களை உருவாக்க முடியும்.

நமது ஊனக்கண்களால் இப்படிப்பட்ட இறைவனை காண முடியாவிட்டாலும் நமது தியானத்தினால் அவரை காணலாம். அவரை நமது மனதினால் நினைத்துப் பார்க்கலாம், அவரோடு பேசலாம்.

நற்பண்புகளைத் தவிர  வேறு ஏதாவது இறைவனின் சாயல் நம்மிடம் இருக்கிறதா?

மிருகங்களிடம் இல்லாத ஏதாவது ஒன்று நம்மிடம் இருக்கிறதா? 

மிருகங்களால் சிந்திக்க முடியாது. 

நம்மால் சிந்திக்க முடியும். நமது சிந்தனையை வார்த்தைகளால் பகிர்ந்து கொள்ள முடியும். நமது சிந்தனைப்படி செயல்புரிய முடியும்.

சிந்தனை, சொல், செயல் இந்த மூன்றும் தான் நம்மை மனிதர்கள் ஆக்குகின்றன. ஒவ்வொரு மனிதனிடமும் சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்று தத்துவங்களும் உள்ளன. தத்துவங்கள் மூன்று, ஆள் ஒன்று.

சிந்தனையிலிருந்து வார்த்தை பிறக்கிறது. இரண்டிலும் இருந்து செயல் பிறக்கிறது.

மூன்று தத்துவங்கள் ஒரே ஆளாக இருப்பது இறைவனிடமிருந்து நாம் பெற்ற சாயல்.

இறைவனும் சிந்திக்கிறார். 

சிந்தனையிலிருந்து வார்த்தை பிறக்கிறது.

 இரண்டிலும் இருந்து செயல் புறப்படுகிறது.

சிந்திப்பவர் தந்தை.

பிறப்பவர் மகன். (வார்த்தை)

செயல் தூய ஆவி. அன்பின் தேவன்.

"ஆதியிலே வார்த்தை இருந்தார்: அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்."

அருளப்பர் தனது நற்செய்தியை வார்த்தையிலிருந்து ஆரம்பிக்கிறார்.

அதாவது மகனிடமிருந்து ஆரம்பிக்கிறார்.

மகன் கடவுளோடு இருந்தார். தந்தையாகிய கடவுளோடு இருந்தார்.

கடவுளாயும் இருந்தார். தந்தையோடு கடவுளாகவும் இருந்தார்.

"ஆனால், நீரால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர், "ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பவர்" என்றார்."

இவை திருமுழுக்கு அருளப்பரின் வார்த்தைகள்.

இயேசு பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுத்தார். 

நாம் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுகிறோம்.

ஞானஸ்நானத்தின் போது நமது ஆன்மீக வாழ்க்கை ஆரம்பிக்கிறது. 
ஆரம்பத்திலிருந்து நமது ஆன்மீக வாழ்வில் செயலாற்றிக் கொண்டிருப்பவர் பரிசுத்த ஆவியானவர்தான்.

தந்தை பெறுபவர்.
மகன் பிறப்பவர்.
பரிசுத்த ஆவி செயல் புரிபவர்.
மூவரும் ஒரே கடவுள்.

மூவொரு கடவுள்.

 நற்செய்தி அறிவிக்கவும், பாவத்திலிருந்து நம்மை மீட்கவும்,  அப்பணியை தொடர்ந்து செய்ய திருச்சபையை நிறுவவும்

தந்தை மகனை பூமிக்கு அனுப்புகிறார்.

"ஏனெனில், என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்."
(அரு. 6:38)

மகன் திருச்சபையை நிறுவுகிறார்.

உலகம் முடியும் வரை 
 திருச்சபையோடிருந்து செயல்புரிபவர் பரிசுத்த ஆவி


"நானும் தந்தையைக் கேட்பேன்: தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார்: அவர் உங்களோடு என்றும் இருப்பார்.
அவர் உண்மையின் ஆவியானவர்"
(அரு.14:16,17)

மூன்று ஆட்களும் ஒரே கடவுளாய் இருப்பதால் செயல்  புரிபவர் கடவுளே.

ஆனாலும் ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு பணி குறிப்பிடப்பட்டிருக்கிறது.


படைத்தவர் தந்தை.
மீட்டவர் மகன்.
திருச்சபையை வழி நடத்துவர் பரிசுத்த ஆவி.

மூன்று பணிகளையும் செய்பவர் ஒரே கடவுள்தான்.

(மனிதனாக பிறந்து பாடுகள் பட்டு மரித்தது மகன் மட்டுமே. 
 ஆயினும் படைத்ததும், மீட்டதும், திருச்சபையை வழி நடத்துவதும் மூவொரு தேவனே.)

ஆக சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்று பணிகளைப் பொறுத்தமட்டிலும் நாம் திரியேக தேவனின் சாயலில்தான் படைக்கப்பட்டிருக்கிறோம்.

மூவொரு தேவனைப் பின்பற்றி வாழ்பவர்கள் சிந்தனை, சொல், செயல் மூன்றிலும் ஒன்றாய் இருப்பார்கள்.

நல்லதை சிந்திப்பார்கள்,
சிந்தித்ததையே சொல்வார்கள்.
சொன்னபடி செய்வார்கள்.

ஒருவனது சிந்தனையும், சொல்லும், செயலும் மாறுபடுமானால்  இயேசுவின் கூற்றுப்படி அவன்  வெளிவேடக் காரன். .

"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு!" (மத்.23:13)

இறைவன் ஏன் மனிதர்களை தன் சாயலில் படைத்தார்?

நம் மீது இறைவனுக்கு  இருக்கிற அளவுகடந்த அன்புதான் இதற்கு காரணம்.

நாம் அவரோடு நித்திய காலம் இணைந்து வாழ வேண்டும் என்ற நோக்கோடு தான் நம்மை படைத்தார்.

We have been created to live in union with God for all eternity.

ஆகவே நம்மையும் அவரைப்போலவே படைத்தார்.

தந்தையைப் போலவே நாமும் நிறைவானவர்களாக வாழ வேண்டும்  என்பதே இயேசுவின் விருப்பம்.

நம்மோடு அவர் பகிர்ந்து கொண்ட நற்பண்புகளில் வளர்ச்சி அடைந்து அவரைப் போலவே மாற வேண்டும் என்பது அவரது ஆசை.

விண்ணக வாழ்வு என்பது மூவொரு தேவனுக்குள் நாம் வாழவிருக்கும் வாழ்வு.

நமது ஆன்மீக பயணத்தின் நோக்கமே இறைவனோடு இணைவது தான்.

அதற்கு ஒரே வழி இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட அவரது சாயலில் வளர்வது.

சாயலில் வளர வேண்டுமானால் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்புகளில் வளர வேண்டும்.

எவ்வளவுக்கு எவ்வளவு அன்பில் வளர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் இறைவனைப் போல் மாறுகிறோம். .

எவ்வளவுக்கு எவ்வளவு மன்னிப்பதில் வளர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் இறைவனைப் போல் மாறுகிறோம்.

இதேபோன்றுதான் ஒவ்வொரு பண்பிலும்.

இறைவனின் சாயலில் வளர்வோம்.

இறைவனின் சாயலோடு விண்ணகம் சென்றால்தான் இராயப்பருக்கு நம்மை அடையாளம் தெரியும்.

மோட்சத்தின் சாவி அவரிடம்தான் உள்ளது.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment