Friday, February 28, 2025

இறந்த பின் இயேசு செய்த முதல் புதுமை.

இறந்த பின்  இயேசு செய்த முதல் புதுமை.


"தாத்தா, நான் இப்போது கேட்கப் போகும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது."

"'அப்படி என்ன கடினமான கேள்வி?"

"கேள்வி இலேசானது தான்.
பதில் சொல்வதுதான் கடினம்."

"'முதலில் கேள்வியைக் கேள்."

"இயேசு அவரது சித்தப்படி வாழ்பவர்களுக்கு விண்ணக வாழ்வைப் பரிசாக அளிக்கிறார்.

அவரது தந்தையின் சித்தம் நிறைவேற அவருக்கு உதவியவர்களுக்கு என்ன பரிசு அளித்தார்?"

"' முதலில் அவருக்கு உதவி செய்தவர்கள் யார் என்று கூறு."

"இயேசு தனது சிலுவை மரணத்தின் மூலம் நம்மை மீட்கப் தானே உலகுக்கு வந்தார்?"

"'ஆமா."

"பரிசேயர்கள், சதுசேயர்கள், யூத சமயக் குருக்கள், போஞ்சு பிலாத்து, செந்தூரியன், படை வீரர்கள் ஆகிய அனைவரும் தானே அவரைச்  சிலுவையில் அறைந்தார்கள்."

"'ஆமா."

"அப்படியானால் இயேசு வந்த நோக்கம் நிறைவேற அவர்கள் உதவினார்கள் என்று தானே அர்த்தம்."

"'இயேசு தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க வல்லவர் என்று அர்த்தம்."

"அது சரிதான். ஆனாலும் அவர்கள் அவருக்கு எதிராகச்  செயல்பட்டிருக்கா விட்டால் அவரால் சிலுவையில் அறையப்பட்டு இறந்திருக்க முடியாதே."

"'வாதத்திற்காக நீ சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் இயேசு அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டார் என்பது எனக்குத் தெரியாதா?"

"மன்னித்தார் என்பது தெரியும்.
ஏற்றுக் கொண்டார் என்றால்?"

"' நமது பாவங்கள் மன்னிக்கப் பட்டால் நாம் எங்கே செல்வோம்?"

"மோட்சத்துக்கு. அவர்கள் மோட்சத்துக்குப் போய் விட்டார்கள் என்று சொல்கிறீர்களா?"

"'யாரும் நரகத்திற்குச் சென்றிருக்கிறார்கள் என்று சொல்ல நமக்கு உரிமை இல்லை.

கடவுளின் அளவுகடந்த இரக்கத்தினால் மோட்சத்துக்குச் சென்றிருக்கிறார்கள் என்று நம்பினால் தப்பில்லை."

"நீங்கள் சொல்வதை நிரூபிக்க ஒரு ஆதாரமாவது இருக்கிறதா?"

"' இயேசுவின் சிலுவை மரணத்தில் செந்தூரியனின் பங்கு என்ன என்று தெரியுமா?"

"செந்தூரியன் என்றால் நூறு ரோமைப் படை வீரர்களுக்குத் தலைவன்.

இங்கே, ஆளுநரின் பொறுப்பிலுள்ள படைத் தலைவன்.

இயேசுவைச் சுற்றூணில் கட்டி வைத்து அடித்தவர்களும், முள் முடி சூட்டி அடித்தவர்களும் படை வீரர்கள் தான்."

"'உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அத்தனை உறுப்புக்களும் இரத்த ஆறு ஓட காயங்கள் ஏற்படும் அளவுக்கு அடித்தார்கள்.

நமது பாவங்களுக்கு பரிகாரமாக சிந்தப்பட்ட இரத்தம்.

அவரது முகத்தில் எச்சில் துப்பி அசிங்கப் படுத்தியதுமல்லாமல் கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்தினர்.

பிலாத்து இயேசுவுக்கு சிலுவை மரணத் தீர்ப்பு அளித்தவுடன் அந்தப் பொறுப்பை செந்தூரியன் வசம் ஒப்படைத்தான்.

செந்தூரியனுக்கு ஒரு கண் தெரியாது.

இயேசுவின் மேல் பாரமான சிலுவையை ஏற்றினார்கள்.

தன் ரத்தத்தின் பெரும்பகுதியை அடிபடும் போதே இழந்துவிட்ட இயேசு உடலில் பலம் இல்லாததால் நடந்தபோது மூன்று முறை சிலுவையோடு கீழே விழுந்தார்.

கீழே விழுந்த மாட்டை  விவசாயி 
தார்க்கம்பால் குத்தி, சாட்டையால் அடித்து எழுப்புவது போல,

வீரர்கள் இயேசுவைக் காலால் உதைத்தும், சாட்டையால் அடித்தும் எழுப்பினர்.

அவர் நடந்து சென்று கொண்டிருந்த போதும் அவரைச் சாட்டையால் அடித்துக் கொண்டே சென்றனர்.

அன்னை மரியாள் தான் பத்து மாதம் சுமந்து பெற்று, பாலூட்டி, சீராட்டி,  உணவளித்து வளர்த்த தனது செல்ல மகனை வீரர்கள் அடித்த அடிகளின் வலியையும், சிலுவையையும் உள்ளத்தில் சுமந்து கொண்டு,

நமது பாவங்களுக்கு பரிகாரமாக தனது மகனின்  பாடுகளை விண்ணகத் தந்தைக்கு ஒப்புக்கொடுத்துக்கொண்டே பின்னால் நடந்து சென்றாள்.

அவளது உறவினப் பெண்களும் அவளோடு அழுது கொண்டு சென்றார்கள்.

கட்டப்பட்டு கல்வாரி மலையை அடைந்த பின் செந்தூரியன் தலைமையில் வீரர்கள் இயேசுவை ஆணிகளால் சிலுவையில் அறைந்தார்கள்.

ஆணிகளின் பின்பகுதியை மடக்குவதற்காக சிலுவையை குப்புற மாற்றி போட்டார்கள்.

இயேசுவின் உடல் தரையிலும், பாரமான சிலுவை அவர் மேலும் இருக்க,

ஆணிகளை பின்பக்கம் அடிக்கும்போது அவரது உடல் சிலுவையின் பாரத்தால் தரையோடு தரையாக நைந்து கொண்டிருந்தது.

மீதமிருந்த ரத்தமும் கல்வாரி மலையில் ஆறாக ஓடியது.

பின் சிலுவையை நட்டமாக நிறுத்தினார்கள்.

மீதம் இருந்த ரத்தம் காயங்கள் வழியே வடிந்து கொண்டிருந்தது.

இந்த நிலையிலும் இயேசு,

 "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று தந்தையை நோக்கி வேண்டினார்.

அவரும் அவரது பாடுகளுக்குக் காரணமான அனைவரையும் மனதார மன்னித்தார்.

பிற்பகல் மூன்று மணியளவில்,

"தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். 


இதைக் கண்ட செந்தூரியன்  "இவர் உண்மையாகவே நேர்மையாளர்" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து  இறக்குவதற்குமுன் அவர்  இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்வதற்காக செந்துரியன் ஒரு ஈட்டியால் இயேசுவின் விலாப் பகுதியில் குத்தினான்.

இதயத்தில் கொஞ்சமாக மீதி இருந்த ரத்தம் தண்ணீரோடு வெளியேறியது.

அந்த ரத்தத்தின் ஒரு சொட்டு செந்தூரியனின் பார்வையற்ற கண்ணின் மேல் விழுந்தது.

செந்தூரியன் உடனே பார்வை பெற்றான்.

இறந்த பின்பும் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதே இயேசு ஒரு புதுமை செய்து தனது சிலுவை மரணத்தை வழி நடத்திய செந்தூரியனின் கண்ணை குணமாக்கினார்.

இது அவர் இறந்த பின் செய்த முதல் புதுமை.

தனக்குத் தீமை செய்தவனுக்கு நன்மை செய்ய அவர் செய்த புதுமை.

 முற்றிலும் குணமடைந்த செந்தூரியன் மனம் திரும்பி தனது பதவியை விட்டுவிட்டு நற்செய்தியை பரப்பும் பணியில் ஈடுபட்டார்.

அது மட்டுமல்ல நற்செய்தி பணிக்காக வேத சாட்சியாக மரித்தார்.

அவர் தான் புனித லோஞ்சினுஸ்.
Saint Longinus.

இப்போது சொல்லு, இயேசுவின் இந்த செயலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?"

"எதிர்மறையாக செயல்பட்டாலும், தான் எந்த நோக்கத்துக்காக உலகுக்கு வந்தாரோ அது நிறைவேற உதவிய செந்தூரியனை மனம் திருப்பி,

அவரைப் புனிதராக மாற்றி
விண்ணக வாழ்வுக்குள் ஏற்றுக்கொண்டார்.

இப்போது புரிகிறது.

இயேசு தனக்கு தீமை செய்தவர்களைக் கூட மனம் திருப்பி அவர்களுக்கு விண்ணக வாழ்வைப் பரிசாக அளிப்பவர் என்று புரிகிறது."

"'செந்தூரியனின் மனமாற்றம் வரலாற்று பூர்வமான உண்மை. 
செந்தூரியன் அவர் வகித்த பதவியின் பெயர்.

புனிதராக அவர் பெயர் புனித லோஞ்சினுஸ். (Saint Longinus)

அவருடைய திருநாள் அக்டோபர் 16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது."

"பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போன்ற மற்றவர்கள் என்ன ஆனார்கள்?"

"'மற்றவர்களும் மனம் திரும்பி மீட்படைய இயேசு தனது அருளுதவியை வழங்கியிருப்பார் என்று நாம் நம்பலாம்.

பிலாத்துவின் மனைவி Claudia Proccula புனித சின்னப்பரின் சீடத்தியாக மாறி நற்செய்திப் பணியாற்றினார்.

இயேசு தான் போதித்தவை எல்லாவற்றையும் சாதித்துக் காட்டினார் என்பதற்கு வரலாறு சான்று பகர்கிறது."

"எனது சந்தேகத்தைத் தீர்த்தமைக்கு நன்றி, தாத்தா."

லூர்து செல்வம்.

Thursday, February 27, 2025

"அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார். (மாற்கு நற்செய்தி 9:35)

"அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார். 
(மாற்கு நற்செய்தி 9:35)

இயேசுவின் சீடர்களுக்குள் ஒரு போட்டி,

"நம்முள் பெரியவர் யார்?"

இதை அவர்கள் இயேசு விடம் கேட்க வில்லை.

அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேசியது இயேசுவின் காதுகளில் விழுந்தது.

அவர்களுடைய கேள்விக்கு அவர்கள் கேட்காமலேயே இயேசு பதில் சொன்னார்.

உலகினர் யாரைப் பெரியவர் என்பார்கள்?

உயர்ந்த பதவியில் உளளவர்களை .

அந்த வகையில் இந்தியாவில் மிகப் பெரியவர் யார்?

பிரதம மந்திரி.


தமிழ்நாட்டில் மிகப் பெரியவர் யார்?

முதலமைச்சர்.

குடும்பத்தில்?

தந்தை.

நாம் யாரிடம் அதிகம் சொத்து இருக்கிறதோ, யாருக்கு அதிகம் வருமானம் வருகிறதோ அவரைப் பெரியவர் என்போம்.

இது உலகியல் ரீதியாக, நிரந்தரமற்ற வாழ்க்கை ரீதியாக.

ஆனால் இயேசுவின் பார்வை உலகியலுக்கு நேர் எதிர்மாறானது.

தாழ்ச்சியைப் புண்ணியங்களின் அரசி என்போம்.

யார் தங்களைப் பற்றி தாழ்வாகக் கருதுகிறார்களோ அவர்கள் தான் பெரியவர்கள்.

தாழ்ச்சியை இயேசுவே வாழ்ந்து காண்பித்தார்.

எல்லாம்வல்ல கடவுளாகிய அவர் உலகில் மனிதனாகப் பிறந்த போது ஒரு ஏழைப் பெண்மணியைத் தனது தாயாகத் தேர்வு செய்தார்.

அந்தத் தாய் தன்னை ஆண்டவரின் அடிமையாகக் கருதினாள்.

உலகத்துக் கே அதிபதியான அவர் ஒரு மாட்டுத் தொழுவில் பிறந்தார்.

அவரது பிறப்பைப் பற்றி ஏழை இடையர்களுக்கே முதலில் அறிவித்தார்.

யூதர்களின் அரசராகிய அவர் குற்றவாளிகளின் தண்டனைக் கருவியாகிய சிலுவையைத் தனது சிம்மாசனமாகத் தேர்ந்தெடுத்தார்.

இரும்பாலான மூன்று ஆணிகள் தான் அவருடைய அணிகலன்கள்.

அவரை அடக்கம் செய்த கல்லறை கூட அவருடையது அல்ல.

ஆக கருவரை முதல் கல்லறை வரை அவர் தாழ்ச்சியில் தான் வாழ்ந்தார்.

அவர் தான் உலகிலேயே பெரியவர்.


"ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராக இருக்கட்டும்."  என்ற அவருடைய போதனையை சாதனையாக்கினார்.

லௌகீகமும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று எதிர் மாறானவை.


லௌகீம் நிலையற்ற உலகையும், அழியும் உடலையும் சார்ந்தது.

ஆன்மீகம் ஆன்மாவையும், நிலை வாழ்வையும் சார்ந்தது.

லௌகீகத்தில் பொருள் பற்றுடன் நிறைய பொருள் ஈட்டுபவன் செல்வந்தன்.

ஆன்மீகத்தில் பொருள் பற்று அற்று, அருள் ஈட்டுபவனே அருளாளன்.

லௌகீகத்தில் அதிகாரமும், செல்வாக்கும் படைத்தவனே பெரியவன்.

ஆன்மீகத்தில் உலகில் தாழ்ந்திருந்து விண்ணக வாழ்வுக்கு ஏற்றவனே பெரியவன்.


"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(மத்தேயு நற்செய்தி 11:11)

லூர்து செல்வம்.

Wednesday, February 26, 2025

ஏன் யோசேப்பு குழந்தை இயேசுவையும், மாதாவையும் அழைத்துக் கொண்டு எகிப்துக்குச் சென்றார்?


ஏன் யோசேப்பு குழந்தை இயேசுவையும், மாதாவையும் அழைத்துக்  கொண்டு எகிப்துக்குச் சென்றார்?

"தாத்தா, இறை மகனும், மனு மகனும் ஒரே ஆள் தானே?"

"ஆமா, பரிசுத்த தமதிரித்துவத்தில் இரண்டாம் ஆள்.

 ஆள் ஒன்று, சுபாவம் இரண்டு.."


"' அப்படியானால் அவர் சர்வ வல்லவக் கடவுள் தானே."

"ஆமா, அதில் என்ன சந்தேகம்."

"'அவர் சர்வ வல்லவக் கடவுள் என்று அன்னை மரியாளுக்கும்,
யோசேப்புக்கும் தெரியும்தானே."

"நிச்சயமாக.

"அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். 

அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது"  கபிரியேல் தூதர் மரியாளிடம் சொன்னார் தானே.

'ஆமா."

"'ஆக, குழந்தை இயேசு என்றென்றும் ஆட்சி செலுத்தப் போகும் கடவுள் என்று மாதாவுக்கும் தெரியும், யோசேப்புக்கும் தெரியும்.

 ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து
 குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்,"

என்று சொன்னபோது எல்லாம் வல்ல கடவுள் ஏன் மனிதனுக்குப் பயந்து ஓட வேண்டும் என்ற கேள்வி அவர் மனதில் எழவில்லையா?

தூதர் சொன்னவுடனே  இரவிலேயே யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு,  எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். 

கடவுளின் வல்லமை மீது மாதாவுக்கும், யோசேப்புக்கும் நிச்சயமாக விசுவாசம் இருந்திருக்கும்.

இருந்தும் ஏன் இரவோடு இரவாக எகிப்துக்குப் போனார்கள்?"

"மரியாளை மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்ட யோசேப்பு மனைவியை ஏன் ஏற்றுக்கொண்டார்?"

"'ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்."

"இதில் யோசேப்பின் என்ன பண்பு உனக்குத் தெரிகிறது?"

"'இறைவன் சித்தத்துக்குக் கீழ்ப்படியும் பண்பு."

"வெறுமனே கீழ்ப்படியும் பண்பு அல்ல, எதிர்க் கேள்வி கேட்காமல், விளக்கம் கேட்காமல் கீழ்ப்படியும் பண்பு.

துறவற சபையினர் கொடுக்கும் மூன்று வார்த்தைப் பாடுகளுள் ஒன்று கீழ்ப்படிதல்.

ஒரு முறை ஒரு சபையில் ஒரு 
நவசந்நியாசியை Novice Master அழைத்து, ஒரு விறகுக் கட்டையைக் கையில் கொடுத்து,

"இதைத் தோட்டத்தில் நட்டு, தினமும் ஒரு வாளித் தண்ணீர் ஊற்றி வாருங்கள்" என்றார்.

அவரும் அவர் சொன்னபடியே செய்து வந்தார்.

ஒரு நாள் வெளியிலிருந்து வந்த நண்பர் ஒருவர்,

"ஏன் விறகுக்கட்டைக்குத் தண்ணீர்  ஊற்றுகிறீர்கள்?"  என்று கேட்டார்.

"Novice Masterன் உத்தரவு"

" விறகுக் கட்டை தளிர்க்குமா?"

"தளிர்க்காது."

"தளிர்க்காது என்று தெரிந்தும் ஏன் தண்ணீர்  ஊற்றுகிறீர்கள்?" 

"அது தளிர்ப்பதற்காக 
ஊற்றவில்லை. 

Superior க்குக் கீழ்ப்படிவதற்காக ஊற்றுகிறேன்.

இறைவன் சித்தத்துக்கு எதிர் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்கு எங்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி இது.

Blind obedience."

"'அப்படியானால் குழந்தை இயேசுவைக் காப்பாற்றுவதற்காகக் கூட்டிக்  கொண்டு போகவில்லையா?"

"நோக்கம் அதுதான். ஆனால் வழிமுறை? தனது விருப்பப்படி எல்ல, இறைவன் விருப்பப்படி.

நம்மை வழிநடத்துபவர் இறைவன் தான்.

நீ ஏன் இந்தியாவில் பிறந்தாய்?"

"'நான் பிறக்கவில்லை, படைத்தவர் என்னை இங்கே படைத்திருக்கிறார்."

"Correct. படைத்தவர் சித்தப் படி பிறந்த நீ படைத்தவர் சித்தப்படி தான் வாழ வேண்டும். யோசேப்பு அதைத்தான் செய்தார்.

எகிப்துக்கு போகச் சொன்னபோது போனார்,

 வான தூதர் குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். 

சென்றார்.


அங்கிருந்து கலிலேயாவுக்குப் போகச் சொன்னார்.

போனார்.

அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்கு குடியிருந்தார்.''

"' ஆக இறைவன் சித்தம் என்னவென்று தெரிந்தபின் அதன்படி தான் செயல்பட வேண்டும், நமது விருப்பப்படி அல்ல

ஆனால் இதுதான் இறைவன் சித்தம் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?"

"இயேசு மூன்று வழிகளில் நம்மோடு இருக்கிறார்.

1. இறைவன் எங்கும் இருக்கிறார், ஆகவே நம்மோடும் இருக்கிறார்.

2. திவ்ய நற்கருணையில் நம்மோடு இருக்கிறார்.

3. நமது பாவங்களை மன்னிக்கவும், நமக்கு ஆண்டவரை உணவாகத் தரவும், நமக்கு நற்செய்தியை அறிவிக்கவும் அதிகாரம்  பெற்ற நமது பங்குத் தந்தை உருவிலும் 
நம்மோடு இருக்கிறார்.

ஆன்மீக வாழ்வில் நமது பங்குத் தந்தைதான் நமது ஆன்மீக வழிகாட்டி. 

உடல் சார்ந்த சுகமில்லாதவர்கள் எப்படி ஒரு குறிப்பிட்ட மருத்துவரிடம் தங்கள் உடலை பரிசோதித்துக் கொள்கிறார்களோ 

அதேபோல  நமது ஆன்மீக காரியங்கள் பற்றி அடிக்கடி பங்குத் தந்தையிடம் பேச வேண்டும்.

அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்பவர்களுக்கு இது எளிது.

அவர் காட்டும் வழி நமக்கு இறைவன் சித்தம்.

பங்குக் குருவின் ஆலோசனைப் படி ஆன்மீக வாழ்வு வாழ்பவர்களுக்கு மீட்பு உறுதி.

திருச்சபையின் போதனைப் படி பைபிள் வசனங்களை வாசித்து தியானிப்பவர்களுக்கு அந்த வசனங்கள் காட்டும் வழியே இறைவன் சித்தம்."

இரண்டு படகுகளில் கால்களை வைத்துக் கொண்டு கடலில் பயணிக்க முடியாது.

உலகப் படகை முற்றிலும் விட்டு விட்டு இராயப்பர் படகுக்குள் முற்றிலும் வந்து விட்டாலே நாம் இறைவன் சித்தப்படி தான் நடப்போம்.

"விண்ணகத் தந்தையே, விண்ணக வாசிகள் உமது 
சித்தப்படி நடப்பது போல நாங்களும் நடக்க உமது அருள் வரம் தாரும்."

லூர்து செல்வம்.

Tuesday, February 25, 2025

" பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்."(லூக்கா நற்செய்தி 6:37)

"பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்."
(லூக்கா நற்செய்தி 6:37)

நீதி மன்றத்தில் நீதிபதி எப்படி ஒருவர் குற்றவாளியா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறார்?

சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் .

சாட்சிகளின் வாக்குமூலம் தவறாக இருந்தால் தீர்ப்பும் தவறாகிவிடும்.

நாம் நீதிபதிகள் அல்ல. யாரையும் பற்றி விசாரிக்கவோ, தீர்ப்பளிக்கவோ நமக்கு அதிகாரம் இல்லை.

ஆனால் அநேக சமயங்களில் நமக்கு இல்லாத அதிகாரத்தை நாமே கையில எடுத்துக் கொள்கிறோம்.

சாட்சிகள் செய்ய வேண்டிய வேலையையும் நாமே செய்து கொள்கிறோம்.

நாமே தீர்ப்பையும் அளித்துக் 
கொள்கிறோம்.

நம்முடைய அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டு செயல்படுவது சட்டப்படி குற்றம்.

நீதிமன்றத்தில் சாட்சி கண்ணால் பார்த்ததன் அடிப்படையில் தான் சாட்சி சொல்ல வேண்டும்.

நாம் மற்றவர்ளுடைய வெளியரங்க நடவடிக்கைகளை மட்டும்தான் பார்க்க முடியும்.

உள்ளரங்கத்தை நம்மால் பார்க்க முடியாது.

ஆனால் நாமே யூகித்துக் கொள்கிறோம், 

நமது யூகம் சரி என்று கூற முடியாது.

ஒருவன் மதுக்கடை இருக்கும் தெரு வழியே போனாலே அவனைக் குடிகாரன் என்று தீர்மானித்து விடுகிறோம்.

ஆனால் யூகிக்கவோ, தீர்ப்பிடவோ நமக்கு அதிகாரம் இல்லை.

நாமே கடைக்கும் தெருவுக்கும் முடிச்சி போட்டு வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் யூகிக்கிறோம்.

ஒருவன் குற்றவாளியா, நிரபராதியா என்று தீர்மானிக்க வேண்டியது கடவுள் மட்டுமே.

ஒருவன் மரணிக்கும் போது அவனது ஆன்மா என்ன நிலையில் இருந்தது அவருக்கு மட்டுமே தெரியும்.

ஒருவரது நற்குணங்களை யூகிக்கலாம், அதைப் பற்றி பேசலாம், தப்பில்லை.

எதிர்மறைக் குணங்களை யூகிக்கவோ, அவற்றைப் பற்றி மற்றவர்களிடம் பேசவோ நமக்கு உரிமை இல்லை.

ஒருவரின் பெயரைக் கெடுப்பது எளிது, ஆனால் அதைச் சரி செய்வது மிகவும் கடினம்.

தண்ணீரைக் கொட்டுவது எளிது, கொட்டியதை அள்ளுவது முடியாத காரியம்.

பேப்பரைக் கிழித்துப் போடுவது எனது , ஒட்டுவது கடினம்.

ஒருவரது பெயரைக் கெடுத்தால் அதன் விளைவுகளுக்கு நாம்தான் பொறுப்பு.

இறுதி நாளில் இயேசுவின் தீர்ப்பு நமக்குச் சாததமாக இருக்க வேண்டுமென்றால்,

வாழும்போது நாம் யாரையும் பாதகமாகத் தீர்ப்பிடக் கூடாது.

லூர்து செல்வம்.

Monday, February 24, 2025

உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். (லூக்கா நற்செய்தி 6:28)


உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 
(லூக்கா நற்செய்தி 6:28)

நாம் உலகில் வாழ்ந்தாலும் உலகத்துக்காக வாழவில்லை.

ஆவி (Spirit)யாகிய இறைவன் சடப்பொருளாலான உலகைப் படைத்தார்.

உலகிலுள்ள மண்ணால் ஒரு உருவம் செய்து, அதில் தன் உயிர் மூச்சை ஊதி மனிதனைப் படைத்தார்.  மனிதன் இரண்டு எதிர்ப்பொருட்களின் சங்கமம்.

சடப்பொருள் + ஆவிப் பொருள்.

மண்ணிலிருந்து எடுக்கப் பட்ட உடல் மண்ணுக்கே திரும்பி விடும்.    விண்ணகக் கடவுளின் மூச்சிலிருந்து உருவான ஆன்மா விண்ணுக்கே திரும்ப வேண்டும்.

எதிர் எதிரான இரண்டு பொருட்கள் இணைந்து,

எதிர் எதிர் பக்கம் செல்லவிருப்பதால் 

அதன் செயல் பாடுகளும் எதிர் எதிராகத் தான் இருக்கின்றன. 

உலகில் பாவம் பிறந்ததால் உலகம் = தீமையின் உருவகம்.

விண்ணிலிருந்து மீட்பு வந்ததால்
விண்ணகம் = நன்மையின் உருவகம்.

உலகம் தீமையைத் தான் செய்யும், நன்மை செய்தவர்களுக்கும் கூட அது தீமையையே செய்யும்.

நம் ஆண்டவர் சென்றவிடமெல்லாம் நன்மையையே செய்தார், உலகம் அவரைச் சிலுவையில் அறைந்தது.


விண்ணகம் நன்மையை மட்டுமே செய்யும், தீமை செய்பவர்களுக்கும் அது நன்மையையே செய்யும். நம் ஆண்டவர் அவரைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார்.


கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்-- இதுதான் உலகம்.

தருவதைக் கொடு.

அன்பைத் தந்தால் அன்பைக் கொடு.

அடி தந்தால் அடி  கொடு.

"ஏன்டா அவனைத் திட்டினாய்?"

."அவன் என்னைத் திட்டினான். நான் அவனைத் திட்டினேன்."

பழிக்குப் பழி வாங்குவது உலகம்.

இது உடலைச் சார்ந்தது.

ஆன்மா விண்ணிலிருந்து வந்து விண்ணுக்கே செல்ல வேண்டியது.

தீமைக்கு நன்மை செய்.
இதுதான் விண்ணக விதி

அடித்தால் அடியை வாங்கிக் கொண்டு பதிலுக்கு அரவணைப்பைக் கொடு.

திட்டினால் பதிலுக்கு அன்பாய்ப் பேசு.

யாராவது சாபம் போட்டால், அவனை ஆசீர்வதி.

நாம் பாவம் செய்த போது பதிலுக்கு நம்மை மீட்க வந்த இயேசு தந்த விதி இது.

தீமைக்கு நன்மை என்ற 
விண்ணக விதிப்படிதான் இயேசு சொல்கிறார்,

"உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."

"என்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தேன்,

நீங்களும் உங்களுக்குத் துன்பம் கொடுப்பவர்களை மன்னியுங்கள்.

நான் அவர்களுக்காகத் தந்தையிடம் பரிந்து பேசினேன்.

நீங்களும் உங்களுக்குத் தீமை செய்பவர்களுக்காக தந்தையிடம் செபியுங்கள்."

நாம் விண்ணிலிருந்து இறங்கி வந்த இயேசுவின் விருப்பப்படி செயல்படுகிறோமா?

அல்லது,

உலகினர் செயல்படுவது போல செயல்படுவோமா?

நம்மைத் துன்புறுத்துவோர்க்காக,
நமது ஆலயங்களை எரிப்பவர்களுக்காக,
நாம  உரிமைகளை பறிப்பவர்களுக்காக

இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோமா?

அன்று இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது அவரை அறைந்தவர்களை மன்னித்தது போல 

இன்று நம்மை துன்புறுத்துவோரை மன்னிக்கிறோமா?

சிந்திப்போம்.

நம் ஆண்டவர் அறிவுரைப் படி செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, February 19, 2025

ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? (மாற்கு நற்செய்தி 8:36)



                                           

ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? 
(மாற்கு நற்செய்தி 8:36)


"For how does it benefit a man, if he gains the whole world, and yet causes harm to his soul?"(Mark 8:36)


புனித சவேரியாரை வேத போதகராக மாற்றிய இறைவாக்கு:

"மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் அவனுக்கு வரும் பயன் என்ன?"

என்ற இறை வசனம்தான் பொது மொழி பெயர்ப்பில்,


"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?''

"ஆன்மாவை"  "வாழ்வையே" யாக மாறியிருக்கிறது.

"ஆன்மா" என்ற வார்த்தைக்கு ஒரு பொருள்தான் இருக்கிறது. இறைவனால் படைக்கப் பட்ட நமது ஆன்மா.

பாவத்திலிருந்து ஆன்மாவை மீட்கவே இறை மகன் மனுமகனாகப் பிறந்தார்.

மீட்கப் பட வேண்டியது நமது ஆன்மா.

ஆன்மாவை இழந்தால் = நாம் மீட்புப் பெறாவிட்டால்.

நாம் மீட்புப் பெறாவிட்டால், இந்த உலகத்தையே வென்று அதை நமதாக்கிக் கொண்டாலும் அதில் எந்தப் பயனும் இல்லை.
                   
                       ***

ஆனால் வாழ்வு என்றால் இவ்வுலக வாழ்வையும் குறிக்கலாம்,

மறுவுலக நிலை வாழ்வையும் குறிக்கலாம்.

மொழி பெயர்த்தவர்கள் 
"நிலை வாழ்வையே இழப்பாரெனில்"

என்றாவது மொழி பெயர்த்திருக்கலாம்.


உலகையெல்லாம் வெல்வதை விட தாங்கள் வாழ்வதே மேல் என்று இவ்வுலக வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்
இந்த வசனத்தைத் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்வர்.

இவ்வுலக வாழ்வை விட நிலை வாழ்வே மேல் என நம்புபவர்களுக்கு


"மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் அவனுக்கு வரும் பயன் என்ன?"

என்ற பழைய மொழி பெயர்ப்புதான் ஆதாரம்.


"I will put enmities between you and the woman, between your offspring and her offspring. She will crush your head" (Genesis 3:15)

"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்; அவள் உன் தலையை  நசுக்குவாள்."
(ஆதியாகமம். 3:15 )

இது பழைய மொழிபெயர்ப்பு

உனக்கும் = சாத்தானுக்கும்.
பெண் = மரியாள்.
தலையை நசுக்குவாள் = உன்னால் அவளைத் தீண்ட முடியாது, அதாவது, பாவம் அவளை அணுகாது.

அன்னை மரியாள் சென்மப் பாவ மாசின்றி உற்பவித்தாள் என்பது இந்த இறை வசனம் ஆதாரம்.

ஆனாது பொது மொழிபெயர்ப்பில்,

உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்றார். 
(தொடக்கநூல் 3:15)

இதில் அவள் உன் தலையை நசுக்குவாள் என்ற வார்த்தைகள் இல்லை.


"நானே அமலோற்பவம்" என்ற அன்னை மரியாளின் வார்த்தைகளை நம்பாத பிரிவினை சபையாருக்கு பொது மொழிபெயர்ப்பு ஆதாரம்.

இப்போது சொல்லுங்கள்

பொது மொழி பெயர்ப்பு யாரைத் திருப்திப்படுத்த?

இது மட்டுமல்ல,

கபிரியேல் தூதரின் 

"அருள் நிறைந்தவரே வாழ்க"

என்ற வாழ்த்துரை

"அருள் மிகப் பெற்றவரே வாழ்க"

என்று மாற்றப் பட்டுள்ளது.


இதுவும் மரியாளின் மாசின்மையை நம்பாதவர்களுக்குச் சாதகமான மொழி பெயர்ப்பு.

கத்தோலிக்கர்களின் மிக முக்கியமான விசுவாச உண்மைக்கு பொது மொழி பெயர்ப்பு உலை வைத்திருக்கிறது.

புதுமை விரும்பிகளுக்கு ஒரு வேண்டுகோள்,

மாற்றங்கள் நமது விசுவாசத்தை பலப் படுத்துபவையாக இருக்க வேண்டும். விசுவாசம் குறைவதற்குக் காரணமாக இருக்கக் கூடாது.

நாவில் வாங்கிய நற்கருணை நாதரை கையில் வாங்குவதால் நற்கருணை பக்தி வளர்ந்து விடாது,

முழந்தாள் படியிட்டு ஆராதித்த நற்கருளை நாதரை தலை குனிந்து ஆராதிப்பதால் நற்கருணை பக்தி வளர்ந்து விடாது.

பீடத்தின் மையத்தில் இருந்த நற்கருணை நாதரை ஒரு பக்கத்துக்கு மாற்றுவதால் நற்கருணை பக்தி வளர்ந்து விடாது.

நமது ஆன்மீக வாழ்வின் மையம் திவ்ய நற்கருணைதான் என்பதில்
எந்த மாற்றமும் இல்லை.

லூர்து செல்வம்.

Tuesday, February 18, 2025

வியாழன்20. ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார். (மாற்கு நற்செய்தி 8:33)

வியாழன்20.                                        

ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார். 
(மாற்கு நற்செய்தி 8:33)

"ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று இயேசு சீடர்களைப் பார்த்து கேட்டபோது

சீமோன் பேதுரு,  "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். 

அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 

ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 

எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."

என்று சொன்ன அதே இயேசு அதே சீமோனைப் பார்த்து,
 
"என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்."

என்று சொல்கிறார்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னால்

இயேசுவின் பார்வையில் 
பேறுபெற்றவனாக இருந்த சீமோன் எப்படி திடீரென்று சாத்தானாக மாறினார்?

இயேசு மெசியா. 

மெசியா உலகுக்கு வந்ததன் நோக்கம்

 பாடுகள் பட்டு,
 சிலுவையில் அறையப்பட்டு, மரித்து 
மனிதர் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்து 
அவர்களை பாவத்திலிருந்து மீட்டு நித்திய பேரின்ப வாழ்வுக்கு அழைத்துச் செல்ல.

இராயப்பர் இயேசுவை மெசியா என்று ஏற்றுக் கொண்டதால் அவரைப் பேறு பெற்றவர் என்று அழைத்தார்.

ஆனால் இயேசு பாடுகள் படக் கூடாது என்று தடுத்ததால் அவரைச் சாத்தான் என்று அழைத்தார்.

மனிதர் மீட்பு பெறக் கூடாது என்று,  அவர்களைப் பாவத்தில் விழச் செய்த சாத்தான் தானே விரும்புகிறது!

இயேசு இராயப்பரைப் பற்றி கூறிய வார்த்தைகள் அவருடைய சீடர்களாகிய நமக்கும் பொருந்தும்.

நாம் இயேசுவை உலகின் பாவங்களைப் போக்க வந்த மெசியா என்று ஏற்றுக் கொண்டு தான் திருமுழுக்கு பெற்று, கிறிஸ்தவர்களாக மாறினோம்.

அந்த வகையில் கிறிஸ்தவர்களாகிய நாம் பேறு பெற்றவர்கள்.

ஆனால் மீட்பு பெறும் வகையில் நாம் வாழாவிட்டால், நாம் சாத்தானுக்குச் சமமானவர்கள்.

இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள்.

அதன்படி வாழாதவர்கள் சாத்தான்கள்.

தனது பாவத்தினால் விண்ணகத்துக்குரிய நிலையை இழந்து பாதாளத்தில் வீழ்ந்தது சாத்தான்.

தன்னைப் போலவே மனிதர்களும் விழ வேண்டும் என்று அது விரும்புகிறது.

அன்று தனது சோதனையால் நமது முதல் பெற்றோரைப் பாவத்தில் விழச் செய்தது போல நமக்கும் சோதனைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நாம் பலகீனமான மனிதர்கள்.

சோதனையில் விழாமலிருக்க நமக்கு உதவும்படி அருள் வரம் கேட்டு அடிக்கடி விண்ணகத் தந்தையிடம் செபிக்க வேண்டும்.

பாவத்தில் விழாமலிருந்தால் மட்டும் போதாது.   புண்ணியத்தில் வளர வேண்டும்.

அதற்காக நற்செயல்கள் செய்ய வேண்டும்.

நற்செயல்கள் செய்யவும் இறைவன் அருள் வேண்டும்.

அதற்காகவும் தந்தையிடம் வேண்ட வேண்டும்.

நாம் கர்ப்பித்த செபம் சொல்லும் போது முதலில்

 "எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்"

என்று வேண்டி விட்டு,

"தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்."

என்று வேண்டுகிறோம்.

இரண்டாவது வேண்டுதலை கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் அதற்குள் வேறொரு வேண்டுதலும் இருப்பது புரியும்.

வீட்டுக்கு வந்தவரிடம் வீட்டின் தலைவி,

"சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா?" என்று கேட்கிறாள்.

"திடப்பொருள் எதுவும் வேண்டாம்"
என்று வந்தவர் சொல்கிறார்.

அப்படியென்றால் என்ன அர்த்தம்?

" திரவமாக கொண்டு வாருங்கள்" என்று தானே அர்த்தம்.

"தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்."

தீமைக்கு எதிர்ப்பதம் நன்மை.

இந்த வேண்டுதலில் அடங்கியுள்ள மற்றொரு வேண்டுதல்

" நாங்கள் தீமை செய்யாமல் நன்மை செய்ய வரம் தாரும்."

அதாவது,

"நான் மற்றவர்களுக்கு நன்மை, அதாவது, உதவிகள் செய்ய வேண்டிய அருள் வரம் தாரும்."

மற்றவர்களுக்கு உதவி செய்வது தான் நற்செயல், ஆத்மாவுக்கு புண்ணியம் சேர்க்கும் செயல்.


நற்செயல்கள் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம் என்பது இறைவாக்கு.

விவசாயி நிலத்தைப் பண்படுத்தினால் மட்டும் போதாது, பயிரேற்றவும் வேண்டும்.

விசுவாசி பாவம் செய்யாதிருந்தால் மட்டும் போதாது,   புண்ணியம் செய்ய வேண்டும்.

நாம் மணிக்கணக்காக வார்த்தைகளை அடுக்கிச் செய்யும் பெரிய செபங்களை விட

அளவில் சிறிய, ஆனால் அர்த்தம் பொதிந்த 'கர்த்தர் கற்பித்த  செபமே மிகச் சிறந்தது.

1. இறைபுகழ்.
2. உணவு வேண்டுதல்.
3. பாவமன்னிப்பு கேட்டல்.
4. பாவத்தில் விழாமலிருக்க பாதுகாப்பு வேண்டுதல்.
5. புண்ணியங்கள் செய்ய வரம் கேட்டல்.

முழுமையான ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான வரங்கள் அந்தனையையும் கேட்கிறோம்.

வரங்கள் அத்தனையையும் ஆண்டவர் தருவார்.

அவற்றை நாம் வாழ்ந்தால் பேறு பெற்றவர்கள்.

வாழாவிட்டால்?

இராயப்பரிடம் ஆண்டவர் கூறிய வார்த்தைகளை நினைவில் கொள்வோம்.

பேறு பெற்றவர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, February 17, 2025

புதன்19. பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். (மாற்கு நற்செய்தி 8:34)

புதன்19.                                                    

பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். 
(மாற்கு நற்செய்தி 8:34)

நாம் பிறந்து வளர்கின்ற அதே உலகில் தான் இயேசுவும் பிறந்து வளர்ந்தார். 

நாம் நடக்க வேண்டிய வாழ்க்கைப் பாதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

அவர் நடந்த பாதை வழியாகத் தான் நாம் நடக்க வேண்டும் என்பது அவர் விருப்பம்.

அவர் நடந்த பாதை சிலுவைப் பாதை.

சிலுவைப் பாதை தன்னலம் துறந்த பாதை.

அவர் கடவுள். அளவில்லாத வல்லமை உள்ளவர். பேரின்ப நிலையில் வாழ்பவர். துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

ஆனால் நம்மை மீட்பதற்காக மனிதனாய்ப் பிறந்த போது தனது இறைத் தன்மையில் உள்ள இத்தனை அம்சங்களையும் மனித சுபாவத்தில் துறந்தார்.

மனித சுபாவத்தில் சாதாரண மனித சக்தியோடு தான் வாழ்ந்தார். துன்பங்களை அனுபவிக்கும் உடலோடு வாழ்ந்தது மட்டுமல்ல, துன்பங்களை அனுபவித்தார்.

அவருக்கு மனித சுபாவத்தில் நம்மைப் போல துவக்கமும் (பிறப்பும்) முடிவும் (இறப்பும்) இருந்தது.

ஒரே வாக்கியத்தில்

தன்னலம் துறந்து, தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு நடந்தார்.

சர்வவல்வ கடவுள் வல்லமை இல்லாத மனிதனாய்ப் பிறந்தார்.

பேரின்ப வாழ்க்கை வாழ்பவர்
துன்ப வாழ்க்கை வாழ மனிதனாய்ப் பிறந்தார்.

ஆதியும் அந்தமும் இல்லாத கடவுள் பிறப்பும் இறப்பும் உள்ள மனிதனாய்ப் பிறந்தார்.

இவையெல்லாம் நமக்காக.

"கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. 

ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, 

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். 
(பிலிப்பியர் 2:6-8)

"உண்டாகுக" என்ற ஒரே  வார்த்தையால் உலகை உண்டாக்கிய கடவுளுக்கு,

அவர் நினைத்தால் "அழிக" என்றே ஒரே வார்த்தையால் அழிக்கவும் முடியும்.

ஆனால் அதே கடவுள் பிலாத்துவின் அரண்மனையில் அடிக்கப்பட்ட அடிகளையும், தலையில் வைத்து அடிக்கப்பட்ட முள்முடியையும், செய்யப்பட்ட அவமானங்களையும், துப்பப்பட்ட எச்சிலையும் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டார்,

யாருக்காக?

நமக்காக

நாம் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நமது நலனைத் துறந்து சிலுவையாகிய துன்பங்களைச் சுமக்கக் கூடாதா?

நமது சிலுவையை நாம் சுமந்து கொண்டு அவரைப் பின் தொடர்ந்தால்தான் நம்மைத் தன் சீடராக ஏற்றுக் கொள்வார்.

சாதாரண தலைவலி வந்தால் கூட அதைத் தாங்கிக் கொண்டு அதை அவருக்கு ஒப்புக் கொடுக்க மனதில்லாதவர்கள் எப்படி அவரது சீடராக இருக்க முடியும்?

சிறு நோய் நொடி வர்தாலும் மருத்துவ மனைக்கு ஓடும் நாம் ஒரு முறையாவது அதை கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கக் கோவிலுக்குப் போயிருக்கிறோமா?

குணமாக்கும்படி கேட்க கோவிலுக்கு போயிருக்கிறோம், 
ஒப்புக் கொடுக்க போயிருக்கிறோமா?

ஒரு ஐந்து நிமிடமாவது வலியை ஆண்டவருக்காக தாங்கிக் கொண்டிருக்கிறோமா?

துன்பங்களை தேடிப் போக வேண்டாம், வரும் துன்பங்களை ஏற்றுக் கொள்ளலாமே.

எப்போதாவது வகுப்பில் நாம் செய்யும் தவறுக்காக ஆசிரியர் நம்மை அடிக்கும் போது ஏற்படுகின்ற வலியை நமது பாவத்திற்குப் பரிகாரமாக ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறோமா?

என்ன துன்பம் வந்தாலும் அதை தனது பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசுவிடம் கொடுப்பவன்தான் அவருடைய உண்மையான சீடன்.

துன்பமே வேண்டாம் என்று சொல்பவன் இயேசுவின் சீடனாக இருக்க முடியாது.


இயேசு சிலுவையைத் தேடி வந்தார். நாம் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை.

வரும் சிலுவைகளை மகிழ்ச்சியுடன் சுமந்தாலே போதும்.

லூர்து செல்வம்.

Sunday, February 16, 2025

செவ்வாய்18. 'மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்."(லூக்கா நற்செய்தி 6:22)

செவ்வாய்18.                                        

'மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்."
(லூக்கா நற்செய்தி 6:22)

இன்றைய காலக் கட்டத்தில் நமது நாட்டில் மணிப்பூர், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தப் படுவதைக் கண்டு மிகவும் வருந்துகிறோம்.

ஆண்டவர் சொல்கிறார்,

"மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்."

அதாவது இயேசுவின் சீடர்கள் அவர் பொருட்டு துன்புறுத்தப் படும் போது நாம் மகிழ வேண்டும்,
ஏனெனில் அவர்கள் பாக்கியவான்கள்.

துன்பப் படுத்துபவர்களை நினைத்து அல்ல,

துன்புரும் நம்மை நினைத்து

துன்புறுத்துவோருக்காக 
வேண்டிக் கொள்ள வேண்டும். நம்மை நினைத்து
மகிழ வேண்டும்.

உலகப் பார்வை வேறு, ஆன்மீகப் பார்வை வேறு.

ஐரோப்பாவில் எந்தெந்த நாடுகளில் கிறிஸ்தவர்கள் இரத்தம் சிந்தும் அளவுக்குத் துன்புறுத்தப் பட்டார்களோ

அந்த நாடுகளில் கிறித்தவம் வேகமாகப் பரவியது.

"வேத சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து" என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்போது நம்மை திருச்சபையின் எதிரிகள் நம்மை எந்த அளவுக்கு துன்பப்படுத்துகிறார்களோ

 அந்த அளவுக்கு எதிர்காலத்தில் நாம் வேகமாக வளர்வோம்.

அன்று இயேசு பாடுகளுக்கும், சிலுவை மரணத்துக்கும் தன்னைத் தானே கையளித்தார்.

தன்னைத் தானே கையளித்திருக்காவிட்டால் அவரை எதிரிகளால் கைது செய்திருக்க முடியாது.

கையளித்தது மட்டுமல்ல, தனது சிலுவை மரணத்துக்குக் காரணமாக இருந்தவர்களை முழு மனதோடு மன்னித்தார்..

மன்னிப்பை அனுபவித்த, இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்திய செந்தூரியனும், அவனைச் சேர்ந்தவர்களும

 "இவர் உண்மையாகவே இறைமகன்" என்றார்கள். 

செந்தூரியன் மனம் திரும்பி நற்செய்தி அறிவிக்கும் பணியை ஏற்றுக் கொண்டார்.

திருச்சபையின் விரோதிகள் நன்மை துன்புறுத்தும் போது நமது எதிர் வினை (Reaction) மன்னிப்பாக இருந்தால் ஒரு நாள் அவர்கள் மனம் திரும்புவார்கள்.

தீமையை நன்மையால் வெல்லலாம்.

இன்று நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது இந்தியாவில் கிறிஸ்தவத்துக்கு எதிர் காலம் பிரகாசமாக இருக்கும் போல் தோன்றுகிறது.

முதல் நூற்றாண்டில் ரோமை மன்னர்கள்  கிறித்தவர்களைத் துன்புறுத்தினார்கள்.

இன்று ரோம் நகர்தான் திருச்சபையின் தலைநகராகத் திகழ்கிறது.

திருச்சடையே "ரோமன் கத்தோலிக்க திருச்சபை" என்று அழைக்கப் படுகிறது.

நாம் நம்மை மதத்தின் அடிப்படையில் துன்புறுத்துபவர்களுக்காக வேண்டிக் கொள்வோம்.

அவர்களும் நம்மோடு நித்திய பேரின்பத்தில் பெறுவார்கள்.

லூர்து செல்வம்

Saturday, February 15, 2025

திங்கள் 17. இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். (லூக்கா நற்செய்தி 6:21)

திங்கள் 17.                                               

இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். 
(லூக்கா நற்செய்தி 6:21)

கடவுள் நம்மை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகப் படைத்தாரா, அழுது கொண்டிருப்பதற்காகப் படைத்தாரா?

நமது உலக வாழ்வின் நோக்கம் வாழ்வின் இறுதியில் விண்ணகத்திற்குள் நுழைய நம்மையே தயாரிப்பதுதான்.

விண்ணக வாழ்க்கை மகிழ்ச்சியும், பேரின்பமும் நிறைந்தது.

விண்ணக பேரின்ப வாழ்வுக்காக படைக்கப் பட்டிருக்கும் நம்மைப் பார்த்து ஏன் இயேசு,

"அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்"  என்கிறார்?

எப்போதெல்லாம் அழுகை வரும்?

எதற்காகவாவது வருத்தப் படும்போது அழுகை வரும்.

துன்பப் படும் போது அழுகை வரும்.


எதையாவது இழக்கும் போது அழுகை வரும்.

உலகில் அநீதியைப் பார்க்கும் போது அழுகை வரும்.

பரிசுத்தமானவர்களால் மட்டும் விண்ணகத்துக்குள் நுழைய முடியும்.

பாவிகளால்?

பாவ நிலையில் விண்ணகத்துக்குள் நுழைய முடியாது.

அவர்கள் மரிக்கு முன் பாவ மன்னிப்பு பெற்றால் விண்ணகத்துக்குள் நுழைய முடியும்.

பாவ மன்னிப்பு பெற வேண்டுமென்றால் பாவங்களுக்காக மனத்தாபப்
பட வேண்டும்.

அதாவது, வருந்த வேண்டும்.

பாவங்களுக்காக வருந்தி அழுதால் பாவ மன்னிப்பு கிடைக்கும்.

பாவ மன்னிப்பு கிடைத்தால் விண்ணகம் செல்லலாம்.

அதனால் செய்த பாவங்களுக்காக அழுபவர்கள் பேறு பெற்றவர்கள்.

ஏனெனில் அவர்கள் விண்ணகத்தில் சிரித்து, மகிழ்ந்து வாழ்வார்கள்.

              **********


துன்பப்படும் போதும் அழுகை வரும். ஆனால் அந்த அழுகையினால் ஆன்மீக ரீதியாக என்ன இலாபம்?

நமக்கு மீட்பு எப்படிக் கிடைத்தது?

இயேசு நமக்காகப் பாடுகள் பட்டு,
அதாவது, துன்பப்பட்டு, 
மரித்ததனால்.

இயேசு அனுபவித்த துன்பங்கள் தான் நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்தன.

இயேசு தனது துன்பங்களை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக விண்ணகத் தந்தைக்கு ஒப்புக் கொடுத்தார்.

நாமும் நமது துன்பங்களையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக விண்ணகத் தந்தைக்கு ஒப்புக் கொடுத்தால்

- நாம் பட்ட துன்பங்கள் விண்ணகத்தில் பேரின்பமாக மாறும்.

நமது துன்பங்கள் நமக்கு விண்ணக வாழ்வைப் பெற்றுத் தரும் ஆசீர்வாதங்கள்.

               **********


எதையாவது இழக்கும் போது அழுகை வரும்.

ஒன்றைப் பெற வேண்டுமானால் ஒன்றை இழக்க வேண்டும்.

முழுத் தேங்காயை இழக்காமல் சட்ணி வைக்க முடியாது.

விதை தன்னை இழந்தால் தான் மரமாக முடியும்.

கையிலுள்ள காசை இழக்காமல் கடையில் பொருள் வாங்க முடியாது.

இவ்வுலகப் பொருட்கள் மீதுள்ள பற்றை இழக்காமல் விண்ணகத்துக்குள் நுழைய முடியாது.

அருவியில் குளிப்பதற்காகக் குற்றாலத்துக்குப் போயிருக்கிறோம்.

அருவிக் குளிப்பு எவ்வளவு ஆனந்தமாக இருந்தாலும் அருவியை விட்டு வெளியேறி வீட்டுக்கு வரவேண்டும்.

வீடுதான் நிரந்தர உறைவிடம், குற்றால அருவி அல்ல.

அருவியை இழக்காவிட்டால் வீட்டை இழந்து விட வேண்டியது தான்.

உலக வாழ்வைப் பொறுத்த மட்டில் என்றாவது ஒரு நாள் அதை இழந்து தான் ஆக வேண்டும்.

வாழும் போதே பற்றின்மையைப் பயன் படுத்தி, உலக இன்பங்களை இழந்து வாழ்ந்தால் விண்ணகப் பேரின்பம் உறுதி.

                      *****

உலகில் அநீதியைப் பார்க்கும் போது அழுகை வரும்.

நீதி x அநீதி

உலகில் நாட்டின் சட்டங்களை மீறுபவர்களை நீதி மன்றங்கள் விசாரிக்கின்றன.

அப்படியானால் சட்டப்படி வாழ்வதுதான் நீதி.

ஆன்மீகத்தில் இறைவன் விருப்பப்படி வாழ்வதுதான் நீதி.

இறைவனுடைய விருப்பம் அவருடைய கட்டளைகளில் அடங்கியிருக்கிறது.

இறைவன் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்பவன் நீதிமான்.

நாம் நீதிமான்களாக இருந்தால்,

 அதாவது, 

இறைவனது கட்டளைகளை ஒழுங்காகக் கடைபிடித்து வாழ்பவர்களாக இருந்தால்,

கட்டளைகளை மீறி வாழும் மற்றவர்களைப் பார்க்கும் போது அழுகை வரும். 

ஏன்?

ஏனெனில் அவர்கள் தங்கள் நடத்தையால் நமது அன்பு தந்தையை மனம் நோகச் செய்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களை நாம் பார்த்தால் 

எல்லோரையும் படைத்த,

 எல்லோரையும் அளவு கடந்து அன்பு செய்கிற 

விண்ணகத் தந்தையை மனம் நோகச் செய்யக் கூடாது என்று

 அன்புடன் எடுத்துரைக்க வேண்டும்.

அவர்களை நமது தந்தையிடம் அழைத்து வர வேண்டும்,

அதாவது,

அவர்களை மனம் திருப்ப வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது நமது அழுகை சந்தோசமாக மாறும்.

அவர்களும், நாமும் விண்ணகத்தில் தந்தையின் மகிழ்ச்சியில் பங்கு பெறுவோம்.

லூர்து செல்வம்.

Friday, February 14, 2025

ஞாயிறு16. "இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை; "ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே."(லூக்கா நற்செய்தி 6:20)

ஞாயிறு16.                                                

"இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை; "ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே."
(லூக்கா நற்செய்தி 6:20)

ஏழைகள்

இயேசுவின் நற்செய்தியை கேட்பதற்காக குழுமியிருந்த பெரும் திறளான மக்கள் கூட்டத்தை பார்த்து அவர் கூறியது 

':ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே."

இதைக் கூறும்போது அவர் தன் சீடர்களைப் பார்க்கிறார்,

தான் கூறியதற்கு  அவர்கள் உதாரணம் என்ற பொருளில்.

ஏழைகள் என்றால் இல்லாதவர்கள். தங்களிடம் என்ன இருந்ததோ அதை விட்டு விட்டு இயேசுவைப் பின் பற்றியவர்கள் அவர்கள் .

உதாரணத்துக்கு மீனவர்களான சீமோன், அந்திரேயா, யாக்கோபு, அருளப்பர் ஆகியோர் தங்கள் வலைகளை விட்டு விட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள். 

உலக ரீதியாக பொருள் உள்ளவர்களை செல்வந்தர் எனவும் பொருள் இல்லாதவர்களை ஏழைகள் எதுவும் அழைப்போம்.

ஆனால் ஆன்மீகத்தில் இல்லாதவர்கள் என்றால் பற்று இல்லாதவர்கள்.

 ஒருவனிடம் பொருள் இருக்கும், ஆனால் அதன் மீது பற்று இருக்காது.

அதைப் பொருள் என்பதற்காக விரும்ப மாட்டான். கடவுள் அதை அவனுக்கு எதற்காகக் கொடுத்திருக்கிறாரோ அதற்காகப் பயன்படுத்துவான்.

இன்னொருவனிடம் பொருளும் இருக்காது பற்றும் இருக்காது.

இரு வகையினரும் ஏழைகள் தான்.

பொருள் மீது பற்று இல்லாதவர்களுக்கு மட்டும் இறைவன் மீது உண்மையான பற்று இருக்கும்.

அவர்கள் இறைவனைத் தங்கள்  அரசராக ஏற்றுக் கொள்கிறார்கள்:

இதைத்தான்  இயேசு,

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே."

உலகாட்சிக்கும், இறையாட்சிக்கும் என்ன வேறுபாடு?

உலகாட்சி உலக பொருட்களை (இடம், சொத்து, பணம்) மையமாகக் கொண்டு இயங்கும்.

உலகப் பொருட்கள் முடிவுக்கு உரியவை.

இறையாட்சி இறைவனுடைய அருளை மையமாகக் கொண்டு இயங்கும்.

இறையாட்சிக்கு உட்பட்ட அன்னை மரியாளை "அருள் நிறைந்த மரியே" என்று அழைக்கிறோம்.

உலகப் பொருட்களால் ஈர்க்கப் படாமல் இறையருளால் ஈர்க்கப் பட்டு வாழ்வோர் புனிதர்கள்.

உலகப் பற்றற்றோர் பேறு பெற்றோர் என்றால், உலகப் பற்று உள்ளவர்கள் அதற்கு எதிர் மாறானவர்கள்.

உலகப் பற்றற்றோருக்கு இறையாட்சி உரியது என்றால்,

உலகப் பற்று உள்ளவர்களுக்கு இறையாட்சி உரியது அல்ல.

அதனால்தான் ஆண்டவர்,
 "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்கிறார். 
(மத்தேயு நற்செய்தி 19:24)

இவ்வசனத்தில் செல்வர் என்ற வார்த்தை செல்வத்தின் மீது பற்றுள்ளவர்களைக் குறிக்கும்.

                *      *     *    *
பட்டினியாய் இருப்போர்.
(Who are hungry)
பசியாக இருப்பவர்கள்.

எப்படி ஏழ்மை என்றால் ஆன்மீக ரீதியாக பொருட்பற்று இன்மையோ,

அதுபோல் பட்டினியாய் இருப்போர் ஆன்மீக ரீதியாக பசியாக உள்ளவர்கள்.


இயேசு  சாகும் தருவாயில் இருக்கும் போது    "தாகமாய் இருக்கிறது" என்றார்.

 இது உடல் சார்ந்த தண்ணீர் தாகம் அல்ல, ஆன்மீக தாகம்,
மீட்கப்பட வேண்டிய ஆன்மாக்கள் மீதான தாகம்.

அவர் சிலுவையில் அறையப்பட்டது ஆன்மாக்களின் மீட்புக்காக. ஆன்மாக்கள் மீட்கப் படும்போது தான் தாகம் தணியும்.

உடல் பசி உலகைச் சார்ந்த உணவின் மீதான பசி.

ஆன்மீகப் பசி இறையருள் மீதான பசி. இறை அருளாகிய ஆன்மீக உணவினால் தான் நமது ஆன்மா வாழ்கிறது.

சோதனைகளை வெல்ல வேண்டுமானால் இறை அருள் வேண்டும்.

செய்த பாவத்துக்கு மனத்தாபப் பட இறை அருள் வேண்டும்.

ஆன்மிகத்தில் வளர இறை அருள் வேண்டும்.

இறை அருளைப் பெற்று மீட்புப் பெற நமக்கு ஆசை இருக்க வேண்டும்.

அதேபோல மற்றவர்களுடைய ஆன்மாக்களும் மீட்புப் பெற வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்க வேண்டும்.

ஆசை இருந்தால் தான் அதற்காக உழைப்போம்.

புனித தோமையார், புனித சவேரியார், புனித அருளானந்தர் போன்றவர்கள் நம் நாட்டுக்கு வந்தது அவர்களிடம்  இருந்த ஆன்மப் பசியின் காரணமாக.

ஆன்மீகப் பசி உள்ளவர்கள் நிறைவு பெறுவார்கள்.

உடல் பசி உள்ளவர்கள் நிறைவு பெற வேண்டும் என்றால் அவர்கள் வயிறார சாப்பிட வேண்டும்.

நிறைவு பெறுவார்கள் என்று சொன்னால் பசி தீர உணவு கிடைக்கும் என்பது பொருள்.

இயேசு பாவிகளை மீட்கவே சிலுவையில் பாடுகள் பட்டு தன் உயிரையே பலியாக்கினார்.

அவரது நோக்கத்தை நிறைவேற்ற  பாவிகளின் மீட்புக்காக நாம் முழு மனதோடு உழைக்கும் போது
 இயேசுவின் விருப்பத்தோடு ஒத்துழைக்கிறோம்.

ஆன்மீக ரீதியாக நாம் யாருக்காக உழைக்கிறோமோ அவர்கள் மீட்பு பெறுவார்கள். நாமும் விண்ணகத்தில் நிறைவு பெறுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, February 13, 2025

சனி15. தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள். (மாற்கு நற்செய்தி 8:6)

சனி15.                                                        

தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள். 
(மாற்கு நற்செய்தி 8:6)

ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல்,

ஏழு அப்பங்களைக் கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவளித்தல்

ஆகிய உணவு அளித்தல் சம்பந்தமான  இரண்டு புதுமைகள் நற்செய்தி நூல்களில் இடம் பெற்றுள்ளன.

இயேசுவின் மூன்றாண்டு கால பொதுவாழ்வில் அவர் சென்ற இடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கினார். ஆயிரக் கணக்கானோர் புதுமையாகக் குணமானார்கள்.

ஆனால் எல்லா புதுமைகளும் நற்செய்தி நூல்களில் குறிப்பிடப் படவில்லை.

எழுதப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்காக எழுதப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் 37 புதுமைகளே எழுதப்பட்டிருக்கின்றன.

அதேபோல் உணவு அளிக்கும் புதுமைகள் இரண்டு குறிப்பிடப் பட்டிருந்தாலும் அவர நிறைய செய்திருக்க வேண்டும்.

இன்றைய புதுமையில்

 மூன்று நாள்களாக வீட்டுக்குச் செல்லாமல் அவருடைய வார்த்தைகளுக்கு செவிமடுத்துக் கொண்டிருந்த மக்கள் மீது
பரிவுகொள்கிறார்.

அவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக

  "உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?" என்று சீடர்களிடம் கேட்கிறார். 

அவர்கள் "ஏழு" என்கிறார்கள். 

தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிடுகிறார்; 

பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி,

 பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் சொல்கிறார்.

 அவர்களும் மக்களுக்குப் பரிமாறுகிறார்கள். 

ஏறக்குறைய நாலாயிரம் பேர் வயிரார உண்கிறார்கள்.

ஏழு கூடைகள் மீதம் உள்ளன.

நாம் தியானத்துக்கு எடுத்துக் கொள்ளும் விடயங்கள்.

1. இயேசுவின் பரிவு.
2. சீடர்கள் மூலம் பரிமாறுதல்.

1.மூன்று நாள்களாக மக்கள் சாப்பாட்டைக் கூட மறந்து இயேசுவின் வார்த்தைகளைக்  கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இயேசுவும் சீடர்களும் கூட சாப்பிட்டிருக்க முடியாது.

ஆகவே எல்லோருக்கும் பசித்திருக்கும்.

இயேசு தன் பசியைப் பற்றிக் கவலைப்படவில்லை.

பசியைக் கூடப் பொறுத்துக் கொண்டு ஆன்மீகச் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள்  மீது பரிவுகொள்கிறார்.  

 அவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை.

 இயேசு ஆன்மீக விருந்து அளிக்கவே உலகிற்கு வந்திருந்தாலும் மனிதர்களை உடலோடும்  படைத்தவர் அவர்தானே.

தான் படைத்ததைப் பராமரிப்பவரும் அவர்தானே.

ஆகவே நமது வாழ்வின் நூறு சதவீதத்தையும் ஆன்மீகத்துக்காக நாம் பயன்படுத்தி விட்டாலும்

 நமது உடலைப் பராமரிக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த புதுமை.

புனித பிரான்சிஸ் அசிசியார் தனது உலக செல்வத்தை எல்லாம் விட்டு விட்டு விண்ணகத் தந்தையின் விருப்பப்படி மட்டுமே வாழ வந்தபோது அவரைப் போன்ற எண்ணம் உடைய அநேகர் அவரோடு சேர்ந்து கொண்டார்கள்.

பிரான்சிஸ்கன் சபை உறுவாயிற்று.

பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டே நற்செய்தியை அறிவித்தார்கள்.

அன்றன்றைய தேவைகள் அன்றன்று நிறைவேற்றப்படும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் நூறு சதவீத வாழ்க்கையையும் இறைப் பணிக்கே பயன்படுத்தினார்கள்.

அசிசியார் திருவிய சபை,

சிறு சகோதரர்களின் சபை (Order of Friars Minor (OFM)):

எளிய தவ வாழ்க்கை,
ஏழைகளுக்கு உதவுவதல், நற்செய்தியை அறிவித்தல் ஆகியவையே முழுவாழ்க்கை.


கப்புச்சின் சபை (Order of Friars Minor Capuchin (OFM Cap.)
 இவர்கள் சிறு சகோதரர்களின் சபையிலிருந்து 16-ம் நூற்றாண்டில் உருவான ஒரு பிரிவு. 

இவர்கள் மிகக் கடுமையான தவ வாழ்க்கை வாழ்வதோடு

நற்செய்தியையும் அறிவிக்கிறார்கள்.

இல்லற வாழ்வில் இருந்தபடியே பிரான்சிஸ்கன் சபையின் ஆன்மீகத்தைப் பின்பற்ற விரும்புபவர்களுக்காக பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை நிறுவப்பட்டது.

இயேசுவின் பரிவை மையமாகக் கொண்டு ஆன்மீக ரீதியாக ஏழைகளுக்கு உதவுவதற்காக வாழ்கின்ற புனிதர்களுக்கு புனித பிரான்சிஸ் அசிசியார் ஒரு உதாரணம்.


2.சீடர்கள் மூலம் பரிமாறுதல்.

இயேசு கடவுள். ஒன்றுமில்லாமையிலிருந்து உலகைப் படைத்தவர்.

அவர் நினைத்திருந்தால் ஒவ்வொருவர் மடியிலும் ஒரு அப்பத்தை வரவழைத்திருக்க முடியும்.

ஆனால் இந்த புதுமைக்கு தனது சீடர்களைப் பயன் படுத்திக் கொண்டார்.

முழு உலகையும் படைத்த சர்வ வல்லமையுள்ள .இயேசு அன்று உணவைப் பகிர்ந்ததைப் போல

  உலகெங்கிலும் தனது நற்செய்தியை அறிவிக்க தனது சீடர்களைப் பயன்படுத்துகிறார்.

ஆனால் சீடர்கள் நம்மை போன்று சாதாரண மனிதர்கள். 

 
சர்வ வல்லமை மிக்க கடவுள் சாதாரண மனிதர்கள் மூலம் உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கிறார்  என்றால் அதுவே மிகப்பெரிய புதுமை.

இயங்குகிறவர்கள் சாதாரண மக்கள், இயக்குபவர் 
சர்வவல்லவர்.

அன்று பன்னிருவர். இன்று திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறித்தவனும் ஒரு சீடனே .

நாம் திருமுழுக்கு பெற்றது நமது மீட்புக்காக மட்டுமல்ல,

நம்மை சுற்றியுள்ளவர்களும் மீட்புப் பெறுவதற்காக.

நமக்கு என்ன கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதுவே மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.

நாம் மீட்படைய விரும்புகிறோம்.

நம்மைச் சுற்றி உள்ளவர்களும் மீட்பு அடைய வேண்டுமென்று நாம் விரும்ப வேண்டும்.

விரும்பினால் மட்டும் போதாது, அதற்காக உழைக்க வேண்டும்.

இதற்காகத்தான் நாம் நம்மை நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்ற கட்டளையை இயேசு நமக்குத் தந்திருக்கிறார்.

நமது நேசம் சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும் .

எப்படி இயேசு உலகில் மனிதனாகப் பிறப்பதற்கு அன்னை மரியாளைத் தேர்ந்தெடுத்தாரோ அதேபோல அவரது மீட்பு பணியை தொடர்ந்து செய்வதற்கு நன்மை தேர்ந்தெடுத்திருக்கிறார்.


நாம் ஆயிரக்கணக்கானோர் இருந்தாலும் ஒரே நோக்கோடு செயல்பட வேண்டும்.

கிறித்தவர் பலர், கிறித்தவம் ஒன்றே.

நாம் அனைவரும் இயேசுவின் ஒரே ஞான உடலின் உறுப்பினர்கள் .


இயேசு நமது தலை. தலையின் விருப்பத்தை நிறைவேற்றுவது மட்டுமே உறுப்புக்களின் வேலை.

நற்செய்தியே நமது ஆன்மீக உணவு. அன்று பன்னிரு சீடரும் அப்பத்தைப் பகிர்ந்தளித்தது போல நாம் ஆன்மீக உணவாகிய நற்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம்.

லூர்து செல்வம்.

Wednesday, February 12, 2025

வெள்ளி14. அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். (தொடக்கநூல் 3:6)

வெள்ளி14.                                             
அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். 
(தொடக்கநூல் 3:6)

கடவுளால் விலக்கப்பட்டதை மனிதன் செய்ததினால் முதல் பாவம் உலகத்திற்குள் நுழைந்தது.

கடவுளால் விலக்கப்பட்ட மரத்தின் மேல் சாத்தான் அமர்ந்திருக்கிறான். 

அவனுடையது சோதிக்கும் வேலை,

ஆனால் ஏவாளுக்கு அங்கு என்ன வேலை? 

விலக்கப்பட்ட மரத்தின் அருகில் அவளுக்கு என்ன வேலை?

விலக்கப்பட்ட மரத்தின் அருகே அவள் சென்றிருக்கக் கூடாது. 

சோதனைகள் நம்மை நாடி வரும் ஆனால் நாம் சோதனைகளைத் தேடிப் போக கூடாது.

பாவ சந்தர்ப்பங்களை நாம் தேடி போக கூடாது என்பதற்கு ஏவாளுடைய அனுபவம் ஒரு பாடம்.

சாத்தான் கூறிய பொய்யை உண்மை என நம்பி அவள் பழத்தைப் பறித்துத் தின்றாள்.

சாத்தானின் வார்த்தைகளைக் காதுகளால் கேட்டு,

விலக்கப் பட்ட கனியைக் கண்களால் பார்த்து,

கைகளால் பறித்து,

வாயினால் உண்டாள்.

நல்லவற்றைச் செய்ய கடவுள் அருளிய ஐம்பொறிகளை விலக்கப் பட்டவைகள அனுபவிக்க நாம் பயன்படுத்தும் போது தான் பாவம் ஏற்படுகிறது.

ஐம் பொறிகளும் விலக்கப் பட்டவை அருகில் செல்லாத வரை பாவம் நெறுங்காது.

செய்யக் கூடாததைச் செய்து ஏவாள் இந்த பாடத்தை நமக்குக் கற்பிக்கிறாள்.

மனித ஐம்பொறிகள் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக படைக்கப்பட்டுள்ளன, பாவம் செய்வதற்கு அல்ல.

இறைவன் படைத்த இயற்கையின் அழகை ரசிப்பதற்காக கண்களைப் பயன்படுத்தினால் அது புண்ணியம்.

அசுசியான சினிமாக் காட்சிகளை ரசிக்க அதே கண்களை பயன்படுத்தினால் பாவம்.

அளவோடு சாப்பிட்டால் 
மட்டசனம்.  (Temperance)

அளவுக்கு அதிகமாக சுவை இன்பத்துக்காக எந்நேரமும் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் போசனப் பிரியம். (Gluttony) 

ஆதாம் ஏவாளிலிருந்து மனித இனம் ஐம்பொறிகளாலும்  செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு தனது ஐம்பொறிகளையும் சிலுவையில் பலியாக்கினார்.

இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிபட்ட போதும், முள் முடி சூட்டப்பட்டு அடிபட்ட போதும், சிலுவையில் அறையப்பட்ட போதும் அனைத்து உறுப்புகளும் அடிபட்டன. காரணம் ஏவாளும், நாமும் தான்.

(பொறிவாயில் ஐந்தவித்தான் என்று வள்ளுவர் குறிப்பிடுவது ஆண்டவர் இயேசுவைத் தான்.

சிலுவைப் பொறியில் தனது ஐம்பொறிகளையும் பலியாக்கியவர்.)


ஆதாமும், ஏவாளும் பாவம் செய்தவுடன் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். 

அவர்கள் ஆடையின்றி தான் படைக்கப்பட்டனர்.  அப்போது அவர்கள் பரிசுத்தமானவர்களாக இருந்தனர். நிர்வாணம் அவர்களுக்கு வெட்கத்தைக் கொடுக்கவில்லை.

பாவம் செய்தவுடன் நிர்வாணத்தை உணர்ந்து வெட்கப்பட ஆரம்பித்தார்கள்.

அப்படியானால்

நிர்வாணம் = பரிசுத்த நிலை.
உடை நமது பாவங்களுக்கு அடையாளம், அதாவது நாம் பாவிகள் என்பதற்கு அடையாளம்.

இயேசுவின் பாடுகளால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டு பாவத்துக்கு முந்திய நிலையாகிய பரிசுத்தத் தனத்தை அடைகிறோம் என்பதற்கு அடையாளமாகத்தான் 

பாடுகளின் போது இயேசு ஆடைகள் களையப் பட்டு நிர்வாணமாக்கப் பட்டார்.

சிலுவையில் தொங்கியது நிர்வாணமாகத்தான்.

.அது சிலுவையினால் நாம் அடையும் பரிசுத்தத் தனத்துக்கு அடையாளம்.

இயேசு நமது பாவங்களை மன்னிப்பவர்.

சிலுவை மன்னிப்பின் அடையாளம்.

அதனால்தான் பாவசங்கீர்த்தளத் தொட்டியில் நாம் சிலுவை அடையாளம் போட்டுவிட்டு தான் பாவங்களை அறிக்கையிடுகிறோம்.

குருவானவரும் நம் பாவங்களை மன்னிக்கும் போது சிலுவை அடையாளம் போடுகிறார்.


"ஆனால் தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்; என்று கடவுள் சொன்னார்", என்று ஏவாள் கூறினாள். 
(தொடக்கநூல் 3:3)

ஆனால் அதற்குப் பின் வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்றிருக்கிறார்களே, 

அது எப்படி?

நாம் பேசிக் கொண்டிருப்பது ஆன்மீகம்.

ஆன்மீகத்தில் ஆன்மா பாவமில்லாத பரிசுத்த நிலையில் படைக்கப்பட்டது.

பாவம் இல்லாத ஆன்மா உயிரோடு வாழ்கிறது.

சாவான பாவம் ஆன்மாவை மரணம் அடையச் செய்கிறது.

சாவான பாவத்தோடு உள்ள,

 அதாவது

 மரண நிலையில் உள்ள
 ஆன்மாவால் விண்ணக வாழ்வு வாழ முடியாது.

இயேசு தனது உடல் சார்ந்த மரணத்தினால் நமது ஆன்மீக மரணத்தை வென்றார்.

அதாவது, 

அவரது உடல் சார்ந்த மரணத்தினால் நமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நமது ஆன்மாவும் உயிர் பெறுகிறது.

இதன் மூலம் இயேசு நமக்கு ஒரு பாடம் கற்றுத் தருகிறார்.

முக்கியத்துவத்தின் அடிப்படையில் உடலை விட ஆன்மா தான் மேலானது என்றாலும்
நமது உடலை ஒறுத்து,

ஒறுத்தல் முயற்சியை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தால் நமது ஆன்மா பரிசுத்தம் அடையும்.

அந்த ஒறுத்தலை நாம் சிலுவை என்கிறோம்.

இப்போது ஒன்று புரிந்திருக்கம்,

நமது முதல் பெற்றோர் எப்போது வீழ்ந்தார்களோ அன்றே நமது மீட்புக்கான பணியும் ஆரம்பித்து விட்டது.

அன்றே மீட்பரின் வருகை குறித்து கடவுள் முன்னறிவித்து விட்டார்.


'உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.
 அவள்  உன் தலையைக் நசுக்குவாள்.''
(தொடக்கநூல் 3:15)

இவ்வசனத்தில் "பெண்"  என்ற வார்த்தை அன்னை மரியாளையும், அவள் வித்து இயேசுவையும் குறிக்கும்.

"அவள்  உன் தலையைக் நசுக்குவாள்.''

"நீ முதல் பெண்ணை ஏமாற்றிப் பாவத்தில் பாவத்தில் விழச் செய்தது போல, இயேசுவின் தாயைப் பாவத்தில் விழச் செய்ய முடியாது. அவளைப் பாவ மாசு நெருங்க முடியாது."

இயேசுவின் வருகையும். அன்னை மரியாளின் பாவ மாசற்ற தன்மையும் ஏதேன் தோட்டத்தில் நமது முதற் பெற்றோர் இருக்கும் போதே முன் அறிவிக்கப்பட்டது.

'அன்னை மரியாள் சென்மப் பாவ மாசில்லாமல் உற்பவித்தாள்'  என்பதற்கு இந்த இறைவாக்கு சான்று.

" அமலோற்பவ அன்னையே,
எங்களுக்காக உங்கள் திருமகனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்."

லூர்து செல்வம்.

Tuesday, February 11, 2025

வியாழன்13 .இயேசு அவரைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார். (மாற்கு நற்செய்தி 7:27)

வியாழன்13                                                                          .

இயேசு அவரைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார். 
(மாற்கு நற்செய்தி 7:27)


யூதர்கள் அல்லாதாரை புற இனத்தார் என்று அழைப்பது அன்றைய வழக்கம்.

இயேசு யூத இனத்தில் பிறந்தார். யூதர்கள் மற்றவர்களைப் புற இனத்தார் என்று அழைத்தார்கள்.

ஆனால் இயேசுவுக்கு யாரும் புற இனத்தார் கிடையாது.

எல்லோரும் அவரால் படைக்கப்பட்டவர்களே.

இயேசு பிறந்தது யூதேயாவிலுள்ள பெத்லகேமிலில் என்றாலும் முதல் மூன்று ஆண்டுகள் யூதர்கள் 400 ஆண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்த எகிப்தில் வாழ்வதற்கான
சூழ்நிலையை அனுமதித்தார்.

அந்த சூழ்நிலையை உருவாக்கியவர் இஸ்ரயேலின் மூத்த சகோதரர் ஏசாவின் வம்சத்தில் பிறந்த ஏரோது மன்னன்.

பொது வாழ்வின் போது புற இனத்தார் வாழ்ந்த பகுதியிலும் நற்செய்தி அறிவித்திருக்கிறார்.

இன்றைய வாசகமும் இயேசு அனைவருக்கும் பொதுவானவர் என்பதைத் தெளிவு படுத்துகிறது.


சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு இயேசுவை வேண்டினார். 

அவள் ஆழமான விசுவாசத்துடன் தான் இயேசுவைத் தேடி வந்தாள்.

இயேசு நமது ஆழ் மனதில் உள்ளதையும் அறியக் கூடிய கடவுள்.

ஆனாலும் விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தை மற்றவர்களும் புரிந்து  கொள்ளும் அறிக்கையிட வேண்டும் என்று விரும்பினார்.

ஏனெனில் அது ஒரு நற்செய்திப் பகிர்வாக மாறும்.

அதற்காக இயேசு அவரைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார். 

அதற்கு அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே" என்று பதிலளித்தார். 

அந்தப் பெண் இயேசுவுக்கு மிகவும் பிடித்தமான தாழ்ச்சியோடு தனது ஆழமான விசுவாசத்தை அறிக்கையிட்டாள்.

இயேசுவும் அப்பெண்ணின் வேண்டுதலின் படி அவள் மகளைக் குணமாக்கினார்.

அப்பெண்ணின் தாழ்ச்சியும், ஆழமான விசுவாசமுமே நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

உலக ரீதியாக நமக்கு அமைச்சரைப் போன்ற ஒரு பெரிய மனிதரோடு பேசும் உரிமை கிடைத்தால் நம்மை அறியாமலேயே நமக்குள் தற்பெருமை உணர்வு ஏற்பட்டு விடும்.

ஆனால் எல்லாம் வல்ல இறைவனோடு பேசும் போது நமக்கு அத்தகைய உணர்வு வரக்கூடாது.

அவர் நம்மை படைத்தவர் என்று எண்ணம் நமது மனதில் இருக்க வேண்டும்.

சுயமாக நாம் ஒன்றுமே இல்லாதவர்கள் என்ற உண்மையான உணர்வு இருக்க வேண்டும்.

இதுவே  தாழ்ச்சி.

ஒன்றும் இல்லாத நமக்கு இறைவன் கேட்டதைத் தருவார் என்ற ஆழமான விசுவாசம் இருக்க வேண்டும்.

தாழ்ச்சியும், விசுவாசமும் சேர்ந்துதான் நமது வேண்டுதலை வல்லமை உள்ளதாக மாற்றும்.

இந்த இரண்டும் இல்லாமல் எத்தனை முறை வேண்டினாலும் பயனில்லை.

நமது உண்மை நிலையை உணர்வோம்.

விசுவசிப்போம்.

வேண்டுவோம்..

பெறுவோம்.

லூர்து செல்வம்.

Monday, February 10, 2025

புதன்12. .வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும். (மாற்கு நற்செய்தி 7:15)

புதன்12.                                                                            .

வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும். 
(மாற்கு நற்செய்தி 7:15)

தீட்டு ஆன்மீக ரீதியாக பயன்படுத்தப் படும் சொல்.

அழுக்கு உடல் ரீதியாக பயன்படுத்தப் படும் சொல்.

பாவம் செய்யும் போது ஆன்மா தீட்டுப் படும்.

வேலை செய்யும் போது உடல் உறுப்புக்கள் அழுக்காகும்.

பரிசேயர்கள் அழுக்கான கையைத் தீட்டு பட்ட கை என்று கூறியதால் இயேசு அது பற்றி சில விளக்கங்கள் கொடுக்கிறார்

கை கழுவி விட்டு உண்டாலும், கழுவாமல் உண்டாலும் வாய் வழியாக உள்ளே செல்லும் எந்தப் பொருளும் ஆன்மாவைத் தீட்டு படுத்தாது.

வாய் வழியாக உள்ளே சென்ற உணவுப் பொருளின் கழிவு குதம் வழியாக வெளியேறி விடும்.

மனித உள்ளத்திலுள்ள       பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, 
தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் தான் ஆன்மாவைத் தீட்டுப் படுத்துகின்றன. 

உள்ளம் தூயதாக இருந்தால் ஆன்மா தீட்டு படாது.

உடலும் ஆன்மாவும் உள்ள நாம் உடல் சுத்தத்தை விட ஆன்மாவின் சுத்தத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

உடல் எவ்வளவு அழுக்காக இருந்தாலும் ஆன்மா சுத்தமாக இருந்தால் நமக்கு விண்ணக வாழ்வு உறுதி.

ஆனால் உடல் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் ஆன்மாவில் பாவத் தீட்டு இருக்குமானால் ஆன்மா மீட்பு அடைய முடியாது.

கைகள், கால்கள் சுத்தமாக இருப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட

உள்ளம் சுத்தமாக இருப்பதற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும்.

உடலைத் தண்ணீரால் கழுவி, சுத்தமான உடையணிந்து நடமாடுவதை விட தூய உள்ளத்தோடு நடமாடுவதுதான் சிறந்தது.

நமது உள்ளம் வெளியே தெரியாது.  உடல் வெளியே தெரியும்.

ஆகவேதான் தீய எண்ணங்கள் உள்ள சிலர்  நல்லவர்கள் போல் நடமாடுகிறார்கள்.

அவர்களை நம்புபவர்களும் கெட்டுப் போகிறார்கள்.

உள்ளத்தில் பரிசுத்தமாக வாழ்பவர்களின் சொல்லும் செயலும் பரிசுத்தமாகவே இருக்கும்.

சிலர் உள்ளத்தில் அசுத்தமான எண்ணங்களைக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் சொல்லிலும், செயலிலும் நல்லவர்கள் போல் நடிப்பார்கள்.

அரசியல்வாதிகளில் அநேகர் ஓட்டு வாங்குவதற்காக உள்ளொன்று வைத்துக் கொண்டு புறமொன்று பேசுவார்கள்.

ஆனால் செயல்கள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விடும்.

நாம் சுத்தமான எண்ணமும், சுத்தமான பேச்சும், சுத்தமான செயலும் உள்ளவர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, February 9, 2025

செவ்வாய்11. "ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, "உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?" என்று கேட்டனர்."(மாற்கு நற்செய்தி 7:5 )

செவ்வாய்11.                                            

"ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, "உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?" என்று கேட்டனர்."
(மாற்கு நற்செய்தி 7:5 )


ஒரு முறை இயேசுவின் சீடர்கள் கை கழுவாமல் உணவு உண்பதைப் பார்த்த பரிசேயர்களும், மறை நூல் அறிஞர்களும் இயேசுவைப் பார்த்து,

"உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?" என்று கேட்டனர்."

அவர்கள் கேள்வி அவர்களுடைய அறியாமையின் விளைவு.

கைகளை கழுவி உண்பதும், பாத்திரங்களை கழுவுவதும் சுகாதாரத்தைச் சார்ந்த நல்ல பழக்கங்கள், ஆன்மீகத்தைச் சார்ந்த சட்டங்கள் அல்ல.

உடலை அசுத்தமாக்குவது  அழுக்கு, சுத்தமாக்கத் தண்ணீர் தேவை.

ஆன்மாவை அசுத்தமாக்குவது பாவம். ஆன்மாவைச் சுத்தப்படுத்தத் தேவைப்படுவது மனஸ்தாபமும், பாவ மன்னிப்பும்.

இயேசு உலகுக்கு வந்தது ஆன்மாவைப் பாவத்திலிருந்து மீட்க, உடலைத் தண்ணீரால் கழுவ அல்ல.

நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஆன்மாவின் பரிசுத்தத் தனத்துக்கு.

பரிசேயர்கள் அதைப் பற்றி அக்கரைப் படாமல், கை கழுவாமல் சாப்பிட்டதை மரபு மீறுதலாகக் கருதினார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து,

"நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு 

மனித மரபைப் பின்பற்றி வருகிறீர்கள்.

உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணிக்கிறீர்கள்."

என்று கூறினார்.

நாம் எந்த விதத்திலாவது பரிசேயர்களைப் போல் நடந்து கொள்கிறோமா?

ஞாயிற்றுக் கிழமை காலையில் பெற்றோர் பிள்ளைகளைப் பார்த்து,

" குளித்து விட்டு சுத்தமான ஆடை அணிந்து கோவிலுக்குப் புறப்படுங்கள்" என்று கூறுகிறார்கள்.

