Wednesday, May 12, 2021

"நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியவை இன்னும் பல உண்டு: ஆனால் அவற்றை இப்பொழுது உங்களால் தாங்கமுடியாது."

"நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியவை இன்னும் பல உண்டு: ஆனால் அவற்றை இப்பொழுது உங்களால் தாங்கமுடியாது."
(அரு.16:12)


இயேசு தான் பாடுகள் படுவதற்கு முந்திய நாள் வியாழக்கிழமை இரவு தனது அப்போஸ்தலர்களோடு  பேசிக்கொண்டிருந்தபோது கூறிய வார்த்தைகள் இவை.

இயேசுவின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் சொல்லப்பட்டிருந்தாலும் 

அவை எக்காலத்திற்கும் எந்த சூழ்நிலையில் வாழக்கூடிய மக்களுக்கும் ஆன்மீக ரீதியில் பொருந்துபவையாகவே இருக்கும்.

இயேசு நற்செய்தியை அறிவித்தது அவர் வாழ்ந்த காலத்தில், வாழ்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களுக்காக மட்டுமல்ல.

உலகம் முடியும் வரை, உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழப் போகிற மக்களுக்காகவும்தான்.

எந்த நிலையில் வாழ்கின்ற மக்களும் இயேசுவின் வார்த்தைகளை தங்களுக்கு பொருந்தும் அளவிற்கு  தியானிக்கலாம்.

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது,

 "தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை"

என்று தந்தையிடம் ஜெபித்தார்.

தந்தையோடு இயேசுவும் ஒரே கடவுள்தான் என்பது மூவொரு தெய்வ ரகசியம்.

அப்படியானால் தந்தையை நோக்கி அவர் சொன்ன வார்த்தைகள் தனக்குத் தானே சொல்லிக்கொண்டதாகத்தானே பொருள்!

அவரது விருப்பத்தை தந்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதை அவரே நிறைவேற்ற வேண்டும் என்பதுதானே பொருள்!

கடவுள் மாறாதவர். ஆகவே இயேசுவும் மாறாதவர். அவரது வார்த்தைகளும் மாறாதவை.

இயேசுவின் சிலுவை மரணத்திற்கு யூதர்கள் மட்டுமா காரணம்? நாமும்தானே!

நாம் செய்த பாவங்கள் தானே யூதர்கள் மூலம் அவரை சிலுவையில் அறைந்து கொல்லச் செய்தன!

ஆகவே நம்மை மன்னிப்பதற்காகத்தானே இயேசு தந்தையிடம் அன்று வேண்டினார்!

இயேசுவின் அன்றைய ஜெபத்திற்கு இன்றும் செல்லுபடியாகும் தன்மை (Validity) இருக்கிறது.

கடவுள் தன்னை நோக்கி தானே செய்த ஜெபத்தை கட்டாயம் நிறைவேற்றுவார்.

 இன்றும் இறைமகன் நம்மை மன்னிக்கும்படி தந்தையிடம் பரிந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

அதாவது இன்றும் மூவொரு தேவன் நம்மை  மன்னிப்பதற்காக ஒவ்வொரு விநாடியும் தயார் நிலையில் உள்ளார்.

நாம்தான் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும.


மூவொரு தேவன் மன்னிக்கும் தேவன், அன்றும், இன்றும், என்றும்.

இன்று நாம் தியானிக்கும் வசனம்:

"நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியவை இன்னும் பல உண்டு: ஆனால் அவற்றை இப்பொழுது உங்களால் தாங்கமுடியாது."

அப்போஸ்தலர்களுக்கு இயேசுவின் வார்த்தைகளை புரிந்து கொள்வதிலும், விசுவாசத்திலும், பற்றாக்குறை இருந்தாலும்

அவர்களுக்கு அன்பு நிறையவே இருந்தது.

ஒரு முறை இயேசு,

'' மூப்பர், மறைநூல் அறிஞர், தலைமைக்குருக்கள் இவர்கள் கையால் தான் பாடுகள் பல படவும்,

 கொலையுண்டு 

மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும் எனத் தம் சீடர்களிடம் 
 சொன்ன போது 

அவர் பாடுகள் படுவதை விரும்பாத 
இராயப்பர் அவரைத் தனியாக அழைத்து, 

"ஆண்டவரே, ஐயோ! இது வேண்டாம். இஃது உமக்கு நேராது" என்று அவரைக் கடிந்துகொண்டார்.

அவர்  இராயப்பரை நோக்கி,

 "போ பின்னாலே, சாத்தானே, நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய். ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே" என்றார்.

இராயப்பருக்கு இயேசுவின்மேல் அன்பு நிறைய இருந்தது.

 ஆகவே அவர் பாடுகள் பட்டு கொல்லப்படுவதை விரும்பவில்லை.

மூன்று ஆண்டுகளாக இயேசுவின் கூடவே இருந்து அவரது போதனைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இராயப்பருக்கு 

அவர் எதற்காக உலகிற்கு வந்தார் என்பதே தெரியவில்லை.

மெசியாவைப் பற்றி சாதாரண யூதர்களிடம் இருந்த தவறான எண்ணம் இயேசுவின் சீடர்களிடமும்  இருந்தது.

அதாவது மெசியா யூதர்களது நாட்டை ரோமயர்களின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அரசாள்வார் என்ற எண்ணம்.

அதனால்தான் அருளப்பரது அம்மா இயேசுவிடம் வந்து அவளது பிள்ளைகளுக்கு அவரது ராஜ்யத்தில் உயர்ந்த பதவிகள் கொடுக்கும்படி கேட்டாள்.

இப்படிப்பட்டவர்களிடம்  தான் மறுநாள் படப்போகும் பாடுகள் பற்றியும், 

தனது மரணத்தைப் பற்றியும் விவரமாக சொன்னால் 

அன்பின் காரணமாக  அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

தூய ஆவி  வந்து அவர்களுக்கு சகலத்தையும் புரியவைத்து, மனோ திடத்தைக்‌  கொடுத்த பிறகுதான் அவர்களுக்கு சகலமும் புரியும்.

அதுவரைக்கும் அவரது சீடர்களுக்கு மன சங்கடத்தைக் கொடுக்க இயேசு விரும்பவில்லை.

சீடர்களிடம்

"உண்மையின் ஆவியானவர் வந்தபின், நிறைஉண்மையை நோக்கி உங்களை வழி நடத்துவார்: அவர் பேசுவதைக் தாமாகப் பேசுவதில்லை: கேட்பதையே பேசுவார்: வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.

14 உங்களுக்கு அறிவிப்பதை எனக்குள்ளதிலிருந்தே பெற்றுக்கொள்வதால், அவர் என்னை மகிமைப்படுத்துவார்.

15 தந்தையுடையதெல்லாம் என்னுடையதே: எனவேதான், உங்களுக்கு அறிவிப்பதை எனக்குள்ளதிலிருந்து பெற்றுக்கொள்கிறார்." என்றார்.

மூன்று வசனங்களையும் கூர்ந்து கவனித்தால் இதற்குள் மூவொரு தேவ ரகசியம் பொதிந்து இருப்பது தெரியும்.

"தந்தையுடையதெல்லாம் என்னுடையதே: 

எனவேதான், உங்களுக்கு அறிவிப்பதை

 எனக்குள்ளதிலிருந்து பெற்றுக்கொள்கிறார்."

தந்தையுடையது = என்னுடையது =
எனக்குள்ளதிலிருந்து பெற்று உங்களிடம் சொல்வது.

அதாவது தூய ஆவி சீடர்களுக்கு அறிவிக்கப் போவது மூன்று ஆட்களிடமும் உள்ள ஒரே விஷயத்தைத்தான்.

அதாவது ஒரே கடவுளாகிய மூவொரு தேவனின் மனதில் உள்ளதைத்தான்.

மூவருக்கும் ஒரே ஞானம் என்பதை இந்த வசனங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 "நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியவை இன்னும் பல உண்டு: ஆனால் அவற்றை இப்பொழுது உங்களால் தாங்கமுடியாது."

இந்த வசனம்  சீடர்களுக்குச் சொல்லப்பட்டது. அதிலிருந்து நமது வாழ்வுக்காக நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?

இறைவன் எல்லாருக்கும், எக்காலத்திற்கும் பொதுவானவர்.
அவரது வாக்கும் அப்படியே.

இறைவன் நித்திய காலமும் நிகழ் காலத்திலேயே (Ever present) வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரது சாயலை கொண்டுள்ள நாமும் நிகழ் காலத்திலேயே வாழ வேண்டும் என்பது அவரது விருப்பம்.

கடவுள் நித்தியர். காலங்களுக்கு அப்பாற்பட்டவர்.

 நாம் காலத்திற்கு உட்பட்டவர்கள்.

நமக்கு கடந்த காலம் ஒன்று இருந்தது.

நிகழ்காலம் இருக்கிறது.

எதிர் காலம் இருக்கும்.

கடந்த காலத்தில் வாழ்ந்த நாம்

 நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எதிர்காலத்தில் வாழ்வோம்.

வாழ்ந்து முடிந்ததும் இறைவனோடு நித்தியத்திற்குள் கலந்து விடுவோம்.

