Tuesday, April 3, 2018

இராயப்பரோடு ஒரு பங்குச்சாமியார்.

இராயப்பரோடு ஒரு பங்குச்சாமியார்.
********************************

"Father., வணக்கம்."

"வணக்கம். எப்படி இருக்கீங்க?"

"பாறையைப்போல உறுதியாக இருக்கேன்.

சரி. உட்காருங்க. உங்களோடு கொஞ்சம் பேசணும்."

"கொஞ்சம் என்ன, நிறையவே பேசலாம்."

"சுகமாக இருக்கீங்களா?"

"என்ன கேலி பண்றீங்களா?

பத்து நாள் மருத்துவ மனையில் இருந்துவிட்டு,  வீட்டுக்குக்கூட போகமல் நேரே இங்கே வந்திருக்கேன்."

"புரியுது . ஒரு பேச்சுக்குக் கேட்டேன்.

எத்தனை ஆண்டுகள் பங்குச் சாமியாரா இருதிருக்கீங்க? "

"4 வருடம் உதவிப் பங்குச் சாமியார்.

20 வருசம் பங்குச் சாமியார்.

5 பங்குகள்."

"இன்னும் ஒரு வருசம் இருந்திருந்தால் வெள்ளி விழா கொண்டாடி யிருந்திருக்கலாம்."

"எனக்கு ஆரம்பத்திலிருந்தே சாமிமார்  தங்களுக்காக விழா கொண்டாடுவது பிடிக்காது.

வீண் ஆடம்பரம்,  வீண்செலவு. நல்ல வேளை ஆண்டவர் என்ன சீக்கிரம் அழச்சிக்கிட்டாரு. இறைவனுக்கு நன்றி."

"கூடக் கொஞ்ச நாள் இருந்திருந்தால் அதிகமா சேவை செய்திருக்லாமே."

"எவ்வளவு காலம், எப்படி சேவை செய்ய வேண்டுமென்று தீர்மானிக்க வேண்டியவர் அவர், நாமல்ல.

நீங்ககூட சாகாம இருந்திருதால் இன்னும் போப் ஆக இருந்திருக்கலாம்.

நானும் இந்த interview விலிருந்து தப்பிச்சிருப்பேன்!"

"அப்போ ஆண்டவர்கிட்டே மாட்டியிருப்பீங்க."

"இப்ப மட்டும் என்னவாம்,  பூமியிலேயே ஆண்டவர்கிட்டேதான் மாட்டிக்கிட்டிருந்தேன்.

அதில் எவ்வளவு  சுகம்!

அவர் என்ன விடலியே!"

"இருந்தாலும், இறந்தாலும் நாம அவர் கையிலதான.

சரி. நீங்க பங்கு நிர்வாகத்த எப்படி பண்ணினீங்க?"

"நான் நிர்வாகமே பண்ணல.

முழுக்க  முழுக்க மக்களின் ஆன்மகுருவாக மட்டுமே இருந்தேன்.

Seminary யில M.B.A வா படிச்சேன்?

Theology க்கும் நிர்வாகத்துக்கும் என்ன சம்பந்தம்?

நான் பையனா இருந்தபோது குடும்ப நிர்வாகம் அப்பா கையில.

பிள்ளைகளை ஒழுங்கா வளர்த்தது அம்மா.

நான் குருப்பட்டம் பெற்று வீட்டுக்கு வந்தபோது அம்மா கொடுத்த advice:

"நீங்க குருமடத்தில படிச்சிட்டு வந்திருக்கது தேவசாஸ்திரம்.

கடவுளை மக்களுக்குக் கொடுப்பது மட்டும்தான் உங்க பணி. இதமறந்துவிடக்கூடாது."

என்பதுதான்.

நான் அம்மாவையும் மறக்கவில்லை, அவங்க advice ஐயும் மறக்கவில்லை."

"அப்போ உங்கள் பங்கை நிர்வாகம் செய்தது யார்?"

" பங்கு மக்கள்.

நமது ஆன்மீக மக்கள்.

நான் பங்குவிட்டு பங்கு மாறக்கூடியவன்.

அங்குள்ள மக்கள்தானே அங்கு நிரந்தரம்.

சிலர் வேலைக்காக வேறு ஊருக்குப் போனாலும் பங்கு மாறாதே."

"மக்களுக்கான ஆன்மீக பணி என்று எதைக் கருதுகிறீர்கள்?"

"தேவத்திரவிய அனுமானங்களை ஒழுங்காக மக்களுக்குக்  கொடுப்பதே நமது பணி.

பங்கு மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது,

அவர்களது பாவங்களை மன்னிப்பது,

திருப்பலி நிறைவேற்றுவது,

நற்கருணை உணவால் ஆன்மாக்களைப் போசிப்பது,

இன்னும் மற்ற தேவத்திரவிய அனுமானங்களை நிறைவேற்றுவது,

ஆன்மாக்களை வழி நடத்துவது மட்டுமே நமது பணி."

"திருப்லிகள் பற்றி? "

"ஞாயிறு  காலைத் திருப்பலி பங்குக் கோவிலில் உறுதியாக இருக்கும்.

ஞாயிறு மாலை ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வோர் ஊரில் இருக்கும்.

தினமும் காலையில் பங்குக் கோவிலில் திருப்பலி இருக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையிலும் ஒவ்வொரு ஊரில் திருப்பலி இருக்கும்.

ஒவ்வொரு திருப்பலிக்கு முன்னும் பாவசங்கீத்தனம் கேட்கப்படும்.

நடைமுறையில் திருப்பலிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பாவசங்கீத்தனத்துக்கும் கொடுப்பது என் வழக்கம்.

நம் ஆண்டவர் பாவமன்னிப்புக்காகத்தான் பலியானார்.

அவரது பலியைப் பாவத்துடன் கொண்டாடுவதும் பாவ நிலையிலேயே அவரை உட்கொள்ளுவதும் எப்படி முறையாகும்?"

"மகிழ்ச்சி.  பிரசங்கத்தைப் பற்றி? "

"எனது பிரசங்கம் அன்றைய வாசகங்களை ஒட்டியே இருக்கும்.

   பிரசங்கம்  15 நிமிடங்களைத் தாண்டாது.

அதற்குமேல் சிலர் தூங்க ஆரம்பித்துவிடுவார்கள்."

"திருப்பலியில் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்?"

"திருப்பலியில் திருச்சபை தந்திருக்கும் சொற்களைத் தவிர சொந்தமாக ஒரு சொல்கூட பயன்படுத்த மாட்டேடேன்.

ஏதாவது அறிவிப்புகள் கொடுக்க வேண்டியிருந்தால் திருப்பலி முடிந்தபின்தான்."

"மக்களின் வருகைபற்றி? "

"நிறையபேர் வருவார்கள்.

யாரும் சாமியாரைத் திருப்திப்படுத்தவோ,  அவரிடம் ஏதாவது சலுகைகள் பெறவோ வருவதில்லை. ஆண்டவருக்காக மட்டுமே வருகிறார்கள்.

அவர்கட்குத் தெரியும் என்னிடமிருந்து ஆன்மீக உதவியைத்தவிர வேறு எதையும் பெற முடியாதென்று.

டாக்டரிடமிருந்து வைத்தியத்தையும், மருந்தையும் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?"

"பள்ளிக்கூட நிர்வாகம் பற்றி?"

"பங்கைச் சேர்ந்த பள்ளிக்கூட உள்நிர்வாகத்தில் நான் தலையிடுவதில்லை.

ஆசிரியர் நியமனம், மாற்றம் போன்ற மேற்றிராசன நிர்வாகதிலும் தலையிடுவதில்லை.

ஆனால் பள்ளிக்கூடத்தில ஞானோபதேசம் சம்பந்தப்பட்ட காரியங்களில் முழுக்கவனம் செலுத்துவேன்."

"ஆமா..நீங்க பள்ளி நிர்வாகத்தில இல்லேன்னா ஞானோபதேசம் சம்மந்தமா நீங்க சொல்றத எப்படிக் கேட்பாங்க? "

"நான்தான அவங்க ஆன்மீக வழிகாட்டி.  ஆன்மீகத்த வழி நடத்தறது அதிகாரமல்ல.

அன்பு மட்டும்தான்.

அது எங்கிட்ட நிறையவே இருக்கு."

"குடும்பங்களைச் சந்திப்பது பற்றி?"

"ஆடுகளை அறியாதவன் ஆயனா இருக்க முடியாது.

பங்கு மக்களை அறியாதவர் பங்குத்தந்தையா இருக்க முடியாது.

மக்களை முழுவதும் அறிய நாம்தான் அவர்களைப் போய்ச் சந்திக்க வேண்டும்.

அதற்கு இல்லங்களைச் சந்திப்பது மிக முக்கியம்."

"ஒவ்வொரு மாதமும் எத்தனை இல்லங்களைச் சந்திப்பீர்கள்?"

"கணக்கு வைப்பதற்காகச் சந்திப்பதில்லை.

இல்லங்களில்,, உள்ளவர்களின் ஆன்மீகப் பிரச்சனைகட்குத்  தீர்வு
காணவே அவர்களைச் சந்திக்கிறேன்.

தேவை இல்லத்திற்கு இல்லம் மாறுபடும்.

ஒன்று மட்டும் உறுதி.

என் பொறுப்பிலுள்ள எல்லா மக்களையும் நான் அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள்.

மதிய உணவு நேரத்தில் எந்த இல்லத்தில் இருக்கிறேனோ அங்கேயே சாப்பிட்டுவிடுவேன்."

"நல்லது. பங்கின் ஆன்மீகத் தந்தையாய் மட்டும் செயல்பட்ட உங்களை வாழ்த்துகிறேன்.

மொட்ச வாசல் திறந்திருக்கிறது.

உள்ளே போகலாம்."

"நன்றி!"

லூர்து செல்வம்.





No comments:

Post a Comment