எந்தப் பெற்றோராவது,
 
"எட்டு மணிக்குப் பூசை, ஏழரை மணிக்கே கோவிலுக்குச் சென்று, பூசைக்கு முன்பு பாவ சங்கீர்த்தனம் செய்யுங்கள். பரிசுத்தமான இருதயத்தோடு நன்மை எடுக்க வேண்டும்" என்று சொல்கிறார்களா?

அவர்களும் அதைச் செய்கிறார்களா?

அநேகர் ஆன்மீகச் சுத்தத்தை விட உடல் சுத்தத்துக்கு தானே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

கோவிலில் ஏதாவது விழா வந்தால் நாம் ஆசைப் படுவது,

"கோவிலை வெள்ளையடித்தல், அலங்காரம் செய்தல்,  சப்பரம் தூக்குதல், வரிப் பிரித்தல், அசன உணவு ஆகியவற்றைப் பற்றி தான் அக்கரைப் படுகிறோம்."

பாவ சங்கீர்த்தனம்?

யாரும் இதைப் பற்றி கேள்வி கேட்பதில்லை.

அலங்காரம், ஆடம்பரம், கொண்டாட்டம் ஆகியவை ஆன்மீக வாழ்வைச் சாராதவை.

விழா எடுப்பது ஆன்மீக வாழ்வுக்கு.

ஆன்மீக வாழ்வு புறக்கணிக்கப் பட்டால் விழா வீண்.(waste.)

திருமணம் ஒரு தேவத் திரவிய அனுமானம். அதற்கான தயாரிப்புக்கும் இதே நிலைதான்.

அதனால்தான் கருக்கலைப்பு,
 விவாக ரத்து ஆகியவை சாதாரணமாகி விட்டன.

குற்றாலம் அருவியில் குளிக்கப் போகிறோம்.
.
காரில் குற்றாலத்துக்குப் போய்,
ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு,

கடைகளை ரசித்து விட்டு, 

குரங்குகளையும் பார்த்து ரசித்து விட்டு, 

பூங்காவில் அமர்ந்து அரட்டை அடித்து விட்டு,

ஹோட்டலில் வித விதமாய்ச் சாப்பிட்டு விட்டு,

அருவிப் பக்கமே போகாமல்

போன வழியே, போனபடியே திரும்பி வந்து விட்டால்

உடம்பு எப்படி இருக்கும்?


உடம்பு முழுவதும் வியர்வையும்.
அதில்  ஒட்டிய அழுக்கும் இருக்கும்.

குற்றாலத்துக்குப் போய் குளிக்காமல் வருவது போன்றதுதான்

உலகில் பிறந்து, உலக ஆடம்பரத்தை அனுபவித்து விட்டு, ஆன்மாவைப் பற்றிக் கவலைப் படாமல் வாழ்ந்து விட்டு

இறுதியில் உலகை விட்டுப் போவதும்.

நாம் உலகத்தில் பிறந்தது உலக வாழ்க்கையை அனுபவிப்பதற்காக அல்ல,   ஆன்மாவை விண்ணக வாழ்வுக்காகத் தயாரிப்பதற்காக.

அதைத்தான் ஆன்மீக வாழ்வு என்கிறோம்.

உலக மரபுகளும். உலக வாழ்க்கையும் நமது மரணத்தோடு முடிவுக்கு வந்துவிடும்.

ஆகவே நித்திய காலம் தொடரும் ஆன்மீக வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.

லூர்து செல்வம்.

Saturday, February 8, 2025

திங்கள்10 "அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்."(மாற்கு நற்செய்தி 6:56

திங்கள்10                                                                                    

"அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்."
(மாற்கு நற்செய்தி 6:56)

ஒவ்வொரு முறை நோயாளியைக் குணமாக்கிய போதும்,

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்று இயேசு கூறுவது வழக்கம்.

குணம் பெற வேண்டும் என்று இயேசுவிடம் கேட்பவர்கள் மட்டுமல்ல, அவரிடம் கேட்காமலேயே விசுவாசத்துடன் அவரையோ, அவரது ஆடையைக் கூட தொட்டவர்கள் குணம் அடைந்தார்கள்.


மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி,

 அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள்.

 அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர். 
(மாற்கு நற்செய்தி 6:56)

ஒவ்வொரு முறை திருப்பலிக்குச் செல்லும் போதும் நாம் திவ்ய நற்கருணை வாங்கும் போதும் இயேசுவை நாவினால் தொடுகிறோம்.

நாவினால் மட்டுமல்ல, 

நாம் உட்கொண்டபின் நமது இரத்த நாளங்கள் வழியாக

 உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நமது உடலின் ஒவ்வொரு உள் உறுப்பும் இயேசுவைத் தொடுகிறது.

நம்மிடம் விசுவாசம் இருந்தால் நற்கருணை வாங்கியவுடன்  நமது உடலிலுள்ள எல்லா வியாதிகளும் குணமாகும்.

குணமாகா விட்டால் நம்மிடம் விசுவாசம் இல்லை என்று தான் அர்த்தம்.

விசுவாசப் பிரமாணம்  சொல்லும் போதெல்லாம் " விசுவசிக்கிறேன்" என்று சொல்கின்றோம்.

ஆனாலும் நன்மை வாங்கியவுடன் நோய் எதுவும் குணமாகவில்லை.

இயேசு கடவுள். அவரால் இல்லாததைச் சொல்ல முடியாது.

அப்படியானால் நம்மிடம் போதிய விசுவாசம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

விசுவசிக்கிறேன் என்று சொல்கிறோம், செய்வதில்லை.

நம்மிடம் உள்ள ஒரு முக்கிமான குணம் சொல்வதைச் செய்வதில்லை.

வாய்ச் சொல் வீரர்கள்,
செயல் வீரர்கள் அல்ல.

உணவு உட்கொண்டால் வயிறு நிரம்பி விடும் என்று சொன்னால்
நிரம்பி விடுமா?

சாப்பிட்டால்தான் வயிறு நிரம்பும்.

விசுவசிக்கிறேன் என்று சொல்பவர்கள் எல்லாம் விசுவாசிகள் அல்ல,

விசுவாசத்தை  வாழ்பவர்கள் மட்டுமே விசுவாசிகள்.

விசுவாசத்தை  வாழ்பவர்களிடம் மட்டுமே விசுவாசம் இருக்கிறது.

விசுவாசத்தை எப்படி வாழ்வது?

தன் தாயிடம் பால் குடிக்கும்  ஒரு குழந்தை மறுநாள் குடிப்பதற்கு முந்திய நாளே தாயிடமிருந்து பாலை வாங்கி ஏதாவது ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்குமா?

நிச்சயமாக வைக்காது.

அன்றன்றைக்கு வேண்டிய பாலை அன்றன்றைக்கு தாயிடமே குடிக்கும்.

தான் அழும்போதெல்லாம் அம்மா பால் தருவாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அதற்கு இருக்கிறது.

அது தன் தாய் மேல் உள்ள நம்பிக்கையை வாழ்கிறது.

"பரலேகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனை விசுவசிக்கின்றேன்."

என்று தினமும் சொல்கிறோம்.

கர்த்தர் கற்பித்த செபத்தில் விண்ணக தந்தையை நோக்கி,

"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்."

என்று வேண்டுகிறோம்.

தந்தை எல்லாம் வல்லவர் என்று விசுவசிக்கிறோம். ஆகவே அன்றாட உணவை அன்றன்று தருவார் என்றும் விசுவசிக்கிறோம்.

இந்த விசுவாசத்தை வாழ்கிறோமா?

வாழ்ந்தால் ஆண்டு முழுமைக்கும் வேண்டியதை இன்றே சேமித்து வைக்க மாட்டோம்.

அடுத்த ஆண்டு செலவுக்கு இப்போதே SB Account ல் பணத்தைப் போட்டு வைப்பது எதைக் காட்டுகிறது?

தந்தையின் மேல் நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.

இந்த அடிப்படையில் சிந்தித்தால் கிறிஸ்தவர்கள் யாருமே தங்கள் விசுவாசத்தை வாழவில்லை.

உலக அடிப்படையில் சேமிப்புக்கு ஆயிரம் காரணங்கள் கூறலாம்.

ஆனால் விசுவாச அடிப்படையில் அவையெல்லாம் செல்லாது.

"நாளைய உணவை இன்றே சேமித்து வைக்க வரம் தாரும்" என்று வேண்ட கர்த்தர் கர்ப்பிக்கவில்லை.

 நாம் விசுவசிக்கிறோம் என்று சொன்னாலும் விசுவாசமே இல்லாத உலகத்தார் போலவே வாழ்கிறோம்.

"அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்." என்ற வசனம் நம் வாழ்வில் செயல் படாமைக்குக் காரணம் நமது விசுவாசம் இன்மையே.

இயேசுவைப்போல் வாழ வேண்டும் என்று சொல்கிறோம்.

வாழ்கிறோமா?

அவரது ஏழ்மையை அப்படியே பின்பற்றுகிறோமா?

நமக்கு எதிராக தவறு செய்த அனைவரையும் மன்னிக்கிறோமா?

நமக்கு தீங்கிழைக்கிற அனைவருக்கும் நன்மை செய்கிறோமா?

யாராவது நம்மை அடித்தால் அடிக்க அனுமதிக்கிறோமா?

இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்கிறோம்.

செய்தால் நாம் புனிதர்கள்.

புனிதர்களாக வாழவே அழைக்கப் பட்டிருக்கிறோம்.

வாழ வரம் கேட்டு இறைவனை மன்றாடுவோம்.

இறைவன் தரும் வரத்தைப் பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

Friday, February 7, 2025

ஞாயிறு9. சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார். (லூக்கா நற்செய்தி 5:5)

ஞாயிறு9.                                        .

சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 5:5)

இயேசு சீமோனை நோக்கி, "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். 

சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார். 

சீமோனுடைய வார்த்தைகளைத் தியானிப்போம்.

சீமோன் ஒரு தொழில் ரீதியான மீனவர்.  (Professional Fisherman) 

அவர் இரவு முழுவதும் முயன்றும் மீன் கிடைக்கவில்லை.

ஒரு திறமை வாய்ந்த மருத்துவர் ஒரு நோயாளியைக்  கைவிட்டு விட்டால் அவனது உறவினர் நம்பிக்கையை இழந்து விடுவர்.

ஆனால் மீனவரான சீமோன் இரவு முழுவதும் முயன்றும் மீன் கிடைக்கா விட்டாலும் 

இயேசுவின் வார்த்தைகளை விசுவசித்து அவர் கூறியபடி வலைகளை வீச, ஏராளமான மீன் கிடைக்கிறது.

மீன்களைப் பிடிக்கும் சீமோனை மனிதர்களைப் பிடிப்பவராக மாற்றினார்.

இது சீமோளின்  விசுவாசத்துக்கு இயேசு அளித்த பரிசு.

இந்த நிகழ்விலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?

இயேசு சீமோனுடைய படகிலிருந்து தான் போதித்தார்.

ஏற்கனவே சீமோன் இயேசுவை முதன்முறைச் சந்தித்த போதே அவருக்கு இராப்பர் என்று பெயரிட்டு விட்டார்.

"பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, "நீ யோவானின் மகன் சீமோன். இனி "கேபா" எனப்படுவாய் என்றார். "கேபா" என்றால் "பாறை" என்பது பொருள்."
(அரு.1:42)

நமது திருச்சபைக்கு "இராயப்பர் படகு" என்ற ஒரு பெயர் உண்டு.

நான் சிறுவனாக இருந்த போது பள்ளியில் நாங்கள் படித்த ஞானோபதேச புத்தகத்தின் பெயர் "இராயப்பர் படகு."
(திருச்சபை சரித்திரம்)



இயேசு சீமோனை நோக்கி, "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 5:4)

இராயப்பர் படகை (திருச்சபையை)

 மீன் பிடிக்க (மனதர்களைப் பிடிக்க)

தள்ளிக் கொண்டு போக வேண்டியது (இயக்க வேண்டியது)

 இராயப்பர் தான்.


ஆகவே இராயப்பர் தான் திருச்சபையின் தலைவர் என்ற தீர்மானம் இறை மகன் மனதில் நித்திய காலமாகவே இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.

ஆகவே இராயப்பரில் தலைமையிலான கத்தோலிக்க திருச்சபை தான் இயேசுவின் திருச்சபை என்பது இயேசுவின் வார்த்தைகளே அடிப்படை ஆதாரம்.

தன்னால் இயலாதது இறைவனால் இயலும் என்று இராயப்பர் உறுதியாக விசுவசித்தார்.

இத்தகைய விசுவாசம் நமக்கும் வேண்டும் என்று அவருடைய வார்த்தைகள் நமக்குப் பாடம் கற்பிக்கின்றன.


பிடிக்கப்பட்ட பெருந்திரளான மீன்களைப் படகில் போட உதவியவர்கள் அருளப்பரும், வியாகப்பரும்.

இராயப்பர் தன்னிச்சையாகச் செயல்படுபவர் அல்ல.

இயேசுவால் . பிடிக்க அனுப்பப்பட்டவர்,
 அருளப்பர், வியாகப்பர் ஆகியோரின் உதவியுடன் செயல் படுகிறார்.

கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாகம் எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு முன் அடையாளம்.

"சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்றார்."

இராயப்பரின் இந்த வார்த்தைகள் நமக்கு என்ன பாடம் கற்பிக்கின்றன?

இந்த வார்த்தைகள் நாம் திவ்ய நற்கருணை உட்கொள்ளு முன் சொல்லும, செந்தூரியனின் வார்த்தைகளை நமக்கு நினைவு படுத்துகின்றன.

"நீர இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதி அற்றவன் "
(செந்தூரியன்)

"ஆண்டவரே நான் பாவி, நீர் என்னிடம் வர தகுதி அற்றவன்."
(இராயப்பர்)

நாம் எந்த அளவுக்கு தாழ்ச்சி உள்ளவர்களாக இருக்க வேண்டும் இராயப்பரது வார்த்தைகள் கற்பிக்கின்றன.

1. இராயப்பர் தான் ஒரு பாவி என்பதை ஏற்றுக் கொள்கிறார்.
அவருடைய குறைபாடுகள் அனைத்தையும் உணர்ந்திருக்கிறார்.

ஒருவன் தன்னிடம் என்ன வியாதி உள்ளது தெரிந்தால் தான் அதை குணமாக்க மருத்துவரிடம் செல்வான்.

இருக்கிற வியாதியை உணராதவன் அதிலேயே மடிவான்.

நமது பாவ நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

என்னென்ன பாவங்களில் அடிக்கடி விடுகிறோம் தெரிந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் அவற்றிலிருந்து விடுதலை பெற முயற்சி எடுப்போம்.

இதற்காக அடிக்கடி சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
(Self examination)

பாவங்கள் எவை என்று தெரிந்தால்தான் அவற்றுகான சந்தர்ப்பங்களைக் கண்டுபிடித்து அவற்றிலிருந்து விலகுவோம்.

2. தாழ்ச்சி.

லூசிபெர் சாத்தானாக மாறியதற்குக் காரணம் அவருடைய தற்பெருமை.

தாழ்ச்சி என்றால் நமது உண்மை நிலையை ஏற்றுக் கொள்ளுதல்.

நாம் பிறந்தவுடன் நம்மைப் பாயில் கிடத்தி விட்டு யாரும் பக்கத்தில் வரவேயில்லை என்று வைத்துக் கொள்வோம்.

நாம் என்ன ஆகியிருப்போம்?
அதுதான் நமது உண்மை நிலை,

நாம் பெற்றவை அனைத்தும் இறைவனிடமிருந்து  பெற்றவை.

முடவன் கொம்புத்  தேனுக்கு ஆசைப்படலாமா?

கடவுளைப் பற்றி நினைக்கக் கூட நாம் தகுதி அற்றவர்கள்.

கடவுள் அருள் தந்தால்தான் அவரைப் பற்றி நினைக்கவே முடியும். இதை உணர்ந்தால் தான் நமக்கு அருள் தரும்படி கடவுளிடம் வேண்டுவோம்.

கடவுளின் அருள்தான் நம்மை வாழ வைக்கும்.

இராயப்பரின் தாழ்ச்சிதான் அவரைத் திருச்சபைக்குத் தலைவராக்கியது.

தம்மைத் தாமே தாழ்த்துபவர்கள் உயர்த்தப் படுவார்கள என்பது இறைவாக்கு.

ஒரு அடிமையை பரலோக, பூலோக அரசியாக்கியது அவளுடைய தாழ்ச்சி தான்.

ஒரு மீனவரைத் திருச்சபையின் தலைவராக்கியதும் அவருடைய தாழ்ச்சி தான்.

ஒரு தச்சுத் தொழிலாளியை இயேசுவின் வளர்ப்புத் தந்தையாக்கியது அவருடைய தாழ்ச்சி தான்.

3. இராயப்பருடைய 
ஆச்சரியமும், (Astonishment)
பக்தியும்.(Love)

இயேசுவின் வல்லமையால்தான் தன்னால் அவ்வளவு மீன்களைப் பிடிக்க முடிந்தது 
என்பதை உணர்ந்த இராயப்பர்   
இயேசுவின் வல்லமையை நினைத்து ஆச்சரியப்பட்டார்.

அந்த ஆச்சர்யம் பக்தியில் முடிந்தது. பக்தி தான் இராயப்பரை இயேசுவோடு பிரிக்க முடியாத அளவுக்குக் கட்டிப் போட்டது.

நாம் நம்மையும், நாம் வாழும் உலகத்தையும் நினைத்துப் பார்த்தால் நமக்கும் ஆச்சரியமும், பக்தியும் உண்டாகும். நாம்  நினைத்துப் பார்ப்பதில்லை.

நமது தாயின் வயிற்றில் உற்பவிக்கும் முன் நாம் எங்கே இருந்தோம்?

நாமே இல்லை.

நம்மை நமது பெற்றோரா உருவாக்கினார்கள்?

பெற்றோர் தங்கள் திறமையினால் மட்டும் குழந்தைகளை உருவாக்க முடியுமென்றால் இன்று குழந்தை இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்.

குழந்தையைப் பெறுமுன் அது ஆணா பெண்ணா என்று கூட தாய்க்குத் தெரியாது.

நம்மைப் படைத்தவர் கடவுள்,
கடவுள் மட்டுமே. 

பெற்றோர் அவருடைய கருவிகள் மட்டுமே.

நமது உடலையும், பிரபஞ்சத்தையும ஆராய்ந்து பார்த்தால் ஆச்சர்யமும், பக்தியும் உடனே வந்து சேரும்.

நாம் நமது உடலை உண்பதற்கும், உறங்குவதற்கும் மட்டுமே பயன் படுத்துகிறோம்.

நமது உடல் முழுவதும் நமக்குக் கட்டுப் பட்டது அல்ல.

உடல் உள்ளுறுப்புகள் எதுவும் நாம் சொன்னபடி இயங்காது.

.நாம் சொன்னபடி இயங்கினால் மருத்துவரே தேவையில்லையே.

அவற்றைப் படைத்தவரும் கடவுள், இயக்குபவரும் கடவுள்.  

இதை நாம் உணர்ந்தால், கடவுள் பக்தி இயல்பாகவே வந்து விடும்.

4. கடவுளின் புனிதத்தை உணர்தல்.

கடவுள் அளவற்ற பரிசுத்தர் என்பதை இராயப்பர் உணர்ந்தார்.

பரிசுத்தத்தனத்தில் தனது தகுதியையும உணர்ந்தார்.

நாமும் உணர வேண்டும் என்று இராயப்பர் தன் செயலால் சொல்கிறார்.

நாம் உணர்ந்தால் பாவ சங்கீர்த்தனம் செய்யாமல் இயேசுவை உட்கொள்ள மாட்டோம்.

பாவ சங்கீர்த்தனம்தான் நமக்குத் தகுதியைத் தரும்.

இந்த நான்கு அம்சங்களையும் நாம் நிறைவேற்றினால் மட்டுமே நம்மால்  இயேசுவின் சீடர்களாக வாழ முடியும்.

இயேசுவின் சீடர்களாக வாழ்ந்தால் நாம் விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்களாக மாறுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, February 6, 2025

சனி8‌ . அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். (மாற்கு.6:34)

சனி8‌                                             .
                                             

அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். 
(மாற்கு.6:34)


இயேசு தனது சீடர்களிடம்,

'' நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்" என்றார்."

"அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். 

அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர். 
(மாற்கு நற்செய்தி 6:32,33)


இந்த வசனங்களை வாசிக்கும் போது மக்கள் அவர்களை ஓய்வு எடுக்க விட்டதாகத் தெரியவில்லை.

அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்ட‌ மக்கள் அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். 

அவர்கள் ஓய்வு எடுக்கவிருந்த இடத்துக்கு அவர்கள் வருமுன்பே மக்கள் வந்து விட்டார்கள்.

அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் இயேசு அவர்கள் மீது பரிவு கொண்டார்.

அவர்களுக்குப் போதித்தார்.

சீடர்கள் இயேசுவிடம் வந்து ,
"நேரமாகி விட்டபடியால் அவர்களைச் சாப்பிட அனுப்பி விடும்" என்று கூறியதிலிருந்து சீடர்களும் அங்கே இருந்தார்கள் என்று தெரிகிறது.

இயேசு முக்காலமும் அறிந்தவர். அவரது கண்ணோக்கிலிருந்து இந்த வசனங்களைத் தியானிப்போம்.

கடலைக் கடந்து போகுமுன் மக்கள் அங்கு வந்து மக்கள் தனக்காகக் காத்திருப்பார்கள் என்று இயேசுவுக்கு நித்திய காலமாகவே தெரிந்தும்.

தெரிந்தும் ஏன் இயேசு சீடர்களை ஓய்வு எடுக்கப் போகச் சொன்னார்.

நமக்குப் பாடம் கற்பிக்க.

என்ன பாடம்?

ஓய்வு எடுக்க வேண்டிய அத்தியாவசியமான  நேரத்திலும் ஒரு ஆன்மாவின் மீட்புக்கு அவசியம் ஏற்பட்டால்,

ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, நாம் செயலில் இறங்க வேண்டும்.

ஒரு குருவானவர் காலையிலிருந்து இரவு பதினொரு மணி வரை ஓய்வில்லாமல் உழைத்து விட்டு, மிகவும் களைப்பானவராய், 

இராச் செபத்தை முடித்து விட்டு, 11.30 க்கு உடை மாற்றிக் கொண்டு, படுக்கையில் சாய்ந்து கொண்டிருந்த போது phone அலரியது.

phone ஐ எடுத்து காதில் வைத்தார்.
அவஸ்தைப் பூசுதலுக்கு அழைப்பு.

அந்த ஊருக்கு பைக்கில் போக கால் மணி நேரம் ஆகும.

படுக்கையில் படுக்காமல் எழுந்து, திரும்பவும் உடை மாற்றிக் கொண்டு, 
கோவிலுக்குச் சென்று நற்கருணை நாதரை அழைத்துக் கொண்டு, 
ஊருக்கு விரைந்து, 
நோயாளிக்கு பாவ மன்னிப்பு அளித்து விட்டு, 
இயேசுவையும் கொடுத்து விட்டு, அவஸ்தைப் 
பூசுதலும் கொடுத்து விட்டு, குடும்பத்தினருக்கு ஆன்மீக ஆலோசனைகள் கொடுத்து விட்டு,
பைக்கில் ஏறி, 
அவரது அறைக்கு வந்து
படுக்கும் போது மணி இரண்டு.

காலையில் 6 மணி பூசைக்கு 5 மணிக்கு எழ வேண்டும்.

குருவானவர் தனது உடல் நலத்தை விட மக்களின் ஆன்மீக நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு இயேசுவின் முன்னுதாரணமே காரணம்.

திருத்தந்தை பிரான்சிஸ் 
ஆயராக இருந்த போது நிகழ்ந்த நிகழ்வு ஒன்றைப் பற்றி அவரே எழுதிய குறிப்பு ஒன்று அவர் பாப்பரசர் ஆன போது வெளியாகியிருந்தது.

ஒரு முறை குருக்களுடைய கூட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டார்.

கோவிலுக்கு வந்து நற்கருணை நாதரைச் சந்தித்து விட்டு கோவிலுக்கு  வெளியே வந்தபோது, ஒரு ஆள் வந்து,

"ஆண்டவரே, பாவசங்கீர்த்தனம."

"நான் அவசரமாக குருக்களின் கூட்டத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

கோவிலுக்குள் போங்கள்.

இப்போது ஒரு சுவாமியார் வருவார். அவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்யுங்கள்" என்று கூறிவிட்டுப் புறப்படும்போது அவரது உள்ளத்தில் ஒரு குறல் ஒலித்தது.

"மனுமகன் நினையாத நேரத்தில் வருவார். வரும்போது நமது ஆன்மா தயாராக இருக்க வேண்டும்"

உடனே பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டுமென்று கேட்டவருடைய ஆன்மா நினைவுக்கு வந்தது.

உடனே திரும்பி கோவிலுக்குள் வந்து,  அவரிடம் பாவ சங்கீர்த்தனம் கேட்டு,
 பாவமன்னிப்பு கொடுத்தார்.

"இப்போது ஒரு சுவாமியார் வருவார். அவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்யுங்கள்" 
என்று அவர் சொன்னது அவரது மனதை உறுத்தியது.

உடனே அவர் அதற்காக மனஸ்தாபப் பட்டு,

கொஞ்ச நேரத்தில் வந்த குருவானவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்து விட்டு,

குருக்கள் கூட்டத்துக்குப் போனார்.

நமது ஆன்மீக வழிகாட்டிகள்
(Spiritual Directors) 
தங்கள் பொறுப்பில் உள்ள மக்களின் ஆன்மாக்களை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.

இதற்கெல்லாம் இயேசுவின் வழிகாட்டுதலும், முன்னுதாரணமும், அருளுதவியும் தான் காரணம்.

இயேசு முன்னுதாரணமாக நடந்து கொண்டது அவரது சீடர்களின் வாரிசுகளுக்காக மட்டுமா?

நாமும் பொதுக் குருத்துவத்தைச் சேர்ந்தவர்கள் தானே.

நமக்கும் நமது உடலை விட ஆன்மாவே முக்கியமானது.

உடலுக்கான ஓய்வை விட ஆன்மீக நலனே முக்கியமானது.

இயேசு நம்மை அழைக்க எந்த நேரத்திலும் வருவார்.

இரவில் ஓய்வு எடுப்பதற்காக நல்ல உடல் நலனோடு படுத்தாலும், இரவில் எந்த வினாடியும் மனு மகன் வரலாம்.

ஆகவே நாம் படுக்கு முன்பே நமது ஆன்மாவை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

பரிசுத்தமான ஆன்ம நிலையில் தான் படுக்க வேண்டும்.

அப்போதுதான் நள்ளிரவில் ஆண்டவர் வந்தாலும்,

 "இதோ வருகிறேன், ஆண்டவரே, " என்று கூறிக் கொண்டே இயேசுவோடு விண்ணத்துக்குள் நுழையலாம்.

நாம் எவ்வளவு களைப்பாக இருந்தாலும், நமது ஆன்மாவை விண்ணக வாழ்வுக்கு தயார் நிலையில் வைத்து விட்டு தான் ஓய்வு எடுக்க வேண்டும்.

நமது ஓய்வை விட ஆன்மாவின் நலனே முக்கியம்.

சிலர் ஞாயிற்றுக்கிழமை பூசைக்குப் பிந்தி வருவார்கள்.

காரணம் கேட்டால்,

"வாரத்தில் ஆறு நாட்கள் கட்டப் பட்டு உழைக்கிறோம். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து, இரவில் வெகு நேரம் கழித்துத்  தூங்க வேண்டியிருக்கிறது.

ஞாயிற்றுக் கிழமை தான் நிம்மதியாக தூங்க முடிகிறது.

ஆகவே காலையில் எழ நேரமாகிறது." என்று கூறுவார்கள்.

காலையில் வேலைக்குப் பிந்திப் போனால் நிர்வாகி விளக்கம் எழுதித் தரச் சொல்லுவார்.

பூசைக்குப் பிந்தி வந்தால் யாரும் விளக்கம் கேட்க மாட்டார்கள்.

இது அவர்களுடைய எண்ணம்.

ஆனால் இறுதி நாளில் கடவுள் விளக்கம் கேட்பார்.

நமது உலகக் காரணம் அப்போது எடுபடாது.

உடல் நலத்தை விட ஆன்மீக நலமே அதிக முக்கியம்.

உடல் நலம் பாதிக்கப் பட்டால் மரணத்தோடு  பாதிப்பு சரியாகி விடும்.

ஆன்மீக நலம் பாதிக்கப் பட்டால், அது வாழ் நாளில் சரி செய்யப் 
படாவிட்டால் பாதிப்பு மரணத்துக்குப் பின்னும் தொடரும்.

ஆன்மீக வாழ்வுக்கு ஓய்வு கிடையாது என்பதை நினைவில் கொள்வோம்.

பைபிள் வசனங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்டிருந்தாலும் நமது இன்றைய வாழ்வுக்கும் அவைதான் வழிகாட்டி.

லூர்து செல்வம்.