எப்படி வாழ்ந்தோம் என்பதும், எப்படி வாழ்கிறோம் என்பதும் நமக்கு தெரியும்.

எப்படி வாழ்வோம் என்பது நமது நிகழ் கால அனுபவத்தில் இல்லை.

நமக்கு நமது எதிர்காலத்தைப் பற்றி அறிய ஆவல் உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.

நம்மை படைத்தவர் நமது எதிர்காலத்தைப் பற்றி அறிய முடியாதவர்களாய் படைத்திருக்கிறார். காரணத்தோடு.

நமது எதிர்காலத்தை நாம் அறிந்தால் "இப்பொழுது நம்மால் தாங்கமுடியாது." (இயேசு சீடர்களுக்கு சொன்ன அதே வார்த்தைகள்.)

எல்லாம் இறைவனது நித்திய கால திட்டப்படியே நடக்கின்றன.

இன்று பிறக்கும் ஒருவன் அவனது பத்தாவது வயதில் நோய் வந்து இறக்க வேண்டும் என்பது இறைவனது திட்டம் என்று வைத்துக் கொள்வோம்.

இந்த உண்மை பிறந்தவனுக்கு உடனே தெரிந்தால் அவனது பத்தாண்டு வாழ்க்கையும் எப்படி இருக்கும்?

பிறந்த உடனே Count down செய்ய ஆரம்பித்துவிடுவான்! பத்தாவது ஆண்டு சாகப் போகிறதை எண்ணியே வாழ்வானேயொழிய எதையும் சாதிக்க எண்ண மாட்டான்.

 ஐந்து வயது முடிந்ததும் முதல் வகுப்பில் அவனைச்  சேர்க்க பெற்றோர் எண்ணினால்

"ஆறாவது வகுப்பிற்கு போகமுடியாத எனக்கு பள்ளிக்கூடம் எதற்கு?" என்று சொல்லிவிடுவான்.

 நமக்கும் என்ன என்ன வியாதிகள் எப்போ எப்போ வரும் என்றும்,

எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த நாளில் மரிப்போம் என்றும் 

முன்கூட்டியே தெரிந்தால் நமது வாழ்வு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!

நமது எதிர்காலம் நமக்குத் தெரிந்தால் நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது!

நிகழ்காலத்திலும் நிம்மதியாக வாழ முடியாது.

ஆகவேதான் நமது எதிர்காலத்தை பற்றி நம்மால் அறிய முடியாத அளவிற்கு நம்மைப் படைத்திருக்கிறார்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் நிகழ்காலத்தை மகிழ்ச்சியோடு வாழ்வதைத்தான்.

எதிர்காலத்தை இறைவன் கையில் ஒப்படைத்துவிட்டு

நிகழ்காலத்தை ஆண்டவருக்காக வாழ்ந்தாலே போதும்.

நிகழ்காலத்தை ஆண்டவருக்கு அன்பு செய்வதிலும்,  

அயலானுக்கு சேவை செய்வதிலும்
நமது கவனத்தை செலுத்தி வாழ்ந்தால்

நமது எதிர்காலம் நன்றாகத்தான் இருக்கும்.

எதிர்காலத்தில்   என்ன நேர்ந்தாலும் அது இறைவனின் சித்தம் என்று முழு பாரத்தையும் இறைவன் கையில் கொடுத்துவிட்டு,

நிகழ்காலத்தில் இறைவனது கட்டளைகளின்படி வாழ்வதில் மட்டும் கவனம் செலுத்தினால் 

நமது வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

இறைவன்மீது முழுமையான விசுவாசம் இல்லாதவர்கள்தான் எதிர்காலத்தைப் பற்றி பயந்து கொண்டு இருப்பார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கொரோனா காலத்தில் நாளை என்ன நடக்குமோ என்று பயந்து கொண்டிருந்தால் நமக்கு போதுமான விசுவாசம் இல்லை என்றுதான் அர்த்தம்.

என்ன நடந்தாலும் இறைவன் சித்தம், என்ன நடந்தாலும் நமது நன்மைக்காகவே நடக்கும்  என்று எண்ணி வாழ்ந்தால் நமக்குள் பயம் சிறிது கூட இருக்காது.

இப்போது என்ன நடந்தாலும் அதை இறைவன் கையில் ஒப்படைத்துவிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தால்

நமது மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திருக்கும்.

இறைவனில், இறைவனுக்காக வாழ்பவர்களுக்கு விண்ணக வாழ்வு 100% உறுதி!

எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் நிகழ்காலத்தில் இறைவன் மடியிலே அமர்ந்து வாழ்வோம்.

நித்திய காலமும் இறைவன் மடியிலே வாழ்வோம்!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment