வெள்ளி14.
அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்.
(தொடக்கநூல் 3:6)
கடவுளால் விலக்கப்பட்டதை மனிதன் செய்ததினால் முதல் பாவம் உலகத்திற்குள் நுழைந்தது.
கடவுளால் விலக்கப்பட்ட மரத்தின் மேல் சாத்தான் அமர்ந்திருக்கிறான்.
அவனுடையது சோதிக்கும் வேலை,
ஆனால் ஏவாளுக்கு அங்கு என்ன வேலை?
விலக்கப்பட்ட மரத்தின் அருகில் அவளுக்கு என்ன வேலை?
விலக்கப்பட்ட மரத்தின் அருகே அவள் சென்றிருக்கக் கூடாது.
சோதனைகள் நம்மை நாடி வரும் ஆனால் நாம் சோதனைகளைத் தேடிப் போக கூடாது.
பாவ சந்தர்ப்பங்களை நாம் தேடி போக கூடாது என்பதற்கு ஏவாளுடைய அனுபவம் ஒரு பாடம்.
சாத்தான் கூறிய பொய்யை உண்மை என நம்பி அவள் பழத்தைப் பறித்துத் தின்றாள்.
சாத்தானின் வார்த்தைகளைக் காதுகளால் கேட்டு,
விலக்கப் பட்ட கனியைக் கண்களால் பார்த்து,
கைகளால் பறித்து,
வாயினால் உண்டாள்.
நல்லவற்றைச் செய்ய கடவுள் அருளிய ஐம்பொறிகளை விலக்கப் பட்டவைகள அனுபவிக்க நாம் பயன்படுத்தும் போது தான் பாவம் ஏற்படுகிறது.
ஐம் பொறிகளும் விலக்கப் பட்டவை அருகில் செல்லாத வரை பாவம் நெறுங்காது.
செய்யக் கூடாததைச் செய்து ஏவாள் இந்த பாடத்தை நமக்குக் கற்பிக்கிறாள்.
மனித ஐம்பொறிகள் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக படைக்கப்பட்டுள்ளன, பாவம் செய்வதற்கு அல்ல.
இறைவன் படைத்த இயற்கையின் அழகை ரசிப்பதற்காக கண்களைப் பயன்படுத்தினால் அது புண்ணியம்.
அசுசியான சினிமாக் காட்சிகளை ரசிக்க அதே கண்களை பயன்படுத்தினால் பாவம்.
அளவோடு சாப்பிட்டால்
மட்டசனம். (Temperance)
அளவுக்கு அதிகமாக சுவை இன்பத்துக்காக எந்நேரமும் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் போசனப் பிரியம். (Gluttony)
ஆதாம் ஏவாளிலிருந்து மனித இனம் ஐம்பொறிகளாலும் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு தனது ஐம்பொறிகளையும் சிலுவையில் பலியாக்கினார்.
இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிபட்ட போதும், முள் முடி சூட்டப்பட்டு அடிபட்ட போதும், சிலுவையில் அறையப்பட்ட போதும் அனைத்து உறுப்புகளும் அடிபட்டன. காரணம் ஏவாளும், நாமும் தான்.
(பொறிவாயில் ஐந்தவித்தான் என்று வள்ளுவர் குறிப்பிடுவது ஆண்டவர் இயேசுவைத் தான்.
சிலுவைப் பொறியில் தனது ஐம்பொறிகளையும் பலியாக்கியவர்.)
ஆதாமும், ஏவாளும் பாவம் செய்தவுடன் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர்.
அவர்கள் ஆடையின்றி தான் படைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் பரிசுத்தமானவர்களாக இருந்தனர். நிர்வாணம் அவர்களுக்கு வெட்கத்தைக் கொடுக்கவில்லை.
பாவம் செய்தவுடன் நிர்வாணத்தை உணர்ந்து வெட்கப்பட ஆரம்பித்தார்கள்.
அப்படியானால்
நிர்வாணம் = பரிசுத்த நிலை.
உடை நமது பாவங்களுக்கு அடையாளம், அதாவது நாம் பாவிகள் என்பதற்கு அடையாளம்.
இயேசுவின் பாடுகளால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டு பாவத்துக்கு முந்திய நிலையாகிய பரிசுத்தத் தனத்தை அடைகிறோம் என்பதற்கு அடையாளமாகத்தான்
பாடுகளின் போது இயேசு ஆடைகள் களையப் பட்டு நிர்வாணமாக்கப் பட்டார்.
சிலுவையில் தொங்கியது நிர்வாணமாகத்தான்.
.அது சிலுவையினால் நாம் அடையும் பரிசுத்தத் தனத்துக்கு அடையாளம்.
இயேசு நமது பாவங்களை மன்னிப்பவர்.
சிலுவை மன்னிப்பின் அடையாளம்.
அதனால்தான் பாவசங்கீர்த்தளத் தொட்டியில் நாம் சிலுவை அடையாளம் போட்டுவிட்டு தான் பாவங்களை அறிக்கையிடுகிறோம்.
குருவானவரும் நம் பாவங்களை மன்னிக்கும் போது சிலுவை அடையாளம் போடுகிறார்.
"ஆனால் தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்; என்று கடவுள் சொன்னார்", என்று ஏவாள் கூறினாள்.
(தொடக்கநூல் 3:3)
ஆனால் அதற்குப் பின் வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்றிருக்கிறார்களே,
அது எப்படி?
நாம் பேசிக் கொண்டிருப்பது ஆன்மீகம்.
ஆன்மீகத்தில் ஆன்மா பாவமில்லாத பரிசுத்த நிலையில் படைக்கப்பட்டது.
பாவம் இல்லாத ஆன்மா உயிரோடு வாழ்கிறது.
சாவான பாவம் ஆன்மாவை மரணம் அடையச் செய்கிறது.
சாவான பாவத்தோடு உள்ள,
அதாவது
மரண நிலையில் உள்ள
ஆன்மாவால் விண்ணக வாழ்வு வாழ முடியாது.
இயேசு தனது உடல் சார்ந்த மரணத்தினால் நமது ஆன்மீக மரணத்தை வென்றார்.
அதாவது,
அவரது உடல் சார்ந்த மரணத்தினால் நமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நமது ஆன்மாவும் உயிர் பெறுகிறது.
இதன் மூலம் இயேசு நமக்கு ஒரு பாடம் கற்றுத் தருகிறார்.
முக்கியத்துவத்தின் அடிப்படையில் உடலை விட ஆன்மா தான் மேலானது என்றாலும்
நமது உடலை ஒறுத்து,
ஒறுத்தல் முயற்சியை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தால் நமது ஆன்மா பரிசுத்தம் அடையும்.
அந்த ஒறுத்தலை நாம் சிலுவை என்கிறோம்.
இப்போது ஒன்று புரிந்திருக்கம்,
நமது முதல் பெற்றோர் எப்போது வீழ்ந்தார்களோ அன்றே நமது மீட்புக்கான பணியும் ஆரம்பித்து விட்டது.
அன்றே மீட்பரின் வருகை குறித்து கடவுள் முன்னறிவித்து விட்டார்.
'உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.
அவள் உன் தலையைக் நசுக்குவாள்.''
(தொடக்கநூல் 3:15)
இவ்வசனத்தில் "பெண்" என்ற வார்த்தை அன்னை மரியாளையும், அவள் வித்து இயேசுவையும் குறிக்கும்.
"அவள் உன் தலையைக் நசுக்குவாள்.''
"நீ முதல் பெண்ணை ஏமாற்றிப் பாவத்தில் பாவத்தில் விழச் செய்தது போல, இயேசுவின் தாயைப் பாவத்தில் விழச் செய்ய முடியாது. அவளைப் பாவ மாசு நெருங்க முடியாது."
இயேசுவின் வருகையும். அன்னை மரியாளின் பாவ மாசற்ற தன்மையும் ஏதேன் தோட்டத்தில் நமது முதற் பெற்றோர் இருக்கும் போதே முன் அறிவிக்கப்பட்டது.
'அன்னை மரியாள் சென்மப் பாவ மாசில்லாமல் உற்பவித்தாள்' என்பதற்கு இந்த இறைவாக்கு சான்று.
" அமலோற்பவ அன்னையே,
எங்களுக்காக உங்கள் திருமகனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment